“அவர் சொன்னது உண்மைன்னு எனக்கு தெரியுமே? இப்ப அவர் தப்பா சொல்லியிருந்தா, மாத்தி சொல்லியிருந்தா அதை நியாயம்னு நான் சொன்னா தானே சப்போர்ட். இது எப்படி ஆகும்?…”
“சரித்தான். உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?…” என்று சிரித்தவர்,
“இப்பத்தான் வீட்டுக்குள்ள ஒரு சந்தோஷமே வந்திருக்குடா…” என்றார் மருமகளை கன்னம் வருடி.
“அப்ப பேரை இசக்கிக்கு பதிலா சந்தோஷம்ன்னு மாத்திருவோமா?…” இன்னும் குறும்பாய் பேசி சிரிக்க,
“அதுசரி. விட்டா செய்ங்கன்னு சொல்லிருவ. அதுவும் என் பிள்ளை இசைன்னு எவ்வளவு அழகா கூப்பிடறான். பேர் மாத்தவா?…” என்றதும் தான் இசைக்கும், சுந்தரிக்கும் அவ்விடத்தில் ஒரு கேள்வி.
“உன்னை எப்பருந்து அவன் இசைன்னு கூப்பிடறான்?…” என சுந்தரி கேட்டுவிட்டார் யாசை இதனை யோசிக்கும் பொழுதே.
“நிஜமாவா? நானும் இதை பெருசா கவனிச்சதில்லை…” என்றவருக்கு மகன் எதுவும் மனதில் வைத்திருந்திருப்பானோ என்று வேறு தோன்றியது.
அந்த எண்ணம் வந்த வேகத்தில் மறைந்தும் போனது. அதற்கு அவசியமே இல்லை என்பதை போல தானே மகன் தன்னிடம் பேசியதும்.
மகன் படிப்பு முடிந்து சம்பாதிக்க துவங்கியதுமே அவனை குடும்பஸ்தனாக பார்த்துவிட வேண்டும் என்னும் ஆசையில் திருமண பேச்சை ஆரம்பிக்கவுமே சுந்தரிக்கு முதலில் மனதில் வந்தது இசை.
“என்ன பேச்சும்மா இது? படிக்கிற பொண்ணை போய், அதுவும் இப்பத்தான் பர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணிருக்கா. வேற யார்ட்டையும் இப்படி பேசிடாதீங்க…” என்று எரிந்துவிழுந்ததில் அந்த பேச்சை அப்படியே நிறுத்தியிருந்தார்.
அப்போதும் கூட அவன் அவளை அவளிடத்தில் பேசுகையில் இசை என்று அழைத்திருந்தது ஞாபகம் வந்தது.
தலையை உலுக்கிக்கொள்ள அவரின் எண்ண போக்கை ஓரளவு கவனித்துவிட்ட இசை,
“ஆனாலும் இந்த மூளைக்குள்ள மகன் மேல எம்புட்டு நம்பிக்கை?…” என்று அடக்கமாட்டாமல் சிரிக்க ஏற்கனவே சிவந்துபோயிருந்த முகம் இன்னும் சிவந்தது.
கண்ணீர் பொங்க பொங்க அப்படி ஒரு சிரிப்பு இசையிடம். சிரிப்புடன் இருமிக்கொண்டு இருக்க,
“மெல்லடி, நான் என்ன நினைச்சேன்னு நீ இம்புட்டு சிரிக்கிற?…” என்றார் முகத்தை சுருக்கிக்கொண்டு.
“பின்ன அவரு இசைன்னு சொல்லவும் எப்பருந்துன்னு யோசிச்சு கனவு காண போய்ட்டீங்களே? வேற என்னவா இருக்கும் த்தை…” என்றவள்,
“ஆனாலும் உங்க மகனை இவ்வளவு பெருசா நினைச்சிருக்க வேண்டாம்…”
“ஏன் என் மகனுக்கு என்ன? என்னவோ தோனுச்சு…”
“என்ன தோனுச்சு? அதுவும் உங்க மகன்? அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் த்தை…”
“போடி…” சுந்தரி முறைத்துக்கொண்டு சொல்ல,
“அட நிஜமா தான். கட்டின பொண்டாட்டி கண்ணு முன்னாடி இருந்தப்பவே மெடிக்கல் புக்கோட திரிஞ்சார். எனக்கு தெரியாதா என்ன?…” என இன்னும் சத்தமாய் சொல்லி சிரிக்க சுந்தரி முகம் வாடியது.
உண்மை தானே? திருமணமான நாளில் இருந்து பெரிதாய் நெருக்கமிருந்ததில்லையே மகன், மருமகளிடம்.
பெரியவர்கள் முன் கூச்சப்பட்டு தள்ளி இருக்கிறார்கள் என்று நினைப்போடு, மகனின் குணஇயல்பும் அவன் அப்படித்தானே? பெரிதாய் என்ன பேசிவிடுவான் என்று தான் நினைத்திருந்தார்.
சிடுசிடுப்பும், அழுத்தமான பேச்சும் என்றிருப்பவன் மனைவியிடமாவது நெருங்கி சிரித்து பேசுவான் என்றால் பொதுவில் இருவருக்கும் வார்த்தைகளுக்கு பஞ்சம்.
வந்தவள் அதற்கு மேல். அவன் இருக்கும் பொழுது நான்கு வார்த்தை பேசினால் என்றாள் இல்லாத பொழுது தனி அறையே தஞ்சம்.
இதில் குழந்தையின் வரவு ஒன்றே ஆறுதலையும், மகன் வாழ்கிறான் என்ற எண்ணத்தையும் தந்தது.
இப்படி யோசித்தபடியே சுந்தரி இருக்க அவரின் முகத்தை கண்ட இசை நாக்கை கடித்துக்கொண்டு அவரை பார்த்தாள்.
“ப்ச், கல்யாணமானது எனக்கு. கனவு நான் தான் காணனும். ஆனா இங்க தலைகீழ்…” என சுந்தரியின் கையில் லேசாய் அடித்து சொல்ல,
“ஹ்ம்ம் அதோட என்னை எப்படி அடக்கன்னே தெரியலைன்னு…” இசை அப்படி ஒரு சிரிப்பு சிரிக்க வாஞ்சையுடன் பார்த்தார்.
இத்தனை கலகலப்பு முன்பு இருந்ததில்லை. இதற்கென்றே அவர் கிராமத்திற்கு அடிக்கடி சென்றுவிடுவார்.
இப்போது தன் வீட்டில் பேச்சின் சலசலப்பும், சிரிப்பும் என்று இசை நிறைந்துவிட அவளின் முகத்தை வாரி திருஷ்டி கழித்தார்.
“என்னவாம்? உங்க கண்ணே பட்டுடுச்சோ?…”
“உன்கிட்ட பேச முடியுமா? என் மகன் பாவம் தான்…”
“ரொம்ப பாவம் பார்க்கறீங்களே? ரொம்பத்தான் கடுகடுன்னு இருக்கார். ஆனா பலாப்பழம் மாதிரி உங்க மகன். இருங்க தோலை உரிச்சிடறேன்…” என்று சிரிக்க,
“சரித்தான். அவன் உன்னை பார்த்துக்கிட்டான்ல. நீ பேசுவ…”
“எங்க? இதோ விட்டுட்டு ஓடிட்டார் இவக்கிட்ட பேச முடியாதுன்னு. நீங்க தான் மெச்சிக்கனும்…”
இசையின் கலகலப்பும், சுந்தரியின் சிரிப்பும் வீட்டில் எதிரொலித்தது. நேரம் கடந்து பேசியபடியே இருக்க இடையே சுந்தரியின் எண்ணிற்கு ராக்கு அழைத்துவிட பிடித்து ஒருவாங்கு வாங்கிவிட்டார் சுந்தரி.
போனை பிடுங்கி அழுதுகொண்டிருந்த ராக்குவை சமாதானம் செய்வதற்குள் இசைக்கு போதும் போதும் என்றானது.
ராக்குவை இசை சமாதானம் செய்வதும், சுந்தரி மீண்டும் வாங்கி திட்டுவதும் என்று அங்கே ஒரு கலாட்டாவே நடந்திருக்க,
“அம்மாவை எதுக்கு சொல்றீங்க த்தை?…” என இசையும்,
“உன்னை இத்தனை அடிச்சிருக்கா அவளை சும்மா விட சொல்றியா?…” என்று சுந்தரியும் பேச இப்போது ராக்கு தான் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
“ஆத்தே மன்னிச்சிக்கங்க. கூறுகெட்டத்தனமா நடந்துக்கிட்டேன்…” என்று அவர் மன்னிப்பும் கேட்க,
“நீ ஊருக்கு வா பேசிக்கறேன்….” என்று சுந்தரி திட்டினார்.
இத்தனை பேச்சுக்களும், உரிமையை தான் இன்னும் கூட்டியது. எந்தவித மன வருத்தங்களும் இன்றி அன்பால் பிணைந்த உறவுகள்.
ராக்குவின் சந்தோஷத்திற்கு எல்லை இல்லை எனலாம். மூத்த மகளின் மாமியார் செல்லும் நேரமெல்லாம் உன் மக இப்படி அப்படி என்று குறை கூறிக்கொண்டே இருக்க சுந்தரியின் இந்த கோபம் அவரின் மனதில் பால் வார்த்தது.
அத்தனை சந்தோசம் தன்னை விட தாங்கும் மாமியார் என்று நினைத்து பூரித்துபோனார்.
பேசிமுடித்து போனை வைத்ததும் இசை இன்னுமே சுந்தரியை முறைத்தபடி இருக்க,
“என்ன முறைப்பு?…”
“உங்களை மருந்து போடவிட்டதுக்கு நல்லா பண்ணிட்டீங்க. அம்மா எம்புட்டு வருத்தப்படுவாங்க…” என்றாள் ஆதங்கத்துடன்.
“இப்ப அங்க ஒத்தாசைக்கு அக்கா கூட இல்லை. தனியா இருந்து விசும்பும்…” முகத்தில் அத்தனை கவலை.
“இப்ப என்ன? அப்பறமா நானே கூப்பிட்டு பேசிக்கறேன். நீ இதை விடு…” என்றவர்,
“ரொம்ப நேரம் ஆகிடுச்சு. நான் பாட்டுக்கு உக்கார்ந்துட்டேன்…” என எழுந்துகொண்டார்.
“உங்களை மருந்து போடவே விட்டிருக்க கூடாது…” என்றாள் அப்போதும் சுந்தரியை முறைத்துக்கொண்டு.
“நான் போடாம யார் போடுவா?…”
“அதுக்குத்தான் டாக்டரை கட்டி வச்சிருக்கீங்களே? பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கனும்னு முதல்ல உங்க மகனுக்கு சொல்லி வளர்த்துவிடுங்க. அப்பறமா அம்மாவை திட்டலாம்…” என்று அவள் தன் தோளில் இடித்துக்கொள்ள,
“ஒரு மாமியாட்ட பேசற மாதிரியாடி பேசற?…” என அவளின் கன்னத்தை கிள்ளியவர்,
“ம்ஹூம், உன்கிட்ட உக்கார்ந்திருந்தா நான் வேலையையே மறந்திருவேன். நான் போறேன் தாயி…” என கொண்டுவந்த வெந்நீர் பாத்திரத்தை எடுத்துக்கொண்டவர்,
“அவன் வரட்டும் நீ சொன்னன்னு சொல்றேன்…” என்று சிரிக்க,
“எனக்கென்ன பயமா?…” என்றாள் இசை மிதப்புடன்.
“அதான, நீ யாரு…” என்றபடி சிரிப்புடன் சுந்தரி அறையை விட்டு வெளியே செல்ல அங்கே ஹாலில் அமர்ந்திருந்தான் கீர்த்தனன்.
“ஆத்தே…” கை நழுவ இருந்த பாத்திரத்தை கீழே போட போனவர் பிடித்துக்கொண்டு அலற அதில் திரும்பி பார்த்தவன் ஒற்றை விரலை இதழ்மீது வைத்து,
“ஷ் ம்மா, மெதுவா…” என்றான்.
அவன் மடியில் தனுக்குட்டி உறங்கிக்கொண்டு இருந்தது. அதை பார்த்துவிட்டு சுந்தரி கடந்துவிட,
“என்னத்தை?…” என்று எழுந்து வந்தாள் இசை அவரில் அலறலில்.
அங்கே கீர்த்தனன் இவளை பார்த்தபடி அமர்ந்திருக்க இவன் எப்போது வந்தானோ என்று பார்த்தபடி இசை அப்படியே அறைக்குள் வந்து படுத்துவிட்டாள்.
எப்போது வந்திருந்தாலும் தான் கடைசியாக பேசியதை நிச்சயம் கேட்டிருப்பான் என அவன் தன்னை பார்த்த பார்வையில் புரிந்துபோனது.
“சுத்தம், இன்னைக்கு ரொம்பத்தான் பேசிட்டேன்…” என தன் தலையில் தட்டிக்கொண்டவள்,
“ம்க்கும், இல்லனா மட்டும் அப்படியே நான் பேசினதுக்கு இந்த டாக்டரும்…” என பேசி தன் பேச்சின் திசையில் மனதின் நினைப்பின் திசையில் அங்கேயே நின்றுவிட்டாள்.
எப்போதும் போல அவளின் சத்தம் அந்த அறைக்குள் சுழல வாயை மூடிக்கொண்டாள் சத்தமாக கேட்ட தன் குரலில்.
‘நல்லவேளை ரூம்ல இல்லை டாக்டர்’ என்று நினைத்து ஆசுவாசப்படுமுன் அவனின் குரல் கேட்டுவிட்டது.
“இசை…” கீர்த்தனன் அழைப்பு அருகே கேட்க மனது தடதடக்க கண்ணை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் இசை.