“அப்படியாப்பா, சரிங்கப்பா. நீங்க சொன்னா கேட்பேன்ப்பா…” என்று தந்தைக்கு அத்தனை மரியாதை தரும் பெண்.
ராக்குவிற்கு மனதெல்லாம் கலங்கி விடும் இதனை பார்க்கையில். ஆனால் என்ன செய்துவிட முடியும்?
திருமணம் செய்து வந்த புதிதில் இதென்ன பெயர் என்று மாமியாரிடம் கேட்டதற்கு ‘ஊர்ல செல்லமா அப்படித்தான் கூப்பிடுவாங்கத்தா’ என்பார் அவர்.
பெருமாளிடமும் கேட்டிருக்க அவர் கொஞ்சமும் கண்டுகொள்ளமாட்டார். கூப்பிட்டா என்னாகிட போகுது? என கடந்துவிடுவார்.
இப்படி ஒரு மனிதரை தான் தலைகுனியும்படி செய்துவிட்டது அந்த ஊரும், ஊரின் சில மனிதர்களும். அதுவும் உயிராய் நினைக்கும் பெண்ணை கொண்டே.
மாடிக்கு வந்தவள் உடலின் காயங்களுக்கு மருந்தை பூசிவிட்டு படுத்துக்கொண்டாள்.
“சும்மாவே அந்த டாக்டர் மதிக்கமாட்டான். இதுல அவங்கம்மாட்ட சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொன்னா சுத்தம். இந்தப்பாவுக்கு கூறே ம்ஹூம், இல்ல இல்ல அந்த தாத்தாவுக்கு கூறே இல்லை…” என புலம்பியபடி கண்ணை மூடிக்கொண்டாள்.
——————————————–
கேட் திறக்கும் சத்தத்தில் சுந்தரி வந்து எட்டி பார்த்தார். மகன் உள்ளே வந்துகொண்டிருந்தான் அவனின் சிறிய கைபெட்டியுடன்.
வந்தவருக்கு அவனின் முகமே எத்தனை கோபத்தில் இருக்கிறான் என்று காட்டிக்கொடுத்தது.
தந்தை எழுந்துகொள்ள மாட்டார். சுந்தரி மட்டும் எழுந்து வர கதவை திறந்தவன் யார் என்றான் வாசலில் கேட்டை திறக்காமல்.
“ஸார் இது வெட்னரி டாக்டர் கீர்த்தனன் வீடு தானே?…”
“யாஹ்ப், நான் தான் கீர்த்தனன்…” என அவன் சொல்ல,
“தேங்க் காட்…” என வாசலில் இருந்தவர்,
“இந்த வீடு தான். தூக்கிட்டு வா…” என்றார் பின்னால் நின்ற வாகனத்தை பார்த்து.
தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவர்கள் தூக்கி வருவதை பார்த்ததும் கீர்த்தனனுக்கு புரிந்துபோனது.
வேகமாய் கதவை திறந்தவன் தாயிடம் தனது பெட்டியை எடுத்துவர சொல்லி அனுப்பினான்.
வீட்டை ஒட்டியதை போலிருந்த சிறு மருத்துவ அறை கதவை திறந்துவிட்டு வேகமாய் அந்த லேப்ரடார் வகை நாயை பெட்டில் கிடைத்த சொன்னான்.
“என்னாச்சு?…”
“நாங்க மூணு ஸ்ட்ரீட் தள்ளி இருக்கோம் டாக்டர். வெளில சத்தம் கேட்டதேன்னு கதவை திறந்து வந்தோம். இதுவும் சேர்ந்து வர அங்க நின்னது யாருன்னு தெரியலை. டைகர் துரத்தவும் நின்னு கிழிச்சிவிட்டுட்டு போய்ட்டான். பக்கத்து வீட்டுல இந்த அட்ரஸ் குடுத்தாங்க…”
அவர் தகவலை சொல்லிக்கொண்டிருக்க அதற்கு அந்த நாயின் காயத்திற்கு மருந்திட்டு கட்டு போட்டுவிட்டான் கீர்த்தனர்ன்.
“எதுக்கும் போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுங்க. பர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டேன். பயப்படும்படி எதுவுமில்லை. ஆழமா இல்லை…” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தவன் குளித்துவிட்டு வந்து படுத்தான்.
எல்லாவற்றையும் பார்த்திருந்துவிட்டு பெருமூச்சுடன் சுந்தரி உள்ளே சென்றுவிட்டார்.
மறுநாள் தான் பேச ஆரம்பிக்கும் முன்னரே கிளினிக்கிற்கு கிளம்பி வந்தவன் தானே பேசினான்.
“பெருமாள் மாமா நம்பர் தாங்க…” என்றான் தாயிடம்.
“அது இப்ப உனக்கு எதுக்கு?…” சுந்தரி பதற,
“நீங்க தரீங்களா? இல்லையா?…” என்றவன் தனது போனை எடுத்து யாருக்கோ அழைக்க முயல,
“ஏய் உங்கப்பாட்ட போனை குடுன்னா குடு. தேவை இல்லாம பேசாத…”
“நான் உங்கட்ட பேசலை. நான்பாட்டுக்கு பேசறேன்…” என்று சொன்னாலும் உள்ளுக்குள் உதறல்.
தன்னை போல கை உச்சந்தலைக்கு தான் சென்றது. என்னவோ இப்போது அவன் தன்னை குட்டு வைத்த பிரம்மையில் சுரீர் என்று வலிப்பதை போல தேய்த்துவிட்டுக்கொண்டவள் பெருமாளிடம் போனை நீட்டினாள்.