உயிர் மூடி உயிர் திறக்கும் பதில் தான் திருமணத்தை ஏற்றுக்கொண்டேன் என்ற அவனின் பதில்.
ஆனால் கடமை மட்டும் போதுமா? இசையுமே இதனை கடமையாக நினைக்க திருமணத்தில் அதைவிட வேறென்ன இருக்கிறது என்பதை முழுமையாய் நம்பினான் கீர்த்தனன்.
“இதையே நானும் சொல்லலாம். கல்யாணம் முடிஞ்சது. எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. அக்ஸப்ட் பண்ணிட்டேன்னு நினைக்கறேன்…” லேசாய் தடுமாறினாளோ என்று அவன் கூர்ந்து பார்க்க அவன் கையில் இருந்த மாங்கல்யத்தை உருவிக்கொண்டாள்.
“இதை கேட்க தான் இத்தனை வேகமா?…” என்றும் இசை கேட்க,
“ப்ச்…” என்றவன் இன்னும் தளர்ந்து படுத்து தலைக்கு மேல் கையை கொண்டு விழிகளை மூடினான்.
“ஓப்பனா சொல்றேன், எனக்கு எப்படி நடந்துக்கனும்னு தெரியலை. அதுவும் உன்கிட்ட…”
“நான் எதையும் கேட்கவே இல்லை. அது அத்தைட்ட சும்மா பேசினது…” என்றாள்.
“ஆனா உண்மை தானே? இப்படியே நம்ம வாழ்க்கை போயிடாதே? சேர்ந்து வாழனும் தானே?…” படக்கென்று எழுந்து அமர்ந்து அவன் கேட்க திடுக்கிட்டு பார்த்தாள்.
“எனக்கு அதுக்கு கொஞ்சம் டைம் வேணும் இசை…” என்றதும்,
“ரெண்டுநாள் போதுமா?…” என இசை கேட்டவிதத்திலேயே கடுப்பாகிவிட்டாள் என்று புரிந்தது.
“ஹேய்…” என்று சிரித்தவன்,
“எனக்கும் ரெண்டுநாள் போதும்ன்னு சொன்னா நீ என்ன செய்யறதா இருக்க?…” என கேட்டு அவளை வாயடைக்க வைத்துவிட அடுத்து அவனை மடக்கிவிடமுடியாமல் விழியை உருட்டினாள்.
கண்களை மூடியிருந்தாலும் கீர்த்தனன் தன்னை தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என அவள் உள்ளுணர்வு கூவியது.
விழித்து பார்த்தால் எங்கே மீண்டும் பேசவோ, கேள்வி கேட்கவோ ஆரம்பித்துவிடுவானோ என்று கண்ணை மூட,
“தூக்கம் வராம சும்மா இப்படி கண்ணை இருக்கமா மூடியிருந்தா உனக்கு தான் கஷ்டம் இசை…” என்றான் கீர்த்தனன்.
‘அடேய் இருடா. தூங்கறேன்னாலும் இப்படி கண்டுபிடிச்சா?’ என மனதிற்குள் புலம்பியபடி திரும்பிக்கொள்ள கீர்த்தனன் காய்ச்சல் உள்ளதா என கழுத்தில் தொட்டு பார்த்தவன் அவள் கழுத்தை ஒட்டியுள்ள காயத்தையும் தொட,
“நான் தூங்கறேன். என்ன பன்றீங்க நீங்க?…” என எழுந்தேவிட்டாள்.
“என்ன பண்ணேன்? காய்ச்சல் இருக்கான்னு…” என அவன் உயர்த்தியிருந்த கையை இறக்கவே இல்லை.
“காய்ச்சல் இல்லை. போய்ருச்சு…”
“இசை காயத்துல இருந்த மருந்தும் போயிருச்சு, இங்க வா…”
“அதுக்கு என்கிட்டே சொல்லாம மருந்து போடுவீங்களா?…” என்றதும் கீர்த்தனன் சிரித்துவிட்டு,
“உன்னை எழுப்பி கேட்டு போட்டிருக்கனுமோ? சரி இரு இப்ப கேட்டே போட்டுவிடறேன்…” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல பேந்த பேந்த முழித்தாள்.
“எஸ் ஆர் நோ இசை?…”
“நோ நோ நோ நோ…” வேகமாய் சொல்ல இன்னும் சத்தமாய் அவன் சிரித்துவிட்டான் அவள் சொல்லிய பாவனையில்.
கீர்த்தனனின் சிரிப்பு சத்தம் அறையை தாண்டி வெளியே ஹாலை எட்ட சுந்தரிக்கும் கேட்டது.
பரபரப்புடன் அறை வாசல்வரை வந்துவிட்டவருக்கு உள்ளே செல்ல யோசனையாக இருக்க,
“என்ன நோ?…” என்றவன் மேலும் பேசும் முன் தாயின் புடவை காற்றிலாட திரும்பி செல்ல போனவரை கவனித்து அழைத்தான்.
“அதே அத்தைட்ட தானே நீயும் சொன்ன உங்க மகனை ஒழுங்கா வளர்த்துவிடுங்கன்னு…” என்று சீண்டியவன்,
“வாய் தான். ஆனா திரும்ப பேசினா பயந்து ஓடறது…” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டான்.
“நீ தூங்கு, நான் வெளில இருக்கற சைட் ரூம்ல இருப்பேன். வேணும்னா கூப்பிடு…” என்று சொல்ல தலையசைத்தாள்.
“மறந்துட்டேன் பாரு…” என்று ஹாலுக்கு சென்றவன் ஒரு சின்ன காகித பையுடன் வந்தான்.
“உன்கிட்ட மொபைல் இல்லைன்னு அம்மா சொன்னாங்க. அதான் மொபைல், சிம் வாங்கிட்டு வந்தேன். உன் யூஸ்க்கு…” என்று நீட்ட இன்னும் திகைத்த பார்வை இசைக்கு.
இவனை எந்தவகையில் சேர்ப்பதென்று தெரியாமல் விழித்தாள். அன்றைய நாள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
அவனின் இலகுவான பேச்சும், சிரிப்பும், கிண்டலும் என்று இந்த கீர்த்தனன் இத்தனை வருடங்களில் அவள் அறிந்திராதவன்.
அவள் மட்டுமே அறியக்கூடியவன் என்பதும் இசைக்கு அந்த நிமிடம் புரியவில்லை.
“இசை…” அவள் வாங்காமல் இருக்க,
“உன்கிட்ட இல்லைன்னு தான் வாங்கிட்டு வந்தேன். வேண்டாம்ன்னா நோ ப்ராப்ளம். அம்மாவோட போய் உனக்கு பிடிச்சதா வாங்கிக்கோ…” என்றான்.
அதுவரை அவன் முகத்தில் இருந்த மலர்ச்சி, சந்தோசம் எல்லாம் மாயமாய் மறைந்திருந்தது.
வாங்கிவிட்டேன் என்னும் எதிர்பார்ப்பு போல ஒரு உணர்வு அவளை அடைய உடனே கை நீட்டி வாங்கிக்கொண்டாள்.
“ஓகே வா?…” அப்படி ஒரு வெளிச்சம் கீர்த்தனன் கேள்வியில்.
“என்ன ஓகே வா? எனக்கு நீங்க தானே வாங்கித்தரனும். இதுல என்ன ஓகே வா? உனக்கு தான் வாங்கினேன், பிடின்னு சொல்லுங்க. சந்தோஷமா வாங்கிப்பேன்…” என அவள் புன்னகைக்க,
“ஓகே வாங்கலாம்…” என்று தலையசைத்துவிட்டு சிரிப்புடன் நகர்ந்தான்.
திருமணத்தின் அடுத்தகட்டதிற்கான படியில் அவர்களறியாமலேயே கால் பதித்திருந்தனர்.