“நேரமாச்சாம்மா? போவோமா?…” ராக்குவிடம் இசை கேட்டுக்கொண்டே கூட்டிக்கொண்டு வெளியே வந்துவிட்டாள்.
“ஏன் கீர்த்தி அவளை டென்ஷன் பன்ற?…” சுந்தரி முறைக்க,
“ம்மா, எப்பவோ சொன்னது. இப்பவரை அவளா அவங்களை பார்த்தாலே சண்டை போடுவேன்னு நினைச்சுட்டு பேசறா. நான் வேணும்னே ஒன்னும் செய்யலையே?…” என்று சிரித்தான்.
“ஹ்ம்ம், நல்ல பிள்ளை போ…” என சுந்தரியும் கிளம்பிவிட்டார்.
வீட்டில் கீர்த்தனணனும், மாணிக்கமும் மட்டுமே தனித்து இருந்தனர். அவர் நல்ல உறக்கத்தில் இருக்க கீர்த்தனன் மாடிக்கு சென்றுவிட்டான்.
ஒருமணி நேரத்தில் சுந்தரியிடமிருந்து போன் வந்துவிட்டது. தனு அங்கே உறங்கமாட்டேன் என்பதால் வந்து குழந்தையை தூக்கி செல்லுமாறு அழைத்தார்.
“ம்மா, இதுக்குத்தான் வேண்டாம்ன்னு முதல்லையே சொன்னேன்…” என எரிச்சலுடன் சொல்லியவன் எழுந்து மண்டபத்திற்கு விரைந்தான்.
ஊரிலிருந்து வெளியே சற்று தள்ளி அந்த மண்டபம். சிறியளவில் செய்ய ஊருக்குள் இருக்கும் மண்டபமே போதுமானதாக இருக்க பெரியளவில் செய்ய அந்த மண்டபம்.
கீர்த்தனன் மாணிக்கத்தை எழுப்பி சொல்லிவிட்டு மண்டபத்திற்கு செல்ல ராக்குவிடம் என்னவோ காரமாக பேசியபடி மண்டபத்தின் வெளியே நின்றிருந்தாள் இசை.
சுந்தரியின் முகமும் கவலையுடன் இருக்க குழந்தை தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தது. உடன் சில சொந்தங்கள் கூடி இருந்தனர்.
“என்னாச்சு?…” என்று அவன் நெருங்கையில் அவனை பார்த்துவிட்டு குழந்தை ப்பா என அவனிடம் தாவியது.
தகப்பனின் கையில் செல்லவும் இன்னுமே வீறிட்டு ஒரு அழுகை. இசை கலங்கி போய் அவனையும், பிள்ளையையும் பார்த்தாள்.
“என்னன்னு கேட்கறேன்ல?…” என சுந்தரியிடம் கேட்டவன் இசையின் முகத்தை பார்த்துவிட்டு என்னவோ நடந்திருக்கிறது என உணர்ந்துகொண்டான்.
“ஒரு சின்ன பிரச்சனை. சும்மா வாய்ப்பேச்சு சண்டையாகிருச்சு…” மெதுவாய் சுந்தரி சொல்ல,
“என்ன சண்டை? யார் சண்டை போட்டா?…” என கீர்த்தனன் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே,
“ஆனாலும் எடுப்பு மவளுக்கு இம்புட்டு வாய்த்துடுக்கு ஆகாது. இவ்வளவு பட்டும் பேச்சு குறையுதா பாரேன்?…” என ஒருவர் மீசையை முறுக்கிக்கொண்டு நடுவில் நின்று,
“சுந்தரி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. உன் நல்லதுக்கும் தான் சொல்றேன். இவளை சபையில எப்படி நடந்துக்கனும்னு சொல்லி வை. இல்லைன்னா நீ தான் தலைகுனியனும்…” என்றார்.
“யார் நீங்க? இதெல்லாம் நீங்க ஏன் சொல்றீங்க?…” கீர்த்தனன் அவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.
“நான் இவளோட மாமன் தான். இதை கூட இவ சொல்லலையா? என்னை பார்த்திருப்பீங்க டாக்டர் தம்பி, மறந்திருக்கும். ஆனா இவ இல்ல சொல்லனும். எடுப்பு மவளுக்கு பேச்சுத்தானே தவிர மட்டுமரியாதை இல்லை…”
“இப்ப நீங்க வாய மூடல…” இசை அவரிடம் இரைய,
“பாத்தீங்களா தம்பி? நல்லதுக்கு சொல்றேன். பொம்பளை பிள்ளை மாதிரியா பேசறா. சவடால் தான்…” என கீர்த்தனனிடம் வத்தி வைத்தார்.
“எண்ணே கொஞ்ச நேரம் பேசாம இருங்க. அவங்க பேசிக்கட்டும். நீங்க உள்ள போங்க…” என்று சொந்தக்கார பெண் ஒருவர் சொல்ல,
“அட என்னத்தா நீ? இவளை தட்டி வச்சா தான் கம்முன்னு இருப்பா. அன்னைக்கு பஸ் ஸ்டான்ட்ல நான் ஒரு அறை விடவும் தானே சத்தம் காட்டாம கூட வந்தா…” என்று பெருமையாய் மீசையை முறுக்கியவர்,
“தம்பி அதட்டி வச்சா பேசாம இருப்பா. நீங்க இடம் குடுத்துறாதீங்க. இல்லன்னா எடுப்பு நிலைமை தான் உங்களுக்கும். இப்பவே சொல்லிட்டேன்…” என்று வாய்க்குவந்தபடி பேச இசை வாய் திறக்கும் முன் அவளின் கையை பிடித்து தடுத்தவன்,
“என் மாமா எடுப்புன்னா நீங்க என்ன துடுப்பா?…” என்றான் கீர்த்தனன் காரமாய்.
இப்படியான பேச்சுக்கள் என்றும் கீர்த்தனனிடம் இருந்ததில்லை. வார்த்தைகளில் மரியாதையை கொண்டுவருபவன் இன்று பொறுமை இழந்துபோனான்.
“என்ன சுந்தரி நல்லதுக்கு சொன்னா உன் மகன் என்னையே அசிங்கப்படுத்தறான்?…” என்று திகைப்பு குறையாமல் கூட்டத்தினரையும் பார்த்துவிட்டு சுந்தரியிடம் பேச,
“என்ன பார்க்கறீங்க? உங்களை சொன்னா அசிங்கம். இதே கூட்டத்து முன்னாடி தானே என் மாமனார் பேரையும் சொன்னீங்க. ஏன் அவருக்கு பேர் இல்லையா?…” என்றான்.
“இல்ல தம்பி…”
“பொது இடத்துல வச்சு என் பொண்டாட்டியை அடிச்சிருக்கீங்களே?…”
“அது உரிமைல, அவளை திருத்த…”
“திருத்தன்னு யார் வேணாலும் உங்க வீட்டு ஆளுங்க மேல கை வைக்கலாம் போல?…” என்றவன்,
“ஏன் அவளுக்கு பெத்தவங்க இல்லையா சொல்லி புரியவைக்க? நீங்க என்ன…” என்று வார்த்தைகளை விழுங்கினான்.
“தம்பி…” அவருக்கு இப்போது கோபம் வர கீர்த்தனனின் பேச்சில் சொந்தங்கள் வேறு சிரித்துவிட்டனர்.
“நல்லா சொல்லுங்க தம்பி, இந்த மனுஷனோட ஒரே அக்கப்போரு. எப்ப பார்த்தாலும் நான் நான்னுட்டு முன்னாடி வந்து நிக்கிறாரு. யார் வீட்லையாச்சும் பிரச்சனைன்னா தேடி வந்து பஞ்சாயத்து பன்றாரு…”
ஆளாளுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டை அவர் மீது வைக்க தோளில் இருந்த குழந்தையை தட்டிக்கொடுத்தபடி,
“நான் ஏன் சொல்லனும்? என் பொண்டாட்டியை பேசும் போது யார் சொன்னீங்க? அவங்கவங்க வீட்டை அவங்கவங்க பாருங்க. வந்தா அடிச்சு திருத்தி சொல்லுங்க. புரியட்டும். அப்பத்தான் இவருக்கு புத்தி வரும்…”
‘அவருக்கு அறிவில்லை’ என்பதை போல பொதுவில் சொல்லிவிட்டு இசை பக்கம் திரும்பினான்.
விட்டால் அவரை அங்கேயே ஒருவழி செய்துவிடுவேன் என்று வீறுகொண்டு நின்றுகொண்டு இருந்தாள்.
இந்தளவிற்கு தான் பேசும் வரை அமைதியாக இருந்ததே பெரிது என்று அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் கீர்த்தனன்.
இசையோடு, சுந்தரி, ராக்கு என்று சேர்ந்தே வந்துவிட்டார்கள். வீட்டை நெருங்கும் முன் விஷயம் பெருமாளுக்கு வந்துவிட அவர் காத்துக்கொண்டு இருந்தார்.
காலையே திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு வேறு வேலையாக வீடு வரை வந்திருக்க அதற்குள் இத்தனை கலவரம்.
இசையிடம் வீடு நுழையும் வரை எதுவும் கேட்கவில்லை கீர்த்தனன். தனியே அழைத்து கேட்டுக்கொள்ளலாம் என்றிருக்க வந்ததும் பெருமாள் வந்துவிட்டார்.