“அட என்ன இன்னைக்கு இத்தனை அழுகை? இந்த வாயாடிக்கு அழ தெரியுமா?…” என்று சேரை நகர்த்தி அவளருகே போட்டு அமர்ந்து கண்ணீரை துடைக்கவும் இசை தலையை தாழ்த்தியபடி இருந்தாள்.
“ஓஹ், என்கிட்டே கேட்டதை நினைச்சு இப்படி இருக்கியா என்ன?…” என அவளின் தோற்றத்தை கண்டு கேட்கவும் நிமிர்ந்து பார்க்க,
“அப்ப அதான். இல்லையா? பேசு இசை…”
“ஏதோ வேகத்துல கேட்டுட்டேன்…”
“என்கிட்டே தானே? கேட்கலாம்….” என்றான் சிறு புன்னகையுடன்.
“அதுக்கா இத்தனை நெவர்ஸ்? உண்மையா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதோட அன்னைக்கு நான் அப்படித்தான் தொடுவேன்னு என்னை கட்டி பிடிச்சியே, அது இன்னும் பிடிச்சது…” என்றான் மனதை மறையாமல்.
“நிஜமாவா?…”
“ஏன்? நம்ப முடியலையா? எனக்கு உன்னை பிடிக்குமே இசை. ஆனா காட்டிக்கிட்டதில்லை. அவ்வளோ தான்…”
“அழுகை அது வேற. எனக்கே தாங்க முடியலை. எவ்வளவு நாள் தான் எல்லாத்தையும் தாண்டி தாங்கி நான் இருக்க? அதான் முடியலை. அதுவும் எனக்காக நீங்க பேசவும் எனக்கு உங்க தோள்ல சாய்ஞ்சுக்கனும்னு தோனுச்சு…”
“உன் பக்கத்துல தானே நின்னேன். சாய்ஞ்சிருக்கலாம்…” கீர்த்தனனும் சொல்ல,
“எனக்கு என்ன பன்றதுன்னு தெரியலை. அங்க வச்சு எனக்காக இன்னொருத்தர் பேசும் போது. அதுவும் எப்பவும் எனக்கு நான் தான் பேசுவேன். என்னைக்கும் என் பேச்சை நிறுத்தனும்னு சொல்லுவாங்க. பேச கூடாதுன்னு சொல்லுவாங்க. நான் பேசறது சரின்னு யாரும் சொன்னதில்லை…”
“இன்னைக்கு நான் பேசினதை நீ என்னைக்கோ உங்கப்பாட்ட நீ பேசியிருந்தா சொல்லியிருக்கலாம். முன்னாடியும் எனக்கு தோணும். ஆனா அப்ப எனக்கு எந்த ரைட்ஸும் இல்லை. உங்க குடும்ப விஷயம்ன்னு விலகிருவேன்…”
“இப்போ…” இசை சற்று தெளிந்து கேட்க,
“ஹ்ம்ம், இப்போ உன்னை பேசினா என்ன? என்னை பேசினா என்ன? ரெண்டும் ஒண்ணுதானே? அதான் உனக்கு பதிலா நானே பேசிட்டேன்….” என்றான் இலகுவாய் பின்னால் சாய்ந்தமர்ந்து.
சிறிது நேரம் இருவருமே அமைதியை கடைபிடிக்க காற்றாடியின் சத்தத்தை தவிர வேறு எந்த சப்தமும் இல்லை.
“உன்னை பிடிக்கும் இசை. இப்போ மனைவியா உன்னை பிடிக்கும். உன்னோட எல்லாம் என் பொறுப்புன்னு நான் எப்பவோ முடிவுக்கு வந்துட்டேன். ஆனா நீ கேட்ட மாதிரி இன்னும் வாழ்க்கையை ஆரம்பிக்காம இருக்க காரணம் நிச்சயமா பிடிக்காமல் இல்லை…”
“எனக்கு புரியலை…” இசை சொல்ல,
“சொல்றேன். நீயும் தெரிஞ்சுக்கனும். அப்போ தான் நம்ம எதிர்காலத்துக்கு நல்லது…” என்றவன்,
“நீ இப்படி கேட்கிற அளவுக்கு நான் உன்னை கொண்டு வந்திட்டேன்றது வருத்தமா இருந்தாலும் ஒருவகையில எனக்கு ரொம்ப சந்தோஷமும் கூட உன்னோட உரிமையில. என் சட்டையை பிடிச்சு கூட நீ கேட்டிருக்கலாம்…”
“கல்யாணமானதும் அன்னைக்கே கட்டாயமா வாழனுமா என்ன? நிறைய சொல்லுவாங்க இங்க முக்கால்வாசி அப்படித்தானே ஆரம்பிக்குதுன்னு. ஆனா அப்படி வாழறவங்களுக்கு தான் அதோட கஷ்டம் தெரியும்…”
“தன் இணையோட விரும்பி தான் உடன்படறாங்களா? அப்படி இல்லாதபட்சத்தில அந்த பொண்ணுக்கோ ஆணுக்கோ அது தெரியவரும் போது எத்தனை வலியை கொடுக்கும்ன்னு யாருக்கும் புரியறதில்லை. கூட வாழறவங்களுக்கே கூட…”
“எனக்கு உங்களை புடிக்கும் தான்…” இசை உடனே சொல்ல,
“ஹேய் இசை. நான் உன்னை சொல்லலைடா. பொதுவா சொன்னேன். என்னை சொன்னேன். என்னோட முன் வாழ்க்கையை சொல்றேன். இப்பவும் உன் கூட வாழனும், சேரனும்னு ஆசை தான்…”
“ஆனா உடனே அதை செய்ய வேண்டாம்ன்னு நினைக்கேன். என்னால உன்னை விட்டு இருக்க முடியாதுன்ற ஒரு ஸ்டேஜ் வரும் பார்த்தியா? அது எனக்கு வேணும்…”
“உன்னோட உன் மனசோட உணர்ந்து வாழனும்னு நினைக்கறேன். நீ இல்லாம ஒரு வாழ்க்கை இல்லைன்னு நினைச்சு வாழனும். ரசிச்சு வாழனும்….”
“என்கிட்ட அப்படி எதுவும் தோணினதில்லையா உங்களுக்கு?…” இசை தவிப்புடன் கேட்க,
“உனக்கு தோணிருக்கா இசை? என்னை விட்டு இருக்க முடியாதுன்னு நினைச்சிருக்கியா நீ?…” என்றதற்கு அவளிடம் பதிலில்லை.
மௌனமாக அந்த பதிலை தனக்குள் தேடினாள். தேட தேட கண்டுபிடிக்கத்தான் முடியவில்லை.
இயலாமையுடன் அவனின் முகம் காண புன்னகை தான் கீர்த்தனனிடத்தில். அவளின் எதிரே இன்னும் நெருங்கி அமர்ந்தவன்,
“அவசரமே இல்லை. அப்படி ஒரு நினைப்பு உனக்கு வரனும் தானே? இது என்னோட எதிர்பார்ப்பும் கூட…”
“வரலைன்னா?…” பயத்துடன் தான் பார்த்தாள்.
“இதுக்கெதுக்கு ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கற நீ? கட்டாயம் வரனும்னு அவசியமில்லை….” என்றவன்,
“என்னையே எடுத்துக்கோ, திரும்ப ஒரு கல்யாணம் வேண்டாம்ன்னு இருந்தேன். நம்ம கல்யாணம் நடந்துச்சு. உன்னை கஷ்டப்படுத்தாம பார்த்துக்கனும்ன்ற நினைப்பு மட்டும் தான் அப்போ. ஆனா, ஒவ்வொரு நாளும் உன் மேல ஒரு அன்பு…”
“அது பக்கத்து வீட்டு பொண்ணு, என் கண்முன்னாடி வளர்ந்தவன்றது தாண்டி என் மனைவியா உன்னோட உரிமை என்கிட்டே என்னன்னு எனக்கு உணர வச்சது. இப்ப அந்த கட்டம் தாண்டிட்டேன். எஸ், முழுமனசா எப்பவோ உணர்ந்துட்டேன் நீ என்னோட மனைவி…”
“ஆனா உனக்கு அது கடமையா, கல்யாணம் ஆகிடுச்சேன்ற ஒரு காரணம் மட்டும் போதும்ன்றதால உண்டான எண்ணம். அது தப்புன்னு சொல்லமாட்டேன். அது சரின்னும் சொல்லமாட்டேன்…”
“என்னோட வாழ்க்கையில் நான் செஞ்ச பெரிய பிழை அது. கல்யாணம் ஆகிடுச்சு உடல்ரீதியா இணையும் போது மனசும் சேர்ந்திடும்ன்னு நானுமே அந்த லாஜிக் படி தான் என் பழைய வாழ்க்கையை ஆரம்பிச்சேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு நான் நினைக்காத நாளே இல்லை…”
“என்னங்க நீங்க?…” இசை பதறிவிட்டாள் அவனின் தழுதழுப்பில்.
“நிஜமா இசை. பொய்யா சொல்லலை. தாம்பத்தியத்துல எதிர்வினை கொஞ்சமாவது இருக்கனும். வெட்கமா, தயக்கமா, கூச்சமா. இப்படி நிறைய. ஏன் அது பிடிக்காமையா கூட இருக்கலாம். ஏதாவது ஒன்னை மனைவி கணவன்கிட்ட பிரதிபலிக்கனும் தானே?…”
“ஆனா இது எதுவுமே இல்லாம ஒரு ஒரு தாம்பத்தியம். அது அசிங்கம். ரணம். கொடுமை. உணர்வுக்கான வடிகாலா கல்யாணம்? ஷிட்….” என்றவன் வார்த்தைகள் தடுமாறியது.
இசைக்கு அந்த நொடி அவன் முகத்தை காணவே முடியவில்லை. அத்தனை வேதனையை சுமந்திருந்தது.
“இல்லை எனக்கு தெரிஞ்சுக்க வேண்டாம். விடுங்களேன்…” என்றாள் இறைஞ்சுதலாய்.
“படிப்பு முடிஞ்சு, கிளினிக் வைக்கனும்னு ஆசைப்பட்டேன். உடனே அம்மா தன் பிள்ளை செட்டிலாகியாச்சுனு கல்யாணம் பேச ஆரம்பிக்கனும்னு சொல்லவும் பெருசா ஒன்னும் தெரியலை. உங்க விருப்பம்ன்னு சொல்லிட்டேன்…”
“லைஃப்ல வேற என்னன்னு ரொம்ப சராசரியா தான் நானும் நினைச்சேன். அந்த வயசுக்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் இருந்திருந்தா யோசிச்சிருப்பேனோ என்னவோ. ஆனா யோசிக்கலை நான். உனக்கு தெரியுமே கல்யாணம் வரை…” என்றதற்கு இசையுமே தலையசைத்தாள்.
“படிப்பு, சம்பாத்தியம். அடுத்து குடும்பம் குழந்தை இதுதானேன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா வாழ்க்கை, ஹ்ம்ம் என்ன சொல்ல?…” என்று பெருமூச்சு விட்டான் கீர்த்தனன்.
தேடி தேடி ஒரு மருமகளை தேர்ந்தெடுத்தார் சுந்தரி. ஜாதக பொருத்தம் அத்தனை திருப்தியை கொடுத்திருந்தது.
விசாரித்த வகையில் தாய் தகப்பன், அண்ணன் அண்ணி, அவர்கள் பிள்ளைகள் இருவர் என்று பைரவியின் குடும்பம் பரம சந்தோஷம் தான் சுந்தரிக்கு.