பெருமாளுக்கு அழுகையே வந்துவிட்டது. திருமணத்தில் சிவத்திற்கு விருப்பமில்லை என தெரியும்.
தன்னுடைய வார்த்தைக்காக மட்டுமே அவன் சம்மதித்தான் என்றும் தெரியும். ஆனால் இப்படி செய்துவைப்பான் என்று அறியாமல் போனார்.
‘அந்த புள்ள முகத்த வேற எப்படி பார்க்க முடியும் என்னால?’ என சிவத்தின் அண்ணனிடம் சிவம் சொல்லி புலம்பியதை முதல் நாள் கேட்டிருந்தார்.
சிவத்தின் முகமே ரத்தமின்று செத்ததை போலிருந்தது. ஆனாலும் பெருமாள் கல்லாய் மனதை இறுக்கிக்கொண்டவர் இப்போது துவண்டு அமர்ந்தார்.
சிவத்தை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க தூக்கிக்கொண்டு ஓடினார்கள் சிவத்தின் அண்ணனும், சொந்தங்களும்.
உடன் செல்ல முடியாமல் ராக்குவும், பெருமாளும் பித்து பிடித்ததை போலிருக்க மண்டபத்தில் வேறு காரசார பேச்சுக்கள்.
இனி எப்படி திருமணம் நடக்கும்? திருமணம் நடக்குமா இல்லையா என்றே தெரியாமல் விழித்திருந்தனர்.
யாருக்கு வந்த விருந்தோ என முதல்நாள் கையில் வைத்திருந்த மருதாணியை பார்த்தபடி இருந்தாள் இசை.
நாட்கள் நெருங்க நெருங்க தான் எத்தனை பெரிய முட்டாள்தனம் தான் இதற்கு சம்மதித்தது என்று உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது.
தகப்பனை போன்றவனுடனான இந்த பேச்சே அருவருக்க செய்திருக்க பெற்றவருக்காக என்று நினைத்து நினைத்து மனதை ஆற்றியவளால் அதற்கு மேலும் முடியவில்லை.
இந்த ஜென்மத்தில் கல்யாணம் என்ற ஓன்று இல்லை என்றாலும் பரவாயில்லை. யாருக்கு வேண்டும் அந்த வாழ்க்கை? என்ற முடிவிற்கு வந்தவளுக்கான வழியை சிவமே ஏற்படுத்தி தந்திருக்க பிடித்துக்கொண்டாள்.
அக்காவின் கணவன் வாங்கி ஒளித்து வைத்திருந்த பாட்டிலையும் தூக்கி கொண்டுவந்து கொடுத்துவிட்டு நின்றுகொண்டாள் சிவத்தோடு பேசியபடியே.
“நீ நல்லாருப்ப மாமா. இந்த கல்யாணம் நடக்காது. அவ்வளவு தான். கவலையே படாத…” என பேசி பேசி அவன் குடிப்பதை பார்த்தபடி இருந்தாள்.
ஏற்கனவே மிதமாக போதையில் இருந்தவனின் புலம்பல்கள் வேறு இசையின் முடிவை இன்னும் ஸ்திரப்படுத்தியது.
“உன் முகத்தையே பார்க்க முடியலை தாயி, நெஞ்சை அறுக்குது….” என்று சிவம் அழுது கரைய கண்ணீர் மல்க பார்த்தாள் அவனை.
விடியும் வரை அவ்வப்போது யாரும் அறியாமல் பார்த்துவிட்டு வந்தவள் சிவத்தை இழுத்து சென்று இன்னும் உள்ளே வாழைமரத்திற்கு இடையே போட்டுவிட்டு வந்துவிட்டாள்.
இப்போது நினைத்தாலும் மனது அடித்துகொண்டது. எவ்வளவு துணிச்சலாக செய்துவிட்டாலும் தந்தை என்ன நிலையில் இருப்பாரோ என கலக்கமாக இருந்தது.
இதோ இன்னும் சிறிது நேரத்தில் வீடு போய் சேர போகிறோம். எல்லாம் முடிந்தது என்று மருதாணி விரல்களை கோர்த்து பிரித்தபடி அமர்ந்திருந்தாள்.
அரசி தங்கையை பார்ப்பதும், வெளியே இருப்பவர்களை சமாளிப்பதுகாக இருந்தாள்.
யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ‘அவளை தனியா விடுங்க’ என சொல்லி அரசி அதட்டி இருந்தாள்.
இப்போது வெளியே வாசலில் சலசலப்பு அதிகமாக என்னவென்று பார்த்தார்கள் அனைவருமே.
“கல்யாணம் நடக்கும், எல்லாரும் உக்காருங்க…” என முத்தைய்யா சித்தப்பா முகமெல்லாம் புன்னகையுடன் சொல்ல அவரின் சத்தம் மண்டபத்தை அமைதியாக்க சத்தம் இசையை எட்டியது.
“என்ன? நடக்குமா?…” அரண்டுவிட்டாள் இசை.
‘சிவத்தை எழுப்பி அழைத்து வந்துவிட்டார்களா?’ விழிகள் அலைபாய தொண்டைக்குழி ஏறி இறங்கியது பயத்தில்.
“அக்கா…” அரசியை அழைக்க,
“இரு இசக்கி, வந்திடறேன்…” என்று அறையை சாற்றிவிட்டு அவள் செல்ல எழுந்துவிட்டாள் இசை.
ஒருநிலையில் நிற்கவும், அமரவும் முடியவில்லை. கதவை திறந்து பார்க்கவே பயந்து வந்தது.
உள்ளே வேறுவழி இருந்தால் கூட தப்பி சென்றுவிடலாம் என்ற அளவிற்கு யோசனைகள் ஓடியது.
“எந்திச்சவன் எங்கையாவது போயிருக்கவேண்டியது தானே மாமா?…” என கேட்டுக்கொண்டிருக்க கதவு திறந்துகொண்டது.
முதலில் பெருமாளும், ராக்குவும் சந்தோஷமாக நுழைய தந்தையின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும், கண்ணின் ஒளிர்வும் அவளை அசைத்தது.
“அப்பா…”
“தாயி அப்பா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…”
“ஹ்ம்ம் ப்பா…” என்றாள் பதட்டம் தணியாமல்.
அவரின் இவ்வளவு மகிழ்ச்சியான முகம் எத்தனை நாட்களாகிற்று இப்படி பார்க்க.
“முகூர்த்தத்துக்கு நேரமாச்சு…” என ராக்கு சொல்ல தந்தையின் சந்தோஷத்தை விட தாயின் மகிழ்ந்த முகம் யோசனையை தந்தது.
தனது தம்பியாக இருந்தாலும் சிவத்தை மணப்பதில் உடன்பாடே இல்லை ராக்குவிற்கு.
ஆனால் இப்போது இவ்வளவு அதிகப்படி சந்தோஷம் எதற்கு என்று புரியாமல் பார்க்க இப்போது சுந்தரி, மாணிக்கம், பின்னால் கீர்த்தனனும் வந்தனர்.
“எல்லாம் நல்லதுக்குத்தான். நான் கும்பிட்ட சாமி என்னை கை விடலை…” என்றார் சுந்தரி வேகமாய் இசக்கியை கட்டிக்கொண்டு.
“அத்தை என்னாச்சு? மாமா மாமா வந்தாச்சா?…” என மெதுவாய் கேட்டாலும் கீர்த்தனனுக்கும் சரியாய் கேட்க அவளை முறைக்கவும் முடியாமல் எங்கும் போகவும் முடியாமல் நின்றான்.
“சிவத்தை ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கு. இன்னும் போதை தெளியலை. மயக்கத்துல தான் இருக்கான்…” என சுந்தரி சொல்லிக்கொண்டிருக்க,
“சரி பேசி கூட்டிட்டு வாங்க…” என பெருமாள் ராக்குவிடம் சொல்லிவிட்டு,
“இன்னைக்கு தான் என் கட்டை நிம்மதியா உறங்கும் தாயி…” என மகளின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் போல சொல்லிவிட்டு சென்றார்.
“அப்பா…”
“நேரமாகுதும்மா, கல்யாணம் நடக்கனும்ல. அப்பா போய் வெளில இருக்கேன்…” என்று சென்றதும் குழப்பமாக இசை நிற்க,
“டாக்டர் தம்பிக்கும் உனக்கும் தான் கல்யாணம்ன்னு அப்பா முடிவு பண்ணிட்டார்….” ராக்கு மிதமிஞ்சிய சந்தோஷத்துடன் சொல்ல,
“என்ன இவரா?…” வாய்விட்டே தனது அதிர்ச்சியை காட்ட கீர்த்தனன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காத குறை தான்.
“இதுக்குத்தான்…” என்று பேச ஆரம்பித்தவனின் கையை பிடித்துக்கொண்டார் சுந்தரி.
“ம்மா, இவர் சிடு சிடுன்னு எப்பவும் தலையில் கொட்டிட்டே. ம்மா…” என்றாள் அவளுக்கு அந்த நொடி தோன்றியதை சொல்லி.
கீர்த்தனன் ஒருநிமிடம் என்ன பேசினாள் என்பதை கிரகித்து அசைபோட்டு பார்க்க விழிகள் விரிந்தது.
‘நான் ஒரு விடோயர், குழந்தை இருப்பது இதெல்லாம் இவளுக்கு ஒரு விஷயமே கிடையாதாமாம்? என் கோபம் தான் பெரிதா?’ என தோன்ற இசையை முறைப்பு அகலாமல் பார்த்தான்.
“கீர்த்தி நீ வா…” என்று மாணிக்கம் அழைத்துச்செல்ல அவனை பார்த்தபடியே கேள்வியாய் அமர்ந்துவிட்டாள் அந்த இருக்கையில்.
“என்னடி இது? இப்படி ஷாக் ஆகற நீ? அம்மாவும் அப்பாவும் எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க…” அரசி தங்கையை தேற்ற,