“என்னம்மா என்ன பிரச்சனை?…” என்று கேட்க உள்ளே தந்தையின் அருகே மகளை படுக்க வைத்து தட்டிக்கொடுத்தவன் காதிலும் விழுந்தது பெருமாளின் குரல்.
ராக்கு பெருமாளிடம் அங்கே நடந்ததை மெதுவாய் சொல்லிக்கொண்டு இருக்க கேட்டுவிட்டு மகளிடம் தான் பேசினார்.
“எதுக்கும்மா நமக்கு இந்த வம்பு பேச்செல்லாம். என்னமோ பேசிட்டு போகட்டும்ன்னு நீ பேசாம வந்திருக்க வேண்டியது தானே? முதல் முதல்ல கல்யாணமானதுக்கப்பறம் இங்க வந்திருக்க…” என்று அறிவுரை சொல்லிக்கொண்டு இருந்தார்.
“இப்ப ஊர் கண்ணெல்லாம் உன் மேல தான் இருக்கும். ஒருவாய் மெல்லும். ஒருவாய் கொல்லும். பேசினா பேசிட்டு போகட்டும். நமக்கெதுக்கு பொல்லாப்பு? எதுக்கு யார் வாயிலையும் விழுந்துட்டு?…”
“ரொம்ப நல்லா இருக்கே நீங்க பேசறது…” என்று வந்துவிட்டான் கீர்த்தனன்.
அவன் வந்த வேகத்தில் இசை மட்டுமல்லாது பெருமாள், ராக்குவும் மிரண்டு எழுந்து நிற்க,
“கீர்த்தி…” என்று அவனின் கையை பிடித்தார் சுந்தரி.
“பின்ன என்னம்மா? என்ன பேசினாலும் கேட்டுட்டு நிக்க இவ என்ன மனுஷியா இல்ல வேற எதுவுமா?…” என்றவன் சத்தத்தில் மாணிக்கமும் வந்துவிட்டார்.
“இசை உள்ள போ. பாப்பா கூட இரு…” கீர்த்தனன் சொல்ல,
“இல்ல, எதுவும் பேச வேண்டாம். நீங்க இதை விடுங்க. அதான் முடிஞ்சிருச்சே…” என்ற இசையை தீயாய் முறைத்தான்,
“என்ன இத்தனை வருஷம் உன் அப்பா உனக்கு செஞ்சதை நீ எனக்கு செய்யறியா?…” என்றதும் விக்கித்து பார்த்தாள்.
“தம்பி?…” பெருமாள் அதிர,
“உங்களுக்கு புரியலைல? இத்தனை வருஷம் உங்க பொண்ணை எல்லாத்துக்கு பணிஞ்சு போ, கண்டுக்காத, பேசாதன்னு சொன்னதை இப்ப அப்படியே உங்க பொண்ணு எனக்கு திருப்பி படிக்கிறா போல. அதை சொன்னேன்…” என்றவன்,
“இசை, கேட்பியா மாட்டியா? நான் என் வொய்ப்காக பேசறேன். இதை நீ மறுக்க கூடாது. போ உள்ள…”
“இப்ப நீங்க மட்டும் என்ன? அதை தானே செய்ய சொல்றீங்க?…” என்றவள் குரல் உடைந்திருக்க கண்ணீர் இறங்கிவிட்டது.
இதுவரை மகள் இப்படி அழுது அவர் பார்த்ததில்லை. எத்தனை அதட்டலிலும் முறைப்பும், மிடுக்குமே மிஞ்சியிருக்கும்.
“அம்மாடி இசக்கி தாயி…” மகளிடம் அவர் வர,
“என் பொண்ணுக்கு இவ ஒன்னும் தாயில்லைன்னு எகத்தாளமா பேசியிருக்காங்க. அவ எப்படி சும்மா இருப்பா? அப்ப நீங்களே அப்படித்தான் நினைக்கனும்னு சொல்ல வரீங்களா?…” என்று கேட்க இசையி அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார் சுந்தரி.
“கீர்த்தி பொறுமையா பேசுப்பா…” என மாணிக்கம் சொல்ல,
“என்னப்பா பொறுமை? எத்தனை வருஷம். இந்த மனுஷன் மட்டும் நிமிந்து எல்லாத்தையும் தைரியமா ஹேண்டில் பண்ணியிருந்தா இசை இப்ப இப்படி ரெண்டாந்தாரமா வாழ வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை…” என்றவன்,
“பன்றதையும் பண்ணிட்டு இன்னும் குட்ட குட்ட குனியனும்னு சொல்லிட்டிருக்காங்களே. அப்ப அவளுக்கு மனசுல என்ன தோணுதோ அந்த உணர்வை காமிக்கவே கூடாதா? மிஷினா என்ன?…”
அத்தனை ஆற்றாமை அவனின் குரலில். இப்போதும் அவளை கூட்டிற்குள்ளேயே அடைக்க தானே நினைக்கின்றனர் என்று ஆத்திரம்.
“அடிப்படை குணமான எதிர்ப்பும், தார்மீக கோபமும் காண்பிக்கவேண்டிய இடத்துல காமிச்சா தான் மதிப்பு. ஆனா எங்க? அவளை நீங்க அப்படியா இருக்க விடறீங்க?…”
“தம்பி, அந்த அர்த்தத்துல…”
“என்னவும் இருக்கட்டும். இன்னொருத்தன் வயசு பொண்ணை பொது இடத்துல வச்சு அடிக்கிறான். வேடிக்கை பார்த்திருக்கீங்களே? உங்க பொண்ணு தப்பே பண்ணிருந்தாலும் நீங்க தனியா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேசறது தானே முறை? அதென்னங்க உங்களுக்கு இப்படி ஒரு மனசு?…”
“தம்பி அவருக்காக நான்…”
“நீங்க பேசாதீங்க, எதுவுமே பேசாதீங்க. என் பொண்ணை என் அம்மா கூட அடிக்க முடியாது. முதல்ல பிள்ளைங்களுக்கு பெத்தவங்களோட பாதுகாப்பும், நம்பிக்கையும் தான் ரொம்ப முக்கியம். அதை ரெண்டுபேருமே இசைக்கு குடுக்கலை…” என்றான் கீர்த்தனன்.
“என் பொண்ணை நம்பாம இல்லைங்க தம்பி. ஆனா இந்த அக்கம்பக்கத்துல…” ராக்கு அழுதுவிட,
“அவங்க ஒன்னும் உங்க பொண்ணோட வலியை தாங்கலையே? அவங்க வந்து மருந்து போடலையே? உங்க பொண்ணை தூத்தி பேசறவங்க வார்த்தைக்காக பெத்த பொண்ணை அடிச்சு காயப்படுத்திருக்கீங்க…” என்றவன்,
“அம்மா தானே நீங்க? உங்க பொண்ணோட உடம்புல எத்தனை காயம் தழும்பா மாறியிருக்குன்னு போய் பாருங்க. அப்ப தெரியும் நீங்க அவ மேல வச்ச நம்பிக்கையும் பாசமும்…”
“ஐயோ தப்பு பண்ணிட்டேனே?…” என்று ராக்கு அங்கேயே அமர்ந்து அழுதுவிட,
“எல்லா பிள்ளைங்களுக்கும் அப்பா தான் முதல் முன்னோடி. தன்னோட அப்பாவுக்கான மரியாதை தான் பிள்ளைகளுக்கும். அதை தானே உங்க பொண்ணும் எதிர்பார்த்தா. நீங்க சரியா இருந்திருந்தா இன்னைக்கு இப்படி நடந்திருக்காதே?…”
“உங்களுக்கு யாரையும் எதிர்க்க, பேச துணிச்சல் இல்லை. ஆனா உங்க பொண்ணு மட்டும் நீங்க என்ன சொன்னாலும் கேட்டுடனும். அதுபடி நடக்கனும். இல்லைன்னா உயிரை விடுவேன்னு ஆரம்பிச்சிருவீங்க…”
“தெரியாமத்தான் கேட்கறேன். அன்னைக்கு நானே இல்லைன்னா என்ன பண்ணிருப்பீங்க? பொண்ணையும் பார்க்கலை, அவ மனசையும் பார்க்கலை. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் மட்டும் தான் தீர்வா? அது செஞ்சு வச்சுட்டா போதும். எல்லாம் முடிஞ்சது…”
“நான் சரியில்லாதவனா இருந்திருந்தா? என்னை தெரியும்ன்னு சொல்லாதீங்க. என்ன தெரியும் என்னைப்பத்தி? எதுவும் இல்லை. ஊர் பேசிருச்சு. அக்கம்பக்கத்துல அசிங்கப்படுத்தறாங்க. உடனே கல்யாணம்….”
“எந்த காலத்துல இருக்கீங்க? இதுவே நீங்க உங்க பொண்ணை மேல படிக்கவச்சு நல்ல வேலையில உக்கார்த்தினா இதே ஊரும், அக்கம்பக்கமும் உங்களை பார்த்து பல்லை காட்டிட்டு வருவாங்க. இதுக்காக தான் வாழறீங்களா நீங்க? இது ஒரு வாழ்க்கையா?…”
“முதல்ல பெத்த பிள்ளைங்க மேல நம்பிக்கை வைங்க. என்ன நடந்தாலும் கூட இருப்பேன்னு ஒரு உணர்வை குடுங்க. உங்களோட நிமிர்வு உங்க பிள்ளைங்களோட கௌரவம். அதை புரிஞ்சுக்கோங்க…”
“ஏன் உங்க பேர் சொல்லி உங்களை கூப்பிட சொல்ல உங்களுக்கு என்ன தயக்கம்? உங்க பேர் பெருமாள் தானே?…” என்றவன்,
“இதே வார்த்தையை சொல்லி நான் உங்க பொண்ணை கூப்பிட்டா அவளுக்கு எப்படி இருக்கும்ன்னு யோசிச்சீங்களா? இல்லை அப்பவும் மாப்பிள்ளை தானேன்னு அதுக்கும் சரின்னு போவீங்களா? உங்களுக்கான மரியாதையை நீங்க விட்டுத்தரலாமா?…”
“அவ இவ்வளவு கோபக்காரியா, எடுத்தெறிஞ்சு பேச காரணமே நீங்களா இருக்கும் போது அவளை அதட்டி, அடக்கி வைக்கிறதுல என்ன நியாயம்? நீங்க சரியில்லை. அவ சரி பண்ண நினைச்சா. தப்பில்லையே…”
கீர்த்தனனின் கேள்விகள் ஒவ்வொன்றும் பெருமாளையும், ராக்குவை மட்டுமல்ல மாணிக்கத்தையுமே சுட்டது.
“ஆனா ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சது எனக்கு. இசை மாதிரி தான் என் பொண்ணை வளர்ப்பேன். ஆனா உங்களை மாதிரி ஒரு அப்பாவா நான் இருக்கவே மாட்டேன் என்னைக்கும்…” என்றான்.
சொல்லிவிட்டு சென்று அமர்ந்துவிட ஆணியடித்ததை போல அங்கேயே நின்றிருந்தார் பெருமாள்.
இசை அறைக்குள்ளும், அறையின் வாசலில் சுந்தரியும் இருக்க ராக்கு அழுதுகொண்டு அமர்ந்திருந்தார்.
“ப்பா, மாமாவை கூட்டிட்டு போங்க. கொஞ்ச நேரம் தனியா விடுங்க…” என்றான் கீர்த்தனன்.
“ராக்கு எந்திரி, இங்க வா…” என சுந்தரி அழைக்க அவர் இன்னும் அழுதபடி அமர்ந்திருந்தார்.
“எந்திச்சு அம்மாவோட போங்கத்தை. இப்ப அழுது என்ன செய்ய?…” என்று கீர்த்தனன் அழைத்து சொல்லவும் மறுக்கமுடியாமல் எழுந்து சென்றுவிட்டார்.
பெரியவர்கள் நால்வரும் பெருமாளின் வீட்டில் இருக்க கீர்த்தனன் இசை மட்டும் அங்கேயே இருந்தனர்.
வெகு நேரமாகியும் இசை வெளியே வரவே இல்லை. தன் தகப்பனை யாரையும் ஒருவார்த்தை கூட பேச விடாதவள் தான் பேச பேச உள்ளுக்குள் எத்தனை உடைந்திருப்பாள் என்று அத்தனை நிச்சயம் கீர்த்தனனுக்கு.
ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன் அவளுக்கு தண்ணீரை எடுத்துகொண்டு அறை கதவை திறந்துகொண்டு நுழைந்தான்.
“இசை ஏன் தனுவை மடில படுக்க வச்சிருக்க? முழிச்சுட்டாளா?…” என்று மற்றதை விட்டு இதனை கவனித்து கேட்கவும் இல்லை என்று தலையசைத்தாள்.
இத்தனை நாட்களாக உருபோட்டு வைத்திருந்த ஒன்றை சபையில் இல்லை என்பதை போல கேலி கூத்தாக்கி பேசி சிரித்ததை தாள முடியவில்லை இசையால்.
“இசை என்னன்னு சொல்லு…” என்றான் அவள் தோள் தொட்டு திருப்பி.
“நான் தனுக்குட்டிக்கு அம்மான்னு சொன்னீங்க. இல்லையாமே? அதான் என்னை அவ அம்மான்னு சொல்லலையா?…” என்றாள் அவனை நிமிர்ந்து பார்க்காமல்.
“ஹேய் என்ன இது? யாரோ என்னவோ சொல்றாங்கன்னு?…”
“நிஜம் தானே? அதனால தான் நீங்க கூட, நீங்களும்…” அவளுக்கு அதற்கு மேல் பேசமுடியவில்லை.
உதட்டை கடித்தபடி அழுகையை அடக்கிக்கொண்டு வார்த்தைகளை தொண்டைக்குழிக்குள் புதைத்தாள் இசை.
அவள் கேட்கவருவது புரிந்தது கீர்த்தனனுக்கு. அதில் அவன் மனதும் வலிக்க தன் நெஞ்சின் மேல் சாய்த்துக்கொண்டான் அமர்ந்திருந்தவளை.
“ஊருக்காகவும், கல்யாணம் ஆகிடுச்சுன்றதுக்காகவும் எல்லாம் வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு கட்டாயமில்லை இசை. எனக்கு திரும்பவும் அந்த இருட்டு வாழ்க்கை வேண்டாம்….” என்றதும் அவள் அண்ணார்ந்து பார்க்க,
“உனக்கு புரியாது. சொன்னா தான் புரியும் இல்லையா?…” என்றவன் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டான்.
“மாடிக்கு வா போகலாம்…” என்றதும் அவனின் குரலுக்கு கட்டுப்பாட்டு பின்னோடே சென்றாள்.