தேடல் – 6
ஊரெங்கும் இரவு கவிழ்ந்து வானமகனது போர்வையிலிருந்து நிலவுமகள் வெளிவருவதும் மீண்டும் மேகத்திரை நிலவவளை சிறையெடுப்பதுமாக இருக்க தினகரனது பார்வை அந்த நிலவையே வட்டமிட்டது.
அதை வெறித்து பார்த்துகொண்டிருந்தவனது பார்வை அப்படியே இங்குமங்கும் அசையாமல் நிலைபெற்றிருந்தது.
“தம்பி…” முத்தழகியின் குரலில் சுதாரித்து திரும்பியவனது கலங்கிய விழிகளை பார்த்து துணுக்குற்றார் முத்தழகி. தான் வரும் போது மகனது பார்வை அந்த வானத்து நிலவையே வட்டமிட்டதை கண்டுவிட்டுத்தான் அவனை அழைக்க வந்தார்.
மகனது மனம் புரியாதவரா?
அன்று காலைதான் தினகரனின் திருமணம் முடிந்திருந்தது. வீட்டிற்குள் மருமகள் இவனது வரவை எதிர்பார்த்து காத்திருக்க மகனோ இன்னும் பழையதை மறக்காமல் இன்னமும் தனது நினைவுகளில் உழன்று கொண்டிருப்பதை எண்ணி வருந்தினார்.
இத்திருமணத்திற்கு யாரும் வற்புறுத்தவும் இல்லை. தினகரனிடம் அதை பற்றி பேசவும் இல்லை. எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் அவனே திருமணத்திற்கு பெண் பார்க்க சொல்லி இதோ அவனது வாழ்வில் பங்குகொள்ள மனைவி என்று ஒரு பெண்ணும் வந்தாகிற்று.
இப்படி ஒரு நிலை தனது மகனுக்கு வேண்டாம் என்றுதான் முத்தழகி கொஞ்சம் நாள் ஆகட்டும் என பேசிப்பார்த்தார். தினகரனோ அதை கேட்கும் வழி தான் இல்லை.
“என்னம்மா வந்து ஒண்ணுமே பேசாம அப்படியே நின்னுட்டு இருக்கீங்க? எதாச்சும் சொல்லனுமா?…”
தன் நினைவலையில் இருந்து வெளியில் வந்த முத்தழகிக்கு இப்போது மகனது முகம் தெளிவாக இருப்பதாகப்பட்டது. ஆனா அதில் எந்தவிதமான உணர்வுமே இல்லாமல் துடைத்துவைத்தது போல இறுக்கமாக இருந்தது தான் கொஞ்சம் வேதனையை கொடுத்தது முத்தழகிக்கு.
“உங்க ரெண்டு பேரையும் வந்து சாமி கும்பிட சொல்லி பெரியாச்சி கூப்பிட்டுச்சு. மதி புள்ள உனக்காக அங்க காத்திட்டு இருக்கு. ஆச்சி இப்போ கிளம்புதாகளாம். அதான் வெரசா வர சொல்லி சொன்னாக…” சொல்லிவிட்டு அகன்றுவிட்டார் முத்தழகி.
எதற்காக என தெரியாதளவிற்கு தினகரன் என்ன குழந்தையா? முகத்தில் சிறிதளவில் எட்டிப்பார்த்த வேதனையின் சாயலை கூட கவனமாக மறைத்துவிட்டு உள்ளே சென்றான்.
பெரியாச்சி என்பது அவர்களது குடும்பத்தில் மிக மூத்த சுமங்கலி பெண்மணி. நான்கு தலைமுறையை கண்ட ராசியான ஆச்சி. இன்றளவும் அவர்கள் வளசலில் நடக்கும் எந்த திருமணத்திற்கும் சாந்திமுகூர்த்தத்திற்கு முன் அவர்களிடம் மணமக்கள் ஆசி வாங்கினால் விரைவில் வீட்டில் குழந்தை சத்தம் கேட்கும் என்பது அந்த சுற்று வட்டாரத்திலேயே பிரசித்தி.
உள்ளே உறவினர்கள் கூட்டத்தின் நடுவே தாய் தந்தையரின் அருகில் நின்றிருந்த வண்ணமதியின் பக்கத்தில் சென்று நின்றுகொண்டான்.
பெரியாச்சியை பூஜை அறையின் வெளியே ஒரு சேரில் அமரவைக்கபட்டு கைத்தாங்கலாக அந்த உறவுப்பெண் பிடித்திருக்க பெரியாச்சியோ நடுங்கும் கைகளுடன் கற்பூர ஆராத்தி தட்டை சாமிக்கு காண்பித்துவிட்டு தானும் வணங்கிவிட்டு நிமிர்ந்து பார்த்தார்.
“இங்க வாய்யா ராசா, நீயும் வா தாயி..” என தினகரனையும் வண்ணமதியையும் அழைக்க அவர்கள் இருவரும் பெரியவரது பாதம் பணிந்து எழுந்தனர்.
இருவருக்கும் நெற்றியில் விபூதியை பூசியவர் வண்ணமதியை அருகில் அழைத்து,
“சீக்கிரமே முத்தழகை பாட்டியாக்கிடு ஆத்தா. உனக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு. பொக்கிஷமாட்டம் என்னோட பேராண்டி. பத்திரமா வச்சுக்கோ. அவனோட மனசறிஞ்சு ஒத்துமையா செழிப்பா வாழனும். புரியுதா?…” என்றவரிடம் வெட்கத்தோடு தலையை மட்டும் அசைத்தாள் வண்ணமதி.
இதை பார்த்துகொண்டிருந்த தினகரனது மனதில், “இவள் வாயை திறந்து பேசவே மாட்டாளோ? இதுவரை இவளது குரலை கூட கேட்கலையே?” என யோசித்தபடி அவளைத்தான் நோக்கிகொண்டிருந்தான்.
அவனது பார்வையை உணர்ந்தவள் அவனை பார்த்து லேசாக முறுவலிக்க அவனோ திகைத்துவிட்டு வெளியே சென்று முற்றத்தில் அமர்ந்துவிட்டான்.
உள்ளே பெரியாச்சி வண்ணமதியை தான் சொன்ன நேரத்திற்கு தான் அறைக்குள் அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டு கிளம்ப அவரை வழியனுப்ப முத்தழகி வெளியே வந்துவிட்டார். தினகரனிடமும் விடைபெற்றுவிட்டு பெரியாச்சி கிளம்பிவிட தினகரன் மீண்டும் அதே இடத்தில் அமர்ந்துவிட்டான்.
இப்படி ஒரு முடிவெடுக்கும் சூழ்நிலைக்கு தான் ஆளான அந்நாட்களை மெல்ல அசைபோட்டான் தினகரன்.
நிலாமுகி காணாமல் போய் ஒரு வாரம் கழித்து ஒருநாள் நடு இரவில் முத்தையா வீட்டிற்குள் போனில் அவரது தலைவரிடம் எகிறிக்கொண்டிருந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த தினகரனது காதில் விழுந்தவைகள் இதுதான்.
“எனக்கு எந்த சீட்டும் வேண்டாம் தலைவரே. எனக்கு என்னோட மருமகப்பொண்ணு தான் வேணும். இல்லைனா நடக்கிறதே வேற. என்னை பத்தி நல்லாவே தெரியும் உங்களுக்கு. நான் ஒரு விஷயம் சாதிக்கனும்னு நினச்சா என்ன வேணும்னாலும் செய்வேன்…”
“எனக்கு என்னோட புள்ளை தான் முக்கியம். அதுக்காகத்தான் என்னோட சேர்மன் பதவியையும் தூக்கி எறிஞ்சேன். என் வீட்டு பிள்ளையை கண்டுபிடிக்க துப்பில்லாத எனக்கு அந்த பதவி இருந்தென்ன? வர பதவி தேவையென்ன?…”
“காலுக்கு உதவாததை கழட்டி எறிஞ்சுதானே ஆகனும். என்னோட பதவி எனக்கு அப்படித்தான். உதவாதது எனக்கு தேவையில்லை. பதவில இல்லாட்டிலும் நான் சிங்கம் தானுங்க தலைவரே. தெரியுமில்ல. அந்த சீட்டும் எனக்கு நீங்க சொன்னதால தான் ஆசைப்பட்டேன். இப்போ வேண்டாங்கறேன்…”
“உங்க செல்வாக்கை வச்சு என் மருமகளை கண்டுபிடிச்சு கொண்டாங்க. இல்லையா நானே நடந்ததை போலீஸ்ல போய் சொல்லிப்போட்டு சரண்டர் ஆகிடுவேன். அதுக்கப்பறம் நடக்கற பின் விளைவுக்கு நான் பொறுப்பாக முடியாது தலைவரே…”
போனை வைத்துவிட்டு திரும்ப தினகரன் இவரை பார்த்தவாறு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிகொண்டு நின்றிருந்தான்.
அவனை பார்த்ததும் தலையை குனிந்தவாறு செல்ல மீண்டும் முத்தையாவின் மொபைல் மீண்டும் அழைப்பை தாங்கிவர இப்போது அவரது கரங்களில் இருந்து அதை பறித்துவிட்டிருந்தான் தினகரன்.
அதை ஏற்று காதில் பொறுத்த மறுபக்கம்,
“முத்தையா கோவத்துல அவசரப்பட்டு எதையும் செஞ்சுடாதீங்க. கண்டிப்பா நான் எப்படியாவது உங்க வீட்டு பொண்ணை கண்டுபிடிச்சு உங்ககிட்ட ஒப்படைச்சிடறேன். பசங்க தேடிட்டு தன இருக்காங்க. கொஞ்சம் டைம் குடுங்களேன்…” கொஞ்சம் பதற்றத்தோடே கேட்ட அக்குரலுக்கு,
“ம்ம்…” என்று மட்டும் தினகரன் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். முத்தையாவை கண்டிப்புடன் பார்த்தவன்,
“பாவத்தை நாம பண்ணிட்டு அதிலிருந்து தப்பிக்க பிராயச்சித்தம் செய்வாங்களே. அது போல இருக்கு உங்க நடவடிக்கை. நீங்க சீட் வேண்டாம்னு சொன்னாலும், பதவியை ராஜினாமா செய்தாலும் நிலா உடனே கிடச்சிடுவாளா?…”
“நல்லவேளை அம்மா மாத்திரை போட்டுட்டு தூங்கறாங்க. அவங்க மட்டும் கேட்டிருந்தா?…” என்றவன் மேலும் பேசாமல் மொபைலை அவரது கைகளில் திணித்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தான்.
ஏதோ ஒரு வகையில் தந்தையின் பேச்சு தினகரனுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. தான் பேசியதற்காக எந்தளவிற்கு சென்றிருக்கிறார் என நினைக்கும் போது கொஞ்சம் இதமாக இருந்தாலும் அவரின் மேல் உள்ள கோபம் துளியும் குறையவில்லை என்பது தான் உண்மை.
என்ன செய்து மகனது கோவத்தை குறைப்பது என புரியாமல் அப்படியே நின்றுவிட்டார் முத்தையா. என்றைக்கு நிலாவை கடத்தியது தான்தான் என தெரிந்ததோ அப்போதிருந்து அப்பாவென்ற அழைப்பை நிறுத்தியிருந்தான் தினகரன்.
இன்றளவு மகனது அந்நியத்தன்மை முத்தையாவை சுட்டெரித்துகொண்டிருந்தது. நிலா கிடைத்தாலும் கூட மகன் தன்னை மன்னிக்கபோவதில்லை என்பது தெள்ளத்தெளிவாகியது அப்பெரியமனிதருக்கு.
அந்த தலைவரை எண்ணி ஒரு பயமும் இல்லை முத்தையாவிற்கு. அவருக்கு தெரியும் தன்னை அவ்வளவு எளிதில் நெருங்கமுடியாது என்பது. தலைவரது முக்கிய பிடிகள் முத்தையாவின் கைகளுக்குள். அதனால் தான் இந்தளவிற்கு இறங்கி வந்து தலைவரே கெஞ்சும் அளவில் தன்னை நிறுத்தியிருக்கிறார்.
மேலும் இரண்டுநாட்கள் கடக்க கோவிலுக்கு சென்ற முத்தழகி மயங்கி விழுந்ததாகவும் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் தெரிந்தவர்கள் கூற அடித்துபிடித்துக்கொண்டு அங்கே சென்றார் முத்தையா.
ஏற்கனவே தினகரனுக்கும் தகவல் கூறப்பட்டு அவனுமே அப்போதுதான் வந்து சேர்ந்தான். முத்தழகியின் தலையில் போடப்பட்டிருந்த கட்டை பார்த்ததும் பதறிவிட்டான் தினகரன்.
என்ன ஏதென்று விசாரிக்க மயக்கத்தில் கீழே விழும் போது சுவற்றில் மோதியதால் ஏற்பட்ட காயம் என்று அவர் சமாளித்தாலும் உள்ளம் கலங்கிப்போனது அம்மகனுக்கு. தாயுடன் தந்தையை இருத்திவிட்டு டாக்டரை பார்க்க விரைந்தான்.
அவரிடம் அனுமதி கேட்டுவிட்டு உள்ளே நுழைந்ததும்,
“டாக்டர் நான் முத்தழகியோட மகன். எதனால அவங்களுக்கு மயக்கம் வந்தது? அவங்களுக்கு இப்போ எப்படி இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?…” படபடப்போடு கேட்டவனை பார்த்து மெல்ல புன்னகை புரிந்தவர்,
“எனக்கு உங்களை தெரியும் மிஸ்டர் தினகரன். இந்த வட்டாரத்துல உங்களை தெரியாதவங்க உண்டா என்ன?…” என்றுவிட்டு சிறு கண்டன பார்வையோடு,
“உங்கம்மாவுக்கு பிபி ரொம்பவே அளவுக்கதிகமா இருக்கு. அதுவும் இல்லாம காலையில இருந்து சாப்பிடாம விரதம் வேற இருந்திருக்காங்க. இதோட அடிப்ரதட்சனம் வேற கோவில்ல செஞ்சிருக்காங்க…”
“என்ன தன் தாய் உண்ணாமல் விரதமிருந்தார்களா?” அதிர்ந்தான் தினகரன். மேலும் அதிரவைக்க,
“அவங்களோட மனசுல ஏதோ ஒரு கவலை. எப்போவும் அதையே நினைச்சுட்டு இருப்பாங்க போல. கொஞ்சம் மைன்ட் ரிலாக்ஸா இருந்தா தானே நல்லது. வெறும் மருந்து மாத்திரை எடுத்துக்கிட்டா மட்டும் எல்லா நோயும் குணமாகிடறது கிடையாது இல்லையா?…”
தாயின் கவலை எதற்கு என்று அறியாத சிறுவனா தினகரன்? அதை டாக்டரிடம் கூறமுடியுமா அவனால்?
தன்னுடைய கவலையே பெரிது என்று இருந்துவிட்டோமே? என்ன சுயநலம் எனக்கு? என்ற குற்றவுணர்ச்சியோடு மனம் பாரமாக அழுத்த ,
“நான் பார்த்துக்கறேன் டாக்டர்…” உள்ளடங்கிய குரலில் சொல்லிவிட்டு எழுந்துகொள்ள,
“கொஞ்சம் பொறுமை தினகரன். உங்க அம்மாவுக்கு இனியும் இது போல ஆகாம பார்த்துக்கோங்க. அவங்களை கொஞ்சம் கவனிங்க…”
“இன்னொரு முறை இப்படி பிபி அதிகமானா அவங்களுக்கு நல்லதில்லை. அவங்களோட உடல்நிலை அந்தளவிற்கு மோசமா இருக்கு. கோவில் பொது இடம் எல்லோரும் இருந்ததால பார்த்து கூட்டிட்டு வந்துட்டாங்க. இதுவே தனியா யாரும் கவனிக்காம இருந்திருந்தா?…” என நிறுத்தவுமே தினகரனின் முகம் வெளிறியது.
“டாக்டர்…” என்று வார்த்தைகள் திணற,
“பயப்படாதீங்க. அவங்களை கவலை இல்லாம சந்தோஷமா வச்சுக்கோங்க. எதையும் அதிகமா நினச்சு யோசிக்கவிடாதீங்க. இப்டி விரதம், பரிகாரம்னு செய்யவிட்டு அவங்களை பாழாக்கிடாதீங்க. நாளைக்கு ஒருநாள் இங்க அப்சர்வேஷன்ல இருக்கட்டும். நாளை மறுநாள் வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க…”
டாக்டரிடம் பேசிவிட்டு வெளியேறிய தினகரனது உள்ளம் கனத்துக்கிடந்தது. தாயை கூட கவனியாமல் என்ன மகன் நான்? என்ன மனிதன் நான்? என தன்னையே நிந்தித்துகொண்டிருந்தான்.
முத்தழகியை சேர்த்திருந்த அறையை நெருங்கியதும் தாயிடம் தந்தை பேச்சுக்குரல் கேட்க ஏனோ உடனே உள்ளே செல்லாமல் அவ்விடமே தேங்கி நின்றான்.
“நம்ம புள்ளைக்கு இருக்கிறது நீயும் நானும் தானே அழகு. ஏன் இப்படி பரிகாரம் விரதம்னு உன்னையே வருத்திக்கிற? உனக்கு எதுவும் ஒன்னுனா எங்களால தாங்கமுடியுமா?…” என சிறுபிள்ளை போல அவர் விசும்ப,
“என்ன நீங்க இப்படி பச்சப்புள்ளையாட்டம் கண்ணை கசக்கிக்கிட்டு? இப்போ நான் குத்துக்கல்லு மாதிரி தானே இருக்கேன்? எனக்கொண்ணும் இல்லை. ஆனா என் மகன பாருங்க. மனசு முழுக்க விசனத்தை வச்சிட்டு நிலாவை நினச்சு பைத்தியக்காரனா அலையுறான். அவனுக்காகவும், நிலா கிடைக்கிறதுக்காகவும் தான் நான் விரதம் இருந்தேன். அதைகூட முழுசா நிறைவேத்தமுடியலை…”
“அவனோட இந்த வேதனையை குறைக்கவாவது அவ சீக்கிரம் கிடைக்கனும்னும் என்னோட புள்ளைக்கு வெரசா ஒரு நல்லது பண்ணிப்பாத்துடனும்னு மனசு கிடந்து அடிச்சிக்குது. என்னவோ தெரியலை, எனக்கு எதுவும் ஆகிடுமோ?…” என்றவர்,
“புள்ளையை இப்படியே விட்டுட்டு போய்டுவேனோன்னு பயமா இருக்குதுங்க. என்னோட புள்ளைய சம்சாரியா கல்யாண கோலத்துல மாலையும் கழுத்துமா பார்த்துடனும்னு பரபரக்குது…”
“அவனோட நினைப்பு என்னை அன்னந்தண்ணி அண்டவிடாம நாள் முச்சூடும் உறங்ககூட விடாம வருத்திட்டு இருக்குது. அவனை குடும்பமா பார்த்துட்டா என்னோட நெஞ்சு நிறைஞ்சு போய்டும். அதுக்கப்பறம் எனக்கென்ன வேணும்? நிம்மதியா கண்ணை மூடிடுவேன்…”
பதறிப்போய் முத்தழகியின் வாயை அடைத்த முத்தையா,
“விசுக்குன்னு இப்படி எல்லாம் சொல்லிடாத அழகு. நம்ம குடும்பத்திட ஆணிவேரே நீ தான? அப்படி இருக்கும் போது அபசகுனமா வார்த்தைகளை விடாத அழகு…” என அழமாட்டாத குறையாக பேசினார் முத்தையா.
“அட போற உசுரு எப்படி போனா என்னன்றீக? என்ன ஒன்னு என்னோட புள்ளைய இப்படியே விட்டுட்டு போய்டுவேனோன்ற பயம் தான் நெஞ்சை கவ்விட்டு விடமாட்டிக்கு. நிலாவுக்கு கல்யாணம் ஏற்பாடாகி காணாம போனதுல இருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமா உருகுலைஞ்சு போய்ட்டு இருக்கான். என்னோட புள்ளைக்கு என்னைக்குதான் நிம்மதி கிடைக்குமோ?…” எனவும்,
“அழகு நான் சொன்னு சொல்றேன். கோவப்படாம கேளு…” எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டே கேட்டவரை கேள்வியாக பார்த்தார் முத்தழகு.
“அய்யாக்கிட்ட நான் வேணும்னா பேசட்டுமா? உன்னோட இந்த வருத்தத்தை எடுத்து சொன்னா நிச்சயமா புரிஞ்சுப்பாரு. ஒரு நல்ல பொண்ணா பார்த்து…” என்றதுமே கோவம் கரையுடைக்க,
“போதும் நிறுத்துறீங்களா. என்னைய்யா மனுஷன் நீரு? அவனே மனசுடைஞ்சு போய் கிடக்கான். ஏற்கனவே ரணமா கெடக்க அவன் நெஞ்ச கத்தியால இன்னும் கொஞ்சம் கீறிவிட சொல்றீகளா?…”
“என் உசுரே போனாலும் அந்த காரியத்தை மட்டும் நான் செய்யவே மாட்டேனாக்கும். அவனோட மனசுக்கு இதமா இருக்கறதை விட்டுட்டு என்னோட ஆசையை சொல்லி என்ற புள்ளை ஆசைக்கு மொத்தமா தீயை வைக்க சொல்றீங்களா?…” என வெடிக்க,
“நிலா வந்தா மட்டும் நம்ம தம்பியை கட்டிக்கும்னு என்ன நிச்சயம் அழகு?…”
“அவ வந்து என் புள்ளைய கட்டிக்காட்டாலும் பரவாயில்லை. என்னைக்கு எம்மவனுக்கா கல்யாணம் கட்டிக்கனும்னு தோணுதோ அன்னைக்கு அவன் கல்யாணம் கட்டிக்கட்டும்…”
“அதை விட்டுட்டு எனக்கு முடியலை அது இதுன்னு நான் பேசினதை சொல்லி என்ற புள்ளைய வற்புருத்தனும்னு நினச்சீங்க நான் மனுஷியா இருக்கமாட்டேன். என்னோட புள்ள மனசை நான் குளிரவைக்கத்தான் பார்க்கனும். நெருப்பு வைக்க இல்லை. நீங்க சொல்றது அவனோட நெனப்புக்கு நாமலே கொள்ளிபோடறதுக்கு சமம்…”
“நான் செத்தாலும் அப்படி ஒரு செயலை செய்யவே மாட்டேன். என்ற புள்ளையோட மனசுதான் எனக்கு முக்கியம். அவனுக்கு மனசு நிச்சயம் ஒரு நாள் மாறும். என்ன ஒன்னு அதை பார்க்க நான் இருப்பேனான்னு தான் தெரியலை…” என தனது கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவர்,
“சரி, சரி இந்த பேச்சை இத்தோட நிறுத்திக்கோங்க. அவன் வந்துடபோறான். இப்படி பேசினது காதுல வாங்கினா கூட தாங்கமாட்டான்யா என் மவன்…” என மருகியவர் மீண்டும் கண்களை துடைத்துவிட்டு அமைதியாக அவரது கைகளை வருடி ஆறுதல் படுத்தமுனைந்தார் முத்தைய்யா.
உள்ளே நடந்த சம்பாஷணைகளை கேட்ட தினகரனுக்கு நெஞ்சம் விம்மியது. எத்தனை பிரயத்தனப்பட்டும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியாமல் இங்கேயே வெடித்து சிதறிவிடுவோமோ என அஞ்சி அங்கிருந்து தனிமை நாடி நகர்ந்தான்.
தனக்காக தங்களது ஆசைகளை மனதினுள் பூட்டிவைத்துவிட்டு தனக்காக மட்டுமே வாழும் அவர்களுக்கு தான் என்ன செய்துவிட்டேன் என சிந்திக்க ஆரம்பித்திருந்தான். இங்குமங்கும் அலைபாய்ந்த மனமானது அலசி ஆராய்ந்து ஒரு தீர்வை சொல்ல அந்த முடிவை எடுத்தான்.
இனி தாய்க்கு பின் தான் எல்லாம் என முடிவெடுத்த பின் கூட நிலாவின் நினைப்பு அவனை நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஆனாலும் வேறு வழியும் புலப்படவில்லை அவனுக்கு. கல்லாக இறுகினான்.
நெஞ்சில் வைத்து பூஜித்த நேசத்தை வேரறுக்க நினைத்தாலே உயிரை பிழியும் வலியை உணர்ந்தான். ஆனாலும் முயன்று தன்னை கட்டுக்குள் வைத்துக்கொண்டான்.
உயிரென காதல் கொண்டவளிடம் கூட கண்பார்வையிலும் கட்டுப்பாடோடு கண்ணியம் காத்தவனுக்கு இதுவும் சாத்தியம் தான் ஆனது.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ மெல்ல அங்கிருந்து எழுந்து தாயை தேடி சென்றான். அங்கே அமுதாவும் குணசேகரனும் வந்திருக்க முத்தழகியின் உடல்நிலையை பற்றி விசாரித்துவிட்டு சிறுது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
முத்தழகி வீட்டிற்கு வந்து இரண்டுநாட்கள் ஆனபின் தனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்குமாறு தினகரன் கூறவும் இருவருமே அதிர்ந்துபோயினர். அவனது முகத்தில் எந்தவிதமான உணர்வும் அவர்களுக்கு பிடிபடவில்லை.
அவனிடமிருந்து இப்படி ஒரு செயலை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை அவர்கள். தனக்காகவோ என எண்ணி முத்தழகி கேட்ட கேள்விக்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் இருக்க முத்தழகி முடியாதென்க, தன் பிடியிலேயே நிலையாக நின்றான் தினகரன்.
ஒருவழியாக அவனின் வழிக்கே சென்று பெண்ணை பார்ப்பதென முடிவு செய்து ஏற்பாடுகள் நடக்க முதலில் மனசுணக்கத்தோடு ஆரம்பித்த கல்யாணவேலை பின் விருப்பத்தோடும் சந்தோஷத்தோடும் நடைபெற்று இதோ வண்ணமதியும் வந்தாகிவிட்டது.
நடந்தவைகளை நினைக்கும்போதே நெஞ்சடைத்தது தினகரனுக்கு. இதுதான் விதியோ? இப்படி நடக்கவேண்டும் என்பதுதான் இறைவனது கட்டளையோ? என யோசிக்க யோசிக்க விடைதான் கிடைத்தபாடில்லை.
சிறிது நேரத்தில் அறைக்கு செல்லுமாறு கூறிய முத்தழகியை தாண்டி செல்ல அறையில் வண்ணமதி ஏற்கனவே அமர்ந்திருந்தாள்.
ஒரு கணம் நின்று துடித்தது அவன் இதயம். கண்களை இறுக மூடி திறந்தவன் மூச்சை ஆழ இழுத்துவிட்டு அவளருகில் சென்று அமர்ந்தான். அவனின் வருகையை உணர்ந்ததும் வண்ணமதி எழுந்து நிற்க,
“உட்காரம்மா…” முதல் வார்த்தை அவளிடம் அவன் பேசுவது.
“இல்லை நீங்க வரவும் கால்ல விழ சொன்னாங்க அத்தை…” அவளிடம் கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாத வார்த்தைகள் எந்தவித தங்குதடையும் இன்றி வந்து தினகரனின் செவியை நிறைத்தது.
கொஞ்சமும் மணப்பெண்ணுக்கே உரிய படபடப்போ பதற்றமோ இன்றி இயல்பாக பேசுபவளை விசித்திரமாக பார்த்து,
“அதெல்லாம் பரவாயில்லை. நீ முதல்ல உட்கார்…” கொஞ்சம் அழுத்தத்தோடு வந்ததோ அவனது வார்த்தைகள். மறுபேச்சின்றி சட்டென அமர்ந்தாள்.
“உன் பேர் வண்ணமதி தானே?…” அவனுக்கே ஏனோ இந்த கேள்வி அபத்தமாக பட்டது.
ஆனாலும் அவனுக்கு பேசவேண்டும்? தனது நிலையை தெளிவாக கூறவேண்டும்? அவளை ஆராய்ந்தான்.
மெலிதான காட்டன்புடவையில் மிதமான அழகோடு கண்களை உறுத்தாத அலங்காரத்தோடு தன்னையே பார்த்துக்கொண்டிருப்பவளை இவன் அளவிட்டு பின் அதிர்ந்தான்.
இவள் ஏன் கொஞ்சமும் அசராமல் என்னையே பார்க்கிறாள்? அவனுக்கு வியப்பான வியப்பு. என்ன பெண் இவள்? என திகைத்துத்தான் போனான்.
அவனது யோசனையை கண்டுகொண்டது போல அவளது விழிகள் மின்னின. என்னவென்பது போல அவள் தலையசைக்க இவன் தான் பார்வையை வேறு புறம் திருப்பவேண்டியதாகிற்று.
இவனது பாவனையில் வண்ணமதிக்கு சிரிப்பு பொங்கிவர அதை வாய்க்குள் மென்றாலும் கண்கள் சிரித்தனவே. மீண்டும் அவளை பார்த்த தினகரனும் அதை கண்டுகொண்டான்.
அதில் கொஞ்சம் கடுப்பானவன் இவளை கண்டு தான் ஒதுங்குவதா? என்னிடமேவா? என்று தானும் அவளை தீர்க்கமாக பார்க்க அப்போதும் அவனது பார்வையை அவள் எதிர்க்கொள்ள தயங்கவில்லை.
“மதி உன்கிட்ட முதல்ல நான் கொஞ்சம் பேசனும்…” ஆரம்பித்தாகிற்று.
“நிலாமுகியை பற்றி தானே மாமா?…” சாவாதனமாக கேட்டவளை விழிகள் தெறிக்க வாயடைத்துபோய் பார்த்தான்.
பேச்சிழந்து அமர்ந்திருந்தவனது விழிகளில் தென்பட்ட வலியில் அவனை அமைதியாக பார்த்தவள்,
“நிலாவுக்கு நான் சீனியர். ரெண்டு பேரும் ஒரே காலேஜ் தான் மாமா. அவ பர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணும் போது நான் பைனல் இயர். நாங்க ப்ரெண்ட்ஸ் கூட. ரொம்ப நல்ல புள்ளை அவ. நீங்க அவளை பார்க்கிறது இல்லை இல்லை அவளை பார்த்தது எனக்கு தெரியும்…” மேலும் அவனை அதிரவைத்தாள்.
அப்போதுமே அவளை பார்த்தது என்று அவனது கடந்தகாலமென தான் கூறினாளே தவிர இனியும் பார்க்கமாட்டாய் என்பது எனக்கு தெரியும் என்னும் தெளிவே அவளது வார்த்தையில் தென்பட்டது.
“அந்த புள்ளைக்கே தெரியாம நீங்க அவளை பார்க்கிறதும், யாரும் பார்க்காதது போல பார்த்துட்டு யாரும் பார்க்கிறதுக்குள்ள அதை உங்களுக்குள்ள மறைச்சதும் எனக்கு தெரியும். நான் தற்செயலாதான் உங்களை கவனிச்சேன். அதுக்கு பின்னால எனக்கொரு சுவாரஸியம் உங்களை கவனிக்கிறதுல…”
“அப்போவே நான் உங்களை உங்க விருப்பத்தை கண்டுபிடிச்சுட்டேன். எனக்கும் உங்களை பத்தி தெரியும். நானும் பக்கத்து ஊர் தானே? அதுவும் இல்லாம இங்க நான் அடிக்கடி வந்திருக்கேன். என்னோட சொந்தக்காரவங்க நிலாவோட பக்கத்து வீடுதான். இவ்வளவு ஏன் நிலா கூட உங்களை பத்தி பெருமையா சொல்லுவா தெரியுமா?…” என்றவள்,
“தினகரன் மாமா மாதிரி இந்த உலகத்தில அவங்க மட்டும் தான்னு ரொம்ப பெருமையா கர்வமா சொல்லுவா…” எனும் போதே அவனுக்கு ஆச்சர்யமானது.
“நிலா தன்னை மாமா என்றா கூறுவாள்? எனக்கு இது தெரியாதே” என நினைக்கும் போதே அவனது மனசாட்சி,
“நீ என்னைக்கு அவகிட்ட பேசின? இல்லை எப்போ அவளை பேசவிட்டிருக்க?” என்று இடித்துரைக்க அமைதியாக இருந்தான்.
தன் யோசனையில் இருந்தவனை மீட்டது வண்ணமதியின் குரல்.
“எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா…” இதில் அதிர்ந்துபோய் அவளை பார்த்தான் தினகரன்.
“பிடிக்கும்னா நீங்க நினைக்கிறது போல இல்லை. ஒரு நல்ல கண்ணியமான மனுஷனா உங்களை எனக்கு மட்டுமில்ல எங்க காலேஜ்ல நிறைய பொண்ணுங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும். அந்த விதத்துல சொன்னேன்…”
“நீங்க கூட எனக்கு தூரத்து உறவுமுறையாம். அம்மா சொல்லுச்சு. முதல்ல உங்களுக்குத்தான் என்னை கேட்கிறாங்கன்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சதும் சத்தியமா என்னால நம்பவே முடியலை…”
“நிலாவுக்கு கல்யாணம்னு சொல்லுபோதே எனக்கு சுருக்குன்னுச்சு. எப்படி நீங்க இதை ஏத்துப்பீங்கன்னு? ஆனாலும் எதாச்சும் செய்வீங்க, நிலாவை தூக்கிடுவீங்கன்னு நினைச்சேன். ஆனா இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை…” என்றவளது முகம் கொஞ்சம் கவலையை பூசியதோ?
“ஏன் மாமா நிலா கிடைச்சிடுவாளா?…” உண்மையான கவலையோடும் வருத்தத்தோடும் கேட்டவளிடம் என்ன சொல்வது என புரியாமல் திகைத்து அமர்ந்திருந்தான்.
“ஏன் மதி இவ்வளோ தெரிஞ்சிருந்தும் எப்படி என்னை கல்யாணம் செய்ய சம்மதிச்ச?…” இதை கேட்காமல் தினகரனால் இருக்கமுடியவில்லை.
“உங்களை விட்டுகொடுக்க யாருக்காவது மனசு வருமா? நான்னு இல்லை என் இடத்துல வேற எந்த பொண்ணு இருந்தாலும் உங்களை நிச்சயம் இழக்க விரும்ப மாட்டாங்க…” நிறுத்தியவள் பின் அவனது விழிகளை நேருக்கு நேர் பார்த்து,
“இப்போவுமே எனக்கு ஒரு கணவனா உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. இது காதலான்னு சொல்லமுடியாது. நீங்க எனக்கு குடுத்திருக்கும் மனைவின்ற உரிமை கொடுத்த பிடித்தம்னு நினைக்கிறேன். ஆனா மாமா…” என அவனை பார்த்து நிறுத்தியவள்,
“இந்த நிமிஷம், இந்த நொடி நீங்க என்னுடைய புருஷன். இதுதான் நிஜம். இதை நான் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன். உங்களோட மனசு முழுக்க இந்த வண்ணமதி நிறைய போற நாள் ரொம்ப தூரமில்லைன்னு மனசு சொல்லுது மாமா. நீங்களும் உடனே என்னை ஏத்துக்கனும், பொண்டாட்டியா கொண்டாடனும்னு நான் எதிர்பார்க்கலை. அதுக்கு கொஞ்சம் நாள் ஆகுமில்லையா?…”
சின்ன கண்சிமிட்டலுடன் கூறியவது பாவனையை பார்த்து அவனுக்கும் கொஞ்சம் மனம் லேசாகி புன்னகை எட்டிப்பார்த்தது.
“எவ்வளவு அழகா புரிதலோட பேசறா” ஏனோ தினகரனது மனம் லேசானதை போன்ற ஒரு உணர்வு.
“நான் பேசனும்னு சொன்னேன் மதி…” என்றவனிடம்,
“நிலாவை பத்தி பேசவும் நீங்க தான் அமைதியாகிட்டீங்க. நான் இதை சொல்லனும்னு நினச்சேன் மாமா. சொல்லிட்டேன்…” இனி நீயே சொல் என்பது போன்ற பாவம் அவளது முகத்தில்.
“நான் ஏன் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு தெரியுமா உனக்கு?…” எனவும் இல்லையென தலையசைத்தவளிடம் தனது தாய் பேசியதை கூறினான்.
முத்தழகியின் மேல் இன்னமும் மதிப்பு கூடியது வண்ணமதிக்கு. யாருக்கு கிடைக்கும் இப்பேர்ப்பட்ட அன்பு என எண்ணி சிலிர்த்தாள்.
“என்னோட அம்மாவுக்காக இந்த கல்யாணம் என்றாலும் என் வாழ்க்கை முழுமைக்கும் இது மட்டும் தான் மதி. உனக்கு புரியுதா?…” என்றவன் பேச்சை அவனே தொடர்ந்தான்.
“உண்மையை சொல்லனும்னா உன் கழுத்துல தாலி கட்டுற கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிவரை நான் நிலாவைத்தான் நினைச்சிட்டு இருந்தேன். உண்மையை உன்கிட்ட மறைக்க நான் விரும்பலை மதி…”
இது மனைவியாக வண்ணமதிக்கு கொஞ்சம் வலியை கொடுத்ததுதான். ஆனாலும் அதை தனக்குள்ளேயே மறைத்தாள்.
“அந்த நொடி நிலா கிடச்சிருந்தாலும் நான் உன்னைத்தான் திருமணம் செய்திருப்பேன். அதுதான் உண்மை. மாங்கல்யத்தை கைல வாங்கின அந்த நொடி என் மனசுக்குள்ள ஒரு சபதம்…”
“அந்த நிமிஷத்துல இருந்து உனக்கு மட்டுமே உண்மையானவனா இருப்பேன்னு எனக்கு நானே ஒரு தீர்மானம் எடுத்துக்கிட்டேன். என்னோட காதலை நிலாவை எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு புதைச்சுட்டேன்…”
உன்னை நான் அறிவேன் என்பது போல அவனையே விழி எடுக்காது பார்த்திருந்தாள் வண்ணமதி. அவனது சுபாவம் ஓரளவு அவள் அறிந்தது தானே.
“நீதான் என் மனைவி, இனி நீ மட்டும் தான் என் வாழ்க்கை, என்னோட சுகதுக்கங்கள் பகிர்ந்துக்கற எல்லா உரிமையும் உனக்கு மட்டும் தான் அப்டின்ற முடிவோட சுத்தமான மனசோடதான் உன்னோட கழுத்துல நான் மூணு முடிச்சு போட்டு என் வாழ்க்கைக்குள்ள கொண்டுவந்தேன்…”
“இந்த நிமிஷம் நிலா என்னோட மாமாவோட பெண். என் கண்முன்னால் வளர்ந்த அன்பிற்குரிய பெண். என் அப்பாவோட நண்பரது மகள் அப்டின்ற நினைப்பு மட்டும் தான் எனக்குள்ள…”
“அவளை தேடி கண்டுபிடிச்சு சேகரன் மாமாக்கிட்ட ஒப்படைக்கிற கடமையும் பொறுப்பும் எனக்கிருக்கு மதி. அவ கிடைச்சாதான் எனக்கு மனசுக்கு நிம்மதி. அந்த உறுத்தலோட என்னால என் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது…”
“வெறும் கடமைக்காக மட்டும் நாம வாழ்க்கையை ஆரம்பிக்கிறது எனக்கு விருப்பமில்லை. நீ சொல்றது போல நீ என் மனசு முழுக்க நிறைஞ்சு நிக்கனும். அந்த நிமிஷம் நம்ம வாழ்க்கையை நாம வாழ ஆரம்பிக்கனும். நானும் எதிர்பார்க்கிறேன் மதி…”
யாரிடமும் மனம் திறந்து பேசாதவன் இன்று மதியிடம் மடைதிறந்த வெள்ளம் போல தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டான்.
அவனை அறிந்த மதிக்கு தினகரனது மனதிற்குள் தன் முதல் தடத்தை பதித்துவிட்டோம் என்ற எண்ணமே மனதிற்குள் சந்தோஷ அலையாய் ஆர்ப்பரித்தது.
அவனின் மனதை தான் மட்டுமே ஆளப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என கனவில் மிதந்தவள் அவனிடம் மெல்லிய புன்னகையை சிந்தி தனது ஒப்புதலை தெரிவித்தாள்.
அவனோடான வாழ்க்கை பயணம் சுகமாக வேண்டுமென்றால் அதற்காகவேணும் நிலா சீக்கிரம் கிடைக்கவேண்டும் என பிராத்தானை கொண்டாள் தினகரனின் மதி.