“சரிப்பா, நான் காலையில் கூப்பிடறேன்…” என்று சொல்லி வைத்துவிட்டார்.
முகத்தில் அப்படி ஒரு ஜொலிப்பு. ராக்குவும் அவருடன் பேசிக்கொண்டிருக்க சுந்தரியின் மகிழ்ச்சியில் மகளும், மருமகனும் ஊர் சென்று சேர்ந்துவிட்டனரா என்று கேட்டுக்கொண்டார்.
தாயிடம் பேசி முடித்து போனை வைத்தவன் பாலை பார்த்தான். பொங்கி வரவும் அடுப்பை அணைக்க போக இசை வந்துவிட்டாள்.
“நான் வரேன், இருங்க…” என்று சொல்லி அருகே வரவும் அவளை நெருங்கி பின்னிருந்து அணைத்துக்கொண்டான் கீர்த்தனன்.
திடுதிப்பென்ற இந்த அணைப்பும், நெருக்கமும் இசையை தடுமாற செய்ய முன்னால் சாய்ந்து பின் அவனின் நெஞ்சோடு பின்னால் ஒட்டி நின்றாள்.
“நாளைக்கு வேற பேர் ரெடி பண்ணு இசை. நிறைய பேர் வச்சுட்ட. புருஷனா எனக்கு என்ன பேர்ன்னு கேட்கனும்…” என்று கண்சிமிட்ட,
“இப்பவே சொல்லவா?…” என சிரித்தாள்.
“இப்போ வெட்கமாவே இல்லையா இசை? என்ன பண்ணிட்டிருக்கேன். எப்படி நிக்கிற. ஆனாலும் வாய் குறையலை…” என இன்னும் நெருக்கத்தை கூட்டியவன் அவளின் அதரங்களை அணைக்க நெருங்க,
“ப்பா…” என்ற சத்தம் கிட்சன் வரை கேட்டது.
“அச்சோ பாப்பா முழிச்சிட்டா…” என இருவரும் பதற கீர்த்தனனின் கைகள் மெல்ல தளரவும் அவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அவனுக்கு முன்பே ஓடினாள் இசை.
அதில் புன்னகையுடன் கீர்த்தனன் இசை ஊற்றி வைத்திருந்த ஒரு பால் தம்ளரை மட்டும் எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு அறைக்குள் வந்தான்.
படுக்கையில் மகள் எழுந்து அமர்ந்திருக்க அவளின் தலையை கோதியபடி பேசிக்கொண்டிருந்தாள் இசை.
“நல்லா முழிச்சிட்டா போல?…” அவன் அமர்ந்து சொல்ல,
“ஹ்ம்ம், நாள் முழுக்க தூங்கிட்டே இருந்தா. அதான் நைட் என்ன தூக்கம் வரும்? கொஞ்ச நேரம் விளையாடட்டும்…” என்று இசை அவளுடன் பொம்மைகளை எடுத்து வைத்துக்கொண்டு விளையாடினாள்.
வார்த்தைக்கு வார்த்தை அம்மா பாரு, அம்மா சொல்றேன், அம்மா பேசு, அம்மா சொல்லு, அம்மா எங்க என இப்படி தனுவை அம்மா என்னும் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கேட்க வைத்து தன்னை உணர்த்தினாள் பிள்ளைக்கு.
“இசை அவளுக்கு தெரியுது. சொல்லத்தான் இன்னும் வரலை…” என்றான் கீர்த்தனன்.
“புரியுது, ஆனாலும்…” என்றவள்,
“எல்லாம் உங்களால. எல்லா வார்த்தைகளும் பிள்ளைகளுக்கு தெரியனும் தானே? என்னவோ கடைசி வரை சாமியாரா இருக்க போற மாதிரி அப்பா மட்டும் போதும்ன்னு சொல்லிக்குடுத்து…” என்று அவன் மீது ஒரு பொம்மையை தூக்கி எரிய சிரித்தபடி கேட்ச் பிடித்தான்.
“அன்னைக்கு உங்கப்பா என்னை கோழி அமுக்கற மாதிரி அமுக்கலைன்னா நான் இப்பவும் என் பொண்ணுக்கு அப்பா மட்டும் தான்…” என்று கிண்டலாய் சொல்ல,
“ம்க்கும், ஒரு எக்ஸாம்பிள்க்கு கூட கோழி, ஆடு மாடுன்னுட்டு. டாக்டர்ர்ர்ரர்…” என இசையும் கேலி பேச இருவரும் பொம்மைகளை தூக்கி வீசி விளையாட நேரம் சென்றது.
சிறிது நேரத்தில் தனு உறங்கிவிட கீர்த்தணனும், இசையுமே அயர்ந்துவிட்டனர் பயணத்தின் அலுப்பில்.
நள்ளிரவில் எழுந்தவள் பாத்ரூம் சென்றுவிட்டு வர கீர்த்தனன் அருகே இருந்த மேஜையை பார்த்தாள். அவன் கொண்டு வந்த பால் குடிக்கப்படாமல் அப்படியே இருந்தது.
திரும்பி படுத்தால் கை பட்டு கொட்டிவிடுமோ என எடுத்தவள் கதவை திறந்துகொண்டு வெளியே செல்ல மூக்கில் என்னவோ கருகும் வாசனை நுழைந்தது.
விளக்கு போடப்படாமல் இருக்க கூடத்தில் லைட்டை போட மெல்லிய புகைமண்டலம்.
பதட்டத்துடன் அடுப்படி கதவை திறந்து சென்று பார்க்க அறை முழுவதும் சூழ்ந்திருந்தது புகை.
கையிலிருந்த தம்ளர் நழுவிவிட்டது பயத்தில். உடனே ஜன்னல்களை திறந்துவிட்டவள் அடுப்பை பார்க்க அடுப்பு சிம்மில் எரிந்துகொண்டிருந்தது.