“ஒவ்வொரு நொடியும் உன்னோடான என் காதல் வாழ்க்கையை நான் அனுபவித்து வாழ்ந்துட்டு இருக்கேன். வாழும் அந்த நொடிகளையும் அது தரும் சந்தோஷத்தையும் எனக்குள்ள நான் பொக்கிஷமா பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். எந்த சூழ்நிலையிலும் இப்படி அபத்தமா மறந்திடுச்சான்னு கேட்டுவைக்காதே…”
நிலாவிடம் கூறிவிட்டு எழுந்தவன் பால்கனியிலிருந்து கீழே உள்ள தோட்டத்தை பார்வையிட ஆரம்பித்தான். தன் கோவத்தை அவளிடம் காட்டமுடியாமல் நிலையின்றி தவித்தவன் தன் பின்னந்தலையை அழுந்த கோதிவிட்டு மூச்சை ஆழ இழுத்துவிட்டு தன் உயிரானவளை திரும்பி பார்க்க நிலா அவனையே பார்த்திருந்தாள்.
தன் மீதான அவளவனின் காதல் நிலாவை பிரமிக்க செய்திருந்தது. நாளுக்கு நாள் அவன் மீதான காதல் தனக்குள் விஸ்வரூபம் எடுத்துகொண்டிருப்பதை நிலாவுமே சுகமாக உணர்ந்துகொண்டு தானே இருக்கிறாள்.
தான் விளையாட்டாக கேட்ட ஒரு கேள்வி எந்தளவிற்கு அவனின் மனதை பாதித்திருக்கிறது என புரிந்து வருந்தியவள் தன்னையே பார்த்தபடி இருந்த ஆரவ்வை நோக்கி இரு கைகளையும் நீட்டி அவனை வாவென அழைக்க நொடியும் தாமதிக்காமல் அவளை இறுக்கிக்கொண்டான்.
அவளின் அணைப்பில் தனக்குள் ஆறுதல் தேட முயன்றவனின் உள்ளமெல்லாம் ஏதோ இனம் புரியாத பயம் வியாப்பித்திருந்தது. இன்னும் பதினோரு நாளில் நிலாவின் சர்ஜரி. சர்ஜரிக்கு பின் அவளின் சுயநினைவில் தான் நினைவில் இல்லாமல் போனால் எந்தளவிற்கு தன்னால் அதை தாங்கமுடியும் என எண்ணி உள்ளுக்குள் சிதைய ஆரம்பித்திருந்தான் ஆரவ்.
அதுவும் அவள் மறந்துட்டீங்களா? என்று கேட்ட நொடியில் இருந்து. ஒரு கேள்வியை அதுவும் அவளை கண்ட நொடியை மறந்துவிட்டதாக கேட்டதிலிருந்து அவனால் தாங்கமுடியவில்லை.
நிலா விளையாட்டாக தான் கேட்டாள், ஆனாலும் தான் எப்படி அந்நாளை மறப்பேன்? என மனதிற்குள் சிறுபிள்ளை போல புலம்பினான். அவளின் கேள்வியே தன்னை அடிவரை அசைக்கிறதே.
ஒருவேளை சர்ஜரிக்கு பின் தன் நினைவுகளை இழந்து அந்நியமாக ஒரு பார்வை தன்னை பார்த்துவிட்டால் அக்கணம் தான் மரித்து போய்விடமாட்டோமா? என கலங்கினான்.
அந்த நிலையை தனக்கு கொடுத்துவிடாதபடி நிலாவின் நினைவுகளும் திரும்ப வேண்டும், அதே நேரம் தன் நினைவுகளும் நிலாவுக்குள் உயிர்ப்புடன் இருக்கவேண்டும் என்று இறைவனை மனமார வேண்டிக்கொண்டான்.
மனதில் கவலை மேகங்கள் பல சஞ்சலங்களுடன் உலாவர நிலாவை அணைத்ததிலிருந்து ஆரவ்வின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக இறுகி அவளை மூச்சிற்கு திணற வைத்தது. அவள் திமிர ஆரம்பித்ததும் தான் தன் தவறு புரிந்து அவளை விலக்கி நிறுத்தினான்.
“நிலா, நிலாடா. ஆர் யூ ஓகே?…” மனம் பதற அவளை பார்த்து,
“சாரிடா…..நான்…… சாரி….. ஏ….தோ யோசனையில….. நான்தான் …. சாரிடா நிலா…”
நொடியில் தன்னை நிதானித்துகொண்ட நிலா ஆரவ்வின் அதிகப்படியான பதற்றம் என்னவென புரியாமல் அவனை பார்க்க அவனின் முகத்தில் திடீரென பூத்திருந்த வியர்வை துளிகள் வேகமெடுத்து ஆறாக பெருக்கெடுக்க திகைத்துபோனாள்.
“ஆரவ் உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்குது? எனக்கொண்ணுமே இல்லை. பாருங்க நான் நல்லா தானே இருக்கிறேன்? உங்களுக்கு என்னாச்சு?…”
நிலாவின் கேள்வியில் சுதாரித்தவன் வியர்வையை துடைத்துவிட்டு, “நத்திங்டா, நீ மூச்சுவிட சிரமப்பட்ட இல்லையா? அதான் கொஞ்சம் பயந்துட்டேன்…” என கூறி அவளை பூவாக அணைக்க அவனையே புரியாது பார்த்திருந்தாள் நிலா.
நிலாவிற்கு செய்யவிருக்கும் சர்ஜரி பற்றி இன்னும் யாரும் அவளிடத்தில் கூறியிருக்கவில்லை. இப்போது வரை நிலாவிற்குமே அது தெரியவில்லை. சொல்லும் தைரியம் ஆரவ்விற்கும் இல்லை. யாரையும் அதை பற்றி நிலாவிடம் கூறவும் அவன் அனுமதிக்கவில்லை.
ஏற்கனவே எங்கே தனக்கு பழைய நினைவு திரும்பினால் ஆரவ்வை மறந்துவிடுவோமோ என அஞ்சி அவ்வப்போது ஆரவ்விடம் அழுது புலம்புபவள் எங்கே இதைப்பற்றி கூறி சர்ஜரிக்கு சம்மதிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.
அதுபோன்ற சமயங்களில் தனக்குள் கரைபவளை தேற்ற ஆரவ் தான் மனதளவில் உடைந்துவிடுவான். அத்தகைய நேரங்களில் ஆரவ்வின் மீதான நிலாவின் காதல் மென்மையில் இருந்து வன்மையாக மாறிவிடும். அவளை சமாளிக்க ஆரவ்வே திணறிபோவான்.
அதனாலே அவளிடம் இன்றுவரை உண்மையை மறைத்து தனக்குள் மட்டுமே வேதனையை சுமந்து அதன் வலியில் வெதும்பி அவளின் காதலில் தொலைந்து தன் காதலை காப்பாற்ற வழி தெரியாமல் வெளியில் தைரியமாக இருப்பது போல வேஷம் கட்டிக்கொண்டிருக்கிறான். ஆம் வேஷேமே.
நிலாவோ தனக்கு செய்யும் பரிசோதனைகள் அனைத்துமே நடந்த விபத்தினால் தன்னுடைய ஆரோக்யத்தை பற்றிய பரிசோதனைகள் என்றும், அடிக்கடி வரும் தலைவலிக்காகவும் என்றும் மட்டுமே என இன்று வரை நம்பிக்கொண்டிருக்கிறாள்.
இப்போதும் நொடியில் நிதானமிழந்து தன் மனக்கட்டுப்பாட்டை மீறி தன் பயத்தை வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நிலாவை திசைதிருப்ப தன் உற்சாகத்தை வலிய முகத்தில் கொண்டுவந்தவன்,
“ஆமா எதுக்காக திடீர்னு இப்படி ஒரு கேள்வி டார்லி? உனக்கு தெரியாதா நான் உன்னை பார்த்த நாளை மறப்பேனா இல்லையான்னு? உனக்கே இந்த கேள்வி அபத்தமா இல்லையா?…”
நிலாவை அணைத்த தன் கைகளால் அவளை சீண்டியபடி கேட்க அவளும் அவன் சற்றுமுன் இருந்த நிலையை மறந்து,
“காரணமாகத்தான் கேட்டேன் ஆரவ். இப்போ நீங்க என்னை பார்த்த அந்த நொடியில இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் அச்சுபிசக்காம அப்படியே சொல்லும் போது இந்த உலகத்திலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி நான் தான்னு ஒரு கர்வம் எனக்குள்ள…”
“எனக்கு கிடைச்சது போல ஒரு கணவன் இந்த உலகத்தில உண்டா? அப்டின்னு பெருமைபட்டுட்டு இருக்கேன். உங்க மனசுக்குள்ள நான் எந்தளவுக்கு பதிஞ்சுபோய் இருக்கேன்னு நினைக்க நினைக்க அப்படி ஒரு சந்தோஷம்…” என நிலா கனவில் மிதந்தபடி கூற,
“சத்தியமா புரியலைடா நிலா?…” என பரிதாபமாக கேட்ட கணவனை பார்த்தவள்,
“ஹைய்யோ ஆரவ். நான் இப்படி நினைக்கிறது போல தானே அம்மாவும் நினைப்பாங்க? இத்தனை நாள் அப்பா மறந்ததை விடுங்க. ஆனா இன்னைக்கு அதுவும் புதுசா வந்த என் முன்னால அவங்களோட கல்யாணநாள் பத்தின ஞாபகமே இல்லாம அப்பா முழிச்சது அம்மாவுக்கு எந்தளவுக்கு காயத்தை எற்படுத்திருக்கும்னு தெரியுமா?…”
நிலா கூற வருவது புரிந்த ஆரவ்வும் அந்த திசையின் தன் எண்ணவோட்டத்தை பயணித்துப்பார்த்து அதில் உள்ள உண்மையை உணர்ந்துகொண்டான்.
“மாம் இப்படித்தான் நினச்சிருப்பாங்கன்னு நீ எப்படி கரெக்டா சொல்ற நிலா?…”
“அம்மா மட்டுமில்லை எந்த ஒரு பொண்ணுக்குமே கணவனிடத்தில் சில தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாமே இருக்கும். அதுக்கு யாருமே விதிவிலக்கு கிடையாது. இதை கண்டுபிடிக்க பெருசா டாக்டருக்கு படிச்சிருக்கனும்னு ஒண்ணும் தேவையில்லை…”
ஆரவ்விடமிருந்து நான்கடி தள்ளி நின்று கூறியவள் அவன் முறைத்ததும் அறைக்குள் ஓட அவனும் அவளை துரத்திப்பிடித்து,
“வர வர வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு உனக்கு…” அவளின் இதழ்களை வருடியபடி கூற,
“வடிவு பாட்டி பேத்தியாச்சே? இவ்வளவு கூட பேசலைனா எப்படி?…” என மீண்டும் கலகலத்துகொண்டே வாயாட அவளை ரசனையாக மெய்மறந்து பார்த்தவன் ஏனோ அந்த நொடி இன்னமும் இன்னும் அவளை அதிகமாக நேசிக்க விரும்பினான்.
“ஹலோ டாக்டர், இன்னும் எத்தனை நேரம் இப்படியே பார்த்திட்டே இருப்பீங்க? அம்மாவை சமாதானம் செய்ய போகலையா?…” அவனை பிடித்து உலுக்க அதில் தெளிந்தவன்,
“இதெல்லாம் புருஷன் பொண்டாட்டி விவகாரம். மாமும், டாடியும் பேசிக்கட்டுமே. நாம நம்ம வேலையை பார்ப்போம்…” என சீண்டலோடு கூறியவனை அடக்கியவள்,
“ஆரவ் எனக்காக நீங்க ஒன்னும் செய்யனுமே?…” எனவும்,
“நான் இல்லாம வெளில போறதை தவிர நீ என்ன வேணும்னாலும் கேளு. கண்டிப்பா செய்வேன்…” கொஞ்சமும் இளக்கம் காட்டாமல் பேசியவனை உதறிவிட்டு கோபமாக சென்று படுத்துகொண்டாள் நிலா.
அதில் சலிப்பான ஆரவ், “ப்ளீஸ் நிலா. கோவப்படாதே. நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கோ…” என மன்றாடும் குரலில் பேசியவனை பார்த்து வேகமாக எழுந்தமர்ந்தவள்,
“முதல்ல நீங்க உங்க அம்மாவை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. அவங்க என்ன சொன்னாங்கன்னு கவனிச்சீங்க தானே? அவங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையான்னு கேட்டாங்கன்னா எவ்வளோ வருத்தமா இருந்திருப்பாங்க?…”
தன் நிலையை புரிந்துகொள்ளாமல் பேசும் மனைவியை என்ன சொல்லி சமாளிப்பது என புரியாமல் பேசாமடந்தையாக நின்றான் ஆரவ்.
“நாளைக்கு என்னால வரமுடியாதே. சொன்னா புரிஞ்சுக்கோயேன்…”
“நான் உங்களை வாங்கன்னு சொல்லலை. அம்மாவும் நானும் மட்டும் தான் போறோம். வேணும்னா ஸ்டெபி அக்காவையும் கூட்டிட்டு போறோமே?…”
இன்னமும் யோசனையிலேயே நின்றிருந்தவனை கொஞ்சம் கொஞ்சமாக பேசியே தன் வழிக்கு கொண்டுவந்திருந்தாள் நிலா.
“ப்ளீஸ். ஒரு மூணுமணிநேரம் தான். போய்ட்டு வந்திடுவோம்…”
அதன் பின் எத்தனை முயன்றும் அவனின் பேச்சு எடுபடாமல் போக வேறு வழியின்றி மனைவியவளது பேச்சிற்கே கட்டுண்டு நின்றான் கணவனவன்.
“போறதுன்னு முடிவு பண்ணிட்ட. ஓகே ஆனா…” என்றவனை இடைமறித்து,
“அம்மா கையை பிடிச்சுட்டே போகணும். போற இடமெல்லாம் வேடிக்கை பார்த்துட்டே நிக்கக்கூடாது. போன வேலையை முடிச்சுட்டு சீக்கிரமா வீடு வந்து சேரனும். டயர்டா இருந்தா உடனே அம்மாக்கிட்ட சொல்லனும். டேப்லெட்ஸ் எல்லாம் பத்திரமா ஹேண்ட்பேக்லையே வச்சுக்கனும். தலை வலிச்சா உடனே டேப்லெட் போட்டுக்கனும்…”
தான் சொல்லவேண்டிய விஷயங்களை எல்லாம் வரிசையாக தான் சொல்வதுபோலவே பாவனையாக கூறி பட்டியலிட்ட மனைவிமேல் கிஞ்சித்தும் கோவமோ வருத்தமோ எழாமல் காதலே பெருகியது.
தன் தாயிற்காக அவன் விருப்பத்திற்காக மெனக்கெடும் தன்னவளின் மனதை எண்ணி பெருமை கொண்டவன் தன் மனதில் அவள் பால் அதிகரித்துக்கொண்டே இருக்கும் காதலில் சுகமாக மூழ்கி திளைத்தான்.
“ஐ லவ் யூ நிலா…” என்றவனை கட்டிக்கொண்டவள்,
“அப்போ கோவமில்லையா என் மேல?…” விழிகளை அகல விரித்து லேசாக தலை சாய்த்து அவள் கேட்டவிதத்தில் விருப்பமாய் தொலைந்துகொண்டிருந்தான் ஆரவ்.
“உன் மேல என்னைக்கு நான் கோவப்படபோறேன்? சரி வா நாம போய் மாம் என்ன பன்றாங்கன்னு பார்ப்போம்…” நிலாவி கைய்யோடு கூட்டிக்கொண்டு தர்ஷினியை காண கீழே சென்றான்.
நிலாமுகி கூறியது போலத்தான் இருந்தது தர்ஷினியின் எண்ணங்களும். ராகவ்விடம் அவர் இப்படி ஏதாவது செய்து சொதப்பிவிடக்கூடும் என்றுதான் இரண்டு நாட்களுக்கு முன்பே தங்களுடைய திருமண நாளை பற்றி ஞாபகப்படுத்தி இருந்தார் தர்ஷினி.
காலையில் கூட ஹாஸ்பிட்டலில் ஸ்டெபி, வெட்டிங்டே ஞாபகம் இருக்கிறதா என்றும், தர்ஷினிக்கு இந்த வருட திருமணநாளுக்கு என்ன கிப்ட் குடுக்கபோறீங்க என்றும் ராகவ்விடம் கேட்க அவரோ சிரித்தபடி சஸ்பென்ஸ் என கூறியதையும் அதற்கு ஸ்டெபி இது புதுசா இருக்கே என கிண்டலடித்ததையும் தர்ஷினி கேட்டுக்கொண்டு தான் இருந்தார்.
இதுவரை சப்ரைஸாக எந்த ஒரு பரிசையும் ராகவ் வாங்கி குடுத்ததே இல்லை. எப்போதும் அது தர்ஷினியின் வேலை மட்டுமே. அவர் தான் ஒவ்வொரு வருடமும் புதிதாக யோசித்து ராகவ்விற்கு இன்ப அதிர்ச்சி அளிப்பார். அதுவும் அவருக்கு பிடித்தமானதாகவே இருக்கும்.
அப்படி இருந்தும் அவரிடம் நிலாவே நாளை என்ன நாள் என்று கேட்டும் ராகவ் மறந்துபோனது தர்ஷினியால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை. அதுவும் மருமகளின் முன்னால் தன்னுடைய காதல் வாழ்க்கை கேலிக்குரியதாகிவிட்டதை போல நினைத்து அவருக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
அழுவது கோழைத்தனம் என்று அனைவருக்கும் உணர்த்தும் தர்ஷினியே இப்போது அந்த நிலையில் இருக்க சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவர் பின் தானே தெளிந்து,
“ச்சே என்ன இது? நானே பலருக்கு அட்வைஸ் சொல்லிட்டு இப்படி அழறது ரொம்ப கேவலம். இப்போ என்ன? ராகவ் திருமணநாளை தானே மறந்தார், என்னை இல்லையே? இத்தனை வருஷம் இல்லாமல் என்ன புதுசா எனக்கு இந்த எக்ஸ்படேஷன்? நோ வே. நான் அழமாட்டேன்…”
“ஆரவ்வை போல நிலாவும் என்னுடைய பிள்ளை தானே? அவள் முன் தலைஇறக்கமாகி போனதா நான் ஏன் நினைக்கனும்? இது சரியில்லை. நீ ஏன் இப்படி சில்லியா பிஹேவ் பன்ற? தர்ஷி திஸ் இஸ் டூ மச்…” என தன்னை தானே கடிந்துகொண்டு பேச அவர் பேசியதை கேட்டுகொண்டே உள்ளே வந்த ராகவ்,
“சாரி தர்ஷி…” என்றபடி தர்ஷினியின் கைகளை பற்றிக்கொள்ள,
“ச்சு என்ன ராகவ் நீங்க? நான் தான் இத்தனை வயசுக்கு பின்னாலையும் கொஞ்சமும் மெச்சூரிட்டி இல்லாம நடந்துட்டேன்னு பீல் பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா?…” என ராகவ்வை சமாதானம் செய்ய முயல,
“இல்லை தர்ஷி. எப்போவும் போலவே நான் நம்ம வெட்டிங்டேயை மறந்துட்டேன். அதை நான் முதல்ல சாதாரணமா எடுத்துட்டு உன்கிட்ட பேசலாம்னு வந்தா உன் பேச்சை கேட்டு ரொம்ப ஷாக் ஆகிட்டேன். உன்னோட கண்ணீருக்கு இப்படி ஒரு காரணம் இருக்கும்னு இந்த கோணத்தில நான் யோசிக்கவே இல்லை. கில்டியா பீல் பன்றேன்…”
“அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. எனக்கு அப்போ கஷ்டமா இருந்தது தான். ஆனா நீங்க முழிச்சிட்டு நின்னதையும் நம்ம மருமகள் உங்களுக்கு ஞாபகபடுத்தி உங்களை காப்பாத்த முடியாம திணறினதையும் இப்போ நினச்சா எனக்கு சிரிப்புதான் வருது…”
“இதுதான் நீ தர்ஷி. எந்த ஒரு நெகட்டிவ் தாட்ஸ்ல கூட ஒரு பாஸிட்டிவ் கண்டுபிடிக்கிற பாரேன். உன்னோட குணம் வேற யாருக்குமே வராது. ஐ லவ் யூடா. இனிமே மறக்காம இருக்க முயற்சி பன்றேன்…”
“அதெல்லாம் ஒன்னும் பண்ணவேண்டாம். அப்பப்போ எல்லாத்தையும் மறந்துட்டு இப்படி அசடுவழிஞ்சு நீங்க சொல்ற ஐ லவ் யூவே தனி தான். அதுக்காகவே நீங்க மறக்கிறதுல எனக்கு நோ அப்ஜெக்ஷன்…” என சிரித்தபடி தர்ஷினி கூறவும் அவரின் சிரிப்பில் தன்னையும் இணைத்து தன் மனைவியை அணைத்துக்கொண்டார் ராகவ்.
சரியாக அந்நேரம் ஆரவ்வும் கதவை தட்டிவிட்டு நிலாவுடன் உள்ளே வர,
“ஹூ இஸ் தி டிஸ்டபன்ஸ்?…” என கூறியபடி தர்ஷினியோடு திரும்பினார். அப்போதும் மனைவியை தன் கை வளைவிற்குள் வைத்தபடி தான் தெனாவெட்டாக நின்றிருந்தார்.
“டூ பேட் மாம், நீங்க ஏன் இவ்வளவு சீக்கிரமே டாடி கூட காம்ப்ரமைஸ் பண்ணீட்டீங்க? அவரை இன்னைக்கு நீங்க ட்ரில் வாங்குவீங்கன்னு எதிர்பார்த்தேனே?…” என ராகவ்வை ஓரவிழியால் பார்த்துக்கொண்டே,
“இவர் செஞ்சதுக்கு நீங்க பேசியிருக்கவே கூடாது. நீங்க என்னன்னா இப்டி லவ் டயலாக் அடிக்கிறீங்க? இது கொஞ்சம் கூட நல்லாயில்லை…” என்றவனை,
“அட பொறாமை பிடிச்சவனே…”என கோவம் போல மகனை பார்த்திருந்தார் ராகவ். அவரின் கோவத்தில் சிரித்த தர்ஷினி,
“நீ சும்மா இருக்கமாட்டியா ஆரவ்? ஆமா நீ எதுக்கு இப்போ இங்க வந்த? அதான் உன் வொய்பை என்னோட அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டியே? போய் தூங்கவேண்டியது தானே?…” என முறுக்கிக்கொள்ள,
நிலாவை விடுத்து ராகவ்வை விலக்கி தர்ஷினியை கட்டிக்கொண்ட ஆரவ்,
“மாம், ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? நாளைக்கு நிலா உங்களோட கண்டிப்பா வருவா, வருவா வருவா…”என கூறவும் தர்ஷினியின் முகம் மலர்ந்து பின் யோசனைக்குள்ளானது.
“அப்போ நாளைக்கு கேம்ப்க்கு நீ போகலையா?…” என கேட்கவும்,
“நோ மாம் கண்டிப்பா கேம்ப் போய் தான் தீருவேன். அதை என்னால மாத்த முடியாது. அதான் நிலா கூட நீங்க இருக்கீங்களே?…”
“ஹைய்யோடா, அது சார்க்கு இவ்வளோ நேரம் ஆர்க்யூ பன்றப்போ தெரியாதா?…” என்று ஆரவ்வின் காதை பிடித்து திருக அவனும் அவரின் இழுப்புக்கு இசைந்துகொடுத்தான்.
மகனின் வாய்தான் ஒப்புதல் அளித்ததே தவிர அவளது கண்களின் அலைப்புருதலை சரியாக கண்டுகொண்டார் ராகவ்.
“ஆரவ், நீ ஒன்னும் பயப்பட வேண்டாம். நாளைக்கு நானும் இவங்க கூட கண்டிப்பா போவேன். சோ நீ கேம்ப்ல உன்னோட கவனத்தை செலுத்தினா போதும்…”
“தேங்க்ஸ் டாடி…” என அவரை அணைத்துகொண்டான் ஆரவ்.
ஆரவ்வின் ஹாஸ்பிட்டலில் இருந்து நான்கு மாதத்திற்கு ஒரு முறை டெல்லியை சுற்றி உள்ள சிற்சில கிராமங்களுக்கு இலவசமாக மருத்துவமுகாம் நடத்துவார்கள். அதில் தவறாமல் ஆரவ் அர்ஜூன், ஸ்டெபி என அனைவரும் கலந்துகொண்டு பணியாற்றுவார்கள்.
எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும் அவர்களது இந்த கடமையிலிருந்து தவறாமல் இன்றுவரை செயல்பட்டு வருகின்றனர். அதன் மூலமாகவும் ஹாஸ்பிட்டல் நன்மதிப்பை பெற்று இன்றுவரை புகழ்பெற்று விளங்குகிறது.
நால்வரும் தர்ஷினியின் அறையில் இன்னும் சிலமணித்துளிகள் அரட்டையடித்துகொண்டிருந்தனர்.
“ஓகே ஆரவ், இன்னும் உன் டாடி சாப்பிடாம இருக்கார். நாங்க போய் சாப்பிடறோம். நீ மார்னிங் சீக்கிரமே எழுந்து கிளம்பனுமில்லையா? நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க…”
“ஓகே மாம். குட்நைட்…” என கூறியவன் ராகவ்விடமும் சொல்லிக்கொண்டு வெளியேற பின்னால் சென்ற நிலாவை நிறுத்திய தர்ஷினி,
“டேப்லெட் போட்டுட்டியா நிலா?…” என்றவரை பார்த்து,
“ஓ போட்டுட்டேனே ம்மா…” புன்னகையோடே கூறிவிட்டு சென்றாள் நிலா. அவளையே கவலையோடு பார்த்த தர்ஷினி,
“ஆக்சிடென்ட் நடந்து முடிந்து இத்தனை மாசம் எதுக்காக இவ்வளோ டேப்லெட்ஸ் எடுத்துக்கறோம், மந்த்லி டூ டைம்ஸ் செக்கப் போறோம்ன்னு தெரியாமலே நிலா நாம சொல்றதை எல்லாம் அப்பாவியா கேட்டுட்டு இருக்கா. அவளுக்கு நடக்கபோற சர்ஜரி பத்தி இன்னும் ஒரு வார்த்தை கூட அவகிட்ட சொல்லலைன்னு எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு ராகவ்…”
ஆற்றாமையோடு கூறிய தர்ஷினியை ஆறுதல் படுத்தும் விதமாக அணைத்துகொண்ட ராகவ்வின் விழிகளிலும் கவலையின் சாயல்.
இந்த கவலையை விட பெரிதாக மறுநாள் பேரிடி தாக்கவிருப்பதை அறியாமல் இருவரும் நிலாவின் தற்போதைய நிலையை எண்ணி கலங்கிக்கொண்டிருந்தனர்.