அவளின் உணர்வுகள் புரிந்தவன் போல் ஆறுதலாக அணைத்துக்கொண்டவன் சில நொடிகள் அந்த அமைதியை உள்வாங்கி நின்றான். யாரும் எதுவும் வேறொன்றும் பேச தோன்றா மோனநிலை.
அதில் விடுபட்ட நிலா, “அப்போ இது?…” என அந்த மருந்துசீட்டை காண்பிக்க முகம் இறுகினான் ஆரவ்.
“யார் என்ன சொன்னாலும் நம்பி போய்டுவியா நிலாடா? அந்த டேப்லட்ஸ் மட்டும் நீ எடுத்திட்டுருந்தா நம்ம குழந்தை?…” தொண்டையடைக்க அவளை மீண்டும் தன் அணைப்பால் இறுக்கினான்.
வள்ளியம்மை செய்திருக்கும் சூழ்ச்சியை அவளுக்கு விளக்க அதிர்ந்தே போனாள் நிலா. உடல் நடுங்க தன்னவனிடம் கோழிக்குஞ்சாய் ஒண்டி அமர தன்னையே அரணாக்கிய ஆரவ் தனக்குள் அவளை அடக்கி ஆதுரமாக அவளை வருடிக்கொண்டிருந்தான்.
ஆனாலும் வெளியில் அமைதியாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் எரிமலையாக வெடித்து சிதறிக்கொண்டிருந்தான். பின் இருவருமாக தயாராகி கீழே வர தர்ஷினியும் ராகவ்வும் கிளம்பிக்கொண்டிருந்தனர் டெல்லிக்கு.
ஏற்கனவே பேசி எடுத்திருந்த முடிவு தான். திருமணம் முடிந்ததுமே கிளம்பவேண்டும் என. அர்ஜூனும் ஸ்டெபியும் ஆரவ் நிலாவை அழைத்துக்கொண்டு நான்கு நாட்கள் கழித்து கிளம்ப ஏற்பாடாகி இருந்தது.
கீழே இவர்கள் செல்லும் போதே வடிவிடமும் நாராயணன் தாத்தாவிடமும் விஷயத்தை கூறியிருந்தார் தர்ஷினி. இவர்களுக்காகவே காத்திருந்து இருவருக்கும் இனிப்பை ஊட்டிவிட்டனர் தாத்தாவும், பாட்டியும்.
அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க தர்ஷினி கூற அதன் படி விழுந்து எழுந்ததும் நிலாவின் முகத்தை நெட்டிமுறித்தார் வடிவு. அர்ஜூன் ஸ்டெபி சொல்லவே வேண்டாம். ஆரவ்வை தூக்கி சுற்றிவிட்டான் அர்ஜூன்.
நிலாவை அணைத்து வாழ்த்தை தெரிவித்தாள் ஸ்டெபி. ஆனாலும் அதை தங்களுக்குள்ளே வைத்துக்கொண்டனர். மற்றவர்களுக்கு அறியாமல். அவ்வூரை பொறுத்தவரை முதல்நாள் திருமணமானவர்கள் தான் ஆரவ், நிலா.
அதனால் தங்கள் உற்சாகத்தை மற்றவர்கள் அறியாமல் தங்களுக்குள் மகிழ்ந்துகொண்டனர். காலை உணவை முடித்துக்கொண்டு ராகவ் மகனையும் மருமகளையும் மறுவீடு செல்ல சொல்ல ஆரவ் முடியாதென்றான்.
“திரும்பவும் முதல்ல இருந்தா ஆரவ்? அம்மா அவங்ககிட்ட சொல்லிட்டாங்க உன்னை அனுப்பிவைக்கிறதா…” என ராகவ் ஆயாசமாக கூற,
“ப்ச் டாடி, நானே ஜீவாவுக்கு போன் பண்ணி நாளைக்கு வரதா சொல்லிட்டேன். அதனால் நீங்க வொரி பண்ணிக்க வேண்டாம்…” என்றவன் நிலாவை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.
“இவனை புரிஞ்சுக்கவே முடியலையே?…” என்ற முணுமுணுப்போடு ராகவ் கிளம்ப அவரிடம் நடந்ததை தர்ஷினி சொல்லியிருக்கவில்லை. நிச்சயம் தாங்கிக்கொள்ளவே மாட்டார் ராகவ்.
தர்ஷினியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தாரே சேகரனிடம் தன் கணவர் விலகி நிற்பதை. என்றைக்கு இருந்தாலும் விட்டுப்போகிற உறவில்லையே இது. நடந்ததை கூறி மேலும் விரிசலுக்கு வழிவகுக்க வேண்டாம் என மறைத்துவிட்டார் தர்ஷினி.
கார்த்திக்கையும் அழைத்துக்கொண்டு அவர்கள் அன்றே கிளம்பிவிட மறுநாள் ஆரவ் நிலாவோடு அர்ஜூன் ஸ்டெபி என நால்வராக கிளம்பி பூம்பொழில் வந்து சேர்ந்தான். தடபுடலான வரவேற்போடு மணமக்களை வரவேற்றார் அமுதா.
தினகரனை தவிர்த்து முத்தழகி குடும்பமும் அங்கே இருக்க கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் போனது. ஆரவ் முந்தைய கோபதாபங்கள் எதையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாகவே உரையாடினான். அதில் சேகரன் கூட ஒருவித உற்சாக மனநிலையில் தான் இருந்தார்.
வள்ளியம்மை குடும்பம் அங்கே இல்லாமல் இருக்க அதை ஜீவாவிடம் கேட்டான் அர்ஜூன். அவர்கள் வராமல் இருப்பதே நல்லது என ஜீவாவும் அவனிடம் கூற அதை ஸ்டெபியும் ஆமோதித்தாள்.
சிறிது நேரம் கழித்து சேகரனிடம் வந்த ஆரவ் தன்னோடு வள்ளியம்மை வீட்டிற்கு வருமாறு அழைக்க,
“அங்க எதுக்குங்க மாப்பிள்ளை?…” என அவரை உறுத்துவிழித்தான் அவரின் மருமகன்.
“அவங்க வீட்டுக்கு போகனும். நீங்க வந்துதான் ஆகனும். வாங்க…” ஆரவ்வோடு அர்ஜூனும் எதற்கென்றே புரியாமல் இணைந்துக்கொண்டான்.
இருவரையும் மாறி மாறி பார்த்தவர் சரி என ஒப்புக்கொள்ள உடனே வீட்டில் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர். அமுதாவிற்கும் மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் என அறிந்த நிலா அமைதியாக பார்த்திருந்தாள்.
வள்ளியம்மையின் வீட்டில் அனைவரும் ஆளுக்கொரு மூளையில் அமர்ந்திருக்க தயாளன் லேப்டாப்பில் நோண்டிக்கொண்டிருந்தான். வீட்டிற்குள் யாரோ நுழையும் அரவம் கேட்க திரும்பி பார்த்த வள்ளியம்மைக்கு திகிலடித்துப்போனது.
வள்ளியம்மை வீட்டிற்கு செல்வது சேகரனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் தன் மருமகன் முதன் முதலில் தன்னிடம் கேட்டது. அதை மறுக்க தோன்றாமல் புறப்பட்டு வந்துவிட்டார். ஆனாலும் வள்ளியம்மையை பார்க்க விரும்பாமல் வேறெங்கோ திரும்பி நின்றுகொண்டார்.
வள்ளியம்மை கணவரான முருகேசனும் அமைதியாக இருக்க தயாளன் தான் அனைவரையும் வரவேற்றான்.
“எல்லோரும் வாங்க. வாங்க மாமா. இன்னைக்கு நிலா மறுவீடு வந்தாச்சா? எனக்கு கொஞ்சம் வேலை. அதான் வீட்டுக்கு வரமுடியலை…” என தயாளன் தானாகவே கூற யாரும் பதில் பேசவில்லை.
அந்த மௌனம் ஏனோ கலக்கத்தை கொடுத்தது வள்ளியம்மைக்கு. நிமிர்ந்தே பார்க்காமல் நிற்க வாயை திறந்தார் முருகேசன்.
“அதான் அத்தனை பேர் முன்னாலையும் என் குடும்ப மானத்தை மூக்கறுத்துட்டீங்களே? இன்னும் என்ன பாக்கி இருக்குன்னு இங்க வந்து நிக்கிறீங்க? உங்க ஓடுகாலி மகளை சீராட்டறதை விட்டுட்டு இங்க என்ன சோலி கழுதைக்கு வந்து நிக்கிறீங்க?…”
ஆத்திரத்தில் சட்டையை கொத்தாக பிடித்துவிட்டான் ஆரவ்.
“யாரை பார்த்து பேசற? தொலைச்சுக்கட்டிடுவேன் ஜாக்கிரதை…” என விரல்நீட்டி எச்சரித்தவன் தன் பையில் இருந்த அந்த மருந்துசீட்டை எடுத்து வள்ளியம்மை முகத்தில் விட்டெறிந்தான்.
ஏன் எதற்கென புரியாமல் மற்றவர்கள் பார்த்திருக்க வள்ளியம்மைக்கு சர்வமும் ஆடிப்போனது. கைகள் நடுங்க அதை எடுத்துப்பார்த்தவர் ஆரவ்வை ஒரு பயப்பார்வை பார்த்தார்.
“என் வீட்டுக்கே வந்து அராஜகம் பன்றீங்களா எல்லாரும்?…”என முருகேசன் கூச்சலிட,
“அப்பா கொஞ்சம் அமைதியா இருங்களேன்…” என தயாளன் அவரை அடக்கமுயல,
“உன் பொண்டாட்டி என் குழந்தையை அழிக்க நினைச்சது அராஜகம் இல்லை. அதை தட்டிக்கேட்க வந்தா நாங்க செய்யறது உனக்கு அராஜகமா தெரியுதா?…” என ஆத்திரம் குறையாமல் பல்லை கடித்தபடி கூறினான் ஆரவ்.
அர்ஜூனும் சேகரனும் அதிர்ந்து நின்றனர். குழந்தையை கலைக்க நினைத்தாரா? என அர்ஜூனும், நிலா தாயாகி இருக்கிறாளா? என சேகரனும் ஆடிப்போயினர்.
“அழிஞ்சா போச்சு. நல்லா தானே இருக்கு. அதுக்கா இந்த ஆர்ப்பாட்டம்?…” என அசால்ட்டாக கூறிவிட பாய்ந்தேவிட்டான் ஆரவ்.
அவரை பிடித்து அடி நொறுக்கிவிட ஆரவ்வின் சில அடிகளிலேயே சுருண்டு விழுந்தார் முருகேசன். ஆனாலும் அவரை இழுத்து நிறுத்தியவன் மீண்டும் கன்னத்தில் அறைய,
“வேண்டாம் தம்பி. போதும். நான் செஞ்சது தப்புதான். என்னோட ஆசையால புத்தி பிசகிட்டேன். அவரை விட்டுடு…” என மிரண்டு போய் மன்றாடினார். என்ன சொல்லியும் ஆரவ் கேட்கும் விதமாக இல்லை.
“உன் அப்பா மாதிரி நினைச்சு விட்டுடுப்பா…” என கைகூப்ப,
“அட ச்சீ வாயை கழுவுங்க. யாரை யாரோட இணைக்கூட்டறீங்க? எங்க ராகவ்ப்பா எங்க? இந்தாள் எங்க? வயசான பொம்பளைன்னு பார்க்கமாட்டேன்…” என விரல் நீட்டி எச்சரித்த அர்ஜூன் தயாளனின் தலைகுனிந்த தோற்றத்தை கூர்மையாக பார்த்தான்.
தந்தையை அடிக்கும் போதும் தடுக்க வரவில்லை. தாயை பேசும் போதும் இடையிடவில்லை. அதிலேயே புரிந்தது அவனுக்கும் இந்த விஷயம் முன்பே தெரியும் என்பது.
“சோ உங்களுக்கு முன்னாலேயே நிலா கன்சீவா இருக்கிறது தெரிஞ்சிருக்கு அப்டி தானே தயாளன்?…” நேரடியாகவே கேட்டுவிட்டான் அர்ஜூன்.
அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் அதே தோற்றத்தில் தான் நின்றிருந்தான் அவன். கூனிக்குறுகி அவன் நின்றிருந்த விதம் வள்ளியம்மையை சிதைத்தது. மகனுக்கு முன்பே தெரியுமா? என்ற நினைவே அவரை வாட்டியது. முருகேசனை விட்டுவிட்டு தயாளனை நெருங்கிய ஆரவ்,
“உன்மேல எவ்வளோ மரியாதை வச்சிருந்தேன் தயா. தயவு செய்து எங்க ஜீவாவை மறந்திடுங்க தயா…” என்றான்.
கார்த்திக் மூலமாக தயாளனின் காதலை பற்றி அன்றே விஷயம் தெரிந்துவிட்டது ஆரவ்விற்கு. தயாவின் பேச்சுக்களில் இருந்து ஜீவாவின் மறுப்பு வரை.
“மன்னிச்சிடுங்க அண்ணா. என்னால இந்த உண்மையை சொல்லமுடியலை. ஏற்கனவே அம்மா செஞ்ச தவறால மாமா முகத்த பார்க்கமுடியலை. இதுபோல செஞ்சிருக்காங்கன்னு தெரிஞ்சா உறவே இல்லாம போய்டுமே. சுயநலம்னு கூட நினைச்சுக்கோங்க. ஆனா ஜீவாவை விட்டுக்குடுக்க என்னால முடியாது…”
தன் பக்க நியாயத்தை நியாயம் என நினைத்ததை அவன் கூற, “எந்த நம்பிக்கையில உனக்கு நாங்க ஜீவாவை குடுக்க முடியும்?…” அர்ஜூன் கூற,
“என் மேல உள்ள நம்பிக்கையில தரலாம் அண்ணா. நிச்சயம் அவளுக்கு ஒரு தீங்கும் வராமல் நான் பார்த்துப்பேன்…” விடாப்பிடியாக தயாளன் கூற,
“எப்டி பார்த்துப்ப? தானும் ஒரு தாய் அப்டின்ற எண்ணம் இல்லாமல், இரக்கமே இல்லாமல் யாருக்கும் தெரியாமல் நிலாவோட குழந்தையை அவளுக்கும் கூட தெரியாமல் அழிக்க நினைச்ச உன்னோட அம்மா உனக்கே தெரியாம ஜீவாவை என்ன வேணும்னாலும் செய்துட்டா?. இத்தனைக்கும் ஜீவாவை உங்கம்மாவுக்கு சுத்தமா பிடிக்காது…”
“இந்த உலகத்தை பார்த்திராத உருவமே இல்லாத ஒரு சிசுவை அழிக்க நினச்ச இவங்கலாம் ஒரு அம்மான்னு நீ வெளில சொல்லிக்காதே. இப்படிப்பட்ட இவங்க அவங்களுக்கு பிடிக்காத ஜீவாவை என்னவேணும்னாலும் செய்வாங்க. இல்லைன்னு சொல்லு பார்ப்போம் தயா…”
அர்ஜூனின் கேள்விக்கு பதில் கூறமுடியாமல் நின்றான். அர்ஜூனின் கூற்றில் இருக்கும் உண்மை அவனை கட்டிப்போட்டது. பரிதாபமாக ஆரவ்வை பார்த்தான். தன் கண்முன்னாலே தன் காதல் கைவிட்டு விலகி காற்றில் கரைந்துகொண்டிருந்தது.
“நீயே நல்லா யோசி தயா. ஜீவாவோட நல்லதுக்கும் தான் நான் சொல்றேன். அவளை விட்டு நீயே விலகிடு. அதுதான் உனக்கும், அவளுக்கும் நல்லது. நாளைக்கே உன் ஆசைக்காக ஜீவாவை உனக்கு குடுத்து ஜோசியக்காரன், ஏதோ சாமி, ஆசாமின்னு எவனாவது எதாச்சும் சொல்லி அது ஜீவாவோட உயிருக்கே ஆபத்தாகிட்டா?…”
ஏற்கனவே கலங்கி நிற்பவனை மேலும் கலங்கடித்தான் ஆரவ். தன்னால் ஜீவாவிற்கு ஆபத்தா? தன் தாயை பார்த்தான். தன் மீதான பாசத்தையும் தாண்டிய ஒரு குரூரமான மனது இன்று அப்பட்டமாக தயாவின் கண்களுக்கு புலப்பட்டது.
“நான் சொல்றது உனக்கு கஷ்டமா தான் இருக்கும் தயா. இன்னொரு விஷயத்தையும் தெளிவு படுத்திடறேன்…” என்றவன் சேகரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“அந்த வீட்டு மூத்த மருமகனா ஜீவாவை உனக்கு குடுக்க எனக்கு துளியும் சம்மதமில்லை. என்னை மீறி என்னோட மாமனார் இனி எந்த முடிவையும் எடுக்கமாட்டார். எங்க வீட்டு பொண்ணுக்கு எப்படி வாழ்க்கை அமைச்சு குடுக்கனுமோ அதை நாங்க பார்த்துப்போம். சோ நீயே ஜீவாவை உன் மனசுல இருந்து எடுத்திடு…”
கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி தயாவை வார்த்தைகளால் கூறுபோட்டான் ஆரவ். தயாளனுக்கு தெரிந்துவிட்டது இனி தன் ஆசை நிராசைதான் என்று. என்ன முயன்றும் கலங்கும் கண்களை மறைக்கமுடியவில்லை.
“இப்படி ஒரு அம்மாவும், அப்பாவும் இருந்தா ஆசைப்பட்ட வாழ்க்கை கூட கிடைக்காது தயா. பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? பெத்தவங்க செய்த பாவம் பிள்ளைகள் தலையில்னு…” என அர்ஜூன் கூற வள்ளியம்மை நொறுங்கிவிட்டார்.
“தான் ஏன் இதை உணராமல் போனோம். நான் செய்யும் பாவம் என் பிள்ளையின் வாழ்வை பாழாக்கிவிட்டதென்று கூறும் அளவிற்கு தான் நடந்துகொண்டோமே? இதனால் தன்னை வெறுத்துவிடுவானோ?” என குமைந்தார்.
“இல்லை என் மகனை நான் இழக்கமாட்டேன். என் மகன் தான் எனக்கு முக்கியம்” என அப்போதும் சுயநலமாகவே நினைத்தார். செய்த தவறு அவரை உறுத்தவில்லை. எங்கே இதை காரணம் சொல்லி பிரிந்துவிடுவானோ என்று தான் பயந்தார். தன் மாமனாரிடம் வந்தவன்,
“நல்ல உடன்பிறப்புங்க உங்க அக்கா. இவங்களுக்காக உங்க பொண்ணை நரகத்துல தள்ள இருந்தீங்களே?…”என கேட்ட ஆரவ் வெளியேறிவிட்டான். சேகரனால் நகரமுடியாமல் நின்ற இடத்திலேயே ஆணியடித்தது போல நின்றிருந்தார்.
“என் குடும்பத்தையே பிரிச்சுட்டீங்களே பாவிங்களா. நீங்க நல்லா இருப்பீங்களா?…” சாபம் கொடுக்கும் விதமாக வள்ளியம்மை அழ அவரை அற்பமாக ஒரு பார்வை பார்த்த சேகரன் தயாவிடம் திரும்பி,
“இன்னையோட இந்த உறவை நான் தலைமுழுகறேன். எந்த சூழ்நிலையிலும் என் வீட்டுப்பக்கம் வந்திடவேண்டாம்னு சொல்லிவை. அசிங்கமாகிடும்…” என கடுமையாக கூறிய சேகரன் விருட்டென கிளம்பிவிட்டார். உடன் அர்ஜூனும்.
அவர்கள் கிளம்பிய சிலநிமிடம் அப்படியே நின்றிருந்த தயாளன் வேகமாக தன் பொருட்களை எடுத்து வைத்தவன் வீட்டைவிட்டு கிளம்ப,
“அய்யா எங்கையா போற? எங்களுக்கு வேற யார் இருக்கா?…” என அழுகும் குரலில் வள்ளியம்மை கேட்க,
“அதை நினைச்சு தான் எல்லாத்தையும் பொறுத்துபோனேன். இன்னைக்கு என்னோட எதிர்காலமே கேள்விக்குறியா ஆகிடுச்சு உங்க துரோகத்தால. உங்க சுயநலத்துக்காக ஒரு குடும்பத்தையே அழிச்சு உங்க ஆசையை நிறைவேத்திக்கனும்னு நினைச்சு என்னோட ஆசையை குழிதோண்டி புதைச்சுட்டீங்க….” என இறுகிய குரலில் கூற,
“ஊர் உலகத்துல அவ ஒருத்திதான் பொண்ணா? நான் பார்க்கறேன்ய்யா ராணி மாதிரி உனக்கு பொண்ணு…” என,
“பார்க்கிற பொண்ணு எல்லாம் ஜீவாவா ஆகிட முடியாது. இனிமே தயவு செய்து என்னை பார்க்கனும்னு நினைக்காதீங்க. என் மனசு மாறும் வரை பேசவும் முயற்சிக்காதீங்க…” என்றவன் வீட்டை விட்டு வெளியேற விக்கித்து நின்றார் வள்ளியம்மை.
தங்களை விட்டு பிரிந்து செல்லும் மகனை தடுக்க கூட முடியாமல் கீழே விழுந்துகிடந்தார் முருகேசன்.
மகனின் இப்பிரிவாவது அவர்களின் தவறை உணரவைத்து மனதை மாற்றுமா என்பது காலத்தின் கைகளில் தான்.