“மறந்துட்டேன் போல?…” என்று அவள் நடுக்கத்துடன் சொன்னாள்.
எத்தனை அஜாக்கிரதையாக இருந்துவிட்டோம் என்று. கீர்த்தனனுக்கு தன் மீது தன் வருத்தம்.
அடுப்பில் வேலையில் இருக்கையில் இப்படி அவளின் கவனத்தை சிதறடித்துவிட்டதை எண்ணி.
இருவருக்குமே சற்று நேரமெடுத்தது அதிலிருந்து வெளிவர. பால் கொதித்து வற்றி இருந்ததால் போனது. இதுவே பொங்கி ஊற்றி அடுப்பு அணைந்து கேஸ் பரவியிருந்தால்?
நினைக்கையில் இசையின் உடல் தூக்கி போட்டது. அதனை கீர்த்தனனும் உணர்ந்தான்.
“ஹேய் அதான் ஒன்னுமில்லையே? வா…” என ஹாலுக்கு அழைத்துவந்து தண்ணீர் எடுத்து தந்தான்.
“எப்படி மறந்தேன்னே தெரியலை?…” மீண்டும் ஆரம்பிக்க,
“ப்ச், அதைவிடு. ரிலாக்ஸ் இசை…” என்றவன் சிறிது நேரம் தன் மீதே இசையை சாய்த்திருக்க அவளே நகர்ந்தாள்.
“பாப்பா தனியா தூங்கறா…” என எழுந்துகொள்ள,
“ப்ச், இரு கொஞ்ச நேரம். அவ தான் நல்லா தூங்கறா தானே? இரு…” என்று அவள் கையை பிடித்தான்.
“விளையாடாதீங்க. எழுந்துட்டா திரும்ப தூங்கமாட்டா. பக்கத்தில தலையணை கூட வைக்கலை…” என்று அறைக்குள் செல்ல பெருமூச்சுடன் கீர்த்தனனும் பின்னே சென்றான்.
இசை குழந்தையின் அருகே படுத்திருக்க அவளை பார்த்துக்கொண்டே கதவை அடைத்துவிட்டு கப்போர்டுக்குள் இருந்து ஒரு மெத்தையை எடுத்தான்.
என்ன செய்கிறான் என இசை பார்த்துக்கொண்டிருக்க அதனை கட்டிலின் மறுபக்கம் விரித்தவன் தலையணைகளை எடுத்துபோட்டு தயார் செய்ய அவள் விழிகள் விரிந்தது.
கீர்த்தனன் பாரவியின் அர்த்தத்தில் படக்கென்று கண்ணை மூடிக்கொண்டாள் இசை.
அவளை சிரிப்புடன் பார்த்தவன் குழந்தையை சுற்றிலும் தலையணைகளை அடுக்கிவிட்டு இசையை கையில் எந்திக்கொண்டான்.
“அச்சோ என்ன இது?…” என்றவளின் மெல்லிய குரலில் சுமந்திருந்த நாணம் அவனை இன்னும் அவள் மேல் சாய்த்தது.
“பார்ரா என்னவோ வெட்கமே இல்லைன்னு சொன்ன பொண்ணை காணும்?…” என அவளின் இடையில் சில்மிஷம் செய்ய,
“டாக்டர்…” என்று முணுமுணுத்து நெளிந்தாள் கூச்சத்தில்.
“இப்படி சொல்லமாட்டியே இசை? எப்பவும் சவடால சொல்ற மாதிரி பேசேன்…” என சொல்லி சொல்லி அவளின் பேச்சின் சத்தத்தை இன்னும் குறைத்தான்.
“இசை, இசை…” கண்மூடி கிடந்தவளின் முகத்தை பற்றி தன்னை பார்க்க செய்தவனின் பார்வையில் அவன் கழுத்தை வளைத்துக்கொண்டாள்.
“மத்த நேரங்கள்ல பேசறதே இல்லை. எண்ணி எண்ணி வார்த்தை வரும். இப்ப பாரு எவ்வளவு பேச்சு?…” என்று முணுமுணுப்பாய் இசை சொல்ல,
“இப்ப தான் பேசனும் இசை. உனக்கு ஓகே வான்னு கேட்கனும். உனக்கு பிடிக்குதான்னு தெரியனும். உன்னோட உணர்வுகள் நான் படிக்கனும். என்னை நிறைய உனக்கு தெரியப்படுத்தனும். இப்படி நிறைய இருக்குடாம்மா…” என்றான் வெகுவாய் உணர்ச்சிவயப்பட்ட குரலில்.
“சொல்லுங்க, பாருங்க, கேளுங்க. என்ன செய்யனும்? என்ன பேசனும்?…” என்றாள் உடனே அவனின் எதிர்பார்ப்புகளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவளாக.
“இசை…” என்றவனின் விழிகளில் லேசாய் நீர்படலம் போல பளபளக்க,
“யோவ் அழுவாங்களா யாராச்சும் இந்நேரம்? போயா, நான் பாப்பா கூட மேல படுத்துக்கறேன்…” என்று அவனை கீழே தள்ளினாள்.
“சரி…” என்று தன் மீது போட்டுக்கொண்டான்.
“ஆளை பாரு, வெளில தான் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. இங்க அதுவும் இப்போ. ம்ஹூம் ஒருத்தரையும் நம்ப கூடாது…” என கிண்டலாய் இசை சொல்ல,
மெல்லிய விளக்கொளியில் கலைந்த ஓவியமாய் விழிமூடி இருந்தவளை வாகாய் படுக்க வைத்துவிட்டு எழுந்தான்.
கட்டிலில் மகள் ஒரு சாய்த்து உறங்கிக்கொண்டிருக்க நேரத்தை பார்த்தான். மகளுக்கு பாட்டிலில் பாலை ஊற்றி வந்து குடிக்க தந்தவன் தலையை வருடியபடி அமர்ந்திருந்தான்.
மீண்டும் வந்து இசையின் அருகே படுக்க நன்றாக உறங்கியிருந்தாள் அவள். அவளின் முகத்தை பார்த்தபடி இருந்தவன் முகத்தில் குறையாத நிறைவு.
உறக்கமும், களைப்பும் அவனை சுற்றிவளைக்க வாழ்க்கை முழுமை பெற்றதை போல மகிழ்ச்சியும் அவனுக்கான இளைப்பாறலை தந்திருந்தது.
மறுபக்கம் திரும்பி படுத்திருந்தவளை வம்பாய் திருப்பி தன் கைகளுக்குள் அணைத்தபடி உறங்க ஆரம்பித்தான்.
புதிதாய் ஒரு பிடிவாதம் என்னோடு இப்படியே இரு என்பதை போல இசையை கைகளுக்குள் சேர்த்துக்கொண்டான்.
காலை இசைக்கு முன்பே எழுந்துவிட்டவன் வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்க தாயிடம் இருந்து போன்.
“சொல்லுங்கம்மா, என்ன இந்நேரம் கால் பண்ணியிருக்கீங்க?…” என்றான் காபியை குடித்துக்கொண்டே.
“ஹ்ம்ம், அப்ப ஏன் எங்களுக்கு ஆடின்னு சொன்னீங்க? ஆடி கொண்டாடற வயசா எங்களுக்கு?…” என்றான் அவரை போலவே கிண்டலாக.
“ம்ஹூம், ரொம்ப வாய் கூடி போச்சு உனக்கு. கிளினிக் கிளம்பலையா நீ?…” என்றார் அடுத்ததாக.
“போர்ட் வைக்க சொல்லிருக்கேன். ரெண்டு நாள் வீட்டுல தான் கிளினிக்…” என்று அலட்டிக்கொள்ளாமல் சொல்ல,
“என்னது?…” என்று சுந்தரிக்கு அடுத்த ஷாக்.
“என்ன ஷாக்? ஒரே அலைச்சல். அங்கயும் இங்கயும் ட்ரைவ் பண்ணிட்டு வந்து டயர்ட். பீவர் வர மாதிரி வேற இருக்கு. இதோட கிளினிக்ல போய் உட்கார முடியுமா? அவசரம்ன்னா வீட்டுக்கு வருவாங்க…”
வாய் கூசாமல் அவன் சொல்ல சுந்தரிக்கு சிரிப்பு ஒருபுறமும், மகிழ்ச்சி ஒருபுறமும் தாக்க கொண்டாட்டமானது.
“அப்பாவை வேணும்னா அனுப்பட்டா கீர்த்தி. உனக்கு ஒத்தாசைக்கு?…” என வேண்டுமென்றே கேட்க,
“சரி போனை வைங்க…” என்றவன் அதற்கும் சுந்தரி சரிப்பா என சொல்லும் முன் தானே அணைத்திருந்தான்.
“என்ன சுந்தரி வாயடைச்சு போன மாதிரி நிக்கிற?..” என்று மாணிக்கம் வர,
“உங்க மகன் இவ்வளவு சமத்துன்னு எனக்கு தெரியாம போச்சு…” என்றார் வாயில் கைவைத்து சிரிப்புடன்.
கீர்த்தனன் பேசியதை சொல்ல சொல்ல மாணிக்கத்தின் முகமும் மலர்ந்துவிட்டது.
“ஆனாலும் உன் மகனை நம்ப முடியாது. பொறுமையா இருந்து தான் பார்க்கனும்…” என்று சொல்லி செல்ல,
“ம்க்கும், அப்பாவும் புள்ளையும் சரியான ட்யூப்லைட். உடனே எல்லாம் எரியாது. இவ்வளவு சொல்றேன் நம்பாம போறார் பாரு…” என தலையிலடித்துக்கொண்டார் சுந்தரி.
தாயிடம் பேசி முடித்து கிளினிக்கிற்கு போன் செய்து மெடிக்கல் ஷாப்பை ஓபன் செய்ய சொல்லிவிட்டு உதவிக்கு இருக்கும் பையனை வீட்டிற்கு வரும்படி சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே வந்தான்.
அறையில் நுழைய இசை இன்னும் உறக்கத்தில் இருக்க தனுக்குட்டி நகர்ந்து கட்டிலின் ஓரத்தில் வந்துவிட்டிருந்தாள்.
“டேய் பாப்பா…” என்று மகளை தூக்கிக்கொண்டான்.
அவனின் பதட்டத்தில் இசை பதறி விழித்துக்கொள்ள இருவரையும் பார்த்து கெக்கைபோட்டு சிரித்தது பிள்ளை.
கீர்த்தனனின் கையில் இருந்து குழந்தை இறங்க முயல மெத்தையில் இறக்கிவிட்டான்.
“ப்பா…” என இசையின் மேல் தொப்பென்று விழுந்து விளையாட ஆரம்பித்ததில் இசையின் உறக்கம் முற்றிலும் கலைந்தது.
“செல்லக்குட்டி அம்மாவை தேடினீங்களா பட்டு?…” என மகளை அணைத்துக்கொண்டவளை கழுத்தோடு கட்டிய குழந்தை கீர்த்தனனையும் இன்னொரு கையால் இழுத்துக்கொண்டது.
இருவரின் முகத்தோடும் கொஞ்சி விளையாடி விழுந்து உருண்டு என மூவரும் சிரிக்க அந்த காலை நேரம் புன்னகையின் ஆலாபனையில் ஏகாந்தமானது.