தேடல் – 21
வீடே நிசப்தமாக இருக்க தர்ஷினி ராகவ்வின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார். ராகவ் யோசனையில் தான் இருந்தார்.
இரவின் குளுமை கொஞ்சமும் தீண்டாமல் ஆரவ்வின் நெஞ்சம் உலைகலனாக கொதித்துக்கொண்டிருந்தது. உடலெல்லாம் தீப்பற்றிக்கொண்டது போல பற்றி எரிந்தது.
அவனின் முகத்தில் நிமிடத்திற்கு நிமிடம் கோபம் அதிகரிக்க அடக்கமுடியாத ஆக்ரோஷம் கொண்டவனாக நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தான். சேகரனையும், வள்ளியம்மையையும் அப்போதே கொன்று புதைத்துவிடும் ஆவேச அலை வேகமாக பொங்கி எழுந்தது அவனுள்.
தயாளன் ஆரவ்விடம் பேசிமுடித்து அரைமணி நேரம் ஆகியிருந்தது. ஆண்டனி, அர்ஜூன் ஸ்டெபி என அனைவரையும் உடனடியாக வரசொல்லி அழைப்புவிடுத்த தர்ஷினிக்கு ஆரவ்வை பார்க்க பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனாலும் அழுதுகரையும் நேரம் இதுவல்லவே.
முன்பு மகனை எண்ணி கலங்கிக்கொண்டிருந்தவர் அவ்வப்போது யாருக்கும் தனக்குள் உடைந்து கண்ணீரில் தன் துக்கத்தை துடைத்தவர் இன்று இப்பெரும் துரோக செயலை அறிந்தபின் நிமிர்ந்துவிட்டார்.
அவர்களின் மானம் மரியாதைக்காக தன் மகனின் சந்தோஷத்தை இத்தனைநாள் விட்டுக்கொடுத்தால் தங்களின் முதுகிலேயே குத்த துணிந்த அந்த பேடிகளை இனியும் விட்டுவைப்பதில் அர்த்தமில்லை.
“என்ன ஒரு கயமைத்தனம்?” ரத்தம் கொதிக்க வெகுண்டெழுந்தார். இனியும் பொறுமை காப்பதில் நியாயமே இல்லை என ராகவ்வை வார்த்தைகளால் போட்டு தாளிக்க அவர் அப்போதும் யோசனையாகவே இருந்தார்.
ஆண்டனியும் அர்ஜூனும் விஷயம் கேள்விப்பட்டு கொதித்துவிட்டனர். ஸ்டெபி ராகவ்விடம்,
“என்ன அநியாயம் பார்த்தீங்களாப்பா?. இதை கேட்டும் நீங்க அமைதியா இருக்கீங்களே?…” என,
“ஸ்டெபி அந்த பையன் தயாளன் சொல்றதை எந்தளவுக்கு நம்பமுடியும்? இப்பவும் நான் நிலாவோட அப்பாவை நம்பறேன். அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே அவர்க்கிட்ட பக்குவமா பேசறேன்…” என்று கூற,
“போதும் நீங்க பொறுமையா இருந்தது. அந்த பையன் நமக்கு போன் பண்ணி இப்படி பொய் சொல்ல எந்த அவசியமும் இல்லையேப்பா. நீங்க இன்னும் எப்படி அவங்களை நம்பறீங்க? நீங்க கேட்டா மட்டும் உண்மையை சொல்லிடுவாங்களா என்ன?…” என அர்ஜூன் கூற ஆரவ் எழுந்துவிட்டான்.
“அஜூ நீ டாடியை விடு. அவர் நம்பிட்டே இருக்கட்டும். நான் போறேன். என் நிலாவை பார்க்க. வரும் போது அவளோட தான் வருவேன்…” என ஆரவ் கிளம்பவும் ராகவ் தடுத்தார்.
“அவசரப்படாதே ஆரவ். அங்க போய் பிரச்சனை எதுவும் பண்ணிடவேண்டாம். கண்டிப்பா நாம போகலாம். ஆனா அதுக்கு இது சரியான நேரமில்லைன்னு தோணுது. முதல்ல நல்லா யோசிச்சு…”
“போதும் ராகவ். அவனை விடு. எனக்கு ஆரவ் சொல்றதுதான் சரியாபடுது. ஆரவ் மட்டும் தனியா போகவேண்டாம். நாமளும் போவோம். அங்க நிலா குடும்பத்தார் எதுவும் பிரச்சனை செஞ்சா ஊர்ல உள்ளவங்ககிட்ட பேசி உண்மையை புரியவைப்போம்…” என்றார் ஆண்டனி.
“இல்லைப்பா ஆண்டனி. நான் தயாளன் சொன்னதை நம்பமாட்டேன். அதுவுமில்லாமல் திடீர்னு நாம போய் அங்க உண்மையை சொல்லி நிலாவுக்கு எதுவும் ஆகிட்டா…” என ராகவ் மறுக்க,
“ஒரு டாக்டர் மாதிரி பேசுங்கப்பா. அவளுக்கு இப்படி அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு நடக்குது. அதுவும் நமக்கு தெரியாமலே செய்யனும்னு நினைக்கிறாங்கனா நிலா இப்போ ரொம்ப நல்லா இருக்கான்னு தானே அர்த்தம்…” என அர்ஜூன் கடுமையாகவே கூற,
“ஆமாம்ப்பா, அஜூ சொல்றதுபோல தான் இருக்கனும். இதுல எல்லோரையும் விட அதிகமா பாதிக்கப்பட போறது நம்ம ஆரவ்வும் நிலாவும் தான். இதை நாம தடுத்தே ஆகனும்…” என ஸ்டெபியும் பேசினாள்.
“அப்பா நீங்க சொல்றது போலவே அவரை நம்புங்க. தயாளன் சொல்றது உண்மையா இல்லையான்னு நாம அங்க போனதும் தெரிஞ்சிடும். அப்படி அது பொய்யாவே இருந்தாலும் இனியும் நிலாவையும் ஆரவ்வையும் பிரிச்சு வைக்கிறதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம கண்டிப்பா போறோம். தட்ஸ் இட்…” என அர்ஜூன் முடிவாக கூறினான்.
அப்போதும் சிலை போல நின்றிருந்தவரின் முகத்தில் இவர்கள் அனைவரும் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் அறிகுறிகள் எதுவும் தென்படாததால் தர்ஷினி பொறுமை இழந்தார்.
வேகமாக தனதறைக்கு சென்று கதவை அடைத்துவிட எல்லோரும் திகைத்து நின்றனர். ஸ்டெபி பின்னால் செல்ல போக,
“வெய்ட் ஆஷா. தர்ஷிமா வருவாங்க. நீ டிஸ்டர்ப் செய்யாதே. போய் ஆரவ்க்கும் நமக்கும் குடிக்க ஏதாவது எடுத்துவா…” என அவளை அனுப்ப ஸ்டெபியோ தர்ஷினியின் அறைக்கதவை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள்.
ஆரவ்வின் அருகில் அமர்ந்த அர்ஜூன் ஆறுதலாக அவனின் கையை பற்ற கரங்கள் அந்தளவிற்கு இறுக்கமாக இறுகி இருந்தது.
“டேய் ரிலாக்ஸ்டா. எல்லாம் சரிபண்ணிடலாம்…” என்றவன் மீண்டும் தயாளன் என்ன பேசினான் என்று கேட்டு ஆரவ் கூற கூற உன்னிப்பாக கேட்டுக்கொண்டான்.
அறைக்குள் சென்ற தர்ஷினிக்கு முதலில் என்ன செய்வதென புரியாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர் பின் அமைதியாக ஓரிடத்தில் கண்மூடி அமர்ந்தார். ஐந்து நிமிடங்கள் அசையாமல் அப்படியே இருக்க சட்டென்று பொறி தட்டியது அவரின் மூளையில்.
இதுதான் சரியான வழி. ராகவ்வையும் சமாளிக்க அவர்களால் மட்டுமே முடியும் என முடிவெடுத்தவரின் முகத்தில் சட்டென்று வெளிச்சம் பரவ தனது மொபைலை எடுத்து எண்களை அழுத்தி அழைப்பை விடுத்தார். மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,
“மாமா நான் உங்க மருமகள் தர்ஷினி ராகவ்சக்கரவர்த்தி பேசறேன்…” என கம்பீரமாக கூற மறுமுனையில் இருந்த நாராயணன் வியந்து போனார்.
ராகவ் தர்ஷினிக்கு திருமணமான இத்தனை வருடத்தில் தான் பேசாவிட்டாலும் வாங்க மாமா என்பதோடு முடித்துக்கொள்ளும் தர்ஷினி இன்று முதன் முதலாக தனக்கழைத்து பேசுவது அவருக்கு ஆச்சர்யமே.
“மாமா லைன்ல இருக்கீங்களா?…” என மீண்டும் தர்ஷினி கேட்க மேலும் மௌனம் காக்காமல்,
“சொல்லுமா, இருக்கேன். என்ன விஷயம்?…” என தழுதழுக்கும் குரலில் பாசமும் இழையோட கேட்க அதை உணர்ந்த தர்ஷினிக்கு கண்கள் கலங்கியது.
குரலிலேயே இத்தனை அன்பை காண்பிக்க முடியுமா? அவர் ஒன்றும் குசலம் விசாரிக்கவில்லை தான். ஆனால் சிறு வார்த்தைகளிலேயே தெரிகிறதே?
அவர் தான் இத்தனை வருடம் பேசாமல் இருந்தாலும் தானாவது தன்னை உணர்த்தி அவரிடம் சுமூகமாக பேசி இருந்திருக்கலாமோ? அவர் ஒதுக்குகிறார் என்று நினைத்து தானே ஒதுங்கி நின்று இப்படிப்பட்ட அன்பை இத்தனை வருடம் இழந்துவிட்டோமே என வருந்தினார்.
இப்போது இதை யோசிக்கும் நேரமல்ல இது என தன்னை மீட்டவர் நாராயணனிடம் தயாளன் பேசியவற்றை கூறியவர் அப்போது அங்கும் நடந்துகொண்டிருக்கும் நிலவரத்தையும் எடுத்துரைக்க அனைத்தையும் கேட்டு கிரகித்துக்கொண்டார் நாராயணன்.
“நீ வருத்தபடாதேம்மா. நாளைக்கு ப்ளைன் இருக்கான்னு பார்த்து உடனே கிளம்புங்க. நாம பூம்பொழில் போறோம். இதை நான் சொன்னேன்னு உன் புருஷன்கிட்டே சொல்லிடு. உங்களுக்காக பூம்பொழில் ஊர் எல்லையில நாங்க காத்துட்டு இருப்போம்…”
“சரிங்க மாமா…”
“நீங்க எல்லோரும் கிளம்பியதும் எனக்கொரு தகவல் சொல்லிடு. அதை அனுசரிச்சு நாங்க வந்திடறோம்…” என நாராயணன் வைத்துவிட அப்போதுதான் தர்ஷினிக்கு நிம்மதியானது.
அறையை விட்டு வெளியே வந்த தர்ஷினி ஹாலில் அனைவரும் அமர்ந்து காபி அருந்துவதை பார்த்தபடி வந்தவர்,
“ஸ்டெபி எனக்கும் ஒரு கப்…” என்றபடி ராகவ்விற்கு எதிர் சோபாவில் அமர்ந்தவர்,
“அர்ஜூன் நாம எல்லோரும் நாளைக்கு பூம்பொழில்க்கு போறோம். நாளைக்கு ப்ளைட். டிக்கெட் புக் பண்ணிட்டேன். நம்மோட உன் தம்பி கார்த்திக்கும் வரான். அவன்ட்ட போன்ல பேசிட்டேன்…” என்றவர் ஆண்டனியை பார்த்து,
“அண்ணா நீங்க இங்க இருங்க. ஹாஸ்பிட்டலை பார்த்துக்கனுமே. நாங்க போய்ட்டு அங்க என்ன நடந்ததுன்னு இன்பார்ம் பன்றோம்…” என கூறிவிட்டு ஆரவ்விடம்,
“உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிக்கோ ஆரவ். நாளை நைட் நாம தமிழ்நாட்டுக்கு போய்டுவோம். மறுநாள் மார்னிங் நிலாவை பார்த்திடலாம்…” என பயண திட்டங்களை வேகமாக கூற,
“தர்ஷி. ஸ்டாப் இட். என்னிடம் கேட்காமலே நீ மட்டும் முடிவெடுத்தா என்ன அர்த்தம்? அதுவும் டிக்கெட் போட்டுட்டு வந்து இன்பர்மேஷன் சொல்றது போல இருக்கு உன் ஆக்டிவிட்டீஸ். ஐ டோன்ட் லைக் திஸ்…” கோவத்தை உள்ளடக்கிய குரலில் ராகவ் பொறிய,
“முடிவெடுத்தது நான் இல்லை. என்னோட மாமனார். உங்களோட லைக்கிங் அன்ட் அன்லைக்கிங் பத்திலாம் நீங்க அவங்ககிட்ட சொல்லிக்கலாம். இதுக்கு மேல பேச எதுவுமில்லை…” என்று கூறியவர் ஸ்டெபியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ராகவ் செய்வதறியாமல் திகைத்து நின்றார். தர்ஷினியின் இந்த கோபமும் வேகமும் எதில் கொண்டு முடியுமோ என பயந்தார். சேகரனிடம் தான் கூறியதென்ன? இங்கு நடப்பவை என்ன? எதை நம்புவது என புரியாமல் அவரின் பின்னே சென்ற ஆரவ்,
“மாம் டிக்கெட் இன்னைக்கு கிடைக்கலையா? இன்னைக்கே கிளம்பலாமே?. எனக்கு இப்போவே நிலாவை பார்க்கணும் போல இருக்கு மாம்…” தவிப்பாய் கேட்ட மகனை பரிவாக பார்த்த தர்ஷினி,
“இத்தனை நாள் வெய்ட் பண்ணின நீ இன்னும் ஒரு நாள் வெய்ட் பண்ண முடியாதா?…” என சிரித்தபடி கேட்டவர்,
“ஆரவ் இன்னொரு விஷயம். நிலா உன்னை யார்னு தெரிஞ்சுகிட்டதும் எப்படி பிகேவ் பண்ணுவான்னு தெரியாது. எதுவானாலும் நாம அதை ஏத்துக்கற மைண்ட் செட்ல இருக்கனும். நமக்கு நிலா மட்டும் போதும். அங்க வேற எந்த பிரச்சனையும் வேண்டாம்…”
“நோ மாம். நிலாவோட அப்பாவையும், அந்த லேடியையும் சும்மா விட சொல்றீங்களா? என்னால முடியாது. நேர்ல வச்சிக்கறேன் அவங்களை…” விழிகள் சிவக்க கர்ஜித்தவனை கண்டு மிரளத்தான் செய்தார் தர்ஷினி.
ஸ்டெபிக்குமே ஆரவ்வின் இந்த அதீத கோபம் அச்சமூட்டியதுதான். ஆனாலும் அவனின் கோவத்தில் இருந்த நியாயம் ஸ்டெபியை ஆரவ்வின் புறமே நிறுத்தியது. அவன் எதுவும் செய்தால் கூட தவறில்லை என நினைக்க தூண்டியது.
“ஆரவ் கண்ட்ரோல் யுவர் செல்ப். இந்த கோபம் அவங்களோட சேர்த்து நம்ம நிலாவையும் பாதிக்கும். அதுவும் இல்லாம அவங்க அளவுக்கு நாம இறங்கி போகவேண்டாம். முடிந்தளவுக்கு நாம நிதானத்தை கைவிடாமல் இருப்பதே நல்லது…” என,
“ஆமாம் ஆரவ். முதல்ல நிலாவுக்கு உண்மையை புரியவச்சு நம்மோட அழைச்சிட்டு வரதை மட்டும் நாம நினைப்போம். அவங்க எதாச்சும் பிரச்சனை செய்தா அதை எப்படி பேஸ் பண்ணனும்னு அந்த நேரம் முடிவெடுப்போம்…” என ஸ்டெபியும் அவனை அடக்கிவைத்தனர். ஆனாலும் அர்ஜூனிடம் வந்த ஸ்டெபி,
“அஜூ முடிஞ்சளவுக்கு நீங்க ஆரவ் கூடவே இருங்க. அவன் நிலா அப்பா மேல தான் ரொம்பவும் கோவமா இருக்கான். எந்த அசம்பாவிதமும் நடக்காம நல்லபடியா நிலாவை கூட்டிட்டு வரனும்…”
“புரியுது ஆஷா. தர்ஷிமா இதெல்லாம் யோசிச்சுதான் கார்த்திக்கை நம்மோட அழைச்சுட்டு போக முடிவெடுத்திருக்காங்க…” என கூறியும் ஸ்டெபியின் முகம் யோசனை படர,
“என்னோட பேரன்ட்ஸ் என்ன சொல்வாங்களோன்னு பயப்படறியா?…” சரியாக தன்னை கணித்து கேட்டவனை காதலோடு ஏறிட்டவள்,
“அஜூ யூ ஆர் சான்ஸ்லெஸ் மை மேன்…” என சில்லாகிக்க,
“ஹ்ம், போதும் போதும். அம்மாக்கிட்ட கார்த்திக் பேசிப்பான். அதை நினைச்சு நீ ஃபீல் பண்ணாதே. போய் தர்ஷிமாக்கு ஹெல்ப் பண்ணு. இப்போவே டைம் ஆச்சு. நாம இப்போ வீட்டுக்கு கிளம்ப முடியாது…”
“அப்போ நம்மோட பேக்கிங்?…” என இழுக்க,
“அதை நான் பார்த்துப்பேன் ஆஷா மேடம். நீங்க கிளம்பினா மட்டும் போதும்…”என புன்னகைக்க அவனோடு தன்னையும் இணைத்துக்கொண்டாள்.
ஆரவ் தான் வரும் தகவலை தயாளனுக்கு தெரிவிக்க அவன் தினகரனுக்கு தெரிவித்துவிட்டான். அடுத்து என்ன செய்யவேண்டும் என கேட்க,
“தயா. நீ எதுவும் செய்யவேண்டாம். நிலா குடும்பம் வரும் போது அவங்களுக்கு முன்னவே உன் அம்மாவை கூட்டிட்டு சேகரன் மாமா வீட்டுக்கு வந்திடு. அது எதார்த்தமா இருக்கட்டும். ஆரவ் வீட்ல இருக்கிறவங்க அவங்களுக்கு நீ தான் தகவல் சொன்னதுன்னு அவங்களா சொல்ற வரை நீயா எதுவும் பேசிக்காதே…”
“சரிங்கண்ணா. அப்படியே செஞ்சிடறேன்…” என்றவனின் குரல் உள்ளடங்கி இருக்க,
“உன் அம்மாவை நினைச்சு பயப்படறியா தயா?…” என கேட்கும் போதே அவமானத்தில் கன்றிப்போனான் தயாளன்.
“உண்மை தானே. தானும் அதை எண்ணித்தானே கவலையில் உள்ளேன். தாய் என்ன செய்வாரோ? என்ன பேசுவாரோ? என எண்ணி பயந்துதானே இருக்கிறேன்” என நினைத்து மருகினான் தயாளன்.
“தயா இது உனக்கொரு நல்ல வாய்ப்பா நினைச்சுக்கோ. உன்னோட காதல் பற்றி உன் குடும்பத்தாரிடம் தெரிவிக்க இதை விட நல்ல சந்தர்ப்பம் உனக்கு வாய்க்குமோ இல்லையோ? உன் வாழ்க்கைக்காக நீ தான் போராடனும்…”
“அம்மாவா? காதலான்னு நீ தான் முடிவெடுக்கனும். இந்த நிமிஷம் பிரச்சனையை எதிர்க்கொள்ள நினைத்து பயந்தால் காலம் முழுக்க காதலை இழந்து வாழவேண்டியது தான். முடிவை நீ தான் எடுக்கனும்…”
“முதல்ல நீ ஒரு ஆண்பிள்ளை. எத்தனை எதிர்ப்பு வந்தாலும் எந்த சூழ்நிலையிலையும் அவளை கைவிடாம தைரியமா இருந்து அவளை காப்பாத்தனும். உன்னை நம்பி வர பொண்ணு நீ குடுக்கிற நம்பிக்கை இதுதான். உன்னால உன் அம்மாவையே எதிர்த்து துணிந்து பேச முடியலைன்னா காதல்ல எப்படி ஜெயிப்ப?…”
தினகரன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் தயாளனின் தலையில் சம்மட்டியாய் இறங்கியது. இன்னொருத்தர் தன்னை கோழை என சொல்லாமல் சொல்லியதை தாங்க முடியாமல் வேதனையில் துடித்தான் தயாளன்.
தான் துடிக்க துடிக்க கேட்கவேண்டிய பேச்சுக்கள் இன்னும் ஏராளம் பாக்கியிருக்கிறது என்பதை அறியாமல் இச்சிறு விஷயத்திற்கே துவண்டு நின்றான்.
“சரிங்கண்ணா. நான் பார்த்துக்கறேன். உங்களுக்கு அப்பப்போ விஷயத்தை சொல்லிடறேன்…” என கூறிவிட்டு தயாளன் போனை கட் செய்துவிட்டு விட்டத்தை வெறித்தபடி கட்டிலில் படுத்திருந்தான்.
ஊரிலிருந்து வந்ததிலிருந்தே வள்ளியம்மையிடம் பட்டுக்கொள்ளாமல் நடக்க அவரோ அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவராக பேசி அவராகவே அதற்கு பதிலும் கூறிவிட்டு நகர தயாளன் உள்ளுக்குள் குமைந்து போவான்.
சிறு கேள்விக்கு கூட தன்னை பதிலளிக்கவிடாமல் தனக்கும் சேர்த்து அவரே முடிவெடுத்துக்கொள்வது ஏனோ இப்போதுதான் புத்தியில் உறைத்தது.
தினகரனின் வார்த்தைகளே மூளையையும் மனதையும் ஆக்ரமிக்க யோசித்து யோசித்து கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தான். அடுத்து செய்யவேண்டியதையும் முடிவெடுத்தான்.
மறுநாள் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகவே கழிய வண்ணமதியும் ஜீவாவும் ஆள் மாற்றி ஆள் நிலாவோடே ஒட்டுப்புல் போல ஒட்டிக்கொண்டே திரிந்தனர் தினகரனின் சொல்படி. வள்ளியம்மையால் நிலாவிடம் கேட்க நினைத்ததை கேட்கமுடியாமலே அதற்கடுத்த நாளும் விடிந்தது.
காலை உணவுக்காக பரபரப்பாக சமைத்துக்கொண்டிருந்த அமுதாவின் உள்ளத்தில் வள்ளியம்மை ஏன் இன்று விடிந்தும் விடியாமல் வந்திருக்கிறார்? அதுவும் தயாளனோடு என்ற கேள்வி நெஞ்சை அரிக்க அதை கேட்டுவிடமுடியாமல் வாயை மூடியபடி வேலையில் இருந்தார்.
குணசேகரனோடு வள்ளியம்மை வரவேற்பறையில் அமர்ந்து நிச்சயதார்த்த வேலைகள் பற்றி பேசிக்கொண்டிருக்க தயாளன் தான் நெருப்புமேல் அமர்ந்திருப்பதை போல உணர்ந்தான். அமுதா வாங்க தம்பி என்பதோடு நிறுத்திவிட ஜீவாவிடம் அதற்கும் பஞ்சமாகி போனது.
பெரும் முறைப்போடு அவனை வெறித்தவள் வள்ளியம்மையையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த வள்ளியம்மை,
“இந்த கல்யாணம் மட்டும் முடியட்டும். இருடி உன்னை வச்சிக்கறேன்” என உள்ளுக்குள் கருவிக்கொண்டிருக்க வெளியில் தெருவே பரப்பரப்பானது போல தெரிந்தது. சிறிது நேரத்தில் முத்தையா, முத்தழகியோடு யாரோ வீட்டிற்குள் நுழைவது தெரிய குணசேகரன் எழுந்து நின்றார்.
யார் இந்த பெரியவர் என புரியாமல் பார்த்தவர் விழிகள் அவரின் பின்னால் வந்தவர்களை கண்டு பயத்தில் நிலைகுத்தி நின்றது.
நாராயணன், வடிவு, ராகவ், தர்ஷினி, அர்ஜூன், ஸ்டெபி, கார்த்திக் அவர்களுடன் ஆரவ் வந்து நிற்க மின்சாரம் தாக்கியதை போல அதிர்ந்து நின்றார் சேகரன்.
“வாங்கய்யா, வாங்க. இதுதான் நீங்க கேட்ட வீடு. சேகரன் என்னோட நண்பன் தான்…” என்றபடி ஆர்பாட்டமாக வரவேற்று நாராயணனை அமரவைத்து அங்கிருந்த அனைவரையும் உபசரித்து அமர்த்திவைத்தார் முத்தையா.
சேகரனுக்கும் வள்ளியம்மைக்கும் சர்வநாடியும் அடங்கிப்போனது. வள்ளியம்மை ஆரவ் தன்னை பார்த்த பார்வையில் திக் பிரம்மை பிடித்தது போல அப்படியே நின்றார். அப்படி ஒரு தீ ஜுவாலை ஆரவ்வின் விழிகளில் கொப்பளிக்க அதில் பயந்து மெல்ல பின்னால் சென்று நின்றார்.
அதிலும் சேகரனுக்கு ‘அப்பாடா’ என்னும் உணர்வும் ‘ஐயோ’ என்னும் உணர்வும் ஒரே சேர எழுந்து அவரை அசையாமல் நிற்கசெய்தது.
அதற்குள் வீட்டினுள் இருந்து அமுதா வெளி வந்து பார்க்க தயாளன் உள்ளே சென்று நிலாவை வெளியில் வரவிடாமல் நிறுத்திவைத்தான்.
“ஹலோ எங்க வீட்டுக்கு வந்திருக்கிறவங்க யார்னு நாங்க தெரிஞ்சுக்க கூடாதா? நீங்க யார் எங்களுக்கு ஆடர் போட?…” என ஜீவா வம்பிற்கு நிற்க வண்ணமதி ஜீவாவை அனுப்பிவிட்டு நிலாவோடு இருந்துகொண்டாள்.
ஆனாலும் நிலாவோடு வெளியில் யார் கண்களிலும் படாமல் எட்டி பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் இருவரும். நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இதயம் மட்டும் ஏறுக்குமாறாக அதிகமாக துடித்தது.
மனதில் இனம்புரியாத உணர்வொன்று ஆட்டிப்படைக்க ஆனந்த அலைகள் பொங்கியது அவளுள். இன்னதென்று புரியாமலே விழித்தவள் வண்ணமதியோடு ஒட்டி நின்றாள். அவளை உணர்ந்து மதியும் அரவணைத்துகொண்டாள்.
தினகரனின் ஏற்பாடே இதுவும். ஆரவ் ஊர் எல்லையை தொட்டதுமே தயாளன் தினகரனுக்கு சொல்ல அவன் தன் குடும்பத்தை அனுப்பிவைத்தான்.
அவர்களுக்கு வருபவர்கள் நிலாவின் குடும்பம் என்று மட்டும் கூற மூவரும் திகைத்து போயினர். முத்தழகிக்கு இது போதாதா? தான் பார்த்துகொள்வதாக கூறி சென்றார்.
என்ன விஷயம் என முத்தையா கேட்டதற்கு அங்கு போய் தெரிந்துகொள்ளுங்கள் என கூறி தாயிடம் கண்ணை காண்பிக்க முத்தழகிக்கு முழு விபரமும் தெரியவில்லை என்றாலும் புரிந்துகொண்டு சென்றார்.
இன்னமும் வந்தவர்களை வரவேற்காமல் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமலே நின்றுகொண்டிருந்தார் சேகரன். வந்திருப்பவர்கள் யாரென தெரியவில்லை என்றாலும் அனைவரையும் வாய்நிறைய வரவேற்றார் அமுதா.
ஆனாலும் கையில் பூ புடவை, நகை இத்தியாதிகள் நிறைந்த சீர் தட்டுகளோடு இருப்பவர்களை பார்த்து புரியாது விழிக்க யார் என்னவென கேட்கும் முன்,
“அம்மாடி மருமகளே இந்த தட்டை எடுத்து உன் சம்பந்தியம்மாக்கிட்ட குடுமா…” என நாராயணன் தர்ஷினியை அழைக்க ஆரவ்வினால் நம்பவே முடியவில்லை. கண்கள் பனிக்க தாத்தாவை பார்க்க அவர் இவனை பார்த்து கண்ணடித்தார்.
தன் தாயிற்கான அங்கீகாரம் தாத்தாவின் வாயிலிருந்து கிடைத்துவிட்டதில் மகிழ்ந்து போனான் ஆரவ். சீர் தட்டை வடிவிடம் கூறி எடுத்துவந்தது நாராயணனே. இப்போது எதற்கு இது என புரியவில்லை என்றாலும் மற்றவர்கள் அவர் சொல்படியே நடந்தனர்.
“பெரியவங்க தவறா நினைச்சுட கூடாது. நீங்கலாம் யார்னே தெரியலையே?…” என அமுதா கேட்க ஆரவ் எழுந்து நின்றான் கம்பீரமாய். வந்ததிலிருந்து அவ்வீட்டை பார்வையால் துளைத்து தன்னிலவை தேடி தவித்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் நிமிர்ந்து நின்றவன்,
“நான் ஆரவ் சக்கரவர்த்தி. நிலாவோட ஹஸ்பன்ட்…” என பிசிறில்லா குரலில் கூற ஜீவாவிற்கு புரிந்துவிட்டது.
நாராயணனின் உள்ளம் நெகிழ்ந்தது. சக்கரவர்த்தி என கூறும் போதும் உண்மையிலேயே இந்த ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகவே தெரிந்தான் ஆரவ் அவர் கண்களுக்கு.
ஆக தான் நினைத்தது போல ஆரவ் நிலாவின் காதலன் இல்லை. கணவன் இவன் என எண்ணியபடி ஜீவா தன் தந்தையை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு நிலாவை தேடி செல்ல அங்கு நிலாவின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது.
ஆரவ்வை பார்த்ததும் உண்டான நெருக்கமான உணர்வில் காரணம் புரியாமல் சிலிர்த்தவள், அவன் தன் பெயரை கூறியதும் ஏற்பட்ட அதிர்ச்சி அடுத்து கணவன் என கூறியதும் அதிர்ச்சி பன்மடங்காக பெருகி அவளை மொத்தமாக உலுக்கிபோட்டது.
ஆழியலையாய் தன்னை சுருட்டிச்செல்லும் உணர்ச்சி பிரவாகத்தில் மூச்சுத்திணறி போனாள். நின்ற இடத்திலேயே மடிந்து அமர்ந்தவள் அப்படியே சமைந்துவிட்டாள். அவளை அன்னையாய் மடிதாங்கிய வண்ணமதி ஜீவாவை தாண்டி வரவேற்பறையை பார்த்தாள்.
அங்கே ஆரவ் கூறியதை கேட்டதும் அதிர்ந்து நின்ற அமுதா தன் கணவனை பார்க்க அவரோ எதையும் மறுத்துக்கூற முடியாமல் தலைகவிழ்ந்து நின்றார். இதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. மனைவியின் முன்பு தலைகுனியும் நிலைக்கு ஆளானதை எண்ணி வெட்கினார் சேகரன்.
மேலும் பேசும் முன் அந்த ஊரின் அப்போதைய சேர்மனும், சில பெரியவர்களும் வந்துவிட அவர்களை கண்டதும் இன்னும் அதிர்ந்தார் சேகரன். வந்தவர்களிடம் நடந்ததை ஆரவ் குடும்பம் கூறிவிட்டால் தன் கௌரவம் என்னாவது என பதைபதைத்து நின்றார்.
அதை விட ஊரில் நடந்த உண்மையை மறைத்து ஆரவ் குடும்பத்தையும் அவர்களை ஏமாற்றியதை அறிந்தால் ஊரில் காரி உமிழ்ந்துவிட மாட்டார்களா? என நினைத்து முள் படுக்கையில் படுத்திருப்பதை போன்ற அவஸ்தையை உணர்ந்துகொண்டிருந்தவரை கண்டதுமே அவரின் நிலையை புரிந்துகொண்டான் ஆரவ்.
வந்தவர்களில் ஒருவர் தர்ஷினி வைத்திருந்த தட்டில் இருந்தவைகளை கண்டு,
“அடடே நீங்கதான் எங்க ஊர் பொண்ணை நிச்சயம் செய்ய வந்திருக்கிற மாப்பிள்ளை வீட்டாளுங்களா?…” என கேட்டதும் அனைவரும் திகைத்துவிட்டனர் ஆரவ் உட்பட. அவனுக்கு இதை எப்படி கையாள்வது என்று ஒரு கணம் புரியவில்லை.
“சேகரன் ஏற்கனவே சொன்னான். நிலா புள்ளைக்கு சம்பந்தம் பேசிருக்குன்னு. ஆனா யாரு என்னனு எங்களுக்கு தெரியலை. இப்போதான் பார்க்கிறோம். நிச்சயதார்த்தம் நடத்த நாளாகும்னு சொன்னானே சேகரன்…” என இன்னொரு பெரியவர் பேசினார்.
அனைவரின் முன்பும் சேகரனை நாக்கை பிடுங்கிக்கொள்வது போல கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரம் வரிசைகட்ட தொண்டை வரை முட்டிக்கொண்டு நின்ற வார்த்தைகளை அப்படியே விழுங்கி அவரை அற்பமாய் ஒரு பார்வை பார்த்தான்.
“எங்க ஊர்ல இப்படின்னு விஷயத்தை யார்க்கிட்ட சொன்னாலும் நம்பமாட்டாங்க. என் பொண்ணு பேர்ல இருக்கிற மரியாதை தான் போகும்” என கெஞ்சி கேட்ட சேகரனின் வார்த்தைகள் நினைவடுக்கில் வலம் வர கொஞ்சம் நிதானித்தான்.
இவரை அசிங்கப்படுத்துவதால் எந்த நன்மையையும் இல்லை, நிலாவின் மேல் தான் தேவையில்லாத பேச்சுக்கள் பாயும் என்பதை உணர்ந்தவன் நாராயணனை பார்க்க அவர் விழிமூடி திறந்து தான் பேச ஆரம்பித்தார்.
“ஆமாம். நாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான்…” என ஆமோதித்து கூற நொடியில் அவரின் பாதையை பின்பற்றி வடிவும் தங்கள் அனைவரையும் பற்றி அறிமுகத்தை கொடுத்துவிட அனைவரும் வியந்துவிட்டனர்.
“அம்மாடி ஸ்டெபி, நீயும் என் மருமகளும் போய் என் பேத்தியை பாருங்க. இங்க நாங்க பேசி முடிக்கிறோம்…” என இருவரையும் நிலாவை காண அனுப்ப ஆரவ் பரபரப்பானான். அதுவரை இருந்த நிதானம் காற்றில் கரைந்து அலைபாய ஆரம்பித்தான் தன்னவளை காண. அவர்கள் சென்றதும் நாராயணன் பேச ஆரம்பித்தார்.
“விஷயம் வேற ஒண்ணுமில்லைங்க. இந்த வார கடைசியில நிச்சயம் செஞ்சிடலாம்னு நாங்களும் நிலாவோட அப்பாவும் முடிவு பண்ணிருந்தோம். ஆனா பாருங்க நாம நினைக்கிறது ஒண்ணு. தெய்வ சங்கல்பம் ஒண்ணா இல்ல இருக்கு…” என்று உச்சுக்கொட்ட,
“என்னங்கைய்யா எதுனாலும் வில்லங்கமான விசயமுங்களா?…” என உண்மையான கவலையோடு கூட்டத்தில் ஒருவர் கேட்க,
“அட நீங்க ஒன்னும் சுணங்கிடாதீங்க. விஷயம் பெருசில்லை. எல்லாம் நம்ம முடிவு பன்றதுல தான் இருக்குது. அதாகபட்டதுங்க, என் பேரனுக்கு அடுத்த வாரத்துல இருந்து ஏதோ நேரம் நல்லா இல்லைங்கலாம்…”
நாராயணன் என்னதான் கூற வருகிறார் என புரியாமல் அவர் பேச ஆரம்பித்ததிலிருந்து ரத்த அழுத்தம் ஏறி இறங்கி பாடாய் படுத்தியது. கொஞ்சமும் யோசிக்காத ஒரு விஷயத்தை பேசிக்கொண்டிருப்பவரை பயம் கவ்விப்பிடிக்க பார்த்தபடியே அப்போதும் நின்றுக்கொண்டிருந்தார்.
அமுதாவோ நடப்பவை எதையும் நம்பமுடியாமல் திறந்தவாய் மூடாமல் அதிர்ச்சியில் இருந்தார். பேசும் அனைத்தும் காதில் விழுந்தாலும் அவரால் எதையும் எதிர்த்து கேட்க முடியவில்லை. தவறு தங்கள் புறம் என்பது சேகரனின் அமைதியிலும் தவிப்பிலுமே தெரிந்துவிட்டதே.
முத்தையாவும் முத்தழகியும் இவையனைத்தையும் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக இருந்தனர். புயலுக்கு முன் இருக்கும் அமைதி போல நாராயணனின் முகத்தில் அடக்கப்பட்ட கோவம் இருப்பது போன்ற ஒரு பிரம்மை ஏற்பட்டது முத்தையாவிற்கு. இவர்கள் யாரயும் கண்டுகொள்ளாத நாராயணன்,
“அதனால இன்னும் ரெண்டே நாள்ல கல்யாணத்தை வச்சுபுடனும்னு வீட்டுல எல்லாரும் பிரியப்படறாங்க. அதான் நேத்தே இதை இவருக்கிட்ட போன்ல சொல்லிட்டேன்…” என குணசேகரனை காட்டி நாராயணன் கூற அனைவரின் பார்வையும் அவரை தொட்டு மீண்டது.
“இவரு ஊர்ல இன்னும் விஷயத்தை சொல்லலைன்னு சொன்னாரு. அதான் இன்னைக்கு நேர்ல வந்து பேசிட்டு அப்டியே பொண்ணையும் அழைச்சுட்டு போய்டலாம்னு வந்தோம். கல்யாண ஏற்பாடெல்லாம் எங்க ஊர்ல தடபுடலா நடந்துட்டு இருக்குது. நாளைக்கு ராத்திரி இங்க உங்க எல்லாருக்கும் பஸ் அனுப்ப ஏற்பாடு பண்ணிட்டேன்…”
“அய்யா சேகரு. என்னதான் நம்ம மனசுக்கு ஒப்பாத சில சம்பவங்கள் இடையில நடந்துபோனாலும் இப்படி ஒரு நல்ல சம்பந்தம் தகஞ்சிருக்கு பாரு. எல்லாம் உன் பொண்ணோட அதிர்ஷ்டம்….” என ஒருவர் பெருமைகொள்ள,
“ஓஹ் அதான் சேகரன் தங்கச்சி விடியலிலேயே கிளம்பி வந்துடுச்சா? வள்ளியம்மை என்னதான் குணத்துல முன்னபின்ன இருந்தாலும் தம்பி மகளுக்கு ஒரு நல்லதுன்னதும் உடனே புறப்பட்டு வந்துருச்சு பாருங்க. அதான்யா ரத்த சொந்தம்…” என சேர்மன் கூற மற்றவர்கள் அதை ஆமோதிக்க அர்ஜூன் வள்ளியம்மையை முறைத்தான்.
அதை கண்டுகொள்ளாது நாராயணன் தன் பேச்சை தொடர்ந்தார். மறந்தும் சேகரனையோ வள்ளியம்மையையோ அவர் பார்க்கவே இல்லை. பார்க்க விரும்பவில்லை என்பது தான் உண்மை.
“இப்படி சொல்றோம்னு வருத்தபடாம உங்க வீட்டு பொண்ணு கல்யாணத்துக்கு கண்டிப்பா எல்லாருமே வந்துடனும். எல்லோரையுமே நாங்க எதிர்பார்த்துட்டு இருப்போம். வீட்டுக்கு வந்து அழைச்சா தான் வரனும்னு நினைச்சா இன்னைக்கு சாயங்காலம் தான் கிளம்புவோம். அதுக்குள்ள எல்லோர் வீட்டுக்கும் வந்து கூப்பிட்டுடறோம். பெரியவங்க தான் சொல்லனும்…”
நாராயணன் பேச்சில் கவனமாக இருக்க ஆரவ்விற்குமே இது அதிர்ச்சிதான். கல்யாண ஏற்பாட்டை பற்றி தன்னிடம் கூட ஒரு வார்த்தையும் கூறாமல் எல்லா விஷயத்தையும் செய்திருக்கிறாரே என நினைத்து பூரித்தான். அர்ஜூன்,
“டேய் சக்கு, நீ உன் பேரை சொன்னதிலையே நான் ஷாக் ஆகிட்டேன். உன் தாத்தா என்னடான்னா சும்மா பொளந்து கட்டுறாரே. இன்னொருக்க கல்யாணமா? எங்களுக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கலைடா…” என கேலி செய்ய,
“அண்ணா நீங்க ரொம்ப லக்கி. அண்ணி கூட இன்னொருக்க கல்யாணம். உங்களுக்கு வேணும்னா இது ரெண்டாவது முறையா நடக்கிற மேரேஜ். ஆனா இப்போ இருக்கிற அண்ணிக்கு இதுதானே பர்ஸ்ட். இது இன்னுமொரு ஃபீலிங் தான் இல்லை…” என கார்த்திக் தன் பங்கிற்கு ஓட்டினான்.
அப்போதுதான் நிலாவின் மனநிலை என்னவாக இருக்கும். தன்னை ஏற்றுகொள்வாளா? இங்கு நடந்ததை எல்லாம் கேட்டிருப்பாளா? எப்படியெல்லாம் துடித்தாளோ? என எண்ணியவன் அவளை இப்போதே பார்த்து அணைத்துக்கொள்ள தவித்தான்.
ஆனால் அவனின் நிலவு துடிக்கத்தான் செய்தது. வேறு ஒன்றை நினைத்து…