மாணிக்கம் மறுபக்கம் பேத்தியுடன் இறங்க குழந்தையை பார்த்ததுமே வந்து தூக்கிகொண்டாள் அரசி.
“எங்க டாக்டர் வரலையா?…” என அரசி கேட்கவும் தான் சுந்தரிக்கு சுயவுணர்வு வந்தது.
“இல்லம்மா, அவனுக்கு வேலை இருக்கு…”
“சரி உள்ள வாங்க. அம்மா நேத்தே வீட்டை சுத்தம் பண்ணி வச்சுட்டாங்க. நானும் இசக்கியும் தான் பண்ணினோம்…” என்றாள் அரசி.
“சரிம்மா…” என சோர்வுடன் சொல்ல,
“வாங்க மதினி…” ராக்குவும் வந்துவிட்டார்.
திருமண வீடு. பெண்ணின் தாய். மகளுக்கு திருமணம். ஆனால் அந்த சுரத்து துளியும் இல்லை அவரிடம்.
“ரெண்டுநாளைக்கு முன்னாடியே வரேன்னு சொன்னீங்க?…” என கேட்கவும் அக்கம்பக்கத்தில் இருந்து எல்லாம் வெளியில் வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
“என்ன சுந்தரி இதுதான் கல்யாணத்துக்கு வார நேரமா? நீ முன்னாடியே இருந்து பண்ணுவன்னு நினச்சேன்…” என பக்கத்துவீட்டு கிழவி எகத்தாளம் பேச,
“அதான் வந்துட்டேன்ல அத்தை…” என்று முறை சொல்லி சுந்தரி கூறினார்.
“ம்க்கும், நீ வராம இருக்கவும் மகன் பொண்ணை வேண்டாம்ன்னதும் என்ன ஆக இருக்குன்னு கழிச்சு கட்டிட்டியோன்னு நினச்சேன். கல்யாணத்தனைக்கு தான் வருவேன்னு நினச்சேன்…” என்றார் நக்கலாக.
“என்னை உறவுன்னு சொல்லிக்கிட்டு கழுத்த பிடிக்கிற ஆளுன்னு நினைச்சீங்களோ? இசக்கி இன்னொரு வீட்டுக்கு போனாலும் எனக்கு மருமக தான். உங்க நினைப்பை எல்லாம் வேற எங்கியாச்சும் வச்சுகிட்டா நல்லது…” என வெடுக்கென்று சொல்லிவிட்டு நடந்துவிட்டார்.
“இவங்களுக்கு வேற வேலையே இல்லை…” என அரசி முறைத்துவிட்டு சுந்தரியுடன் நடந்தாள்.
வீட்டின் கதவு திறந்திருக்க வெளியே சின்ன மாடம் போன்ற அமைப்பில் விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது.
இவர்கள் வரும்பொழுதே வீட்டிற்குள் விளக்குகள் எரிந்துகொண்டு இருக்க சாம்பராணி மணம் கமழ்ந்தது.
“வீடெல்லாம் சுத்தம் பண்ணவும் விளக்கேத்திட்டேன் அத்தை. நீங்க எப்ப வந்து விளக்கேத்த?…” என அரசி சொல்லிக்கொண்டிருக்க அவளின் தோளில் குழந்தை பிராத்தனா.
“காபி கொண்டுவர சொல்லி இசக்கிட்ட சொல்லிருக்கேன். உக்காருங்க மதினி….” என்றதும் ராக்குவின் கையை பிடித்துக்கொண்டு அமர்ந்தார் சுந்தரி.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை ராக்கு. மனசு கஷ்டப்படறதா? இல்லை…”
“என்ன கார் செட்டுக்கு போயிருச்சு போல?…” என்றார் வாசலருகே நின்று.
எதிரே இருந்த காலி இடத்தில் சிறு செட் போன்று போடப்பட்டு வேலியால் சுற்றிவளைத்து கேட் போட்டு கார் நிறுத்த ஏதுவாய் அவர்கள் இடம் இருந்தது. இப்போது கார் அங்கே இருக்கவும் ராக்கு கேட்க,
“கீர்த்தி தான் கார் இங்க இருக்கட்டும்ன்னு சொன்னான். ட்ரைவர் ஒருத்தர் தெரிஞ்சவரை அனுப்பியிருக்கான். கல்யாணத்துக்கு அவசரத்துக்கு எங்கையும் போகனும்னா யூஸ் பண்ணிக்கவாம். சொல்ல சொன்னான் ராக்கு…”
சுந்தரி சொல்லவும் ராக்கு ஒன்றும் சொல்லவில்லை. தலையசைத்துவிட்டு வெளியேறிவிட்டார்.
“மாமா எங்கத்தை?…” இசக்கி கேட்க,
“உள்ளே இருக்காருடா. குளிப்பாரு போல?…”
“சரி சரி. இந்த காபி சூடாறக்குள்ள குடிங்க. மாமாவுக்கு வரவும் சூடுபண்ணி குடுப்போம்…” என்று தம்ளர் எடுத்துக்கொண்டுவந்து தனக்கும் ஊற்றிக்கொண்டாள்.
“ரொம்ப நாள் ஆச்சுல? இவ என்னை தேடினாளா த்தை?…” என்றாள் மடியில் கண்கள் சொருக படுத்திருந்த தனுவை பார்த்து.
“அதெப்படி தேடாம இருப்பா? உன் பேர் சொன்னாலே சிரிச்சுட்டு வீட்டுக்குள்ளயே தவந்துட்டு இருப்பா…” என்றவர் அவள் கையை கவனித்தார்.
“என்னடி இவ்வளவு அடி? உங்கம்மா மனுஷியா என்ன?…” என்றார் பார்த்ததும் விழிகள் கலங்க.
“அதுக்கு வேற என்ன தெரியும் த்தை? ஊர் வாயை மூட முடியலை. ஆத்தமாட்டாம என்னை சாத்துது. அப்படியாச்சும் மனசு ஆறட்டும்…”
“என்ன புள்ள நீ? உனக்கு வருத்தமில்லையா இசக்கி?…”
“வருத்தப்பட்டு? என்னத்த வருத்தப்பட? எங்கம்மாவுக்கு மட்டும் ஆசையா த்தை என்னை இப்படி அடிக்கனும்னு? முன்னாடியும் அடிக்கும் தான். ஆனா இவ்வளவு இல்லை…”
“அட எதுக்கு இந்த கொந்தளிப்பு? இத்தனை அடி அடிச்சிருக்கே? எங்கம்மா என்னை அடிக்கிறப்ப எவ்வளவு துடிச்சிருக்கும்?…”
“அடிச்சுட்டு வருத்தப்படுவாளா?…”
“வருத்தம் தான் த்தை. இப்படி பேசறவளுங்க மேல இருக்கற கோவம். அங்க காமிக்க முடியலை. என்கிட்டே காமிக்குது…”
“தப்பு இசக்கி, உன் மேல நம்பிக்கை…”
“என்னது? எங்கம்மாவுக்கு என் மேல நம்பிக்கை இல்லாமையா? அதுக்கு வாய்ப்பே இல்லை. என்னை நல்லா தெரியும் எங்கம்மாவுக்கு. நம்பிக்கை இல்லாம எங்கம்மா ஒத்த பார்வை பார்க்காது. எங்கப்பாவும் தான்…”
அத்தனை நம்பிக்கையாக சொல்லியவள் பேச்சும், அவளின் பார்வையும் சுந்தரியை பிரமிக்க செய்தது.
உண்மை தானே. அன்று ராக்குவும் என் மகள் தவறு செய்துவிட்டாள் என்று எவ்விடத்திலும் கூறவில்லையே.
சுந்தரியின் வேண்டுதல் மீண்டும் ஆரம்பித்தது. இதற்காகவேண்டும் இந்த திருமணம் வேண்டாம் என்று.
சங்கடத்துடன் சுந்தரி பார்க்க அவரின் கையை பிடித்துக்கொண்டாள் இசக்கி ஆறுதலாக, அரவணைப்பாக.
“எதுக்கு த்தை முகத்தை தொங்க போடறீங்க? டாக்டர் ஏன் வேண்டாம்ன்னு சொன்னாருன்னு தெரியாதா என்ன?…”
“ஆனாலும் இசக்கி…”
“விடுங்கத்தை. சும்மா சும்மா ஒரு மனுஷனை போட்டு குத்திட்டே இருக்க கூடாது. அந்தக்கா இறந்த வீட்டில எம்புட்டு பேச்சு பேசினாங்க இங்க. எல்லாம் பார்த்த மனுஷன் தானே?…” என்றவள்,
“உங்க மகனுக்கு இருக்கற வீம்புக்கே வேண்டாம்ன்னு சொல்றவரு. இதெல்லாம் ஒரு விஷயமா?…” என்றாள்.