தேடல் – 5
நிலாமுகி ஆரவ்வின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு மாதம் கடந்தது. இன்னமும் அனைவரது கண்காணிப்பில் தான் இருந்து வருகிறாள் நிலா.
இன்னமும் எதற்கு அவளை ஹாஸ்பிட்டலில் வைத்திருக்க வேண்டும் என்றும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் ஆரவ் பிடிவாதம் பிடிக்க அவ்வப்போது நிலாமுகிக்கு வரும் தலைவலியை காரணம் காட்டினார் ராகவ்.
உண்மையும் அதுவே. நிலாமுகி தலையில் ஏற்பட்ட காயம் சிறிது சிறிதாக ஆறினாலும் அவளுக்கு சில சமயம் மின்னல் வெட்டுவது போன்ற வலி தோன்றி மறைந்துகொண்டிருந்தது. அதனால் மருத்துவமனையிலேயே வைத்திருந்து பிரத்தியோகமாக அவளுக்கு சிகிச்சைகள் குடுத்துகொண்டு தான் இருந்தனர்.
விடிந்ததும் அவளை காண ஹாஸ்பிட்டல் வருபவன் தினம் தினம் அவளிடம் வம்பு வளர்த்துகொண்டு அவளை தன்னுடன் இயல்பாக பேசவைக்க முயற்சி செய்தான்.
எப்போதும் எதையோ யோசித்துக்கொண்டும் விழிகளால் துலாவிக்கொண்டும் தனிமையில் இருக்கும் நிலாவிற்கு அவனது பேச்சுக்களும் பார்வைகளும் பெரும் இம்சையை கொடுத்தன.
பேச்சுக்களை விட அவனது பார்வைகள் தாம் அதிகமாக அவளது மனதிற்குள் ஊடுருவ அது கொடுத்த உணர்வை எதிர்நோக்க முடியாமல் தவித்துபோவாள்.
ஒவ்வொரு நொடியும் தன் காதலை கண்களாலேயே நிலாவிற்கு கடத்த முயன்று தோற்பவன் அவளது மிரண்ட விழிகளில் தன்னையே முழுவதும் இழந்துகொண்டிருந்தான். ஆரவ்வின் இந்த தவிப்பு நாளுக்கு நாள் கூடியதே தவிர குறையவே இல்லை.
ஆரம்பத்தில் அவனின் பேச்சுக்களை, குறும்பான சேட்டைகளை கண்டு மிரண்டு ஒதுங்கியவள் மெல்ல மெல்ல மெல்ல அவனை தன்னையறியாமல் ரசிக்கவும், அவன் வரும் நேரம் எதிர்பார்க்கவும் ஆரம்பித்தாள்.
ஆனாலும் அவளுக்குள் ஒரு தயக்கம். அதுவே ஆரவ்விடம் இயல்பாக நெருங்கவிடாமல் அவளை தடுத்தது.
ஓரளவிற்கு ஸ்டெபிக்கு பின் அவள் பேசுவது ஆரவ்விடம் தான். அதில் அவனுக்குதான் பெருமை பிடிபடவில்லை. அவளது தேடலை உணர்ந்தவன் எதற்காகவும் அவளை தவிக்கவிடாமல் கண்ணுக்குள் வைத்து கவனித்தான்.
நிலாவினால் பேசவும் படிக்கவும் ஓரளவிற்கு முடிந்தது. இது எப்படி என ஸ்டெபியிடம் தான் கேட்டு கேட்டு ஓய்ந்துபோவாள். எத்தனை முயன்றும் அவளது ஞாபகங்கள் சிறிதளவிற்கும் அவளை எட்டவில்லை.
“ஹாய் நிலா, ப்ரேக்ஃபாஸ்ட் முடிஞ்சதா?…” என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த ஸ்டெபியை பார்த்து முகமலர்ந்தவள் அவளின் பின்னால் எப்போதும் வரும் ஆரவ்வை காணாமல் கொஞ்சம் மனம் வாடினாள்.
அதை கண்டும் காணாமல் பார்த்த ஸ்டெபி,
“இவ சீக்கிரம் ஆரவ்வை புரிஞ்சுப்பா. என் நண்பனது காதல் நிச்சயம் வென்றுவிடும்…” மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி ஸ்டெபிக்கு.
“நான் அப்போவே சாப்பிட்டேன் டாக்டர். எங்க உங்களோட இன்னொரு டாக்டர் வருவாங்களே? இன்னைக்கு அவங்க வரலையா?…” கேட்டேவிட்டாள் நிலா.
“ஏன்? அவன்கிட்ட ஏதாவது கேட்கனுமா? (Ambien) …” ஒன்றும் அறியாதவளை போல கேட்ட ஸ்டெபியை பார்த்து திருதிருவென முழித்தாள் நிலா.
உடனே சுதாரித்துகொண்டு, “இன்னைக்கு சண்டே தானே? நீங்க சர்ச்க்கு போகலையா டாக்டர்?…”
பேச்சை மாற்றியவளை பார்த்து புன்னகைத்த ஸ்டெபி உடனடியாக தனது மொபைலில் வாட்ஸ்ஆப்பில் ஆரவ்விற்கு நிலா தேடுவதாக மெசேஜ் ஒன்றை தட்டிவிட்டு,
“போய்ட்டு வந்தாச்சு. இன்னொரு நாள் உன்னையும் கூட்டிட்டு போறேன். என்னோட வருவியா?…” என மெல்ல தூண்டிலை போடவும் குதூகலத்துடன்,
“போகலாமே டாக்டர்…” உடனடியாக சம்மதித்தவள் பின்,
“எனக்கு தான் யாருமில்லையே? நீங்க கூட்டிட்டு போக இங்க சம்மதிப்பாங்களா?…” சற்றே கவலையோடு கூறியவளை பார்த்து ஸ்டெபியின் மனம் கசிய,
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். இந்த ரூம்ல இருந்தே நீ வெளில வர பயப்படற? நீ தைரியமா இருந்தா தானே நானும் உனக்காக ரெக்கமன்ட் பண்ணி வெளியே கூட்டிட்டு போகமுடியும்…”
நிலாவும் யோசித்தாள். ஏனோ அவளுக்கு அந்த அறையை விட பாதுகாப்பு வேறெங்கும் இல்லை என்பது போன்ற ஒரு பிரம்மை. யாரை பார்த்தாலும் ஒருவித பயம். யாரோ தன்னை தாக்க வருவது போன்ற ஒரு உணர்வு. அதனாலேயே அந்த அறையை விட்டு எங்கும் அவள் செல்வதில்லை.
தனக்குள் சிந்தனைவயப்பட்டிருந்தவளை,
“என்ன நிலா? யோசனை பலமா இருக்கு? முதல்ல என்னோட என் ரூம்க்கு வா. நாம ஃப்ரீயா இருக்கும் போது இந்த ஹாஸ்பிட்டல சுத்தி சும்மா ஒரு வாக் போகலாம்…” இன்னமும் தயக்கம் குறையாமல் தான் பார்த்தாள் நிலா.
அதில் பெருமூச்சொன்றை இழுத்து விட்ட ஸ்டெபி, “நிலா, முதல்ல உன்னை நீயே தைரியப்படுத்திக்க. எல்லா சூழ்நிலையையும் பழக்கப்படுத்திக்க. எத்தனை நாள் உள்ளயே அடைஞ்சு கிடக்கலாம்னு பார்க்கிற?…”
ஸ்டெபி சொல்வதும் சரிதானே. இன்று அவளோடு சென்றுதான் பார்ப்போமே என நினைத்தவள் அரைமனதாக தலையாட்டியதும் ஸ்டெபி உடனடியாக அவளது கைகளை பிடித்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
அறையை தாண்டவுமே நிலாவின் கைகள் நடுங்க, கால்கள் வெடவெடக்க ஸ்டெபியின் கைகளை இறுக பற்றிகொண்டாள். அதிலேயே நிலாவின் மனநிலையை உணர்ந்த ஸ்டெபி அவளை ஆறுதலாக தன்னோடு அணைத்தவாறே நடக்க ஆரம்பித்தாள்.
“நாம ரூம்க்கு போய்டலாமா டாக்டர். என்னை யாரோ பார்க்கறாங்க. எனக்கு பயமா இருக்கு. என்னை அடிச்சுடுவாங்களோ?..”
நிலா சில நேரங்களில் இப்படித்தான் அவ்வப்போது கூறுவதால் ஸ்டெபிக்கு அவள் கூறுவதொன்றும் புதிதல்ல. அந்த சம்பவம் எந்தளவிற்கு அவள் மனதில் வேரோடி இருக்கிறது என்பதை உணர்ந்தவளது மனம் கனத்துப்போனது.
தன்னை யாரோ அடித்த சம்பவம் மட்டுமே அவளது நியாபாகத்தில் நிலைத்திருக்கிறது என்பது தெரிந்த ஆரவ் அவர்கள் யாராக இருக்கும் என வெறித்தனமாக தேடிக்கொண்டிருக்கிறான்.
நிலாவின் ஞாபகங்கள் என்றைக்கு திரும்புகிறதோ அன்றைக்குத்தான் இந்த பயமும் அவளை விட்டு போகுமோ? அதனால் அவளது மனநிலை பாதிக்குமோ? என அஞ்சி அதிலிருந்து அவளை வெளிக்கொணர முயன்றுகொண்டிருக்கின்றனர் அனைவரும்.
வழியில் வரும் அனைவரும் ஸ்டெபிக்கு வணக்கத்தை வைத்துவிட்டு நிலாவையும் ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டே கடக்க எப்போதடா ஸ்டெபியின் அறை வரும் என ஆயாசம் ஆனது நிலாவிற்கு.
ஒருவழியாக லிப்டில் ஏறி இரண்டாம் தளத்தில் இறங்கி ஸ்டெபியின் அறைக்குள் நுழைய அங்கே ஆரவ் அர்ஜூனின் கன்னத்தை இரு கைகளாலும் பற்றிக்கொண்டே முத்தமிடுவது போல நின்றான்.
அதிர்ந்த நிலா ஸ்டெபியை திரும்பி பார்க்க அவளுக்கோ தாங்கள் வரும் அரவத்தை உணர்ந்தும் திரும்பாமல் நின்ற ஆரவ்வை பார்த்து கடுகடுத்துக்கொண்டே,
“ஆரவ்…” என பற்களுக்கிடையே அவனது பெயரை கடித்து துப்பினாள். அவனோ திரும்பியும் பாராமல் அர்ஜுனையும் பார்க்கவிடாமல்,
“பேப், நீ கொஞ்சம் நேரம் கழிச்சு வா. ட்ரையல் பார்க்கும் போது டிஸ்ர்டப் பண்ணாதே…” என கூறிவிட்டு,
அர்ஜூனிடம், “டேய் டக்கு அசையாத அசையாத…” என அர்ஜூனை அழுத்தி பிடித்துகொண்டிருந்தான்.
“இவனை…” என தலையில் அடித்துக்கொண்டே அவர்களை நெருங்கி ஆரவ்வின் முதுகில் ஒரு போடு போட்டாள்.
“கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா பேப்? உன்னை யார் இந்நேரம் வர சொன்னது? கரடி மாதிரி..” பேசிக்கொண்டே திரும்பியவனது விழிகளில் நிலாவின் பிம்பம் விழ அவளை பார்த்து அசடு வழிந்தான் ஆரவ்.
அவளோ, “அவனா நீ…” என்னும் எண்ணத்தில் இவனை நோக்க அதை புரிந்தது போல அவ்விடம் விட்டு அர்ஜூனையும் இழுத்துகொண்டு நகர்ந்தவன் மீண்டும் ஸ்டெபியிடம் திரும்பி அவளது கைகளில் ஒரு பேப்பரினை திணித்து,
“பேப் இந்த பேப்பர்ல சைன் பண்ணிடு…” என்றதும் பொங்கிவிட்டான் அர்ஜூன்.
“மண்ணாங்கட்டி. ஒன்னும் பண்ணவேண்டாம். ஆஷா அந்த பேப்பரை குடு…” என அதை பிடுங்கி சுக்கு நூறாக கிழித்தெறிந்துவிட்டு ஆரவ்வையும் இழுத்துகொண்டு சென்றுவிட்டான் அர்ஜூன்.
“நீ உள்ள வா நிலா. நீ தப்பா எடுத்துக்காதே. அவன் எப்போவும் அப்படித்தான். விளையாட்டுத்தனம் கொஞ்சம். நாங்க எல்லோருமே ப்ரெண்ட்ஸ். சின்ன பிள்ளையில இருந்து ஒண்ணா படிச்சவங்க. அதான்…”
சமாதானம் சொல்லிகொண்டே அவளை தன் எதிர் இருக்கையில் அமரவைத்துவிட்டு குடிக்க தண்ணீர் குடுக்க அதை வாங்காமல் நிலாவோ தன் முன் டேபிளில் இருந்த நேம் போர்டை வெறித்தாள்.
அதை புரிந்த ஸ்டெபி, “நிலா…” என அழுத்தமான குரலில் அழைக்க,
“மிசஸ். ஸ்டெபிக்ஷா அர்ஜூன்…” கண்களில் கேள்வியோடு ஸ்டெபியை நோக்கி அதை விட அழுத்தமாக வாசித்தாள் நிலா.
“ஹ்ம், ஆமா நானும் அர்ஜூனும் ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப். இப்போ பிரிந்து வாழ்கிறோம்…” இதை சத்தியமாக நிலா எதிர்பார்க்கவே இல்லை.
பெயரை பார்த்ததும் முதலில் அதிர்ந்த நிலா அர்ஜூன் என்று இவர் ஒருவர் தான் இருப்பாரா? இது வேறு ஒருவராக இருக்கலாம் என நினைக்க ஸ்டெபி அதை உடைத்துப்போட்டாள்.
அப்போது தான் ஏற்கனவே நிலாவின் கண்களில் விழுந்தது இப்போது கருத்திலும் பதிந்தது. அது ஸ்டெபியின் நெற்றியில் உள்ள சிறு பொட்டு. இன்னும் ஆழ்ந்து பார்க்க வகிட்டிலும் சிறிதளவு குங்குமம் இருக்க ஸ்டெபியின் சுருண்ட முடி அதை மறைத்துக்கொண்டு படிந்து பரவி இருந்தது.
தானாக மறைக்க எதுவும் இல்லாதது போல் இயற்கையாகவே வகிட்டு குங்குமத்தை மறைக்கும் விதமாக அடர்ந்த சுருண்ட கூந்தல் அதை மறைத்துகொண்டிருந்தது.
பிரிந்து வாழும் காரணம் ஏனென்று கேட்க மனம் விழைந்தாலும் தனக்கு தேவையில்லாதது என தனக்கு தானே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு ஸ்டெபியை பார்த்தாள் நிலா. அவளோ சாதாரணம் போல முகத்தை வைத்து புன்னகைக்க தானும் தெளிந்தாள்.
“ரூம் லாக் பண்ணாமலே இருக்குதே டாக்டர்? வேற யாராச்சும் மிஸ்யூஸ் பண்ணிடுவாங்களே?…” ஏதாவது பேசவேண்டும் என்றுதான் கேட்டாள்.
“இல்லை நிலா. இந்த ரூம் நான், அப்பா, ஆரவ், அர்ஜூன் தவிர வேறு யாராலும் ஓபன் பண்ணமுடியாது. எங்களோட ஃபிங்கர் பிரின்ட் மேச்ட் ஆனாதான் ஓபன் ஆகும். என்னோட ரூம் மட்டுமில்ல. அவங்க ரூமும் அப்டிதான்…”
விளக்கம் போதுமா என்பது போல் நிலாவை பார்க்க அவள் இன்னமும் அமைதியாகவே இருந்தாள்.
பின் கொஞ்சம் பேசி கொஞ்சம் சிரித்து ஸ்டெபியின் சிறு வயது நினைவுகளை நிலாவிடம் அவள் பகிர்ந்து நேரம் செல்வது தெரியாமல் உரையாடி மிக அருகில் நெருங்கிவிட்டனர். அதன் பின் நிலாவை தன்னுடன் சாப்பிட வைத்து அவளறைக்கு கொண்டுவிட்டு பின் ஆரவ்வை தேடி சென்றாள் ஸ்டெபி.
அங்கே அர்ஜூன் ஒரு புறம் முறைத்துக்கொண்டிருக்க ஆரவ் சாவாதானமாக அமர்ந்து அவனையே பார்த்துகொண்டிருந்தான்.
“ஏன் ஆரவ் என்ன பண்ணிவச்ச? அவர் கோவமா இருக்காரு…” என்றதும் அர்ஜூன் எழுந்து ஸ்டெபியை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான். அவனது முகத்தில் தெரிந்த வெறுமையும் கலக்கமும் ஸ்டெபியை கொல்லாமல் கொன்றது.
“அவனை விடு. என்ன சொல்றா என்னோட ஆளு? தேடினான்னு மெசேஜ் அனுப்பின? உண்மையாவா?…”
“ஹ்ம் ஆமா. மெசேஜ் பார்த்ததும் நீ வருவன்னு பார்த்தேன். நீ என்னடான்னா என்னோட ரூம்ல இருக்க. என்னடா நடந்துச்சு அங்க? அய்யனார் முறுக்கிட்டு போற அளவுக்கு என்ன பண்ணின? அது என்ன பேப்பர்?…”
சகட்டுமேனிக்கு கேள்விகளால் தாக்க அவளை பார்த்து குறும்புன்னகை புரிந்த ஆரவ்,
“எனக்கு ஹெல்ப் பண்ணமாட்டேன்னு சொன்ன உன் வீட்டுக்காரனுக்கு கொஞ்சம் ஷாக் குடுத்தேன். அவ்வளோ தான்…” அப்போதும் ஸ்டெபி புரியாமல் விழிக்க,
“உன் மெசேஜ் பார்த்ததுமே அப்டியே எனக்கு பறக்கிறது போல ஒரு ஃபீல் பேப். இப்போவே என்னோட லவ்வை நிலாக்கிட்ட சொல்லனும்னு ஒரு ஆசை. அதுக்கு எப்டி சொல்லலாம்னு டிரையல் பார்க்கலாம்னு அவனை கூப்பிட்டேன்…”இதை சொல்லும் போதே ஸ்டெபி அவனை முறைக்க ஆரம்பித்திருந்தாள்.
“அவன் மூஞ்சிக்கு அவனை என்னோட நிலா இடத்துல வச்சு ரொமான்ஸ் லுக் விடறதே அதிகம். இதுல சார்க்கு சீன் வேற. என்னமோ அவனோட கற்பே போய்ட்டா மாதிரி ஓவரா பண்ணினான். ஒருவழியா சரிக்கட்டி மிரட்டி சம்மதிக்க வச்சேன். பாதில நீதான் வந்து கெடுத்துட்டியே?…”
என்னவோ தான் செய்யவிருந்த உத்தம காரியத்தை ஸ்டெபி வந்து பாழாக்கிவிட்டது போன்ற ஒரு பாவனையை ஆரவ் தன் முகத்தில் காண்பிக்க அவளோ,
“என்னனு மிரட்டின?…” அதிலேயே நின்றாள்.
“ஒழுங்கா கோஆபரேட் பண்ணலைனா பேப் வச்சு உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன்னு சொன்னேன். சும்மா வெறும் பேப்பர் தான் அது. அதுக்கே சார் டென்ஷன் ஆகிட்டார்…”
ஸ்டெபி சுத்தமாக நொறுங்கியே போனாள். ஆரவ்விடம் இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை அவள். உள்ளம் கொந்தளிக்க ஆரவ்வை ஏறிட்டு பார்த்தவள் விழிகளில் கண்ணீர் தானாக வழிந்தது.
“நீயா ஆரவ் இப்படி செஞ்ச? ஏன்டா?…” அதற்கு மேல் பேச முடியாமல் தவிக்க அவளை ஆழமாக பார்த்தவன்,
“இன்னைக்கு இல்லைனாலும் எப்போவாவது இதை பத்தி பேசித்தானே ஆகனும். இதை எத்தனை நாள் தள்ளிப்போடுவ?…”
இப்போது சுத்தமாக விளையாட்டுத்தனம் எல்லாம் ஆரவ்வை விட்டு சென்றிருந்தது. அவனது முகத்தில் அப்படி ஒரு தீவிரம்.
“எனக்கு நீயும் முக்கியம். அர்ஜூனும் முக்கியம். ரெண்டு பேரோட பிடிவாதமும் உங்க எதிர்காலத்தை தான் பாழாக்கும். அதுதான் சேர்ந்து வாழமுடியாதுன்னு சொல்லிட்டல. அப்புறம் என்ன? உன்னோட வழியை நீ பார்த்துக்கோ. அவனோட வாழ்க்கையாச்சும் நல்லபடியா இருக்கட்டும்…”
இரும்பாக இறுகிய குரலில் கூறியவனை என்ன செய்தால் தகும் என்பது போல முறைத்துக்கொண்டும், யாரையும் எதுவும் செய்ய இயலாமல் நிற்கும் தன் கையாலாகாத்தனத்தை எண்ணி அழுதுகொண்டும் நின்றாள் ஸ்டெபி.
“யாரோட இதயத்தையும் புரிஞ்சுக்காத நீயெல்லாம் ஹார்ட் சர்ஜன். அப்படி என்ன பிடிவாதம் பேப் உனக்கு? அவனும் பாவமில்லையா?…”
நண்பனுக்காக வாதிடும் ஆரவ்வை பரிதாபமாக பார்த்தவளை இரக்கமில்லாமல் பார்த்தான் ஆரவ். அவனும் சொல்லி புரியவைக்க எத்தனையோ முயன்றும் பலனில்லை எனும் போது கோவம் வரத்தானே செய்யும்.
“அஜூ மேலயும் தப்பு இருக்குதான். அதுக்கு அவனுக்கு நீ குடுக்கிற தண்டனை ரொம்ப அதிகம் பேப். அவனை வாழ்வும் விடாம விலகவும் விடாம படுத்தி வைக்கிற நீ. இதுதான் அவன் மேல நீ வைச்சிருக்கிற காதலா?…”
“காதல் சுயநலம், பிடிவாதம், வறட்டு கௌரவம் இது எல்லாத்துக்குமே அப்பாற்பட்டது. எந்த சூழ்நிலையிலையும் நம்ம காதலையும், நாம காதலிச்சவங்களையும் எதுக்காகவும் விட்டுகொடுக்க கூடாது. பிரச்சனையா? கூடவே இருந்து போராடு. பிடிக்கலையா எவ்வளோ வேணும்னாலும் சண்டை போடு. ஆனா விலகிட மட்டும் கூடாது பேப்…”
“டைவர்ஸ்னு சும்மா வெத்து பேப்பர்ல கையெழுத்து கேட்டதுக்கே என்னை அடிக்க வந்துட்டான் அஜூ. உனக்கு இவ்வளோ அழுகையும் கோவமும் வருது. பிரிஞ்சு வாழ என்னவெல்லாம் காரணம் சொல்ற நீ அவனோட சேர்ந்து வாழ ஏன் யோசிக்கமாட்டிக்க. உன்னோட இந்த கண்ணீரே உன் மனசை சொல்லுதே பேப்…”
அதற்கு மேல் அவளே யோசிக்கட்டும் என வெளியேறியவன் வாசலில் அர்ஜூன் கலங்கிய விழிகளுடன் நிற்பதை பார்த்ததும் கொஞ்சம் தயங்கி நின்றவன் அவனது தோளில் ஆறுதலாக தட்டிகொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
அர்ஜூனும் தான் வந்த சுவடு தெரியாமல் அறையின் கதவை சாற்றிவிட்டு அங்கிருந்த நகர ஸ்டெபி அங்கேயே நாற்காலியில் அமர்ந்து அழத்தொடங்கினாள். இனியாவது ஒரு தெளிவான நல்ல முடிவை எடுப்பாள் என நம்பினான் அர்ஜூன்.
ஆரவ் தன் மனதை சமன் படுத்த முடியாமல் திணறி பின் நிலாவின் அறைக்கு செல்ல அவளோ மாத்திரையின் உபயத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். சிறிது நேரம் அவளது தளிர்கரத்தினை தன் கைகளில் வைத்துகொண்டு அமர்ந்திருந்தவன் மனம் லேசானது போல தோன்றவும் அங்கிருந்து வெளியேறினான்.
அவனது சிந்தை முழுவதும் இனியும் நிலாவை பிரிந்து தன்னால் இருக்கமுடியாது, அவளை எப்படியாவது தனது வீட்டிற்கு அழைத்து செல்வது பற்றி தந்தையிடம் பேசி முடிவெடுத்துவிடுவோம் என எண்ணிக்கொண்டே அவரின் அறைக்குள் நுழைய அங்கே ராகவன் இல்லை.
அவருக்கு மொபைலில் அழைத்து கேட்க இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறவும் அங்கேயே காத்திருக்க தொடங்கினான்.
அங்கே இருந்த ஃபைல்கள் ஒவ்வொன்றாக எடுத்து பார்வையை ஓடவிட்டவன் அனைத்தையும் வைத்துவிட்டு அறையை சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு மொபைலை எடுக்க அவனது மூளையில் பளிச்சிட்டது.
மீண்டும் யோசனையாக தனக்கு பக்கவாட்டில் இருந்த கப்போர்டை பார்க்க அதன் மேலே லேசாக துறுத்திக்கொண்டு இருந்த நீல நிற ஃபைல் அவனது கவனத்தை ஈர்த்தது.
எப்போதும் ராகவ் எந்த பைலையும் இப்படி தனித்தனியாக போட்டுவைக்க மாட்டாரே? என யோசித்தவன் அதை எடுக்க சொல்லி மனம் உந்த எழுந்து சென்று அதை எடுத்தான்.
அது பெங்களூரில் நிலாவினை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிட்டலில் கொடுத்த சில ரிப்போட்ஸ் அடங்கிய பைல்.
இதை எதற்கு தனியாக வைக்க வேண்டும்? அதுவும் அந்த ரிப்போர்ட்ஸ் எல்லாமே என்னிடம் தானே இருந்தது? இப்போது இன்னொன்று?” என யோசிக்க ஏனோ உடம்பெல்லாம் குப்பென வியர்த்தது.
அதை படிக்க ஆரம்பித்தவனது விழிகள் ரத்தமென சிவந்து கண்கள் கலங்கின. அவனால் நம்பவே முடியவில்லை. மேலும் வேறெதுவும் பைல் இருக்கிறதா என தேட ஆரம்பிக்க இருந்தது தங்களது ஹாஸ்பிட்டலில் எடுத்த ஸ்கேன் ரிப்போட்ஸ் எல்லாம் இருந்தது.
அவனால் அதற்கு மேலும் அங்கே நிற்கமுடியாமல் அனைத்தையும் எடுத்துகொண்டு வீட்டிற்கு விரைந்தவன் செல்லும் வழியிலேயே ராகவனுக்கும், ஆண்டனிக்கும், அர்ஜூனிற்கும் அழைத்து உடனடியாக வீட்டிற்கு வந்தே ஆகவேண்டும் என கூறிவிட்டு ஸ்டெபிக்கு நிலாவை பார்த்துக்கொள்ளும் படி ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு வீட்டை அடைந்தான்.
இந்த நேரத்தில் வந்திருக்கும் ஆரவ்வை பார்த்து திகைத்த தர்ஷினி அவனிடம் என்னவென கேட்டும் ஒரு பதிலும் இல்லை அவனிடத்தில் இருந்து.
என்னவோ ஏதோவென பதறியபடி வீடு வந்து சேர்ந்தார் ராகவன். எப்போதும் இப்படி செய்பவன் அல்ல ஆரவ். அதுவே அவரது பதட்டத்திற்கு காரணம்.
ஆரவ் அமர்ந்திருந்த விதமே எதுவோ சரியில்லை என்பதை உணர்த்தியது ராகவனுக்கு. தர்ஷினியிடம் என்னவென விழிகளால் வினவ அவர் தன் தோள்களை குலுக்கி தனக்கும் தெரியவில்லை என தலையசைத்தார்.
அர்ஜூனோடு ஆண்டனியும் வந்து சேர அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பின்னால் மறைத்து வைத்திருந்த ஃபைலை எடுத்து ஆவேசமாக டீப்பாயில் எறிந்துவிட்டு ருத்ரரூபனாய் நின்ற ஆரவ்வின் கோவத்திற்கான காரணம் ராகவனுக்கும், ஆண்டனிக்கும் புரிந்துபோனது.
ராகவன் ஒன்றும் பேசாமல் சோபாவில் அமர்ந்ததும் ஆரவ் அர்ஜூனிடம்,
“அஜூ எனக்கும் நிலாவுக்கும் இன்னும் பத்தே நாள்ல கல்யாணம். மேரேஜ் என்னோட அம்மா வீட்டு முறைப்படி தான் நடக்கும். நடக்கனும். உன்னோட அப்பாக்கிட்ட இதை சொல்லிடு…” என கூறிவிட்டு வெளியேறியவனை தடுக்கமுடியாமலும் நடப்பது புரியாமலும் திகைத்து நின்றான் அர்ஜூன்.
“என்னாச்சுப்பா? ஏன் திடீர்னு ஆரவ் இப்டி கோவமா போறான்? இதுல என்னதான் இருக்கு?…” ராகவன் பதில் பேசாமல் அமைதியாக இருக்க அந்த பைலை எடுத்து படிக்க ஆரம்பித்தான் அர்ஜூன்.
இப்படி ஒரு அதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவில்லை. இதை மறைத்ததற்கு ஆரவ் கோவப்பட்டதில் தவறும் இல்லை என்றுதான் அர்ஜூனிற்கு தோன்றியது.
இந்த விஷயம் தர்ஷினிக்கும், ஆண்டனிக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்பது இருவரது அமைதியிலே புரிந்துபோனது அர்ஜூனிற்கு. முகத்தில் சினம் ஏற,
“என்னப்பா இதெல்லாம்? எங்கக்கிட்ட இருந்து எதுக்காக இதை மறைச்சீங்க? நிலாவுக்கு இப்படி ஒரு ஆபத்து இருக்குன்னு எதுக்காக சொல்லலை நீங்க?…”
எத்தனை கேட்டும் மௌனமாகவே இருந்தார் ராகவன்.
“அஸ் எ டாக்டர். நான் ஒரு நியூரோ சர்ஜன். என்கிட்டே நீங்க இதை பத்தி நிச்சயமா பேசிருக்க வேண்டாமா?. அப்போ டாக்டர் மேத்தா வந்தது இதுக்காக தானா?…” ஆற்றாமையோடு அவன் கேட்க அப்போது தான் வாயை திறந்தார் ராகவன்.
“உன்கிட்ட சொன்னா நீ ஆரவ்ட்ட சொல்லிடுவே அஜூ. உனக்கும் அவனுக்கும் எந்தவிதமான ஒளிவுமறைவும் இருந்ததில்லையேடா. எப்படி என்னால சொல்ல முடியும்? என் மகன் அந்த பொண்ணை தன்னோட எதிர்காலமா நினச்சு பல கனவுகளோட வாழ்ந்துட்டு இருக்கும் பொது அவனோட சந்தோஷத்தை என்னால எப்படி தகர்க்க முடியும்?…”
“பெங்களூர்லையே எனக்கு இந்த விஷயம் தெரியும். நிலாமுகியோட ஸ்காலப்எமொசரிப்ரைன்ல சின்னதா ஒரு ப்ளட் க்ளாட் இருக்குது. அதை உடனே ஆபரேட் பண்ணமுடியாத சூழ்நிலையிலையும் இருந்தது. அதுவும் இல்லாம அது ரொம்ப காம்ப்ளிகேடட் ஆப்பரேஷன்…”
“ரெண்டு மூணு மாசம் கழிச்சுதான் அதை பண்ண முடியும்னும், இது ரொம்பவே ரிஸ்க்கான ஆப்பரேஷன்னும் எனக்கு புரிஞ்சது. அதுல நிலாவுக்கு நினைவு திரும்பினாலும் திரும்பலாம். இல்லைனா அவளோட உயிர் போனாலும் போகலாம். ஆப்பரேஷன் பண்ணாம விட்டாலும் அது அவளோட உயிருக்கு ஆபத்துதான்…”
ராகவனது பேச்சிலும் வார்த்தைகளிலும் அப்படி ஒரு வலி மிதமிஞ்சி இருந்தது. முகத்தில் வேதனை விரவி வார்த்தைகளில் அப்படி ஒரு கலக்கம்.
“இதை ஆரவ்வின் முகத்தை பார்த்து என்னால சொல்லமுடியுமா? அதனால தான் நான் இப்போதைக்கு யார்க்கிட்டையுமே சொல்லலை. என் மகனோட காதல் எனக்கு அன்னைக்கே புரிஞ்சது. அவனால இதை சத்தியமா தாங்கமுடியாது அஜூ. அதான் மறைச்சேன்…”
“எனக்கும் அந்த பொண்ணுமேல அன்பு இருக்கிறது தான். அதுக்காக என் மகனோட எதிர்காலத்தை பத்தியும் நான் யோசிக்கனுமே? யாருக்குன்னு நான் பார்க்க அஜூ?…”
“இப்போ என்ன செய்யன்னு எனக்கு தெரியலை. ஆரவ் வேற பிடிவாதமா பேசிட்டு போய்ருக்கான். எனக்கு அவனோட சந்தோசம் தான் முக்கியம் அஜூ. இப்போ அவன் சொல்றதை கேட்டு கல்யாணம் செஞ்சுவச்சா நாளைக்கே ஆப்பரேஷன்ல நிலாவுக்கு எதுவும் ஒண்ணுன்னா நிச்சயம் அவன் தாங்கமாட்டான். எனக்கு என்னோட பையன் வேணும் அஜூ. நான் பண்ணினதுல என்னடா தப்பு?…”
ராகவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென ஒன்றுமே புரியவில்லை அர்ஜூனிற்கு. எப்படி பெற்ற தந்தையாக ராகவன் நினைப்பதில் எந்தவிதமான தவறுமில்லையோ, அதே போல காதலித்தவளை கைவிடாமல் காதலை காப்பாற்றவேண்டும் என போராடும் ஆரவ்வின் புறமும் எந்த தவறுமில்லை என தோன்றியது அர்ஜூனிற்கு.
அங்கே ஹாஸ்பிட்டலில் உடனே தனது காதலை நிலாமுகியிடம் அதிரடியாக தெரிவித்து அவளின் சம்மதத்தை கேட்டிருந்தான் ஆரவ்.
அப்போதுதான் தூங்கி எழுந்து அமர்ந்திருந்த நிலாவின் முன்னால் வியர்க்க விறுவிறுக்க வந்து நின்ற ஆரவ் நிற்கவும் பார்த்து அதிர்ந்துவிட்டாள்.
“டாக்டர், என்னாச்சு?…” என கட்டிலை விட்டு இறங்கியதும் அவளின் கைகளை பிடித்தவன்,
“நிலா எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உன்னை என் உயிருக்கும் மேல விரும்பறேன். என்னை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமா?…”
இப்படி திடுதிப்பென்று வந்து கேட்பான் என்பதை அறியாத நிலாவோ அவனுக்கு என்ன பதில் சொல்வதென தடுமாறினாள்.
சமீபமாக அவன் மீது தன் மனம் லயிப்பதை நிலாவும் உணர்ந்துதான் இருந்தாள். அதே நேரம் தான் அவனுக்கு பொருத்தமில்லை என்றும், அவனை ஆசைப்பட தனக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை என்றும், தன்னையே மறந்திருக்கும் இந்த சூழ்நிலையில் தனக்கு காதலா? வேண்டாம், அவனை விட்டு தள்ளியே இருக்கவேண்டும் எனவும் தனக்குள் ஒரு தீர்மானத்திற்கே வந்திருந்தாள்.
அதனால் இப்போது அவன் கேட்டதும் கொஞ்சம் மகிழ்ந்து பின் தன்னை அடக்கி அந்த உவகையில் இருந்து தன் காதல் மனதை மீட்டு தன்னை கொஞ்சம் நிலைப்படுத்திக்கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
“நான் உங்களை எப்போவுமே அப்படி நினச்சதில்லையே டாக்டர். நீங்க ஏன் இப்படில்லாம் என்கிட்ட பேசறீங்க? என்னால கேட்க கூட முடியலை…” நிலாமுகி ஆரவ்வின் முகத்தை ஒருவித தவிப்போடு பார்த்து கூறினாள்.
அவனோ அவளது தவிப்புகள் எதையும் கண்டுகொள்ளாமல், “உன்கிட்ட வேற மாதிரி என்னால பேசமுடியாது நிலா. புரிஞ்சுக்கோ. என்னால உன்னை விட்டுட்டு இருக்கிறது இனியும் நடக்காத ஒன்னு. இதுதான் என்னோட நிலைப்பாடு…” பிடிவாதமான அவனது பேச்சில் மனதில் பயம் கவ்வ,
“நான் யார் என்னனு தெரியாம நீங்களா முடிவுக்கு வந்துட்டா எப்படி? மனசாட்சியோட பேசனும் நான். இப்போ உங்க காதலுக்காக நீங்க சொல்றதை கேட்டு கல்யாணம் பண்ணிகிட்டா நாளைக்கே எனக்கு நினைவு திரும்பினா அந்த வாழ்க்கைக்கு திரும்பற நான் இதை மறந்திட்டா அது நம்ம ரெண்டு பேருக்குமே எத்தனை வலியை கொடுக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க டாக்டர்…”
இங்கு வந்து பேச ஆரம்பித்ததிலிருந்து இத்தனை நாளில் அவள் இவ்வளவு நீளமாக பேசியது இன்றைக்கு தான் என நினைத்தவன் அவளையே விழிவிரித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
நிலாவிற்கு அவனது பார்வையின் தாக்கங்கள் தன் மன உறுதியை தகர்த்துவிடுமோ என அஞ்சினாள். எவ்வளவு நேரம் அவனை தவிர்க்க முடியும் என தவித்தாள். இன்னும் இங்கேயே நின்றான் என்றால் நிச்சயம் தன்னையும் மீறி அவனிடம் தஞ்சம் புகுந்துவிடுவோம் என பயந்து அவ்விடம் விட்டு தானே நகர எத்தனிக்க அவளை தன்னோடு இழுத்தணைத்தான் ஆரவ்.
“ஐ நோ நிலா. உனக்கும் என்னை பிடிக்கும். என்ன ஆனாலும் சரி நீ தான் என்னோட மனைவி. என்னால உன்னை விட்டுகொடுக்க முடியாது. உனக்கு நினைவுகள் திரும்பினாலும் இல்லைனாலும் என்னை விட்டு உன்னை தள்ளி இருக்க விடமாட்டேன் நான். எந்த நிமிஷம் உன்னை நான் பார்த்தேனோ. அப்போவே முடிவு பண்ணிட்டேன்…”
“என்னோட வாழ்க்கை உன்னோட மட்டும் தான். மறுத்து மட்டும் பேசிடாதே. என்னால தாங்கமுடியாதுடா நிலா. ஐ லவ் யூ சோ மச். கற்பனைல கூட நீ இல்லைனா அப்டின்ற ஒரு நினைப்பை என்னால நினைச்சு பார்க்க கூட முடியலை. நினைக்கவும் மாட்டேன்…” எனவும்,
“இல்லை டாக்டர் இது சரிப்படாது. என்னை விட்டுடுங்க…”
அவனிடம் இருந்து விடுபட்டு விழிகளில் கரகரவென் கண்ணீர் வழிய பரிதவிப்போடு கெஞ்சலுடன் பேசியவளை முறைத்தவன்,
“சரியா வருமா இல்லையான்னு கல்யாணத்துக்கு பின்னால வாழ்ந்து பார்த்து தெரிஞ்சுக்கலாம். சரிவரலைனாலும் எனக்கு பரவாயில்லை. நான் உன்னோடு வாழனும். இந்த ஜென்மம் முழுமைக்கும் நீதான் எனக்கு. நான் தான் உனக்கு. நம்ம கல்யாணம் நடந்தே தீரும். கல்யாணபொண்ணா சமத்தா இருக்கனும். மறுத்து ஒரு வார்த்தை பேசிப்பாரு…” என மிரட்ட,
“நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க டாக்டர். நான் உங்களுக்கு வேண்…”
அதன் பின்னான வார்த்தைகளை அவளால் உச்சரிக்கமுடியா வண்ணம் ஆரவ்வின் வலிமையான தாக்குதலால் நிலாவின் இதழ்கள் சிறை எடுக்கப்பட்டிருந்தன.
சில நொடிகளுக்கு பின் அவளை விடுவித்தவன்,
“எப்போவும் மனசுல உள்ளதை சொல்லிடனும். உண்மையை பேசனும். இல்லைனா என்னோட பனிஷ்மென்ட் இப்படி தான் இருக்கும். இனியும் மறுத்து பேசுவ நீ?…” என சீண்டலாக கேட்கவும் வெட்கத்தில் அவனது மார்பில் தன் முகத்தை புதைத்தவளுக்கு கண்களில் சந்தோஷகண்ணீர் பெருக்கெடுத்தது.
ஆரவ் நிலாவின் காதல் ஜெயித்து கல்யாணத்தை எதிர்நோக்கி இருக்க,
பூம்பொழில் கிராமத்தில் தினகரன் தன் மனதை கொன்று காதலை புதைத்து உணர்வற்ற முகத்தோடு பெரியோர்கள் கூடியிருக்கும் அந்த சபையில் அனைவரது ஆசிர்வாதத்தோடும் வண்ணமதியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டி மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாக ஏற்றுகொண்டான்.