தேடல் – 17
உறைந்த நிலையில் உணர்வற்று போய் ஆப்பரேஷன் தியேட்டர் முன்பு அமர்ந்திருந்த ஆரவ்வை ஒருவராலும் நெருங்க முடியவில்லை. தர்ஷினியோ குற்றவுணர்வில் துடித்துக்கொண்டிருந்தார்.
முதல் நாள் தன்னிடம் நிலாவை அனுப்பமுடியாது என்று மறுத்த மகனிடம் அவன் பயந்தது போலவே நடந்தபின் இப்போது என்னவென கூறி சமாதானம் செய்வது? நிலாவை கவனியாது பொறுப்பற்று தான் நடந்துகொண்ட விதமே அவரை மகனை விட்டு தள்ளி நிற்கவைத்தது.
ராகவ் எவ்வளவு எடுத்துக்கூறியும் மகனருகில் செல்லமறுத்துவிட்டார் தர்ஷினி. ஸ்டெபி தான் ஆரவ்வின் கைகளை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால் அதை உணரும் நிலையில் ஆரவ் இல்லை.
மருத்துவ முகாமிற்கு ராகவ் மூலம் விஷயம் தெரியப்படுத்தப்பட ஆரவ்வோடே ஸ்டெபியும் உடன் கிளம்பிவிட்டாள். மற்றவர்களோடு இருந்து பணியாற்றும்படி அர்ஜூனிடம் கூறிவிட்டு அவள் கிளம்பிவிட அர்ஜூனால் வேறேதும் கூறமுடியாத நிலை.
ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்த ஆரவ் முதலில் பார்த்தது தன் தந்தையை தான். அவனை ஆறுதல் படுத்தும் விதமாக அணைக்க முயன்ற ராகவ்வை தள்ளி நிறுத்தியவன்,
“டாடி நிலாவுக்கு என்னாச்சு? சின்ன அடி, மயங்கி விழுந்துட்டான்னு சொன்னீங்க? ஆனா இங்க நின்னுட்டு இருக்கீங்க?…” என ஆப்பரேஷன் தியேட்டரை காண்பித்து கேட்கவும்,
“சொல்றேன், சொல்றேன் ஆரவ். நீ முதல்ல ரிலாக்ஸ் பண்ணு…” என,
அவரின் கைகளை ஆக்ரோஷமாக தட்டிவிட்டவன், “ரிலாக்ஸா? உங்க ஷர்ட் முழுக்க இவ்வளோ ப்ளட்? நிலாவுக்கு என்ன ஆச்சுன்னு இப்போ சொல்லபோறீங்களா இல்லையா?…”
இருக்கும் இடம் புரிந்து தனது பொறுமையை இழுத்துபிடித்து அடிக்குரலில் சீற அவனின் கோபாவேசமான முகம் அங்கிருந்த மற்றவர்களை மிரளவைத்தது. தர்ஷினியோ அழவே ஆரம்பித்துவிட்டார்.
“சாரி ஆரவ், எல்லாம் என்னாலதான்…” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதவர் மேலும் கூற ஆரவ்வை நெருங்க அவரை பார்த்தபடி என்ன சொல்கிறார் இவர்? என்பது போல அப்படியே நின்றிருந்தான் அவன்.
“ஜஸ்ட் ஷட்அப் தர்ஷி. நான் தான் சொல்லிட்டு இருக்கேன்ல. ஸ்டே ஆஃப் ஹியர்…” என்று கடுமையாக கூறியவர் மெதுவாக நடந்ததை கூற கூற ஆரவ் அதிர்ந்துபோய் நின்றான். அதனால் உடனடியாக மேத்தா வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பின்,
“ஆரவ் இவர் நிலாவோட அப்பா…” என தர்ஷினிக்கு பின்னால் தள்ளி அமர்ந்திருந்த ஒருவரை காண்பித்து கூறவும் உள்ளுக்குள் என்ன உணருகிறான் என்றே அவனே அறியமுடியாத நிலைக்கு ஆளானான்.
“நிலாவுக்கு பழைய நினைவு திரும்பிடுச்சுன்னு நினைக்கிறேன் ஆரவ். அவ இவரை அப்பான்னு கூப்பிட்ட பின்னால தான் அவளோட கான்ஷியஸ் போய்டுச்சு. உள்ளே இப்போ ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு…”
விழிகளில் வழிய இருந்த கண்ணீர் வற்றி நிராசையை நிரப்பிக்கொண்டது. ஏனோ காலையில் நிலா பேசிய அனைத்தும் நியாபகத்திற்கு வர உயிர் வரை உறைந்து போனான். இனி தன்னுடைய நிலாவாக அவள் இருப்பாள் என்பதில் அவனுக்கு நம்பிக்கையே இல்லை.
இலகுவாக காதலில் ஜெயித்து திருமணத்தை முடித்துக்கொண்டவன். நிறைவான ஒரு வாழ்க்கையை எந்தவிதமான சங்கடங்களும் இடைஞ்சல்களும் இன்றி திகட்ட திகட்ட வாழ்ந்தவன். இனி போராடவேண்டிய காலமோ? அந்த போராட்டம் நிலாவோடா? இல்லை அவளின் குடும்பத்தினரோடா?
குணசேகரனை நிமிர்ந்து பார்த்தான். தன் கைகளில் இருந்த துண்டில் நிலாவின் குருதியை பார்த்து பார்த்து கண்ணீர் விட்டுகொண்டிருந்தவரின் பரிதாபமான நிலை அவனை உலுக்கியது. குணசேகரனின் அருகே அமர்ந்திருந்த தயாளன் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டு அமர்ந்திருப்பதையும் கண்டான்.
அதற்கு மேல் எதையும் பார்க்கவோ ஆராயவோ ஆரவ்வின் மனதிற்கு சக்தி இல்லை. கண்களை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டான். மனம் முழுவதும் பிராத்தனைகள். நிலாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் இன்றி நல்லபடியாக மீண்டு வந்துவிட வேண்டும் என்பது மட்டும் தான்.
அது ஆரவ்வின் மனைவி நிலாவாக இருந்தாலும் சரி. குணசேகரனின் மகள் நிலாவாக இருந்தாலும் சரி. எதுவானாலும் என் மனைவியை நான் விட்டுவிடமாட்டேன். அவள் எந்த குறையும் இன்றி முழு உடல்நலத்தோடு திரும்பி வந்தால் போதும் என்பது மட்டுமே.
சிறிதுநேரத்தில் அர்ஜூனும் வந்துவிட அங்கு நடந்த விபரங்கள் அறிந்து ஆரவ்வை பார்த்தான். அவன் அமர்ந்திருந்த கோலமே அர்ஜூனின் மனதை வாள் கொண்டு அறுத்தது. ராகவ்விடம் கேட்டு நடந்ததை தெரிந்துகொண்டான்.
அதற்கு மேல் உணர்வுகளுக்கு இடமளிக்காமல் நிலாவின் தற்போதைய உடல்நிலை எப்படி இருக்கிறது யார் அவளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்பது முதல் அனைத்தையும் கேட்டுக்கொண்டு ஒரு மருத்துவனாக தான் என்ன செய்யவேண்டும் என யோசித்தவன் அப்போதுதான் ஒதுங்கி நின்ற தர்ஷினியை பார்த்தான்.
“என்ன தர்ஷிமா நீங்க? இதுதான் நடக்கனும்னு விதி இருக்கும் போது நீங்க கவலைப்பட்டு ஒன்னும் ஆகபோறதில்லை. நீங்களே இப்படி ஒதுங்கி நின்னா ஆரவ்வை யார் பார்த்துப்பாங்க? போய் அவனோட பேசுங்க…” எனவும்,
“இல்லை அஜூ. அவன் என்னை திரும்பி கூட பார்க்கலை. நிலாவை எங்களோட அனுப்பமாட்டேன்னு நேத்து ஒரே ஆர்கியூமென்ட் தெரியுமா? அதையும் மீறி கடைசில எனக்காக அனுப்பினதா சொன்னான்…”
“நீங்க இருக்கீங்களேம்மா, அப்டின்னும் சொன்னான். அவன் வச்ச நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியலையே? எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு அஜூ. அதுவும் இல்லாம நிலாவோட பேமிலி வந்துட்டாங்க அவளை தேடி. அவளை கூட்டிட்டு போய்டுவாங்களோ?…” என பரிதாபமாக கேட்டார்.
டெல்லியிலேயே மகப்பேறு மருத்துவத்தில் புகழ்பெற்ற கைராசியான சிறந்த மருத்துவரான தர்ஷினி, தைரியத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் பெயரெடுத்த தர்ஷினி மகனின் விஷயத்தில் குழந்தையாகி போனார்.
இது அர்ஜூனுக்கு புது செய்தி. ராகவ் நடந்த விபரத்தை மட்டும் கூறியவர் நிலாவின் குடும்பம் வந்துவிட்டதை கூறாமல் இருந்தார். இப்போது தர்ஷினி கூறியதும் அவர்களை காட்டியதும் தான் அவன் பார்த்தான்.
“சரி இப்போ இதையெல்லாம் நினச்சு அழ டைம் இல்லை. நீங்க ஒரு டாக்டர். இந்த மாதிரி நேரத்துல நீங்களே இப்படி எமோஷனல் ஆகலாமா? சொல்லுங்க. போங்க முதல்ல ஆரவ்க்கு தைரியம் சொல்லுங்க. நிலா நம்மை விட்டு எங்கயும் போய்டமாட்டா…”
“இல்லை அஜூ. நிலாவுக்கு மறந்த எல்லாம் நியாபகம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்…” என்றவர் நடந்ததை கூற அவர்களது பேச்சுவார்த்தை ஹிந்தியில் இருந்ததால் குணசேகரனை சேர்ந்தவர்களுக்கு புரியவில்லை.
அர்ஜூன் அனைவரையும் ஒருமுறை தீர்க்கமாக பார்த்தவன் பின் அழுத்தமான குரலில்,
“தர்ஷிமா, நிலா நம்ம வீட்டு பொண்ணு. ஆரவ் மனைவி. நம்மை விட்டு எங்கயும் போய்டமாட்டா. போக யாரும் விட்டுடவும் மாட்டோம்…” என்று அழுத்தம் திருத்தமாக தமிழில் கூற குணசேகரன் தயாளன் மற்றும் வள்ளியம்மை மூவரும் திடுக்கிட்டு பார்த்தனர்.
அனைத்திற்கும் மேலாக வள்ளியம்மைக்கோ எங்கே தான் நினைத்து வந்தது நடவாமல் போய்விடுமோ என்ற பயம் கவ்வ ஆரம்பித்தது.
“நிலாவை விட்டுவிடாதே. அவள் தான் உன் எதிர்காலம்” என்றொரு முரட்டுக்குரல் மீண்டும் வள்ளியம்மையின் காதில் ஒலித்தது. வஞ்சகமான பார்வையோடு அங்கிருந்தவர்களை முறைத்தார் வள்ளியம்மை.
இதையெல்லாம் உணரும் நிலையில் ஆரவ் இல்லை. அவனின் எண்ணம் முழுவது நிலா மட்டுமே நிறைந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் மேத்தா வரவுமே நிலாவை பரிசோதித்துவிட்டு,
“டோன்ட் வொரி டாக்டர் ராகவ். நடந்தது நல்லதுக்குன்னு எடுத்துக்கோங்க. ரொம்ப க்ரிட்டிக்கல் ஆபரேஷனா இருந்திருக்கவேண்டியது. இப்போ அந்தளவுக்கு காம்ப்ளிக்கேட்டட் ஸ்டேஜ்ல இல்லை. சோ பயப்பட எதுவும் இல்லை. ஹண்ட்ரட் பர்சன்ட்…”
அவரின் பேச்சில் கொஞ்சம் தெளிந்தாலும் முழுமையாக நிம்மதிகொள்ள முடியவில்லை. உடனடியாக ஆப்பரேஷனுக்கு துரிதகதியில் செயலாற்ற ஆரம்பித்தனர். ராகவ்வை தடுத்துவிட்டு ஆண்டனியும் அர்ஜூனும் மேத்தாவுடன் சென்றனர்.
ஆரவ் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எங்கும் நகரவில்லை. யாரோடும் வாயை திறந்து பேசவும் இல்லை. ஆனால் மனதால் ஆத்மார்த்தமாக பேசிக்கொண்டிருந்தான் நிலாவோடு. விடாமல் அவளிடம் ஏதேதோ பேசியபடியே இருந்தான். தனது உள்ளத்தின் உணர்வுகள் அவளை அடையும் என்ற நம்பிக்கையோடு.
ஆரவ்வின் மனப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மேத்தா வெளியில் வரவும் அவரை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தானே தவிர என்ன ஏதென்று கேட்க முயலவில்லை. அவரின் முகத்தை வைத்தே புரிந்துகொண்டதை போல அமைதியாக பார்த்திருந்தான்.
“நத்திங் வொரி ராகவ். இன்னும் டூ டேய்ஸ் அப்ஸர்வேஷன்ல இருக்கனும். அப்றமா ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடலாம். மத்த எதுவும் உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. கான்ஷியஸ் திரும்பவும் உங்க டாட்டர்-இன்-லாவை நீங்க போய் பாருங்க…” என கூறிவிட்டு ஆரவ்வை பார்த்து புன்னகைத்துவிட்டே நகர்ந்தார்.
சிறிது நேரம் கழித்து மெல்ல எழுந்தவன் தர்ஷினியை நெருங்கி,
“மாம் போய் சாப்பிடுங்க. டைம் ஆச்சு பாருங்க. பிபி டேப்லெட் எடுத்துக்கனுமே நீங்க. டாடியையும் கூட்டிட்டு போங்க…” என,
“ஆரவ் சாரிடா…” என விட்ட அழுகையை தொடர முயல,
“ச்சோ மாம், நீங்க உங்களையே ப்ளேம் பண்ணிக்காதீங்க, ப்ளீஸ். நடந்ததை விடுங்க…” என்றவன் குணசேகரனையும் பார்த்துவிட்டு,
“அவங்களையும் கூட்டிட்டு போங்க…” என அவர்களை கை காண்பித்து கூறவும் தான் ராகவ் அவர்களை பார்த்தார். இதை தான் யோசிக்காமல் விட்டுவிட்டோமே என நினைத்தவர் குணசேகரனை நெருங்கினார்,
“வாங்க எதாச்சும் சாப்பிடலாம்…” என அழைக்க,
“இல்லைங்க, பரவாயில்லை. நாங்க பார்த்துக்கறோம்…” தயாளன் ராகவ்வை மறுத்து கூற வேகமாக அவர்களை நெருங்கிய அர்ஜூன்,
“இதுல நீங்க மறுத்து பேச என்ன இருக்கு? இப்போ நாம எல்லாருமே சொந்தமாகிட்டோம். இப்ப ஏன் இப்படி சொல்றீங்க? நம்ம நிலாவை பார்க்கும் போது நீங்க தைரியமா தெம்பா இருக்கவேண்டாமா? அதான் நிலாவுக்கு இருந்த ப்ராப்ளம் சரியாகிட்டதே…” என்றவன்,
“அதுவும் இல்லாமல் உங்களை நாங்க கவனிச்சுக்கலைனா உங்க வீட்டு மாப்பிள்ளை எங்களை உண்டில்லைன்னு பண்ணிடுவான். என்ன ஆஷா? சொல்லேன் அவங்கக்கிட்ட…”
இயல்புபோலே அர்ஜூன் பேசினாலும் உங்க வீட்டு மாப்பிள்ளை என்ற வார்த்தைக்கு அதிகளவில் அழுத்தம் இருந்ததை போல உணர்ந்தார் குணசேகரன். இப்போதைக்கு எதையும் மறுக்கவோ எதிர்த்தோ பேச அவருக்கு திறனும் இல்லை. மனமும் இல்லை.
அர்ஜூனின் பேச்சை கேட்ட தயாளன் அதை ஆமோதித்தவாறே குணசேகரனை எழுப்பி அழைத்துசென்றான். உடன் வள்ளியம்மையும். செல்லும் போது ஆரவ்வை ஒருமுறை திரும்பி பார்க்க அதை உணர்ந்த ஸ்டெபி,
“அவன் கூப்பிட்டாலும் வரமாட்டான். அவனுக்கு எப்போ தோணுதோ அப்போதான் சாப்பிடுவான். அவன் பிடிவாதம் அப்படி. மாத்தமுடியாது. அதனால நீங்க வாங்க அங்கிள்…”
இயல்பு போலே தான் இதை ஸ்டெபி கூறியது அதை மற்றவர்கள் எதார்த்தமாக எடுத்துக்கொண்டாலும் வள்ளியம்மையால் அப்படி விடமுடியவில்லை.
“பார்க்க அப்பாவியா தெரியிற இவனுக்கு இந்த பிடிவாதம் நிலாவின் விஷயத்திலும் இருக்குமோ? ஆபத்தாச்சே? தான் நினைப்பதை எப்படி சாதிக்க?” என யோசனை இருந்தாலும் தன்னை மிஞ்ச யாருமில்லை. எதுவாகினும் தான் நினைத்ததை நடத்தியே தீருவேன் என்று சூளுரைத்துகொண்டார் வள்ளியம்மை.
அவரின் எண்ணங்களுக்கும் வரையறைகளுக்கும் அப்பார்ப்பட்டவன் ஆரவ் என்பதை அவர் அப்போது உணரவில்லை. நிலாவின் விஷயத்தில் அவனின் பிடிவாதத்தையும் தாண்டி அவள் மீதான அதீதமான காதல் அவனை எந்த எல்லைக்குள்ளும் அடக்காது என்பதை உணராது போனார்.
உணவை தர்ஷினியின் பர்ஸ்னல் அறைக்கே தருவித்த அர்ஜூன் அனைவரும் அங்கேயே அமர்ந்து உண்ணும்படி ஏற்பாடு செய்துவிட்டான்.
ஏதோ பெயருக்கு உண்டுகொண்டிருந்த குணசேகரனை பார்த்த ராகவ் அவரிடம் எப்படி பேச என்று யோசித்துக்கொண்டே உணவை முடித்துக்கொண்டார். அங்கே ஒரு தர்மசங்கடமான நிலை சூழ்ந்துகொண்டு அனைவரையும் மௌனமாக்கியது.
மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்தமர்ந்தார் ஆரவ்வின் மாமனார். அப்போது ஆரவ் அவரை பார்த்தான். பார்த்துக்கொண்டே தான் இருந்தான். ஆனால் பேசமுயலவில்லை.
அவனின் பார்வையில் என்ன இருந்தது என உணரமுடியாமல் அவனை பார்ப்பதும் பின் வேறு புறம் திரும்புவதுமாக இருந்தார் குணசேகரன். இதை கண்ட ராகவ்விற்கு மகன் தான் சென்று பேசினால் என்ன என்று தான் தோன்றியது.
அவனும் பேசாமல் தானும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று உணர்ந்தவர் மெல்ல குணசேகரனிடம் பேச்சை ஆரம்பித்தார்.
முதலில் தயங்கி தயங்கி பேசிய சேகரனிடம் அவர் யார்? எந்த ஊர் என்பது முதல் அனைத்து தகவல்களையும் ஒருவாறு அறிந்துகொண்டவர் அவரின் களைப்பை உணர்ந்து தங்கள் வீட்டிற்கு தங்க அழைக்க சேகரனோ அங்கிருந்த நகரமறுத்துவிட்டார்.
தன் மகளை விட்டு விலகமாட்டேன் என்பதுபோல இருந்தது அவரின் மறுப்பு. ஒருவித பிடிவாதமும் கூட அதில்.
இதை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த ஆரவ் எழுந்து வந்து, “டாடி அவங்களுக்கு நம்ம வீட்டுக்கு வர இஷ்டம் இல்லைனா இங்க ரூம் அரேஞ்ச் பண்ணிடுங்க. அவங்களை கம்பல் செய்யவேண்டாம்…” என்றவன் பின் கரகரத்த குரலில்,
“இத்தனை மாசம் பிரிந்து எப்படியெல்லாம் தேடினாங்களோ? அவங்க இஷ்டப்படியே விடுங்க. அவங்களுக்கு இங்க எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கோங்க…” என்றவன் மீண்டும் தான் அமர்ந்திருந்த சேரில் சென்று மீண்டும் அதே நிலையில் அமர்ந்தான்.
அதன்பின் குணசேகரன் அமைதியை கைவிட்டவராக,
“தவறா நினைக்கவேண்டாம். எங்களுக்கு இவ்வளோ நாள் கழிச்சு பொண்ணு கிடைச்சிருக்கா. அவளை விட்டு எங்களால இனியும் தள்ளி இருக்கமுடியலை. அதான் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு…” என்று மெல்ல கூற,
“பரவாயில்லைங்க. உங்க சூழ்நிலை எங்களுக்கு புரியுது. இது நம்ம ஹாஸ்பிட்டல் தான். உங்களுக்கு ரூம் இங்கயே ஏற்பாடு செஞ்சிடறோம். அதையும் மறுத்துட வேண்டாம்…”
ராகவ்வின் பெருந்தன்மையும் கொஞ்சமும் யோசிக்காமல் இருக்குமிடத்தை உரிமையுடன் உணரசெய்துவிட்ட அவரின் நல்ல மனதும் சேகரனை வியப்படைய செய்தது. அதன் பின்னும் மறுக்கவில்லை அவர்.
தயாளனும் அவரின் கூற்றுக்கு ஒப்புக்கொடுத்து ஹோட்டலில் இருந்து தங்களுடைய உடைமைகளை எடுத்துவர சென்றான்.
அதன் பின் சிறிதுநேரம் அவ்விடத்தில் அமைதி ஆக்ரமித்திருக்க தர்ஷினியை தேடி நர்ஸ் வரவும் ஒரு அவசர கேஸ் விஷயமாக அவர் அகன்றுவிட்டார். ஸ்டெபியும் அர்ஜூனும் கூட ரவுண்ட்ஸ் போய்விட்டு வருவதாக கூறி செல்ல அங்கே நிலாவின் குடும்பத்தினரும் ஆரவ் ராகவ் மட்டுமே இருந்தனர்.
மெல்ல குணசேகரன் தன் மகள் எவ்வாறு இங்கு வந்து சேர்ந்தால் என மிக தயக்கத்தோடே கேட்க அவரின் நிலை ராகவ்விற்கு பரிதாபத்தை வரவழைத்தது. கேள்வியை கேட்ட சேகரனோ ராகவ் பதில் கூறும் முன் தங்களை பற்றி ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தார்.
தாங்கள் யார் என்பதிலிருந்து நிலாவின் திருமண ஏற்பாடு, அவள் காணாமல் போனது வரை அனைத்தையும் கூறிமுடித்தவர்,
“எப்படியெல்லாம் வளர்த்தேன் என் பொண்ணை. அவளை இப்படி ஒரு நிலையில நான் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லைங்க. அவளுக்கு அதிர்ந்து கூட பேசத்தெரியாது. அவளுக்கு ஏன்தான் இப்படில்லாம் நடந்ததோ?…” என முகத்தை மூடிக்கொண்டு அழுதவரை ஆறுதலாக அணைத்துக்கொண்டார் ராகவ்.
குணசேகரனின் பேச்சை ஆரம்பத்திலிருந்து கேட்டு தனக்குள் கிரகித்துக்கொண்டிருந்தவன் அவளுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணத்தை பற்றி கூறும் போது கொஞ்சம் துணுக்குறத்தான் செய்தான். இதை நிலாவின் வாய் மொழியிலும் கேட்டிருக்கிறான் தான்.
ஒருவேளை நிலாவிற்கு அவன் மீது ஏதாவது அபிப்ராயம் இருந்திருந்தால் என்ற யோசனையை மேலும் தொடரவிடாமல் அவசரமாக அதற்கு ஒரு முற்றுப்புள்ளியையும் வைத்தான்.
தன்னை தவிர அவளுக்கு யாரையும் பிடிக்காது, பிடிக்கவும் கூடாது. என்ற அவனின் எண்ணம் விழிகளில் பிரதிபலித்ததோ? அப்படி ஒரு தீவிரத்தை தன்னை அறியாமல் கண்கள் வழியே சிந்தினான்.
அடுத்து அவர் கூறியதை ஞாபகப்படுத்தியவன், என்ன அவளுக்கா பேசதெரியாது? என நினைத்தவன் உதடுகளில் மந்தகாச புன்னகை அவளின் வார்த்தையாடல்களை எண்ணி.
‘சரியான ஆளா இருப்பா போல என் பொண்டாட்டி. வாயை திறந்தா என்ன பேச்சு அவளுக்கு. இங்க இருக்கிறவங்க யார்க்கிட்ட கேட்டாலும் சொல்லுவாங்களே நிலாவின் இடைவிடா கலகல பேச்சுக்களை’
‘இத்தனை வருஷமா உங்களை ஏமாத்தியிருக்கா மாமா. இப்படி அப்பாவியா இருந்திருக்கீங்களே?’ என அவரை உறவுமுறை வைத்தே அழைத்துக்கொண்டான் மனதினுள்.
எதிரே சென்று மாமா என அழைத்தால் அவரின் முகம் எப்படி மாறும்? ஒருகணம் எண்ணிப்பார்த்தான். சிரிப்புதான் வந்தது. பாவம் கொஞ்சநாள் ஆகட்டும் என போனால் போகுதென்பது போல விட்டுகொடுத்தான். ஏனோ இதயம் இலகுவாக இருப்பதாக தோன்றியது அவனுக்கு.
இவனின் சிந்தனை இப்படி இருக்க அதற்குள் ராகவ் தங்களுக்கு நிலா எவ்வாறு கிடைத்தால் என்பதிலிருந்து இன்றுவரை அனைத்தையும் கூறிமுடித்திருந்தார். ஏனோ சேகரனுக்கு ரகவ்வை கைகூப்பி வணங்க தோன்ற அப்படியே அதை செய்ய ராகவ் பதறிப்போனார்.
“என்னங்க நீங்க? எங்களுக்கு ஒரு அருமையான மருமகளை குடுத்ததுக்கு நாங்கதான் நன்றி சொல்லனும்…” என்ற ராகவ்வை விட்டு வள்ளியம்மையை பார்த்தார் சேகரன். அவரின் பார்வையில் இருந்ததை சரியாக படித்துக்கொண்டவர் பின் அமைதியாகிவிட்டார்.
நேரம் கழிய கழிய ஆரவ்விற்கு இருப்புக்கொள்ளவில்லை. அமரமுடியாமல் எழுந்து நடப்பதும் அங்கங்கே நிற்பதும் பின் மீண்டும் அமருவதுமாக இருந்தவனது அலைப்புருதலை கவனித்த ராகவ்,
“ஆரவ் நீ தான் உள்ள போய் நிலாவை பாரேன். எதுக்காக இப்படியே நின்னுட்டு இருக்க?…” அவனின் மனநிலை உணர்ந்தே இதை அவர் கூறினார்.
போகலாம் தான். யாரும் ஏனென்று கேட்கபோவதில்லை. தடுக்கவும் போவதில்லை. ஆனாலும் மனம் முரண்டியது. அவளை இந்த கோலத்தில் தன்னால் பார்க்கமுடியுமா?
பார்க்கவேண்டும் என ஒரு மனமும், பார்த்தால் உன்னால் தாங்க இயலாது என்று இன்னொரு மனமும் அவனை அலைகழித்துகொண்டு இருந்தது. ஆசையும் அறிவும் அவனுக்குள் பெரும் போராட்டத்தையே நடத்திக்கொண்டிருக்க இறுதியில் ஆசையே வென்றது.
என் நிலா எப்படி இருந்தாலும் அவளை என்னால் பார்க்கமுடியும் என காதலாக நினைத்தவன் ஆழமாக மூச்சை இழுத்து சுவாசித்தவன் ஐ ஸி யு உள்ளே நுழைந்தான்.
இரண்டு கதவுகளை தாண்டி அந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்தவன் படுக்கையில் வாடிய மலராக கிடந்த மனைவியை பார்த்ததுமே உடைந்துபோனான். ஏனோ மனதைரியத்தையும் மீறி அவனின் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது அவனை அறியாமலேயே.
மெல்ல அவளின் அருகில் நெருங்கியவன் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவளை அள்ளி அணைத்துக்கொள்ளவேண்டும் என உள்ளுக்குள் எழுந்த ஆவேசத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக அவளையே பார்த்திருந்தான்.
ஆப்பரேஷனில் தலை மொட்டையடிக்கபட்டிருக்க முகமெல்லாம் வெளுத்து உதடுகள் காய்ந்து முகத்தில் எப்போதும் இருக்கும் ஒருவித ஒளிர்வை இழந்தது போல சோபையின்றி காட்சியளித்தாள் நிலா.
அந்தநிலையிலும் ஆரவ்விற்கு அவள் சோக சித்திரமாக தான் தெரிந்தாள். தூசுபடிந்த ஓவியம் போலே. அதுவும் அவளிற்கு ஒருவித முகலட்சணத்தை கொடுத்தது. அவளின் கைகளில் தன்னுடைய முகத்தை புதைத்தவன் அழுத்தமான முத்தங்களை எண்ணிக்கையின்றி தந்துகொண்டிருந்தான்.
அவள் எப்போது எழுந்து வருவாள்? தன்னை பார்த்து பேசுவாள்? என நிலாவின் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகைக்காக ஏங்க ஆரம்பித்திருந்தான். இந்த சிலமணி நேரங்களே அவளில் பிரிவை தன்னால் தாங்க இயலவில்லையே என்பதை அவனின் மனம் வலியோடு உணர்ந்தான்.
இன்னும் தனக்கு என்னவெல்லாம் வலிகள் தாங்கிய வழிகள் காத்துநிற்கிறதோ? என எண்ணி வெதும்பியவன் அதன் மேலும் அங்கிருக்கமுடியாமல் எழுந்து வெளியில் நகர நர்ஸ் அழைத்தாள்.
“டாக்டர் அவங்க எதோ சொல்றாங்க…” எனவும் திகைத்தான்.
எப்படியும் இன்னும் சிலமணி நேரங்கலேனும் நிலா ஆழ்ந்த மயக்கத்தில் தான் இருப்பாள். அப்படி இருக்கையில் அதற்குள் மயக்கம் தெளிய வாய்ப்பில்லையே என எண்ணியபடி அவளருகில் மீண்டும் அமர்ந்து காதுகளை கூர்மையாக்கினான்.
அவளில் இதழ்களில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் இவைதாம்.
ஆரவ்…….. ஆரவ்……. ஆரவ் ………..
தன் காதுகளையே நம்பமுடியாமல் மீண்டும் எதிர்பார்ப்போடு அவளின் உதடுகளில் தன் காதுமடல்கள் உரசும் படி வைத்து கேட்க அவனின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் மீண்டும் மீண்டும் கணவனது பெயரையே மந்திரம் போல உச்சரித்துக்கொண்டிருந்தாள்.
அதுவே ஆரவ்வை அந்தரத்தில் மிதக்கச்செய்தது. ஆக அவள் தன்னை மறக்கவில்லை. தன்னவளுக்கு தன்னுடைய ஞாபகம் அவளின் மனதை விட்டு அகலவில்லை என்பதே அவனுக்கு பெரும் பலத்தை கொடுத்தது.
அதில் சிலிர்த்துப்போனவன் மீண்டும் மீண்டும் கேட்க ஆரம்பித்தான். அவள் கூற கூற அவளின் கைகளில் தன் அதரங்களை அழுந்த பதித்துக்கொண்டே இருந்தான்.
அவளை இன்னுமே அதிகமாக நேசித்தான். இந்த சந்தோஷத்தில் அவனின் மன உணர்வுகள் சொல்லொண்ணா பரவசத்தில் நிலைகொள்ளாமல் உள்ளுக்குள் ஆர்ப்பரித்து பேயாட்டம் போட்டது.
அதை அடக்கும் வகை புரியாது மூச்சு முட்டியது ஆரவ்விற்கு. தன்னை இப்படி ஆகர்ஷித்து அலைகழிக்கும் இந்த காதலின் வேகத்தை தாங்கமுடியாமல் ஏனோ அழுகை வெடிக்கும் போல தோன்றியது அந்த ஆண்மகனிற்கு. இதை வீட்டினரிடமும் பகிர்ந்துகொள்ள வேகமாக வெளியேறினான்.
இவனின் வரவை எதிர்பார்த்து ராகவ்வும் சேகரனும் விழிகளை கதவுகளை நோக்கியே நிலைபெற விட்டிருந்தனர். புயல்போல கதவை திறந்த ஆரவ் ராகவ்வை கட்டிக்கொண்டு,
“நிலா என்னை மறக்கலைப்பா. அவ என்னோட பேரை தான் இப்போ சொல்லிட்டு இருக்கா. இப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?…” என கேட்டுக்கொண்டே அவரை தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கியவன் அப்போதுதான் சேகரனை பார்த்தான்.
தன்னையே பார்ப்பவரை கண்டு கொஞ்சம் வெட்கமும் தலைதூக்க பின்னந்தலையை அழுந்த கோதிவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவன்,
“டாடி நான் போய் மாம்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு வரேன். நீங்க இவங்களை கூட்டிட்டு போய் நிலாவை பாருங்க…” குணசேகரனை கைகாட்டிவிட்டு வேக எட்டுக்கள் வைத்து தர்ஷினி காண சென்றான் ஆரவ்.
ஆரவ்வை நிலாவை காண அனுப்பும் போதே சேகரனுக்கு பரபரப்புதான். மயக்கம் தெளிந்த பின் தான் பெண்ணை பார்க்கமுடியும் என்ற நினைத்து இவர் அமர்ந்திருக்க ராகவ் ஆரவ்வை அனுப்பியதும் தானும் உடன் சென்றால் என்ன என்று மனம் முரண்டியது.
ஏனோ ஒரு தயக்கம். அவனாவது தன்னை பார்த்து அழைப்பானா? என நினைத்தால் அதுவும் இல்லை. இப்போது நிலா ஆரவ்வை மறக்கவில்லை என்று மிகுந்த மகிழ்வுடன் தன் தந்தையிடம் பகிர்ந்துகொண்டதை பார்க்கையில் அவருக்கு திடுக்கென்று தான் இருந்தது.
பின்னே வள்ளியம்மை தன்னிடம் கூறியதென்ன? இங்கே நடப்பதென்ன? அவருக்கு கொடுத்த வாக்கை தன்னால் காப்பாற்றாமல் போய்விடுமோ என்று இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துப்போனார்.
ஆனால் அவரை போல வள்ளியம்மை எண்ணவில்லை. அதனால் அவரின் மனம் அதிராமல் அமைதியாக இருந்தது. அவர்தான் என்ன நடந்தால் எப்படியெல்லாம் காய் நகர்த்துவது என்று கச்சிதமாக திட்டம் தீட்டி வைத்திருக்கிறாரே.
ராகவ் சேகரனை அழைத்துக்கொண்டு உள்ளே செல்லவும் நிலாவை பார்த்து அவர் அதிர்ந்துபோனார். இப்படி ஒரு கோலத்தில் தான் தன் மகள் கிடைப்பாள் என்று கற்பனையும் செய்துபார்த்ததில்லையே என உள்ளம் ஊமையாக அழுதது.
வள்ளியம்மை முதலில் லேசாக திகைத்தார் தான். அவருக்கு நிலாவின் மீது கொஞ்சமே பாசமும் இருந்தது தான். முடிதானே இன்னும் ஓரிரு மாதங்களில் வளர்ந்துவிட போகிறது. தனக்கு அதுவா முக்கியம் என்று நிலாவை பார்த்தபடியே நின்றாள் முகத்தில் பாசத்தையும் பரிதாபத்தையும் கொஞ்சம் அதிகமாக செயற்கையாக படரவிட்டபடி.
அங்கே சேகரன் உணர்ச்சியின் பிடியில் இருக்க ராகவ்வோ அங்கிருந்த நிலாவின் கேஸ் பைல்களை பார்வையிட்டார். பின் அங்கிருந்த நர்ஸிடம் மெதுவாக பேசியவர் பின் நிலாவை மீண்டும் பார்த்துவிட்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.
ராகவ்விற்கு இது சகஜம். அதனால் அவர் இதை எதிர்பார்த்துதான் சென்றார். ஆனாலும் நிலாவை பார்த்த நொடி கொஞ்சம் கலங்கித்தான் போனார். பின் தான் யார் என்பதை ஞாபகம் கொண்டு நிதானித்துக்கொண்டு அடுத்ததை கவனிக்க ஆரம்பித்தார்.
அடுத்த சிலமணி நேரத்தில் நிலாவிற்கு சுயநினைவு திரும்ப அனைவரிடமும் நர்ஸ் வந்து சொல்லிவிட்டு செல்லவும் முதலில் ஆரவ் தான் செல்லத்துடித்தான். பின் ஏதோ ஒரு யோசனையில் சேகரனை திரும்பி பார்த்து,
“முதல்ல நீங்க போய் பாருங்க…” என அவருக்கு வழிவிட்டு நிற்க ராகவ்வும் தர்ஷினியும் திகைத்து பார்த்தனர். பின் ராகவ்,
“வாங்க, அவனே சொல்றானே. உங்க பெண்ணை பார்க்கலாம்…” என அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல அவரோடு வள்ளியம்மையும் தர்ஷினியும் சேர்ந்தே சென்றனர்.
கொஞ்சம் பின் தங்கி நின்ற ஆரவ்விற்கு ஏனோ அடிவயிற்றில் பயப்பந்துகள் காரணமின்றி சுழன்றுகொண்டிருந்தது. ஓரிரு நிமிடம் விழிகளை மூடி தன்னை ஆசுவாசப்படுத்தினான்.
“நிலா தான் தன்னை மறக்கவில்லையே. பின் எதற்கு இந்த பயமும், பரிதவிப்பும்?” என தன்னையே கேட்டுக்கொண்டவன் நிலாவை பார்க்க சென்றான்.
அங்கே சேகரனும் வள்ளியம்மையும் நிலாவின் அருகில் நிற்க தர்ஷினியும் ராகவ்வும் பின்தங்கி நின்றனர்.
தன் தந்தையை பார்த்து கண்ணீர் சொரிந்தவள் முகத்தில் அத்தனை சந்தோசம் நிரம்பிவழிந்தது. ஏனோ அலைந்து திரிந்து வீடு சென்ற உணர்வை நிலாவின் முகம் பிரதிபலித்தது. அப்படி ஒரு பிரகாசம்.
அதிகமாக பேசமுடியாமல் இருந்தாலும் அத்தனை பாசம் முகத்தில் ஒளிர்ந்தது நிலாவிடம். அவளை விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டே முன்னே சென்ற ஆரவ் தனது தாயையும் தந்தையையும் திரும்பி பார்க்க அவர்களின் முகத்தில் கவலையையும் தாண்டிய ஒரு உணர்வு.
ஆரவ்வின் வரவை அறிந்து அவர்கள் இவனை திரும்பி பார்க்க தர்ஷினியோ சத்தமில்லாமல் அழுகையை அடக்க போராடிக்கொண்டிருந்தார். ராகவ்விடம் இருந்து எதையும் கண்டுகொள்ளமுடியவில்லை.
கட்டிலை நெருங்கியவன் நிலாவை பார்த்தான். அவளும் தான் இவனை பார்த்தாள். அந்த பார்வையில் கண்ணாடி துகள்களாக சிதறிப்போனான்.
எது நடக்ககூடாது, எதை தன்னால் எதிர்க்கொள்ள முடியாது என்று பயந்தானோ இப்போது அந்த நொடியை கடக்கமுடியாமல் சிலையாக நின்றான்.
நிலா அவனை ஒரு அந்நியனை போல முன் பின் அறியாதவனை போல பார்த்துக்கொண்டிருந்தாள். அதன் பின்னும் அங்கே நிற்கமுடியாமல் திரும்பியவனிடத்தில் ஒருவித தள்ளாட்டம் குடிகொண்டது.
மகனின் மனதை படித்த ராகவ், “ஆரவ்…” என மெல்ல அழைத்ததும் மீண்டும் திரும்பியவன் அவரை பார்க்காமல் தன் மனைவியை ஆராயும் பார்வை பார்த்தான்.
ஒருவேளை காலையில் போல தன்னிடம் விளையாடுகிறாளோ என்னும் ஒருவித பேராசையில் காலை நிகழ்வுகளை கண்முன் நிறுத்தி பார்த்தான்.
காலையில் நிலாவின் விழிகளில் வரவழைக்கப்பட்ட அந்நியத்தனத்தோடு கொஞ்சம் குறும்பும் மிச்சமிருந்ததை அப்போது அவன் இருந்த நிலையில் உணராமல் விட்டுவிட்டான். ஆனால் இப்போது அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
ஆனால் இந்த நிலாவின் விழிகளில் இருந்த அந்நியத்தனம் நூறு சதவீதம் உண்மை மட்டுமே. அவள் தன்னிடம் விளையாடவில்லை என்று புரிந்துகொண்டாலும் சிலமணி நேரம் முன்னால் தன்னை பெயர் சொல்லி அழைத்தது பொய்யில்லையே? குழம்பி தவித்தான் ஆரவ்.
மீண்டும் நிலாவின் விழிகள் சொருகுவது போல தோன்ற வேகமாக அவளருகே சென்று அவளின் கைகளை பிடித்து நாடித்துடிப்பை பரிசோதித்து பார்க்க அவனின் தொடுகை நிலாவிடம் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியதோ?
அவனுக்கே உரிய பிரத்யோக மணம் அவளின் நாசிக்குள் நுழைந்து சுகந்தத்தோடு மணம் பரப்பினாலும் அதையும் தாண்டி வார்த்தைகளால் விவரிக்கமுடியா தாக்கத்தில், இனம்புரியா தேடலில் பெண்ணவள் மனம் நிலைகுலைந்து தான் போனது.
தன்னவனின் தொடுகை. சட்டென அவளிடம் மாற்றங்கள். விழிகள் அலைப்புற, இருதயம் தாறுமாறாக துடிக்க அவனை கண்டுகொண்ட பாவனையையும் அவனின் பார்வை வீச்சை முழுவதும் கண்டுகொள்ள தவிக்கும் ஆவலையும் மனதில் ஒருங்கே சுமந்தபடி அவனையே பார்த்தவள் மூச்சுவிடவே திணறினாள். அதில் பதட்டமான ஆரவ்,
“ நிலா…….. நிலா…” என கன்னம் தட்டி அழைக்க அவனின் குரல் அவள் செவிகளில் மிக தீனமாக சென்று சேர்ந்தது. அதற்குள் அவள் நினைவலைகள் அறுந்து அவளை மீளா மயக்கத்திற்குள் அடைத்தது.
நொடியில் பரபரப்படைந்தது ஐ ஸி யு.
மேத்தாவோடு அர்ஜூனும் இன்னொரு மருத்துவரும் அங்கே வந்துசேர உடனடியாக வெளியேறினர் மற்ற அனைவரும்.
அதிர்ச்சியை தாண்டிய வெறுமையோடு உயிரற்ற உடலாக ஆரவ்.