“ஏய் ஜானு.. எழுந்திரி டீ”.. என்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தோழியை உலுக்கியபடி எழுப்பிக் கொண்டு இருந்தாள் ஆராதனா.
ஜானுவோ “என்னடி வேணும்”.. என்று கண் திறவாமல் சடைத்த படி கேட்க..
“மணி எட்டு ஆயிடுச்சு டீ”.. என்று ஆராதனா கடிகாரத்தைக் காட்டினாள்.
“ஆயுட்டுப் போவுது!!.. என்னை எதுக்கு எழுப்புற”.. என்று அவள் எரிந்து விழ.
“அட அறிவு கெட்டவளே நீ இப்படி ஜாலியா குறட்டை விட்டு தூங்கிட்டு இரு. அங்க உன் ஆளைத் தள்ளிட்டு போக ஒரு சூப்பர் பொண்ணு வந்து இறங்கி இருக்கா”.. என்று ஆராதனா சொல்லி முடிக்கவில்லை.
“என்ன டீ சொல்ற”.. என்று போர்வையை விலக்கியபடி.. அதிர்ந்து எழுந்து அமர்ந்து இருந்தாள் நம் ஜானு.
“ஆமாண்டி.. நீ போய் முகத்தை கழுவிட்டு வா நான் அந்த கொடுமையை காட்டுறேன்”.. என்று ஆரா சொல்ல..
மறுப்பு எதுவும் சொல்லாமல்.. ஐந்து நிமிடத்தில் குளித்தது போல் தயாராகி மின்னல் வேகத்தில் வந்து நின்று இருந்தாள் ஜானு.
“வா போகலாம்”.. என்று தன் தோழியின் கையைப் பிடித்து அவள் வெளியே அழைத்துச் சென்றாள். இருவரும் பூனை போல் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்த அவன் வீடு அருகில் மெல்ல நடந்து வந்து இருந்தனர்.
“வாவ் பிரபு.. உங்க கிட்ட பேசிட்டு இருந்தா போதும்.. இந்த உலகமே மறந்திடும் போல. இவ்வளவு நாளாக உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா. அதுலயும் நீங்க மரத்து மேல ஏறி லேடீஸ் ஹாஸ்டல் உள்ள குதிச்சு வந்து.. பண்ண கலாட்டா இருக்கே.. அப்பப்பா அது எல்லாம் மறக்கவே முடியாது.”
என்று அந்த பெண் குரல் உருகி உருகி வர்ணித்து சொல்லி முடிக்க.. இருவரின் சிரிப்பு சத்தமும் ஒருங்கே கேட்டது.
வெளியே நின்று கேட்டுக் கொண்டு இருந்த ஜானுவுக்கோ காதில் இருந்து புகை வரும் அளவுக்கு இருவர் மீதும் கோபம் பொங்கிக் கொண்டு இருந்தது.
“ஏய்.. யாருடி அது?”.. என்று மெல்லிய குரலில் ஆராதனா அவளிடம் கிசுகிசுக்க..
“ம்.. என் சக்களத்தி!!”.. என்றபடி அவள் முறைக்க..
“ம்.. சபாஷ்!! சரியான போட்டி!!”.. என்று சொல்ல.. அதே நேரம் அவர்கள் வெளியே வரும் சப்தம் கேட்க.. இருவரும் குடுகுடு என்று பழையபடி வீட்டுக்குள் புகுந்து கொண்டார்கள்.
லிஃப்ட் வரை அவளை வழி அனுப்ப வந்த பிரபு வோ.. “மாலா.. உன்கிட்ட இருந்து நல்ல பதிலுக்காக காத்து இருக்கேன். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பிரிவுத் துயர்? போதும் மாலா. நீ சொல்லப் போற ஒத்த பதில்ல தான் நம்ம எல்லார் சந்தோசமும் அடங்கி இருக்கு.”.. என்று அவன் உருகி சொல்ல..
அவர்களைப் பார்க்கா விட்டாலும் ராம் சொன்ன சொற்கள் அனைத்தும் அவர்கள் காதில் தெளிவாக கேட்டது. லிஃப்ட் சத்தமும் அவன் கதவு அடைக்கும் சத்தமும் தெளிவாகக் கேட்க..
“ஏய்.. வாடி போகலாம் என்று ஜானு ஆரா கையைப் பிடித்துக் கொண்டு வேக வேகமாக படி இறங்கத் துவங்கி இருந்தாள். “எங்கேடி போகிறோம். கைய விடு டீ. விழுந்து விடப் போறேன்”.. என்ற அவள் தோழியின் புலம்பல் எல்லாம் அவள் காதில் ஏறியதாகவே தெரியவில்லை.
அவர்கள் படி இறங்கி வந்த நேரம் அந்த பெண் தன் டூ வீலரில் ஏறி அமர்ந்து ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு இருந்தாள்.
மூச்சு வாங்க இருவரும் அவள் முன் சென்று வழி மறித்து நின்றார்கள்.
“எக்ஸ்க்யூஸ் மீ.!!.. உங்க கிட்ட ஒரு நிமிஷம் தனியா பேசணும். இப்படி எங்க கூட வர முடியுமா” என்று ஜானு கேட்க..
“உங்க கூட வா??.. எனக்கு உங்களை யாருன்னே தெரியாது. என் கூட என்ன பேசணும்?”.. என்று அவள் குழப்பமாகக் கேட்க..
“மேடம் உங்களை ஒன்னும் பண்ண மாட்டோம். மரியாதையா வந்துட்டா சேதாரம் இல்லாமல் கிளம்பி விடலாம். எப்படி வசதி.” என்று ஜானு மிரட்டலாகக் கூற..
. “வாட்?? லூசா நீ??.. எனக்கு உன்கிட்ட பேச எல்லாம் நேரம் இல்ல. வழியை விடு”.. என்று மாலா கிளம்பப் போக.
மாலா சட்டென சுதாரிக்கும் முன் அவள் வண்டியை ஆஃப் செய்து அதன் சாவியை அவள் கையில் எடுத்து இருந்தாள் ஜானு.
“இப்ப எப்படி வசதி!!.. இப்ப பேசலாமா??”.. என்று அவள் தோரனையாக அந்த சாவியை ஆட்டியபடி கேட்க.
மாலாவோ முறைத்தபடி தன் ஸ்கூட்டியில் இருந்து இறங்கி அவர்கள் முன் வந்து நின்று இருந்தாள்.
“சரி டக்குன்னு சொல்லுங்க. யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்.”.. என்று மாலா இப்போது நிதானமாக கேட்க.
“இங்க பாருங்க நீங்க இத்தனை நாள் பிரபுவை லவ் பண்ணி இருக்கலாம். பட் இனிமே நீங்க உங்க மனசை மாத்தியே ஆகணும். ஏன்னா.. என் ஃப்ரெண்ட் ஜானுவும் பிரபுவும் ஒருத்தரை ஒருத்தர் சின்ஸியரா லவ் பண்றாங்க.”.. என்று ஆராதனா சொல்ல..
மாலாவுக்கோ ஜானு என்ற பெயரைக் கேட்டதும் சகலமும் புரிந்து போனது. என்ன தான் சொல்லப் போகிறார்கள்? சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டாள்.
“ஆமா சிஸ்டர். நானும் பிரபுவும் ரொம்ப நாளாக காதலிச்சிகிட்டு இருக்கோம். எங்க பழக்கம் எல்லை எல்லாமல் கடந்து போயிருச்சு. இப்ப நான் மூணு மாசம் முழுகாமல் இருக்கேன். ஆனால் இந்த மனுசன் என் கழுத்துல தாலி கட்டாம போற வர்ற பொண்ணுங்க கிட்ட எல்லாம் கடலை போட்டு கிட்டு இருக்கான்.
நீங்க என்ன தான் அவர் கூட படிச்சு இருந்தாலும் அவர் குணம் இப்போ ரொம்ப மாறிப் போயிடுச்சு. என் வாழ்க்கை தான் கேள்விக் குறியாக போயிட்டு இருக்கு. உங்க வாழக்கையும் அந்த பொறுக்கியால் பாழாகி விடக் கூடாதுல அதான் சொல்றேன்.”.. என்று பிசிறு தட்டாமல் ஜானு சொல்லி முடிக்க.
“என்னங்க சொல்றீங்க?.. பிரபு அவ்வளவு கேவலமானவனா?”.. என்று மாலா கேட்க.
“நீங்க வேற.. சரியான பொம்பிளை பொறுக்கி. என் கையைக் கூட ரெண்டு தடவை பிடிச்சு இழுத்து இருக்கான்”.. என்று ஆராதனாவோ இது தான் சாக்கு என்று மாத்தி அடிக்க..
தன்னவனைப் பற்றி இவள் யார் இழிவாகப் பேச என்று ஜானுவுக்கு கோபம் பொங்கியது. மாலா கவனிக்காத நேரம் அவள் காலை மிதித்து இருந்தாள்.
“ஆ”.. என்று ஆரா மெல்ல கத்தியபடி “எதுக்கு டீ மிதிச்ச?”. . என்று கேட்க.
“ஏய்.. என் ஆளைப் பத்தி நான் மட்டும் தான் தப்பா பேசலாம். நீ பேசின சீவிடுவேன்”.. என்று எச்சரிக்கை விடுக்க..
“மம்.. எனக்குத் தேவை தான்”.. என்று மனதுக்குள் மட்டும் புலம்பிக் கொண்டாள்.
“ஆமாம் சிஸ்டர்.. எப்படியாவது அந்த பிரபுவை அவாய்டு பண்ணிடுங்க”.. என்று ஜானு முடிக்கவில்லை அவர்கள் எதிரில் பிரபுவே வந்து நின்று இருந்தான்.
ஐயையோ… இவன் எப்போ வந்தான் என்று பெண்கள் இருவரும் திகிலுடன் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு.. இப்ப உங்களுக்கு பாதை தெளிவா புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன். பத்திரமா போயிட்டு வாங்க. பை!!”.. என்று அவளிடம் சாவியை நீட்டியவர்கள்.. துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அங்கிருந்து சிட்டாகப் பறந்து இருந்தார்கள்.
“இந்தா.. உன் பர்ஸை விட்டுட்டு வந்துட்ட.. ஆமா.. அந்த வானரப் படைகள் உன்கிட்ட என்ன பேசிட்டு இருந்துச்சுக.”.. என்று பிரபு கேட்க..
“ஒ.. அதுவா..” என்று சிரிப்பை அடக்கிக் கொண்ட மாலா.. “உன் லீலை எல்லாம் சொல்லிட்டு போனாங்க. நீ பேர்ல தான் ராமனாம். ஆனா நிஜத்துல கடைந்து எடுத்த அயோக்கியனாமே.”.. என்று மாலா சொல்ல..
“அப்படியா சொன்னாளுக..”.. என்று அவன் முகம் மாற..
“இது என்ன பிரமாதம்.. இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் கூட சொன்னாளே.. உன் குழந்தை இப்போ அவள் வயித்துல வளருதாமே??”.. எங்களையே ஓவர் டேக் பண்ணி விடுவீங்க போல”.. என்று அவள் சொல்லி விட்டு சிரிக்க
. ராம்பிரபுவுக்கோ.. ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் சிறு வெட்கம்.. என்று கலவையான உணர்ச்சிகளின் நடுவில்.
“ராட்சசி.. என்ன எல்லாம் சொல்லி என் மானத்தை வாங்கி வச்சி இருக்கா?”.. என்று மனதுக்குள் கரித்துக் கொண்டு இருந்தான். இரு.. இரு.. உன்ன வந்து வச்சுக்கிறேன்.’”.. என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான்.
“ராம்..”.. என்று அவன் முகம் முன் சொடக்கு போட்டு அவன் சிந்தனையைக் கலைத்து இருந்தாள் மாலா. “சில் ராம்!!. ஜானு இஸ் மேட்லி லவ்விங் யூ. மேரி ஹெர் சூன். எவ்ரிதிங் வில் பீ ஃபைன்.”.. என்று மாலா சொல்ல.
“சரி மாலா. நீ பத்திரமா போ.”.. என்று அவளை வழி அனுப்பி வைத்தான்
அவன் நேராகச் சென்றது என்னவோ ஜானுவைத் தேடி தான். அவளும் எதிர்பார்த்து தான் இருந்தாள்.
சூறாவளியாக அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவன் “ஏ ஜானு.. ஏண்டி என் ஃப்ரெண்ட் கிட்ட என்னைப் பத்தி தப்பு தப்பா சொன்ன?”.. என்று அதட்ட.
அவளோ சற்றும் அசராமல்.. “இப்ப நான் என்ன தப்பா பேசிட்டேன். இன்னும் கொஞ்ச நாட்களில் நமக்குள்ள நடக்கப் போகிறது தான!! அதுவும் இல்லாம இப்படி எல்லாம் சொல்லி வச்சா தான் கொஞ்சம் லிமிட்டோட நடந்துக்குவாளுங்க.”.. என்று அவள் முகம் சுளித்து சொல்ல..
தன் தோழியை அவள் தப்பாகப் பேசியதில் அவன் முகம் கோபத்தில் சிவக்க.. “சீ.. நீ எல்லாம் ஒரு பொண்ணா!!. அவள் யாருன்னு தெரியாம அவளைப் போய் தப்பா பேசுறியே!!. அவள் என் உயிர் நண்பனைக் காதலிச்சு கல்யாணம் பண்ணப் போற பொண்ணு. என் தங்கச்சி முறை.!!
உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சு இருந்தேன் தெரியுமா. நீ திரும்பத் திரும்ப என்னை அசிங்கப்படுத்திட்டு இருக்க. எனக்கு உன்னைப் பார்க்கவே பிடிக்கல. ப்ளீஸ் கெட் லாஸ்ட்.”.. என்று அனல் பறக்க கத்தியவன் அங்கு இருந்து சென்று இருந்தான்.
இது வரை அனைத்தையுமே அசால்ட்டாக எடுத்து, எளிதாகக் கடந்து வந்து கொண்டு இருந்த ஜானு விழிகளில் முதல் முறையாக கண்ணீர்த் துளிகள் திரண்டு வழிந்தன. அவன் சொன்ன சொற்கள் ஈட்டியாய் அவள் நெஞ்சைக் கிழித்து இருக்க.. அழுது பழக்கம் இல்லாதவளுக்கு இன்று கண்ணீரை நிறுத்தும் வழி தெரியாமல் போனது.
கவிதை நேரம்
ஹாஸ்டல் திரும்பி இருந்தார்கள் ராஜும் பிரபுவும். “எப்படி டா?.. நம்ம மூவ் ஒன்ணொண்ணையும் நமக்கு தெரியாம இவ்வளவு க்ளோஸ் ஆக நோட்டம் விட்ருக்காங்க. அப்போ நம்ம கிருஷ்ணா பண்ண ரிசர்ச் பேப்பர்ல எதோ பெரிய விஷயம் மறைஞ்சிட்டு இருக்கு. அந்த உண்மை எக்காரணத்தைக் கொண்டும் வெளி வரக் கூடாதுன்னு தான் நம்ம கிருஷ்ணாவைப் போட்டுத் தள்ளி இருக்கானுங்க. அவனுங்களை நாம பழி தீர்த்தே ஆகணும்”
என்று உணர்ச்சிகளை அடக்க முடியாமல் பிரபு சிவந்த கண்களுடன் உக்கிரமூர்த்தியாக கர்ஜிக்க..
“பிரபு.. அமைதியாக இரு. இது நாம கோபப்பட வேண்டிய நேரம் இல்லை. கிருஷ்ணாவுக்கு இது ஆபத்தான புராஜக்ட் என்று நிச்சயம் தெரிஞ்சு இருக்கும். அதனால் தானோ என்னவோ அவன் நம்ம கிட்ட அதைப் பத்தி அதிகம் சொல்லாமல் மறைச்சிட்டான்.
தனியாகப் போய் ஆபத்திலும் மாட்டிக் கிட்டான். இப்ப அதே தப்பை நாமளும் பண்ணக் கூடாது. அவனுங்க பெரிய கிரிமினல் ஆக இருப்பானுங்க போல”.. என்று ராஜ் சொல்ல
“அதுக்கு.??.. அவனுங்களுக்கு பயந்துட்டு சும்மா இருக்கச் சொல்றியா ராஜ்”.. என்று பிரபு எகிற.
“டேய்.. கொஞ்சம் நான் என்ன சொல்ல வரேன்னு நிதானமாக கேளு. நாம நிச்சயம் அவனுகளை பழி வாங்கணும். ஆனா இப்போ இல்ல. முதல்ல கிருஷ்ணாவை எதுக்காக கொலை செஞ்சாங்க?. யார் அப்படி பண்ணதுன்னு கண்டு பிடிக்கணும்.
ஆனா இதை எல்லாம் நாம தான் பண்றோம் அப்படின்னு யாருக்கும் தெரியக் கூடாது.”
. “ஏண்டா இப்படி பயந்து சாகுற. நாம என்ன தப்பா பண்ணப் போறாம். எந்த தப்பும் பண்ணாத கிருஷ்ணாவுக்கு நியாயம் கிடைக்கத் தான போராடப் போறோம்.”.. என்று பிரபு கேட்க
“டேய் முதல்ல எமோஷனலா யோசிக்காம.. சாமர்த்தியமாக யோசிக்கப் பழகு. நீ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அதிரடியாக ஏதாவது பண்ணா நாளைக்கு நம்ம பிணமும் இப்படித் தான் ஏதாவது கிணத்துல மிதக்கும். புரிஞ்சுக்கோடா. நாம கிருஷ்ணவோட உண்மையான நண்பர்களாக இருந்தால் அவன் கனவை நிறைவேத்தனும்.
எந்த உண்மையை மண்ணோடு மண்ணாகப் புதைக்க நினைச்சாங்களோ அதை நாம வெட்ட வெளிச்சமாகக் கொண்டு வரணும். அதற்கு காரணமானவங்களின் முகத்திரையைக் கிழித்து நடு ரோட்டில் நிக்க வைக்கணும். அது தான் நாம கிருஷ்ணாவுக்காக பண்ணனும்.”.. என்று ராஜ் நிதானமாக சொல்ல.
நண்பனின் தெளிவான பேச்சைக் கேட்ட பிரபு சற்று நிதானித்தான். “எல்லாம் சரி தான்டா. ஆனா இப்ப நாம எங்க போய் அந்த பையனைத் தேடுறது? கிருஷ்ணா கஷ்டப்பட்டு பண்ண ரிசர்ச் பேப்பர் அத்தனையும் அவன் தூக்கிட்டு போயிட்டான். நம்ம வெறுங் கையோடு இப்ப என்ன பண்ண முடியும்.”.. என்று பிரபு சோர்ந்து, நம்பிக்கை இல்லாமல் கேட்க.
“இல்லடா நிச்சயம் ஏதாவது க்ளூ நம்க்காக கிருஷ்ணா விட்டு விட்டு போய் இருப்பான்னு தோணுது. யார் யாரையோ கண்ணுல விரல் விட்டு ஆட்ட திட்டம் போட்டவன் ஆதாரங்களை லேப்டாப்பில் மட்டும் வைத்து இருக்க மாட்டான்னு தோணுது.”.. என்று ராஜ் சொல்ல.
“மச்சான். நீ சொல்றது கரெக்ட். அப்ப நாம கிருஷ்ணா பயன்படுத்தின எல்லா இடத்துலயும் போய் தேடிப் பார்க்கலாம்.”..
“ம்”.. என்று இருவரும் முடிவு எடுக்க.. அடுத்த நிமிடமே கிருஷ்ணா எப்போதும் தன் பொழுதைக் கழிக்கும் அவர்கள் நூலகத்தில் சென்று தேடிப் பார்த்தான் பிரபு. அவன் கடைசியாக திருப்பிக் கொடுத்த புத்தகத்தில் எதாவது குறிப்பு எழுதி வைத்து இருக்கிறானா? என்று பலமுறை அந்த புத்தகங்களின் பக்கங்களை புரட்டிப் பார்த்து இருந்தான். அதே நேரம் ராஜ் ஒரு பக்கம் அவன் கல்லூரி போஸ்ட் பாக்ஸ், அவன் அறையின் செல்ப். மற்றும் பீரோவில் எதாவது மறைத்து வைத்து இருக்கிறானா என்று தேடிப் பார்த்தான்.
ஆனால் அனைத்திலும் ஏமாற்றமே. நம்பிக்கையுடன் துவங்கியவர்கள் இப்போது ஏமாற்றத்தில் சோர்ந்து போனார்கள். அவன் கைப்பேசியும் கிடைக்க வில்லை. கவிதா கடைசியாக அவனுடன் செல்லும் போது அவளிடமும் கைபேசி இல்லை. திக்கு தெரியாத காட்டில் நின்ற உணர்வு அவர்களுக்கு.
“இப்ப என்னடா செய்யிறது?. பேசாம திரும்ப கிருஷ்ணா வீட்டுக்கே போய் எதாவது கிடைக்குமான்னு பார்க்கலாமா?”.. என்று ராஜ் கேட்க.
இல்லடா நீ நல்லா யோசிச்சு பாரு. கிருஷ்ணா ஊருக்குப் போய் நிச்சயம் ஆறு மாசம் இருக்கும். கடைசி அஞ்சு மாசமா தான் அவன் ஆராய்ச்சியே தொடங்கி இருந்தான். அவன் கடைசியாக ஊருக்குப் போன போது கவிதாவைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற டென்ஷன்ல தான் போனான்.
அந்த நேரம் நிச்சயம் இதை எல்லாம் எடுத்துட்டு போய் இருக்க மாட்டான்.”.. என்று பிரபு விளக்க.
“ம்.. சரிதான். அப்ப லேப்டாப்பைத் திருடிட்டுப் போனவணைப் பிடிக்கிறதைத் தவிர நமக்கு வேற வழி இல்லை.”.. என்று ராஜ் சொல்ல.
“ஆமா மச்சான். ஆனா அது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லையே. அவன் ஃபோட்டோ இல்லாம, அவன் அடையாளம் கூட இல்லாம எங்கே என்று அவனைத் தேடுறது. நீ ஒரு வார்த்தை மாலா கிட்ட பேசுடா. கவிதா கிட்ட கிருஷ்ணா எதுவும் பத்திரமா வச்சு இருக்கச் சொல்லி கொடுத்திருக்கிறானா என்று விசாரி. ஒவ்வொரு தகவலும் நமக்கு ரொம்ப முக்கியம் மச்சான்”.. என்றான் பிரபு.
‘இல்லடா மாலா ஏற்கனவே ரொம்ப அப்செட்டா இருக்கா. இதுல இது விபத்து இல்லை கொலை என்று தெரிஞ்சா.. அவள் ரொம்ப பயந்து விடுவா!!”.. என்று ராஜ் தயங்கியவாறு சொல்ல.
“சரிடா.. ஆனா இப்ப நமக்கு எந்த ஆதாரமும் கிடைக்கலையே. நான் மாலாகிட்ட வேற மாதிரி விசாரிச்சு பார்கிறேன்” என்ற பிரபு மாலாவை தன் கைப்பேசியில் அழைத்து இருந்தான்.
“சொல்லுங்க பிரபு”.. என்று அவள் குரல் சோர்வாக கேட்க. “மாலா.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். கவிதா கிட்ட கிருஷ்ணா எங்களோட புராஜக்ட் பேப்பர்ஸ் கொடுத்து வச்சு இருந்தான். அவளோட திங்ஸ் ல ஏதாவது பென் டிரைவ் இல்ல மெமரி கார்டு இல்ல எதாவது ஃபோல்டர் இருக்கான்னு பார்க்க முடியுமா”.. என்று அவன் கேட்க.
“சரி பிரபு. இப்பவே பார்க்கனுமா?…”
. “ஆமா மாலா. கொஞ்சம் அர்ஜன்ட்.”
சரி பிரபு அரை மணி நேரத்தில் கூப்பிடுறேன். என்று ஃபோனை வைத்து இருந்தாள்.
கவிதா இல்லாமல் அந்த அறையில் தனியாக மாலாவுக்கு இருக்க பிடிக்கவில்லை. அடுத்த அறையில் மற்ற தோழிகளுடன் தங்கிக் கொண்டாள். சாவியை எடுத்துக் கொண்டு அந்த அறைக்கு போவதே மாலவுக்கு சிறு நடுக்கமாக இருந்தது.
ஒவ்வொரு இடத்திலும் கவிதா நின்று சிரிப்பது போல் ஒரு பிரம்மை தோன்றியது. ஏண்டி என்னை விட்டுப் போன என்று வருந்தியளின் விழிகள் தானாக கசிந்தன.
வேதனையைத் தள்ளி வைத்து விட்டு தன் தேடலைத் தொடங்கினாள். அவள் பீரோவில் அவர்கள் கேட்டது போல் எதுவுமே இல்லை. கிருஷ்ணா அவளுக்காக எழுதிய சில கடிதங்கள் மட்டுமே இருந்தன.
அதை எப்படி படிப்பது என்று அவள் அதை கீழே வைக்கப் போக. அந்த கடிதத்தில் இருந்த எதோ ஒன்று அவளை ஈர்த்தது.
தொடரும்
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.