தேடல் – 3
சென்னை மாநகரத்தின் சாலை நெரிசலில் சிக்கி வாகனங்கள் ஆமையின் வேகத்தில் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க பொறுமையிழந்து கத்திக்கொண்டிருந்தான் ஆரவ்.
“நான் கேட்டேனா? இந்த ரிசப்ஷனுக்கு வரேன்னு. ஏன்டா டக்கு சொல்றதை கேட்கவே மாட்டேன்னு பிடிவாதமா இருக்க? பாரு நாம ஏர்போர்ட்ல இருந்து கிளம்பி இரண்டுமணி நேரம் ஆகுது. இன்னும் ஹோட்டலுக்கு போய் சேர முடியலை…”
அவனது பொங்குதலை கண்டுகொள்ளாமல் சாலையிலேயே கவனமாக இருந்தான் அர்ஜூன். இதனாலே ஆரவ்வின் உஷ்ணம் இன்னமும் அதிகமாகியது. இனி அர்ஜூனிடம் பேசி எந்த பயனும் இல்லாததால் தானும் சாலையை வெறிக்க ஆரம்பித்தான்.
ஐந்து நிமிடம் கூட முடியவில்லை. மீண்டும் ஆரவ்வின் தொனதொனப்பு அர்ஜூனின் காதுகளை மீண்டும் பதம் பார்க்க ஆரம்பித்தது.
“ஏன்டா இப்டி படுத்தற? ஈவ்னிங் ரிசப்ஷனுக்கு இப்படி மெனக்கெட்டு நாம ரெண்டு பேரும் வரனுமா? எல்லாம் இந்த ராகவ்னால வந்தது. போய் வச்சுக்கறேன் அந்த மனுஷனை…”
“இன்னைக்கு நைட் பெங்களூர் வேற போகனும். நீ மட்டும் இந்த பங்க்ஷனை அட்டென் பண்ணிருந்தா நான் நேரா ஹாயா பெங்களூர்க்கு வந்திருப்பேன். இப்படி என்னை சுத்தல்ல விடற உன்னை நான் சும்மா விடமாட்டேன்டா…”
இப்படி பலவிதமாக தனது மனப்புகைச்சலை எல்லாம் அர்ஜூனை நோக்கி அள்ளி வீசிக்கொண்டிருந்தான் ஆரவ்.
இதையெல்லாம் கேட்டும் கேட்காதவனாக காதில் விழாதது போன்ற பாவனையை மட்டும் முகத்தில் காண்பித்து கொண்டிருந்த அர்ஜூனை அந்த கால் டாக்சி ட்ரைவர் பெரும் பொறுமை பூஷணம் என்னும் ரேஞ்சிற்கு வைத்து பார்த்து பிரமித்தார்.
ஒருவழியாக ஹோட்டல் வந்து சேர அதிலிருந்து இறங்கிய ஆரவ் விடுவிடுவென உள்ளே சென்றுவிட்டான்.
லக்கேஜை துக்கி கீழே வைத்த ட்ரைவர், “ச்சே, என்ன மனுஷன் சார் நீங்க? உங்களை போல ஒரு பொறுமையான ஆளை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை…” என சில்லாகிக்க,
“அதான் இப்போ பார்த்துட்டீங்களே, பேசாம கோவில் கட்டி கும்பிடவேண்டியது தானே?…”
அவரின் பின்னால் இருந்து ஆரவ் கிண்டலாக கூற அவனை பார்த்ததும் இவன் எப்போது இங்கே திரும்பி வந்தான் என தலைதெறிக்க காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார் டாக்ஸி டிரைவர்.
“அது…” என கெத்தாக பார்த்தவன் திரும்பி அர்ஜூனை பார்த்து,
“இந்த உலகம் உன்னையும் பொறுமைசாலி, அமைதியானவன்னு நம்புது பாரு. எல்லாம் நீ போடற சீன் அப்படி. கோவத்துக்கான மொத்த அடையாளமான ஒரிஜினல் பீஸ் நீ இருக்கும் போது என்னை போய் கோவக்காரன்னு நினைச்சுட்டான் பாரு. என்னத்தை சொல்ல?…”
நொந்துகொண்டே பேசிய ஆரவ்வை பார்த்து, “அது அப்படி இல்லை சக்கு. உன்னையும் ஒருத்தன் கோவக்காரனா நினச்சுட்டான் பாரேன்? அப்படி சொல்லனும். புரியுதா?…” என நமுட்டுச்சிரிப்போடு கூற,
“எல்லாம் என் நேரம்டா. போய் முதல்ல ரெஸ்ட் எடுத்துட்டு அப்டியே ஈவ்னிங் ரிசப்ஷன் போய்ட்டு சீக்கிரமே கிளம்பிடுவோம்…” என கூறியவாறே அர்ஜூனையும் இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான் ஆரவ்.
மாலை நெருங்கிய நேரம் ரிசப்ஷனுக்கு தயாராகி கீழே வந்ததுமே இவர்களுக்காக காத்திருந்த டிரைவர்,
“சார், விக்ரம் சார் அனுப்பினார். உங்களை ரிசப்ஷன் ஹாலுக்கு பிக்கப் பண்ணிட்டு வரசொன்னார்…” எனவும் அர்ஜூனின் முகம் கடுகடுத்தது.
அதை கண்டுகொண்ட ஆரவ்விற்கோ உற்சாகம் பீறிட, “நண்பன்டா, நட்புடா, ப்ரெண்ட்ஷிப்டா…” என அளந்துகொண்டிருக்க,
“நீ வாய மூடுடா. இப்போ கிளம்ப போறயா? இல்ல இங்க உள்ளவங்களுக்கு எல்லாம் ஃப்லிம் காட்ட போறயா?…” என பல்லிடுக்கில் வார்த்தைகளை கடுத்து துப்ப இதற்குமேல் அவனை சோதிக்கவேண்டாம் என சிறு தோள் குலுக்கலுடன் காரை நோக்கி நடந்தான் ஆரவ்.
காரில் ஏறி அமர்ந்ததிலிருந்து அர்ஜூனின் மனம் ஒரு நிலையில் இல்லை. அதை உணர்ந்த ஆரவ் ட்ரைவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வர அர்ஜூனுக்கு தான் தலைவலி அதிகமாகியது.
“ஏன்டா எப்போ பார்த்தாலும் பேசிட்டே இருக்க? கொஞ்ச நேரம் அமைதியா வாயேன். தலைவலி தாங்கமுடியலை…”
இதையெல்லாம் ஆரவ் கண்டுகொண்டால் தானே? தனக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது போல கர்மசிரத்தையாக டிரைவரிடம் மீண்டும் பேச்சை வளர்க்க,
“உன்னை யார் அவன்கிட்ட கார்க்கு சொல்ல சொன்னது? நமக்கு வேற காரே கிடைக்காதா?…”
“சிங்கம் ஓவரா சீறுதே? சிக்கிடாத ஆரவ்…” என தனக்குள் முணுமுணுக்க,
“கேட்டா பதில் சொல்லனும்…” என மீண்டும் உறும,
“நான் ஒன்னும் விக்ரம்கிட்ட கேட்கலை. நாம வரோம்னு பேப் தான் சொல்லிருக்கா. உனக்கு வேணும்னா அவகிட்டையே கேட்டுக்கோ. சும்மா என்னை போட்டு பிறாண்டாதே. சின்னப்பையன்னு கூட பார்க்காம இப்படி படுத்துற என்னை?…” எனவும் அவனது நடிப்பை பொறுக்கமுடியாமல் பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது அர்ஜூனிற்கு.
இவனோட அலும்புக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டு இருக்கே என தனக்குள்ளே புலம்பியவன் மறந்தும் வாய்விட்டுவிடவில்லை. இல்லையென்றால் அதற்கும் ஆரவ் ஆடிவிடுவானே.
சிக்னலில் கார் நிற்க தனது பார்வைகளை வெளியே அலையவிட்டிருந்த ஆரவ்வின் விழிகளில் ரசனையுடன் கூடிய உற்சாகம் ததும்பியது.
“வாவ்… வாட் எ க்ளாசிக்கல் ப்யூட்டி?…” என கூச்சலிட அவனின் சத்தத்தில் அர்ஜூன் என்னவென பார்த்தான்.
“அஜூ அங்க பாரேன். அந்த பொண்ணு செம அழகுல?…” தனக்கு பக்கவாட்டில் நின்றிருந்த காரை அர்ஜூனிடம் காண்பித்தான்.
“உன் கண்ணுக்கு யார் தான்டா அழகா தெரியலை சக்கு?…” என கேட்டுக்கொண்டே அங்கே பார்த்தான்.
காரின் உள்ளே ஒரு பெண் இன்னொரு பெண்ணின் தோளில் தலைசாய்ந்து உறங்கிக்கொண்டிருக்க ஆரவ் சொன்னது போல அவள் அழகுதான் என தோன்றியது அர்ஜூனிற்கும்.
அப்போதுதான் அவளது கோலம் கண்ணில் பட அதில் துணுக்குற்றவன்,
“லூஸு சக்கு, அது கல்யாணப்பொண்ணு போல இருக்குடா. என்ன பழக்கம் இது? திரும்பு நீ முதல்ல…” என கடிய ஏனோ ஆரவ்வினால் அவ்வளவு எளிதாக விழிகளை அகற்ற முடியவில்லை.
“ஏன்டா டக்கு அப்படி நினைக்கிற? அது எதாச்சும் டான்ஸ் காம்படீஷன்க்கு கூட இது போல மேக்கப் பண்ணிருக்கலாமே?…” தனக்கு சாதகமாக வாதாட,
“சிக்னல் போட்டாச்சு. பேசாம வா…” என அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்க ஆரவ்விற்கு மனமே தாளவில்லை. ஆனாலும் ஏனோ அமைதியாகிவிட்டான்.
அவனது இயல்பிற்கு மாறான இந்த அமைதி அர்ஜூனை யோசனைக்குள்ளாக்கியது. ஆரவ் எப்போதும் பெண்களை ரசிப்பவன். அதை அவர்களிடமே நேர்மையாக வெளிப்படுத்தவும் செய்வான்.
பெண்களிடத்தில் நட்புடன் பழகினாலும் அதை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைப்பனிடத்தில் அதற்கு மேல் ஒரு வழிசல்களையோ வார்த்தைகளையோ அவனிடமிருந்து எதிர்பார்க்கமுடியாது.
அப்படிப்பட்டவன் இன்று ஒரு பெண்ணை பார்த்ததுமே அழகு என்று சொன்னது வரைக்கும் சரி. அதற்கு மேல் அவளை கல்யாணபெண்ணாக ஏற்றுக்கொள்ளாமலும், அப்படி இருக்காது என வாதிட்டதும், இப்போது அமைதியாகிவிட்டதும் அர்ஜூனின் மனதில் நெருடியது.
ரிசப்ஷன் போனதும் தானாக சரியாகிவிடுவான் என எண்ணியவனது நினைவில் விக்ரம் வந்து அமர இவனிற்கும் முகம் இறுகியது. எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் பிடிவாதம் பிடிக்கிறானே என்று.
ரிசப்ஷன் ஹாலுக்கு வெளியே விக்ரம் நிற்க, “தங்களுக்காக தான் காத்திருக்கிறானோ? தாங்கள் வந்து இறங்கியதுமே இப்படி வரவேற்கிறானே?”
இதை எண்ணிக்கொண்டே விக்ரமை பார்க்க அவனோ ஆரவ்வை தழுவி விட்டு இவனையும் அணைத்து விடுவிக்க ஏனோ அவனை போல சிரித்தமுகமாக அதை ஏற்க முடியாமல் பெயருக்கு சிரித்துவைத்தான் அர்ஜூன்.
“எப்டி இருக்கடா ஆரவ்?… என்றவன் அர்ஜூனிடம் திரும்பி,
“நீங்க எப்படி இருக்கீங்க அர்ஜூன் ஸார்?. நேத்து கல்யாணத்துக்கே வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்…” என நலம் விசாரிக்க முகம் கடுத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் இருக்க பிரயத்தனப்பட்டுகொண்டே தலையை ஆட்டினான்.
அவன் மட்டும் ஆரவ், நான் என்ன கிழவனா? என்னை ஸார் சொல்லி தள்ளி வச்சு பேசறான்? என உள்ளுக்குள் பொரும,
“அவன் சகஜமா பேசினா மட்டும் நீ அவனோட கலகலப்பா பேசிடுவியா? இப்போ மரியாதை குடுக்கனுமா? வேண்டாமா? உனக்கு எது இஷ்டம்?…” அவனது மனசாட்சி இடித்துரைத்தது.
“ஏன் விக்ரம், உள்ள வேலையை வச்சிட்டு இங்க எங்களை ரிஸீவ் பன்றது ரொம்ப முக்கியமா? எங்களுக்கு வர வழி தெரியாதா? தங்கச்சி ரிசப்ஷன்ல கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சைட்டா அடிச்சிட்டு இருக்க?…” என கண்ணடித்து ஆரவ் கேட்டான்.
என்ன விக்ரம் சைட்டடிக்கிறானா? என ஒரு நிமிடம் வானத்துக்கு சந்தோஷமாக எகிறி குதித்த அர்ஜூனின் மனதை அடுத்த நொடி கீழே இழுத்து போட்டது விக்ரமின் பதில்.
“என்னை பத்தி உனக்கு தெரியாதா ஆரவ்? தெரிஞ்சும் நீயே கிண்டல் பன்றியே?…” என அர்ஜூனை சங்கடமாக பார்த்துக்கொண்டே ஒருவித வருத்தத்தோடு பேசினான்.
அர்ஜூனின் முகம் இறுகியதை பார்த்த ஆரவ் இவனுக்கு இன்றைக்கு இது போதும் என நினைத்துக்கொண்டே,
“சரி வா. உள்ளே போகலாம். இங்கயே பேசி இப்டியே அனுப்பிடலாம்னு பார்த்தியா என்ன?…” அர்ஜூனையும் இழுத்துக்கொண்டே உள்ளே நுழைய அர்ஜூன் ஆரவ்வை ஆச்சர்யமாக பார்த்தான்.
காரில் இருந்து இறங்கும் வரை வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்ததென்ன? இப்போது இங்கே வாய் கிழிய பேசுவதென்ன? இவனை புரிஞ்சுக்கவே முடியலையே? என நினைத்தான்.
உள்ளே சென்றவன் மேடைக்கு அழைத்துசென்று மணப்பெண்ணான தன் தங்கைக்கும், தங்கையின் கணவனுக்கு அறிமுகப்படுத்திவைத்தான். அர்ஜூனும் ஆரவ்வும், மணமகனுக்கு கைகுலுக்கிவிட்டு கொண்டுவந்திருந்த பரிசுப்பொருளையும் சேர்ப்பித்துவிட்டு மேடையிறங்கினர்.
சாப்பிடும் இடத்திற்கு வந்து ஆளுக்கொரு ப்ளேட்டை கையில் எடுத்துக்கொண்டு தங்களுக்கு தேவையான உணவுகளை தாங்களே எடுத்துக்கொள்ள ஆரவ் அர்ஜூனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு விக்ரமிடம் பேச்சை வளர்த்துக்கொண்டே,
“ஹ்ம் அப்புறம் விக்ரம் சார்க்கு எப்போ மேரேஜ்? அடுத்து உன்னோட கல்யாணத்துக்கு தான் நாங்க வருவோம் இல்லையா?…”
ஆரவ் என்னவோ அவனையும் மீறி அதை எதார்த்தமாக தான் கேட்டுவைத்தான். ஆனால் விக்ரம் அதை வில்லங்கமாக பேசிவைத்து அர்ஜூனின் ரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொண்டே சென்றான். அதில் ஆரவ்விற்கே கோவம் தான்.
“ஏன் ஆரவ்? என்னோட முடிவை நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே? திரும்ப அதை பத்தி ஆரம்பிக்கிற?…” என்றவன் சிறிது யோசித்து,
“ஆரவ் ஸ்டெபிக்ஷா எதாச்சும் சொன்னாங்களா?, இன்னைக்கு வருவாங்கன்னு எதிர்பார்த்தேன்…” என்றதும் கொலைவெறியாகிப்போனான் அர்ஜூன்.
கையில் வைத்திருந்த தட்டை அப்படியே அங்கேயே வைத்துவிட்டு விடுவிடுவென தூரமாக போய் அமர்ந்துவிட்டான்.
தன் முன்னாலே ஆஷாவை பேசுகிறான் இந்த விக்ரம்? எவ்வளவு தைரியமிருக்கும் இவனுக்கு? தன்னால் எதுவும் செய்யமுடியாமல் அமைந்துவிட்ட சூழ்நிலையை எண்ணி தன்னையே வெறுத்தான்.
இதெற்கெல்லாம் ஒருவகையில் தானே காரணம் ஆகிவிட்டோமோ என குமைந்தவனுக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் ராகவ் கேட்டுகொண்டதற்காக இங்கே வந்துவிட்டு வந்ததும் கிளம்பினால் அவருக்கு அவருடைய சொல்லுக்கு மரியாதையாக இருக்காதே என கொஞ்சம் பொறுமை காத்தான்.
தூரத்தில் பார்த்தால் ஆரவ் விக்ரமிடம் ஏதோ சொல்வதும் அதற்கு விக்ரம் பவ்யமாக தலையசைப்பதும் மட்டுமே தெரிந்தது. ஆரவ் என்ன சொல்லியிருக்க கூடும் என ஊகித்தவன்,
“இவன் இருக்கிறானே? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் ரகம்” என எண்ணினான். நண்பனை நினைத்து அர்ஜூனின் இதழ்கள் புன்னகையில் நெளிந்தன.
பின் ஆரவ் மட்டும் இரண்டு ப்ளேட்களுடன் தன்னிடம் வந்து,
“ஓவரா சீன போடாத டக்கு. என் பேபியை அவன் விசாரிச்சா உனக்கு என்னவாம்? ஒதுங்கி போய்டு. உரசி பார்க்காத. மீறின பட்டர் நாண் கிடைக்காது…” என டயலாக் அடித்துவிடவும் அவனது பாவனையில் அர்ஜூன் முகம் மலர்ந்து சிரித்தவாறே ஆரவ்வின் முதுகில் ஒரு அடி வைத்தான்.
“அடங்கமாட்டியாடா நீ?…” என பொங்கி சிரிக்கவும்,
“ஹப்பா சிரிச்சாச்சா. இப்போ சாப்பிடு. எனக்கு ரொம்ப பசிக்குது. எங்க நீ கோவத்துல கொட்டிக்காம போய்டுவியோன்னு நினச்சேன்…”
அர்ஜூனுக்கு ஒரு தட்டை நகர்த்தியவாறே தானும் சாப்பிட ஆரம்பித்த நண்பனின் மேல் எப்போதும் போல அன்பு கட்டுகடங்காமல் பெருகியது.
தன்னுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாதவன் ஆரவ். தனக்கொரு உயிர்ப்பை கொடுத்தவன். எந்த சூழ்நிலையிலும் தன்னை விட்டுகொடுக்காதவன், அதே நேரம் தான் செய்யும் தவறை முகத்திற்கு நேரே எடுத்துக்காண்பித்து அதற்கான தண்டனையும் அளிப்பவன் என்றும் இதே புன்னகையோடு இருக்கவேண்டும் என பிராத்தித்துக்கொண்டான் அர்ஜூன்.
சிறிது நேரம் இருவரும் அளவளாவிக்கொண்டே உண்டு முடித்திருக்க விக்ரம் அவர்களிடையே வந்தமர்ந்தான். அர்ஜூனிடம் பார்வையாலேயே வருத்தத்தை தெரிவித்துவிட்டு,
“ஆரவ் ராகவ் அங்கிள் இப்போதான் அப்பாக்கிட்ட பேசினாங்க. நீங்க கிளம்பியாச்சான்னு கேட்டாங்க…”
“ஓஹ் இதோ கிளம்பவேண்டியது தான் விக்ரம்…” என்றவனிடம் அப்படியே விட்டிருக்கலாம் இந்த விக்ரம்.
“ஏன் ஆரவ் கேட்கிறேன்னு தப்பா நினச்சுக்காத. சில வருஷத்துக்கு பின்னால தமிழ்நாட்டு பக்கம் வந்திருக்கிற. இந்த நேரத்துலயாவது தஞ்சாவூர் போகலாமில்லையா? இன்னும் உனக்கென்ன பிடிவாதம் ஆரவ்?…”
அவ்வளவு தான் அதுவரை சகஜமாக பேசிக்கொண்டிருந்த ஆரவ்வின் முகம் கோபக்கனலை கொட்டியது. பேச விருப்பமில்லாதவன் போல ஒரு விரலை நீட்டி விக்ரமை எச்சரித்தவன் தனது கையை பிடிக்கவந்த விக்ரமின் கரத்தை உதறிவிட்டு வெளியேறிவிட்டான்.
அர்ஜூனின் முன்னால் தனக்கும் ஆரவ்விற்கும் நெருக்கத்தை காண்பிக்க முயன்று மூக்குடைபட்டான் விக்ரம்.
ஆரவ்வின் மனநிலை இப்போது எப்படி இருக்குமென அர்ஜூனால் உணரமுடிந்தது. செய்வதறியாது திகைத்து நின்ற விக்ரமை பார்க்கும் போது சிறிது நேரத்திற்கு முன்னால் அவன் ஆஷாவை பற்றி பேசியதையும் ஞாபகத்தில் கொண்டுவந்த அர்ஜூன்,
“மிஸ்டர் விக்ரம் உங்களுக்கு எப்போதுமே அடுத்தவங்களோட உணர்வுகளை புரிஞ்சுக்காம அவங்களை ஹர்ட் பன்றது தான் பொழுதுபோக்கா?…” எனவும்,
“நோ நோ அர்ஜூன் ஸார். நான் அப்படி நினைக்கலை. அது ஆரவ்வின் மேல உள்ள அக்கறையில தான் பேசினேன்…” குரல் கம்மிப்போய் வந்தது.
“ரொம்ப அக்கறை தான் உங்களுக்கு. நானும் கொஞ்ச நாளா உங்களை வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன். நீங்க செய்யிற எதுவும் சரியில்லை. முதல்ல அடுத்தவங்க பர்சனல் விஷயத்துல தலையிடற பழக்கத்தை நீங்க நிறுத்திக்கோங்க. புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன்…”
“எனக்கு ஆஷாவும், ஆரவ்வும் வேற வேற இல்லை. உங்களால அவங்க கஷ்டபட்டாங்கன்னு தெரிஞ்சது இந்த அர்ஜூனோட இன்னொரு முகத்தை நீங்க பார்க்கவேண்டியதிருக்கும். அது உங்களுக்கும் உங்க ஃபீல்டுக்கும் நல்லதில்லை…”
“எல்லை மீறி போனா எழுந்துக்க முடியாத அளவுக்கு அடிச்சிட்டு போய்ட்டே இருப்பேன். ஆரவ்க்கு என்ன செய்யனும், தஞ்சாவூர்க்கு அவனை எப்போ எப்படி கூட்டிட்டு போகனும்னு எங்களுக்கு தெரியும். அதுக்கு அவனோட குடும்பத்து ஆளுங்க நாங்க இருக்கோம்…”
அர்ஜூனின் பேச்சில் வெடவெடத்து போய் நின்றான் விக்ரம். ஆரவ்வையும் அர்ஜூனையும் அனுப்ப வந்த விக்ரமின் தந்தை இதையனைத்தையும் கேட்டுகொண்டு தான் இருந்தார்.
“இல்லை மிஸ்டர் அர்ஜூன். இனி என்னோட பையன் உங்க வீட்டு விஷயத்துல தலையிடவே மாட்டான். என்னை நம்பலாம் நீங்க. நான் சொல்லிவைக்கிறேன் அவன்கிட்ட…”
திடீரென வந்த அவரை பார்த்ததும் அர்ஜூனிற்கு சங்கடமாக தான் போனது. ஆனாலும் அதை வெளிக்காட்டிகொண்டால் அவன் அர்ஜூன் அல்லவே.
“புரிஞ்சதுக்கு தேங்க்ஸ். நாங்க கிளம்பறோம்…” என கூறிவிட்டு நகர,
“இருங்க அர்ஜூன். ராகவ் சார் கால் பண்ணினாங்க. உங்களுக்கு ஒரு கார் அரேஞ்ச் பண்ணி குடுத்துவிட்ட சொன்னாங்க பெங்களூர் கிளம்பறதுக்கு. கார் ரெடியா இருக்கு…” என்றவரிடம் எப்படி மறுப்பது என யோசிக்கையில் ஆரவ் மீண்டும் உள்ளே வந்தான்.
“நமக்கு எந்த காரும் வேண்டாம் அஜூ. வா கிளம்பலாம். டாடிகிட்ட நான் பேசிப்பேன்…” என வம்படியாக அவனை இழுக்க அதே நேரம் ஆரவ்விற்கு ராகவ் மொபைலில் அழைத்தார்.
அதை அட்டென் செய்யாமல் அர்ஜூனின் கைகளில் திணித்துவிட்டு வெளியேறிவிட்டான். அவனிற்கு தெரியும் தாங்கள் காரில் தான் செல்லபோகிறோம் என்று. அதனால் ஒன்றும் பேசாமலே வெளியில் சென்று நின்றுகொண்டான்.
அழைப்பை ஏற்று பேசிய அர்ஜூன்,” ஓகேப்பா, நாங்க கார்லயே கிளம்பறோம். நத்திங். நான் நேர்ல வந்து பேசறேனேப்பா…” எனவும் ராகவ் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தொடர்பை துண்டித்துவிட்டார்.
தன்னிடம் ஆரவ் பேசாமல் அர்ஜூன் பேசுவதை வைத்து புரிந்துகொண்ட ராகவ் ஏதோ பிரச்சனை என்று மட்டும் உணர்ந்துகொண்டார். மகன் மனம் வருத்தப்படும் படி ஏதோ நடந்திருக்கிறது, இப்போது கேட்டாலும் சொல்லமாட்டான். அர்ஜூன் வரவும் பேசிகொள்வோம் என எண்ணிகொண்டார்.
கோவமாக இருக்கும் போது மட்டும் தன் மகன் தன்னிடம் பேசுவதை எப்போதுமே தவிர்த்துவிடுவான். அவனுக்கு பதிலாக அர்ஜூன் தான் பேசுவான். சிறுவயதிலிருந்து இன்றுவரை அதை தொடர்ந்துகொண்டிருப்பவனை நினைத்து சிரித்துகொண்டார் ராகவ்.
விக்ரமின் தந்தையிடம் கார் சாவியை பெற்றுக்கொண்ட அர்ஜூன் அவனை முறைத்துவிட்டு வெளியில் செல்ல அவனோடு விக்ரமின் தந்தையும் பின்தொடர்ந்து வந்தார்.
“மனசுல எதையும் வச்சுக்காதீங்க தம்பி. அவன் சின்னபையன் ஏதோ தெரியாம உளறிட்டான். நான் சொல்லிவைக்கிறேன் ப்ளீஸ்…” என்றவரிடம்,
“அச்சோ அங்கிள் நீங்க ஏன் அவனுக்காக ப்ளீஸ் சொல்றீங்க? இனிமே அவனை கவனமா இருக்க சொல்லுங்க. விடுங்க. நாங்க கிளம்பறோம்…” என்று காரில் ஏறியவன் அவரிடம் ஒரு தலையசைப்பை காட்டிவிட்டு மறந்தும் விக்ரமின் பக்கம் திரும்பவில்லை.
இதுதான் அர்ஜூனிற்கும் ஆரவ்விற்கும் உள்ள வித்யாசம். விக்ரம் போன்ற ஆட்கள் யாரிடமும் தவறு தன் மீதே இருந்தாலும் தழைந்து போக விரும்பமாட்டான் அர்ஜூன். ஆனால் ஆரவ் தவறு தன் மீதென்றால் யாராகின் இருப்பினும் மன்னிப்பை கேட்க தவற மாட்டான்.
இருவரும் ஹோட்டலை அடைந்து அங்கிருக்கும் தங்களுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு தங்கியிருந்த ரூமை செக்அவுட் செய்துவிட்டு பத்தரை மணிபோல வெளியேறியவர்கள் சென்னை சாலைபோக்குவரத்தில் கலந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
ரிசப்ஷன் ஹாலை விட்டு கிளம்பிய சில நிமிஷங்களிலேயே தன் இயல்பிற்கு திரும்பிய ஆரவ் மீண்டும் சலசலத்துகொண்டே வர அதில் நிம்மதியுற்றான் அர்ஜூன்.
காரை ஓட்டிகொண்டிருந்த ஆரவ் என்னதான் சாலையில் கவனத்தை வைத்திருந்தாலும் ஒவ்வொரு சிக்னலிலும் தனது விழிகளை சுழற்றி மாலை தான் பார்த்த அந்த காரும் காரில் இருந்த பெண்ணும் தென்படுகின்றனரா என தேடி துழாவினான்.
தன் மனம் போகும் திசையை அவனாலேயே உணரமுடியவில்லை. ஏன் அவளை இப்படி தேடுகிறோம் என்னும் கேள்விக்கு விடை தெரியாமலேயே தனது தேடலை தொடர்ந்தான்.
அர்ஜூனும் அவனை கவனித்தவண்ணம் தான் வந்தான். ஆரவ்வை தெரியாதா அவனுக்கு. காரில் பார்த்த பெண் ஏதோ ஒரு விதத்தில் ஆரவ்வின் மனதில் ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறாள். அவளால் ஆரவ் சலனப்படிருக்கிறான். அதை அவனாக சொல்லட்டும் என அமைதிகாத்தான்.
இது புரியவைக்க கூடிய விஷயமில்லை. அவனாக உணரவேண்டியது. இது வெறும் ஈர்ப்பா? இல்லை அதற்கும் மேலானதா என அவனே ஆராய்ந்து தானாக தெளியவேண்டிய விஷயம். இதில் தான் தலையிட்டு எதையும் குழப்பவேண்டாம் என நினைத்து அவனிடம் பேச்சுகொடுத்தவாறே வந்தான்.
நள்ளிரவை நெருங்கும் வேளையில் ஆள் அரவமற்ற அந்த சாலையில் ஒருசில வாகனங்கள் சென்றுகொண்டுதான் இருந்தன. காரின் லைட் வெளிச்சத்தில் தூரத்தில் தனது பார்வையை அர்ஜூன் கூர்மையாக்க,
“டேய் டக்கு அந்த பொண்ணை பார்த்தாலும் பார்த்தேன். எல்லா இடத்திலையும் அவ என்னை பார்த்து ஓடி வரமாதிரியே பீல் ஆகுதுடா…”
“என்னடா உளர்ற?…” அர்ஜூனின் முகத்தில் இருந்த அதிர்ச்சியை கவனியாத ஆரவ்,
“அங்க பாரேன். அவ நம்ம காரை பார்த்து ஸ்லோமோஷன்ல ஓடி வரா…”
“டேய், அந்த பொண்ணு நிஜமாவே தலைதெறிக்க ஓடிவருதுடா மடையா, காரை நிறுத்து…” என ஆரவ்வை பிடித்து உலுக்க அர்ஜூன் சொன்னது போல அவளும் முகம் முழுவதும் பரவிய கிலியோடு காரை நெருங்கிவிட்டாள்.
காரை நிறுத்திவிட்டு இருவருமே வேகமாக கீழிறங்க அந்த பெண் மூச்சிறைக்க இருவரையும் மாறி மாறி பார்த்தவள்,
“அண்ணா…” என திணறிக்கொண்டே அழைக்க அந்த அழைப்பு தன்னை பார்த்தோ என பயந்த ஆரவ் வேகமாக அர்ஜூனை அவளின் முன்னால் இழுத்து நிறுத்தி தான் பக்கவாட்டில் நின்றுகொண்டான்.
“டக்கு உன்னை தான் உன் தங்கச்சி அண்ணான்னு கூப்பிடுது…” என படபடப்பாக கூறியவனை பார்த்து அந்த நேரத்திலும் அர்ஜூனிற்கு சிரிப்பு வந்தது.
சூழ்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து, “முதல்ல தண்ணி எடுத்துட்டு வாடா, பேசமுடியாம இருக்குது பாரு…”
“எனக்கு எதுவும் வேண்டாம். என்னை துரத்துறாங்க. காப்பாத்துங்க அண்ணா ப்ளீஸ்…” கண்ணீரோடு கை கூப்பியவளை அள்ளி அணைத்துக்கொள்ள ஆறுதல் சொல்ல துடித்தான் ஆரவ்.
மாலை பார்த்த அதே கல்யாணக்கோலத்தில் தான் இன்னமும் இருந்தாள்.
“முதல்ல நீ யாரும்மா? யார் உன்னை துரத்துறது? நீ எங்க போகனும்?…” என கேள்விகளை அடுக்கியவனை விடுத்து பார்வையால் சுற்றுபுறம் பார்த்தவளது விழிகளில் ஏகத்துக்கும் பீதி நிறைந்திருந்தது.
“என்னோட பேர் நிலாமுகி…”
அவளது பெயரை தனக்குள் கூறிப்பார்த்தான் ஆரவ். உள்ளம் வரை இனித்தது. அவனது முகபாவனைகளை கவனியாமல் அர்ஜூன் நிலாமுகியிடம் மட்டுமே கவனம் வைத்திருந்தான்.
“இன்னைக்கு காலையில எனக்கு கல்யாணம் நடக்கவேண்டியது. அதுக்குள்ளே என்னை கடத்திட்டாங்க அண்ணா…” எனவும்,
ஆரவ் மனதினுள், “நல்லவேளை கல்யாணம் ஆகலை. பரவாயில்லை நமக்காகவே பயபுள்ளைங்க கன்பாய்ன்ட்ல தூக்கிருக்கானுங்க. ஆனாலும் என் டார்லியை இப்டி பயம் காட்டினதுக்கு வச்சிக்கறேன் அவனுங்களை…” என சபதமெடுத்துக்கொள்ள,
“கடத்தினது யார்ன்னு எனக்கு தெரியலை. என்னோட ஊர்…” என கூறி அடுத்த வார்த்தை பேசும் முன் “நங்” என்னும் சத்தத்துடன் ஆரவ்வின் முகத்தில் சூடான ரத்தத்துளிகள் தெறித்தன.