“சுந்தரியத்தை கூட பயப்படறாங்க உங்கட்ட பேச. பேசினா ஒத்தை வார்த்தை பதில். அது கூட பரவாயில்லை. ட்யூஷனுக்கு வந்த பிள்ளைங்க எல்லாம் சின்ன பிள்ளைங்க. எப்ப பார்த்தாலும் அவங்கட்ட அதட்டல். என்னையும் தான்…”
“படிக்க வர பிள்ளைங்க படிச்சா போதும்ல. என்னை பிடிக்கனுமா என்ன?…” என்றான்.
“இசை இப்ப புரிஞ்சுக்கற வயசு தானே? நம்ம ஊர் உனக்கு தெரியுமே சுத்தியுள்ள மனுஷங்க பாதி பேர் எதுடா வம்புன்னு தேடி பெருசாக்கறவங்க. அதுவும் என்கிட்டே படிக்க வந்ததுல பாதிக்கு மேல பொம்பளை பிள்ளைங்க….”
“ஓஹ்…”
“என்ன ஓஹ்? சும்மாவே கதை கட்டுவாங்க. அதுக்கு இந்தண்ணா சிடுசிடுன்னு இருக்காருன்ற பேர் எவ்வளவோ தேவலை…” என்றான்.
அப்போதுதான் இசைக்கு ஞாபகம் வந்தது. படிக்க வரும் பிள்ளைகளிடம் அதை தாண்டி எதுவும் பேசியதில்லை கீர்த்தனன். அதுவும் அவனும் படித்துக்கொண்டிருந்த நேரம்.
ட்யூஷனை விரும்பி எடுக்கவில்லை. ஓரிரு பிள்ளைகளுக்கு பரிட்சைக்கு சொல்லி தந்திருந்தான் உதவியாக.
அவனின் சொல்லித்தரும் வித்தையில் பிள்ளைகள் நன்றாக மதிப்பெண் எடுக்க இரண்டு நான்காகி, நான்கு பத்தாகி இப்படி இருபது பிள்ளைகள் வந்து சேரும் அளவிற்கு ஆனது.
வேறு வழியின்றி பொழுது போக என்று தான் ஒப்புக்கொண்டான். அதையும் சிரத்தையாய் செய்தவன் தன்னுடைய வேலை என்று வரவும் அதனை அப்படியே நிறுத்தியும்விட்டான்.
“ஆனாலும் உன் மகனுக்கிருக்கற மண்டைக்கனம் மாதிரி ஒருத்தனையும் பார்த்ததில்ல. தெரிஞ்சத சொல்லிக்குடுத்தா குறஞ்சா போய்ருவான்?…” என்றும் பேசாதவர்கள் இல்லை.
எதையும் கண்டுகொண்டானில்லை கீர்த்தனன். ‘பேசிக்கொள், யார் மதித்தது உன் பேச்சை?’ எவ்வளவு தான்.
“அவன் சென்னைக்கு போறதுல உறுதியா இருக்கான். கிளினிக் அங்க வைக்கனும்னு. இனிமே எடுக்க முடியாதே?…” என்று சுந்தரி தான் கொஞ்சம் தன்மையாக எடுத்து சொல்வார்.
“இங்க இல்லாத வேலை. ம்க்கும், என்னவோ மனுஷங்களுக்கே வைத்தியம் பார்க்கற மாதிரி பெருமைதான் போ…” என்று நக்கல் தொனியில் பேசுவர்.
“ம்மா இதை எதுக்கு விளக்கமும் சொல்லிட்டிருக்கீங்க? விடுங்க…” என்று கிளம்பியவன் தான்.
இப்போது நினைக்கையில் மலைப்பாக இருந்தது. எங்கோ ஆரம்பித்து பேச்சு எங்கோ சென்றிருந்தது.
“இதை ஒரு டவுட்ன்னு கேட்ட பாரு…” என்று அவன் சொல்ல,
“நிறைய இருக்கே. ஆனா அடிப்பீங்க…”
“என்ன?…”
“டவுட் கேட்டா அடிப்பீங்கன்னு சொல்றேன்…” என்றதும் அவளை அழுத்தமாக பார்த்தவன்,
“பயந்து கேட்காத மாதிரி இல்லை. வம்பா என்னவோ யோசிச்சு வச்சிருக்க. அதானே?…” என்றதற்கு ஆமாம் என்று தலையசைத்து பின் இல்லை என்றாள்.
“கேளு…”
“அதான் மாட்டேன்னு சொல்லிட்டேனே?…”
“இப்பத்தான் நான் நல்லா பேசறேன், சிரிக்கறேன்னு சொன்ன? திடீர்ன்னு என்னவாம்?…” தாடையில் கை ஊன்றி அவன் கேட்க,
“அதான், இந்த சிரிப்பு அப்படியே இருக்கட்டும். இப்ப கேட்டா நீங்க பழைய சிடுமூஞ்சி சிங்காரமாகிருவீங்க…” என்றவள்,
“எனக்கு தூக்கம் வந்திருச்சு குட்நைட்…” என்று முகத்தை மூடிக்கொண்டாள் போர்வையால்.
அப்படி என்னவாக இருக்கும் என யோசித்து யோசித்து பார்த்தவனுக்கு விளங்கவே இல்லை.
அவளே கேட்கட்டும் என்று அமர்ந்தவாக்கில் அப்படியே தூங்க முதுகு வலிக்க ஆரம்பிக்கவும் எழுந்து வந்து கட்டிலில் படுத்தான்.
வாழ்க்கை நன்றாக இருப்பதை போலத்தான் இருந்தது. இந்த பேச்சும், சிரிப்பும் கலகலப்பும் எல்லாம்.
ஆனால் இப்படியே செல்லுமா? அது தெரியவே இல்லை. சுபாவங்கள் மாறுபடலாம்.
அது எந்தளவிற்கு எல்லா விஷயத்திலும் ஒத்துவரும் என்றும் புரியவில்லை. கீர்த்தனன் தன் வட்டத்திற்குள்ளேயே தான் யோசித்துக்கொண்டிருந்தான்.
ஆனால் அனைத்திற்கும் அப்பாற்ப்பட்ட வாழ்க்கை ஒன்று உண்டு. உயிரோடு உறவாக வாழும் வரம்.
அந்த வரத்தின் வாசலருகே கூட இன்னும் அவன் சென்றிருக்கவில்லை என்பதை விரைவில் உணரவிருந்தான்.
அதன் பின்னான நேரங்கள் இப்படி பொதுவான பேச்சுக்களிலும், சிலநேரம் கலாட்டாவாகவும் தான் சென்றுகொண்டிருந்தது.
நிறைய பேசினான். நிறைய பேச வைத்தாள். ஒருவாரத்தில் நிறையவே மாற்றம் இருவரிடத்திலும்.
வாழ்க்கையின் பல நுணுக்கங்கள் பேசிக்கொள்ளப்படவில்லை. மனதை மறையாது சொல்லியிருக்கவில்லை.
ஆனால் இந்த பேச்சு பழக்கங்கள் காயம்பட்ட இருவருக்கும் சந்தோஷத்தை தந்தது. ஒரு நிம்மதியை தந்தது.
இதுதான் வாழ்க்கை, கணவன் மனைவி என்ற உணர்வு உள்ளுக்குள் தொட்டிருந்தாலும் மற்றவரிடம் கலாட்டா பேச்சுகளில் விளையாட்டாய் தெரியப்படுத்தபட்டதே தவிர விசேஷமாய் எதுவும் நடந்திருக்கவில்லை.
மறுவாரம் மருத்துவமனைக்கு செல்லுகையில் சுந்தரியும் உடன் சென்றிருந்தார். இசையை பரிசோதித்துவிட்டு பேசிவிட்டு வந்தனர்.
அடுத்த பத்தாம் நாள் சீர்வரிசைகளுடன் தர்மபுரியில் இருந்து சொந்தங்கள் என வந்திறங்கி வீட்டை நிறைத்திருந்தனர்.
காலையில் அவர்கள் வந்து சேரும் முன்பே கிளினிக் சென்றிருந்தவன் மாலை தான் வீடு திரும்பினான்.
வீட்டிற்கு வரும் பொழுதே இசையினருகே ராக்கு அமர்ந்து மகளிடம் அவளின் கையை பிடித்துக்கொண்டு சிரித்தபடி என்னவோ பேசிக்கொண்டிருக்க முறைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் கீர்த்தனன்.
அவனின் முறைப்பை இசையும் கண்டுகொள்ள தாயையும், கணவனையும் மாறி மாறி பார்த்தாள்.
முதல்முதலாய் ஒரு படபடப்பு. அந்த முகத்தின் வித்தியாசம் தடம் மாறாமல் அவனின் மனதில் பதிய நெருங்கி சென்றான் கீர்த்தனன்.
கீர்த்தனனின் வாழ்வில் முந்தைய அழுத்தமில்லாத காலடி சுவடுகள் விதியெனும் அலையின் நுரையில் அழிந்திருக்க தற்போது தடம்பதிப்பவள் பேரலையாய் அவனையே சுருட்டிக்கொள்பவளாக இருந்தாள்.