இரண்டு நாட்களாக அந்த கல்லூரியின் மொத்த மாணவர்களும் பரபரப்பாக ஓடிக் கொண்டு இருந்தனர். அவர்களின் கொள்கை பரப்புத் தலைவன் திடீர் என்று காணாமல் போனதில் அனைவரும் திகில் கொண்டனர்.
எல்லோரும் ஆளுக்கு ஒரு விதமாக தேடுவதில் உதவினர். பிரபுவும் சத்யாவும் தூக்கத்தையும் உணவையும் இரண்டு நாட்களாக மறந்தே போய் இருந்தனர். கிருஷ்ணாவும் கவிதாவும் பைக்கில் கடைசியாகச் சென்றதாக சொல்லப்பட்ட பாதையில் பல முறை சென்று சோதித்து வந்து இருந்தனர்.
அவர்கள் கடந்து வந்த பாதையில் நான்கு ஐந்து இடங்களில் மட்டும் தான் அவர்களின் சிசிடிவி ஃபுட்டேஜ் கிடைத்தது. அதாவது அவர்கள் ஊரிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டருக்கு மேல் அவர்கள் தாண்டிச் சென்றதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
அதே போல் அவர்கள் வேறு கிளைப் பாதையில் சென்று இருக்கக் கூடும் என்ற ஐயம் வேறு இருந்தது. யாரும் அறியாமல் தப்பித்துப் போகிறவர்கள் நேரான பாதையில் மட்டுமா செல்வார்கள் என்ற சந்தேகம் வேறு இருந்தது.
பித்துப் பிடித்தது போல் நாலா திசையும் தேடி அலைந்தார்கள்.
“டேய்.. இன்னும் எதுக்குடா காத்திட்டு இருக்கணும்? கவிதா அப்பனையும் அவள் அண்ணனையும் நாம தூக்கிட்டு வந்து ரெண்டு கும்மு கும்முன்னா அவுங்களை எங்க மறைச்சு வச்சு இருக்காங்கன்னு ஆட்டோமேட்டிக்காக உண்மையைச் சொல்லிட போறாங்க!”.. என்று சத்யா குதிக்க..
“ நீ சொல்றது சரிதான்டா மச்சான். பட் எதுக்கும் ஒரு முறை இருக்கு. அதை நாம செஞ்சா சரியா இருக்காது. எற்கனவே போலீஸ் ஸ்டேஷனுக்கு அவங்களை விசாரணைக்கு கூட்டிப் போய் இருக்காங்க. அவங்க கேட்கிற ஸ்டைலில் நிச்சயம் உண்மையைச் சொல்லி விடுவாங்க.” என்றான் பிரபு நண்பனைத் தேற்றும் விதமாக.
“இதை நாம நேற்றே பண்ணி இருக்கனுமோ டா??… கிருஷ்ணாவுக்கு எதுவும் ஆயிருக்குமோன்னு மனசு கிடந்து பதறுது டா”.. என்று அவன் கலக்கத்துடன் சொல்ல..
கேட்டுக் கொண்டு இருந்த பிரபு மனமோ அதை விட அதிகப்படியாகத் தான் அச்சத்தில் துடித்துக் கொண்டு இருந்தது. இருந்தும் …
“ச்ச.. ச்ச.. நீ தேவை இல்லாம பயப்படாத டா. அது எல்லாம் ஒன்னும் ஆயிருக்காது. ஆனா எனக்கு என்னமோ நாம ஏதோ பெருசா மிஸ் பண்றோமோன்னு தோணுது. நம்ம ஃபோகஸ் கவிதா வீட்டுக்காரங்க மேல மட்டும் தான் இருக்கு.
எனக்கு என்னமோ நாம மாத்தி யோசிக்கணும் என்று தோணுது. !”.. என்று பிரபு தன் மனதில் உறுத்திய சந்தேகத்தைச் சொல்ல.
“ம்.. இருக்கலாம் டா. எனக்கும் அவங்களைப் பார்த்தா கொஞ்சம் டம்மி பீஸ் மாதிரி தான் தெரியுது. “
“எங்க அப்பா கிட்ட சொல்லி ஒரு பிரைவேட் டிடக்டிவையும் நேற்றே ஏற்பாடு பண்ணச் சொல்லி இருக்கேன். அவங்க நேத்திக்கே துப்பு துலக்க ஆரம்பிச்சிட்டாங்க. கூடிய சீக்கிரமே கண்டு பிடிச்சிடுவோம் என்று உறுதி கொடுத்து இருக்காங்க.”.. என்றான் பிரபு.
அன்று மாலை தான் அவர்கள் உயிரையே உலுக்கி எடுக்கும் தகவல் ஒன்று காவல் நிலையத்தில் இருந்து வந்தது.
கூமாப்பட்டி காவல் நிலையம். “சார்.. ஒரு லாரி டிரைவர் வந்து நம்ம கிட்ட சரன் அடைந்து இருக்கார்.”.. என்று ஏட்டு அந்த இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
“ஏன் என்ன பன்னானாம்?”.. என்று அவர் கேட்க..
“சார்.. முந்தின நாள் லாரியை வேகமா ஓட்டிட்டுப் போன போது பைக்ல போன இரண்டு பேரையும் தெரியாம இடிச்சுத் தள்ளி இருக்கான். அவங்க இடிச்ச வேகத்துல அங்க இருந்த ஆழ் கிணற்றில் போய் பைக்கோட விழுந்துட்டாங்க.
போலீஸ் கேஸ் ஆயிடும் என்று பயந்து.. நிக்காம அங்க இருந்து போய்ட்டான். ஆனா மனசில நிம்மதியே இல்லையாம். ஒரே குற்ற உணர்வா இருந்ததாம். அதான் எது நடந்தாலும் உண்மையைச் சொல்லி விட முடிவு பண்ணி தைரியமா போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்துட்டானாம். “.. என்று அந்த லாரி டிரைவர் வாக்கு மூலம் கொடுத்த விவரத்தை ஏட்டு விவரித்து கொண்டு இருந்தார்.
“அடப் பாவி.. என்ன எழவு மனசாட்சியோ!!. இவ்வளவு தாமதமாகத் தான் குற்ற உணர்வு வரணுமா.. “.. என்று திட்டியபடியே மீட்புப் பணிக்கு கட்டளை இட்டு இருந்தார்.
அடுத்த நிமிடமே.. தீ அணைப்புக் குழுவினரும் காவல் துறையினர் குழுவும் அந்த கிணற்றுக்கு முன் குவிந்து இருந்தது. அந்த லாரி டிரைவர் சொன்னது போலவே கிணற்றுக்குள் இருந்து இரண்டு சடலங்கள் மீட்டு எடுக்கப்பட்டன.
“அங்கு இருந்த காவல் அதிகாரி.. “ யோவ் ஏட்டு எதுவும் மிஸ்ஸிங் கேஸ் நம்ம ஸ்டேஷன்ல ஃபைல் ஆகி இருக்கா?”.. என்று கேட்க..
“இல்ல சார்!”.. என்று அரை நொடி யோசித்தவர்.. ஆனா முத்துப்பட்டி கிராமத்துல தான் ஒரு மிஸ்ஸிங் கேஸ் விஷயமா இங்க கூட விசாரிச்சாங்க.. “ என்றார்.
அப்போது தண்ணீரில் மூழ்கி கிடந்த பைக்கும் மேலே எடுக்கப் பட்டு இருந்தது.
“ஏட்டு.. அப்போ நீங்க உடனே அந்த முத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் போட்டு பைக் நம்பர் என்னன்னு கேளுங்க!”.. என்று அவசரப் படுத்த..
பத்து நிமிடத்தில் அது கிருஷ்ணா சென்ற பைக் தான் என்று உறுதி செய்யப்பட்டது.
அடுத்த நிமிடமே “சார்.. நாங்க கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறோம். உங்க பேர் பிரபு தான?”.. என்று கேட்க..
“ஆமா சார். என் பேர் பிரபு தான்”.. என்றான் தன் பதட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் பிரபுவும்.
“சார்.. இங்க ஒரு ஆக்சிடென்ட் கேஸ்ல ரெண்டு டெட் பாடி கிடைச்சு இருக்கு. என்று அவர் முழு விவரமும் சொல்ல.. அதிர்ந்து போனான் பிரபு.
நீங்க கம்ப்ளைன்ட்ல சொல்லி இருந்த பைக்கும் கிணத்துக்கு உள்ள இருந்து எடுக்கப்பட்டு இருக்கு. நீங்க இங்க உடனே நேர்ல வந்து உங்க பிரண்டு தானான்னு பார்த்து சொன்னீங்கன்னா மத்த ஃபார்மலிட்டிஸ் ஆரம்பிச்சு விடலாம்.”.. என்று அவர் முடிக்கவில்லை.
“நோ.. இருக்காது. அது என் கிருஷ்ணாவா இருக்க வாய்ப்பே இல்லை!!”.. என்று அலறி விட்டான்.
அதைக் கேட்டு சத்யாவும் அதிர்ந்து போனான்.
“சார்.. நீங்க வந்து பார்த்திட்டு இல்லன்னு சொல்லிட்டு போங்க. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. ‘.. என்று அவர் சடைக்க..
பிரபுவும் சத்யாவும் அது கிருஷ்ணாவாக இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே அந்த இடத்திற்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் வேண்டுதல் வீன் போக .. அங்கு கிடத்தப்பட்டு இருந்தது என்னவோ.. கிருஷ்ணாவின் சடலமும் கவிதாவின் சடலமும் தான்.
நண்பனை அப்படி ஒரு கோலத்தில் காண முடியாமல் துடித்துப் போனார்கள் அவன் உயிர்த் தோழர்கள். அவர்கள் சந்தேகித்தது போல் அவர்கள் கிளைப் பாதைகள் வழியாகத் தான் சென்று இருந்தனர். அந்த காட்டுப் பாதையில் அந்த இருவரையும் இரக்கமே இல்லாமல் அடித்துச் சென்று இருந்தது அந்த லாரி.
ஆள் இல்லாத அந்த பகுதியில் ரோட்டிற்கு தள்ளி பைக்கோடு கிணற்றுக்குள் வீசப்பட்டு இருந்தனர். ரெண்டு நாட்களாக நீரில் ஊறிப் போய் இருந்தது அவர்கள் சடலங்கள். பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
கிருஷ்ணாவுக்கா இப்படி ஒரு நிலை என்று அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. எத்தனை கம்பீரமாக வலம் வருபவன்!!.. அவனை எப்படி இப்படி வீழ்த்த முடியும்.”.. என்று நம்ப முடியாமல் பிரபுவும் சத்யாவும் துடித்துப் போனார்கள்.
பிரேத பரிசோதனையில்.. விபத்தினால் ஏற்பட்ட மரணம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். வலிக்க வலிக்க அந்த கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள முயற்சித்தார்கள்.
கல்லூரி நாயகனான கிருஷ்ணாவின் மரணம் அனைவரையும் உலுக்கி எடுத்தது. ஒட்டு மொத்த கல்லூரியும் அந்த காதல் ஜோடிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூடி இருந்தனர்.
கவிதாவின் தாய் அழுது தீர்த்தார். கிருஷ்ணா தான் அவர்கள் வாழ்வின் ஒரே ஆதாரம் என்று வாழ்ந்து வந்த கிருஷ்ணாவின் பெற்றோர் இடிந்து போய் இருந்தார்கள்.
எல்லா சடங்குகளும் முடிய.. வெறும் நண்பனின் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு வேதனையுடன் ஊர் திரும்பினர்.
பிர்புவின் தந்தை அவன் நிலையைப் பார்த்து இரண்டு நாட்கள் அவர்கள் உடன் இருக்கும்படி சொல்லி பெங்களூர் அழைத்துச் சென்று இருந்தார்.
பித்துப் பிடித்தது போல் இருந்த மகனை எப்படி மனம் மாற்றுவது என்று தெரியாமல் குழம்பிப் போனார். “பிரபு.. எனக்கு உன் உணர்வுகள் புரியுது ராஜா. ஆனா வாழ்க்கை இதோட முடிந்து விடாது. நீ இதைக் கடந்து போய்த் தான் ஆகனும். நீ நாளைக்கே ஊருக்குப் போ. படிக்கிறதை மட்டும் ஃபோகஸ் பண்ணு.
“இருங்க. இப்ப என்ன அவசரம்? எதுக்கு அதுக்குள்ள பிள்ளையை ஊருக்கு போகச் செல்றீங்க “.. என்று அவன் தாய் பஞ்சாயத்துக்கு வர..
“உனக்கு நான் சொன்னா புரியாது. அவன் ஃப்ரெண்ட்ஸ் கூட இருந்தாலாவது கொஞ்சம் நார்மல் ஆகுவான்னு தோணுது.!.. இன்னும் ஒன்று இருக்கு பிரபு.. அந்த டிடக்டிவ் கிட்ட கேசைக் குளோஸ் பண்ணச் சொல்லிட்டேன்”.. என்றார்.
“இதற்கு மேல் என்ன இருக்கு!!”.. என்று யோசித்தவனும்.. சரிப்பா என்று தலையை ஆட்டினான்.
அப்படியே நாட்கள் செல்லச் செல்ல.. இரண்டு நாட்களில் அவன் கைப் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. வாழ்வில் நாட்டமே இல்லாத பிரபுவும் அதை ஏற்று காதில் வைத்தான்.
“சார்.. குட் ஈவ்னிங். நான் யார் தெரியுமா?”.. என்று அவன் கேட்க..
பிரபு விழிக்க.. பின் ஞாபகம் வந்தவனாக கிருஷ்ணா பத்தி விசாரிக்கச் சொல்லி இருந்த டிடக்டிவ் தான!!!?”.. என்று கேட்க..
“ஆமா சார். முதல்ல கிருஷ்ணா சார் பத்தி நீங்க விசாரிக்கச் சொன்னீங்க. அப்புறம் பாதியில் ஏன் நிறுத்தச் சொல்லிட்டீங்க..“.. என்று அவன் கேட்க.
“முதல்ல கிருஷ்ணா காணாமல் போய் இருந்தான். அப்புறம் தான் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு என்ற உண்மை தெரிந்தது. அதான் இன்வெஸ்டிகேஷனை நிறுத்தச் சொல்லிட்டேன். “.. என்றான் பிரபு.
“இல்லை சார். இது ஆக்சிடென்ட் இல்லை. கோல்ட் பிளட்டட் மர்டர்.”.. என்று சொல்ல..
அதைக் கேட்ட பிரபு அதிர்ச்சியில் உறைந்தான்.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.