“என் பொண்ணு ரொம்ப கட்டுப்பாடு சம்பந்தி. படக்குன்னு பேசாது. சுபாவமே அப்படி…” என்று அவர் சொல்லியதையே தான் சொல்ல அவருக்கு தலையாட்டினார் மனைவி.
ஆமாம் என்று பெண்ணும் பார்த்துக்கொண்டே தான் இருக்க இதென்னடா என்றானது சுந்தரிக்கு.
முதலில் திருமணத்தின் பொழுது வேறு ஒரு கோணத்தில் பார்த்திருக்க இப்போது மனதிற்கு சரியாய் படவில்லை.
பேசுவதற்கு கூடவா இத்தனை யோசிக்கவேண்டும் என்ற போது தான் பைரவியின் தாயை கவனித்தார்.
அவரும் கணவரின் பேச்சிற்கு ஆமாம் போடுவதோடு சரி. பெரிதாய் வேறு எந்த பேச்சும் இல்லை.
அதன் பின்னர் இதனை அவர்களிடத்தில் பேசுவதே வீண் என்று நினைத்து விட்டுவிட்டு மருமகளின் பக்கம் கவனத்தை செலுத்த சரியாக சாப்பிடாமல் கூட அவளிருப்பதை கண்டு தான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
எதிர்பாராத சந்தோஷமும், கூடவே அதிர்ச்சியும் தான் சுந்தரிக்கு. மகனுக்கு முதலில் அழைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
“ம்மா…” என்று ஆர்ப்பாட்ட குரலுடன் கீர்த்தனன் வர பைரவி கூடத்தில் இல்லை.
“இல்லப்பா, இப்ப மூணு மாசம். இந்த பொண்ணு எதுவுமே இதை பத்தி சொல்லலையா உன்கிட்ட?…” என்றார்.
கீர்த்தனன் முகத்தில் வந்துபோன பாவங்கள் அவருக்கு அதற்கு மேல் இதனை வளர்க்க வேண்டாம் என்று கூறியது.
“சரி சரி, இனிமே பார்த்துப்போம். ஒண்ணுமில்லை…” என்று சொல்லிவிட்டு அந்த பேச்சை அத்துடன் நிறுத்திவிட்டார்.
மருத்துவமனையில் டாக்டர் சுந்தரியிடம் அத்தனை ஆச்சர்யத்துடன் கேட்டார் இதனை.
“எப்படி சுந்தரி உங்களுக்கு தெரியாம இருந்தது? முதல் மாசமே தங்கியிருக்கு குழந்தை. மருமகக்கிட்ட எந்த மாற்றமும் கவனிக்கலையா? ஒண்ணா தானே இருக்கீங்க? இல்லை தனி குடித்தனமா?…”
இப்படி கேட்க கேட்க உள்ளுக்குள் மருகி போனார் அவர். பைரவியிடம் கேட்க நினைக்க அவள் முகத்தின் சோர்வு வாய் திறக்கவிடவில்லை.
அவளின் பெற்றோருக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அப்படியா என கேட்டுக்கொண்டவர்கள் மறுநாள் பார்க்க வந்தனர்.
கீர்த்தனனுமே வீட்டில் இருக்க வந்தவர்களிடம் பொதுவான பேச்சுக்கள் மட்டுமே தான்.
பெரிதாய் மகிழ்ந்து ஆர்ப்பாட்டம் என்பது எல்லாம் இல்லை. உடலை கவனித்துக்கொள் என்று சொல்லிவிட்டு சென்றனர்.
“முடியலைன்னா நான் வந்து கூட்டிட்டு போறேன் சம்பந்தி. பைரவி அப்பாட்ட கேட்டுட்டேன். சரின்னுட்டார்…” என்றார் அவளின் தாய்.
இதனை எப்படி எடுப்பதென்றும் தெரியவில்லை. சுந்தரி குழந்தை பிறக்கட்டும் முதலில் என்று நினைத்துக்கொண்டார்.
அதன் பின்னர் பைரவியிடம் கீர்த்தனனே பேச அவனின் பேச்சுகளுக்கு பதில் தர மட்டுமே செய்தாள்.
பேசினால் பதில், இல்லை என்றால் ஏன் என்ற கேள்வி கூட இல்லை அவளிடத்தில்.
“நான் மூணுநாளா உன்கிட்ட பேசலை. ஏன் எதுவுமே கேட்கலை நீ?…” என்று அவனே கேட்டுவிட,
“பேசனும்ன்னா நீங்க பேசுவீங்க தானே? தேவையில்லாம அம்மா அப்பாட்ட கேள்வி கூட கேட்கமாட்டாங்க…” என்றாள் அமைதியாக.
கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் சுபாவம் எங்கிருந்து ஆரம்பம் என்ற நூலின் நுனி கிடைத்தது கீர்த்தனனுக்கு.
“ஏன்? மனைவின்னா கேட்கனும் தானே?…” என்றவன்,
“உங்கம்மா ஏன் கேட்கமாட்டாங்க? ஆனா நீ கேளு. நான் பதில் சொல்லுவேன்….” என்றான் பொறுமையாக.
“என்ன கேட்கனும்?..” என்று திருப்பி படித்தவளிடம் மேலும் என்ன பேச?
ஆனால் பேசியவரை அவன் கணித்தது அவள் பார்த்து வளர்ந்த வாழ்வியல் முறை அதுவென்று.
தகப்பனின் கட்டுப்பாடு, அந்த கட்டுப்பாட்டில் தாய் பாந்தமாய் பொருந்திக்கொண்டு மகன், மகளையும் அதில் திளைத்திருக்க பார்த்தவை தான் குடும்பம் என்று மனதில் சிறு வயதிலிருந்தே விழுந்த விதை.
மனைவியானவள் எந்தவித எதிர்ப்பேச்சும் கேட்காமல் இருக்க அதனை சொல்லி சொல்லியே ஒவ்வொன்றிற்கும் மகளை தயார்ப்படுத்துவதை போல மனதில் பதிய வைத்திருக்க அதனால் இயல்பான உணர்வுகள் கூட அவளிடத்தில் இல்லாது போனது.
இதனை பெருமையாய் நினைக்கும் பெற்றோர். என் பிள்ளைகள் என் பேச்சின் படி என்று மார்தட்டிக்கொண்டனர்.
உயிருள்ள ஜடமாய் ஒரு வாழ்க்கை. அதற்கு பெயர் அமைதியான சுபாவம் என்று அவர்களாகவே வரித்துக்கொள்ள அது கீர்த்தனனின் வாழ்க்கையை சேர்த்தே பாதித்தது.
மனதில் உருவாகும் ஆசைகளுக்கும், வீட்டின் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் பைரவி மனதளவில் பாதிக்கப்பட்டு இயந்திரமாய் சொல்வதை செய்யும் பிள்ளையாய் வளர்ந்திருந்தாள்.
கணவனிடத்தில் இப்படித்தான் இருக்கவேண்டும், கணவன் வீட்டில் இப்படித்தான் வாழவேண்டும், திருமண வாழ்க்கை என்பது புகுந்தவீட்டின் சொல்பேச்சு கேட்டு நடப்பது ஒன்றே என்பதை போல பாடமெடுத்திருக்க கிளிப்பிள்ளை படித்துக்கொண்டது.
அதிகமாய் சிரிக்காமல், அவசியத்திற்கு பேசாமல் ஒரு வாழ்க்கை. அது இயல்பில்லை என்பது கூட அவளுக்கு புரியவில்லை.
‘என் வீட்டில் இப்படித்தான் இருப்பேன். என் வீட்டில் சொல்வதை கேட்டு நடப்பேன். அதுதானே இங்கேயும்.’ என்ற மனநிலை.
அதிலிருந்து மாறவும் முடியவில்லை. கீர்த்தனனுக்கும் புரியவில்லை. பிள்ளையை சுமப்பவளிடம் கனிவுடன் நெருங்கினால் கூட அவளின் பார்வை அவன் வருவதன் அர்த்தத்தை தவறாக புரிந்தது.
வெறுத்துவிட்டான். மீண்டும் கோபம் தலைக்கேற அவளின் உடல்நலனை தள்ளியிருந்தே கேட்டுக்கொண்டான்.
பிள்ளைபேறு என்று தாய் வீட்டிற்கு செல்வதும், பெரும்பாலான நாட்கள் அங்கேயே செலவிடுவதும் என்று பைரவியின் இருப்பு வீட்டில் இருக்கவில்லை.