“அந்த நேரம் தான் அப்பா, ஊர்க்காரங்க எல்லாம் அங்க வச்சு என்னை பார்த்தது. என்னவோ நான் தப்பு பண்ணிட்ட மாதிரியும், அப்பவே அங்கிருந்து அவனோட போக போற மாதிரியும் அவ்வளோ பேச்சு…”
“மாமா ஒருத்தர் அங்க வச்சே என்னை அடிச்சுட்டார். பேசறவங்களுக்கு இல்லைன்னு நான் சொல்றதுக்கு கூட வாய்ப்பு குடுக்க தோணலை. லெட்டர் குடுத்தவன் பிரச்சனைன்னதும் ஓடிட்டான்….”
“வாட்? அங்க வச்சே அடிச்சாங்களா? மாமா கூட ஒண்ணுமே சொல்லலையா இசை?…”
“அப்பாவா? அட போங்கங்க. அவர் என்னை பார்த்தாரே ஒரு பார்வை. அதுக்கு என் கழுத்தை நெறிச்சிருக்கலாம்…” என்றாள் சற்று விரக்தியான குரலில்.
அவளின் அழுத்தமும், அடமாய் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு செய்வதை செய்துகொள்ளுங்கள் என்று இருந்ததன் ஆணிவேர் தெரிந்துவிட்டது கீர்த்தனனுக்கு.
“இசை ரிலாக்ஸ்…” என்று அவளருகே வந்து அமர்ந்தான் கீர்த்தனன்.
“அப்பா நம்பினார் தெரியுமா? நான் நொறுங்கி போய்ட்டேன். அத்தனை பேர் பேசினாங்க. இவங்க என்ன சொல்லியிருக்கனும்? என் பொண்ணு தப்பு பண்ணிருக்கமாட்டான்னு சொல்லிருக்கனும்ல? பேசவிட்டு தலையை தொங்கபோட்டுட்டு நிக்கிறார்…”
“ஏன் எதிர்த்து சொல்லவேண்டியது தானே? எனக்கு மத்தவங்களை விட அப்பா மேல அன்னைக்கு அவ்வளவு கோபம். ஆனா அவர் கஷ்டப்பட்டா என்னால தாங்க முடியாதே? அடக்கிட்டு நின்னேன்…”
“வீட்டுக்கு வந்து கல்யாணம் பண்ணி அனுப்பனும்னு சொல்லவும் நான் எதிர்த்து பேசினப்போ உன் கால்ல விழறேன்னு சொல்றார் தலைகுனிஞ்சு என்கிட்டயும். என்னால எப்படி பேச முடியும்?…”
“அம்மா அடிச்சது இந்த மனுஷன் இப்படி இருக்காறேன்னும், ஊர்க்காரங்க பேசினதுக்கும். அம்மாவுக்கு ஒரு நினைப்பு, அப்பாவுக்கு ஒரு நினைப்பு. ஆனா நான் ஜடம் மாதிரி போல? எந்த நினைப்பும் இருக்க கூடாதாமே?…”
கீர்த்தனனின் முகம் பார்த்து அழுதுகொண்டே கேட்க அவளின் கண்ணீர் முகம் வெகுவாய் அவனை அசைத்தது.
அத்தனை அழுது அன்று தான் பார்க்கிறான். அழுத்தம், திமிர், வைராக்கியம் என்று எத்தனை பெயர் சொன்னாலும் பெண் உள்ளம் கண்ணாடி சில்லை போன்றது.
இங்கே இசையின் மனதும் உடைந்துபோய் தான் இருக்க கைகளால் அள்ளினால் கூட கூர்மையுடன் கிழித்துவிடும் அபாயம்.
அவளை கையாள முடியவில்லை கீர்த்தனனுக்கு. மீண்டும் தன் தோளில் சாய்ந்துக்கொண்டான்.
“சரி அழக்கூடாது…” என சொல்ல,
“அழலையே, அங்க ஒருசொட்டு கண்ணீர் விடலை. நானும் மனுஷி தானே? மக வாழ்க்கை நாம முடிவு பண்ணனும்ன்றது வேற. நம்பிக்கை இல்லாம தப்பு பண்ணிருப்பேன், ஊர் வாயை அடைக்கன்னு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சது?…”
“இவ்வளோ பேசறவ அப்பவே சொல்லவேண்டியது தானே?…” என்றான் சற்று கண்டன குரலில்.
“சொல்ல கூடாதுன்னு தான். நான் சொல்லி அப்படி என்ன நம்பிக்கை? ஒரு லெட்டரை கையில வச்சு ஒருத்தனோட பேசிட்டு இருந்தா அது அவன் பேசனதுக்கு சரின்னு நின்னதா தான் அர்த்தமா?…”
“இவங்க வளர்ப்புல நம்பிக்கை இல்லை. வருஷமெல்லாம் இன்னொருத்தன் கிண்டல் பன்றளவுக்கு ஏன் தழைஞ்சு போறீங்கன்னு கேட்டு அப்பாவை நிமிர்ந்து நில்லுங்கனு சொல்ற பொண்ணு நான். நான் தப்பு பண்ணுவேனான்னு யோசிக்க வேண்டாமா?…”
“இன்னொருத்தர் என்னை நடுவீதில நாலு ஊர் பார்க்க அடிக்கிறார். துடிக்காம, என்னையும் தாங்காம நிக்கிறார். அங்க இருந்து என்னவோ என்னை கையும் களவுமா பிடிச்சது மாதிரி கைதியை மாதிரி கூட்டிட்டு வராங்க. ஊருக்குள்ள வரதுக்குள்ள வீட்டு முன்னாடி அத்தனை கூட்டம்…”
“அவ்வளோ பேச்சுக்கும் அப்பா, அம்மா அழுகை மட்டும் தான். அது என்னை இன்னும் இன்னும் அவமானப்படுத்தற மாதிரின்னு தெரியலையே இவங்களுக்கு. அம்மாவுக்கு நான் தப்பு பண்ணிருக்கமாட்டேன்னு தெரிஞ்சும் கோவம்…”
“அதை எதுக்கு கைல வாங்கி படிச்சு சிரிச்சு? இது தேவையா? பேசாம வர வேண்டியது தானேன்னு. இதை நீ செஞ்சிருக்க கூடாதுன்னு சொல்றவங்க என் பொண்ணு தப்பு பண்ணலைன்னு சொல்ல வாய் வரலை…”
“அதான் கல்யாணம் பண்ணனுமா பண்ணி வைங்க. என்ன விதியோ அப்படி போறேன்னு இருந்துட்டேன். ஆனா சிவம் மாமாவை பேசினதும் தான் என்னால முடியவே இல்லை. இன்னொரு அப்பா ஸ்தானத்துல இருந்தவர்…” என்னும்பொழுதே ஒரு கேவல்.
“தனும்மா, அம்மா அப்படி எல்லாம் இருக்கமாட்டேன். உன்னை நல்லா பார்த்துப்பேன். நம்பி நம்பிக்கையோட வளர்ப்பேன். என் நிலமையில என்னைக்கும் என் பொண்ணை நிறுத்தமாட்டேன். சத்தியம்…” என்றாள் இன்னும் அழுதுகொண்டு.
“ப்பா ப்பா…” என்று அவள் அழுகையில் குழந்தையும் உதடுபிதுக்க கண்ணீர் வந்துவிட்டது தனுக்குட்டிக்கு.
“ச்சோ ச்சோ ஒன்னுமில்லைடா குட்டிம்மா. அம்மா அழலை. பாரேன்…” என்று உடனே கண்ணீரை புடவை தலைப்பில் துடைத்துவிட்டு சிரிக்க இன்னும் நம்பாமல் பார்த்துவிட்டு கீர்த்தனனை பார்த்தது.
“அம்மா சொல்லுடா குட்டி…” என்றான் தன் பெண்ணிடம்.
“ப்பா…” என்று இசையின் கழுத்தை வளைத்துக்கொண்டு கன்னத்தை முத்தமென்று கடித்து வைக்க கண்ணீரின் உப்பு சுவையும் உமிழ்நீருடன் குழந்தையின் இதழ்களில் வழிய முகத்தை சுருக்கி துப்பி வைத்தது.
“அச்சோ குட்டிக்கு உப்பாகிருச்சாம்மா?…” என்று மகளை இங்குமங்குமாய் சுழற்றி புன்னகையுடன் விளையாண்டாள்.
“தண்ணி பாட்டில் வாங்கிட்டு வாங்களேன். திரும்ப திரும்ப வாயை துடைச்சிட்டே இருக்கா. கையில மண்ணு வேற…” என்று அதனை பிடித்துக்கொண்டாள்.
“காருக்கு போயிருவோம் இசை. போதும். இல்லை இன்னும் இங்க இருக்கனுமா சொல்லு?…”
“இல்லை போகலாம். நீங்க கூப்பிட்டீங்கன்னு தான் வந்தேன்…”
“ஏன் உனக்கு இங்க எல்லாம் பார்க்கனும்னு இல்லையா?…” என்று கை பிடித்து அவளை தூக்கி நிறுத்தியவன் தன் கைகுட்டையால் அவள் முகத்தில் ஒட்டியிருந்த மண் துகள்களை துடைத்துவிட்டான்.
“ஆசையா? எனக்கா? அது ஒரு வைராக்கியம். கெட்ட பழக்கம்னும் சொல்லலாம். எனக்கிருந்த ஆசை என்னோட அப்பா நிமிர்வா, இருக்கனும். எதையும் எதிர்த்து நிக்கனும்ன்றது தான். வேற ஒண்ணுமில்லை…”
“உண்மையை சொல்லு இசை…”
“என்ன உண்மை? எதுவுமில்லையே…” இலகுவாய் அவள் சொல்ல அமைதியாக நடந்தான் கீர்த்தனன்.
“உன் அப்பா மேல கோவமே வரலையா உனக்கு?…”
“வந்து என்ன செய்ய? அவர் பாவம், அப்படியே இருந்து பழகிட்டார். எனக்காக பேசுவார்ன்னு நான் எப்படி நினைக்க? ஆனா பேசியிருக்கனும்னு தோணிட்டே இருந்துச்சு. என் எதிர்பார்ப்பு தப்பு. அதனால எதையும் எதிர்பார்க்கறதும் இல்லை…”
“இது தப்பு இசை. வாழ்க்கை ஒருமுறை தான். வைராக்கியமா எல்லாம் தானா நடக்கனும்னு நினைச்சா அது கடைசி வரை நடக்காமலே போய்டும். அதுக்கப்பறம் யோசிச்சு பிரயோஜனமில்லை…” என்றான் பொருள் வைத்து.
“நீங்க அப்படி என்ன நினைச்சு நடக்காம போச்சு?…” இசை சிரிப்புடன் கேட்க அவளை பார்த்தவன் தண்ணீர் பாட்டிலை காரில் இருந்து எடுத்து நீட்டினான்.
“தனுவை குடு, நான் பார்த்துக்கறேன். நீ உன் முகத்தை கழுவு…” என்று சொல்ல இப்போது காரின் வெளிச்சமும் வீதி விளக்கின் வெளிச்சமும் மட்டுமே.
இசை முகத்தை கழுவ இன்னும் மண் துகள்கள் ஆங்காங்கே முகத்தில் ஒட்டியபடி இருந்தது.
“என் கையில தண்ணியை ஊத்து இசை…” என்றவன் உள்ளங்கையில் நீரை ஊற்ற அதனை கொண்டு அவள் முகம் துடைத்தான்.
மண் துகள்கள் நீரோடு கலைந்தும் இன்னும் கன்னத்தில் அவள் கைகள் வருடியபடி இருந்தவன்,
“போய்டுச்சா இசை?…” என்றான் மெல்லிய குரலில்.
“டாக்டர்…” என்று அவனின் விரல் ஸ்பரிசத்தில் விலகி சிரித்தவள் தண்ணீரின் துளிகளை அவன் மேல் சிதறடித்தாள்.
“முழிச்சுக்கோங்க முதல்ல. உங்களை நம்பி நானும் என் பொண்ணும் வரனும்…” என்று பாட்டிலை அவன் கையில் திணித்துவிட்டு குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
“ஹ்ம்ம், கூட்டிட்டு போகலாம்ன்னு தான் நினைக்கறேன். வெய்ட்டிங் இசை…” என்றவன் ஒரு சிரிப்போடு காரில் ஏறி அமர்ந்தான்.
வீடு செல்லும் வரை மயக்கத்துடனான ஒரு மௌனம் இருவரிடத்திலும்.
இசைக்கு மனதில் அத்தனை தெளிவு. என்னவோ பாரம் இறங்கியதை போலொரு நிம்மதியும், ஆசுவாசமும்.
அவள் மனம் அறியாது நெருங்க கூடாதென்று அவனும், மனதின் சஞ்சலங்கள் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டும் என்று அவளும்.
கீர்த்தனனுடனான இசையின் அடுத்த பயணம், தன் ஊரை நோக்கி மட்டுமல்லாது பைரவி என்பவளின் திருமண வாழ்வியலையும் நோக்கி.