தேடல் – 14
திடீரென்று வந்து நின்ற வள்ளியம்மை குடும்பத்தினரை கண்டதும் அமுதாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. அவரின் குழப்பமான முகத்தை பார்த்த முத்தழகி அவரை இடித்து,
“அமுதா வந்தவங்களை முதல்ல வாங்கன்னு கேளு. இப்படியா மசமசன்னு நிக்கிறது?…” என கடிய உடனே சுதாரித்த அமுதா அவர்களை வரவேற்றார்.
உள்ளே வந்தவர்கள் வரவேற்பறையில் அமரவும் முத்தழகி வண்ணமதியை அழைத்து வந்திருப்பவர்களுக்கு குடிக்க எடுத்துவரும் படி கூறிவிட்டு ஜீவாவையும் உடன் அனுப்பிய பின் வள்ளியம்மையை பார்த்தார்.
சொந்த வீட்டில் உபச்சாரம் செய்வது போல ஆளுமையுடன் நடந்துகொள்ளும் முத்தழகியை காண காண வள்ளியம்மைக்கு பற்றி எரிந்தது. ஆனாலும் வாயை திறக்கமுடியாதே? தன் காரியம் நடக்க அமைதியாகத்தான் இருந்தாகவேண்டும் வள்ளியம்மைக்கு.
முத்தழகியின் கண்ணசைவில் பேச்சை தொடங்கினார் அமுதா.
“சொல்லுங்க மதினி. திடீர்ன்னு வந்திருக்கீங்க?…” என மெதுவாக கேட்க,
“ஏன் வந்தீங்கன்னு கேட்ப போல அமுதா? என் தம்பியை பார்க்க வந்தேன். ஏன் வரக்கூடாதா?…” குத்தலாக பேசியவரை கண்டு பதறிய அமுதா வாயை திறக்கும் முன்,
“இந்தா வள்ளியம்மை, காரணம் தெரியாத அளவுக்கு பச்சப்புள்ளையா நீ? என்னைக்குமில்லாம உன் புள்ளை, வீட்டுக்காரரோட வந்திறங்கினா அவளுக்கு அதிசயமா இருக்காதா? அதான் திகைச்சு போய் கேட்கிறா?…”
“என்னைக்கும் வராத மனுஷன் உன்னோட புருஷன். உன் பிள்ளையை கேட்கவே வேண்டாம். உன்னோட வந்துட்டு உன் கூடவே கிளம்பிடுவான். ஏன் நீயும் கூட தான் ஐஞ்சு மாசம் முன்னாடி வந்தவ. அன்னைக்கு போனவ திரும்ப இப்போதான் வந்திருக்க?…”
திடீரென்று அமுதாவை இடைமறித்து இடக்காக முத்தழகி கூறவும் இன்னமும் கொதித்துபோனார் வள்ளியம்மை.
“இவரிடம் யார் கேட்டது? எதற்கு இவர் பேசுகிறார்?. என்ன உரிமை இவருக்கு?. ஒரே குடும்பமாக பேசும் பொழுது ஒதுங்கி நிற்கவேண்டியது தானே?” இப்படித்தான் இருந்தது அவரது நினைப்பு.
பதிலின்றி அமைதியாக இருந்த மனைவியை பார்த்த முருகேசன்,
“வள்ளி வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு கிளம்புவோம். தேவையில்லாத பேச்சு எதுக்கு உனக்கு…” என முடித்துக்கொள்ள வள்ளியம்மையும் அதை ஆமோதித்து தலையாட்டினார்.
முருகேசனுக்கு எப்போதும் வீட்டு மாப்பிள்ளை செருக்கு குறையாமல் இருப்பதில் அலாதி ப்ரியம். கொஞ்சம் மமதையோடே நடந்துகொள்வார். விரல்நுனியில் மற்றவர்களை ஆட்டிவைக்க நினைப்பவரிடம் குணசேகரன் ஓரளவிற்கு தழைந்து போனாலும் எல்லா விஷயங்களிலும் இறங்கி செல்லாமல் இருப்பதில் பெரும் குறை முருகேசனுக்கு.
எப்போதாவது தேவையென்றால் மட்டுமே தவிர்க்கமுடியாமல் குணசேகரன் வீட்டிற்கு வந்து செல்பவர் நிலாமுகியின் திருமணத்திற்கு கூட வருவதை தவிர்த்துவிட்டார். அதுவும் நிலாமுகியை தயாளனுக்கு பெண் கேட்டும் தரமறுத்ததால் உண்டான சடவு.
நிலாமுகி காணாமல் போன இத்தனை மாதங்களில் என்ன ஆகிற்று என்று கூட விசாரிக்க வராதவர் இன்றைக்கு மனைவி மகனிற்காக மட்டுமே வந்து நின்றார் காரணகாரியத்தோடு.
வள்ளியம்மையை பார்வையால் துரிதபடுத்த அவரும் புரிந்துகொண்டு, “அமுதா என் தம்பிக்கிட்ட முக்கியமான விஷயம் பேச வந்திருக்கோம். எங்க போயிருக்கான் அவன்?…”
“முத்தையா அண்ணன் கூட நிலா விஷயமா யாரையோ பார்க்க போய்ருக்காங்க மதினி. வர சாயங்காலம் ஆகிடும்னு சொல்லிட்டுதான் போய்ருக்காங்க. என்ன விஷயம்னு என்கிட்டே சொல்லுங்க. அவுக வரவும் விவரத்தை சொல்லிடறேன்…”
அவர் கூறும் பொழுதே காபியுடன் வண்ணமதி வந்துவிட்டாள். ஜீவாவிடம் காபியை கொடுத்துவிட்டு அவள் முத்தழகியுடன் நின்றுகொண்டாள்.
“இல்லை சேகரன் வரட்டும். அவன்கிட்ட தான் சொல்லனும்…” கத்தரித்தது போல வெட்டி பேசிய வள்ளியம்மையை கடுப்போடு பார்த்தார் முத்தழகி.
காபியை வாங்கி குடித்துவிட்டு எழுந்துகொண்டவர் வெட்டும் பார்வையொன்றை செலுத்திவிட்டு தயாளனை பார்க்க அவனோ சத்தமின்றி எழுந்து வாசலை நோக்கி விரைந்தான். உடன் முருகேசனும்.
“விஷயத்தை நான் தம்பிக்கிட்டையே பேசிக்கறேன்…” என்றவர் கிளம்பிவிட்டார்.
எதற்கு வந்தார்கள் என்னும் விவரம் புரியாமல் முத்தழகி யோசிக்க அமுதா விடுதலை உணர்வுடன் நிம்மதியானார். எங்கே வந்தவர்கள் நிலாமுகியை பற்றி பேசி மனதை நோகடித்துவிடுவார்களோ என பயந்துவிட்டார்.
அதனால் அமுதாவிற்கு என்ன விஷயமாக வந்தார்கள் என சிந்திக்கும் எண்ணமில்லாமல் போனது. மகளை பற்றிய செய்தியோடு வந்திருக்கிறார்கள் என தெரிந்திருந்தால் இப்படி பேசாமல் விட்டிருக்க மாட்டார் தான்.
“எதுக்கு வந்தான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா குறைஞ்சா போய்டுவாங்க. என்ன மனுஷி இவங்க? ச்சீ. இவங்கலாம் எப்படித்தான் எங்கப்பாகூட வந்து பிறந்தாங்களோ?…” என ஜீவா கோபம் கொள்ள,
“ஜீவா பெரியவங்களை அப்படி பேசக்கூடாது. பொறுமை வேணும். அதுவும் அவங்க உன்னோட சொந்த அத்தை. விட்டுக்குடுக்காம பேசி பழகு…” என வண்ணமதி கடிந்துகொள்ள,
“நீங்களும் பார்த்தீங்க தானே மதி அக்கா. அவங்களுக்கு எங்கம்மா என்ன எதிரியா? எப்படியெல்லாம் நடந்துக்கறாங்க பாருங்க. இதுல பொறுமை எப்படி இருக்கும்?…”
“அவங்களோட இயல்பு அதுவாக இருந்தாலும் அதனால உன் இயல்பும் குணமும் மாறக்கூடாது. கோபத்தில் எதுவும் யோசிக்காமல் பேசாதே…” மீண்டும் அதையே கூறினாள் வண்ணமதி.
அதை பார்த்த அமுதா, “மதினி நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க, இதுபோல ஒரு பொண்ணு கிடைக்கிறதுக்கு. என்ன அழகா பேசுது…” என வண்ணமதியின் கன்னத்தை தடவியபடி கூற பெருமையாக பார்த்தார் முத்தழகி.
வண்ணமதிக்கும், முத்தழகிக்கும் மேலும் சிலமணி நேரம் அங்கேயே பேச்சில் கழிந்தது. தினகரன் மொபைலில் அழைக்கும் வரை. அதன் பின் அமுதா, ஜீவாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர். அவர்கள் சென்றதும் மீண்டும் வெறுமையை நிரப்பிக்கொண்டது நிலாமுகியின் இல்லம்.
முத்தழகியும் வண்ணமதியும் வீடு வந்து நுழையவும் தினகரன் வரவும் சரியாக இருந்தது. அதுவரை முத்தையா வந்திருக்கவில்லை. முகம் கழுவி உடை மாற்றிவிட்டு முற்றத்தில் வந்து அமர்ந்தவன்,
“என்னம்மா அமுதாத்தை எப்படி இருக்காங்க? ஜீவா படிச்சாளா?…” என தாயிடம் கேட்டபடி மனைவி குடுத்த காபியை வாங்கிக்கொண்டான்.
“இம்புட்டு அக்கறை இருக்கிற மவராசன் இந்தா இருக்கிற வீட்டுக்கு ஒரு எட்டு வந்து பார்த்துட்டு ரெண்டு வார்த்தை ஆறுதலா பேசிட்டு வரது. அவுகளுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்குமில்ல…”
முத்தழகியை ஒரு பார்வை பார்த்தவன் பதில் பேசாமல் அமைதியாக காபியை பருக வண்ணமதியோ இதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த நாளிதழை புரட்டிகொண்டிருந்தாள்.
மகனின் இந்த அழுத்தத்தில் முத்தழகிக்கு அலுப்பு தட்ட, “எப்போதுதான் எல்லோரோடும் ஒட்டி வாழ போறானோ?” என அவர் மனம் ஆயாசமானது. சிறிது நேரத்தில் முத்தையாவும் வர முத்தழகி பரபரப்பானார்.
துண்டை உதறிக்கொண்டு சேரில் அமர்ந்தவரை பார்த்தவர், “என்னங்க போன விஷயம் என்னாச்சு?…” என ஆர்வமாக கேட்டார் முத்தழகி.
தினகரன் ஒன்றும் கேட்காமல் பார்த்தபடி அப்படியே இருக்க முத்தையாவிற்கு தண்ணீரை கொண்டுவந்து கொடுத்துவிட்டு குடித்து முடிக்கும் வரை அவரருகிலேயே நின்றாள் வண்ணமதி.
தண்ணீரை குடித்து முடித்தவர், “ஹ்ம் போயிட்டுத்தான் வந்தோம். அவரு இன்னைக்கு வேற ஒரு சோலியா கிளம்பினாரு. அதான் தகவலை சொல்லிட்டு கிளம்பிட்டோம்…” என்றவர் தினகரனை பார்க்க,
“மாமா எங்கே? வீட்டுக்கு போய்ட்டாரா? தைரியமா இருக்காரா? நீங்க பார்க்க போனவர் நம்பிக்கையா தானே சொன்னார்?…” என வரிசையாக அவன் கேட்க,
“தைரியமான்னு சொல்லமுடியாது. ஏதோ இருக்கான். எதை தின்னா பித்தம் தெளியும்னு நினைக்கிறது போல என்ன செஞ்சா பொண்ணு கிடைப்பாளோன்னு ஏங்கிட்டு இருக்கிறான். வர வழியில சேகரனுக்கு அவன் அக்காகிட்ட இருந்து போன் வந்துச்சுன்னு அவங்க ஊர்க்கிட்ட இறங்கிட்டான்…”
சொல்லிவிட்டு முத்தையா சேரில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள வண்ணமதியும் முத்தழகியும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். சேகரன் அவ்வளவு சாமான்யமாக வள்ளியம்மை கூப்பிட்டவுடன் போய்விடும் ஆள் கிடையாது என்பது இவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று.
பின்கட்டிற்கு சென்ற மருமகளின் பின்னால் சென்றவர், “விஷயம் பெருசா இருக்கும் போலையே மதி?…” என்ற முத்தழகியிடம்,
“எதுவா இருந்தா நமக்கெதுக்கு அத்தை? அந்த வள்ளியம்மை அம்மா விஷயத்துல நாம தலையிடறது சரியில்லையோன்னு தோணுது. . அவங்க அக்கா தம்பிக்குள்ள ஆயிரம் இருக்கும். என்ன தான் ஒரே குடும்பமா பழகி இருந்தாலும் நாம மூணாவது மனுஷங்கதானே?…”
வண்ணமதி சொல்வதும் சரியெனப்பட அமைதியானார் முத்தழகி. ஆனாலும் உள்ளுக்குள் எதுவோ முரண்டிகொண்டு தான் இருந்தது.
அங்கே வள்ளியம்மை வீட்டில் இடிந்துபோய் அமர்ந்திருந்தார் குணசேகரன். முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட ரத்தபசையின்றி வெளிறிப்போய் இருந்தது. அவரது இந்த அதிர்ச்சியை ஒருவித குரூரத்துடன் ரசித்தபடி அமர்ந்திருந்தார் முருகேசன்.
நிலாமுகி வகிட்டில் குங்குமம் துலங்க கண்கள் சிரிக்க பூரிப்போடு ஆரவ்வுடன் ஜோடியாக நின்ற போட்டோவை பார்த்து “தன் மகளா இது? அய்யஹோ இது உண்மையாக இருந்திட கூடாதே…” என மனம் அரற்றியது.
கண்கள் கலங்க தொய்ந்துபோய் அமர்ந்திருந்தவர் தயாளனை நிமிர்ந்து பார்க்க, “நான் டெல்லிக்கு இரண்டுநாள் ட்ரெயினிங்க்காக போய்ருந்தப்போ அங்க பார்த்தேன் மாமா…”
தயாளன் சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருப்பவன். தாய் பேச்சிற்கு அடங்கி நடக்கும் அமைதியானவன்.
பேச்சு எழாமல் அமர்ந்திருந்த மாமனை பார்த்து தானாகவே கூறியவன், “அடுத்த முக்கியமான விஷயத்தை இவரிடம் கூறினால் இவரால் தாங்கிக்கொள்ள முடியுமா?…” என யோசித்து தயங்கி நிற்க வள்ளியம்மை தான் சொல்லு என்பது போல சைகை காண்பித்ததும்,
“மாமா இன்னொரு முக்கியமான விஷயம்…” என்றவனை ஏறிட்டு பார்த்தவர்,
“என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருக்கு. அதுவும் இதுவரை அவ அறியாத ஊர்ல யாருன்னே தெரியாத ஒருத்தரோட. இதை விட முக்கியமா அப்படி என்ன இருக்கபோகுது மருமகனே…” என சோர்ந்த குரலில் கூற,
“இருக்குதுங்க மாமா. வந்து…. நம்…ம ……….. நம்ம நிலாவுக்கு பழசெல்லாமே மறந்து போச்சு. நாம யாருமே அவளோட நினைவில இல்லை…” என்றதும் துடித்துப்போய் படாரென எழுந்தவர் அவனின் அருகில் நெருங்கி,
“என்ன சொல்றீங்க? என் பொண்ணுக்கு யாரையும் ஞாபகமில்லைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?…” என பரிதவித்து கேட்க,
“தெரியும் மாமா. நான் நிலாக்கிட்ட பேசினேன். என்னை யாருன்னே அவளுக்கு தெரியலை. ஒரு ப்ரெண்ட் மூலமா தான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டேன்…”
“இல்லை அப்படி எதுவும் இருக்காது. ஒருவேளை உங்களை அங்க பார்த்ததும் அதிர்ச்சியில பயத்துல யாருன்னு தெரியாதது போல நடந்திருக்கலாமே?…”
“மகளுக்கு பிரச்சனை எதுவும் இருக்கக்கூடாதே” என சேகரன் மனம் தவிக்க பேசியவரை பரிதாபமாக பார்த்தவன்,
“என்னை பார்த்து பயந்து நடிக்க அவ எந்த தப்பும் பண்ணலையே மாமா? அவ என்ன இங்கிருந்து நம்மளை ஏமாத்திட்டா போனா? நிச்சயம் இல்லை…” என்றவன்,
“புரிஞ்சுக்கோங்க மாமா. அவ இயல்பா தான் என்னிடம் பேசினா. என்னை பார்த்த பயமோ அதிர்ச்சியோ எதுவுமே அவகிட்ட இல்லை. நான் நிச்சயமா அடிச்சு சொல்லுவேன். நிலாவுக்கு ஏதோ நடந்திருக்கு. அதை நாம போய் அவ ஹஸ்பன்ட் கிட்ட, அவங்க குடும்பத்தோட பேசினாதான் தெரிஞ்சிக்க முடியும்…”
“அவங்க பத்தி எல்லாமே நான் விசாரிச்சுட்டேன். நிலா ஹஸ்பன்ட் ஒரு பேமஸ் டாக்டர். பெரிய ஹாஸ்பிட்டல் வச்சிருக்கார். அவங்க பேமிலி பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். எப்போ போகலாம்னு நீங்க சொன்னீங்கனா நான் ஆபீஸ்ல லீவ் சொல்லிட்டு வரேன்…”
குணசேகரனின் அருகில் அமர்ந்து அவரின் கைகளை ஆறுதலாக பற்றியபடி தயாளன் கூற அவனின் வாஞ்சையில் இன்னமும் மருகிப்போனார் குணசேகரன்.
“இவருக்கு போய் என் பெண்ணை கொடுக்க மறுத்தேனே?” என தன்னை நினைத்தே வெட்கினார்.
முதலில் நிலாமுகியை கேட்டு வள்ளியம்மை குணசேகரனிடம் பேச்சை துவங்க சேகரனோ மறுத்துவிட்டார்.
சொந்தத்தில் திருமணம் சரியில்லை என்பது அவரது கருத்து. அதைவிட தன் அக்காவின் அடாவடி குணமும், நிலாவின் அமைதியான குணமும் அவரை யோசிக்கவைத்தது. நிச்சயம் நிலாவினால் வள்ளியம்மையை தாக்குபிடிக்க முடியாதென நம்பினார்.
அதை முன்னிட்டே அவர் அந்த சம்பந்தத்தை மறுத்துவிட்டார். அதிலும் இப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்ததையே அமுதாவிடம் கூட அவர் சொல்லிக்கொள்ளவில்லை.
இதில் வள்ளியம்மைக்கு பெரிய ஏமாற்றம். அதை மனதினுள் வைத்துக்கொண்டே நேரம் கிடைக்கும் போதெல்லாம் மெல்ல மெல்ல குத்திக்காட்டிகொண்டிருந்தார். இதை வைத்தே நிலாமுகி திருமணத்திற்கு வர முருகேசன் மறுத்துவிட்டார்.
இன்று தன்னுடைய ஆசை ஈடேற கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிட வள்ளியம்மைக்கு மனதில்லை. அவரின் காதுகளில் அசரீரி ஒலிப்பது போல அந்த குரல் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் ரீங்காரம் இட்டது.
“உன் மகனின் எதிர்காலம் செழிக்க அந்த பெண்ணை இழந்துவிடாதே” என்னும் குரல் அவருக்கு இப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தது. அவரின் பேராசைக்கு முருகேசனும் தூபம் போட நினைத்ததை நடத்திக்காட்ட அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தார் வள்ளியம்மை.
எப்போதும் வள்ளியம்மையின் பேச்சையும் வார்த்தைகளையும் ஆராயும் சேகரன் இப்போது அதை செய்யத்தவறி முழுமையாக வள்ளியம்மையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டார்.
அதன் விளைவு அமுதா, ஜீவா, தினகரன் குடும்பத்தினரிடமும் நண்பரை சந்திக்க செல்வதாக பொய்யுரைத்துவிட்டு தயாளன் வள்ளியம்மையோடு டெல்லிக்கு கிளம்பிவிட்டார்.
அவர் இப்படி திடீரென சென்றதில் முத்தழகியை தவிர வேறு யாருக்குமே சந்தேகம் எழவில்லை. அவருக்கோ வள்ளியம்மையின் வரவும், சேகரனை அவசரமாக அவர் வீட்டிற்கு அழைத்ததும், பின் மறுநாளே சேகரனின் திடீர் பயணமும் எதையோ உணர்த்தியது. அவரால் என்னவாக இருக்கும் என்பது தான் அறியமுடியாமல் போனது.
——————————————————————————
ஹாஸ்பிட்டல் காரிடாரில் ஒரு இடத்தில் நிற்காமல் நிலையில்லாமல் நடந்துகொண்டே இருந்தான் ஆரவ். அதில் கடுப்பாகிவிட்டாள் ஸ்டெபி.
“நிலாவிற்கு நடக்கும் ஒவ்வொரு செக்கப்பிலும் இவனுக்கு இதே வேலையா போச்சு. இவனை என்னதான் செய்ய?” என அவனையே பார்த்திருந்தாள். பின் பொறுமை பறக்க,
“ஆரவ், சும்மா இங்கைக்கும் அங்கைக்குமா நடந்து நடந்து இந்த இடத்தையே தேய்ச்சிடாதே. என்னமோ பொண்டாட்டியை டெலிவரிக்கு அனுப்பிட்டு ரூம் வாசல்ல நின்னு தவிக்கிறது போல இருக்கு உன் ஆக்ஷன்ஸ் எல்லாம். தாங்க முடியலை…”
முகத்தில் பதட்டத்தோடு நடந்துகொண்டிருந்த ஆரவ்வை கேலி செய்தாள் ஸ்டெபி. அவளை முறைத்தவன்,
“வேணும்னா நீயும் உள்ளே போய் உன் ஹஸ்பன்ட் கூட இரு. அவனை விட்டுட்டு இருக்கமுடியாம தனியா இருக்கிற என்னை படுத்திட்டு இருக்காதே?…” எனவும் ஸ்டெபியின் முகம் சிவந்துவிட்டது.
ஆரவ் கூறியது போல இப்பொதெல்லாம் அர்ஜூன் எங்கிருக்கிறானோ அங்கே தான் ஸ்டெபியின் வாசம். ஆரவ் திருமணம் முடிந்த மறுநாளே தங்கள் வீட்டிற்கு சென்ற அர்ஜூன் அன்றைக்கே அவர்களது வாழ்க்கையையும் தொடங்கிவிட்டான்.
தானும் தன் மனைவியும் சேர்ந்துவிட்டதை கூட கிருஷ்ணனிடம் ஒரு தகவலாகவே தெரிவித்தவன் மேலும் பேச்சை வளர்க்காமல் நிறுத்திக்கொண்டான். அவ்வப்போது கல்பனா பேசினாலும் ஓரிரு வார்த்தைகளில் முடித்துவிடுவான்.
இப்போதெல்லாம் மகனுக்காக வேணும் தாங்கள் ஸ்டெபியை ஏற்றுகொண்டிருக்களாமோ என எண்ண தொடங்கியிருந்தார் கல்பனா. ஆனாலும் ஸ்டெபியை பார்த்து பேச அவருக்கு விருப்பமில்லை.
மகன் நன்றாக இருந்தால் போதும் என ஒதுங்கிக்கொண்டார். கிருஷ்ணன் அப்போதும் அதே கர்வத்தோடு அர்ஜூனை கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டார். கார்த்திக் மட்டுமே இரண்டு வீட்டிற்கும் பொதுவாக அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருந்தான்.
அர்ஜூனும் ஸ்டெபியின் குறை எதுவும் அவளை பாதிக்காதவாறு தங்களின் வாழ்க்கையை நிறைவாக வாழ ஆரம்பித்தான். அவ்வப்போது குழந்தை இல்லாதது ஸ்டெபியின் மனதை அழுத்தினாலும் அர்ஜூனிற்காக அதை வெளிக்காட்டாமல் தனக்குள்ளேயே வைத்துகொண்டாள் ஸ்டெபி.
மாதம் இரண்டு முறை என நிலாவிற்கு செக்கப் செய்தனர். சர்ஜரி செய்யுமளவிற்கு அவளின் உடல் தேறியுள்ளதா என பரிசோதிக்க வரும் வேளைகளில் எல்லாம் தர்ஷினி, இல்லையென்றால் ஸ்டெபி என ஆரவ்விற்கு சப்போர்ட்டிவாக உடன் இருப்பார்கள்.
இன்றைக்கு தர்ஷினி ஓபியில் பிஸியாக இருக்க ஸ்டெபி வந்துவிட்டாள். உள்ளே அர்ஜூன், ராகவ், டாக்டர் மேத்தா என அனைவரும் நிலாமுகியை பற்றிய ஆலோசனையில் இருக்க நேரம் செல்ல செல்ல ஆரவ்விற்கு தான் இங்கே பொறுமை பறந்தது.
சிறிது நேரத்தில் டாக்டர் மேத்தா வெளியில் வந்து ஆரவ்வின் தோள்களில் தட்டி, “ஹேய் ஆரவ். டோன்ட் வொரி. சியரப் மேன்…” என புன்னகையுடன் கூறிவிட்டு அவனை கடந்துவிட பின்னால் வந்த ராகவ்வை பிடித்துகொண்டான் ஆரவ்.
“டாடி இப்போ நிலா எப்படி இருக்கிறா? நார்மலா தானே இருக்கிறா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?. மேத்தா ஒண்ணுமே சொல்லாம போறாரு…”
அவனை புன்னகையோடு பார்த்த ராகவ்வை முறைத்த ஆரவ், “கேட்டுட்டே இருக்கேன். கொஞ்சமும் பொறுப்பில்லாம அமைதியா இருக்கீங்க?.இப்போ சொல்லபோறீங்களா இல்லை நான் அவர்க்கிட்டையே கேட்டுக்கட்டுமா?…”
கோபமாக பேசிய மகனிடம் என்னவென கூற வாய் திறந்த ராகவ்வை இடைமறித்து, “வாட் இஸ் திஸ் ஆரவ். என்ன பிஹேவியர் இது? வர வர நீ சரியில்லை. உனக்கு எல்லா விஷயத்தையும் காரிடார்ல வச்சே சொல்லனுமா என்ன? ஏன் ரூம்க்கு போற வரைக்கும் பொறுமை கிடையாதா உனக்கு?…” கண்டிப்போடு பேசியவனை முறைத்த ஆரவ்,
“ப்ச் போதும்டா, உன்னோட ரூல்ஸ் லெக்சரை கேட்க எனக்கு நேரமில்லை. இதுக்குத்தான் நானும் வரேன்னு சொன்னேன்…” என்றவனை இழுத்துகொண்டு அறைக்குள் நுழைந்த அர்ஜூன் ராகவ்வை மட்டும் தன்னோடு அழைத்துகொண்டான்.
“ஆஷா நீ உன் பேஷன்ட்ஸ் எல்லோரையும் போய் பார்த்துட்டு வா…”
“நான் தான் ரவுண்ட்ஸ் முடிச்சுட்டேனே அஜூ…” என்றவளிடம்,
“அவங்க உன்னோட பேஷன்ட்ஸ். அவங்களை இந்த நேரம் தான் பார்ப்பேன்னு டைம் பிக்ஸ் பண்ணி பார்க்கிறேன்னு சொல்றது ரொம்பவே தப்பு. இன்னொரு முறை ரவுண்ட்ஸ் போகக்கூடாதுன்னு எந்த சட்டமும் இல்லைங்க மேடம். போங்க போய் பாருங்க…” என அவளை அனுப்பிவிட்டு தானும் உள்ளே நுழைந்துகொண்டான்.
அர்ஜூன் எப்போதுமே ஒரு தனித்துவமான மனிதன் தான். தன்னுடைய டியூட்டி டைம் மட்டும் தான் வேலை செய்வேன் என்று கூறாமல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ரவுண்ட்ஸ் சென்றுவிடுவான்.
அவனின் இந்த செயல் அசமந்தமாக இருக்கும் மத்த டாக்டர்ஸ், நர்ஸ் அனைவரையும் சுறுசுறுப்புடன் விழிப்போடு இருக்க செய்தது. எந்நேரம் வந்து எதை கேட்பானோ என்று பயத்துடனே தங்கள் கடமையை சரியாக செய்வார்கள். இதற்கு ஆரவ்வையும் பழக்கபடுத்திவிட்டான்.
அறைக்குள் நுழைந்ததும் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த நிலாமுகியை சென்று பார்த்தவன் அவளை பார்த்தபடி சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டான். உள்ளே வந்த அர்ஜூன்,
“இவன் உள்ளே வந்த வேகம் என்ன? இப்போ பாருங்க. வொய்ப் பக்கத்துல நின்னு அவளை ரசிக்கிறதை. சரி வாங்கப்பா நாம கொஞ்ச நேரம் கழிச்சு வருவோம்…” என அர்ஜூன் கூறவும் ராகவ்வும் அதை ஆமோதித்து கிளம்ப முயல இருவரையும் பிடித்து இழுத்து நிறுத்தினான் ஆரவ்.
“கொஞ்சம் எமோஷனல் ஆகிட கூடாதே. என்னை காலி பண்ணிடுவீங்க…” என்றவன் முகத்தை தீவிரமாக்கி கொண்டு இருவரையும் பார்த்தான்.
“நாம் அங்க போய் பேசலாம்…” என நிலா உறங்கிகொண்டிருந்த அறையை சாத்திவிட்டு அதை ஒட்டி இருந்த அறைக்குள் சென்றனர்.
“சொல்லுங்கப்பா, நிலாவுக்கு சர்ஜரில எந்த ஆபத்தும் இல்லைன்னு உங்க ரெண்டுபேரோட ரியாக்ஷன்ல நல்லாவே தெரியுது…” என்றவன் அங்கே வைத்திருந்த நிலாவின் ரிப்போர்ட்ஸ் பைலை எடுத்தவன் தன் பார்வையை ஓடவிட்டான்.
வெளியில் இருக்கும்போது இருந்த எந்த பதட்டமும் படபடப்பும் இன்றி தெளிவான முகத்தோடு அமர்ந்திருக்கும் ஆரவ்வை பார்த்து வியக்கத்தான் செய்தார் அவனின் தந்தை.
“நீ சொல்றது சரிதான் ஆரவ். சர்ஜரியில எந்த ப்ராப்ளமும் இல்லைதான். அந்த ப்ளட்க்ளாட் அபாயமான அந்த பகுதியை விட்டு நகர்ந்திருக்கு. அதனாலதான் லாஸ்ட் டூ டைம்ஸ் வந்த தலைவலியும் நிலாவுக்கு அளவுக்கதிகமா தாங்கமுடியாததா இருந்திருக்கு…”
“இப்போ சர்ஜரி ரொம்ப கஷ்டமா இருக்காதுன்னு மேத்தா சொல்றாரு. ஆனா சர்ஜரிக்கு பின்னால நிச்சயம் பழைய நினைவுகள் நிலாவுக்கு திரும்ப 90% சான்ஸ் இருக்குன்னு சொல்றாரு. அதான் கொஞ்சம் கவலையா இருக்குது…”
யோசனையான முகத்தோடு அர்ஜூன் கூறவும் அவனை இதமாக பார்த்த ஆரவ்,
“இதுல யோசிக்க என்ன இருக்கு? ஒரு கவலையும் வேண்டாம். நிச்சயமா என்னோட நிலாவுக்கு பழைய நினைவுகள் திரும்பினாலும் அவளோட ஆழ்மனசுல இருக்கும் என் காதல் என்னை அவளோட இணைக்கும்னு நான் நம்பறேன் அஜூ…”
“என்னை விட அவ என் மேல வச்சிருக்கிற காதல் இருக்கு பாருங்க, அதை அதனோட வலிமையை அது கொடுக்கும் உணர்வுகளை வெறும் வார்த்தையால் சொல்லமுடியாது. என்னை விட நிலா என்னை அதிகமா நேசிக்கிறா டாடி…”
அர்ஜூனிடம் ஆரம்பித்து தன் தந்தையிடம் முடித்தவனை பெருமையாக பார்த்தார் ராகவ். மகன் அவனின் காதல் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக வாழ்கிறான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை அவருக்கு.
அவர் தான் வீட்டில் தினமும் பார்க்கிறாரே. நிலா போல ஒரு மருமகள் கிடைக்க தாங்கள் நிச்சயம் அதிர்ஷ்டம் புரிந்திருக்க வேண்டும் என அவ்வப்போது நினைத்துகொள்வார். அவளை இதே போல ஆரவ்வின் மீதான நேசம் சற்றும் குறையாமல் தங்களிடம் திருப்பி கொடுத்துவிடுமாறு ப்ராத்தித்துக்கொண்டார்.
அவரின் கவலை புரிந்தவனோ, “ப்ளீஸ் டாடி. நத்திங் வொரி டாடி…” என்றவன்,
“நீங்க தான் எனக்கு தைரியம் சொல்லனும். நீங்களே இப்படி உடைஞ்சு நின்னா நா…..ன்…. நான் என்ன பண்ணுவேன்?…” வேறு திசையில் பார்த்தபடி பேசியவனின் குரல் அவனையும் மீறி தழுதழுத்தது.
அதில் இருக்கையை விட்டு உடனே எழுந்த ராகவ் தன் வயிற்றோடு சேர்த்து ஆரவ்வை அணைத்துக்கொள்ள அவனும் தந்தையின் இடையை கட்டிக்கொண்டான். அர்ஜூன் தான் இப்படியே இவர்களை விட்டால் சரியில்லை என எண்ணி,
“அட போதும்ப்பா. டேய் சக்கு முதல்ல நீ நிலாவை போய் பாரு. இப்போ எழுந்துடுவா. போ…” என அவனை அனுப்பிய பின் ராகவ்வின் புறம் திரும்பியவன்,
“என்னப்பா நீங்க? நீங்களே அவனை கோழையாக்கிடாதீங்க. அவனை இப்படியே இருக்கவிடுங்க. அவனை பார்க்கும் போது நமக்கே ஒரு எனர்ஜி கிடைக்குது. இப்போ பாருங்க ஒரு நிமிஷம் எவ்வளோ பீல் பண்ணிட்டான். அவன் எப்போவும் போல இருக்கட்டும்…”
அர்ஜூனின் கூற்றை ஆமோதித்தவர் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறவும் அர்ஜூன் அங்கேயே அமர்ந்துவிட்டான்.
இன்னும் பதினைந்து நாளில் சர்ஜரியை வைத்துகொள்ளலாம் என்று மேத்தா கூறி சென்றிருக்கிறார். இதை ஆரவ்விடம் கூறவேண்டும் என்று அமர்ந்திருந்தான்.
நிலா எழுந்துகொள்ளும் அறிகுறி தெரியாததால் மீண்டும் அர்ஜூனிடம் வந்தவன் அவன் அமர்ந்திருக்கும் விதத்தை பார்த்து,
“என்னடா ஏன் இப்படி டல்லடிக்கிற? சத்தியமா பார்க்கமுடியலை. கொஞ்சம் முகத்தை நல்லாத்தான் வைக்கிறது?…” குரலில் கேலி இழையோட பேசியவனை முறைத்தவன்,
“இனிமே நிலாவை கொஞ்சம் இன்னும் கேர் எடுத்து பார்த்துக்கோடா. அவளோட தலையில் இருக்கிற பிளட்க்ளாட் கொஞ்சம் தள்ளி மூவ் ஆகிருக்கிறது நல்லதுக்குன்னும் எடுத்துக்க முடியாது. கெட்டதுக்குன்னும் எடுத்துக்க முடியாது…”
“இன்னும் பிஃப்டீன் டேய்ஸ்ல சர்ஜரி பிக்ஸ் பண்ணிருக்காரு மேத்தா. அதுக்கிடையில மறுபடியும் தலைவலி வந்தா இங்கயே அட்மிட் பண்ணிடலாம். நாம பக்கத்துலையே இருந்துப்போம்…”
இவ்வளவு பேசிய பின்னும் ஏனோ அர்ஜூனின் முகமும் மனமும் தெளிவில்லாமலே இருந்தது. அதை கண்ட ஆரவ் தன்னையும் நிலாவையும் எண்ணி கவலை கொள்கிறான் என நினைத்து ஆறுதலாக புன்னகைத்து அவனின் தோளில் தட்டிவிட்டு,
“ஓகேடா, நான் நிலாவை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பறேன். நீ முதல்ல உன் ஆஷாவை பாரு. அப்போதான் இந்த பீல்ல இருந்து நீ வெளில வருவ. நானே தெளிவா இருக்கும்போது நீ ஏன்டா. உனக்கு இது சூட் ஆகவே இல்லை…”
ஆரவ் கூறிவிட்டு சென்ற பின்னும் அர்ஜூனின் மனம் சமாதானம் அடையவில்லை. ஏதோ தவறாக நடக்கப்போவதாக அவனின் உள்மனம் அறிவுறுத்திக்கொண்டே இருந்தது.
காரணமில்லாமல் இப்படி உள்ளம் அடித்துகொள்வதா? இதற்கு என்ன அர்த்தம்? ஏன் ஆரவ்வையும், நிலாவையும் எண்ணி இந்த அர்த்தமில்லா பயம்? இது சரியில்லையே? அர்ஜூனிற்கு யோசிக்க யோசிக்க தலைவலிக்க ஆரம்பித்தது.
அவன் எண்ணியது போலவே அடுத்த நான்கு நாட்களில் அவனின் பயம் மெய்யாகும் படியான நிகழ்வுகள் நடந்தேறி ஆருயிர் நண்பனான ஆரவ்வை நிலைகுலைந்த நிலையில் காண வேண்டியதாகிவிட்டது.