ஒன்றும் சொல்லாமல் இசை அரசியின் கைகளை விலக்காமல் நிற்க இன்னொரு கையில் பூச்செண்டை தந்தவள் வெளியே அழைத்து சென்றாள்.
கீர்த்தனனுடனான திருமணம். அவன் சம்மதிக்கவே போவதில்லை என்று நினைத்திருந்த ஊர்மக்களும், சொந்தங்களும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க மணவறையில் அமர்ந்தாள் இசை.
சடங்குகள் எல்லாம் பெரிதாய் இல்லை. இருந்த அவசரத்தில் வேகவேகமாய் முடித்து தாலியை எடுத்து கீர்த்தனனிடம் தர வாங்கவே கைகள் நடுங்கியது அவனுக்கு.
மனமே இல்லாமல் பெற்றுக்கொண்டவனுக்கு தன் முதல் திருமணத்தின் நிகழ்வுகள் எல்லாம் மனக்கண்ணில் விரிய முயன்று மனதை அமைதிப்படுத்தினான்.
மாணிக்கத்தின் தோளில் சாய்ந்தபடி அங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாத தன் குழந்தை பிராத்தனாவை பார்த்தான்.
தகப்பனுக்கு சம்மதம் தரும் வகையில் கைகொட்டி சிரித்தபடி குழந்தை வேடிக்கை பார்க்க பெருமூச்சுடன் இசையின் பக்கம் திரும்பி மங்கலநாணை முடிச்சிட்டான்.
இத்தனையும் இசை கவனித்தபடி தான் இருந்தாள். அவன் கையில் தாலியை வாங்கியதும், பதட்டம் கொண்டதும், பின் நிதானித்ததும், மகளை பார்த்ததும் என்று ஒவ்வொன்றையும் பார்த்தாள்.
தன்னை அத்தனைபேரும் கவனிக்கிறார்கள் என்ற எண்ணம் துளியும் இல்லை. இருந்தாலும் அதனை சட்டை செய்திருக்கவும் மாட்டாள்.
இப்போது கீர்த்தனனை தாண்டி பார்வை அருகே இருந்த பெருமாளிடம் சென்றது இசைக்கு.
கண்களில் அப்படி ஒரு பேரவா. இதோ மகளின் வாழ்க்கை சரியாய் அமைந்துவிட்டது என மகிழ்ந்து போய் பார்த்துக்கொண்டு நின்றவருக்கு மகள் கழுத்தில் தாலி ஏறும் தருணத்தை பார்க்க உடலெல்லாம் பரபரத்து இருந்தது.
அவரின் உணர்வுகள் ஒவ்வொன்றையும் மகள் படித்துக்கொண்டு இருக்க கீர்த்தனன் இசையின் கழுத்தில் முடிச்சிட்டான்.
இதோ எதிர்பார்த்த அந்த தருணம். நெஞ்சை முட்டும் சந்தோசம். அத்தனை நாட்களும் சாதுவாய், பணிந்து, தணிந்து போனவரிடம் அப்படி ஒரு நிமிர்வு.
‘என்ன சாதித்துவிட்டாராம்?’ ஆம் சாதித்து தான் விட்டார். அவருக்கு அது பெரும் சாதனையாக தான் தெரிந்தது.
திருமணம் முடிந்துவிட்டால் போதும். அங்கே பெரிய கடமையை முடித்து தங்களின் சுமையை இறக்கி வைத்துவிட்டதாக அப்படி ஒரு அலாதி நிம்மதி தான் பெருமாள் போன்ற பெற்றோர்களுக்கு.
அதிலும் தன் மகளின் சுமை தாங்க முடியாததாக இருந்தது அவருக்கு. பெருமாளுக்கு நிமிர்வும், தைரியமும் இருந்தால் தூசியென தட்டியிருந்து மகளின் அருகே ஆதரவாய் இருந்திருக்கலாம்.
தவறே இல்லை என்றாலும் ஊரின் முன்னால் கூனி குறுகி நின்று அவர்கள் எள்ளி நகையாட இடம் கொடுத்து அதற்கு அவசரமாய் இப்படி ஒரு திருமணம்.
முடிந்ததா எல்லாம்? பெரியமனிதனுக்கு தெரியவில்லை. இருவேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அதிலும் மறுமணம் புரிந்தவன் மனநிலை எதையுமே யோசிக்கவில்லை.
முகமெல்லாம் பெருமையும், பூரிப்பும். அதனை அப்பட்டமாய் காட்டியபடி நிற்க பார்த்தவர்கள் வாயை மூடிக்கொண்டு உணவு உட்கொள்ள சென்றுவிட்டனர்.
“ம்மா வீட்டுக்கு போகலாமா?…” கீர்த்தனன் மேடையில் வைத்தே கேட்க திடுக்கிட்டு பார்த்தார் ராக்கு.
“என்ன கீர்த்தி? இன்னும் கொஞ்சம் சடங்கு இருக்கே?…” சங்கடமாய் சுந்தரி சொல்ல,
“இல்ல த்தை. போகலாம்…” இசையுமே சொல்ல மகளின் முகத்தில் எந்தவித உணர்வையும் காணமுடியவில்லை பெருமாளுக்கு.
கோபம், ஆதங்கம், வெறுப்பு, அலட்சியம் என்று மனதில் வைத்துக்கொள்ளாமல் கொட்டிவிடுபவள்.
முகத்தில் அப்பட்டமாய் தெரியும் அவள் எப்படி இருக்கிறாள் என்று. ஆனாலும் இப்போது எதுவுமே இல்லாமல் ஒரு பாவனையையும் கண்டுகொள்ள முடியவில்லை.
முக்கிய சடங்குகளை மட்டும் முடித்துக்கொண்டு சாப்பிடவும் இல்லாமல் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்கள்.
சுந்தரியின் வீட்டின் முன்னால் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்லப்பட அவர்களுக்கான உணவு மண்டபத்தில் இருந்து வந்துவிட்டது.
பால்,பழம் சாப்பிட என்று அரசி சொல்ல கீர்த்தனனின் முகத்தில் கோபத்தை காட்ட முடியவில்லை.
அக்கம்பக்க சொந்தங்களில் பாதிபேர் வீட்டிற்குள் இருக்க தான் நடந்துகொள்வது அவர்களுக்கு இன்னும் இளக்காரத்தை தந்துவிடும் என்று மௌனமாக இருந்தான்.
மகளை வாங்கிக்கொண்டவன் அவளிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே நேரத்தை போக்க இசைக்கு அத்தனை நாட்கள் இலகுவாய் வலம் வந்த வீட்டின் சூழல் மாறிவிட்ட பிரம்மை.
“இசக்கி இந்தா பால்…” என அரசி கொண்டுவந்து நீட்டவும் அவள் வாங்கிக்கொள்ள,
“நீ பாலை குடி. எனக்கு பால் பிடிக்காது…” என்றான் கீர்த்தனன் அந்த சூழ்நிலையை சாமாளிக்க என்று.
“சரி…” என்றவள் ஒரே மூச்சில் பாலை குடித்துவிட,
“பழமாவது சாப்பிடுங்க…” என்று அரசி கீர்த்தனனிடம் தர அவன் விழித்ததை கண்டு,
“நீங்க சாப்பிடுங்க. எனக்கு ஃபுல் ஆகிடுச்சு…” என்றாள் மெதுவாய்.
இருவருமாக என்னவோ பேச குழந்தை கீர்த்தனன் கையில் இருந்த பழத்தை பறிக்க அவளை தன் மடிக்கு மாற்றிக்கொண்டாள் இசை.
தள்ளி இருந்தவர்கள் இருவரின் இணக்கமான பேச்சை கண்டு மேவாயில் கைவைத்து,
“பரவாயில்லையே ரெண்டுபேருக்கும் ஒத்து போகுது. நீ சாப்பிடு, எனக்கு வேண்டாம்ன்னு. பேச்சு பலமா இருக்கே?…” என்று ஒருவர் நக்கலடிக்க,
“ஏன் உங்க புருஷன் உங்ககிட்ட இப்படி எல்லாம் பேச மாட்டாரா?…” என்றுவிட்டான் கீர்த்தனன் பட்டென்று.
“என்ன டாக்டர்?…”
“பின்ன என்ன? கல்யாணம் ஆகிடுச்சு. என்னோட வொய்ப், நான் பேசாம எப்படி இருக்கமுடியும்? ஏன், நாங்க பேசனும்னு நினைக்கறீங்களா? இல்லை பேச கூடாதுன்னா?…” என்றான் ஒரு கையை இடுப்பில் வைத்து லேசாய் சாய்ந்து பார்த்தபடி.
பேச்சின் போது இசையின் பக்கமாக கீர்த்தனன் சாய்ந்திருக்க அதுவுமே பார்த்தவர்களுக்கு கடுப்பை கிளப்பியது.
‘இவளுக்கு வந்த வாழ்வை பாரேன்’ என மனதில் நினைத்துக்கொண்டு பொருமலுடன் பார்க்க,
“அவ என்ன செய்வா தம்பி? எல்லாம் ஒரு ஆச்சர்யம் தான். இப்படி கெட்டபேர் வாங்கின பொண்ணை படிச்ச புள்ளை நீ…” என்றவரை பார்த்து எழுந்துவிட்டான்.
“கல்யாணம் தான் முடிஞ்சதுல. கிளம்புங்க. இனி இசையை பத்தி எதுவும் பேச கூடாது. புரியுதா?…” என்றான் அதட்டலாக.
சேரில் அமர்ந்திருந்தவள் அண்ணார்ந்து பார்த்திருக்க தந்தையின் அதட்டலை கண்ட குழந்தை அவனின் சட்டையை பிடித்து இழுத்தது.
“ம்மா, நம்ம வீட்ல கல்யாணம்ன்னு யாரையும் கூப்பிட்டோமா? இல்லை தானே? இசை பேரன்ட்ஸ் தவிர எல்லாரையும் கிளம்ப சொல்லுங்க. முக்கியமா இந்த கிழவியை…” என்று கடைசியாக பேசியவரை பார்த்து பல்லை கடித்துக்கொண்டு சொல்லியவன்,
“இசை எழுந்து உள்ள வா…” என்று குழந்தையை தூக்கிக்கொண்டான்.
கீர்த்தனனின் பொறுமை எப்போதோ பறந்திருந்தது. சிவத்தை மருத்துவமனை தூக்கி சென்றதோடு உடனிருந்தவர்கள் பேசிய பேச்சும், அது பெருமாளை தவறாக முடிவெடுக்க தூண்டுவதாக இருந்ததும் என்று கொதித்திருந்தான்.
கோபமும், ஆவேசமும், அத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த புகைச்சலும் என்று வெடித்துவிட்டு உள்ளே வந்திருக்க,
“ப்பா…” என்று அவனின் கன்னத்தை பிடித்து பார்த்தது குழந்தை.
“நத்திங் டா பேபி…” என மகளின் கன்னத்தில் முத்தமிட உள்ளே வந்தாள் இசை.
“உட்கார்…” என்றவன் குழந்தையையும் அவளுடன் கட்டிலில் அமர வைத்து விளையாட எடுத்து போட்டுவிட்டு இசையிடம் திரும்பினான்.
“சிவம் இப்படி ஹாஸ்பிட்டல்ல இருக்க நீ தானே காரணம்?…” என்றான் சுற்றி வளைக்காமல் நேரடியாக.
“நானா?…” இசை அதிர,
“நைட் நான் உன்னை பார்த்தேன் மாடில இருந்து…” என்றதும் இசையின் அதிர்ச்சி குறைந்து விழிகள் கலங்கியது.
“உனக்கு விருப்பம் இல்லைன்னா தைரியமா சொல்லியிருக்க வேண்டாமா? எவ்வளவு குடிச்சிருந்தா இப்பவும் நிதானம் இல்லாம மயக்கத்துல இருந்திருப்பார் சிவம்? உயிருக்கு ஆபத்துனா என்ன பண்ணிருப்ப இப்ப நீ?…”