தேடல் – 11
அர்ஜூன் ஸ்டெபி திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே ஆண்டனி தனது பெயரில் இருந்த சொத்துக்களையும் ஹாஸ்பிட்டல் நிர்வாக உரிமையையும் அர்ஜூன் ஸ்டெபி இருவரது பெயருக்கு மாற்றி எழுதிவிட்டார்.
அவன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேட்டுகொள்ளாதவர் பிடிவாதமாக இருந்துவிட்டார். இந்த பெருந்தன்மையான செயல் கூட அர்ஜூனின் பெற்றோரை மகிழ்விக்கவில்லை. மாறாக மகனை தங்களிடமிருந்து பிரிக்க நினைக்கின்றனர் என்றே குற்றம் பேசினர்.
அர்ஜூனின் வீட்டிற்கு ஸ்டெபி வாழ வந்து அன்றோடு முழுதாக ஒரு மாதம் முடிந்தது. காலையில் முக்கியமான கன்சல்டிங் இருக்கிறது என அர்ஜூன் பரபரப்பாக கிளம்ப அவனுடனே கிளம்பவேண்டிய ஸ்டெபி அவனை சீண்டி வம்பிழுத்துகொண்டிருந்தாள்.
“ப்ளீஸ் ஆஷா, என்னை கிளம்பவிடேன். மனுஷனை ரொம்ப படுத்துற நீ…” ரசனையாக அவளிடம் பார்வையை செலுத்திக்கொண்டே தன் காரியத்திலும் கண்ணாக இருந்தான்.
“ஹனிமூன் போக என்ன ப்ளான் பண்ணிருக்கீங்கன்னு தர்ஷிமா ரெண்டு நாளா கேட்டுட்டே இருக்காங்க அஜூ. நாம பிளேஸ் சொன்னா அவங்க அதுக்கு ஏற்பாடு பண்ணுவாங்களாம். நீங்க அதை பத்தி பேசவேமாட்டேன்றீங்க?…” என சலித்துகொண்டவளிடம்,
“எல்லாம் தெரிஞ்சுமா நீ கேட்கற ஆஷா? இன்னும் ஒரு த்ரீ டேய்ஸ்டா. ப்ளீஸ். அதுக்கப்றமா போகலாம். நீயே இடத்தை டிஸைட் பண்ணு. ஆனாலும் அதுவும் ஃபைவ் டேய்ஸ் தான்…” கறாராக கூறியவனை முறைத்தவளை கண்டு தன்னருகில் இழுத்தவன்,
“ஆஷா மேடம் கோவமா இருக்கீங்களா?…”
“பின்ன உங்களை கோச்சுக்காம கொஞ்சுவாங்களா?..”
“ம்ஹூம் இப்போ கோச்சுக்கவோ கொஞ்சவோ எனக்கு டைம் இல்லைம்மா. எதுவா இருந்தாலும் நைட் பார்த்துக்கலாம்…” என அவளை பார்த்து கண்ணடிக்க,
“நீங்கலாம் லவ் பண்ணி மேரேஜ் பண்ணினதா வெளில சொல்லிடாதீங்க. சிரிப்பாங்க…”
“நான் எதுக்கு வெளில சொல்லபோறேன்? நீ வேணும்னா சொல்லிக்கோ. எதுவானாலும் நைட் பார்த்துக்கலாம்…” மீண்டும் அதையே திருப்பி படிக்க அதிக கடுப்பானவள்,
“அப்போவும் நான் கோவமாகத்தான் இருப்பேன். கோவப்பட மட்டுமே செய்வேன்…” என முறுக்கிக்கொள்ள,
“ஓகே கோவமாகவே இரு. நோ ப்ராப்ளம் ஆஷா பேபி. எதுவானாலும் நான் பார்த்துப்பேன்…” என்று கண்கள் சிரிக்க கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை அவளை அணைத்து அவள் திமிற திமிற முத்தமிட்டு விட்டே அவளை விடுவிக்க அவனின் செயலில் கோவித்த ஸ்டெபி கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது எறியும் முன்னால் அங்கிருந்து பறந்துவிட்டான் அர்ஜூன்.
“சீக்கிரமா ஹாஸ்பிட்டல் வந்து சேரு ஆஷா…” என்னும் கட்டளையோடு.
அவன் சென்ற பின்னும் அந்த அறையில் அவன் வாசம் இவள் நாசியில் நுழைந்து நெஞ்சை நிறைக்க அந்த சுகந்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவள் ஆரவ்வின் அழைப்பில் மீண்டாள்.
“என்ன பேப், உன் மாமியார் இன்னைக்கு சுப்ரபாதத்தை பாடலையா உனக்கு?…” என்றவனது உற்சாககுரல் அவளையும் தொற்ற,
“உனக்கு எவ்வளோ தைரியம் என் மாமியாரை பேச?…” என்று போலியாக மிரட்ட,
“ஆமாமா அப்டியே மாமியார் மெச்சும் மருமகள் தான் நீ. உன்னையெல்லாம் அந்த ஓல்ட்லேடி கண்டுக்காத போதே இவ்வளோ ஏத்தம் உனக்கு. கைல வச்சு தாங்கினா நான்லாம் உன் கண்ணுக்கே தெரிவேனா?…”
“ஏன்டா காலையிலேயே ஆரம்பிச்சுட்ட? இதே வேலையா போச்சு உனக்கு. அவங்க என்னை ஏத்துக்கிட்டாலும் நீ விடமாட்ட போல…” என்றவள்,
“இன்னும் கீழ போகவே இல்லை. போனா தான் தெரியும் இன்னைக்கு கோட்டாவுக்கு என்ன கிடைக்கும்னு. ஹாஸ்பிட்டல் வந்து சொல்றேன். இந்த அஜூ வேற சீக்கிரமா கிளம்பிட்டாங்க. தனியா தான் ஹாஸ்பிட்டல் வரனும்…”
ஸ்டெபி சாதாரணமாக கூற அவள் குரலில் தெரிந்த வருத்தத்தில் ஆரவ் அமைதியானான். என்ன முயன்றாலும் மாறாத ஒன்று அர்ஜூன் பெற்றோர் ஸ்டெபியை ஏற்பது. கல்பனாவையும் கிருஷ்ணனையும் இன்று நேற்றா பார்க்கிறான். தன் நினைவில் இருந்து வெளிவந்தவன்,
“ஓகே பேப் நைட் பார்க்கலாம். நீ ஹாஸ்பிட்டல் போனதும் எனக்கொரு கால் பண்ணு. மறந்திடாதே…” என்று கூறிவிட்டு அவன் போனை வைத்த பின் தான் ஸ்டெபிக்கு ஞாபகமே வந்தது. ஆரவ் முதல் நாள் இரவு பணியில் ஹாஸ்பிட்டலில் இருந்தது.
மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு கிளம்ப ஆரம்பித்தவள் அடுத்த அரைமணி நேரத்தில் ரெடியாகி கீழே வர அங்கு கிருஷ்ணன் டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுகொண்டிருந்தார். இவளை பார்த்ததும் முகத்தை திருப்ப கல்பனாவோ முறைத்தபடி நின்றார்.
எப்போதும் முறைப்பார் தான். ஆனால் இன்று அதன் உக்கிரம் அதிகமாக இருக்க யோசனையோடே கை கழுவ வாஸ்பேஷன் சென்றாள். கழுவிவிட்டு தற்செயலாக கண்ணாடியை பார்க்க அதில் தெரிந்த வெறுமையான தனது நெற்றியில் துணுக்குற்றாள்.
கல்பனாவின் கோவத்திற்கான காரணம் புரிந்தது. மடமடவென மாடிக்கு சென்றவள் நெற்றிக்கு பொட்டை வைத்துவிட்டு கீழே வந்து பூஜையறையில் இருந்த குங்குமத்தை எடுத்து வகிட்டிலும் வைத்துவிட்டு சாப்பிட அமர,
“இப்படி ஒண்ணு ஒண்ணுக்கும் சொல்லி சொல்லித்தான் செய்யனுமா? ஒரு கல்யாணமான புது பொண்ணு நெத்தில வைக்கிற பொட்டை மறக்கிற கொடுமை எங்கயாச்சும் நடக்குமா? வரைமுறை தெரியாம வளர்ந்தவங்ககிட்ட இதை எதிர்பார்க்கமுடியுமா?…”
சுருக்கென குத்தலாக பேசிவிட்டு ஸ்டெபியின் முகத்தை பார்க்க அவளோ கருமமே கண்ணாக ப்ளேட்டில் வைத்திருந்த பொங்கலை காலி பண்ணிகொண்டிருந்தாள். அதில் மேலும் எரிச்சலான கல்பனா,
“சாஸ்திரம் சம்பிரதாயம் தெரிஞ்ச இந்து பொண்ணா இருந்தா அவளுக்கு தெரிஞ்சிருக்கும். புருஷன் ஆயுசு மேல ஆசையிருந்தா எந்த பொண்ணாவது இதை மறப்பாளா? இவளுக்கெல்லாம் அதெங்க புரியபோகுது?…” என நொடிக்க ஸ்டெபி அதிர்ந்துபோய் பார்த்தாள்.
“இன்று ஒரு நாள் பொட்டு வைக்க மறந்ததற்கு இத்தனை பேச்சா? இதற்கும் அர்ஜூனின் ஆயுளுக்கும் என்ன சம்பந்தம்?” என்று மனம் குமைந்தவள் சாப்பிடாமல் பாதியிலேயே எழுந்துவிட்டாள்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாத கல்பனா வாயிலுக்கு சென்ற மருமகளை மறித்து நிற்க, “சொல்லுங்க அத்தை. ஏதாவது மறந்துட்டீங்களா?…” என கடுப்பை மறைத்துக்கொண்டே பேச,
“நீ வீட்டுக்கு எத்தனை மணிக்கு வருவ?…” என்றவரிடம்,
“ஈவ்னிங் ஆறு மணி ஆகிடும்…”
“இன்றைக்கு என் மனதிற்கு ஏதோ உறுத்தலா இருக்கு. அதனால நீ வீட்டுக்கு வரவேண்டாம்…”
கல்பனா என்னதான் சொல்ல வருகிறார் என புரியாத பார்வை அவரை பார்க்க கிருஷ்ணனோ காதை இங்கேயும் கண்ணை சாப்பாட்டிலும் வைத்திருந்தார்.
“நானே சாயங்காலம் ஹாஸ்பிட்டலுக்கு வரேன். நாம ரெண்டுபேரும் கோவிலுக்கு போகனும். தயாரா இரு…” என கட்டளையாக கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அதிர்ச்சியில் கல்லென சமைந்து நின்றாள் ஸ்டெபி.
அர்ஜூனுக்கு பிடிக்கும் என்பதற்காக பூ பொட்டு மற்ற அணிகலன்கள் அனைத்தையும் விரும்பியே ஏற்றவள் திருமணம் முடிந்த அன்று சம்பிரதாயத்திற்காக அர்ஜூன் வீட்டின் பூஜையறையில் விளைக்கை ஏற்றிவைத்தாள். அதுவுமே வடிவின் உத்தரவு.
அதன் பின் ஏனோ அந்த பூஜையறைக்குள் செல்ல அவளுக்கு தோன்றியதே இல்லை. கல்பனா வேண்டும் என்றே அவளை விளக்கேற்ற வைப்பதும் அதற்கு ஆயிரம் குறை கூறுவதுமாக இருப்பார்.
கடவுள்களிடம் எந்தவிதமான வேறுபாடும் இல்லை ஸ்டெபிக்கு. ஆனால் ஏனோ அவளுக்கு தோன்றவில்லை. இன்றுவரை கோவிலுக்கு சென்றதில்லை. அர்ஜூனும் வற்புறுத்தியதில்லை.
திருமணம் முடிந்து வந்ததிலிருந்து நேரடி தாக்குதல் அதிகம் இல்லாவிட்டாலும் குத்தல் பேச்சுக்களும் ஜாடைமாடையாக தீயை வாரி இறைப்பது போன்ற வார்த்தைகளால் சுடுவதுமாக கல்பனா என்னனவோ செய்து பார்த்துவிட்டார்.
அர்ஜூனிற்காக அனைத்தையும் சகித்தவள் எதிர்த்து பேசாமல் நகர்ந்துவிடுவாள். வரைமுறை பற்றி தெரியாதவர்களிடம் தானும் பதிலுக்கு பேசி தனது தரத்தை குறைத்துக்கொள்ள ஸ்டெபி தயாராக இல்லை.
ஆனால் இன்றைக்கு அவர் செய்ததோ ஸ்டெபியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை பழிவாங்கவென்றே இப்படி கோவிலுக்கு அழைக்கிறார் என்று தெரியாமல் இல்லை. இதை எப்படி தவிர்க்க என்ற குழப்பத்திலேயே ஹாஸ்பிட்டல் கிளம்பி சென்றாள்.
ஹாஸ்பிட்டலில் நுழைந்த பத்தே நிமிடத்தில் ஆரவ்விடம் இருந்து மெசேஜ் வந்திருப்பதை பார்த்தவள் அதை படித்துவிட்டு மேஜையை பார்க்க அதில் இரண்டு நாட்களுக்கு முன்னால் அட்மிட் ஆன ஹார்ட் பேஷன்ட் கேஸ் ஃபைல் இருந்தது.
நேற்றைய ரிப்போர்டையும் அவரது கண்டீஷனையும் அதில் ஆரவ் குறிப்பிட்டிருக்க அதை முழுவதுமாக படித்து முடித்தவள் உடனே அவனுக்கு அழைத்தாள்.
“சொல்லு பேப்…” என சோம்பலாக பேசியவனிடம் அந்த பேஷன்ட் சம்பந்தமான சில விஷயங்களை கேட்டு தெளிவாகிவிட்டு,
“நீ தூங்கு ஆரவ். நான் உன்கிட்ட நைட்ல பேசறேன்…” என்றவளது குரலில் இருந்த சோர்வை கண்டவன்,
“என்ன விஷயம் பேப்? எதுக்கு உன்னோட வாய்ஸ் இவ்வளோ டல்லா இருக்கு? ஹாஸ்பிட்டல்னு வந்துட்டா எப்போவும் மேடம் ப்ரிஸ்க்கா இருப்பீங்க? இன்னைக்கு ஓவர் டோஸ் ஆகிடுச்சா?…” என்று கிண்டலடிக்க,
“நானே டென்ஷன்ல இருக்கேன். நீ வேற ஏன்டா?. போனை வை…” என கத்த எப்போதும் இப்படி பேசியிறாத ஸ்டெபியின் குரலில்,
“என்னன்னு இப்போ சொல்லபோறியா இல்லையா?…” அவளுக்கு மேல் எகிறினான் ஆரவ். ஸ்டெபி விஷயத்தை கூறவும் இவனுக்கு இங்கே சுறுசுறுவென கோபம் கிளம்பியது.
“உன் புருஷன்கிட்டே சொல்லவேண்டியது தானே? எங்க அவன்?…”
“ஐயோ ஆரவ், அஜூக்கு தெரிஞ்சா பெரிய சண்டை ஆகிடும். ஏற்கனவே எதுக்கெடுத்தாலும் என்னோட தலை உருளுது. இதுல இது வேறையா?…”
“சரி விடு. அந்த லேடி ஹாஸ்பிட்டலுக்கு வந்தா நீ கோவிலுக்கு வரமாட்டேன்னு சொல்லிடு…”
“யாரு?… நான் சொல்லி அவங்க கேட்டுக்கற ஆளா? வீட்ல பேசறது பத்தாதுன்னு இங்கயும் உடனே எல்லோரையும் கூப்பிட்டு பெரிய பஞ்சாயத்தாகிடும். அசிங்கபடுத்திடுவாங்க. அஜூ பப்ளிக்ல எல்லோர் முன்னாலயும் அவங்களை ஒன்னும் சொல்லமுடியாதே ஆரவ்…”
“இப்போ என்ன செய்யலாம்னு இருக்க? கோவில்லு போகனும்னா போ. எனக்கென்ன?…” அவனது கோவம் புரிந்தவளாக,
“அதெல்லாம் தானா தோணனும் ஆரவ். எனக்கு தோணலை. அவங்களுக்காக போலியா அங்க போக விருப்பமில்லை. என்ன பண்ணனு தெரியலை. சரி விடு. நீ போய் ரெஸ்ட் எடு. நைட் பேசறேன். பை டா …”
அழைப்பை துண்டித்தவள் அவளது வேலையில் மூழ்கிவிட அங்கே ஆரவ் ஒரு முடிவெடுத்துவிட்டு உறங்க சென்றான். மீண்டும் அவன் கண் விழிக்கும் போது மதியம் இரண்டாகிற்று. வேகமாக எழுந்தவன் நிதானமாக தயாராகி கீழே வர தர்ஷினி அப்போதுதான் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்திருந்தார்.
“என்ன மாம் இன்னைக்கு டெலிவரி கேஸ் இருந்ததா?…” என்றவனிடம் தலையசைத்தவர் வேகமாக தனதறைக்கு செல்ல,
“என்ன பேபின்னு சொல்லாமலே போறீங்க?…” என்ற கத்தலோடு சாப்பிட அமர்ந்தவன் தர்ஷினி வரும் போதே உண்டு முடித்திருந்தான்.
“இன்னைக்கு பையன் தான் ஆரு. உன்னை போலவே சரியான வாலா இருப்பான் போல. அவன் அம்மாவை பாடாக படுத்திதான் பிறந்தான். ஆனா செம க்யூட் தெரியுமா?…” புன்னகையோடு கூறியவரை முறைத்தவன்,
“நான்…. வாலு…. இருக்கட்டும்… வந்து பேசிக்கறேன். டயர்டா இருப்பீங்க. போய் ரெஸ்ட் எடுங்க. நான் வெளில கிளம்பறேன் மாம். வர நைட் ஆகிடும்…”
“நீ நேத்து நைட் டியூட்டில இருந்தியே ஆரு? ரெஸ்ட் எடுக்காம எங்க கிளம்பற?…”
“மாம் வந்து சொல்றேன். தேவையான ரெஸ்ட் எடுத்தாச்சு. பை. டைம் ஆகிடுச்சு…”
அதற்கு மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து புறப்பட அவனையே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்த தர்ஷினிக்கு ஆரவ்விற்கு விரைவில் பெண் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அர்ஜூனும் ஆரவ்வும் சம வயதினர் என்பதால் அவனுக்கும் சீக்கிரம் திருமணம் முடித்தால் என்னவென்று யோசிக்க ஆரம்பித்திருந்தார் சிறிது நாட்களாக.
“ராகவ் வரவும் இதை பற்றி பேசி ஒரு முடிவிற்கு வரவேண்டும்…” என்று நினைத்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்.
சரியாக மூன்றரை மணியளவில் அர்ஜூனின் வீட்டை அடைந்த ஆரவ் அப்போதுதான் கார்த்திக்கும் வந்திருப்பதை பார்க்க கார்த்திக்,
“வாங்க அண்ணா. அர்ஜூன் அண்ணா வீட்ல இல்லையே…”
“ஏன் நான் இங்க வந்தா அவனை தான் பார்க்க வரனுமா?…” முறைப்போடு கேட்ட ஆரவ்வின் விழிகளில் தெரிந்த கோபச்சிவப்பில் எச்சிலை கூட்டி விழுங்கியவன்,
“நான் அப்படி சொல்லலையே. உள்ளே வாங்கண்ணா. அப்பா ஆபீஸ் போய்ருக்காங்க. அம்மா கீழே உள்ள அந்த ரூம்ல இருக்காங்க. சும்மா டிவி தான் பார்த்துட்டு இருக்காங்க…”
ஆரவ் கேட்பதற்கு முன்பே அனைத்து தகவல்களையும் தந்தவன் கல்பனா இருக்கும் அறையையும் காண்பித்துவிட்டு சோபாவில் அமர்ந்துகொண்டான்.
கார்த்திக் காட்டிய அறையில் எட்டிப்பார்க்க கல்பனா கட்டிலில் அமர்ந்தவாறு காலை நீட்டிக்கொண்டு எதையோ கொறித்துக்கொண்டே டிவியில் மூழ்கி இருக்க ஆரவ் சென்று அவருக்கு முன்னால் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்துகொண்டான்.
திடீரென்று உணர்ந்த அரவத்தில் கார்த்திக் என நினைத்து திரும்ப அங்கே ஆரவ்வை கண்டதும் திக்கென்று ஆனது. இவன் எதற்கு வந்திருக்கிறானோ என எண்ணிக்கொண்டே அவனை பார்த்து வரவேற்பாக புன்னகைத்தவர்,
“வாப்பா ஆரவ், எப்படி இருக்க?…” என சம்பிரதாயமாக விசாரித்து வைக்க அவனோ தலையை மட்டும் ஆட்டினான். அவனது அமைதி அவரை உறுத்த,
“இருப்பா நான் உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்…” என கூறியபடி கட்டிலைவிட்டு இறங்க முயல,
“கார்த்திக்…” சப்தமிட்டு அவனை அழைத்த ஆரவ் அவன் வரவும்,
“ப்ரிட்ஜ்ல ஜூஸ் இருந்தா எனக்கு எடுத்துட்டு வா…” எனவும் கார்த்திக் வேகமாக சென்று ஒரு க்ளாஸில் ஜூஸை ஊற்றி கொண்டுவந்து கொடுக்கவும் அதை வாங்கி பருகியவன்,
“நீ போய் உன்னோட வேலையை பாரு கார்த்திக். உன் அம்மாகூட நான் கொஞ்சம் பேசிட்டு இருக்கேன்…”
பேச்சு கார்த்திக்கிடம் இருந்தாலும் பார்வை கல்பனாவிடம் இருந்தது ஆரவ்விற்கு. அதிலேயே கார்த்திக்கிற்கு புரிந்து போனது, தன் தாய் எதையோ இன்று இழுத்துவைத்திருக்கிறார் என்று.
கார்த்திக் அமைதியாக அங்கிருந்து நகர, “அர்ஜூனுக்கு போன்…” என ஆரவ் ஆரம்பிக்க,
“இல்லைண்ணா. நான் எதுவும் போன் பண்ணலை…” பதறியவனை பார்த்து புன்னகைத்த ஆரவ்,
“நோ ப்ராப்ளம் கார்த்திக். பண்ணியிருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. அவனும் வரட்டுமே. ஆனா நான் இந்த ரூமை விட்டு வெளில போற வரைக்கும் உன் அம்மாவாலையும் எங்கயும் போகமுடியாது…”
அழுத்தம் திருத்தமாக கூறவும் சர்வமும் ஆடிவிட்டது கல்பனாவிற்கு. எதனால் இப்படி பேசுகிறான் என்றும் புரிந்தது. மனதிற்குள் ஸ்டெபியை வசைபாடியபடி,
“கோவப்படாதே ஆரவ். இன்னைக்கு நானே எங்கையும் போகலை. பாரு எனக்கு காலெல்லாம் வலிக்குது. அதனால கோவிலுக்கு போகலை…”
திக்கி திணறி கூறியவரை கண்டுகொள்ளாமல் அருகில் இருந்த டீப்பாயை இழுத்து போட்டு அதில் கால்களை வைத்துக்கொண்டு, கல்பனாவிடம் இருந்த ரிமோட்டை வாங்கி சேனல்களை மாற்றியபடி நிதானமாக ஜூஸை குடித்து கொண்டிருந்தான்.
இனி எத்தனை கூறியும் அவன் அசையமாட்டான் என உணர்ந்த கல்பனாவிற்கு ஒருமணிநேரம் கூட அந்த இடத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை. அவன் லேசாக அசந்த நேரத்தில் இறங்கி அறையை விட்டு வெளியேறிவிடலாம் என நினைத்து காலை கட்டிலை விட்டு கீழே வைக்க,
“பட்டாசு வெடிக்கனுமா?…” பார்வையை டிவியில் வைத்துக்கொண்டே கல்பனாவிடம் ஆரவ் கேட்க அதிர்ந்துவிட்டார்.
பின்னே ஸ்டெபியை விளக்கேற்றியதற்காக திட்டி வெளியே அனுப்பிய அன்று அர்ஜூன் கோபத்தில் திட்டிவிட்டு வெளியே சென்றுவிட ஆரவ் அப்போது கல்பனாவின் மேல் இருந்த கோவத்தில் அவர் தனியாக இருக்கும் நேரத்தில் பட்டாசை கொழுத்தி அறைக்குள் போட்டுவிட அலறியடித்துக்கொண்டு வெளியில் வந்து துள்ளிவிழுந்தார்.
அன்றைக்கே ஆரவ் எச்சரித்துவிட்டான். ஸ்டெபியிடம் இதே போல் நடந்துகொண்டால் அர்ஜூனுக்கு மட்டுமல்ல, யாருக்கும் பயப்படமாட்டேன் என்றும், தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியே விட்டான்.
இன்று நினைத்தாலும் பயத்தில் வெடவெடத்தது கல்பனாவிற்கு. அவருக்கு பட்டாசு என்றாலே பயம். முன்பே அலறியவர் இன்று வயோதிகதன்மையில் அவரால் என்ன செய்யமுடியும்?
அதற்கு பயந்தே அவ்விடம் விட்டு நகராமல் அமர்ந்திருக்க ஆரவ் மேல் அவருக்கு கோவம் கொந்தளித்தது. நேரம் ஆக ஆக இயற்கையின் அழைப்பில் மேலும் அசூயை ஆனார் கல்பனா.
அவஸ்தையாக நெளிந்துகொண்டிருந்தாலும் ஆரவ்வின் ஒற்றை பார்வையில் மீண்டும் நேராக அமர்ந்துவிடுவார். இருட்ட ஆரம்பித்ததும் கிருஷ்ணனும் வந்துவிட்டார். ஹாலில் கார்த்திக் அமர்ந்திருக்க,
“அம்மா எங்க கார்த்திக்?…” என கேட்டவர்,
“ஹோ கோவிலுக்கு போறதா சொல்லிருந்தாளே. அதுக்கு போய்ருப்பா…” தானே அதற்கு பதிலும் கூறியபடி கல்பனா இருந்த அறைக்குள் நுழைய அங்கே ஆரவ்வும் முகம் இருள அமர்ந்திருந்த தன் மனைவியையும் பார்த்து திகைத்தார்.
“என்ன கல்பனா, ஏன் ஒரு மாதிரியா இருக்க?…” ஆரவ்வை விடுத்து கல்பனாவிடம் கேட்க அவரோ அழுதுகொண்டே கணவனை நோக்கி எழ நினைக்க அவரை ஒற்றை பார்வையில் அடக்கினான் ஆரவ்.
“ஏய் நீ இங்க என்னடா பன்ற?…” என பதறியபடி கல்பனாவின் அருகில் செல்ல அப்போதும் அமைதியாக இருந்தான். கல்பனா கிருஷ்ணனிடம் கூறவும் அவருக்கோ கோவம் கட்டுக்கடங்காமல் பெருகியது.
கார்த்திக்கை அழைத்தவர், “தன்னிடம் முன்பே சொல்லியிருக்க வேண்டியது தானே, சீக்கிரம் வீட்டிற்கு வந்திருப்பேனே…” என்று அவனை பிடித்து திட்ட அப்போதும் ஆரவ் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. கல்பனாவும் அப்படியே இருந்தார்.
“உன்னோட அராஜகத்திற்கு ஒரு அளவே இல்லை ஆரவ். நான் உங்க அப்பாகிட்ட இதைபத்தி சொல்லித்தான் ஆகனும். முதல்ல அர்ஜூன் வரட்டும். அவனை வச்சு பேசிக்கறேன்…” என்றவர் அர்ஜூனுக்கு அழைக்க அதற்குள் அவனும் ஸ்டெபியோடு வீட்டிற்குள் வந்துவிட்டான்.