தேடல் – 10
அர்ஜூன் ஸ்டெபியின் காதல் விஷயத்தை கேட்ட ஆண்டனி முதலில் அதிர்ந்தாலும் பின் தனது மகளின் மகிழ்ச்சி தான் தனக்கு முக்கியம் என்று ஒரு தகப்பனாக மிக சரியாக யோசித்தார்.
தானே ஒரு மாப்பிள்ளையை பார்த்திருந்தாலும் தனது அந்தஸ்திற்கு தான் பார்த்திருப்பார் என்றாலும் ஸ்டெபியின் பிடித்தமானதாக இல்லாவிட்டால் மகளின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்திருக்கமாட்டார் தான்.
தனது மனதிற்கும் நிறைவான ஒருவனை ஸ்டெபி விரும்பியது ஆண்டனிக்குமே சந்தோஷம் தான். காதலை எதிர்க்கும் சராசரி தகப்பனில்லை ஆண்டனி. அதுவும் அர்ஜூனை பற்றி ஆதிமுதல் அந்தம் வரை அறிந்திருப்பவர்.
அர்ஜூனை இதுவரை தனது மாப்பிள்ளையாக ஒரு நொடியும் நினைத்து பார்த்திராதவர் இப்போது மகளுக்கு பொருத்தமாக அர்ஜூனை தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் இதே போல அர்ஜூனின் இல்லத்தில் நினைக்கவில்லை. பெரும் போரையே வீட்டினுள் நிகழ்த்திவிட்டார் கல்பனா. அதிலும் தனக்கு மருமகளாக வேறு மதப்பெண்ணா? என கொந்தளித்து ஆட்டமாக ஆடித்தீர்க்க கிருஷ்ணனோ அதற்கு ஒரு படி மேலே சென்று மிரட்டவே ஆரம்பித்துவிட்டார்.
தன் தந்தை வெறும்வாய்ச்சொல் வீரன் என்று அறிந்திருந்த அர்ஜூன் தனது முடிவிலிருந்து சற்றும் பின்வாங்காமல் காதலில் உறுதியாக இருக்க கார்த்திக் மட்டுமே தன் அண்ணனுக்கு ஆதரவாக நின்றான்.
என்ன முயன்றும் மகனின் உறுதியை தகர்க்க முடியாமல் வெற்றிகரமாக தோல்வியை தழுவிய கல்பனாவும் கிருஷ்ணனும் வேறு வழியின்றி அர்ஜூனின் விருப்பத்திற்கு சம்மதிக்க ஸ்டெபியை பெண்பார்க்க சென்றனர்.
திருமணம் நடக்கும் நிமிடம் வரை கிடைக்கும் இடைப்பட்ட நாட்களை தங்களுக்கு சாதகமாக எண்ணி ஒவ்வொரு வாய்ப்பையும் தேட ஆரம்பித்தனர். ஒரு சிறு விஷயம் கிடைத்தாலும் உடனடியாக இந்த கல்யாணத்தை நிறுத்திவிட முனைப்பாக இருந்தனர்.
அதன் முதல்படியாக ஸ்டெபியை பெண் பார்க்க செல்ல வேண்டும் என அர்ஜூனிடம் சொல்ல அதில் அவன் சந்தோஷம் கொள்ளாமல் அவர்கள் மேல் சந்தேகம் கொண்டான். எந்த சூழ்நிலையிலும் அவர்களின் மேல் ஒரு கண் வைத்திருக்கவேண்டும் என்றும் முடிவெடுத்துகொண்டான்.
பெற்றோர்மேல் நம்பிக்கையும் பாசமும் இல்லாமல் இல்லை. கிருஷ்ணன் எப்போதுமே தனக்கு யாரும் சமதை இல்லை என்பது போன்ற ஒரு மிதப்பில் அடுத்தவர்களை மட்டம் தட்டுவதும் முகத்திலடித்தது போல பேசுவதும் என்றைக்குமே அர்ஜூனிற்கு ஒவ்வாதது.
அதிலும் ஆரவ், ஸ்டெபியின் குடும்பத்தை ஆரம்பத்திலிருந்தே காரணமின்றி குறை கூறியபடியே இருப்பார். அதிலும் ராகவ், தர்ஷினி என்றால் ஒரு இளப்பம் தான் கல்பனாவிற்கு.
வேறு மாநிலத்தவரான தர்ஷினியை காதலித்து திருமணம் புரிந்த ராகவ் ஏதோ கொலைகுற்றம் புரிந்தவர் போலவும் அதனால் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் போலவும் இவர்கள் ஒதுங்க ஆரவ் அவர்களை வெறுப்பேற்ற என்றே அங்கே அடிக்கடி செல்வான்.
முதலில் கல்பனாவின் குத்தலான பேச்சுக்களை புரியாமல் ஒதுக்கிய ஆரவ் புரிந்தபோது அவர்களுக்கும் சளைக்காமல் அறியாக பதிலடி கொடுக்கவும் தயங்கமாட்டான். அர்ஜூனின் பெற்றோர்களுக்காக அர்ஜூனின் நட்பை இழக்கவோ அவன் வீட்டிற்கு செல்வதை தவிர்க்கவோ சிறிதும் எண்ணவில்லை ஆரவ்.
வேண்டுமென்றே அர்ஜூனின் வீட்டிற்கு சென்று கிருஷ்ணன் கல்பனாவின் பிபியை ஏற்றிவிட்டே திரும்புவான். அதற்கு பயந்தே கூட சில நேரம் ஆரவ்வின் விஷயத்தில் அவர்கள் தலையிடாமல் இருந்துவிட்டனர்.
தனது மகனே தங்களின் சொல்பேச்சை கேட்காத போது இவனை என்ன நாம் சொல்வது என்று நினைத்துகொண்டாலும் ஸ்டெபியிடம் அப்படி இருக்க முடியவில்லை. கல்லூரி சேர்ந்த பின் ஸ்டெபி அதிகமாக அர்ஜூனின் வீட்டிற்கு வரவில்லை என்றாலும் சில நேரங்களில் ஆரவ் இழுத்து வந்துவிடுவான்.
அப்படி ஒருமுறை அர்ஜூன் வீட்டிற்கு வரும் போது அவனையும் அழைத்துக்கொண்டு மூவரும் வெளியில் கிளம்ப அவர்கள் வீட்டின் பூஜையறையில் ஏற்றிவைத்திருந்த விளக்கு அணையவிருக்க அதை கண்ட ஸ்டெபி விரைந்து சென்று திரியை தூண்டிவிட கொதித்துபோனார் கல்பனா.
ஆரவ்வும், அர்ஜூனும் வாசலை தாண்டி இருக்க ஸ்டெபியை தனியாக இழுத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்றவர் பிடி பிடியென பிடித்துகொண்டார்.
வகையாக மாட்டிய ஸ்டெபியை கடுமையான வார்த்தைகளாலும் அவள் வேறு மதத்தை சேர்ந்தவள் என்றும் அவளுக்கு தங்களது சாஸ்திரம் சம்பிரதாயம் பற்றி என்ன தெரியும் என்றும் பூஜையறைக்குள் நுழைய உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் வார்த்தைகளால் குதறிவிட அழுதுகொண்டே வெளியேறியவள் தான், அதன்பின் அர்ஜூனின் வீட்டிற்கே வரவில்லை.
விஷயமறிந்த அர்ஜூன் கல்பனாவை எச்சரிக்க ஆரவ்வோ வார்த்தையாக பேசாமல் தனது கோவத்தை ஒவ்வொரு செயலிலும் காண்பித்தான். அதில் கல்பனாவிற்கு தான் பீதி கிளம்பியது.
இவன் நம் வீட்டிற்கே வந்து நம்மையே ஆட்டிவைக்கிறானே என்ற எண்ணம் கூட அவருக்கு தோன்றாவண்ணம் இருந்தது ஆரவ்வின் செயல்கள்.
இப்போது என்னவென்றால் அவளையே மகன் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறானே என்ற கோவம் இருந்த போதிலும் அதை விடுத்து வழியின்றி ஸ்டெபியை பெண் கேட்க சென்றனர்.
அவர்கள் வந்ததுமே வரவேற்று சோபாவில் அமரவைத்தவர் தானும் அமர கல்பனா அகையோடு கொண்டுவந்திருந்த பையில் இருந்து பொருட்களை எடுத்து அடுக்க தொடங்க அதை பார்த்து ஆடிப்போனார் ஆண்டனி.
பெரிய தாம்பாளத்தட்டில் தேங்காய், பழம், மஞ்சள், குங்குமம், பூ புடவை வளையல் என இன்னும் சில பொருட்களும் நிறைந்திருக்க இதெல்லாம் தன் பக்க பழக்கம் இல்லையே என எண்ணி கலங்கினார்.
“ஏசப்பா, இந்த விசேஷத்தை நல்லவிதமாக நடத்திவையுங்கள் பரமபிதாவே…” என வேண்டிக்கொண்டே அமர்ந்திருந்தார். தாங்கள் கொண்டுவந்திருந்ததை பார்த்த ஆண்டனியின் முகத்தையும் அதில் தெரிந்த கவலை ரேகைகளையும் வைத்தே கல்பனாவிற்கு பரம திருப்தியாகிற்று.
ஸ்டெபி காதில் சிறு கம்மல் தவிர்த்து எந்தவித ஆபரணங்களும் அணிந்ததில்லை. அது அவர்களுக்கு பழக்கமும் இல்லை. காதில் அணிந்த தோடு கூட தர்ஷினி வற்புறுத்தியதால் ஸ்டெபி அணிந்துகொண்டாள்.
கல்பனா கொண்டுவந்திருப்பவைகள் அனைத்தும் தர்ஷினியை யோசிக்கவைத்தது. அவர் அர்ஜூனை பார்க்க அவனும் அதே எண்ணத்தில் தான் தன் தாயை பார்த்துவிட்டு கார்த்திக்கை பார்த்தான்.
“இதெல்லாம் எப்போ எடுத்துவச்சாங்கன்னு எனக்கு ஒன்னும் தெரியாது அண்ணா…” எனவும் தனனியே கடிந்துகொண்டான். கையில் புடவையும் பழமும் என்று தாய் கூறியதை நம்பியிருக்க கூடாதோ என்று எண்ணியவன் இப்போது ஒன்றும் சொல்லமுடியாமல் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருந்தான்.
ஸ்டெபி வீட்டில் ஆரவ் குடும்பத்தினர் ஏற்கனவே அங்கிருக்க ஆரவ் மட்டும் இல்லை. அதில் அப்படி ஒரு நிம்மதி கல்பனாவிற்கும், கிருஷ்ணனுக்கும்.
இருவரது பார்வை வலம் வந்ததை வைத்து அவர்கள் ஆரவ்வை தேடுவதாக நினைத்த ராகவன்,
“இன்னைக்கு ஒரு சர்ஜரி இருக்கு கிருஷ்ணன் சார். அதனால தான் ஆரவ் வரலை…” தகவல் சொல்ல கிருஷ்ணன் ஒரு தலையசைப்போடு நிறுத்திகொண்டார். மேலும் பேச்சை அவர் வளர்க்கவில்லை.
தர்ஷினி வரவேற்பாக சிரித்ததற்கு கூட கல்பனா அளந்தே புன்னகைத்தார். இல்லையில்லை வெறுமனே சிரிப்பது போல உதடுகளை இழுத்துப்பிடித்தார். அதை புரிந்தாலும் இப்போது அவர்களை சகித்துத்தான் ஆகவேண்டும். பெண் கேட்க அல்லவா வந்திருக்கின்றனர்.
ராகவ்விற்கும், தர்ஷினிக்கும் இந்த சம்பந்தத்தில் மட்டட்ட மகிழ்ச்சி. அர்ஜூனிற்கு ஸ்டெபியை பிடித்ததில் இவர்களுக்கும் இன்னும் பிடித்தமானவன் ஆனான் அர்ஜூன்.
சிறிது நேர பேச்சுக்களுக்கு பின் ஸ்டெபியை அழைத்துக்கொண்டு வந்தார் தர்ஷினி. அவளை பார்த்ததுமே கல்பனாவின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல ஆனது.
அவரோ எப்படியும் ஸ்டெபி சுடிதாரோ இல்லை வேறு ஏதாவது ஒரு உடுப்பிலோ இருப்பாள், அதை வைத்தே பிரச்சனையை கிளப்பலாம் என்று நினைத்து வந்தால் ஸ்டெபி அழகாக புடவை கட்டி அம்சமாக வந்து நின்று அவரது எண்ணத்தில் மண்ணை போட்டாள்.
அதுவும் இல்லாமல் வந்தவர்களுக்கு அழகாக இரு கைகளையும் கூப்பி வணக்கத்தையும் தெரிவித்து புன்னகைக்க அர்ஜூனின் இதழ்களில் புன்னகை விரிந்தது.
“இவளுக்கு இதெல்லாம் கூட தெரியுமா?…” என்று போல பார்த்திருந்தான்.
அவளது இந்த பரிமாணம் அர்ஜூனை அடியோடு வீழ்த்தியது. முதல் முறையாக ஸ்டெபியை புடவையில் பார்க்கிறான். கச்சிதமாக கட்டியிருந்த புடவையில் அவளது நளினமும் அதில் தெரிந்த வளைவு நெளிவுகளும் அர்ஜூனை வேறு உலகிற்குள் இழுத்தது.
அவனோ தலையை உலுக்கி தன்னை மீட்டவன் இப்போது தன்னை மறந்து இருந்தால் இதையே சாக்காக வைத்து தாயும் தந்தையும் ஏதாவது பிரச்சனையை கிளப்ப முயலக்கூடும் என்று கணித்தவன் ஸ்டெபியை விடுத்து கல்பனாவை பார்த்தான்.
அவரோ வரவிருக்கும் வேண்டா மருமகளை ஆராய்ச்சியோடு பார்க்க கிருஷ்ணனோ வந்தபோது ஸ்டெபியை பார்த்தவர் அதன்பின் பார்வையை வேறு புறம் திருப்பிகொண்டார்.
இருவரது நடவடிக்கை ஆண்டனிக்கு சஞ்சலத்தை கொடுக்க ராகவன் தான் அர்ஜூனை காட்டி சமாதானம் செய்தார். அவருக்குமே கிருஷ்ணனின் நடவடிக்கையில் கொஞ்சமும் விருப்பமில்லை. பெண் கேட்டு வந்திருக்கிறவர்கள் போலவா இருக்கிறார்கள்? என நினைத்து வருந்தினார்.
அதுவரை உர்ரென்று இருந்த கல்பனாவின் முகம் திடீரென பளிச்சிட அர்ஜூன் சுதாரித்தான். என்ன சொல்ல இருக்கிறாரோ என பார்த்திருக்க கல்பனா ஆரம்பித்தார்.
“இங்க வாம்மா…” அன்பொழுக ஸ்டெபியை அழைத்தாலும் அந்த வார்த்தைகளிலோ முகத்திலோ சிறிதும் அன்பில்லை.
அவரின் அருகில் சென்று அமரவும் வேகமாக குங்கும சிமிழில் இருந்த திலகத்தை எடுத்து ஸ்டெபியின் நெற்றியில் வைக்க திடுக்கிட்டு போனாள் அவள். அனைவரும் பதறிப்போய் பார்க்க அர்ஜூனோ கல்பனாவை கோவமாக பேச போக அவனை பார்வையிலேயே அடக்கினாள்.
பின் கல்பனாவின் முகத்தை பார்க்க அவரது விழிகளில் தெரிந்த எதிர்பார்ப்பில் சுதாரித்தவள் சிறு புன்னகையோடு,
“தேங்க்ஸ் அத்தை…” என கூறி அவர் பாதம் பணிய கிருஷ்ணனுக்கும் கல்பனாவிற்கும் சப்பென்று ஆனது. ஆனாலும் விடாமல்,
“இருக்கட்டும்மா…” என்றவர் புடவையை வைத்திருந்த தட்டை எடுத்துகொடுக்க அதை பார்த்து ஸ்டெபியின் முகத்தில் சிறு அதிர்ச்சி தோன்றி மறையவும்,
“இந்த புடவையை கட்டிட்டு அப்டியே இதையெல்லாம் போட்டுட்டு வாம்மா. மேற்கொண்டு கல்யாணத்தை பத்தி பேசனுமில்ல…” என கொஞ்சம் நக்கலாக கூறினார்.
ஸ்டெபி அர்ஜூனை பார்க்க அவனோ வேண்டாம் என்பது போல தலையசைக்க அவனது இந்த புரிதலில் சற்று முன்பு ஏற்பட்ட கலக்கம் மறைய அவனுக்கு ஒரு புன்னகையை சிந்திவிட்டு ஆண்டனியை அழுத்தமாக பார்த்துவிட்டே சென்றாள்.
ஆண்டனியால் ஒன்றும் பேசமுடியாமல் இறுக்கமாக அமர்ந்திருக்க அவர் மனமோ, “தன் பெண்ணிற்கு ஆரம்பமே இவ்வளவு சோதனையாக இருக்கிறதே? இதெல்லாம் நல்லதிற்கு தானா?…” என சிந்தித்தவாறு இருக்க ராகவனோ கிருஷ்ணனை முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.
இன்றைக்கு என்று பார்த்து இந்த ஆரவ் வராமல் போய்விட்டானே என கவலையானார். அவரிடம் கார்த்திக் பேச்சுக்கொடுக்க அர்ஜூன் அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் எழுந்தவன் ஆண்டனியை பார்க்க அவர் சம்மதமென தலையசைத்தார்.
நொடியும் தாமதிக்காமல் வேக எட்டுக்களுடன் மாடியை கடந்தவன் ஸ்டெபியின் அறைக்கதவை மெல்ல தட்டினான். கதவை திறந்த தர்ஷினி,
“வா அர்ஜூன், நீ ஸ்டெபிகிட்ட பேசிட்டு இரு. நான் ஒரு பை மினிட்ஸ்ல வந்திடறேன்…” என கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.
உள்ளே ஸ்டெபி கல்பனா குடுத்த புடவையை கட்டிமுடித்திருக்க தலைக்கு பூவை எப்படி வைக்கவென தெரியாமல் முழித்துகொண்டிருந்தாள். அர்ஜூனை பார்த்ததும்,
“அஜூ இதை எப்படி வைக்கனும்? எனக்கு தெரியலை. தலையை எப்படி சீவினாலும் என்னோட ஹேர்க்கு செட் ஆகலை.சுருண்டு சுருண்டு வந்து நிக்குது…”
பாவம் போல கூறியவளது பாவனை அவனை சுண்டி இழுக்க அவள் அருகில் சென்றவன் அங்கிருந்த பெரிய க்ளிப்பில் மொத்த முடியையும் அடக்கியவன் பின் பூச்சரத்தை எடுத்து இரு புறமும் வழியுமாறு வைத்து பின் செய்ய ஸ்டெபிக்கே தனது பிம்பம் புதிதாக தெரிந்தது.
“நான் சூப்பர்ல அஜூ. எனக்கு இதெல்லாம் மேட்சா இருக்கு தானே?…” என அவனிடமே வினா எழுப்பிவிட்டு வளையல்களை அணிய அவளை தடுத்தவன்,
“வேண்டாம் ஆஷா. இது உனக்கு பழக்கம் இல்லை. விட்டுட்டு போதும். ப்ளீஸ்…”
தனக்காக அவளுடைய அடையாளங்களையும் இதுவரை நேசித்த மத நெறிமுறைகளையும் விடுத்து வெளிவருவதில் கொஞ்சமும் உடன்பாடில்லை அனுக்கு. அவள் எப்படி இருந்தாலும் அவனுக்கு அவள் பிடித்தமானவளே. நேசமிக்கவளே.
அனைத்து வளையல்களையும் நிதானமாக இரு கைகள் நிறைய அணிந்துகொண்டவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தவள்,
“இந்த குங்குமத்தை எனக்கு நீங்க வைங்க அஜூ. ப்ளீஸ்…” என கெஞ்சல் குரலில் கூற அவளை அணைத்தவன்,
“ஏன்டா இப்படிலாம் பன்ற?. அம்மா இப்படி செய்வாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. வெறும் பழமும் புடவையும்னு சொல்லவும் நானும் விட்டுட்டேன். இதெல்லாம் வேண்டாம் ஆஷா…”
மீண்டும் மீண்டும் அவளிடம் கூறியும் அவள் கேட்பதாக இல்லை. அவனின் கைகளினால் குங்குமத்தை வாங்கிவிட்டே அவனை விட்டாள்.
கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டே,
“அஜூ பொட்டு கரெக்டா வச்சிருக்க தெரியுமா? உங்களோட அம்மா வச்சது அவ்வளோ பெருசா இருந்துச்சு. எனக்கே பயங்கரமா பயமா போச்சு…” என கூறி கலகலத்தவள் அவனின் முகம் இன்னமும் தெளியாமல் இருக்கவும் அவனை நெருங்கி,
“ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க அஜூ. எந்த ஒரு சின்ன விஷயத்துக்காகவும் உங்களை நான் இழக்க விரும்பலை. எனக்கு நீங்க வேணும். அதுக்காக உங்க ஆஷா எதுவும் செய்வேன்…”
அவனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தபடி அவள் காதல் தீவிரத்தோடு கூற அதில் நெகிழ்ந்தவன்,
“ஆஷா எப்படி இருந்தாலும் நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும். நீ இப்படியெல்லாம் உன்னை மாத்திக்கனும்னு அவசியம் இல்லைன்னு தான் நான் சொல்றேன்…”
“ஓகே அஜூ. நீங்களே சொல்லுங்க. உங்களுக்கு இந்த ஆஷாவை பிடிக்கலையா? உண்மையை மட்டும் சொல்லுங்க…”
அவனை விட்டு இரண்டடி பின் நகர்ந்து நின்று தன்னை காட்டவும் அவனது பார்வைகள் அவளது மேனியில் வலம் வர எப்படி சொல்லுவான் அவனை கட்டி இழுக்கும் அவளது இந்த தோற்றத்தை பிடிக்கவில்லை என்று?
அவனின் விழிகளில் வழிந்த காதலையும் தாண்டிய வேறொரு உணர்வில் இப்போது ஸ்டெபி கட்டுண்டு நின்றாள். ஆனாலும் அவனும் சரி அவளும் சரி நின்ற இடத்தை விட்டு ஒரு அடி கூட நகரவில்லை.
அர்ஜூன் தனது பார்வையால் அவளை அலைகழிக்க அவளோ அசையாமல் அவனது விழிகள் வெளிப்படுத்திய உணர்வை தாங்கி நின்றாள்.
அதற்குள் தர்ஷினி வந்துவிட அர்ஜூன் அப்போதும் நகராமல் அங்கேயே ஒரு சேரில் அமர்ந்துவிட்டான்.
“என்ன அர்ஜூன் கீழே போகலையா?. ஐ மீன் போக மனசில்லையா?…” என ஹிந்தியின் கேலி செய்ய,
“மெதுவா போகலாம் தர்ஷிம்மா…” என கூறி மென்னகை புரிந்தவனை பார்த்து சிரித்துவிட்டு கையிலிருந்த சிறு நகைபெட்டியில் இருந்த நகைகளை எடுத்து அணிவிக்க போக,
“ஏன் தர்ஷிமா இதெல்லாம் எப்போ கொண்டுவந்தீங்க?…” என்ற ஆஷாவிடம்,
“நீ போட்டுக்கமாட்டன்னு தெரியும். ஆனாலும் உனக்கு எடுத்துக்கனும்னு தோனுச்சு. எதுக்கும் இருக்கட்டும்னு தான் எடுத்துவச்சேன். இப்போ யூஸ் ஆகுது தானே?…”
அர்ஜூனும் ஸ்டெபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
“சில விஷயங்களை ஓரளவுக்கு கணிக்கத்தான் முடியுது இல்லையா அர்ஜூன்…” அவர் எதை சொல்கிறார் என்று புரியாமல் இல்லை அவனுக்கு. அமைதியாக தலையாட்ட,
“வருத்தபடாத அர்ஜூன். போக போக ஸ்டெபியை கண்டிப்பா ஏத்துப்பாங்க…”
அவரை ஏறிட்டு பார்த்த அர்ஜூனின் பார்வை, “அப்படித்தான் உங்களை ஏற்றுகொண்டார்களா?” என்ற செய்தியை தாங்கிவந்தது.
அதை புரிந்தவர், “எல்லோருமே ஒரே மாதிரி மனநிலையில் இருக்கனும்னு அவசியம் இல்லை அர்ஜூன். அவங்களுக்கும் அவங்க பிள்ளைங்க மேல ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இல்லையா? அந்த எண்ணம் உடையும் போது கோவமும் வெறுப்பும் வரத்து சகஜம் தான்…”
“என்னோட மாமனார் மாமியார் கூட நான் ஒண்ணா இருந்திருந்தா அதற்கு சாத்தியம் இருந்திருக்குமோ இல்லையோ. எப்போவாவது போய் சிலநாள் தங்கிட்டு வர என்னை பத்தி அவங்களுக்கும் புரிஞ்சுக்க வாய்ப்பு இல்லாமலே போய்டுச்சு. அதான் இந்த இடைவெளி…”
முடிந்தளவிற்கு தர்ஷினி அர்ஜூனிற்கும் ஸ்டெபிக்கும் கூற கார்த்திக் மொபைலில் அர்ஜூனை அழைத்துவிட்டான்.
“கீழே ஏதோ பிரச்சனைன்னு நினைக்கேன். கார்த்திக் கூப்பிடறான். போகலாம் தர்ஷிமா…” என எழுந்துகொண்டே சொல்லவும்,
“நீ முன்னால போய் என்னனு பாரு அர்ஜூன். நான் ஸ்டெபிக்கு இந்த ஜ்வெல்ஸ் போட்டுட்டு கூட்டிட்டு வரேன்…”
அவனை செல்லுமாறு கண்ணை காட்டி ஸ்டெபியையும் காட்ட, அவள் முகமோ கொஞ்சம் கவலையோடு இருந்தது. அவளை நெருங்கியவன்,
“ஆஷா எதுவா இருந்தாலும் சந்திச்சுதான் ஆகனும். எந்த காரணத்தை கொண்டும் நான் உன்னை விடமாட்டேன்…” அவளது கைகளை அழுத்திவிட்டு அறையை விட்டு வெளியேறி கீழே சென்றான்.
அங்கே ஆண்டனி, ராகவ் இருவரது முகமும் கலவரமாக இருக்க கல்பனா கிருஷ்ணன் இருவரது முகமும் எதையே சாதித்தது போல இருந்தது. கார்த்திக் அவஸ்தையாக அமர்ந்திருந்தான்.
என்னவென கேட்கும் முன்பே கார்த்திக்கின் மொபைலில் கால் வர அதை ஏற்றவன்,
“ஓகே அண்ணா. இதோ பண்ணிடறேன். நீங்க வாங்க…” என கூறிவிட்டு வைத்தவன் ஆண்டனியின் காதுகளில் எதுவோ கூற அவர் உள்ளே சென்று ஒரு பேக்கை எடுத்துவந்து கார்த்திக்கிடம் கொடுக்க அதில் இருந்த லேப்டாப்பை எடுத்தான் கார்த்திக்.
அதை ஒரு டீப்பாயை இழுத்துப்போட்டு வைத்து ஆன் செய்ய அடுத்த நிமிடம் வெப்கேமராவில் ஆரவ் தெரிந்தான். அனைவரும் தெரியும்படி கார்த்திக் அதை சரியாக வைத்துவிட்டு தன் இடத்தில் வந்து அமர்ந்துகொண்டான்.
“என்ன ஆரவ் சர்ஜரி நல்லபடியா முடிஞ்சதா?…” என்ற ராகவ்விடம்,
“சக்சஸ் டாடி. இப்போதான் முடிஞ்சது. பேஷன்ட் நல்ல கண்டிஷன்ல இருக்கார். நோ ப்ராப்ளம். உடனே அங்க வர டைம் இருக்குமான்னு தெரியலை. அதான் இப்படி…” என கூறி புன்னகைத்தவன் பார்வை அங்கே கல்பனா கொண்டுவந்திருந்த தட்டில் விழ கல்பனாவை பார்த்தான்.
அதை உணர்ந்தது போல அவர் அவன் புறம் திரும்பவே இல்லை. பின் ஆரவ் அர்ஜூனை பார்க்க அவன் முகத்திலிருந்து அதில் ஒன்றும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதற்குள் ஸ்டெபியை தர்ஷினி அழைத்துவர அனைவரது பார்வையும் அங்கே சென்றது.
மகளின் உருவமே மாறிப்போய் வேறாக வந்து நின்றவளை பார்த்த ஆண்டனிக்கு மகிழ்வதா இல்லை வருந்துவதா என்றே தெரியவில்லை. விருப்பமில்லாமல் காதலுக்காக இந்த வேஷமோ? என எண்ணினார்.
ஆனால் மலர்ந்து இருந்த ஸ்டெபியின் முகம் அவருக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. கல்பனாவிற்கு தான் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல ஆனது.
எந்த ஒப்பனையும் இல்லாமலே அழகாக இருந்தவள் இப்போது இந்த அலங்காரத்திலும் நெற்றியில் மின்னும் குங்குமத்திலும் பேரழகியாக ஒளிர்விட தவறு செய்துவிட்டோமோ என காலதாமதமாக வருந்தினார்.
சும்மாவே அர்ஜூன் ஆஷா ஆஷா என சுற்றுவான். இனி இப்படி இவளை தினமும் கண்டால் அவன் சுத்தமாக தங்களை மறந்துவிடுவானோ என மகனை பார்க்க அவன் இவரை தான் பார்த்துகொண்டிருந்தான். உடன் ஆரவ்வும்.
அதில் சுதாரித்த கல்பனா லேசாக சிரித்து வைக்க ஸ்டெபியை பார்த்ததும் கல்பனாவின் முகத்தில் தெரிந்த பாவனைகளை அவதானித்துகொண்டிருந்த ஆரவ்வும், அர்ஜூனும் அவரை முறைத்தனர்.
ஆஷாவை பார்த்த ஆரவ், “ஹேய் பேப் நீ இவ்வளோ ப்யூட்டியா? முதல்லயே தெரியாம போச்சே?…” என போலியாக வருந்த அதில் கடுகடுத்த கல்பனா கிருஷ்ணனை முடுக்கிவிட,
“மேற்கொண்டு பேசலாம். நாங்க சொல்லவேண்டியதை சொல்லியாச்சு. இப்போ உங்க முடிவை சொன்னா எங்களுக்கு வசதியா இருக்கும்…” என கூறிய கிருஷ்ணன் ஆரவ்வை திரும்பியும் பார்க்கவில்லை.
அவனோ அர்ஜூனை பார்த்து கேள்வியாக பார்க்க தனக்கு தெரியவில்லை என்று தோள் குலுக்கினான். கார்த்திக் அமைதியாக இருப்பதில் இருந்தே ஏதோ ஏடாகூடமாக நடந்திருக்கிறது என்பதை அறிந்த ஆரவ் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான்.
ஆண்டனி செய்வதறியாமல் ஸ்டெபியை பார்த்தபடி இருக்க அவரின் தவிப்பு தப்பாமல் அர்ஜூனுக்கு தெரிந்தது.
“அங்கிள் என்ன விஷயம்னு சொல்றீங்களா? நான் மேலே போன போது என்ன பேசினாங்க என்னோட பேரன்ட்ஸ்?…” பேரன்ட்ஸ் என்றதில் சிறு அழுத்தம் குடுத்து கேட்க ஆண்டனி வாயே திறக்கவில்லை.
“அர்ஜூன், உன்னோட பேரன்ட்ஸ்க்கு அவங்க முறைப்படி தான் உங்க கல்யாணம் நடக்கனுமாம். அதுவும் உங்க குலதெய்வம் கோவில்ல வச்சு. எந்த ஒரு சம்பிரதாயமும் விட்டுப்போய்ட கூடாதாம். முக்கியமா ஸ்டெபி மதம் மாறனும்னு சொன்னாங்க. அதுக்குத்தான் முடிவை பத்தி பேசறாங்க…”
பட்டென்று தேங்காய் உடைத்தது போல ராகவன் அப்படியே கூறிவிட அர்ஜூன் அதிர்ந்துவிட்டான். ஸ்டெபி இதை ஓரளவிற்கு எதிர்பார்த்துதான் இருந்தாள். அதனால் முகத்தில் எந்தவிதமான ஏமாற்றத்தையும் அதிர்வையும் அவள் வெளிக்காட்டவில்லை.
“அதுமட்டுமில்லாம இவங்க சொல்றதுக்கு சம்மதிக்கலைனா…” என்று இழுத்த ராகவ்வை பார்த்தவன்,
“சொல்லுங்கப்பா என்ன சொன்னாங்கன்னு?…” என தூண்ட ஆரவ் அதை கிரகித்துவிட்டான். அதில் அவ்வளவு கோவம் அவனுக்கு.
“சம்மதிக்கலைனா அவங்க வேற பொண்ணை தான் பார்க்கனும்னு சொன்னாங்க. ஏற்கனவே இந்த சம்பந்ததுல விருப்பம் இல்லை போல அவங்களுக்கு…”
வந்ததிலிருந்து கல்பனாவும், கிருஷ்ணனும் செய்த உதாசினத்திலும் அலும்பிலும் கொதித்துபோய் இருந்த ராகவ் சொல்லியேவிட்டார்.
ஆரவ் கோவத்தை அடக்கியபடி அமைதியாக அங்கிருந்து பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனாலும் எதுவும் பேச முயலவில்லை. அவனுக்கு அர்ஜூனின் மேல் அப்படி நம்பிக்கை இருந்தது.
இது அவர்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். இப்போதைக்கு தலையிட வேண்டாம். அர்ஜூனே சமாளிப்பான் என்று பொறுமையானான்.
தாயையும் தந்தையையும் பார்த்த அர்ஜூன் ஒரு முடிவோடு அவர்களை கூர்மையாக பார்த்துக்கொண்டே,
“முடிவு என்னன்னு நான் சொல்றேன் அங்கிள்…” என்றவனை கல்பனாவும், கிருஷ்ணனும் உதறலோடு பார்க்க, மற்றவர்கள் ஆர்வமாக பார்த்தனர்.
“எங்க கல்யாணம் ரிஜிஸ்டர் ஆபிஸ்ல சிம்பிளா நம்மோட பேமிலி மெம்பர்ஸ் மட்டும் இருந்து தான் நடக்கும். மேரேஜ் ரிஷப்ஷன் ஒரு ஹோட்டல்ல வச்சுக்கலாம். அதுக்கு எல்லோரையும் இன்வைட் பண்ணிடலாம்…”
“இதுதான் என்னோட இறுதியான முடிவு. யாருக்கும் பாதகமோ சாதகமோ இல்லாத பதில்னு நினைக்கிறேன்…” என்றவனை அணைத்துகொண்டார் ராகவ். ஆண்டனி எழுந்து கைகுலுக்க,
“ஆஷா தான் அங்கிள் இந்த யோசனையை சொன்னா. நான் கூட சர்ச்ல மேரேஜ் வச்சுக்கலாம்னு சொன்னேன். அவ தான் வேண்டாம்னு சொல்லிட்டா…” என்றவனை பெருமையாக பார்த்தார் ஆண்டனி.
சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. “தேங்க்ஸ் அர்ஜூன்…” என அவனை தழுவிக்கொள்ள ஸ்டெபியின் காதல் பார்வை அவனை ஆக்கிரமித்தது. ஆரவ் தன் நண்பனை அத்தனை பெருமை பொங்க பார்த்திருந்தான்.
“அதெப்படி அர்ஜூன் நமக்குன்னு ஒரு பழக்கவழக்கம் இருக்கே? நம்ம முறைகளை விட்டுகொடுக்க நினைக்கிறது கொஞ்சமும் நல்லா இல்லை. நீ வேணும்னா உன்னோட காதலுக்காக இதை கூட செய்யமாட்டாளா இவ?…” என வெடித்த தாயிடம்,
“ஓ தாராளமா நீங்க சொல்றது போல பண்ணிடலாம்மா…” எனவும் கண்கள் ஜொலிக்க பார்த்த கல்பனாவிடம்,
“நீங்க சொல்றது போல ஆஷா பக்கத்திலையும் சில பழக்கவழக்கம் இருக்காம். வேணும்னா அவளுக்காக நானும் அவங்க மதத்துக்கு மாறிடட்டுமா?. என் மேல வச்சிருக்கிற காதலுக்கு அவ அப்படி செய்தா அவளோட காதலுக்காக நானும் இதை செய்வேன்…”
“என்னோட காதலும் குறைந்ததில்லை. சொல்லுங்க செய்யட்டுமா?…” அடக்கப்பட்ட ஆத்திரத்தில் அழுத்தமான குரலில் கெட்டவனை திகிலுடன் பார்த்தார் கல்பனா.
அதற்கு மேலும் பேசினால் எங்கே தாங்கள் வேண்டாம் என்று சொல்லி இங்கேயே இருந்து விடுவானோ என பயந்துவிட்டார்.
அவனது நெத்தியடி பதிலில் அனைவரும் தங்களுக்குள் சில்லாகித்துகொண்டனர். ஆரவ் மட்டும் அர்ஜூனின் பெற்றோர் மீதான தீர்க்கப்படவேண்டிய கணக்குகளை சரிபார்த்துகொண்டிருந்தான்.
அடுத்த இரண்டு மாதத்தில் அர்ஜூன் கூறியபடி ரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணம் எளிமையாக நடக்க ஸ்டெபியின் விருப்பபடி திருமாங்கல்யத்தை அவளுக்கு கட்டியவன் அவள் வழக்கப்படி தன் விருப்பபடி திருமண வைர மோதிரத்தை அவளுக்கு அணிவித்தான்.
அதை பார்த்த கல்பனா, “இதுவரை சம்பாதிச்ச மொத்த பணத்தையும் இந்த ரெண்டே மோதிரத்துல கரைச்சுட்டானே?…” என புலம்பித்தள்ளினார் கிருஷ்ணனிடம். அதுவும் சத்தமே இல்லாமல்.
திருமணம் முடிந்து ரிஷப்ஷன் ஆண்டனி ஆசைப்படி வெகு விமரிசையாக பெரியளவில் பகட்டாக கொண்டாடப்பட்டது. அந்த ஆடம்பரம் கூட அர்ஜூனின் பெற்றோரை குளிர்விக்கவில்லை.
“பணத்தை காட்டி மயக்க நினைக்கிறாளோ” என்றுதான் தவறாக நினைத்தனர். எத்தனை முயன்றும் இத்திருமணத்தை நிறுத்த முடியவில்லையே என்று தான் மாய்ந்துபோயினர்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஸ்டெபியும் அர்ஜூனும் தங்களது காதல் உலகத்தில் மெய்மறந்து வாழ்க்கையை வாழ்க்கையாக ரசித்து வாழ ஆரம்பித்தனர்.