“உங்களுக்கு தான் புரியலை…” என பல்லை கடித்துக்கொண்டு அவள் பேசினாள்.
கொதிக்கும் நீரை மேலுக்கு ஊற்றினால் இந்த சோர்வில் இருந்து விடுபடலாம் என அவள் நினைத்திருந்தாள்.
“ப்ளீஸ் டாக்டர், நான் போன வேகத்துல குளிச்சிட்டு வந்துருவேன்…”
“இசை காயத்துல நீர் வைக்கும்…”
“அதெல்லாம் சரியாகிடும். என்னவோ இந்த ஒருவார அடியை பார்த்து தானே இப்படி சொல்றீங்க? ரெண்டுமாசமாவே வாங்கிட்டு இருக்கேன். நீர் கட்டி அதுவா உடைஞ்சு காய்ஞ்சு உதிர்ந்து காயம் காணாம போய்டுச்சு…”
“இசை…”
“இதெல்லாம் பழகிட்ட மாதிரி இருக்கு. நீங்களாவது என் பேச்சை கேளுங்க. சரி கேட்க வேண்டாம். ஆனா என்னை இந்த ஒருவிஷயத்துல என்னை விடுங்களேன்…”
இறைஞ்சுதலாய் அவள் குரலும், அதன் சாராம்சமும், அவள் சொல்லியவையும் கீர்த்தனனை குத்தியது.
‘முதல்முறை திருமணத்திற்கு அவள் வீட்டில் கேட்ட பொழுதே சரி என்றிருந்திருக்க வேண்டுமோ தான்’ என அவனறியாமல் ஒரு எண்ணம் வியாப்பித்தது.
தன்னுடைய திருமண மறுப்பு தானே இசையை இங்கே கொண்டுவந்து நிறுத்தியது.
தான் மறுத்த பின் அவசர திருமணமும், அதற்கு பின்னுமான நிகழ்வுகள் இசை இப்படி உடலெல்லாம் காயப்பட்டதும் என தோன்ற ஆரம்பிக்க செய்வதறியாமல் நின்றான்.
இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று அவனுக்கு உரைக்கவில்லை. அவளின் காயங்கள் மட்டுமே அவனை குற்றம் சாட்டிக்கொண்டு இருந்தது.
தான் பார்த்த பகுதியிலேயே அத்தனை காயமென்றால் பார்க்காத, வெளிப்படாத இடங்கள்?
மனது செல்லும் திசையில் திடுக்கிட்டவன் அவற்றை மறைக்க முடியாமல் அறையைவிட்டு விருட்டென்று வெளியேறிவிட்டான்.
அவனின் வெளியேற்றம் அதுவரை வேறெங்கோ பார்த்திருந்தவளை திசை திருப்ப தன்னையே கடிந்துகொண்டாள்.
“உனக்கென்னடி இசக்கி? உன் வீட்டுல மட்டும் எல்லாத்துக்கும் சரின்னுவ. இங்க வந்து இந்த மனுஷனை இந்த பாடு படுத்தற? இங்கயும் வாய மூடிட்டு சொல்றத கேட்கறதுக்கு என்ன?…” என தனக்கு தானே திட்டிக்கொண்டாள்.
“அம்புட்டும் கொழுப்பு. வாய்க்கொழுப்பு கொஞ்சநஞ்சமில்ல. எப்பப்பாரு அவரோட மல்லுக்கு நிக்கிறது. இப்ப அவரு உன் புருஷன். மதிச்சு நட…” என்று சொல்லிக்கொண்டவள் மெல்ல எழுந்தாள்.
அவளாகவே அவன் வாங்கிய கவரில் இருந்து ஒரு நைட்டியை எடுத்துக்கொண்டு புடவையை பெட்டியின் மீது தூக்கி போட்டாள்.
“இன்னும் ஒருவாரத்துக்கு இந்த மோகினி பேய் உடுப்பு தான். தொலதொலன்னு. ஐயோ…” என்று அந்த நைட்டியை கொண்டு தலையிலடித்தபடி திரும்ப அங்கே கீர்த்தனனும், உடன் சுந்தரியும் நின்றார்கள்.
“இன்னும் போகலையா நீங்க?…” இசை அசராமல் அவனிடம் கேட்க,
“இவளை என்னன்னும்மா அவங்க வீட்டுல சமாளிச்சாங்க?…” என சுந்தரியிடம் கேட்டுக்கொண்டே வந்தவன் தனது பைக் கீயை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
“நிஜமா போயாச்சா உங்க மகன்?…” இசை சுந்தரியிடம் கேட்க,
“நீ அவனை வம்பிழுத்துட்டே இரு. குளிப்பேன்னு சண்டைக்கு நின்னியாம். என்னை புடிச்சு வாங்குறான்…”
“எவ்வளவுக்கு வாங்கினார்?…” இசை கிண்டலாய் கேட்டு சிரிக்க,
“வாய் வாய். ஆனா நீ பேசறதுக்கெல்லாம் இனி நான் தான் சிக்கினேன்…” என்றவர்,
“என்னத்த பார்ப்ப? முதுகுக்கு போட்ட மருந்தை யார் துடைக்க? திரும்ப யார் போட?…” என்றார் கோபமாக.
“நான் தான் போடவே இல்லையே?…” என்றவள் பின்னால் கைகொண்டு எட்டும் திசையில் தொட்டு பார்த்தவள்,
“யார் போட்டா?…” என்றபடி பிசுபிசுப்பை கவனித்தாள்.
சுந்தரிக்கு கண்ணில் பளீர் என்று வெளிச்சம் பரவ வாயெல்லாம் சிரிப்பு. மருமகளை பார்த்து சிரிக்கவும்,
“என்ன கண்ணுல லைட் எரியுது? உங்களுக்கு ஆனாலும் இம்புட்டு, இம்புட்டு ஆகாது த்தை…” என்று சுந்தரியின் கன்னத்தில் லேசாய் இடித்தவள்,
“எனக்கு வேண்டாம். நானே துடைச்சுக்கறேன். வெந்நீரை மட்டும் கொண்டுவாங்க…” என்று அமர்ந்துகொண்டாள் மீண்டும்.
“என்னை தொலைச்சிருவான். நீ ஒழுங்கா மருந்து போட்டியா என்னன்னு பார்க்கனுமாம்…”
“துரைக்கு உத்தரவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அந்த ஊசி எங்கருக்குன்னு சொல்லுங்க. எடுத்து நாலு குத்து அவர் வாய்லயே…” என்று கைவைத்து சுந்தரியின் வாயில் குத்த,
“வெளில இருக்கற ரூம்ல தான் இருக்கு. வேணும்னா எடுத்து தாரேன். இப்ப நீ கொஞ்சம் கம்முன்னு இரு…” என்றவர் வெந்நீரை தூக்கிக்கொண்டு வந்து கதவை சாற்றினார்.
ஒரு டவலை நனைத்து அவளை துடைத்துக்கொண்டு வந்தவருக்கு கண்கள் கலங்கிவிட்டது.
“உங்கம்மாளும் மனுஷி இல்ல. நீயும் மனுஷி இல்ல. உங்க ரெண்டுபேத்தையும் வச்சுக்கிட்டு. இரு ஊருக்கு போய் பேசிக்கறேன் அவளை…” என்று அத்தனை திட்டியபடி இசைக்கு உதவினார்.
மருந்துகள் போடப்பட்டு இலகுவான நைட்டியில் இருந்தவள் உடல் இப்போது லேசானதை போல இருந்தது.
“கொஞ்ச நேரம் சாய்ஞ்சி உக்காரு. இல்லன்னா வெளில வந்து உக்காரேன்…” என சொல்ல,