தேடல் – 12
அர்ஜூன் வீட்டை விட்டு ஸ்டெபி வெளியே வந்த தகவலறிந்த தர்ஷினி ஆண்டனியின் வீட்டிற்கு செல்ல அவரோடு ஆரவ்வும், ராகவ்வும் சென்றனர்.
முதலில் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்த ஸ்டெபி தர்ஷினி நெருங்கியதும் அவரை கட்டிக்கொண்டு ஓவென சப்தமிட்டு அழ ஆரம்பித்தாள்.
அவளின் வருகையின் காரணத்தையே அறியமுடியாமல் தவித்திருந்த ஆண்டனி மகளின் அழுகையில் சர்வமும் கலங்கி நின்றார். ஸ்டெபி தன்னை அர்ஜூனின் வீட்டிற்கு வந்து அழைத்துசெல்லுமாறு கூறியதிலே எதையோ உணர்ந்தவர் அங்கே சென்றார்.
அப்போதும் ஸ்டெபி ஒரு வார்த்தை கூட அங்கே என்ன நடந்தது என அவரிடம் கூறாமல் இனியும் இங்கே வாழ தான் விரும்பவில்லை என அவரின் தலையில் இடியை இறக்கினாள்.
முதலில் அதிர்ந்தாலும் அங்கே வைத்து மகளை குற்றவாளியை போல நிறுத்தி விசாரிக்க அவர் விரும்பவில்லை. அர்ஜூன் வரட்டும் என காத்திருக்க அவனாலும் ஸ்டெபியின் வெளிநடப்பை தடுக்கமுடியவில்லை.
வீட்டிற்கு வந்த பின்னாலாவது ஏதாவது கூறுவாள் என ஆண்டனி பார்க்க மகளோ வந்ததிலிருந்து வெறித்த பார்வையோடு அமர்ந்திருக்க பயந்துபோனார். அதனால் தர்ஷினிக்கு அழைத்து விவரத்தை கூறி வரவழைத்தார். இப்போது அவளது அழுகையில் திகைத்தவர்,
“என்ன இது இப்படி ஒரு அழுகை. அழும் அளவிற்கு என்ன நடந்திருக்கும்?…” என யூகிக்கமுடியாமல் அவரும் மற்றவர்களும் திகைத்து நிற்க தர்ஷினியோ,
“ஸ்டெபி மாமியார் மருமகள் பிரச்சனை யார் வீட்ல தான் இல்லை. இன்னைக்கு கல்பனா பேசினது ரொம்பவே அதிகம் தான். இதுக்காகவெல்லாம் இப்படி கிளம்பி வந்துடலாமா?…” எனவும்,
“என்ன சொல்கிறார் இவர்? ஸ்டெபியின் மாமியார் அப்படி எதை சொன்னார்? இவள் கிளம்பி வந்து அழும் அளவிற்கு?…” என யோசிக்க,
“மாம் நீங்க எப்போ பேப் வீட்டுக்கு போனீங்க? அங்க என்ன நடந்தது?…” கூர்மையாக அழுத்தமாக கேட்ட ஆரவ்வை பார்த்த தர்ஷினி,
“அடடா இவன் இருக்கையில் இப்படி வாயை விட்டுவிட்டோமே? சும்மாவே ஆடுவானே? கல்பனாவின் பேச்சு அறிந்தால் என்ன நடக்குமோ?…” என பதை பதைத்தபடி பார்க்க,
“இப்போ என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா முடியாதா?…”கிட்டத்தட்ட மிரட்டலே இருந்தது அவனின் குரலில்.
வேறு வழியில்லாமல் நடந்ததை அவர் கூறவும் அவன் ஸ்டெபியை பார்க்க அவளும் அவனின் கோவத்திற்கு பயந்து தனக்கும் அர்ஜூனிற்குமான வாக்குவாதத்தை கூற கிளம்பியேவிட்டான் ஆரவ் அர்ஜூனின் வீடு நோக்கி.
வேகமாக செல்லும் அவனை தடுக்கமுடியாமலும், அழுகையில் கரைந்துகொண்டிருக்கும் ஸ்டெபியை சமாதானம் செய்யமுடியாமலும் தவித்துபோயினர் பெரியவர்கள் மூவரும்.
ஸ்டெபிக்கு கல்பனாவின் மேலிருந்த கோவத்தை விட அர்ஜூன் கூறிய வார்த்தைகளினால் ஏற்பட்ட வலி பெரிதாக தெரிந்தது.
“இவன் திருமணமே செய்யாமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருப்பானாமாம்? அவனின் நிம்மதியை தான் எந்தவிதத்தில் பறித்தேன்?. தான் இல்லாமல் இனி அவன் மட்டும் நிம்மதியாக வாழட்டும்…”
இப்படித்தான் இருந்தது ஸ்டெபியின் எண்ணங்கள்.
அங்கே அர்ஜூனோ உயிரற்ற உடலாக சோபாவில் சரிந்து கிடந்தான். கல்பனாவிற்கும், கிருஷ்ணனுக்கும் இதயத்தில் ஒரே படபடப்பு. மகனின் நிலை கவலையளித்தாலும் அருகில் சென்று ஆறுதல் கூற தைரியம் வரவில்லை அவர்களுக்கு.
ஏதேனும் அவனுடன் பேச்சை வளர்த்தால் உண்மையில் நடந்தது என்னவென விசாரிக்க ஆரம்பித்து விடுவானோ என நினைத்தே ஒதுங்கி நின்றனர். கார்த்திக்கிற்கு பெற்றவர்களின் இந்த விட்டேற்றி தன்மை வெறுத்துப்போனது.
“என்ன மனிதர்கள் இவர்கள்? மகனை சமாதானம் செய்து தேற்றாமல் யாரோ போல தள்ளி நிற்கின்றனரே” என பொருமிக்கொண்டு அர்ஜூனிடம் பேச முயல அவனோ வாயை திறந்தால் தானே?
கார்த்திக் கல்பனாவிடம் நடந்ததை கேட்க அவரோ மூச்சு விடவும் இல்லை. தர்ஷினி வந்தபொழுது ஏதோ வேகத்தில் ஸ்டெபியை குதறவேண்டும் என்ற நோக்கத்தில் வாயை விட்டவர் அதன் பின் தான் யோசிக்கவே செய்தார்.
அவசரப்பட்டு பேசி மகன் வந்தபின் ஸ்டெபி என்ன சொல்வாளோ என பயந்து அர்ஜூனிடம் அவன் வந்ததுமே வாக்குமூலம் போல பூசிமொழுகி குழந்தை ஏக்கம் என்று மட்டும் கூறியவர் அதோடு பிரச்சனை முடிந்தால் போதும் என்று விட்டு விட்டார்.
அவரே எதிர்பாராதது ஸ்டெபியின் நடவடிக்கை. இப்படி வீட்டை விட்டு வெளியேறுவாள் என எதிர்பார்க்காதவருக்கு அப்போதும் கொஞ்சமும் உறுத்தல் இல்லாமல் மகனின் வாழ்விலிருந்தும் இவள் போய்விட்டால் நல்லது என்றுதான் நினைக்க தோன்றியது.
அர்ஜூன் அதிர்ச்சியிலேயே அமர்ந்திருக்க கார்த்திக்கை அழைத்து அர்ஜூனை சாப்பிட வர சொல்லிய கல்பனாவை சாப்பாடு இப்போ ரொம்ப முக்கியமா என்பது போல முறைத்தான் கார்த்திக். அதில் வாயை மூடிக்கொண்டார் அவர்.
இரவை நெருங்கியதும் ஆரவ்வின் பைக் சத்தத்தில் கல்பனாவிற்கு கைகாலெல்லாம் உத்தர தொடங்கியது. கிருஷ்ணன் கல்பனாவை அறைக்குள் செல்லுமாறு சைகை காண்பிக்க அர்ஜூனை நினைத்து தேங்கியவர் மெதுவாக உள்ளே செல்லும் முன் புயல் போல உள்ளே நுழைந்தான் ஆரவ்.
அவனை பார்த்த அர்ஜூன், “டேய் ஸ்டெபி எங்கடா? நீ அவளை கூட்டிட்டு வரலயா? சரி வா நாம போய் கூட்டிட்டு வருவோம்…” ஆரவ்வை பிடித்து கேள்விகேட்டு பதிலையும் கூறிய அர்ஜூனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளி நிறுத்திய ஆரவ் கல்பனாவை பார்த்து,
“நீங்க எங்க வீட்டு பொண்ணை என்ன சொன்னீங்க?…” அவனது உறுமலில் மிரண்ட கல்பனா கிருஷ்ணனின் பின்னால் மறைய,
“அவ என்ன பேசினான்னு அர்ஜூனுக்கு தெரியும். அவன்கிட்ட எல்லாம் சொல்லியாச்சு. பெரியவங்களுக்கு மரியாதை குடுக்காம தான்தோன்றிதனமா முடிவெடுத்து யாரோட பேச்சையும் கேட்காம வீட்டை விட்டு வெளில போனவ இனி எங்க குடும்பத்துக்கு வேண்டாம்…”
“மரியாதையா பேசுங்க மிஸ்டர் கிருஷ்ணன்…” ஆரவ்வின் கோவம் எல்லையை கடக்க ஆரம்பித்தது. அர்ஜூன் எதற்கு இந்த ஆவேசம் என்பது போல பார்த்திருக்க,
“அப்படித்தான்டா பேசுவேன். வீட்டுக்கு வாரிசை பெத்துகுடுக்க முடியலையான்னு கேட்டதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இப்படி திமிரா நடக்கிற பொண்ணு எங்க குடும்பத்துக்கு ஒத்துவராதுன்னு தான் முதல்லையே வேண்டாம்னு சொன்னோம். ஏதோ என் பிள்ளைக்காக பொறுத்து போனோம்…”
“யாருக்கு பொறுமை? அதை பத்தி நீங்க பேசாதீங்க சார். வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை நல்லவிதமா நடத்த துப்பில்லை. உங்களுக்கு மரியாதை ஒரு கேடா?…”
“ஆரவ் நீ அதிகமா பேசற. வேண்டாம். நீ கிளம்பு நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன்…” அர்ஜூனும் கொஞ்சம் அமைதியாகவே எடுத்து கூறி அவனை கிளப்ப முயல,
“உன் வேலையை நீ பார்டா. இவங்க பேசினது உன் பொண்டாட்டியை. நியாயமா இந்த கோவம் உனக்கு வந்திருக்கனும். நான் என்னனு கேட்க வந்தா இப்படி தான் பதில் பேசுவாரா இந்த பெரிய மனுஷன்?…”
“யாரை பார்த்து யார் கேள்வி கேட்கறது? எங்க குடும்ப விஷயத்துல தலையிட நீ யார்? ஒழுங்கு மரியாதையா வீட்டை விட்டு வெளில போய்ரு…” என்ற கிருஷ்ணனிடம்,
“அதை சொல்ல உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? இது என் ப்ரெண்ட்ஸ் வீடு. அர்ஜூன் ஸ்டெபி பேர்ல என்னோட அங்கிள் வாங்கி குடுத்த வீடு. இந்த வீட்டை விட்டு வெளில போக சொல்ற எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை…” தெனாவெட்டாக பதில் கூறியவனின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் சிறுத்துப்போனார் கிருஷ்ணன்.
திருமணத்தின் போதே ஆண்டனி அந்த வீட்டை வாங்கி அர்ஜூன் ஸ்டெபியின் பெயரில் ரிஜிஸ்டர் செய்துவிட்டார். முதலில் இவ்வீட்டிற்கு வரமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்த கிருஷ்ணன் அர்ஜூனின் வேண்டுதலுக்காக மனம் இறங்கினார்.
இப்போது ஆரவ்வின் பேச்சில் தான் எவ்வளவு பெரிய அவமதிப்பிற்கு ஆளாகியிருக்கிறோம் என்று எண்ணி வெதும்பிப்போய் ஆக்ரோஷமாக ஆரவ்வை நோக்கியவர்,
“குறையுள்ள பெண்ணை என் பையன் தலையில கட்டிவச்சிட்டு உனக்கு இவ்வளவு பேச்சா? இனி ஒரு நிமிஷம் கூட வீட்ல நான் இருக்கமாட்டேன். என்னோட சுயசம்பாத்யத்துல வாங்கின சொந்த வீடே அவ்வளோ பெருசா இருக்கும் போது யாருக்கு வேணும் அந்த மலடியோட வீடு?…” என வார்த்தையை விட கொதித்துப்போன ஆரவ் கொத்தாக அவரது சட்டையை பிடித்துவிட்டான்.
தன் தந்தையின் பேச்சில் குற்றுயிரான அர்ஜூன் ஆரவ்வின் செயலில் அதிர்ந்து ஒருமகனாக,
“ஆரவ் என்ன காரியம் செய்யற? விடு அவரை. என்னோட அப்பான்றதை மறந்துட்டியா?…” என ஆரவ்விற்கு சற்றும் குறையாத கோவத்தோடு அவனை விடுவிக்க முயல ஆரவ் முழுமூச்சாக அர்ஜூனை ஒரே தள்ளாக தள்ளினான்.
கார்த்திக் அப்போதும் அர்ஜூனை தான் பிடித்தானே தவிர ஆரவ்வை தடுக்கவில்லை.
“எவ்வளவு தைரியம் இருக்குனும் உங்களுக்கு. இதே வார்த்தையை இந்தம்மாவும் சொன்னதுக்காக கேட்க வந்தா நீங்களும் அதுவும் என் முன்னாலயே ஸ்டெபியை பேசறீங்க? கொன்னுபுதைச்சிடுவேன் ஜாக்கிரதை…”
“வயசுக்கு மரியாதை குடுத்து ஒதுங்கி போனா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? தொலைச்சுக்கட்டிடுவேன். என்ன சொன்னீங்க குறையுள்ள பொண்ணா? அந்த குறை உங்க மகன்கிட்டையும் இருக்கலாமில்லையா? அப்போ நாங்களும் அவனை திரும்ப கேட்கட்டுமா?…”
இதற்கு பதில் சொல்லமுடியாமல் கல்பனாவும் கிருஷ்ணனும் தலை கவிழ அர்ஜூன் அடிபட்ட பார்வை பார்த்தான் ஆரவ்வை. அவனின் வலிதாங்கிய விழிகளை கண்டு கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் தீயென கொதித்து நின்றான் ஆரவ்.
அர்ஜூன் தனக்குள்ளேயே மருக அப்போதுதான் ஆரவ்வின் பேச்சுக்கள் மீண்டும் எதிரொலிக்க துடித்துபோய் கல்பனாவை பார்த்தான் அர்ஜூன்.
“ஆஷாகிட்ட நீங்க அந்த வார்த்தையை சொன்னீங்களா?…” அவனது குரலின் அழுத்தத்தில் கல்பனாவின் அடிவயிற்றில் ஜில்லிட்டது. மகனின் கோவம் அறிந்தவராகிற்றே.
பதில் சொல்லமுடியாமல் விழித்து நிற்க அவரை விடுத்து ஆரவ்வின் அருகில் வந்தவன்,
“என்ன நடந்ததுடா ஆரவ்? ஆஷாவை இவங்க என்ன சொன்னாங்க? அதுக்குத்தான் அவ என்னை விட்டு கிளம்பிட்டாளா?…”
ஆரவ்வின் கரங்களை பிடித்துகொண்டு கெஞ்சிய நண்பனை கண்டவனின் மனம் உருக தொடங்க பிடிவாதமாக முயன்று தன் கோவத்தை நிலைநிறுத்திய ஆரவ்,
“என்ன சொன்ன? உங்கம்மாவுக்காகவா? டேய் மடையா, நீ அவளுக்கு ஆதரவா உறுதுணையா இருந்திருந்தா இந்த உலகமே அவளை அந்த வார்த்தையை சொல்லி பேசிருந்தா கூட அவ உன்னை விட்டு போய்ருக்க மாட்டா. நீ…. நீ ஒருத்த பேசின பாரு. அவ செத்துட்டாடா. இதுக்குத்தான் காதலிச்சு கல்யாணம் செஞ்சீங்களோ?…”
“நேசிக்கிறவளோட முகத்தை வச்சு அவ மனசுல என்ன இருக்குன்னு சொல்றவன் தான்டா உண்மையான கணவனும் காதலனும். அவ முகத்தை கூட பார்க்காம உனக்கு தோணினதை பேசிட்டு போய்ருக்க. உனக்கெதுக்குடா கல்யாணம்?…”
“நீ உங்கப்பாம்மா மேல பாசமா இரு. யாரும் உன்னை தடுக்கலை. அதே நேரம் என்ன நடந்ததுன்னு அவகிட்ட ஒரு வார்த்தை கேட்டு ஆறுதலா அவளுக்கு ரெண்டு வார்த்தை பேசிருக்கலாமே. உன்னோட ஒரு பார்வை போதுமேடா அவ மனசை அமைதிப்படுத்த. அதை செஞ்சியா நீ?…”
“இப்போ சொல்றேன் கேட்டுக்கோ. இனிமேலும் ஸ்டெபி இங்க வரமாட்டா. நானும் அனுமதிக்கமாட்டேன். உன்னால என்ன செய்யமுடியுமோ செஞ்சுக்கோ…” என்றவன்,
“உங்க ரெண்டு பேரையும் இப்போ நான் சும்மா விட்டுட்டு போறது கூட இதோ இங்க மரம் மாதிரி நிக்கிறானே அவனுக்காக மட்டும் தான். இனியும் என்னோட ஸ்டெபியை பத்தி உங்க வாய்ல இருந்து ஒரு வார்த்தையாவது வரட்டும் அன்னைக்குத்தான் உங்களோட கடைசி நாள்…”
அதற்கு மேலும் நிற்காமல் அங்கிருந்து கிளம்ப அவனை பாவமாக பார்த்த அர்ஜூனிடம்,
“உனக்கு எது தெரிஞ்சிக்கனும்னாலும் உன்னோட தர்ஷிமாகிட்ட கேட்டுக்கோ. திரும்ப என் முன்னால வந்து நின்னு எதாச்சும் கேட்ட நான் மனுஷனா இருக்கமாட்டேன் பார்த்துக்கோ…” மிரட்டிவிட்டே சென்றான்.
அதன் பின் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட கார்த்திக் தான் அவனருகில் அமர்ந்து கையை தொட அதை உதறிய அர்ஜூன்,
“இங்க என்னடா நடந்தது?. எல்லோரும் சேர்ந்து என்னை பைத்தியக்காரனா ஆக்கிட்டுருக்கீங்கள்ள?…”
வேதனையோடு மொழிந்தவனிடம் இன்று நடந்த எதுவும் தனக்கு தெரியாதென்றும் ஓரளவிற்கு தெரிந்தவை அனைத்தையும் சிறு தயக்கத்தோடு அர்ஜூனிடம் கார்த்திக் கூற கூற கல்பனாவின் முகம் வெளிறியது.
ஆரவ் கிளம்பிய ஒருமணி நேரத்தில் தர்ஷினியே அர்ஜூனை அழைக்க,
“தர்ஷிமா நீங்க கூட என்கிட்ட எதுவும் சொல்லலை. உங்களுக்கும் நான் வேண்டாமா?…” என உடைந்துபோய் கேட்க மறுபுறம் தர்ஷினி பதறிவிட்டார்.
“அஜூ அப்டிலாம் நினைக்காத. ஸ்டெபி நிச்சயம் மனசு மாறி உன்னோட வாழ்வா. நம்பிக்கை இழக்காதே…” அவருமே அழுகையோடு கூற,
“அப்போ பெருசா நடந்திருக்குன்னு தானே அர்த்தம். எனக்கு இப்போ நீங்க சொல்லனும்…” என பிடிவாதமாக கேட்டு அவரிடம் நடந்தவைகளை தெரிந்துகொண்டவன் கல்பனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற கிருஷ்ணன் செய்வதறியாமல் நின்றார்.
நேராக ஹாஸ்பிட்டல் சென்ற அர்ஜூன் தனக்கென உள்ள அறையில் சென்று அமர்ந்தவன் அடுத்த இரண்டு நாட்களும் வீட்டிற்கே செல்லவில்லை. அதன் பின் ஸ்டெபியிடம் தான் பேசியதற்கு மன்னிப்பை வேண்டியும் நிற்க அவளோ அவனை கண்டுகொள்ளாமலே கடந்து சென்று அவனை துடிக்கவைத்தாள்.
அதை புரிந்த ஆரவ் அவனை விட்டு தள்ளியே நின்றான். ஆனால் ஆண்டனியும் ராகவ்வும் அர்ஜூனிற்கு பக்கத்துணையாக நிற்க ஆரவ் கிடைக்கும் சமயங்களில் அர்ஜூனை அவனின் தவறை சுட்டிக்காட்டி வாட்டி எடுப்பதும், ஸ்டெபிக்கு எதிர்காலத்தை விளக்கி அர்ஜூனுடன் வாழ வைக்கவுமென போராடிக்கொண்டிருந்தான்.
அர்ஜூன் அவனது பெற்றோர்களிடம் பேசுவதையே குறைத்துகொண்டதை விட கல்பனாவை அம்மா என்று அழைப்பதை அறவே நிறுத்திவிட்டான்.
அதனால் பொறுமையிழந்த கிருஷ்ணன் ஒதுங்கியே நின்றால் தாங்கள் வீட்டை விட்டு வெளியேறி தன் சொந்தவீட்டிற்கு செல்கிறேன் என மிரட்டிப்பார்க்க அர்ஜூன் கிளம்புங்கள் என ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டான். அதன் பின்னும் அங்கிருக்க விரும்பாமல் வெளியேறினார் கல்பனா, கார்த்திக்கோடு.
“தான் என்ன தவறாக பேசினேன்? குழந்தை ஏக்கம் இருக்காதா? கேட்டது தவறா?…” என்றவரிடம்,
“கேட்டது தவறில்லை கேட்கப்பட்ட விதம் தான் தவறு…” என விளக்கி விலகி நின்றான்.
ஆனால் அவனது ஆஷாவிடம் அவனால் விலகி நிற்கமுடியவில்லை. அவளிடம் வார்த்தையாடுவதை நிறுத்தி பார்வையால் தன்னை புரியவைக்க முயன்றான். ஸ்டெபியோ எதையும் ஏற்றுகொள்ளபோவதில்லை என பிடிவாதமாக இருந்தாலும் யோசிக்காமல் இல்லை.
வெறும் வறட்டு பிடிவாதத்திற்காக மட்டுமே முதலில் அர்ஜூனை விட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். தனது உடலின் நிலை தெரியும் வரையில் அவன் மீதான அவளின் கோவம் அப்படியே தான் இருந்தது.
என்று தன்னால் ஒரு குழந்தையை சுமக்கமுடியாது என்று தெரிந்ததோ அன்றே முடிவெடுத்தாள். அர்ஜூனை விட்டு விலகியது விலகியதாகவே இருக்கட்டும் என்றும் முடிவெடுக்க என்னவோ சுலபமாக இருந்தது.
ஆனால் தன்னையே வட்டமிடும் அர்ஜூனின் விழிகளில் வழியும் காதலிலும் ஏக்கத்திலும் ஸ்டெபியின் உள்ளம் அந்த முடிவை செயலாக்கவிடாமல் தடுமாறியது. தறிகெட்டு அவன் பின்னே ஓடும் மனதை மிக சிரமத்தோடு தான் இவளால் கட்டிவைக்க முடிந்தது.
ஆனால் அர்ஜூனை விட்டு பிரிவதற்கான காரணத்தை எக்காரணம் கொண்டும் யாரிடமும் அவள் கூறவில்லை. அவன் மீதும், அவன் குடும்பத்தின் மீதும் கோவமாக இருப்பதாகவே காட்டிகொண்டாள். ஆரவ்விடம் கூட.
எத்தனை முயன்றும் அவளது பழைய நினைவுகளின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியவில்லை. இதுநாள் வரை அனுபவித்த துயரங்களும் தனிமையின் தவிப்புகளும் அவளை கொன்று தின்று கொண்டிருந்தன.
இன்றுவரை யாருக்கும் தெரியாது என்று நினைத்த தனது ரகசியம் தன் திருமணத்திற்கு முன்பே அவளின் ஆருயிர் காதல் கணவனுக்கு தெரிந்திருக்கிறது. அதையும் தாண்டி அதே காதலோடு தன்னை கைபிடித்தவனின் காதலில் ஸ்டெபியின் நெஞ்சம் விம்மியது.
அருகில் துயில் கொண்டிருக்கும் கணவனை திரும்பி பார்த்த ஸ்டெபியால் இப்போதும் நம்மமுடியாத ஒரு உணர்வு. இவனருகில் இந்த நெருக்கத்தில் இருப்பது நிஜம் தானா என நினைத்து நினைத்து சந்தோஷித்தாள்.
நடக்கவே நடக்காது, மீண்டும் இணையவே போவதில்லை என்று இரண்டு வருடங்களாக கனவுலகில் மட்டுமே அவனோடு வாழ்ந்துகொண்டிருந்த ஸ்டெபியின் பிரமிப்பு சற்றும் அகலாமல் இருக்க அர்ஜூனை நெருங்கி அவனது நெற்றியில் இதழ் பதித்து நிதர்சனத்தை உணர்ந்துகொண்டாள்.
அவளது இதழ் தீண்டலை உணர்ந்த அர்ஜூன், “ஆஷா தூங்குடா…” என உறக்கத்திலேயே அவளை இன்னமும் இறுக்கிக்கொண்டு மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
அவனது செயலில் கானகம் சென்று அலைந்து திரிந்து வீடு திரும்பிய உணர்வை அவனது அணைப்பு அவளுக்கு அளித்தது. இத்தனை வருட அலைப்புருதல்கள் எல்லாம் ஓய்ந்து ஆசுவாசமாக இன்னும் சுகமாக அவனை நெருங்க,
“ஆஷா தூங்குன்னு சொன்னா கேட்கனும். நான் தெளிவா முழிச்சா உன்னோட தூக்கத்துக்கு இன்னைக்கு லீவ் விடவேண்டியது தான்…” விழிகளை திறவாமலே அவளை மிரட்ட,
“எனக்கு தூக்கம் வரலை அஜூ. என்னோட சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இல்லை. இது நிஜமா? நீ என் பக்கத்தில இருக்கியா? இப்போ நினச்சாலும் உடம்பெல்லாம சிலிர்க்குது தெரியுமா?…” அதற்குமேல் அவளை பேசவிடாமல் அவளின் இதழ்களை சிறையிட்டவன்,
“நிஜம்னு மேடம்க்கு இப்போ பீல் ஆகுதா? இல்லை இன்னும்…” என கண்கள் சிரிக்க கூறியவனை பார்த்தவளின் விழிகளில் தொலைய இருந்தவன்,
“இன்னைக்கு என்னை ஒரு வலி ஆக்காம நீ விடமாட்ட. எனக்கு இந்த நிமிஷத்தை இந்த நொடியை இப்படியே ரம்யமா அனுபவிக்கனும்னு தோணுது. வேற எந்த சந்தோஷமும் வேண்டாம் ஆஷா…” என்றவனை ஸ்டெபி புரியாமல் பார்க்க,
“உன்னோட அருகாமையே எனக்கு அப்படி ஒரு நிறைவை கொடுக்குது. ஆனா உன்னோட இந்த பார்வையும் அதிலிருக்கும் ஈர்ப்பு சக்தியும் என்னை உன்னோட இந்த நொடி கலந்துவிட சொல்லுது…”
அவனின் பேச்சில் முகம் சிவந்தவள் இதிலென்ன தயக்கம் என்பது போல பார்த்திருக்க,
“இன்னைக்கு எனக்கு உன் அருகாமையை தவிர வேற எதுவும் வேண்டாம். என் மனம் முழுக்க இதை இந்த நாளை காதலோட மட்டுமே அனுபவிக்கனும்னு தோணுது…”
“சோ…” என குறும்புடன் ஸ்டெபி கேட்க,
“சோ நீ பேசாம என்னை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்டா ஆஷா…” அவனின் கெஞ்சலை பார்த்து சிரித்தவளின் கண்களில் கொஞ்சல் இருந்தது. அதில் முறைத்தவன்,
“நீ சரிப்படமாட்ட. வா நம்ம வீட்டுக்கு போகலாம்…” என கூறியவாறே எழுந்துகொண்டு அவளையும் எழுப்ப அதில் அதிர்ந்தவள்,
“இதை எப்படி யோசிக்காமல் போனேன்? மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று தன்னால் வாழமுடியுமா? அதுவும் எந்தவிதமான குற்றவுணர்வும் இன்றி…”
இவளின் சிந்தனை இப்படி இருக்க அர்ஜூனோ அதை புரிந்துகொண்டு,
“நம்ம வீடு நமக்கு மட்டுமேயான வீடு. இப்போ அங்கதான் நான் திரும்ப உன்னோட நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கனும்…” என்றவனை முகம் முழுவதும் வெளிச்சம் பரவ பார்த்தாள் ஸ்டெபி.
“அஜூ நீங்க நிஜமாவே சொல்றீங்களா?…” உள்ளம் படபடக்க கேட்டவளின் அருகில் அமர்ந்தவன் அவளின் முகத்தை நெருங்கி,
“திரும்பவும் நிஜம்னு உனக்கு கன்ஃபார்ம் பண்ணிக்கனுமா ஆஷா?…”
அவன் கேட்கவருவது புரிந்த ஸ்டெபி அவனை படுக்கையில் தள்ளி தானும் அவனருகில் படுத்தவள்,
“எதுவானாலும் மார்னிங் பேசலாம். தூங்கலாம் அஜூ…”
“ஹ்ம் தூங்கலாம். நாளைக்கே நம்ம வீட்டுக்கு போகனும் ஆஷா. உன்னோட நான் கொண்ட முதல் கூடல் அந்த வீட்ல தான். நீ இல்லாத இந்த வெறுமையான நாட்கள்ல கூட என்னை உயிர்ப்போட வச்சிருந்தது அந்த வீட்ல நிறைஞ்சிருக்கும் உன்னோட நினைவுகளும் அங்கே நாம் வாழ்ந்த அழகான தருணங்களும் மட்டுமே…”
“அதே நேரம் என்னோட தனிமை என் கண்முன்னால நின்னு பூதாகாரமா என்னை மிரட்டும். போய் அவளை தூக்கிட்டு வந்து இங்க வச்சுக்கோன்னு என் மனசு என்னையே பாடாபடுத்தும் தெரியுமா?. என்னை, என் தனிமையில் மூச்சுவிட வைப்பதும், மூர்ச்சையாக்குவதும் உன்னோட நினைவுகள் மட்டும் தான்…”
“அந்த வீட்ல நினைவுகளுக்குள்ளேயும், நிஜத்திலும் நான் போராடும் களைச்சுட்டேன்டா. திரும்பவும் நான் உன்னோட இணையும் அந்த நொடி அந்த வீட்ல தான் நடக்கனும்னு நான் எப்போவோ முடிவெடுத்துட்டேன். சோ நாளைக்கே நம்ம வீட்டுக்கு போறோம். புதுசா நம்ம வாழ்க்கையை வாழறோம்…” என்றவனின் பேச்சில் குறும்பாய் இவள் புன்னகைக்க,
“ம்ஹூம் உன்னோட இந்த பார்வை, சிரிப்பு, உன் நெருக்கம் என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணுது. அடங்கமாட்டியா நீ?…” என்றவன் அவனின் தோளில் இவளது முகத்தை புதைத்து தன்னுடைய விழிகளை மூடினான். அவளும் இன்பமாக அவனோடு ஒண்டிக்கொண்டாள்.
ஏனோ ஸ்டெபியின் மனதில் அர்ஜூனின் வார்த்தையில் எல்லையில்லா நிம்மதி வந்தமர்ந்தது. அதனால் உறக்கமும் வந்தது. அவாளி உணர்ந்தவன் ஒரு குறுநகையோடு அவளுடன் மீண்டும் உறங்கலானான்.
அயர்ந்த தூக்கத்தில் ஸ்டெபியின் மொபைல் வைப்ரேட் ஆக அதில் விழித்தவள் ஹாஸ்பிட்டலில் இருந்து போன் எனவும் எடுத்து பேசினாள்.
அவசர கேஸ் ஒன்றை தாங்கி வந்திருக்கும் செய்தியில் சுறுசுறுப்பானவள் மணியை பார்க்க அது நள்ளிரவு இரண்டரை என்றது. உடனே எழுந்து கிளம்பி சென்றாள் அர்ஜூனின் மொபைலில் குறுந்தகவலை பதிந்துவிட்டு.
கிளம்பும் போதே ட்ரைவரை அழைத்து காரை எடுக்க சொல்லியிருந்தவளுக்கு வாயிலில் காத்திருந்தார் டிரைவர். விரைந்து ஹாஸ்பிட்டல் சென்றாள்.
—————————————————-
ஆரவ்விற்கு விடியலுக்கு முன்பே விழிப்பு தட்ட எழுந்தமர்ந்தவன் அருகில் கலைந்த நிலையில் அழகாக துயில் கொண்டிருக்கும் மனைவியை பார்க்க பார்க்க அவனின் இதயத்தில் ஏதோ ஒரு நிறைவு.
இனி வாழவிருக்கும் மொத்த வாழ்க்கையையும் அன்றே வாழ்ந்துமுடித்த ஒரு திருப்தி புன்னகை அவனின் முகத்தில். ஜென்ம ஜென்மமாக வாழ்ந்துவிட்ட உணர்வு. தானா இப்படி ஒரு காதல் தீவிரவாதியானேன்? என தன்னை நினைத்தே அதிசயித்தான்.
“எங்கிருந்து வந்தாயடி…” என முணுமுணுத்துக்கொண்டே அவளை நெருங்கியவன் நெற்றியில் இதழ்பதித்து அவளை அணைத்து கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டான். இதை விட இனி இவ்வுலகில் தனக்கு வேறேதும் வேண்டாம் என்ற மனப்பான்மை.
கடந்த சில நாட்களில் அவனது வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள்? நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.
நிலாவை சந்தித்ததிலிருந்து அவளை காதலித்து அவளையும் தன்னை நேசிக்க வைத்து இருவருக்கும் திருமணம் செய்ய என்னவெல்லாம் செய்து அவளின் உடல் பிரச்சனையை நினைத்து கலங்கி இன்று அவளோடு வாழ்ந்தும் விட்டான்.
முந்தைய இரவில் அவளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையிலும் அவளை அதிக கஷ்டத்திற்குள்ளாக்காமல் ஒவ்வொரு நிமிடத்திலும், அவளின் முகம் பார்த்து பார்த்து அவளுக்கு ஏதேனும் கஷ்டமாக இருக்கிறதா என கேட்டு கேட்டு நிலாவை ஒரு வழியாக்கி அவளோடு ஒன்றாக கலந்தான்.
இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருந்தது அவனுக்கு. தனது கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் அவள் திணறி திமிறிய அழகில் மொத்தமாக அவளிடம் தன்னை அர்ப்பணித்தான்.
நேற்றைய கனவுகளில் இவன் மிதக்க அவனின் நிலவோ, “ஆ…ரவ்… ஜீவா…” என மெல்ல முணங்கியது.
அதில் முதலில் திகைத்தவன், “ஜீ…வா…. தலை….. வ…லிக்குது… அப்…பா…. அவங்க… அடி…க்காங்க…” மூச்சுக்கு திணறுவது போல நிலா கூற நிறுத்தி நிறுத்தி சடாரென எழுந்தமர்ந்தான் ஆரவ்.
“நிலா, என்னடா. என்னை பார் இங்கே…” என பதறியவன் ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்தி அங்கே டீப்பாயின் அருகில் இருந்த சிறு பெட்டியை எடுத்தான்.
ஏற்கனவே நிலாவிற்கு போடவேண்டிய டேப்லட்ஸ், இன்ஜெக்ஷன் அனைத்தையும் தன்னுடைய அறையில் வைத்திருந்தான்.
உடனடியாக செயல்பட்டு இதுபோன்ற நேரங்களில் அவளுக்கு தரவிருக்கும் சிகிச்சையை அளித்தவன் இன்ஜெக்ஷன் உதவியால் மீண்டும் அவள் உறக்கத்திற்குள் செல்ல இவன் அவளை நன்றாக படுக்கவைத்துவிட்டு கட்டிலில் இருந்து கீழே இறங்க முயன்றான்.
அவனின் கைகளை பிடித்து தடுத்த நிலா அரை மயக்கத்தில்,
“என் கூடவே இருங்க ஆரவ்…” என வேண்ட நொடியில் நெருங்கியவன் அவளை அள்ளி தன் மார்பில் போட்டுக்கொண்டான். சிறிது நேரத்தில் அவள் மயக்கத்திற்குள் செல்ல அவளின் நிலையில் கண் கலங்கினான் ஆரவ்.
முதல் முதலில் தன் பேரை கூறி அழைத்ததை நினைத்து மகிழவிடாமல் தடுத்தது அவனுள் மருக வைத்தது அவளின் துடிப்பும் வேதனையும்.
அடுத்து என்னவென யோசித்துகொண்டிருந்தவனுக்கு அப்போதுதான் உரைத்தது நிலாவின் பேச்சு.
“என்ன சொன்னாள்? …. ஜீவாவா?… அவளின் அப்பாவையும் அழைத்தாளே?…” அவளின் நியாபகங்கள் அவளை நெருங்க ஆரம்பித்துவிட்டதோ என நினைத்தவன் கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை.
“யார் அந்த ஜீவா?…” என்ற யோசனைகளில் தான் இருந்தான்.
எந்த சூழ்நிலையிலும் நிலா தன்னை தன் காதலை மறக்கமாட்டாள். தன் மீது அவள் கொண்டிருக்கும் காதலை நேசத்தை உறுதியாக நம்பினான்.
அவனின் நம்பிக்கை பொய்த்து போகப்போவதை அறியாமல் திடமாக நின்றான்.