“இசை இது வேணுமா பாரு?…” என்று கீர்த்தனன் உடை ஒன்றை காண்பிக்க,
“இது ரொம்ப கசகசன்னு இருக்கும். இதை போட்டா பாப்பா நச்சு நச்சுன்னு சிணுங்கிட்டே இருப்பா. வேற பாருங்க…” என்றாள் அவள் மறுப்பாய்.
இருவரும் குழந்தைக்கு உடை எடுக்க வந்திருந்தனர் ஒரு மாலிற்கு. அன்று கீர்த்தனன் கிளினிக்கிற்கு விடுமுறை விட்டிருந்தான்.
மறுவாரம் ஊருக்கு செல்லவேண்டும் என்று சுந்தரி சொல்லியிருக்க உடைகள் குழந்தைக்கு சிறியதை போலிருக்க எடுத்துவிட்டு வரலாம் என்று இசையை அழைத்துக்கொண்டு கிளம்பி வந்திருந்தான்.
“இசை அம்மா கால்…” என்று மொபைலை நீட்ட,
“நீங்க பேசுங்க. என்னன்னு கேளுங்க. இதை பார்த்துட்டு வரேன்…” என்று இசை சொல்லவும் தலையசைத்தவன்,
“என்னம்மா?…” என்றான் சுந்தரியிடத்தில்.
“இப்பத்தான அவக்கிட்ட பேசனும்ன்னேன். அதுக்குள்ளே நீ பேசற?…”
“ம்மா, அவ தான் கேட்க சொன்னா. என்னன்னு சொல்லுங்க…”
“மறக்காம இசக்கிக்கு ட்ரெஸ் எடுத்து குடு கீர்த்தி. நைட்டி எடுத்ததோட சரி. அடுத்து எதுவும் எடுத்துக்கலை. ஊருக்கு போறப்போ புதுசா நீ எடுத்து குடுத்ததா இருந்தா நல்லாருக்கும்ல. அவளுக்கும் சந்தோஷம்…”
“இதை என்கிட்டே சொல்லவேண்டியது தானே?…”
“உன்கிட்ட இதை சொல்லலாம். ஆனா அவக்கிட்ட சொல்லவேண்டியதை உன்ட்ட என்ன சொல்ல? போனை குடு…” என்று அதட்டவும் மீண்டும் இசையிடம் வந்தான்.
“பேசிட்டு என்னன்னு பாரு. தனு என்னோட இருக்கட்டும்…” என்று தூக்கிக்கொண்டு அவளருகே அமர்ந்தவன் வேறு உடை பார்க்கவும் இசை சுந்தரியிடம் பேசிவிட்டு போனை வைத்தாள்.
“அது அம்மாக்களுக்கும், ஊர்க்காரங்களுக்குமே உள்ள சந்தோஷமும், ஆர்வமும்…” என்று அவன் காண்பித்த சுடிதார்களை பார்த்தபடி பேசினாள்.
“என்னவாம்? நீ புடவை கட்டி போனா ஊரே மாறிடுமா என்ன?…” கிண்டல் வேறு கீர்த்தனனிடம்.
“நல்லா மாறுச்சே? அம்மாவுக்கு நான் எப்படி வந்து இறங்கறேன்னு சந்தோசம். ஊர்காரங்களுக்கு எப்படி என்னை நீங்க பார்த்துக்கறீங்கன்னு தெரிஞ்சிக்கற ஆர்வம். அது அவங்களுக்கு வியப்பாவும் இருக்கும், வயித்தெரிச்சலாவும் இருக்கும்…” என்றாள்.
“இது ஓகே தானே?…” என்று அவள் மீது வைத்து காண்பிக்க தலையசைத்தாள்.
காட்டன் அனார்கலி அவளுக்கு பாந்தமாய் இருந்தது. பிடித்தம் விழிகளில் தெரிய,
“நைஸ்…” என்றான் ரசனையுடன்.
அவ்வப்போது ரசனைகளும், ரசிப்புகளும் மறைக்க படாமல் வெளிப்பட்டது கீர்த்தனன் முகத்தில் இருந்து.
“அந்த பிரச்சனைக்கு காரணம் இவன் தானா? இல்லை இவனை சேர்ந்தவங்களா?…”
“இவன் தான்….”
“ஹ்ம்ம், ஓகே…” என்று ஒன்றும் பேசாமல் கீர்த்தனன் தனுவுடன் அமர்ந்திருக்க ப்பா ப்பா என்று மணலை கையில் அள்ளி காண்பித்துக்கொண்டிருந்தது குழந்தை.
கீர்த்தனன் சொல்லி சென்ற பின்னர் இசை குழந்தையிடம் சொல்லித்தர ஆரம்பித்திருக்க என்ன சொன்னாலும் அதற்கு ப்பா என்று மட்டுமே தான் சொன்னது குழந்தை.
“சீக்கிரம் சொல்லிடுவா இசை. அப்பான்னு மட்டுமே கூப்பிட்டு பழகி இப்ப என்ன சொன்னாலும் அவளுக்கு புரியலை. வளர்ற பிள்ளை தானே?…” என கீர்த்தனனும் சொல்லித்தந்துகொண்டு இருந்தான்.
இருவரிடையில் இந்த புரிதலே இன்னும் நெருங்க செய்திருக்க மனரீதியாய் ஒன்றுபட்ட முடிவுகளில் பயணிக்க ஆரம்பித்திருந்தனர்.
அதுவே இருவருக்கும் அப்போதைக்கு போதுமானதாக இருந்தது. மனதிணைய மெனக்கெடாமல் எப்படி அதன் போக்கில் சேர்ந்தனரோ மற்றவற்றையும் அப்படியே எடுத்துக்கொள்ள காத்திருந்தனர்.
முதன் முதலாய் கீர்த்தனன் அதை பற்றி இத்தனை நாளுக்கு பின் கேட்கிறான். அதுவும் கேள்வியாக இருக்காதபட்சத்தில் சொல்லாமல் இருக்கவும் தோன்றவில்லை. பேசும் அவசியமும் இருந்ததில்லை.
“அன்னைக்கு நிஜமா அவன் அப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை….” என்றாள் கீர்த்தனனை பார்த்து.
“நான் கேட்கலை இசை. அவனா இருக்குமோன்னு ஒரு கெஸ். அதான் கேட்டேன். வேறொன்னும் வேண்டாம்…”
“ஆனா நான் சொல்லனுமே?…”
“ஹ்ம்ம் சரி…” என்று நிமிர்ந்து அமர்ந்து அவள் முகம் பார்க்க,
“கடைசி நாள் எக்ஸாம் முடிஞ்சு பஸ் ஸ்டான்ட்க்கு ப்ரெண்ட்ஸ் கூட வந்தேன். அதுவரை காலேஜ்ல பேசுவான். கூட படிக்கிறவன் அவ்வளவு தான். அன்னைக்கும் கிளம்பும் போது சொல்லிட்டு போகத்தான் வந்திருக்கான்னு நினச்சேன்…”
“ஆனா லூசுப்பய லெட்டரை குடுத்துட்டான். எனக்கு முதல்ல இவனா அப்படின்னு ஒரு ஷாக். கொஞ்சம் ஆச்சர்யம். உண்மையா கோவத்தைவிட சிரிப்பு தான் வந்துச்சு. பிரிச்சு படின்னு சொல்லி கெஞ்சவும் நான் இதென்ன கோமாளித்தனம்ன்னு கேட்டுட்டு தான் பிரிச்சேன்…”
“அதுல எழுதியிருந்த அத்தனையும் பேத்தல். அதுவேற சிரிப்புதான் வந்துச்சு. அவனை கிண்டலா தான் கேட்டுட்டு இருந்தேன். இது உனக்கு தேவையான்னு சொல்லி…”