அவளாக பேசுவாள் கேட்பாள் என்று பார்க்க இசையிடம் கொஞ்சமும் அசைவில்லை.
“இசை, என்ன சைலன்டாகிட்ட?…” என்று கீர்த்தனனே கேட்க,
“அவங்க பாவம்ல. நான் கூட ரொம்ப தப்பா நினைச்சிருக்கேன். யாரையும் மதிக்காம அவ்வளவு மண்டக்கனமா அப்படின்னு. ஆனா அவங்க என்ன பண்ணுவாங்க?…” என்றாள்.
“நிச்சயமா ரொம்ப கஷ்டபட்டிருப்பாங்க அவங்க. ஏன் எனக்கும் தான் எங்க வீட்டுல கட்டுப்பாடு வச்சாங்க. பேச கூடாது அப்படின்னு. ஆனா என்னால பேசாம இருக்க முடிஞ்சதா? அதுவே அப்படித்தான் பேசுவேன். என்ன தப்பா பேசிட்டேன்னு தோண வச்சது…”
“ஆனா அவங்க பேசவும் முடியாம, எப்படி இருக்கோம்னும் புரியாம ரொம்ப பாவம்…” என்று சொல்ல தலையசைத்தான் கீர்த்தனன்.
“எனக்குமே பக்குவமில்லை இசை. நான் கவனிச்சிருந்திருக்கனும். ஆனா எனக்கு கோபம். பைரவி பத்தி எதுவும் தெரியலை. கொஞ்சம் நான் கவனிச்சிருந்திருக்கலாம். ஆனா அப்படி எதுவும் யோசிக்காம போய்ட்டேன்…” வருத்தம் மிகுந்த குரலில் அவன் சொல்ல,
“என்ன செஞ்சிருப்பீங்க? என்ன மாத்தியிருக்க முடியும்? அவங்க படிச்ச இடத்துல பார்க்காத ஆட்களா? இல்லை வெளில யாரையும் பார்க்காத ஆட்களா? சொந்தங்களை கவனிக்கலையா? அதே ஊர்ல தானே வளர்ந்தாங்க…” என்றவள்,
“இதை வளர்த்தாங்கன்னு கூட சொல்ல முடியாது. இப்படியா அவங்க பெத்த பொண்ணோட உணர்வுகளை கூட அடக்கி வைப்பாங்க?…” என்றாள் ஆதங்கமாய்.
“என்ன சொல்ல? இந்த ஜெனரேஷன். அதுவும் ஒரு மெட்ரோ சிட்டில எப்படி தான் இப்படி வளர்க்க முடிஞ்சதோ?…” கீர்த்தனனும் குறைப்பட்டுக்கொள்ள,
“எந்த காலமா இருந்தா என்ன? என் பிள்ளை, இப்படித்தான் வளர்ப்பேன்னு பெத்தவங்க முடிவு பண்ணும் போது, அவங்க வாழ்க்கையை அவங்க தீர்மானிக்கும் போது பிள்ளைகளும் அதே மனநிலையோட இருந்தா இப்படித்தான் வளர்ப்பாங்க…”
“ஒன்னு பிள்ளைகளை கொஞ்சமாவது இறுக்கி பிடிக்காம அவங்க மனசில இருக்கறதை தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சிருக்கனும். இல்லையா இந்தக்காவாச்சும் படிக்கிற, பார்க்கிற இடத்துல இருக்கறதை யோசிச்சிருக்கனும்…”
“ஹ்ம்ம் என்ன கேட்டாலும் எங்க வீட்டுல இப்படித்தான்னு சொல்வா…” கீர்த்தனன் சொன்னான்.
“அவங்க மாறனும்னு நினைக்கலை. அவங்களுக்கு அப்படி ஒரு எண்ணமும் இருந்திருக்காது போல. இதுதான் இப்படித்தான்னு அவங்க அம்மாப்பா காமிக்கிறதை பார்த்து வளர்ந்தவங்க…” என்றவள்,
“அவங்க கொஞ்சம் கவனிச்சிருக்கலாம். மகளை நாமலே ஒரு இருட்டுக்குள்ள தள்ளிட்டிருக்கோம்ன்னு நினைக்காம தலையாட்டி பொம்மையா வளர்த்திருக்காங்க. என்ன ஜென்மங்களோ?…” என்று பல்லை கடித்தாள்.
கீர்த்தனன் அமைதியாக இருக்க இசைக்கு தாளமுடியவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையும் எதிர்காலமும் பாழானது மட்டுமன்றி இன்னொரு குடும்பத்தின் ஆணிவேரையே ஆட்டிவிட்டதே என்று.
பைரவி சரியாக இருந்திருந்தால் குடும்பம், குழந்தை, கணவன் என்று நல்லவிதமாய் வாழ்ந்திருப்பாள் என்று ஆற்றாமையாக வந்தது.
“இதுக்கு இந்த ஊர்க்காரனுங்க சொன்னாங்கன்னு உர்ருன்னு இருந்தீங்களாக்கும்?…” என்றவள் காலை மண்டபத்தில் நடந்தது, கீர்த்தனன் வீட்டில் பேசியது எல்லாம் மறந்துபோனது.
இப்போதும் கணவனும், பிறவியும் மட்டுமே கருத்தில் நிற்க அத்தனை அழுத்தம் மனதிற்குள்.
பைரவியின் மீது பெரிதாய் அபிப்ராயம் எதுவும் இருந்ததில்லை இசைக்கு. என்ன இவள் வீட்டில் கூட பேசுவதில்லை என்று பைரவியை தானும் கண்டுகொள்ளாமல் தான் இருப்பாள்.
வேண்டுமென்றே சுந்தரியோடு சேர்ந்து அத்தனை ஆட்டம் போடுவாள் பைரவியை வெறுப்பேற்ற என்று. இப்போது நினைக்கையில் வெட்கமாக இருந்தது.
“ஆமா, சண்டை அதனால கிளம்பி வர லேட்ன்னு அத்தை சொன்னாங்க…”
“ஹ்ம்ம், அதான். என்ன சண்டைன்னு தெரியாது தானே? எந்த அப்பாவும் மகனை கேட்க கூடாத வார்த்தையை பேசினா எனக்கு கோவம் வரும் தானே?…”
“மாமா தப்பா எதுவும் பேசியிருக்கமாட்டாங்க…” அப்போதும் இசை வக்காலத்து வாங்க கீர்த்தனனுக்கு கடுப்பாகியது.
“என் பக்கம் என்னன்னு யோசிக்கவே மாட்டியா நீ? நைட் தூக்கம் வராம வெளில கிளம்பினதுக்கு நானும் கூட வரேன்னு சொல்றாங்க. நான் இப்ப கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு என் வயசுக்கு பின்னால வழி மாறிட கூடாதுன்னு நினைக்காங்கலாம். என்ன அர்த்தம் இதுக்கு?…” என்றான் கொதிப்புடன்.
கப்பென்று வாயை மூடிக்கொண்டாள் இசை. சும்மாவே அத்தனை கோபப்படுபவன், நிச்சயம் அன்று ஆட்டமாய் ஆடியிருப்பான் என்பதில் நிச்சயம்.
அதனால் எதுவும் பேசவும் இல்லை. சரி தவறு என்றும் சொல்லவில்லை. அவளின் அமைதியை கண்டுகொண்டவன்,
“இப்ப பேசேன். இவ்வளவு நேரம் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணின தானே நீ? பேசு…” என்றான்.
“எனக்கு பசிக்குது கீழே போவோமா?…” என்றதும் தான் நேரத்தையே கவனித்தான்.
“பாப்பாவும் சாப்பிடாம இவ்வளவு தூங்கறா?…” என்று கீர்த்தனன் எழுப்ப போக,
“இல்லை அவ தூங்கட்டும். நைட் எல்லாம் ட்ராவல் பண்ணிட்டு வந்தது, காலையில ரெஸ்ட் இல்லாம மண்டபத்துக்கு போனதுன்னு அலுப்பா இருக்கும்…”
“ஓஹ், அப்ப ஒன்னு பண்ணு. நீ சாப்ட்டு வா. நான் பார்த்துக்கறேன்…” கீர்த்தனன் சொல்ல,
“இல்லை நானும் இருக்கேன்…” என்று அமர்ந்துகொண்டாள்.
சிறிது நேரம் இருவரிடத்திலும் பேச்சில்லை. நினைவுகளை அவன் அசைபோட அவன் பேசியதை யோசித்தபடி அவளும் இருந்தாள்.
மனதின் ஒருபுறம் இது எதுவும் தெரியாமலே இருந்திருக்கலாம் என்றும், தெரிந்ததன் தாக்கம் இத்தனை தன்னை பாதித்திருக்க வேண்டாம் என்றும் மாறி மாறி அவளை இழுத்துக்கொண்டு இருந்தது.
“அம்மா கால் பன்றாங்க இசை…” என கீர்த்தனன் சொல்ல,
“ஏன் என்கிட்டே கேட்டு தான் அட்டன் பண்ணனுமா?…” என்றவள் பேச்சில் இறுக்கம் தளர்ந்து சிரித்துவிட்டான்.
“சொல்லுங்கம்மா…” என அழைக்கவும்,
“மணியாச்சுப்பா. இன்னும் சாப்பிட வரலையே?…” என்றார் சுந்தரி.
இன்னும் கோபமாக இருக்கிறானோ என்று பயந்து பதறி கேட்டுக்கொண்டிருந்தார்.
“அப்பா சாப்பிட்டாங்க. மாத்திரை போடனுமே? நான் நீங்க வரட்டும்ன்னு…”
“உங்களுக்கு எத்தனை தடவை சொல்ல? சொன்னா கேட்கவே மாட்டீங்களா? உங்களுக்கு முடியாம போச்சுன்னா என்ன பண்ணுவீங்க?…” என்றான் கோபமாய்.
அவனின் அதட்டல் சத்தத்தில் தனுக்குட்டி திடுக்கிட்டு விழிக்கவும் இசை தூக்கிக்கொண்டாள்.
“சரி வைங்க. பாப்பா முழிச்சுட்டா. வரோம் நாங்க…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன்,
“ப்பா…” என்று சிணுங்கிய குழந்தையை தூக்கிக்கொண்டான்.
“என்னடா பட்டும்மா. அப்பா சத்தமா பேசிட்டேனா?…” என்று கேட்க முகத்தை புறங்கையால் தேய்த்தபடி தலையை அசைத்த குழந்தையை தட்டிக்கொடுத்தவன்,
“கீழே போய் மம்மம் சாப்பிடலாம்…” என பேசிக்கொண்டே அறையில் இருந்து வெளியேற இசை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“வா இசை. உனக்கு தனியா சொல்லுமா?…” என்றதும் தலையசைத்து எழுந்தவள்,
“எங்கப்பாட்ட என்னம்மோ சொன்னீங்களே? தனுவை என்னை மாதிரி வளர்க்கனும்னு. நிஜமாவா?…” என கேட்க மென்னகை புரிந்தவன்,
“ஹ்ம்ம், எனக்கு உன்னோட அதிகப்ரசங்கித்தனம் தான் பிடிக்காதே தவிர உன் அப்பா மேல நீ வச்சிருக்கற பாசமும், அவருக்காக நீ ஒன்னொன்னும் பார்க்கறதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லா அப்பாவும் எதிர்பார்க்கறது அதுதானே?…” என்றான்.
“என்னை மாதிரின்னா எல்லாமும் தான். அதுல அந்த அதிகப்ரசங்கித்தனமும் சேர்த்தி தான் டாக்டர். நிறைய பேசுவேன். கேட்பேன்…” என சொல்லியவள்,
“ஆனா கேள்விகளுக்கு பதில் சொல்லாம இருக்க கூடாது. பிள்ளைங்க அறிவானவங்க. குழந்தைங்களோட சில கேள்விகள் நமக்கு ஒன்னுமேயில்லாததா இருக்கும். ஆனா அவங்க வயசுக்கு அந்த யோசனை பெருசு தானே?…”
“வாவ் இசை…”
“நிஜமா தான். நிலா ஏம்ப்பா வட்டமா இருக்குன்னு குழந்தை கேட்டா அது அப்படித்தான்னு சொல்லி அதை வாயடைக்க வைக்கிறோம். அந்த கேள்வி கேட்கனும்னு குழந்தைக்கு தோணினதை யாருமே யோசிக்கிறதில்லை. இதென்னடா உயிரை வாங்குதுன்னு தான் அலுப்பாகிடுது நிறைய பேரன்ட்ஸ்க்கு…”