திருமணம் முடிந்து தன் வீட்டிற்கு மருமகள் வந்திருக்க கையில் பிடிக்க முடியவில்லை சுந்தரியை.
“என்ன மதினி பொண்ணு சத்தம் காட்டாம இருக்கு? கேட்டா கூட தலையை மட்டும் தான் ஆட்டுது….” என்று ராக்கு கேட்க,
“அதான் இங்க வந்துட்டா தான? இனி கலகலப்பா பேசட்டும். அதுவும் இன்னைக்கு தான் கல்யாணமாகி வந்திருக்கா. கொஞ்சம் மிரண்டு தான இருப்பா?…” என்று மருமகளை தாங்கி பேசினார்.
அத்தனை அமைதியாக இருந்த பைரவியிடம் திருமணமன்று மட்டுமல்ல அதற்கு பின்னரும் கூட அதே மௌனம் தான்.
“என்னம்மா…” என்று அவளிடம் கேட்டால் கூட என்னவென்பதை போல நிமிர்ந்து பார்ப்பதோடு சரி.
“என்ன சம்பந்தி பைரவி எதுவும் பேசறதில்லை…” என்று அவளின் பெற்றோரை கேட்டால்,
“அவ சுபாவமே அப்படித்தான் சம்பந்தி. போக போக சரியாகிடும். நாங்க சொல்லிட்டு போறோம்…” என்று கிளம்பி சென்றனர்.
வெளியாட்கள் மற்றவர்கள் என்று தான் இப்படி இந்த பெண் உள்ளது என்று பார்க்க அதே குணம் தான் கீர்த்தனனிடமும்.
அவனுக்கு அவளின் அமைதி பிடித்திருந்தது தான். பொதுவாக வளவளக்காதவன்.
மனைவியின் பேச்சும் சுருக்கம் என்று சந்தோஷமும் கூட. ஆனால் எல்லா விஷயத்திலும் அவள் அப்படியே இருக்க ஆரம்பகட்டத்தில் சரியாகிவிடும் என்று நினைத்தவனின் மனதிற்குள் போராட்டம் ஆரம்பிக்க துவங்கியது.
இருபது நாட்கள் கடந்துவிட்டது திருமணம் முடிந்து. பேச்சுக்கள் அத்தனை ரத்தின சுருக்கம்.
“பைரவி வெளில போகலாமா?…” என்று கேட்பவனுக்கு,
“எனக்கு அதிகமா வெளில சுத்த பிடிக்காது…” என்ற பதில் தான் கிடைக்கும்.
“சேரி உனக்கு தான் வாங்கிட்டு வந்தேன். பிடிச்சிருக்கா? இதை கட்டி காண்பியேன்…” என்பான்.
“இந்த கலர் என்கிட்டே இருக்கே. வேஸ்டா ஏன் வாங்கனும்?…” என்பாள்.
இப்படி ஒவ்வொன்றிற்கும் அவள் மறுப்பாய் பதில் சொல்லிக்கொண்டே இருக்க வாங்கி தருவதில் ஆர்வமும் குறைந்தது கீர்த்தனனுக்கு.
வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா? என்னும் ஆயாசமும், ஒருவேளை தனக்கு தான் அவளை கையாள தெரியவில்லையா என்னும் ஆதங்கமும் ஒருங்கே அவனை படுத்தியது.
மனதுவிட்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. புதுமண தம்பதிகளுக்கான எந்தவித பிரத்யோக பேச்சுக்களும் இல்லை.
ஆனால் அவனின் அணுகலை மட்டும் பைரவி மறுத்ததில்ல. அறைக்குள் நுழைந்து அவன் நெருங்க விளக்குகள் அணைக்கப்பட்டு இருள் மூழ்கிவிடும்.
முதலில் வெட்கம் என்று அவன் நினைத்திருக்க வெளிச்சத்தில் முகம் பார்த்து சிரிக்கவும் யோசிக்கும் பெண்ணாய் ஒரு மனைவி.
பார்வைக்கும், பழக்கத்திற்கும் கூட அவளின் அமைதியில் ஒரு இறுக்கம் தோன்றியது.
அது நிச்சயம் சாது தன்மை கிடையாது. என்னவோ வாழவேண்டும் என்ற ஒரு மனப்பான்மை மட்டுமே.
அன்றைக்கும் சுந்தரி கோவிலுக்கு சென்றுவருமாறு சொல்ல அவள் மறுக்க சுந்தரி மட்டுமே கிளம்பிவிட்டார் மாணிக்கத்துடன்.
“ம்மா…” என்றவன் அழைப்பில் அறைக்குள் இருந்தவள் வெளியில் வர,
“எங்க பைரவி அம்மாவை காணும்?…” என்று வந்தான் கீர்த்தனன்.
“அவங்க கோவிலுக்கு போயிருக்காங்க…” என பதில் சொல்லிவிட்டு உள்ளே அறைக்குள் நுழைய,
“வீட்ல யாருமில்லையாம்மா…” என்று சிரிப்புடன் அவளை நெருங்கி வர,
“இல்லையே, ஏன்?…” என விலகினாள்.
“எங்க போற நீ? கல்யாணம் ஆனதுல இருந்து ப்ரைவேசி இல்லை. ஹனிமூன் போகனும்னு கிளம்பினா உடம்பு முடியலைன்னு வேண்டாம்ன்னு சொல்லிட்ட…”
“அதுக்கு? விடுங்க நீங்க. யாராவது வந்திருவாங்க…” என பேசியபடி மெல்ல நழுவி வாசலருகே வந்து நின்றுவிட்டாள்.
அவளின் பதட்டம் கூட அவனுக்கு சுவாரஸியத்தை தர சிறிது நேரம் உள்ளே அழைத்து பார்த்துவிட்டு கட்டாயப்படுத்துவதை போல தோன்ற கிளம்பிவிட்டான்.
“நைட் பேசிக்கறேன்…” என்று.
இரவு உணவு முடிந்து உள்ளே செல்லவுமே பைரவியும் விளக்கில் கை வைக்க போக அதனை தடுத்தவன்,
“ஏன் இதுக்குன்னே நான் உன் பக்கம் வர மாதிரி ரியாக்ட் பன்ற பைரவி? கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாம்…” என்று சொல்ல,
“இல்லை எனக்கு தூக்கம் வருது. நீங்க உங்களுக்கு வேண்டாம்ன்னா தூங்கறேன்…” என்ற வார்த்தையில் முதல் முதலாய் சுருக்கென்றானது அவனுக்கு.
“வாட் யூ மீன் பைரவி?…” அதிர்ந்த பாரவியை கொடுக்க அலட்டிக்கொள்ளவே இல்லை அவள். அதே அமைதியான பார்வை.
“எனக்கு தூங்கனும்…”
“நான் பேசனும்னு தானே சொன்னேன்?…” என எழுந்தமர்ந்துவிட்டான்.
“பேச என்ன இருக்கு? எதுவுமில்லையே?…” என்றாள் மெதுவாய்.
“பைரவி வெளிப்படையா கேட்கறேன். ஏன் இப்ப இதை கேட்கறது அபத்தமா இருந்தாலும் கேட்கவேண்டிய அவசியமாகிடுச்சு…” என்றவன்,
“நிஜமா என்னை பிடிச்சு தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டியா நீ?…” என்றான் அவளிடத்தில்.
“ஏன்?…”
“நீ இங்க இருக்கிறது அப்படி இருக்கு….”
“நான் என் வீட்டுல கூட இப்படித்தான் இருப்பேன். அதே மாதிரி தானே இங்கயும்…”
“நான் என்னை பிடிக்குமான்னு கேட்டேன் பைரவி?…”
“அம்மாப்பா சொன்னாங்க. சரின்னேன்…” என்றாள்.
பிடிக்கும், பிடிக்காது என்ற வார்த்தை வரவே இல்லை. அதிலும் இத்தனை நாட்கள் ஒன்றாய் கணவன் மனைவியாய் வாழ்ந்த பின்னரும் கூட.
இந்த பதில் கீர்த்தனனின் திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தையே ஆட்டிவைத்தது. கசப்பை மெல்ல விழுங்கினான்.
“அப்போ என்னை அக்சப்ட் பண்ணினது?…”
“கல்யாணமானா எல்லாம் தானே? அதோட அன்னைக்கு என்கிட்டே நீங்க இதை பத்தி எதுவும் பேசலை. கேட்கவும் இல்லை…” என்றதும் சுளீரென்று இருந்தது கீர்த்தனனுக்கு.
“அதுமட்டுமில்லாம மேரேஜ் லைஃப் என்னன்னு தெரியும். அதான் அப்ஜெக்ட் பண்ணலை…” வெகு சாதாரணமாக சொல்ல இன்னுமே அதிர்ந்தான்.
“சப்போஸ் அன்னைக்கு இதை கேட்டிருந்தா?…”
“உங்க விருப்பம்ன்னு சொல்லியிருப்பேன்…” என்றவளை என்ன செய்யலாம் என்று ஒரு ஆவேசமே எழும்பியது கீர்த்தனனுக்கு.
திருமண வாழ்க்கையில், அதிலும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வாழ்க்கையில் தாம்பத்தியம் இப்படியாக இருந்தாலும் இருவருக்குள்ளும் அதன் மூலம் ஒரு புரிந்துணர்வு உண்டாகும்.
ஆனால் இங்கே அதுவே பிறழ்ந்து போனதை போல ஒரு தோற்றம் உருவாகிவிட்டது அவளின் அடுத்த பேச்சில்.
“உங்களுக்கு மனைவியா இருக்கேன். போதாதா? வேறென்ன? பதில் சொல்லிட்டேன். தூங்கட்டுமா? இல்லை முழிச்சிருக்கவா?…” என்று கேட்க இதற்கு மேலுமா அவளை தொடும் ஆசை உண்டாகும்?
வெறுத்து போனது பைரவியின் பேச்சில். அப்போ இத்தனை நாட்கள் தான் அவளுடன் வாழ்ந்தது என்னவிதமான வாழ்க்கை?
அதிலும் அந்த கடைசி பேச்சு? கூசி போனான் கீர்த்தனன். அந்த நிமிடம் கோபமும் ஆத்திரமும் பொங்கினாலும் அதனை எப்படி வெளிக்காட்ட என்று கூட தெரியவில்லை.
அப்போது தான் அவன் உணர்ந்தது. இத்தனை நாட்களும் பைரவியிடமிருந்து மனைவியாய் எந்தவித எதிர்வினையும் எந்த இடத்திலும் கூட தான் பார்த்திருக்கவில்லை என்பதை புத்தி எடுத்துரைக்க இடிந்து போனான்.
முகமே செத்திருந்தது. என்னென்னவோ தோன்றியது கீர்த்தனனின் மனதில். அவளுக்கு வேறு எதுவும் விருப்பம் இருந்திருக்குமோ? அதனால் தன்னை பிடிக்கவில்லையோ என்று கூட தோன்றியது.
மறுநாள் சுந்தரியை செண்பகம் வீட்டிற்கு அனுப்பியவன் தனியே பைரவியிடம் பேசினான்.
“உனக்கு வேற எதாச்சும் விருப்பம் இருந்ததா பைரவி?…” என்றான் அமைதியாய்
இந்த பிரச்சனையை சுமூகமாய் முடித்துவிட்டு, அவளின் மனதை அறிந்துகொள்ள நினைக்க,
“ஏன் யாரையாவது விரும்பி இருந்தா தான் இப்படி எல்லாம் இருப்பாங்களா? எனக்கு புரியலை…” என்றாள் அவனிடத்தில் பைரவி.
“நான் அமைதியா தான் பேசறேன். நீங்க தான் டென்ஷனா இருக்கீங்க…”
உண்மை, எத்தனை உண்மை. அவள் அப்போதும் அதே அமைதி. கோபமெல்லாம் கீர்த்தனனிடத்தில் தான்.
தலையில் அடித்துக்கொண்டான் அவன். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சமும் வெகுவாய் அவனை தாக்க இத்தனை நாட்களையே கடக்க முடியவில்லை.
அன்றைக்கு பின் பைரவியை அவன் நெருங்கவும் இல்லை. மனதின் வேறுபாடுகள் கீர்த்தணனின் உணர்வுகளை வற்ற செய்ய பார்வைகள் இப்போது கொஞ்சமும் உணர்வின்றி வெறுமையை சுமந்திருந்தது.
இதில் பைரவியிடம் எந்தவித பிரதிபலிப்பும் இல்லை. அவன் அணுகவில்லை என்பது ஒரு விஷயமே இல்லை என்பதை போல தான் சாதாரணமாக இருந்தாள்.
உண்ண, உறங்க என்பது மட்டுமே தலையாய கடமை போல. சுந்தரி கூட கேட்டுவிட்டார் தங்களுடன் வந்து அமருமாறு.
அறையே தஞ்சம். இல்லை என்றால் தாய்வீடு. அப்படி ஒரு வாழ்க்கையை அவன் வாழ்ந்து வர வெளியே யாருக்கும் தெரிந்துவிடாமல் காலவோட்டத்தின் வழியில் பயணிக்க ஆரம்பித்தான் கீர்த்தனன்.
மனதெல்லாம் வலி. பேசி புரிய வைக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. பைரவி அவனுக்கு புரியாத புதிராய் இருந்தாள்.
ஒரு பெண்ணை புரிந்துகொள்ளாமல் அவளை ஆட்படுத்தி இருக்கிறோம் என்பது ஒரு புறமிருக்க, உனக்கு தேவையா வா, இல்லையா இரு என்பதை போன்ற அவளின் பேச்சில் பெரிதாய் காயப்பட்டு இருந்தான் கீர்த்தனன்.
ஒருவிதத்தில் பெரிய அவமானமாய் உணர்ந்தான் தன்னை எண்ணியே.