“ஹ்ம்ம்…” என்றவன் கைகளில் இருந்த தெர்மாமீட்டரில் கவனம் இருந்தது. அதனை சுழற்றியபடியே இருந்தான்.
இசையை நிமிர்ந்து பார்த்தவன் பெருமூச்சுடன் மீண்டும் தலையை தாழ்த்திக்கொண்டான்.
மனைவியாக தன்னருகே அவளிருந்தாலும் மனதில் இன்னும் சிறுமியாய் வளையவந்த தோற்றம் தான் எழும்பியது.
அதுவும் சற்றுமுன் கணவன் என்று அவள் விளித்ததும், அதன் சம்பந்த பேச்சுக்களும் இந்த வாழ்க்கையில் அவளுக்கான இடம் என்னவென்பதை அவனுக்கு அறுதியிட்டு கூறியது மீண்டும்.
தன்னுணர்வுகள் அவளுக்கு புரியுமா? இருவருமே எதிர்பார்ப்பில்லாமல் வாழ்க்கையில் நுழைந்திருந்தாலும் இதன் அடுத்தகட்டம்?
நினைக்கையில் மலைப்பும், கவலையும் கூடியது கீர்த்தனனுக்கு. அதுவே அவனுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது.
அவன் இப்போதைக்கு பேச போவதில்லை என்று பார்த்தவள் அவனே வாய் திறக்கட்டும் என மீண்டும் படுத்து போர்வையை மூடிக்கொண்டாள்.
அவள் சாதாரணமாக பேசுவது கூட அவனுக்கு கோவமோ என்று தோன்ற வைத்தது.
எதிர்பார்க்கிறாள் தன்னிடம் என்று நினைத்தபடி பார்த்தவனுக்கு மனதில் வருத்தம் கூடியது.
“ப்ச், இப்ப என்னாச்சுன்னு இப்படி இருக்கீங்க? என்ன? பேசுங்க கேட்கறேன்…” என்று அவனின் வருத்தத்தை கண்டு எழுந்தமர்ந்துவிட்டாள்.
“நீ இந்த லைஃப்க்கு அடாப்ட் ஆகியாச்சா?…” என கீர்த்தனன் கேட்க,
“என்ன?…” என்றாள் புரியாமல்.
“இந்த லைஃப்க்கு ஐ மீன் என்னோட வொய்ப் அப்படின்ற இந்த பொஷிஷனுக்கு நீ முழுசா வந்தாச்சான்னு கேட்டேன்…” என்றதும் திடுக்கிட்டாள்.
விளையாட்டாய் என்னவோ பேச போய் எங்கோ வந்து நிற்கிறதே என திருதிருவென்ற விழிப்புடன் பார்த்தவளுக்கு பேச்சே வரவில்லை.
அவன் கணவன், அதில் எந்தவித மாறுபாடும் இல்லை. ஆனால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல நேரமெடுத்தது.
“இசை…”
“நான் விளையாட்டா…” என்றதுமே அமைதியாக இருந்தவன் முகம் இன்னும் மாறியது.
“ஓஹ்…” என்று அவன் எழுந்துகொள்ள,
“அட இருங்க…” என்றாள் வேகமாய் அவனின் கையை பிடித்து இழுத்து.
“ஹேய் என்ன பன்ற?…” என்று தடுமாறி அமர்ந்தவன்,
“அதான் சொல்லிட்டியே விளையாட்டா? அப்பறம் என்ன?…” என்னவோ எரிச்சல் அப்படி கொட்டியிருந்தது அந்த வார்த்தைகளில்.
“பேசனும், ஆனா கோவம். பதில் வேணும். ஆனா வேண்டாம். என்ன லாஜிக் உங்களோடது?…” இசை கேட்க,
“நீ பேசினதை கேட்டதும் என்னவோ நினைச்சுட்டேன்…”
“என்னன்னு?…” என்றதும் அவன் விளக்கமுடியாமல் பார்க்க,
“ஹலோ டாக்டர், நான் இன்னும் உங்கட்ட ட்யூஷனுக்கு வந்த பாப்பா இல்லை. கல்யாணமே பண்ணி வச்சிருக்காங்க. பேசலாம்…” என்றவளின் கடைசி வார்த்தை லேசாய் உள்ளடங்கியது.
“ஹ்ம்ம், பேசனுமே, வேற வழியில்லை…” என்று பின்னால் நகர்ந்து கட்டிலில் சாய்ந்துகொண்டான்.
“இசை, இந்த மேரேஜ் நான் எதிர்பார்க்காதது…”
“நான் ரொம்ப எதிர்பார்த்தேன். அவ்வளோ ஆசை உங்களை கல்யாணம் செஞ்சுக்கனும்னு…” அவள் கூற வம்பிழுக்கிறாள் என்று புரிந்தது.
“என்னை சீரியஸா பேசவே விடமாட்டியா நீ?…”
“நீங்க பேசி என்னை சீரியஸாக்கறீங்களே டாக்டர். அதோட யப்பா நீங்க இப்ப மட்டும் தான் சீரியஸ் பேச்சா? சிரிப்பு வருது…”
கொஞ்சமும் தயக்கமோ, அவனருகே அமர்ந்து பேசும் பொழுதான வெட்கமோ எதுவுமில்லை.
கீர்த்தனனுக்கு மெல்லிய புன்னகை முகத்தில் படர அவளின் தலையில் நறுக்கென்று குட்டினான்.
“உடம்புக்கு முடியாத பிள்ளையை போட்டு படுத்தறீங்க? இப்படியா தலையில குட்டுவீங்க?…”
“உன் பேச்சு அப்படி. என் கை தானா வந்துருச்சு. நான் என்ன செய்ய?…”
கீர்த்தனன் முகம் முதலில் இருந்த கலக்கத்தில் இருந்து தெளிந்திருந்தது. லேசாய் சிரிப்புடன் அமர்ந்திருக்க அவனின் சிரித்த முகத்தை உள்ளூற ஊரும் ஆசையுடன் பார்த்தாள்.