சாதாரணமாக சொன்னால் நிச்சயம் முத்தழகு கேட்கும் ரகம் இல்லை என்பதால் கொஞ்சம் கண்டிப்புடன் மகனையும் இழுத்து வைத்து பேசி அனுப்பினார். முத்தழகு அப்போதும் நொடிப்புடனே விலகி சென்றார்.
என்னதான் தன்னை திட்டிக்கொண்டிருந்தாலும் தனக்கு தேவையான பொருட்களை பார்த்து பார்த்து எடுத்து வைத்திருந்த மனைவியின் மேல் இன்னமும் அன்பு பெருகியது முத்தையாவிற்கு.
படுக்கும் முன்னர் மீண்டும் ஒரு முறை மொபைலில் அவர்களுக்கு அழைத்து அனைத்தையும் உறுதிபடுத்திக்கொண்டு உறங்க எத்தனித்தார். உறக்கம் தான் வந்தபாடில்லை. சிறிது நேரம் அப்படியே புரண்டு படுத்தவர் பின்பு எழுந்து கிளம்ப ஆரம்பித்து விட்டார்.
எப்படியும் இரண்டு மணிவாக்கில் கிளம்ப வேண்டியது தான். ஆனாலும் அதற்கு முன்பே கிளம்பி பூஜையறையின் வந்து நின்று கண்ணீர் மல்க இறைவனை வேண்டிக்கொண்டார் அனைத்தையும் நல்லவிதமாக நடத்திகொடுக்கும் படி.
அவரது அரவம் கேட்டு முத்தழகும் எழுந்துவந்து எதுவும் பேசாமல் காபி போட்டுகொடுக்க வாங்கி பருகியவர் மொபைலை எடுத்து அதிலிருந்த குறுஞ்செய்தியை படித்துவிட்டு கண்களை மூடி சிறிது நொடி அமர்ந்திருந்தார்.
கணவனது செய்கைகளை குழப்பமாக பார்த்துக்கொண்டே அவரது முகத்தில் பரவிய உணர்வலைகளை படிக்கமுயன்று தோற்ற முத்தழகு,
“என்னாச்சுங்க?…” தன்னையே எதிர்பார்ப்போடு பார்த்துகொண்டிருக்கும் மனைவியிடம் ஒன்றுமில்லை என்பது போல தலையை அசைத்துவிட்டு,
“நான் கிளம்பறேன் அழகு. நாளைக்கு விசேஷ வீட்டுக்கு போய்ட்டு வந்திரு. பாவம் அமுதா. ஒத்தையில ஓடிட்டு இருக்குது. நீ கூட இருந்தா அதுக்கும் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கு…”
இறைஞ்சுதலான குரலில் கேட்டவரிடம் பிடித்தமில்லை என்றாலும் மறுக்காமல் தலையாட்டிவிட்டார் முத்தழகு. அவரிடம் விடைபெற்று வெளியேறியவர் மீண்டும் மகனை தேடி தினகரனின் அறைக்குள் நுழைந்தார்.
முகத்தில் இறுக்கத்துடனே உறங்கும் மகனது மனம் உறக்கத்திலும் அதே மனநிலையில் இருப்பதை உணர்ந்தவர் போல அவனை ஒரு சில நிமிடம் வைத்த கண் வாங்காமல் பார்த்தவர் அதன் பின் கிளம்பியேவிட்டார்.
அவர் கிளம்பியதும் தானும் சென்று உறங்க ஆரம்பித்துவிட்டார் முத்தழகு. அதுவும் சிலமணி நேரமே.
அதிகாலை நாலரை மணிக்கே தன் வீட்டு காவலாளி மூலம் நிலாமுகி காணாமல் போன சேதி வந்தடைய அடித்துபிடித்துக்கொண்டு குணசேகரனின் வீட்டை நோக்கி விரைந்தனர் தினகரனும், முத்தழகும்.
———————————————————————
டெல்லி மாநகரம்…
முக்கியஸ்தர்கள் வகிக்கும் அந்த பிரபலமான குடியிருப்பு பகுதியை ஒட்டிய பார்க்கில் ஜாக்கிங்கை முடித்துக்கொண்டவன் தன்னுடைய இல்லம் நோக்கி செல்லாமல் அதற்கு நான்கு வீடு தள்ளியிருக்கும் வீட்டின் கேட்டை தட்ட அங்கிருந்த கூர்க்கா எட்டி பார்த்தான்.
“நமஸ்தே ஜி. ஆப் கைசே ஹே?…” என தினமும் தன்னிடம் நலம் விசாரிக்கும் கூர்க்காவிடம் பதிலளித்துவிட்டு துள்ளலோடு உள்ளே சென்றான் அவன்.
வீட்டினுள் நுழைந்ததும் ஹாலில் அமர்ந்திருந்த இரு நபர்களையும் பார்த்தும் கண்டுகொள்ளாமல்,
“ஸ்டெபி, வேர் ஆர் யூ மை பேப்?…” என கூச்சலிட,
“ஹே ஆரவ், தீரா போலியே…” என அவனை கண்டித்தபடி முறைப்போடு மாடியில் இருந்து இறங்கி கிட்சனுக்குள் நுழைந்தாள் ஸ்டெபிக்ஷா.
“ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு கூப்பிட்டா ரொம்ப தான் சிலுத்துக்கற?…” என அலுத்துக்கொண்டவன் சோபாவில் அமர்ந்திருந்த ஆண்டனியின் அருகில் அமர்ந்துகொண்டு அவர் வைத்திருந்த நாளிதழை பிடுங்கி புரட்ட ஆரம்பித்தான்.
அவனது செயலில் கடுப்பாகாமல் புன்னகைத்த ஆண்டனியை பார்த்து, “வேஸ்ட் வேஸ்ட்…” என தலையில் அடித்துகொண்டான் ஆரவ்.
“உங்களுக்கு இந்த பேரை வச்சு அந்த பெயருக்கே பெரிய அவபெயரை குடுத்திட்டாங்க உங்க பேரன்ட்ஸ்…”
இது ஆரவ்விடம் இருந்து அடிக்கடி கேட்கும் புலம்பல் என்பதால் கண்டுகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார் ஆண்டனி.
“பாட்ஷா ஃப்லிம் ஆண்டனி. பேரை கேட்கும் போதே சும்மா அதிருது. அவரோட வில்லத்தனத்துல கொஞ்சமாச்சும் இந்த முகத்துல இருக்குதா?…” என அவரது தாடையை பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டியபடி வினவ எதிரில் இருந்தவனுக்கு முகம் கடுகடுத்தது.
“ஒரு கிலோ மைதா மாவை உருட்டி வச்சது போல ஒரு முகம். அதுல போனா போகுதுன்னு ரெண்டு கண்ணும், ஒரே ஒரு மூக்கும் வச்சு, அதுக்கு கீழே எப்போ பார்த்தாலும் டூத் பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறது போல ஈஈஈன்னு ஒரு சிரிப்பு. என்ன ஆண்ட் நீங்க?…”
“நீங்கலாம் இந்த பேருக்காகவே வேற ரேஞ்ச்ல இருக்க வேண்டாமா?…” என போலியாக அலுத்துக்கொள்ள இதை கண்டு வாய்விட்டு சிரித்த ஆண்டனி,
“உன்னோட பேபி வருது பாரு. என்னை ஆளை விடு…” என கழண்டுகொண்டார்.
“அவ வரத பத்தி தான் பேச வந்தேன். நாங்க இன்னைக்கு சென்னைக்கு கிளம்பறோம். அவளை கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்றா. எனக்காக நீங்க தான் பேசனும் ஆண்ட்…” எனவும் மறுப்பாக தலையசைத்தார்.
“நீ சொல்லியே அவ வரலைன்னும் போது நான் சொல்லி கேட்கவா போறா? அதுவும் இல்லாம அர்ஜூன் அதை பத்திதான் பேச வந்திருக்கார். நாளைக்கு ஒரு முக்கியமான கான்ஃபரென்ஸ் இருக்கு நம்ம ஹாஸ்பிட்டல்ல. அதுக்கு ஸ்டெபி கண்டிப்பா இருக்கனும்னு சொல்றார்…”
வேகமாக திரும்பி எதிரில் அமர்ந்திருந்த அர்ஜூனை முறைத்த ஆரவ்,
“பேப் என்னோட தான் வருவா. ஹாஸ்பிட்டலோட ஒன் ஆஃப் தி எம்டி நீங்களும் தானே. நீங்க அட்டென் பண்ணுங்க. இல்லைனா மிஸ்டர் ராகவை அட்டென் பண்ண சொல்லுங்க கான்ஃபரென்ஸ…” என பிடிவாதம் பிடிக்க,
“சக்கு…” என குரலுயர்த்தினான் அர்ஜூன். அதிலேயே கொதிநிலைக்கு தள்ளப்பட்டான் ஆரவ்.
“என் பேர் ஆரவ். சும்மா சக்கு, புக்குன்னு கூப்பிட்ட பார்த்துக்கோ. காலையிலேயே டென்ஷன் பண்ணிட்டு இருக்க…” என வெடிக்க,
“உன் பேரை சொன்னா உனக்கு இவ்வளோ கோவம் வருதோ? ஆரவ் சக்கரவர்த்தி தானே உன்னோட பேரு. எனக்கு எப்டி தோணுதோ அப்டிதான் என்னால கூப்பிட முடியும்…”
வெகு சுவாதீனமாக கூறிவிட்டு அலட்சியமாக அமர்ந்திருந்தவனது தோரணை அனைவருக்கும் காலை தேனீர் எடுத்து வந்த ஸ்டெபிக்ஷாவின் மனதில் கல்வெட்டாக பதிந்தது.
ஆனாலும் தன்னை கவர்ந்த அவனின் கம்பீரத்தில் தன் மனம் லயித்ததை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயல்பாக வந்தமர்ந்தாள் ஆரவ்வின் அருகில்.
அர்ஜூனுக்கு பில்டர் காபியை கொடுத்துவிட்டு தங்கள் மூவருக்கும் டீயை எடுத்துகொண்டாள். தனக்காக பிரத்யோகமாக தயாரிக்க பட்ட காபியின் ருசியை விட அதை தயாரித்தவளை எண்ணி கர்வம் கொண்டான்.
அவனது இறுமாப்பை ஒருவித நக்கல் கலந்த எள்ளல் சிரிப்போடு எதிர்கொண்டான் ஆரவ். அதை பார்த்த அர்ஜூனின் முகம் விழுந்துவிட்டது.
ஸ்டெபியின் முகத்தில் தனக்கான தேடல் எதுவும் தென்படுகிறதா என தேட அவளது முகத்திலோ எந்தவிதமான உணவும் இல்லாத ஒருவித வெறுமை அவனின் மனதை சுட்டது.
“இப்போ எதுக்குப்பா உங்க ரெண்டு பேருக்கும் சண்டை. ஏன் அர்ஜூன் ஆரவ் தான் அப்படி கூப்பிட்டா பிடிக்கலைன்னு சொல்றான்ல. நீங்களாவது விட்டுட வேண்டியது தானே…”
“அதெப்படி அங்கிள் அவ்வளோ சீக்கிரம் விடமுடியும். நான் என்னோட சின்ன வயசுல இருந்தே அப்படித்தானே அவனை கூப்பிடுவேன்…”
“நானும் என்னோட சின்ன வயசுல இருந்தே அப்படி கூப்பிடாதேன்னும் சொல்லிட்டேன்ல உன்கிட்ட…” என ஆரவ் சண்டைக்கு வரிந்துகட்டிக்கொண்டு கிளம்ப,
“பதிமூன்று வயதெல்லாம் சின்னவயசுன்னு யாருமே சொல்லிக்க மாட்டாங்க. அதுக்கு முதல்ல இருந்தே நான் உன்னை அப்டி தானே கூப்பிடுவேன். என்னால மாத்திக்க முடியாது…” என்றவன்,
“நான் கிளம்பறேன் அங்கிள். உங்க பொண்ணை கான்ஃபரென்ஸ்க்கு ப்ரிப்பேர் பண்ண சொல்லுங்க…” என்றவன் ஸ்டெபிக்ஷாவிடம் ஒரு நொடி பார்வையை நிலைக்கவிட்டு பின் விடை பெற்றான்.
ஆரவ் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆட வேகமாக வெளியேறிய அர்ஜூன் தனது பைக் சாவியை எடுக்க மீண்டும் உள்ளே வந்தவன்,
“ஒழுங்கா வீட்டுக்கு கிளம்பு சக்கு. போய் தேவையானதை பேக் பண்ணு. நீதான் செய்யனும். இங்க இருந்து அரட்டை அடிச்சிட்டு லாஸ்ட் டைம் அங்க போய் தாம் தூம்னு குதிச்சு தர்ஷிம்மாவை டென்ஷன் பண்ணினன்னு தெரிஞ்சது தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ…”
ஸ்டெபிக்ஷாவை அழுத்தமாக பார்த்துவிட்டு, “ஆஷா வரமாட்டா. புரியுதா? இன்னும் த்ரீ ஹவர்ஸ்ல நீ ஏர்போர்ட் வந்தாகனும். கிளம்பு…” என அவனை மிரட்டிவிட்டு விடுவிடுவென வெளியேறியவனை பார்த்து கருவிய ஆரவ்,
“ஆஷாவாம் ஆஷா. இங்க பாரு பேப் இனிமே அவன் உன்னை அப்படி கூப்பிடட்டும். என்ன நடக்கும்னு பார்த்துட்டே இரு. அவன் சொல்லிட்டான்னு வரமாட்டேன்னு சொல்லிட்டல. இருக்கட்டும் உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்…”
பொறுமலோடு கிளம்பியவன் மீண்டும் ஸ்டெபியை நெருங்க அவள் புரியாமல் பார்த்தாள்.
“என்ன முழிக்கிற, டீயை முழுசா குடிச்சு முடிக்கலை. குடிச்சுட்டு போறேன்…” தன்னுடைய கோப்பையில் மிச்சமிருந்த டீயை குடித்துவிட்டே சென்றான்.
அவன் சென்றதும் அலையடித்து ஓய்ந்தது போலானது ஆண்டனிக்கும் ஸ்டெபிக்ஷாவிற்கும். அவனை எண்ணி சிரித்துக்கொண்டே,
“ரொம்பத்தான் பன்றான் உன் டார்லிங். என்னமோ உன்னை விட்டு இருக்க முடியாதுன்னு ஓவரா சீன் போடறான்…”
“அட நீங்க வேற டாடி, போற வழியில எதாச்சும் ஒரு பொண்ணை பார்த்துட்டா போதும் சார் என்னை மறந்திடுவார். அவ்வளோ பாசம். நாம கவலைபடனும்னா அது அர்ஜூனை பத்திதான்…”
“ஏன் ஸ்டெபி?…” என மகளிடம் பேச்சை வளர்க்க காரணம் அவருக்கு தெரிந்திருந்தாலும் கேட்டார்.
“பின்ன என்னை கூட்டிட்டு வரவிடலைன்ற காண்டுல வேணும்னே அர்ஜூனை எக்ஸ்ட்ரீம்க்கு டென்ஷன் பண்ணுவான் இந்த ஆரவ். ஆனா இந்த வாலை அர்ஜூன் சமாளிச்சிடுவார்…”
புன்னகையோடு சொன்னவளை மென்னகையோடு பார்த்தார் ஆண்டனி. அவரது எண்ணம் போகும் திசையை அறிந்தவளால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை.
“ஓகே டாடி. நான் ஹாஸ்பிட்டல் கிளம்பறேன். நேரமாகுது. நீங்களும் சீக்கிரமா கிளம்புங்க. இன்னைக்கு உங்களுக்கு ஒரு சர்ஜரி கேஸ் இருக்குல. கமான். க்விக்…” தந்தையை துரிதப்படுத்தியவள் தானும் ஹாஸ்பிட்டல் கிளம்ப தயாரானாள்.
—————————————————————
ஏ.ஆர் ஹாஸ்பிட்டல் டெல்லியிலேயே புகழ்பெற்று சிறந்து விளங்கும் ஹாஸ்பிட்டல்களில் ஒன்று. ஆண்டனி, ராகவ் இருவரது பெயரின் முதல் எழுத்தை கொண்டு மிக மிக சிறியளவில் ஆரம்பிக்க பட்ட அந்த மருத்துவமனை இன்று தலை சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது.
இப்போது அந்த ஹாஸ்பிட்டல் பொறுப்பு அதன் வாரிசுகளான ராகவனின் புதல்வன் ஆரவ்விற்கும், ஆண்டனியின் புதல்வி ஸ்டெபிக்ஷாவிற்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
ராகவின் மனைவி தர்ஷினி வடநாட்டை சேர்ந்தவர். அவருடன் பயின்ற ஆண்டனியும், அவரது மனைவி ரோஸ்லினும் அவருக்கு உற்ற நண்பர்கள். அவர்களது நட்பில் தர்ஷினியின் மேல் ஏற்பட்ட காதலால் அவர்களது நட்பு கூடாரத்தில் நுழைந்தவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்த ராகவ் சக்ரவர்த்தி.
அவர்களது நட்பு தலைமுறையை தாண்டி இன்று வரை ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. அதை பின்பற்றியே அவர்களது பிள்ளைகளும்.
அர்ஜூன், ஆரவ், ஸ்டெபி இருவரும் பால்யகாலத்திலிருந்தே நண்பர்கள். இதில் அர்ஜூனின் குடும்பம் மட்டும் மிக மிக கட்டுக்கோப்பானது. டெல்லியில் ஒரு கவர்மென்ட் உத்தியோகத்தில் இருக்கும் அர்ஜூனின் தந்தை இன்றுவரை ஆண்டனி, ராகவனிடம் ஒட்டாத தன்மையோடே பழகுவார்.
அது அவரது தாழ்வு மனப்பான்மையா, இல்லை அவர்களிடம் எதற்கு பழகவேண்டும் என்னும் தலைக்கனமா என இதுவரை அறிந்தார் யாருமில்லை.
அவரை பற்றி பெரிது பண்ணாமல் அர்ஜூனை குடும்பத்தில் ஒருவனாக தான் நினைப்பார்கள் ராகவனும், ஆண்டனியும். ஆரவ்வை விட தர்ஷினிக்கு அர்ஜூன் என்றால் அவ்வளவு பிடித்தம்.
—————————————————————–
சென்னை செல்லும் ப்ளைட் இன்னும் ஒரு மணிநேரத்தில் கிளம்பி விடும். அதற்கு முன்பே அர்ஜூன் அங்கே வந்துவிட்டிருந்தான். இன்னும் ஆரவ்வை காணாமல் அவனது எண்ணிற்கு பலமுறை அழைக்க அது துண்டிக்கப்பட்டுகொண்டே இருந்தது.
போதாகுறைக்கு தர்ஷினிக்கும் அழைத்துப்பார்த்துகொண்டே தான் இருந்தான். அதுவும் முழுதாக ரிங் போய் கட் ஆனது. பொறுமை இழந்தவன் வீட்டு எண்ணிற்கு அழைக்க சில நொடிகளில் தர்ஷினி லைனிற்கு வந்தார்.
“தர்ஷினிம்மா சக்கு கிளம்பிட்டானா?…”
“அவன் அப்போவே கிளம்பிட்டானே அஜூ. அவன் வரதுக்கு முன்னமே நான் எல்லாம் பேக் பண்ணி வச்சுட்டேன். வந்ததும் அரைமணி நேரத்துலையே கிளம்பிட்டானே. சார் கிளம்பின வேகத்துல ஏர்போர்ட்க்கு ஒன் ஹவர்க்கு முன்னாலையே வந்திருக்கனும். அங்கேயே தேடிப்பாரு. பத்திரமா போய்ட்டு வாங்க…” என கூறிவிட்டு வைத்துவிட்டார்.
“புல்ஷிட்…” என பல்லைகடித்துக்கொண்டே அர்ஜூன் கூற,
“ஆங் எல்லாம் ஷிட் தான். உட்காராம நின்னுட்டா இருப்பாங்க…” என்ற ஆரவ்வின் கேலிகுரல் தனக்கு பின்னால் இருந்து கேட்க வேகமாக திரும்பினான் அர்ஜூன்.
அங்கே கால் மேல் கால் போட்டவாறு மொபைலில் டெம்பிள் ரன் கேம்ஸ் விளையாடியபடி அமர்ந்திருந்த ஆரவ்வை பார்த்து தலையில் அடித்துகொண்டவன்,
“ஏண்டா முதல்லையே சொல்லிதொலைக்க வேண்டியது தானே? எத்தனை தடவை கால் பன்றது?…”
“உன்னை யாரு கால் பண்ண சொன்னா? சொன்ன டயம்க்கு எனக்கு வரதெரியாதா? பெருசா பச்சபுள்ளைய கூட்டிட்டு வரது போல ரொம்பத்தான் பன்ற நீ. வந்தவன் நான் இருக்கேனா இல்லையான்னு என்னை தேடி பார்த்திருக்கனும். குதிரைக்கு கடிவாளம் கட்டினது போல நேரா ஒரே இடத்துல பார்த்துட்டே இருந்தா இப்படித்தான் ஆகும்…”என்றவன் விழிகளில் குறும்பு மின்ன,
“இப்படியெல்லாம் நீ செய்யறதை பார்க்கறப்போ தான் இன்னமும் உன்னை சீண்டிட்டே இருக்கனும்னு தோணுதுடா டக்கு…” என்றவனை முறைத்த அர்ஷூன்,
“தர்ஷிம்மா மொபைல் எங்க?…”
“நான் எதுக்கு அவங்க மொபைலை எடுத்துட்டு வரபோறேன். நீ போன் செய்வன்னு தெரிஞ்சுதான் அவங்க மொபைலை சைலன்ட்ல போட்டு ப்ரிட்ஜ் மேல வச்சுட்டேன். அவங்க ஹைட்க்கு நிச்சயமா எட்டாது. ராகவ் வீட்டுக்கு வரவும் போன் பண்ணி எடுத்து தர சொல்லிடறேன்…”
“எல்லாத்திலையும் விளையாட்டுத்தனம். நீயெல்லாம் ஒரு பொறுப்பான டாக்டராடா? வெளில சொல்லிடாதே…” என பேசிக்கொண்டே அவனுடைய லக்கேஜையும் சேர்த்து இழுத்துகொண்டு முன்னாள் நடந்தான் அர்ஜூன்.
“நான் டாக்டர்னு எனக்கு பாராட்டுவிழா எடுன்னு உன் கிட்ட வந்து சொன்னேன்னா? போடா டேய். இது அம்மாவோட பர்சனல் நம்பர். பேஷண்ட்ஸ் எல்லோருக்கும் குடுத்திருக்கிறது ஹாஸ்பிட்டல் நம்பரும், இன்னொரு மொபைல் நம்பரும். நீ எப்டியும் பர்சனல் நம்பருக்கு மட்டும் தான் கூப்பிடுவ. உன்னை பத்திதான் எனக்கு தெரியுமே?…”
அர்ஜூனின் தோளில் கிடந்த ஷோல்டர் பேக்கை தன் தோளுக்கு மாற்றிக்கொண்டே அவனை பின்பற்றி நடந்தான் ஆரவ்.
“என் டார்லிங்கை வரவிடாம பண்ணினல. அதுக்குதான் உனக்கு சின்னதா ஒரு டென்ஷன். இனிமேலாவது கொஞ்சம் பணிவா நடந்துக்கோ…” என்றவனது தோளில் ஒரு அடி வைத்த அர்ஜூன்,
“நான் எதுக்கு வேண்டாம்னு சொன்னேன்னு உனக்கு தெரியாதா?…”
“ஏன் தெரியாம, உனக்கு உன்னோட கவலை. இதெல்லாம் முன்னாலையே யோசிக்கனும் தம்பி. இப்போ ப்ளான் பண்ணி நீ என் டார்லிங்கை வரவிடாம பண்ணிட்டாலும் இதை எத்தனை தடவை செய்யமுடியும் உன்னால? விக்ரம் டெல்லிக்கே வந்தா என்ன செய்வ?…”
சாவாகாசமாக ஒரு குண்டை தூக்கிபோட்டு விட்டு எனக்கென்ன என்பது போல முன்னால் சென்றுவிட்டான். ஒருநொடி அர்ஜூனுக்கு உலகமே ஸ்தம்பித்தது.
ஆனாலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பது அர்ஜூனை கொஞ்சம் சமாதானம் செய்தது. இருவரது சென்னை பயணமும் ஆரம்பித்தது.
வாழ்க்கை யாருக்கு என்ன வைத்திருக்கிறது?