தேடல் – 13
உறங்கும் நிலாவின் முகத்தையே தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்த ஆரவ் சிறிது நேரத்தில் தர்ஷினியை போனில் அழைத்து எழுப்பி தனக்கு காபி வேண்டுமென்று கூறிவிட்டு குளிக்க சென்றான்.
தர்ஷினியே அவனின் அறைக்கு வந்தவர் வெளியில் இருந்து அழைக்க,
“என்ன மாம் நீங்க ஏன் எடுத்திட்டு வந்தீங்க? குடுத்தனுப்பிருக்க வேண்டியது தானே?…” என கடிய அவனை முறைத்தவர்,
“டைம் என்ன ஆகுது? இந்நேரம் வேலைக்கு வந்திருவாங்களா? காபி வேணும்னா அது எந்நேரம்னு பார்க்கவே மாட்ட. வேணும்னா வேணும் தான் உனக்கு…” அவர் கூறியதில் இருந்த உண்மையில் அசடு வழிந்தவன்,
“சரி உள்ளே வாங்க…” என அவரையும் அழைத்துகொண்டு அறைக்குள் நுழைய அவனை தொடர சங்கடமடைந்த தர்ஷினி,
“இல்லை ஆரவ், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ போய் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கேன். இன்னும் டைம் இருக்கு பாரு. நானும் போய் தூங்கறேன்…” என நழுவ பார்க்க,
“யாரு? நீங்களா தூங்குவீங்க? சரி வாங்க, இங்க ஹால்ல உட்கார்ந்துக்கலாம். நிலா தூங்கறா. அவ எழுந்ததும் காபி கொடுப்போம். இப்போ இந்த காபியை நாம ரெண்டுபேரும் சேர்ந்து குடிக்கலாம் சரியா?…”
தர்ஷினியையும் இழுத்துகொண்டு மாடியில் இருக்கும் ஹாலில் ஆரவ் அமர்ந்துகொள்ள அவனோடு சேர்ந்து தானும் காபியை குடிக்க ஆரம்பித்தார். ஆரவ்வின் முகத்தை ஆராய்ச்சியுடன் பார்த்து எதுவும் கண்டுகொள்ளமுடியாமல் திணறித்தான் போனார் தர்ஷினி.
“குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்திருப்பார்களா? இவன் இப்படி அதிகாலையிலேயே எழுந்துவிட்டானே? ஏன்?” என யோசித்தபடி அமைதியாக காபியை அருந்த ஆரவ் அதற்குள் குடித்து முடித்திருந்தான்.
“மாம் என்னை பத்தி எந்த கவலையும் வேண்டாம். நாங்க சந்தோஷமாதான் இருக்கிறோம். இப்போ உங்களோட மனம் நிம்மதியானதா?…” தர்ஷினி திகைத்தார். கண்டுகொண்டுவிட்டானே என்று அவனை முறைக்க ஆரவ் குறுஞ்சிரிப்போடு அவரை பார்த்து,
“ஆனாலும் நீங்க இவ்வளவு யோசிக்கக்கூடாது மாம். கேட்க நினைக்கிறதை நேரடியா கேட்கவேண்டியது தானே?. என்கிட்டே உங்களுக்கு என்ன தயக்கம்?…” என்றவன்,
“நிலா இப்போதான் தூங்கவே ஆரம்பிச்சிருக்கா. எனக்கு சந்தோஷத்துல தூக்கமே வரலை. அதான் எழுந்து குளிச்சுட்டேன். காபி குடிக்கனும்னு தோணுச்சு. உங்களை எழுப்பிட்டேன்…”
ஆரவ்விற்கு எப்போது வீட்டில் காபி குடிக்க வேண்டும் என்றாலும் அது தர்ஷினி கையில் தான். வீட்டிலிருக்கும் வேளைகளில் அவரை பாடாகப்படுத்தியாவது அவரிடம் ஓயாமல் காபியாக வாங்கி குடித்துக்கொண்டே இருப்பான்.
தர்ஷினி இது என்ன பழக்கம் என்று கண்டித்தும் பலனில்லை. அவரின் பேச்சை காதில் வாங்காதவன் போல இருந்துவிடுவான். ஆனாலும் தன் காரியத்தை சாதித்தபடி. இன்றும் நாலரை மணிக்கே காபியை கேட்டு வாங்கியும் விட்டான்.
“உன் பிடிவாதம் இருக்கு பாரு. இதை நிலாக்கிட்டையும் காட்டாதே…” என்ற தர்ஷினியை பார்த்து புன்னகைத்தவன்,
“நிலாக்கிட்ட ஏன் காட்டபோறேன்? அதுக்குதான் நீங்க இருக்கீங்களே?…” என கண்ணடிக்க அவனை அடிப்பது போல பாவனை செய்த தர்ஷினியை கட்டிகொண்டவன்,
“மாம் ஐம் சோ ஹேப்பி. இந்த நிமிஷம் இந்த உலகத்துல சந்தோஷமா இருக்கிற ஒருத்தர் யாருன்னு கேட்டா நான் மட்டும் தான்னு சொல்வேன்…”
முகம் நிறைய புன்னகையோடு பூரிப்பாக பேசியவனை பார்க்க பார்க்க தர்ஷிக்கு கண்கள் பனித்தது. மகனின் இந்த சந்தோஷம் நிலையாக இருக்க,
“அம்மா தாயே துர்கா தேவி. என் மகனின் முகத்தில் தெரியும் இந்த நிறைவையும், சந்தோஷத்தையும் என்றைக்கும் வாடாமல் வைத்திரு தாயே” என வேண்டிக்கொண்டார்.
என்னதான் ஆரவ்வின் பேச்சில் மகிழ்ந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்கவிடாமல் நிலாவின் உடல்நிலை கண்முன் தோன்றி அவரை அச்சம் கொள்ளவைத்தது.
இன்னும் மூன்று மாதத்தில் நடக்கவிருக்கும் ஆப்பரேஷனில் நிலாவிற்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் நல்லபடியாக காப்பாற்றிகொடுக்க அவளின் ஆதர்ஷகடவுளான துர்கை அம்மனிடம் வேண்டுதல்களை முன்வைத்தார்.
அதை தவிர்த்து மற்றவற்றை பேசிக்கொண்டிருக்க தர்ஷினி கேட்டுக்கொண்டே அவனை பார்த்தபடி அமர்ந்திருக்க பேச்சுக்களின் இடையே ஆரவ் ஐந்தாறு முறை கண்கள் செருகவும் மீண்டும் விழிப்பதுமாக இருந்தான்.
அதை கண்ட தர்ஷினி, “ஆரவ், இப்போதான் ஐந்தாகுது. போய் தூங்கு. நானும் தூங்கறேன். ஏனோ எனக்கும் இன்னைக்கு தூக்கமாக வருது…” என்றபடி ஒரு கொட்டாவியை விட்டுக்கொண்டே எழுந்துகொள்ள ஆரவ்வும் தலையாட்டியபடி எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் மீண்டும் தனதறைக்கு வந்தவர் உறங்காமல் அமர்ந்திருக்க இரவு ஆண்டனிக்கு துணையாக இருந்த ராகவ் இன்னும் வந்திருக்கவில்லை. அதனால் தர்ஷினி தனித்து இருந்தார் அந்த அறையில்.
எப்படியும் வடிவும் நாராயணனும் எழுந்து வர நேரமாகும் என நினைத்தவாறே என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்தார்.
மகனின் எதிர்காலம் குறித்த கவலையோ, நிலாவிற்கு பழைய நினைவுகள் தெரிந்தால் என்ன நடக்கும்? மகனின் நிலை என்ன? என்ற வருத்தமோ அவரை மனச்சோர்வுக்கு உள்ளாக்கி உறக்கத்தில் தள்ளியது.
ஜன்னல் வழி வெளிச்சம் வரும் வரையில் தூக்கத்தில் இருந்த அர்ஜூன் விழித்துக்கொள்ளவும் அவனது கரங்கள் வழமை போலே அருகில் ஸ்டெபியை தேடி காணவில்லை என்றதும் சட்டென எழுந்து அமர்ந்தான்.
“நேற்று நடந்தது அனைத்தும் கனவோ” என நினைத்த நிமிடம் அவனின் இதயமே செயலற்றுவிட்டது போல ஆனது.
ஆனாலும் நேற்று இரவு தானும் ஸ்டெபியும் பேசியது அனைத்தும் மனதில் உலா வர தன் உணர்வு பொய்க்காது என நினைத்தவன் எழுந்து சென்று முகத்தை அலம்பிவிட்டு வெளியே வர கதவு தட்டப்படும் சத்தத்தில் அதை திறந்தான்.
வெளியே அவ்வீட்டின் உதவியாள் அர்ஜூனின் பேக்கை கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவன் நொடியில் குளித்து கிளம்பி வந்து தனது மொபைலை எடுக்க அதில் ஸ்டெபியின் மெசேஜ் இருந்தது.
உடனே அவளுக்கு அழைக்க அழைப்பை ஏற்ற ஸ்டெபி, “குட்மார்னிங் அஜூ, எழுந்தாச்சா?…” எனவும்,
“ஹ்ம் எழுந்தாச்சு. நீ என்ன மார்னிங்கே என் கண்ணுல படாம எஸ்கேப் ஆகிட்ட?…”
“அதெல்லாம் ஒண்ணும் எஸ்கேப் ஆகலை. ஏற்கனவே ஹாஸ்பிட்டல்ல என்ன அவசரம்னாலும் ஆரவ்வை டிஸ்டர்ப் செய்யகூடாது. என்னை மட்டுமே கூப்பிடுங்கன்னு சொல்லியிருந்தேன். நல்ல வேளை நேத்து எமர்ஜென்சின்னு என்னை கூப்பிட்டாங்க…”
“சரி இப்போ சொல்லு. அந்த பேஷன்ட் இப்போ எப்படி இருக்காங்க?…”
“இப்போ நோ ப்ராப்ளம். அவர் சேஃப். ஆபத்துக்கட்டத்தை தாண்டியாச்சு…”
“ஹ்ம் ஓகே எப்போ வீட்டுக்கு வர?…”
“இதோ கிளம்பிட்டேன். பார்க்கிங் பக்கத்துல வந்தேன். நீங்களும் கால் பண்ணிட்டீங்க. இன்னும் ஒன் ஹவர்ல வீட்ல இருப்பேன்…” என்றவள் அழைப்பை துண்டிக்க அர்ஜூன் அதை பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.
தொலைத்த சந்தோஷம் கை சேர்ந்த நிம்மதியில் முகம் விகசிக்க எழுந்து வெளியில் வந்தவன் பழைய கம்பீரத்தோடு ஹாலில் அமர்ந்திருந்த ஆண்டனியை நெருங்கினான்.
“அங்கிள் காபி குடிச்சாச்சா?…” என்றபடி அவரருகில் சென்று அமர்ந்தவன் அன்றைய நாளிதழை எடுத்து படிக்க ஆரம்பிக்க ராகவ்வும் ஆண்டனியும் ஒருவித எதிர்பார்ப்போடு அவனை பார்த்திருந்தனர்.
அதை அர்ஜூனும் உணராமல் இல்லை. ஆனாலும் ஒன்றும் பேசவில்லை. ஆண்டனியே பேச வாய் திறக்கும் பொழுது ஆரவ் வந்து சேர்ந்தான்.
அவனிற்கு இன்னும் விஷயம் தெரிவிக்கப்படவில்லையே என்று நினைத்து ஆண்டனி பார்த்திருக்க,
“டேய் டக்கு. வா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…” என கூறி இழுத்துசென்றான்.
அவன் பின்னால் சென்றவன், “சொல்லுடா என்ன விஷயம்? நிலாவுக்கு ஒண்ணுமில்லையே?…” கொஞ்சம் பதட்டத்தோடே அர்ஜூன் கேட்க அதை ஆமோதிப்பது போல அதிகாலை நடந்ததை கூறினான் ஆரவ்.
“என்னடா சொல்ற? யார் அந்த ஜீவா? ஒருவேளை?…” என இழுக்க அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த ஆரவ்,
“என்ன சொல்ல வர? முழுசா சொல்லி முடி…” அமர்த்தலாக பார்த்துக்கொண்டே கேட்கவும்,
“ஜீவான்னு சொன்னதா சொன்னியே. அப்போ நிலாவுக்கு நெருக்கமானவங்களா தானே இருக்கனும். அதான்…” என யோசனையாக ஆரவ்வை பார்க்க அவனோ அதில் சற்றும் அலட்டிக்கொள்ளாமல்,
“நிச்சயமா நெருக்கமானவங்களா தான் இருக்கனும். ஒரு ப்ரதர் இல்லை சிஸ்டரா, இல்லை க்ளோஸ் ரிலேஷனா, டியரஸ்ட் ப்ரெண்டா இப்படி எதுவானாலும் இருக்கலாமே. இதுல என்னடா உனக்கு யோசனை…”
இப்போதும் அர்ஜூனுக்கு ஆரவ்வை நினைத்து கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. தெளியாத முகத்தோடு தன்னை பார்த்த நண்பனை கண்டு,
“உன்னோட எண்ணவோட்டம் என்னனு எனக்கு புரியாமல் இல்லை அஜூ. என் நிலா ஆரவ்னு சொல்லும் போது அந்த குரல்ல தெரிஞ்ச காதல் ஜீவான்னும், அப்பான்னும் சொல்லுறப்போ தெரியலை. அதுல வெறும் பாசம் மட்டும் தான் தெரிஞ்சது…”
“அவளோட காதலனா என்னால அவளோட ஒவ்வொரு உணர்வுகளையும் புரிஞ்சிக்க முடியும். அதனால உறுதியா சொல்றேன்…” அவன் முகத்தில் தெரிந்த தீர்க்கத்தில் அசந்துவிட்டான் அர்ஜூன்.
“உன்னோட இந்த நம்பிக்கை எனக்கு வியப்பா இருக்கு ஆரவ். ரொம்ப பெருமையாவும் இருக்கு…”
ஆரவ்வின் முதுகில் தட்டிகொடுத்தவன், “சரி நிலா எழுந்தாச்சா?…” என் அகேட்க,
“ஹ்ம் மேடம் ரெடியாகிட்டு இருக்காங்க. நான் எதாச்சும் அவளுக்கு ஹெல்ப் பண்ணமுடியுமான்னு பார்க்கிறேன்…” குறும்பு சிரிப்போடு அர்ஜூனை கடந்து மாடிக்கு சென்றுவிட்டான்.
அவன் செல்லும் திசையை பார்த்தவாறே அர்ஜூன் நிற்க ஸ்டெபியும் வந்து சேர்ந்தாள் புத்துணர்ச்சியோடு.
“ஸ்டெபி கிளம்பியே வந்தாச்சு போல?…” என கேட்டுகொண்டே அவளுக்கு ஒரு காபி கோப்பையை கையில் கொடுத்துவிட்டு வடிவை தேடி சென்றார் தர்ஷினி.
“வாம்மா ஸ்டெபி. ஹாஸ்பிட்டல் போய்ட்டு இப்போதான் வர போல?…” ஸ்டெபியிடம் பேஷன்ட் பற்றி பேச்சுக்கொடுத்துகொண்டே அர்ஜூனை பார்த்தார் ராகவ்.
மொபைலில் எதையோ பார்த்துகொண்டிருந்த அர்ஜூன் நிமிரவும் இல்லை. எதுவும் பேசவும் இல்லை. இதை கண்டு ஆண்டனி வாயே திறக்கவில்லை.
நாராயணனும் வடிவும் கூட வந்துவிட அனைவரும் ஆரவ் நிலாவிற்காக காத்திருக்க தொடங்கினார்கள்.
அறைக்குள் நுழைந்த ஆரவ் நிலாவை தேட அவள் புடவையில் தயாராகி அங்கிருக்கும் சேரில் இவனின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.
“அதுக்குள்ளே நீ தயாரா? என்ன பொண்ணு நீ?…” கொஞ்சம் சலிப்போடு கேட்டவனை பார்த்து,
“ஏன்? நான் சீக்கிரமே ரெடியானதால என்னாகிடுச்சு? பாட்டி இன்னைக்கு கோவிலுக்கு போகனும்னு சொன்னாங்க. போகலாமா?…” எழுந்து நின்று புடவையை சரிசெய்துகொண்டே கேட்க,
“ஹ்ம் நேத்து கல்யாணம் ஆனது போலவா இருக்கு உன்னோட ஆக்டிவிட்டீஸ்? நான் என்னென்னவோ எதிர்பார்த்து வந்தேன். ப்ச்…”
அவனின் பாவனைகளை சிறு சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தவள்,
“அதுக்கு நான் என்ன செய்யமுடியும்? நீங்க வரவரை வெய்ட் பண்ண சொல்றீங்களா? அக்கறை இருக்கிற நீங்க தான் சீக்கிரமா வரனும். தப்பு என் பேர்ல இல்லைப்பா…”
கொஞ்சம் கொஞ்சமாக கதவின் அருகில் சென்றவள் வெட்க சிரிப்போடு அவன் கேட்கும் படியே முணுமுணுத்துவிட்டு ஆரவ் பிடிப்பதற்குள் அறையை விட்டு வெளியேறியும் விட்டாள்.
“மிசஸ் ஆரவ் என்னை எதிர்பார்த்திருப்பா போலையே, யாஹூ…” என உற்சாக குரலெழுப்பியவன் அவளை துரத்தியபடி பின்னால் வர அதற்குள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தாள் நிலா. அவளோடு இணைந்து நடந்தவன்,
“அச்சோ நீ ரொம்ப பீல் பன்ற போல? தப்பு செஞ்ச நானே சரி பண்ணவும் செய்வேன். டோன்ட் வொரி பேபி…” என கண் சிமிட்டி அவளிடம் கூறவும் நிலாவிற்கு கூச்சமாகிவிட்டது.
மௌனமாக அவனோடு இணைந்து நடந்தவள் பெரியவர்களை நெருங்கியதும் ஆரவ்வின் சமிஞ்சையால் இருவரும் சேர்ந்து தாத்தா பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டனர். ஆண்டனியிடமும் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர்.
ராகவ், தர்ஷினி காலில் விழுகையில் நிலாவை தடுத்து தன்னோடு அணைத்துகொண்டார் தர்ஷினி. ஆரவ்வை தழுவிக்கொண்ட ராகவ் அனைவரையும் சாப்பிட அழைக்க,
“அதென்ன சீனியர் நான் இருக்கும் போது இவன் என்கிட்டே ஆசிர்வாதம் வாங்காம போகலாம். நான் சாப்பிட வரமாட்டேன். என் கால்ல முதல்ல அவனை விழ சொல்லுங்கப்பா…” என ஸ்டெபி வம்பிழுக்க,
“ஆஷா, ஆரம்பிக்காதே. அவனும் உன்னோட சேர்ந்தா நிலைமை மோசமாகிடும். முதல்ல சாப்பிடுவோம். நிலாவுக்கு டேப்லட்ஸ் குடுக்கனும்…” ஸ்டெபியின் தோளை சுற்றி கை போட்டு அணைத்தவாறே புன்னகையோடு கலந்த மெலிதான கண்டிப்பில் ஸ்டெபியிடம் அர்ஜூன் கூறினான்.
இருவரின் நெருக்கத்தையும் இணக்கத்தையும் பார்த்த ஆரவ்விற்கு இப்போது மகிழ்ச்சியில் முகம் மின்னியது. காலையில் அர்ஜூனின் கண்களின் ஒளிர்வில் கொஞ்சம் சந்தேகம் தான். இப்போது அது தெளிவான உற்சாகத்தில் இருவரையும் பாய்ந்து அணைத்துக்கொண்டவன்,
“எனக்கு சந்தோஷத்துக்கு மேல சந்தோஷமா கிடைக்குதே இன்னைக்கு. எப்படி இது பாஸிபிள்னு கேட்கமாட்டேன். ஆனா இந்த வேதாளத்தை எப்படி மரம் இறங்க வச்சன்னு தான் புரியலை…”
ஆரவ் கூறியதை கேட்டு அர்ஜூன் வாய்விட்டு சிரிக்க ஸ்டெபியோ,
“யாரை பார்த்துடா வேதாளம்னு சொன்ன?…” என்று அவனை துரத்த ஆரம்பித்தாள். தொலைந்து போன நிம்மதியும் சந்தோஷமும் வீடு சேர்ந்த நிம்மதியில் அங்கே அனைவரின் மனமும் குதூகலித்து இருந்தது.
நிலாவிற்கு ஸ்டெபியும் அர்ஜூனும் கணவன் மனைவி என்றும் அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர் என்னும் அளவிற்கு மட்டுமே ஏற்கனவே ஸ்டெபியின் மூலம் அறிந்திருந்தாலும் இப்போது இருவரும் இணைந்துவிட்டனர் என்ற மகிழ்ச்சியோடு தானும் அவர்களின் சந்தோஷத்தில் கலந்துகொண்டாள்.
எத்தனை துரத்தியும் ஸ்டெபியால் ஆரவ்வை பிடிக்கமுடியாமல் போல அவனோ அவளுக்கு போக்குகாட்டியபடி மீண்டும் நிலாவின் அருகே வந்து,
“லவ் யூ நிலா…” என அவளை அணைத்து கண்ணிமைக்கும் நொடியில் அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தையும் பதித்துவிட்டு டைனிங் ஹாலிற்கு சென்றுவிட்டான்.
அவனின் செயலில் நிலாவுடன் சேர்த்து அனைவரும் அதிர்ந்து பின் ஆரவ்வை எண்ணி தலையில் அடித்துக்கொண்டு சாப்பிட சென்றனர்.
வடிவிற்கும் நாராயணனுக்கும் கண்கள் கலங்கியே விட்டது. அவர்கள் எப்போது டெல்லி வரும் போதும் ஆரவ் இறுக்கத்துடனும் கோபத்துடனுமே வலம் வருவான். இப்படி அவன் சீண்டி விளையாடி சிரித்து அவர்கள் பார்த்ததில்லை.
பார்க்கும் அளவிற்கு அவனும் நடந்துகொண்டதில்லை என்பதே உண்மை. இப்போது நடந்த நிகழ்வை கண்டதும் ஏக்கத்தில் கலங்கி நின்றனர். அதை பார்த்த நிலா,
“கவலைப்படாதீங்க தாத்தா. சீக்கிரமே நானும் அவரும் நம்ம ஊருக்கு வரோம். என்ன பாட்டி?…” என வடிவிடமும், நாராயணனிடமும் நிலா ஆறுதலாக புன்னகையோடு கூறவும் வடிவு அவளை அணைத்துகொண்டார்.
“உன்னோட வார்த்தை பலிக்கட்டும். உன்னோட வரவு எங்க பேரனை முழுமனசோட எங்ககிட்ட கொண்டுவந்து சேர்த்திடும்ன்ற நம்பிக்கையை கொடுத்திடுச்சும்மா…” என நாராயணன் கூறவும்,
“போதுமே, தாத்தா முதல்ல சாப்பிடலாம். பிறகு உங்க பேத்திகூட எவ்வளோ நேரம் வேணும்னாலும் பேசுங்க…” என ஸ்டெபி கூறிக்கொண்டே சென்றுவிட,
“அதானே…” என வடிவும் ஆமாம் போட,
“அதை நீங்களே முடிவு பண்ணினா எப்படி? நம்ம சக்கு அதுக்கு ஒத்துக்கனுமே? அவன் என்ன ப்ளான்ல இருக்கானோ…” அர்ஜூனும் வடிவிடம் பேசியபடி நிலாவையும் அழைத்துகொண்டு சாப்பிட சென்றான்.
அனைவரும் ஒன்றுகூட ஆரவ் பழைய கோபதாபங்களின்றி இயல்பாக தனது தாத்தா பாட்டியிடம் பேச ஆரம்பிக்க பேச்சும் சிரிப்புமாக உணவறையே சந்தோஷத்திலும் ஆராவாரத்திலும் கிடுகிடுத்தது.
இரண்டொரு நாளில் வடிவும், நாராயணனும் கிளம்பிவிட அடுத்து வந்த நாட்களும் மகிழ்ச்சி வெள்ளம் அருவியென ஆர்ப்பரித்து கொட்டியது அவர்கள் வாழ்வில்.
நிலாவோ கணவனின் நேசத்தை நெஞ்சில் சுமந்தபடி அவனின் காதலை கண்களால் பருகியபடி அவனின் சிறு பார்வையையும் சிந்தாமல் சிதறாமல் இதயம் முழுக்க அவனின் மீதான காதலை அள்ளி அள்ளி நிரப்பிக்கொண்டிருந்தாள்.
அவனோடு தான் கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் மனப்பெட்டகத்தினுள் பத்திரப்படுத்திக்கொண்டு வாழ ஆரம்பித்திருந்தாள்.
தனது பழைய நினைவுகள் மீண்டு வந்து அவனை மறக்கவைத்தாலும் அவனோடு தான் நகர்த்திய பொன்னான நொடிகள் அனைத்தும் அவனின் நேசத்தை தனக்குள் உயிர்ப்போடு வைத்து அவனை அடையாளம் காட்டும் என்று நம்பினாள்.
ஆரவிற்கும் அவளின் நிலை புரியாமல் இல்லை. “கலக்கம் ஏனடி பெண்ணே?எந்த சூழ்நிலையானாலும் உன்னை விடேன் பெண்ணே” என்பது போல ஆரவ் வார்த்தையால் இல்லாமல் செயல்களில் அவளை நொடி பொழுதும் விலகாமல் உயிரென காத்தான்.
——————————————————
“மதி, போகலாமாம்மா?…” என கேட்டபடி கூடையில் சில பலகார பாத்திரங்களை அடுக்கிக்கொண்டே உள் நோக்கி சத்தமிட்டு அழைத்தார் முத்தழகி.
“வந்துட்டேன் அத்தை. பெரிய மாமா, சேகரன் அப்பா கூட நிலா விஷயமா வெளியூர் கிளம்பறாங்களாம். மாமா பேங்க் போறாங்க. அதான் மறக்காம மாமாவோட பாஸ்புக் எடுத்து குடுக்க போனேன். கிளம்பற அவசரத்துல விட்டுட்டு போய்டுவாங்களே…”
அவசரமாக வந்தவள் முத்தழகியுடன் பேசிக்கொண்டே அடுக்கறைக்குள் சென்று அங்கு சமைத்து வைக்கபட்டிருந்த உணவுகளை எடுத்து கேரியரில் போட்டுகொண்டிருந்தாள் வண்ணமதி.
“அங்கயே நாம மதிய சாப்பாடும் சாப்ட்டுக்கலாம் அத்தை. பெரிய மாமாவும், மாமாவும் வர சாயங்காலம் ஆகிடும்ல. அங்க சேகரப்பாவும் இல்லை. இங்க நாம அமுதாம்மாவை கூப்பிட்டா கண்டிப்பா வரமாட்டாங்க. ஜீவாவால அவங்களை தனியா விட்டுட்டு வரமுடியாது…”
“அதுக்கு பதிலா நாம அங்க இருக்கலாம். அதான் சாப்பாட்டை டிபன்ல அடைச்சுட்டிருக்கேன்…” என கூறியவளை வாஞ்சையாக பார்த்த முத்தழகி வண்ணமதியை தன் புறம் திருப்பி அவளின் முகத்தை நெட்டிமுறித்தவர்,
“நீ போய் உன் புருஷனை அனுப்பிட்டு வா. இதை நான் கூடைல எடுத்து வச்சிடறேன்…” என அவளை அனுப்பிவிட்டு அவள் வேலையை தான் பார்க்க ஆரம்பித்தார்.
தினகரன் உள்ளிருந்தபடி இவையனைத்தையும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான். வண்ணமதி வந்ததிலிருந்து தன் வீட்டில் இன்றியமையாதவளாக எப்படி ஒன்றிவிட்டாள் என நினைக்கும் போதே தினகரனின் மனம் கனிந்தது.
திருமணம் முடிந்து இந்த ஐந்து மாதங்களில் மெல்ல மெல்ல தினகரனின் மனதை வண்ணமதி அவளறியாமலே ஆக்ரமிக்க ஆரம்பித்தாள். அதையும் தினகரன் உணரத்தான் செய்தான். அவளின் செயல்கள் தன்னை கவருவதை விருப்பத்துடனே ஏற்றான்.
முத்தழகிக்கும் முத்தையாவிற்கும் இப்போது எல்லாமே வண்ணமதி தான். அவளில்லாமல் அங்கே எதுவும் நடக்காது என்னும் அளவிற்கு அந்த வீட்டின் வேராக மாறிவிட்டாள்.
“மாமா கிளம்பியாச்சா?…” என கேட்டபடி கைகளை துடைத்துக்கொண்டு தன் முன்னால் வந்துநின்ற மனைவியை பார்த்தவன்,
“நான் கிளம்பிட்டேன். அம்மாகிட்ட நான் சொல்றதுக்குள்ள எல்லாமே நீயே சொல்லிட்ட போல. சரி அமுதாத்தையை பார்த்துக்கோ. ஜீவாக்கு எக்ஸாம் வருது. நிச்சயம் அவ படிச்சிருக்கமாட்டா. நீ கொஞ்சம் கண்டிச்சு சொல்லு. தயங்காதே…”
“சொல்றது வரைக்கும் சரிதான் மாமா. அதென்ன கண்டிச்சு சொல்றது? கேட்கமாட்டாளா என்ன?…”
“நிச்சயம் கேட்கமாட்டா. அவ நிலா மாதிரி கிடையாது. படிக்காம இருந்தா என்னிடம் சொல்லிடுவேன்னு மிரட்டு. கண்டிப்பா படிப்பா…” என்றவனை பார்த்து வாய்விட்டு அவள் சிரிக்க அவளின் எண்ணம் புரிந்தவனாக தானும் இதழ் விரியாமல் புன்னகைத்தான்.
“நீங்க தான் ஜீவாவுக்கு பூச்சாண்டியா? இத்தனைநாள் தெரியாமல் போச்சே?…” என போலியாக கவலை கொள்ள,
“உனக்கு வாய் ஜாஸ்திதான். என்னை பார்த்தா பூச்சாண்டி போலவா இருக்கு?…”
“இல்லைன்னு நான் சொல்லலாம்னு நினைக்கேன். ஆனா எதுக்கும் ஆதாரம் வேணுமே மாமா. நிரூபிச்சு தான் காமிங்களேன். நீங்க பூச்சாண்டி இல்லை. என்னோட புருஷன்னு…”
பேசி முடித்தபின் தான் தான் பேசியதன் அர்த்தம் விளங்க திருதிருவென விழித்தாள் வண்ணமதி. எதுவும் திட்டிவிடுவானோ என தினகரனை பாவமாக பார்க்க அவனோ சிறு மென்னகையோடு அவளின் கன்னத்தில் மெல்ல தட்டிவிட்டு தலையசைத்தபடி கிளம்பிவிட்டான்.
“ஆனாலும் மதி புள்ள உனக்கு இம்பூட்டு வாய் ஆவாது…” என தன்னையே கடிந்தபடி வேறு புடவைக்கு மாற ஆரம்பித்தாள்.
தினகரன் முத்தழகியிடம் கூறிவிட்டு முத்தையாவை தேடி செல்ல அவர் கிளம்பி தயாராக இருந்தார். மகனின் வருகை அறிந்து,
“கவலைபடாதே தம்பி. கண்டிப்பா என்னோட மருமகளை கண்டுபிடிச்சிடலாம். தலைவரு வேற ஒரு ஆளை பார்த்து பேச சொல்லி சொல்லிருக்காரு. அதனால தான் சேகரனையும் கூட்டிட்டு போறேன். நீ மனசுக்குள்ளயே விசனப்பட்டுட்டு இருக்கவேண்டாம்…” என்றவரை பார்த்தவனின் பார்வை புரிந்து,
“உனக்கு மனைவியா வந்தாதான் மருமவளா? என்னைக்குமே நிலா எனக்கு இந்த வீட்டுக்கு மருமகதான் ஐயா. என்னோட மருமக தான்…” என்றவரை புரிதலோடு பார்த்தவன்,
“போறது எல்லாம் சரி. எந்த காரணத்தை கொண்டும்…” என்பவனை இடைமறித்து,
“என் நண்பனோட நட்பை நான் இழக்கமாட்டேன். நான் பண்ணின முட்டாள்தனம் சேகரனுக்கு தெரியாம பார்த்துக்கறேன். அதுவும் கூட என்னை காப்பாத்திக்க இல்லை. அவனுக்காகத்தான். அவன் மனசு உடைஞ்சிட கூடாதுன்னு தான்…”
கரகரத்த குரலில் பேசிவிட்டு துண்டை எடுத்து தோளில் போட்டவர் மகனிடம் விடைபெற்று மனைவியிடம் சொல்லிக்கொண்டு வண்ணமதியை எதிர்பட வரச்சொல்லி கிளம்பினார் முத்தையா. அவர் கிளம்பியதும் வண்ணமதி அடுக்கறைக்குள் நுழைந்துகொண்டாள்.
அவர் சென்றதுமே தினகரனும் சாமி கும்பிட்டுவிட்டு முத்தழகியை அழைத்தவன் அவர் வரவும், “நான் தோப்புக்கு போய்ட்டு அப்படியே கிளம்பறேன் அம்மா. வர ராத்திரி ஆகிடும். வரட்டுமா…” எனவும் தலையசைத்தவர் மருமகளை காணாது,
“மதி…” என அழைக்க அவளோ கணவனிடம் பேசிய பேச்சை எண்ணி தினகரனின் முன்னால் வர வெட்கப்பட்டு உள்ளேயே இருந்துகொண்டாள்.
அவளின் எண்ணம் புரிந்தவனாக, “விடுங்கம்மா, வேலையா இருப்பா போல. நான் கிளம்பறேன். சொல்லிடுங்க…” என்றவன் அடுப்படி வாயிலை ஒரு பார்வை பார்த்துவிட்டு புன்னகை முகமாக கிளம்பினான்.
மகனின் புன்னகை நிறைந்த முகமும் மருமகளின் தயக்கமும் முத்தழகிக்கு எதையோ உணர்த்த தன் மகன் வாழ ஆரம்பித்துவிடுவான் என்ற நிம்மதி அவரை மகிழ்ச்சி கொள்ளச்செய்தது.
இருவரின் நடவடிக்கைகளை தான் பார்த்துக்கொண்டிருக்கிறாரே. ஆனாலும் எதிலும் தலையிடாமல் தள்ளியே இருந்துகொண்டார். தினகரனின் மேல் கொண்ட நம்பிக்கை அது.
மீண்டும் வண்ணமதியை தேடி உள்ளே சென்றவர் அவளை அழைத்துக்கொண்டு நிலாமுகியின் இல்லம் நோக்கி சென்றார்.
முத்தையாவோடு குணசேகரன் வெளியூர் சென்றிருக்க அமுதாவும் ஜீவநிலாவும் மட்டுமே வீட்டில் இருப்பதாக தெரியவும் வண்ணமதியையும் அழைத்துக்கொண்டு முத்தழகி வந்துவிட்டார். வண்ணமதியின் கலகலப்பு அமுதாவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பித்தது.
நிலாமுகி காணாமல் போன இத்தனை நாட்களில் அமுதா கலகலப்பான தன் சுபாவத்தை விடுத்து இறுகிப்போயிருந்தார். வெளியில் எந்த ஒரு விசேஷங்களுக்கும் செல்வதில்லை.
தினகரன் வண்ணமதி திருமணத்திற்கு கூட ஒப்புக்கு வந்துவிட்டு உடனே சென்றுவிட்டனர். முத்தழகி கூட அமுதாவை தன்னோடு இருக்க சொல்லிப்பார்த்தார்.
ஆனால் ஊரார் முன்னால் மகளை பற்றிய கேள்விகளுக்கும், பரிதாபமான பார்வைகளுக்கும் ஆளாக வேண்டியாதயிருக்கும் என எண்ணி கிளம்பிவிட்டார். இப்போது வரை கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருந்தார் அமுதா.
காலையில் வந்தவர்கள் கொண்டுவந்த மதிய உணவை சாப்பிட்டு அமுதாவையும் சாப்பிட வைத்து பேச்சில் கவனமாக இருக்க அமுதாவும் கொஞ்சம் கொஞ்சமாக பதிலுக்கு பேசிவைத்தார்.
ஜீவாவை தினகரன் கூறியபடி உருட்டி மிரட்டி புத்தகத்தை கையில் கொடுத்து படிக்க செய்த வண்ணமதி தானும் துணையாக அவளோடே அமர்ந்துகொண்டாள்.
அமுதாவும் கொஞ்சம் பேச ஆரம்பிக்கவும் பேச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணமதியின் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கில் வந்து நின்றது.
விரைவில் அதை செய்ய இருப்பதாக முத்தழகி கூறவும் அமுதாவும் ஆமோதித்தபடி இருந்தவர் வாசலை கண்டு திகைத்தார்.
அமுதாவின் பார்வை சென்ற திக்கில் தானும் பார்த்த முத்தழகி அங்கே நின்றிருக்கும் வள்ளியம்மை குடும்பத்தை பார்த்து யோசனையானார்.
அதற்குள் வள்ளியம்மையும் அவர் மகன் தயாளனும் கணவர் முருகேசனும் உள்ளே வந்துவிட்டனர். முத்தழகி அன்று திட்டி அனுப்பிவைத்த பின் இன்றைக்குத்தான் வந்திருக்கிறார் வள்ளியம்மை.
நிலாமுகியை எங்கிருக்கிறாள் என்பது பற்றிய தகவலோடு…
தேடல் தொடரும்…