தேடல் – 15
மிதமிஞ்சிய குளிர் அவ்வீடு முழுவதும் பரவியிருக்க அதன் குளுமை கொஞ்சமும் அண்டாது முகத்தில் விரவிய உஷ்ணத்தோடு கோவத்தில் நின்றிருந்தார் தர்ஷினி.
அவருக்கு சற்றும் குறையாத கோவத்தில் ஆடித்தீர்த்துக்கொண்டிருந்தான் ஆரவ். இருவரின் கோவத்தின் மத்தியில் செய்வதறியாது கைகளை பிசைந்தவண்ணம் நின்றிருந்தது நிலாவும் ராகவ்வும் தான்.
“இப்போ முடிவா என்னதான் சொல்றான் இவன்?…” என ராகவ்வை நோக்கி தர்ஷினி ஹிந்தியில் கீரிச்சிட,
“என்னை பார்த்தா அப்படி தெரியுதா? இல்லை இப்படித்தான் தெரியுதா? இவ்வளோ நேரம் நான் சொன்னது காதில் விழலையா உங்களுக்கு? சும்மா அதையே திருப்பி சொல்லமுடியாது…” ஆரவ்வும் தர்ஷினிக்கு நிகராக உச்சஸ்தானியில் குரலை உயர்த்த விழி பிதுங்கியது ராகவ்விற்கு.
அவரும் பாவம் என்னதான் செய்வார்? வீட்டிற்குள் நுழைந்து அரைமணி நேரம் ஆகியும் எதற்கு இப்படி சண்டை? எதற்காக இந்த வாக்குவாதம்? அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
நான் சொல்வதை கேட்கவேண்டும் என்று தர்ஷினியும், நான் சொல்வது தான் சரி என ஆரவ்வும் மொட்டையாக பேசிவைக்க,
தர்ஷினி அப்படி எதை சொல்லி ஆரவ் கேட்கவேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார் என புரியாமல் திகைத்து நின்றார் ராகவ்.
நிலாவை பார்த்து கேட்கலாமென நினைத்தால் ஆரவ் தான் அவளை அப்படி இப்படி நகரவிடாமல் தன் கைப்பிடிக்குள் நிறுத்தியபடி கத்திக்கொண்டிருந்தான். தலையில் கை வைக்காத குறையாக பரிதாபமாக பார்த்தபடி இருந்தவரது பொறுமையும் சிறிது நேரத்தில் பறந்தது.
“போதும் நிறுத்தறீங்களா ரெண்டு பேரும்?…” என அவர் போட்ட சத்தத்தில் தாயும் மகனும் தங்களின் கூச்சலை நிறுத்தி,
“இப்போ எதுக்கு இப்படி கத்தறீங்க?…” என ஒரே சேர கேட்டதும் நொந்தேவிட்டார் ராகவ். அதில் நிலா சிரித்துவிட,
“அப்போ இவ்வளோ நேரம் நீங்க செஞ்சதுக்கு பெயர் என்னவாம்?…” என்றவர் தோரணையாக அங்கிருந்த சோபாவில் கோவம் குறையாமல் அமர்ந்தபடி,
“தர்ஷி என்ன ப்ராப்ளம்? என்னைக்கும் இல்லாம எதுக்கு ரெண்டு பேரும் இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க?…” ராகவ்வின் எரிச்சல் குரலில் கொஞ்சம் கோவம் தனிந்த தர்ஷினி,
“நான் நிலாவை நாளைக்கு வெளில கூட்டிட்டு போகனும்னு சொன்னதுக்கு இவன் கூடாதுன்னு சொல்லி குதிச்சிட்டு இருக்கான். அவளே வரேன்னு சொல்லியும் நிலாவையும் போகக்கூடாதுன்னு சொல்றான்…”
ஆரவ்வை முறைத்துக்கொண்டே, “சரியான அராஜகம் இவன் செய்யுறது…” என முணுமுணுக்க இப்போது விஷயம் விளங்கியது ராகவ்விற்கு.
தர்ஷினி கோவம் கொள்வதில் எந்தளவிற்கு நியாயம் உள்ளதோ அதே அளவிற்கு ஆரவ்வின் வாக்குவாதத்திலும் நியாயம் இருப்பதை உணர்ந்தே இருந்தார் ராகவ்.
திருமணம் முடிந்த நாளில் இருந்து நிலா எங்கும் வெளியில் வர மாட்டேன் என்று பயந்ததும் அந்த பயத்தை போக்க ஆரவ் போராடியதும் இன்றளவும் கண்முன்னே நிழலாடியது அவருக்கு.
வெளியில் சென்றால் தன்னை யாரேனும் தாக்கிவிடுவார்களோ என்று பயந்து மிரண்டபார்வை பார்க்கும் நிலாவை காண தர்ஷினிக்கு உருகிவிடும் உள்ளம்.
எப்படியேனும் அவளின் இந்த பயத்தை போக்கவேண்டும் என எண்ணி வலுக்கட்டாயமாகவேணும் நிலாவை வெளியில் கூட்டிக்கொண்டு சென்றுவந்த சில நாட்களில் அவளின் நடவடிக்கையில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருந்தனர்.
ஆரம்பத்தில் வெளியில் எங்கு போகவேண்டும் என்றாலும் நிலாவை கிளப்புவதற்குள் ஆரவ்வும் ஸ்டெபியும் தலையால் தண்ணீர் குடிக்கவைத்துவிடுவாள் அவள்.
எப்போதும் ஆரவ்வுடனும் அவனோடு சேர்த்து குடும்பத்தினரோடும் செல்ல செல்ல அவளின் பயம் அவளின் அடிமனதில் அமிழ்ந்து போனது. முதலில் பயந்து பயந்து போய் வந்தவள் அடுத்த சில நாட்களில் ஆரவ் கூறியதுமே கிளம்பி அனைவரோடு சென்று வருவதில் கொஞ்சம் ஆர்வமும் காட்டவும் ஆரம்பித்தாள்.
எந்தளவிற்கு நிலாவை வெளியில் அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்வதில் முனைப்பு காட்டினானோ அதே அளவிற்கு தன்னை தவிர வேறு யாரோடும் நிலாவை அனுப்பமாட்டேன் என்பதிலும் பிடிவாதமாக இருந்தான் ஆரவ். அது எத்தனை பேராக இருத்தாலும் கூட.
“இப்போ என்ன அவசரம்னு நீயும் பிடிவாதமா இருக்க தர்ஷி? ஆரவ்வை சேர்த்து நீ கூட்டிட்டு போகவேண்டியது தானே? இதுக்கு ஒரு ஆர்ப்பாட்டமா?…” அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைக்க,
“நாளைக்கு அவன் வரமாட்டான்…” தர்ஷினி மகனை முறைத்தவண்ணம் இதை கூற,
“அப்போ நாளை மறுநாள் போகிறதுக்கென்ன?. அப்படி என்ன தேவைக்கு உடனே போகனும்னு பிடிவாதமா இருக்க?..” எனவும் ஆரவ்வை விட்டுவிட்டு ராகவ்வை முறைத்தார் தர்ஷினி.
ஏன் இந்த காட்டமான பார்வை? என காரணம் புரியாமல் ராகவ் விழிக்க அந்த செய்கையில் ஆரவ் வாய்விட்டே சிரித்துவிட்டான். அவனை திரும்பி கண்டிப்பான ஒரு பார்வையை அவனிடம் செலுத்திவிட்டு மீண்டும் மனைவியை பார்க்க இப்போது தர்ஷினியின் கோவம் பன்மடங்காக பெருகியது.
“இப்படி சிக்கிட்டீங்களேப்பா?. ப்ரீ அட்வைஸ். இப்போவே எஸ் ஆகிடுங்க…” ஆரவ்வின் முணுமுணுப்பு ராகவ்வை எட்டினாலும் அவர் இருந்த இடம் அசையாமல் அப்படியே மனைவியைத்தான் பார்த்துகொண்டிருந்தார்.
“விதி வலியதுன்னு இதைத்தான் சொல்லுவாங்களா டார்லி?…” அருகில் நின்றுகொண்டிருந்த நிலாவை மென்மையாக இடையோடு அணைத்தபடி நடக்கபோவதை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தான் அடாவடி ஆரவ்.
அவனின் அணைப்பில் நெளிந்த நிலா, “கையை எடுங்கங்க. நானே அப்பாவை நினச்சு கவலையா இருக்கேன். நீங்க என்னன்னா விளையாடிட்டு இருக்கீங்க?…” என அவனின் கரத்தை தட்டிவிட அவனோ இன்னும் தன் பிடியை இறுக்கினான்.
“இவன் அடங்கமாட்டானே” என சலித்தபடி தர்ஷினியை பார்க்க அவரோ கோவமாக தன் அறைக்கு செல்ல திரும்பினார். உடனே தன்னவனின் பிடியிலிருந்து நழுவிய நிலா தர்ஷினியை நிறுத்தி அவரை செல்லமாக கட்டிக்கொண்டு,
“ம்மா ப்ளீஸ். கோச்சுக்காதீங்க. அப்பாக்கு ஹாஸ்பிட்டல்ல வேலை அதிகமா இருந்திருக்கலாம். அதான் டென்ஷன்ல மறந்திருப்பாங்க…” என்றவள் ராகவ்வின் புறம் திரும்பி,
“ப்பா நாளை மறுநாள் என்ன நாள்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கு தானே?…”
அவர் ஆமாம் என தலையாட்டவேண்டுமே என வேண்டியபடி ராகவ்விற்கு சைகையால் என்னவென தெரியப்படுத்த முயல அந்தோ பரிதாபம் நிலா கூற வருவதை பற்றி ராகவ்விற்கு ஒன்றும் விளங்கவே இல்லை.
“பார்த்தியா உன் அப்பாவோட லட்சணத்தை? விடு நிலா. நான் ரூம்க்கு போறேன். உன் புருஷனுக்கு என் மேல நம்பிக்கை இல்லை. உன்னை என்ன பண்ணிடுவேன்னு என்னோட அனுப்பமாட்டேன்னு பிடிவாதமா இருக்கான்…”
“ஹைய்யோ ம்மா…” என நிலா தடுக்க முயல,
“உன் அப்பாவுக்கோ எங்க கல்யாணநாள் ஞாபகத்திலையே இல்லை. விடு இதைபத்தி எதுவும் பேசபோறதில்லை நான். லீவ் மீ…” என்றவர் முட்டிக்கொண்டு வந்த அழுகையை தொண்டையில் விழுங்கியபடி சென்றுவிட அதிர்ந்து அமர்ந்துவிட்டார் ராகவ்.
இத்தனை வருடத்தில் தர்ஷினி இது போல நடந்துகொண்டதும் இல்லை. பேசியதும் இல்லை. எப்போதுமே பாஸிட்டிவாக மட்டுமே பேசும் தர்ஷினி இதற்கு முன் இதுபோல் பலமுறை தான் திருமண நாள், அவரது பிறந்தநாள் என மறந்தாலும் அதை சிரித்த முகமாகவே ஏற்று புரிதலோடு வளையவருவார்.
ஆனால் இன்றோ இந்தளவிற்கு மனமுடைய என்ன காரணம் என புரியாமல் திகைத்து அமர்ந்துவிட்டார். அதிலும் தர்ஷினியின் கலங்கி சிவந்த விழிகள் அவரை குற்றவுணர்விற்கு ஆளாக்கியது.
நிலா என்ன செய்வது என புரியாமல் நிற்க ஆரவ் தர்ஷினியின் அறையை நோக்கி போக நினைக்க அவனை இழுத்துக்கொண்டு மாடியேறிவிட்டாள் நிலா.
“என்ன நிலா நீ? மாம் எவ்வளோ பீல் பன்றாங்க? அவங்களை கொஞ்சம் சமாதானம் செய்யலாம்னா என்னை கூட்டிட்டு வந்துட்ட?…”
“செய்யிறதையும் செஞ்சிட்டு என்ன சமாதானம் வேண்டியதிருக்கு?…” நிலா அவனை கடிய,
“அதுக்குத்தான் சாரி சொல்லி அப்டியே அவங்களை கொஞ்சம் ஹேப்பியாக்கலாம்னு பார்த்தேன்…”
“ஹேப்பியான்னா நாளைக்கு என்னை அம்மாகூட அனுப்பறதா முடிவு பண்ணிட்டீங்களா?…” ஆரவ் அனுப்பமாட்டான் என தெரிந்தும் தன்னையும் மீறிய ஒரு ஆர்வத்தோடு அவள் கேட்க அவள் எண்ணம் போல,
“ஒஹ் மேடம்க்கு அப்படி ஒரு நினைப்பு வேறையா? நான் டிஸைட் பண்ணினது பண்ணினது தான். நான் இல்லாம உன்னை எங்கயுமே அனுப்பவே மாட்டேன்…” ஒரே போடாக போடா அவனை முறைக்க மட்டுமே முடிந்தது நிலாவால்.
“பிடிவாதம் பிடிவாதம்…” என முணங்க அவளை தன் புறம் திருப்பி அணைத்துக்கொண்டவன் அவளில் உச்சந்தலையில் தன்னுடைய தாடையை வைத்து அழுத்தியபடி,
“என்ன வேணுமானாலும் சொல்லிக்கோ. டோன்ட் கேர். பட் உன்னை நான் மட்டுமே கேர் பண்ணனும். புரியுதா? இப்போ நான் போய் நான் மாம்கிட்ட பேசிட்டு அவங்க பீலிங்கை கொஞ்சம் குறைச்சிட்டு வரேன். இல்லைனா எனக்கு ரொம்ப பீல் ஆகிடும்…”
அறையை விட்டு கிளம்பியவனின் கையை பிடித்து தடுத்து நிறுத்திய நிலா,
“அவங்க பீல் பன்றாங்க தான். ஆனா நீங்க சொன்னதுக்காக இல்லை. மாமா அவங்களோட கல்யாண நாளை மறந்துட்டதால தான் வருத்தமா இருக்காங்க…” நிலா கூறியதும் வாய்விட்டு சிரித்த ஆரவ்,
“ஹே லூஸு பொண்டாட்டி, டாடி இதுவரைக்கும் எத்தனையோ தடவை வெட்டிங்டே, மாம் பர்த்டே எல்லாம் மறந்திருக்காங்க. அப்போலாம் கோவப்படாதவங்க இப்போ பீல் பன்றாங்களாக்கும்? ஆனாலும் நீ ரொம்ப கற்பனை பன்றடா டார்லி…”
தன்னை கேலி செய்த ஆரவ்வை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்த நிலா அங்கிருந்து நகர்ந்து பால்கனியில் கிடந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்துகொண்டாள். அவளின் பின்னே வந்த ஆரவ்,
“மேடம் பலமா யோசிக்கிறீங்க போல?…” அவளை இடித்துக்கொண்டு அருகில் அமர அவனை திரும்பியும் பார்க்காமல்,
“ஏன் ஆரவ் நீங்க என்னை முதல் முதல்ல எப்போ எங்க பார்த்தீங்க?…” இப்போது எதற்கு இது என்பது போல நிலாவையே பார்த்தபடி இருக்க அவளோ,
“என்ன டாக்டர்? அதுக்குள்ளே மறந்துட்டீங்களா?…”
கேலிக்குரலில் கேட்டாலும் இதற்கு நீ பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற பிடிவாதம் நிலாவின் குரலில் நிறைந்திருந்தது. அதில் ரோஷம் கொண்டவன்,
“யார்க்கிட்ட மறந்துபோச்சான்னு கேட்கற?…” என கொந்தளித்தவன்,
முதலில் நிலாவை எங்கு சந்தித்தான்? எப்படி பார்த்தான்? என்பதில் இருந்து எப்போது, என்ன பேசினான், எவ்விடம், எந்நேரம் என்பது வரை மனனம் செய்தவனாக ஒப்புவிக்க அவனையே காதலாக பார்த்திருந்தாள் நிலா.
“நான் ஆரவ். என்னோட காதல் ஒன்னும் அவ்வளவு சாதாரணம் கிடையாது நிலா. இந்த கேள்வியை நீ இப்போது இல்லை எப்போ கேட்டாலும் என்னால் பிசிறில்லாமல் பதில் சொல்ல முடியும். ஏன் நம் மேரேஜ்ல இருந்து இன்றை வரைக்கும் கூட ஒவ்வொரு நாளும் நீ என்ன செய்த என்ன பேசினன்னு கூட என்னால சொல்ல முடியும்…”