வீடெல்லாம் ஆட்கள் நிறைந்திருக்க அத்தனை சொந்தங்களும் ஆளுக்கொன்றாய் அவ்வளவு பேச்சுக்கள் அவளின் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க நான் நீ என்று.
“இத்தனை பேசறோம் எனக்கென்னன்னு மதிக்காம உக்கார்ந்திருக்கா பாரேன் உம்மவ…” என முன்னால் இருந்த முற்றத்தில் பஞ்சாயத்திற்கென்று வந்ததை போல கூடியிருந்தவர்கள் பேச ராக்குமுத்துவிற்கு அத்தனை கோபம்.
“அவ செஞ்சதுக்கு பேசாம என்ன செய்வாக? இல்ல அவளால பேசத்தான் முடியுமா? அதான் கம்முன்னு உக்கார்ந்திருக்கா…” என்று வெற்றிலையை அதக்கியபடி பாட்டி முறை கிழவியும் பேச,
“ம்மா அவங்கள கம்முன்னு இருக்க சொல்லு. இல்ல அம்மியா தூக்கி நங்குன்னு வாயிலயே போட்டுடுவேன்…” என முன்னறையில் அமர்ந்திருந்தவள் கன்னத்தில் மீண்டும் ஒரு அறை விழுந்தது பலமாக.
“வாய திறந்த. கிழிச்சிருவேன்…” என அறைந்திருந்தார் ராக்குமுத்து.
“இப்ப என்னத்துக்கு அடிக்கிதவ? உம்மவ இன்னிக்கு நேத்தா பேசுதா? அதெல்லாம் சிண்டுலையே நவட்டிருக்கனும். அப்பா விட்டுட்டு இப்ப வந்து கண்டிக்கிற?…” என வெளியில் இருந்து ஒருவரின் சத்தம்.
அத்தனை அடிகளை வாங்கிக்கொண்டு கன்னம் இரண்டும் பழுத்திருக்க உர்ரென்று பார்த்தபடி அமர்ந்திருந்தாள் இசக்கியம்மாள்.
இரண்டு கன்னங்களும் தீயாய் எரிந்துகொண்டு இருந்தது. உடலெல்லாம் அடி வாங்கியதன் வலி வேறு.
ஒரு துளி கண்ணீர் வந்துவிடவில்லை கண்களில் இருந்து. எரிக்கும் பார்வையை கூட அத்தனை இலகுவாய் பார்த்தாள்.
“நிமித்திட்டு நிக்கிதத பாரு. முறைக்கிற கண்ணை நோண்டிட்டு, கால உடச்சு போடு வீட்டுக்குள்ள…”
“ஆமா இனி எந்த இளிச்சவாப்பய வர போறான்? ஊரே சிரிப்பா சிரிச்சு போச்சு…”
“அப்பன்காரன் பதவிசா இருக்கற இடம் தெரியாம இருப்பான். சத்தமா பேச ஆவாது அந்த ஆம்பளைக்கு. மவளுக்கு உடம்பெல்லாம் திமிரு தான்…”
“அட ஆமாங்க்கா, வாயை கேளுங்க…” என்று வெளியில் அவளின் உறவுகள் எல்லாம் வாய்க்கு வந்தபடி பேச பேச இங்கே இசக்கிக்கு தான் அத்தனை அடி விழுந்தது அதற்கெல்லாம் சேர்த்து.
“இந்தா இன்னும் எவ்வளவுதான் அடிப்ப? போம்மா முதல்ல. அடிச்சு முடமாக்கிட்டா எவனுக்கு கட்டி வைப்ப?…” என இசக்கியின் அக்கா செல்வரசி தாயிடமிருந்து தங்கையை காப்பாற்றினாள்.
“ப்ச், விடுக்கா…” என இசக்கி தள்ளி அமர்ந்தாள்.
பார்ப்பவர்களுக்கு அது என்னவோ எரிச்சலில், திமிரில் செய்வதாக இருந்தது. ஆனால் உடலெல்லாம் அத்தனை ரணம்.
இரண்டு மாதங்களாகவே நடப்பது தானே? வாங்கி பழகிவிட்டாலும் வலி என வருகையில் உள்ளுக்குள் பொறுக்கமுடியாது.
ஆனால் கிஞ்சித்தும் முகத்தில் காட்டாமல இருப்பதில் கெட்டிக்காரி. எப்போதும் முறைப்பு தான் இருக்கும் முகத்தில்.
“சரியான அரங்கி, கொஞ்சமாச்சும் முகத்த சுண்டுதாளா?…” என்று அவளின் கண்ணீரையோ, இல்லை வலியையோ பார்த்துவிடமாட்டோமா என சொந்தங்களும், ஊர் ஜனங்களும் பார்த்து ஏமாந்து போவார்கள்.
“என்ன மனுசிடி நீ? கொஞ்சமும் முகத்த சுளிக்காம?…”
“ஏனாம்? நான் மூஞ்சிய தூக்கி வச்சுக்க நீ பாத்து சந்தோஷப்படனுமோ? உன்னிஷ்டத்துகெல்லாம் ஆட என்னை என்னன்னு நினச்ச?…” என்று கத்தியிருந்தாள் அவள்.
இந்த இரண்டு மாதங்களும் நித்தமும் போராட்டம் தான். இப்படி பெண்ணாய் தயாராக செய்து கடைசியில் மாப்பிள்ளை வீட்டினர் வராமல் போவது என நடந்துகொண்டு இருந்தது.
இன்றோடு நான்காவது வரன். அலுத்து சலித்துவிட்டது அவளுக்கு. ஆனாலும் தயாராகி இருக்க இதோ மாப்பிள்ளை வீட்டினர் வரவில்லை என்றதும் மீண்டும் ராக்குவின் கோபம் மகள் மீது பாய்ந்தது.
ஜோடனை செய்யப்பட்ட தலைமுடி கலைந்து பிடித்து இழுக்கப்பட்டு அலங்கோலமாய் தான் இருந்தாள் அவள்.
பெண் பார்க்க வருகின்றார்கள் என்றதும் அழைப்பு வைக்காமலேயே ஊரில் உள்ள சொந்த பந்தங்கள் எல்லாம் வீட்டின் முற்றத்தில் வந்து அமர்ந்துவிட்டனர் வேடிக்கை பார்க்க என்று.
வந்தவர்களை வெளியேறவா சொல்லமுடியும்? பெருமாளுக்கு தர்மசங்கடம் இருந்தபோதிலும் வாயில்லாபூச்சி அவர் மறுத்து பேசாமல் உபசரித்தார்.
இந்த வரன் மூத்த மகளின் புருஷன் வீட்டு வழியில் இருந்து மூத்த மருமகனால் பேசப்பட்ட வரன்.
தகைந்துவிடும் என்று அத்தனை நம்பிக்கையுடன் இருக்க இதோ அவர்களும் மறுத்துவிட்டதாக தகவல்.
மூத்த மருமகனும் இதனை கொண்டு வரவில்லை. அவர்களுடன் வருகிறேன் என்றிருந்தவன் இப்போது எப்படி வர என முடியாதென்று சொல்லிவிட்டான்.
பெருமாள் தோளில் கிடந்த துண்டை வாயில் பொத்தியபடி கண் கலங்க அமர்ந்திருந்தார்.
பார்க்க அத்தனை பரிதாபம். மகளுக்கு தான் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
கண்களை கரித்துக்கொண்டு வர வீம்புக்கென்ற கண் சிமிட்டி கண்ணீரை வெளிவரவிடாமல் உள்ளிழுத்தாள்.
‘சொன்னா கேட்டா தான? உங்களுக்கு எதுக்குப்பா இத்தனை கஷ்டம்?’ என மானசீகமாக அவள் பேச பெருமாள் பார்வை மகள் பக்கம் திரும்பியது.
“பெருமாளு உனக்கொரு யோசனை சொல்லுறேன். இங்க வா…” என்று வெளியே அழைத்தார் பெருமாளின் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும் சித்தப்பா ஒருவர்.
வெளியே சென்றுவிட்டு வந்தவருக்கு முகத்தில் கவலை இருந்தாலும் மனதிற்கு நடந்துவிட வேண்டுமே என்று அத்தனை பயமும், வேண்டுதலும்.
“ராக்கு இங்க வா…” என்று அழைத்தார் தன் மனைவியை.
என்னவோ முக்கியமான விஷயம் பேச போகிறார்கள் என்று வீட்டில் கூடியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தது காதை தீட்டிக்கொண்டு.
“அப்படியே வாயிலையே அடிச்சேனா பாரு. இல்லைன்னாலும் அத்தை இங்க வரும்போது தெரியாதாக்கும்? உன் வேலையை பாரு. நாங்க பார்த்துப்போம்…”
“கல்யாணம் எனக்கு தான? அப்பறம் நீயேன் பார்க்க போற? செஞ்ச கல்யாணத்துக்கே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துன்னு இங்க வந்து உசுர வாங்குற அப்பாவை…”
“இசக்கி, ரொம்ப பேசறடி. என்னவோ உனக்கு மட்டும்ந்தான் அப்பான்ற மாதிரி…” என்று சொல்லிவிட்டு செல்ல மரப்படிக்கட்டு வழியாக மாடியில் இருக்கும் தன்னறைக்கு ஏறி சென்றாள் இசக்கி.
பாதங்கள் எட்டெடுத்து வைக்க முடியாதபடிக்கு இருந்தது. ராக்கு தன்னுடைய அத்தனை கோபங்களையும் மகள் மீது தான் இறக்கி வைத்திருந்தார்.
ஊரின் பேச்சுக்களுக்கு பதில் தரமுடியாமல் அந்த கோபத்தின் வடிகாலாய் மகளின் உடலில் வரிவரியாய் இழுத்திருந்தார்.
கல்லூரி முடித்த பெண். வளர்ந்த, இன்னொரு வீட்டில் வாழவேண்டிய பெண். அவள் உடலை புண்ணாக்குகிறோமே என்ற வேதனையும் சேர்ந்துகொண்டது.
மகளின் இந்த அமைதி பெருமாள் என்னும் அந்த ஒரு மனிதனுக்கானது என்று தெரியுமே.
தந்தையை ஒரு சொல் என்றால் பொறுத்துக்கொள்ளமாட்டாள். அதே நேரம் அவரின் வார்த்தைகளை மீறவும் மாட்டாள்.
யாரும் எதிரே நின்று பேசிவிட்டு நகர்ந்துவிடமுடியாதபடிக்கு இருக்கும் இசக்கியின் அத்தனை கட்டுப்பாடும் ‘தாயி’ என்ற பெருமாளின் ஒற்றை அழைப்பில் அடங்கிவிடும்.
இப்போதும் அதற்கு கட்டுப்பாட்டு தான் ஊர் பேச்சுக்களை கண்டுகொள்ளாமல் திருமண ஏற்பாட்டிற்கு சம்மதித்து இருக்கிறாள்.
தருமபுரி மாவட்டத்தின் கிராமத்தில் விவசாய நிலம் கொஞ்சம் வைத்திருக்கும் பெருமாள்.
பூர்வீக சொத்தாக இருந்தாலும் பெருக்கமோ, இல்லை சுருக்கமோ அதனை கொண்டே வாழ்கையை நடத்தி வருபவர்.
ஊரில் எந்த வேலை என்றாலும் பெருமாளை தான் தேடுவார்கள். அப்படியே சிறுவயதிலிருந்து கேட்பவர்களுக்கு முடியாதென்று சொல்லாமல் உதவி செய்பவருக்கான பெயர் எடுப்பு.
‘எடுப்ப கூப்பிடுங்கப்பா, எடுப்புட்ட சொன்னா செய்வானே?’ எடுப்பு எடுப்பு என்று இந்த பேச்சு எப்போது துவங்கியதென்று பெருமாளுக்கே தெரியவில்லை.
சிறுவயதில் பெரிதாக தெரியாத ஒன்று அதுவே தனது பெயராகி போக ஒன்றும் செய்யமுடியவில்லை அவரால்.
ஊரின் பெரிய குடும்பங்கள் வீட்டில் விசேஷம் என்றால் உடனடியாக பெருமாள் அங்கே உதவிக்கு என்று அழைத்துக்கொள்வார்கள்.
மறுத்தும் பழக்கமில்லையே, முகம் மாறாமல் செய்ய கூடியவர் அவர். ஆனால் அந்த பெயர் பிள்ளைகளையும் தொடர்ந்ததை தான் ஏற்க முடியவில்லை.
‘எடுப்பு மவளே’ என்ற அடைமொழியை பிள்ளைகளுக்கும் தர தயாராய் இருந்தனர் ஊர் மக்கள். அரசி இதனை பெரிதாய் கண்டுகொள்ளமாட்டாள்.
“இவங்க சொன்னா அப்படியா நாம?…” என்று கடந்துவிடுவாள்.
ஆனால் இசக்கி எதற்கும் அஞ்சாதவள். நின்று எதிர்த்துவிட்டு தான் மறுவேலை. அதுவே ராக்குவிற்கு இன்னும் மன உளைச்சலை தரும்.
“பேச்சியக்கா மகனை கல்லால எரிஞ்சு மண்டையை உடைச்சிருக்கா பாருங்க உங்க மவ? அது வாசல்ல வந்து மல்லுக்கு நிக்குது. அவன் உசரமென்ன? இவ வயசென்ன?…” என போட்டு சாத்திவிடுவார் மகளை.
அப்போது ஆரம்பித்தது இசக்கிக்கு. அடித்துக்கொள் என்னும் விதமான அலட்சியம்.
“ஏன் தாயி?…” தந்தை கன்னத்தை வருடி கொஞ்சி வாஞ்சையாக கேட்கையில்,
“என் பேரு எடுப்பு மவளாப்பா?…” என்பாள் சிறுவயதில்.
“என்தாயிக்கு பேரிருக்கே. எங்கம்மா இசக்கியம்மா…”
“உங்களுக்கும் பேர் இருக்கேப்பா?…” என்ற மகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாகிவிடுவார்.