தேடல் – 7
நிலாமுகியிடம் சம்மதம் பெற்றதும் இந்த உலகையே வென்றுவிட்ட கர்வம் தோன்றவில்லை ஆரவ்க்கு. தன் காதலால் அவளை கர்வம் கொள்ள செய்ய நினைத்தான். வாழ்நாள் முழுவதும் தன் அன்பெனும் மடியில் அவளை தாங்கி தாலாட்ட ஆசை கொண்டான்.
அவனது அணைப்பிற்குள் அடங்கி நின்றவளை தன்னிடமிருந்து விலக்க மனமில்லாத போதும் தான் இன்னும் செய்யவேண்டிய வேலைகள் கண்முன் தோன்றி அவனை துரிதப்படுத்தியது.
“நிலா…” அவளை அழைக்கும் போதே அவனிடமிருந்து விலகியவள் கொஞ்சம் கலக்கத்தோடு அவனை ஏறிட்டாள்.
அவளது விழிகளில் தெரிந்த காதலையும் கலக்கத்தையும் ஒரே நேரம் தன் மனப்பெட்டகத்திற்குள் சேகரித்தவன் அதை உடனே களைய முடியாமைக்கு வருந்தினான்.
தன் காதலும், தான் அவளோடு வாழும் வாழ்க்கையும் தான் இந்த கலக்கத்தை சிறிது சிறிதாக அகற்றும் என எண்ணியவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.
“நிலாவுக்கு என்னாச்சு? என்னிடம் இருந்து விலகினதும் திடீர்னு ப்யூஸ் போன பல்ப் போல முகத்துல ப்ரைட்னஸ் சட்டுன்னு குறைஞ்சிடுச்சு?…” அவளை இலகுவாக்கும் பொருட்டு வழக்கம் போல கேலி இழையோட அவளிடம் பேசினான்.
அதில் தன்னை மீட்டவளாக, “அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆனாலும் கொஞ்சம் பயமா இருக்கே டாக்டர்…” எனவும்,
“இன்னும் டாக்டரா? அது சரி. கல்யாணத்துக்கு பின்னாலையும் அப்டித்தான் என்னை கூப்பிடுவியோ?…”
“வேற எப்படி கூப்பிட? நீங்க சொல்லுங்க…” பொறுப்பை அவனிடமே தள்ளிவிட ஏனோ அவனுக்கு அவள் தன்னை பெயர் சொல்லி அழைக்க சொல்ல விருப்பம் வரவில்லை.
“ஹ்ம் திடீர்னு கேட்டா எப்படி? சரி நானே யோசிச்சு சொல்றேன். இப்போ கிளம்பவா? வீட்ல கொஞ்சம் பேசவேண்டியதிருக்கு. நம்ம கல்யாணத்தை பத்தி…” எனவும்
“உங்க வீட்ல ஒத்துப்பாங்களா? என்னை பிடிக்கலைனா?…” எங்கே தன்னை மறுத்துவிடுவார்களோ என்னும் அச்சம் அவளை ஆட்கொள்ள,
“என்னடா நிலா, உன்னையும் யாருக்காவது பிடிக்காம இருக்குமா?…” இப்போது இன்னும் சுணங்கியவள்,
“அப்போ ஏன் என்னை தேடி யாருமே வரலை. என்னோட அப்பாம்மா கூட என்னை வேண்டாம்னு நினைச்சுட்டாங்களோ? இல்லை ஒருவேளை எனக்கு யாருமே இல்லையா?. அப்படி அவங்க இருந்திருந்தா எனக்கு கல்யாணம் பேச அவங்கதானே வந்திருப்பாங்க?…” தனக்கு யாருமில்லையோ என்னும் நினைப்பே அவளை இன்னும் வாட்டியது.
இப்படியும் அப்படியுமாக யோசித்து பேசிக்கொண்டே விசும்பியவாறே அவனது மார்பில் தஞ்சம் புக அவளின் இந்த நிலை பொறுக்காமல் தன்னோடு அணைத்துகொண்டான் ஆரவ். அவனுக்கும் நிலாவின் ஏக்கம் கண்களை கலங்கச்செய்ய,
“இப்படிலாம் பேசவே கூடாதுடா நிலா. இனிமே நான் தான் உனக்கு எல்லாமும். புரியுதா? என்னோட அப்பாதான் உனக்கும் அப்பா. என்னோட சொந்தங்கள் தான் உனக்கும் சொந்தங்கள். இனிமே இப்படி தத்துபித்துன்னு உளறவே கூடாது…”
கொஞ்சம் அதட்டலோடு அவளிடம் மொழிந்தவன் நிலாவின் தலையில் லேசாக முட்ட அப்போதுதான் கவனித்தான்.
நிலாவின் முகம் வியர்த்திருக்க கண்கள் ரத்தமென சிவந்திருக்க வலியில் முகத்தை சுருக்கியவாறே விழிகள் செருக அவனது கைகளில் தொய்ந்து விழுந்தாள்.
“என்னால வலி தாங்கமுடியலை டாக்டர். தலை ரொம்ப வலிக்குது. யாரோ என்னை அடிக்கிறாங்க. வலிக்குது…” தலையை தாங்கியவாறு அவள் வேதனையில் சுருள அதிர்ந்துவிட்டான் ஆரவ்.
தான் ஒரு மருத்துவனாக இருந்தும் அந்த நேரம் நேசமிக்கவளது வலியை எப்படி போக்குவது என்று செய்வதறியாமல் திகைத்து நிலா நிலா என அவளை கட்டிகொண்டு புலம்ப அங்கே அர்ஜூனும் வந்து சேர்ந்தனர்.
ஏற்கனவே ஆரவ் வீட்டிலிருந்து கிளம்பவும் அர்ஜூனும் ராகவனிடம் பேசிவிட்டு ஹாஸ்பிட்டல் தான் வந்தான். அவனுக்கு உடனே நிலாவை பார்க்கவேண்டி இருந்தது. தன்னை பார்த்த நொடியே தன்னை அண்ணனாக எண்ணியவள் நிலா என்னும் பாசம் அவனுக்கு எப்போதுமே உண்டு.
வரும்போதே ஸ்டெபியிடம் மொபைலில் நிலா பற்றிய விவரத்தை கூறியவன் அங்கே வந்துகொண்டிருப்பதாகவும் கூறினான்.
ஸ்டெபியும் தான் கேட்ட தகவலில் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். தன் தந்தைக்கும் இந்த தகவல் தெரிந்திருக்க இத்தனை நாள் ரகசியமாக வைத்திருக்கின்றனரே? இனி ஆரவ்வை எப்படி சமாளிப்பது என யோசித்துக்கொண்டே அர்ஜூனிற்காக காத்திருந்தாள்.
ஏனோ ஸ்டெபிக்கு நிலாவை தனியாக சந்திக்க தைரியம் வரவில்லை. அதனால் அர்ஜூனோடு செல்ல நினைத்தாள்.
அவனும் வந்ததும் இருவரும் சேர்ந்து நிலாவின் அறைக்குள் வர அங்கே அவர்கள் பார்த்தது இதை தான். ஆரவ்வின் பரிதவிப்பையும், நிலாவின் கதறலையும் தான்.
வலியால் நிலா துடித்துகொண்டிருக்க அவளது ஒவ்வொரு துடிப்பிற்கும் ஆரவ் உள்ளுக்குள் மரித்துகொண்டிருந்தான்.
இருவரது இந்த நிலை காண முடியாமல் ஸ்டெபி தவிக்க அர்ஜூன் தான் விரைந்து செயல்பட்டான். ராகவ் கூறியதை வைத்து நிலாவை கவனித்துகொண்ட டாக்டர் மயூரியை உடனடியாக அழைத்தான்.
மயூரி ராகவனின் கல்லூரியில் அவருடன் ஒன்றாக படித்தவர். ராகவ் ஹாஸ்பிட்டல் ஆரம்பித்து கொஞ்சம் வளர்ச்சியடைந்த பின் நல்ல சம்பளம் என்று இதில் வந்து பணியாற்ற ஆரம்பித்துவிட்டார் மயூரி.
ரூமில் நர்ஸை அழைக்க இருந்த பெல்லை அழுத்திவிட்டு ஆரவ்வை நகர்த்தி நிலாவை அள்ளி கட்டிலில் கிடத்தினான் அர்ஜூன். வெறித்த பார்வையில் இருந்த ஆரவ்வை உலுக்கி,
“ஆரவ்…” என்று அதட்ட அதில் தெளிந்தது ஆரவ் மட்டுமல்லாது ஸ்டெபியும் தான்.
“அஜூ நிலாடா. இப்படி துடிக்கிறாளே? என்னால முடியலை…” என கூறியவன் நிலாவின் அருகில் சென்று அவளை மார்போடு அணைத்துகொண்டான்.
வலி தாளமுடியாமல் அவனோடு ஒண்டியவள் அவனை பிடித்து இருந்த பிடி இறுக அதில் வலியை உணர்ந்தவன் எந்தளவிற்கு வேதனையை அனுபவித்துகொண்டிருக்கிறாள் என அதிர்ந்தான்.
அதற்குள் டாக்டர் மயூரியும் அவருடன் ஒரு நர்ஸ் சேர்ந்து வந்ததும் நிலாவிற்கு ஒரு இன்ஜெக்ஷன் போடப்பட்டது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்திற்குள் செல்ல அதற்குள் இரண்டு மாத்திரைகளையும் அவளது வாயில் போட்டு தண்ணீரை புகட்டினார்.
இப்போது முழுதாக மயக்கத்தின் உலகிற்கு செல்ல ஆரவ் மெல்ல அவளை படுக்கவைத்துவிட்டு தள்ளி அமர்ந்தான்.
“நிலாவிற்கு இப்படித்தான் தினமும் தலைவலி வருமா டாக்டர்?…” என அர்ஜூன் வினவ மயூரி ஆரவ்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“தினமும் வராது அர்ஜூன். எப்போவாவது அவங்க அதிகமா பழைய ஞாபகங்களை வலுக்கட்டாயமா யோசிச்சு வெளிக்கொண்டுவர முயற்சிக்கும் போது இதுபோல் வலி வரும். இதுவரை ஏற்கனவே இரண்டு முறை வந்திருக்கு அவங்களுக்கு. இன்னும் மூன்றுமணி நேரம் நல்ல தூக்கத்தில் இருப்பாங்க…”
அப்போதும் அவர் ஆரவ்வை தான் பார்த்துகொண்டிருந்தார் தயக்கத்தோடு. ஆரவ்வின் விருப்பம் ஓரளவிற்கு அந்த ஹாஸ்பிடல் முழுவதும் தெரிந்தது தான். ராகவன் வேறு நிலாவை தன் ரிலேட்டிவ் என சொல்லிவைக்க யூகத்திற்கு கூட வாய்ப்பில்லாமல் ஆரவ்வின் வருங்கால மனைவி என்னும் அளவிற்கு நிலாவை புரிந்து வைத்திருந்தனர்.
அதனாலேயே ராகவன் நிலாவை பற்றிய இந்த விஷயங்களை ஆண்டனியை தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பார்த்துகொண்டார்.
நிலாவின் முகத்தையே பார்த்துகொண்டிருந்த ஆரவ்வை பார்த்த மயூரி,
“ஆரவ் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. ராகவ் சார் எது செய்தாலும் அது உங்க நல்லதுக்குத்தான். உங்க வாழ்க்கை இது. கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க…” என ஹிந்தில் மொழிய கடுப்பாகிவிட்டான் ஆரவ்.
அதை வார்த்தையில் காண்பிக்கும் முன் சுதாரித்த அர்ஜூன்,
“நீங்க கிளம்புங்க டாக்டர். நாங்க நிலாவை பார்த்துக்கறோம். தென் நீங்க நிலவுக்கு குடுக்கிற டிரீட்மென்ட் பத்தின டீட்டெயில்ஸ், ஃபைல்ஸ், ப்ரிஸ்க்ரிப்ஷன் பத்தின லிஸ்ட் எல்லாமே இன்னும் ஒன் ஹவர்ல என்னோட டேபிளுக்கு வரனும். நீங்களும் என்னோட ரூம்ல இருக்கனும்…”
அர்ஜூனின் இந்த அழுத்தமான குரலே மறுக்கமுடியாததாக இருப்பினும் மயூரிக்கு கொஞ்சம் உதறல் தான்.
“இல்லை அர்ஜூன், ராகவ் சார்க்கிட்ட கேட்டு…” அவரை முடிக்க கூட விடவில்லை அர்ஜூன்.
“டூ வாட் ஐ சே டாக்டர் மயூரி…” என கண்கள் சிவக்க சீறியவன்,
“இப்போ நீங்க கிளம்பலாம். இன்னும் ஒருமணி நேரத்தில் நான் உங்களை மீட் பன்றேன்…”
அநாவசியங்களை தவிர்த்து தேவைக்கு மட்டுமே கோபப்படுபவன் அர்ஜூன். அப்படி நேரங்களில் யாராலும் அவனை எதிர்க்கவே முடியாது.
இதற்கு மேலும் நின்றால் அர்ஜூனின் கோவத்தை தாங்கமுடியாது என்றறிந்த மயூரி ஒரு பெருமூச்சோடு நர்ஸிடம் நிலாவை கவனமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டார்.
அவர் சென்றதும் ஸ்டெபி இன்னும் அதே இடத்தில் நிலாவையும் ஆரவ்வையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே நிற்க அர்ஜூன் நர்ஸை வெளியில் நிற்க சொல்லிவிட்டு அந்த அறைக்கதவை அடைத்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலாவின் முகத்தை வேதனையோடு பார்த்துவிட்டு தானும் இப்போது உடைந்துவிட கூடாது என எண்ணிக்கொண்டே ஆரவ்வின் புறம் திரும்பி,
“ஆரவ் என்னை பார்…”
அதுவரை அமைதியாக இருந்தவன் அர்ஜூனின் தோள் சாய்ந்துகொள்ள ஸ்டெபி அவனின் நிலை கண்டு அழவே ஆரம்பித்துவிட்டாள்.
அதில் கடுகடுத்த அர்ஜூன், “வாயை மூடு ஆஷா. நல்லா இருக்கிறவனையும் நீயே கலங்க விட்டுடுவ. நீங்க ரெண்டு பேரும் ஹார்ட் சர்ஜன்னு சொல்லிக்க உங்களுக்கு வெக்கமா இல்ல?…” என்று சீறவும் ஸ்டெபி பதறி தன் அழுகையை அடக்கினாள்.
சில நிமிடங்கள் அமைதியாகவே கழிந்தன. ஆரவ் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பொருத்து பார்த்த அர்ஜூன் அவனை இழுத்துகொண்டு அறையை விட்டு வெளியேற போக ஸ்டெபி அவர்களை பார்த்தபடியே நிலாவின் அருகில் அமர்ந்தாள்.
“உனக்கு வேற தனியா சொல்லனுமா? இல்லை இவனை போல உன்னையும் இழுத்துட்டு போகனும்னு நினைக்கிறையா? வா என்னோட…” என உறுமிவிட்டு கதவை திறந்தவன் அங்கே நர்ஸ் நிற்பதை பார்த்து,
“இனி நிலாவை பார்க்க யார் வந்தாலும் என்னை கேட்காம அலோவ் பண்ண கூடாது. யாரா இருந்தாலும். அதே போல எப்போவும் நீங்க இந்த ரூம் விட்டு போக கூடாது. இன்னொரு ஷிப்ட் மாத்த நானே ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்வேன்…”
“நிலாவுக்கு திரும்ப தலைவலியோ வேற ப்ராப்ளம் வந்தா என்கிட்டே தான் முதல்ல இன்ஃபார்ம் செய்யனும். இனி மீறி வேற ஏதாவது செஞ்சா இந்த வேலையில நீங்க இருக்கமாட்டீங்க. தமிழ் புரியுது தானே?. உள்ள போங்க…” என்று தெள்ளதெளிவாக தமிழில் நர்ஸையும் எச்சரித்துவிட்டு தன்னறைக்கு சென்றான் அர்ஜூன்.
ஆரவ்வை சேரில் அமர்த்திவிட்டு தானும் இன்னொரு சேரில் அவன் அருகே அமர்ந்தவன்,
“ஏன்டா இப்படி கவலைப்பட்டே நாட்களை ஓட்டிடலாம்னு பார்க்கிற போல? அப்போ நிலாவை கல்யாணம் செய்துக்கற முடிவை மாத்திக்கபோறயா?…” என்றதும் விலுக்கென்று நிமிர்ந்தவன்,
“என்ன ராகவ் ட்ரெய்னிங்கா? என்ன ஆனாலும் சரி என்னோட நிலாவை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். நான் சொன்னது போல கல்யாணம் நடந்தே தீரும். அவளை இந்த ப்ராப்ளத்துல இருந்து காப்பாத்தியே தீருவேன். நைட் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து சேருங்க…” தீர்க்கமாக பேசியவன் அங்கிருந்து எழுந்துசென்றுவிட்டான்.
ஸ்டெபியும் அவனை பின் தொடர்ந்து செல்ல எத்தனிக்க,
“நில்லு ஆஷா. படிச்சவ தானே நீ? ரெண்டு பேரும் சேர்ந்து எத்தனை சர்ஜரியை சக்சஸ்ஃபுல்லா முடிச்சிருக்கீங்க? அப்போ இருந்த மன தைரியம் இப்போ எங்க போச்சு?…”
“அவன் தான் கட்டிக்க போறவன். உடைஞ்சுபோய் நின்னா ஒரு நல்ல ப்ரெண்டா அவனை நீ தான் தேத்திருக்கனும். நீயும் அழுது அவனையும் அழ வச்சிருப்ப. பாரு அந்த நிமிஷம் அதிர்ந்தாலும் அடுத்த நொடி எப்படி தன்னம்பிக்கையா பேசிட்டு போறான். நீ என்னனா?…”
மீண்டும் அவன் திட்டவும் அதில் அவளுக்கு அழுகை வர அதை பார்த்தவன் இன்னும் கோவமானவன்,
“இவ்வளோ தூரம் சொல்லியும் நீ திரும்ப அழத்தான் செய்யற. இதுக்காகவா உன்னிடம் போனில் எல்லா விஷயத்தையும் சொன்னேன். ஷேம் ஆன் யூ. ஆஷா. கெட் லாஸ்ட்…” என வெடிக்கவும் அதிர்ந்துபோய் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
ஒரே நாளில் இத்தனை போராட்டம். அதில் இவனுக்கு தலையை வலிக்க நெற்றிபொட்டை அழுத்திவிட்டுக்கொண்டே அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் மயூரி கதவை தட்டவும், ஆரவ் வரவும் சரியாக இருந்தது. அவர்கள் இருந்தது அர்ஜூனின் பர்ஸனல் அறையில்.
கைகளில் மெடிக்கல் டீட்டயில்ஸ் அடங்கிய ஃபைல்களை வைத்துகொண்டு கொஞ்சம் பயத்தோடு வந்து அமர்ந்தார் மயூரி. அர்ஜூன் கூட ஆரவ்வை தானே அனைத்தையும் கேட்டு சொல்வதாக கூற ஆரவ் ஒரேடியாக மறுத்துவிட்டான்.
அவனுக்கு அவனது நிலாவை பற்றி அனைத்தும் தெரிந்தே ஆகவேண்டி இருந்தது. கேள்விகள் கேட்கவேண்டியதும் இருந்தது.
அடுத்த இரண்டு மணி நேரமும் மயூரியை கேள்விகளால் மாற்றி மாற்றி துளைத்தெடுத்த ஆரவ்வும் அர்ஜூனும் ஃபைலில் இருந்த தகவல்களை ஒரு வரி விடாமல் படிக்க, அதில் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு மயூரி விளக்கம் அளித்தே ஓய்ந்துபோனார்.
மேலும் ஒரு மணிநேரம் கடக்க அதன் பின்னே தான் மயூரியை அந்த அறையை விட்டு கிளம்ப அனுமதித்தனர். அதன் பின் நன்கு தமிழ் தெரிந்த இன்னொரு நர்ஸையும் நிலாவை கவனித்துக்கொள்ள நியமித்து விட்டனர்.
பின் புதிதாக நியமித்த நர்ஸை அழைத்து எந்தெந்த வேளையில் என்னென்ன டேப்லட்ஸ் குடுக்க வேண்டும் என்று அட்டவணை படுத்தியவர்கள் நிலாவை சென்று பார்க்குமாறு கூறிவிட்டு மீண்டும் ஏற்கனவே நிலாவை பார்த்துக்கொள்ளும் பணியில் இருந்தவரை அழைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.
அதற்கு ஆரவ்விற்கு ஏற்பட்ட சந்தேகம் தான் காரணம். தான் நிலாவை காண வரும் போது நிலா மட்டுமே அறையில் தனித்து இருந்தாள். இதற்கு முன்பும் பெருவாரியான நேரங்களில் நிலா தனித்து இருந்து தான் ஆரவ் பார்த்திருக்கிறான்.
இப்படி ஒரு பாதிப்பு அவளுக்கு இருப்பதை அறியாத போது அதை பற்றி ஒன்றும் பெரிதுபடுத்த வில்லை. ஆனால் இப்போது நினைக்கும் போது நெருடியது அவனுள்.
அதை அர்ஜூனிடம் கூற அவனிற்குமே இந்த சந்தேகம் தோன்றியது தான். நிலாவின் நிலையறிந்த ராகவன் நிச்சயம் மெத்தனமாக இருக்க வாய்ப்பே இல்லை. நிலாவிற்கு துணைக்கு தகுந்த ஏற்பாடுகளை அவர் செய்திருப்பார் என்பதில் அவர்களுக்கு எந்தவித ஐயமும் இல்லை.
ஆனால் எங்கே இந்த தவறு நிகழ்கிறது என்று அவர்களுக்கு தெரியவேண்டியது இருந்தது. மயூரியிடம் கேட்கும் போது அவர் கொஞ்சம் உதறலோடு தான் பேசியதாக தோன்ற சட்டென அவரிடம் துருவாமல் கண்டுகொள்ளாமல் இருப்பது போல விட்டுவிட்டனர்.
அதுவும் இன்றி, நிலாவின் உடல்நிலைபடி பெங்களூரில் கொடுக்கப்பட்ட மருத்துவ சான்றிதழில் இன்னும் இரண்டுமூன்று மாதங்களில் ஆப்பரேஷன் செய்யும் அளவிற்கு அவளது உடல் தேறிவிடும் என அறிக்கையில் இருந்தது.
ஆனால் இங்கு இரண்டுநாட்கள் முன் எடுக்கப்பட்ட டெஸ்ட்களின் ரிசல்ட் அனைத்திலும் ஆப்பரேஷன் செய்யும் அளவிற்கு நிலாவின் உடலில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றே இருந்தது. இது எப்படி சாத்தியம்? என்று யோசிக்க யோசிக்க விஷயம் பூதாகரமாக தோன்றியது.
உடனடியாக அந்த நர்ஸை அழைத்தவர்கள் எப்போதெல்லாம் என்னென்ன மருந்து மாத்திரைகள் நிலாவிற்கு குடுக்கபட்டன? அவளுக்கு போடப்படும் இன்ஜெக்ஷன் கரெக்டான நேரத்தில் போடப்பட்டிருக்கிறதா என இயல்புபோலே விசாரிக்க அந்த நர்ஸ் பதில் கூறுகையில் தடுமாறினாள்.
ஆரவ்வை விட அர்ஜூனின் கோபம் முகம் தான் அவளை அச்சுறுத்தியது. முன்னுக்குப்பின் முரணாக ஏதோதோ உளற ஆரவ் தான் அவளை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினான்.
“இங்க பாருங்க, நிலா யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நீங்க உண்மையை சொன்னா தான் எங்களால அடுத்த ஸ்டெப் எடுத்துவைக்க முடியும். தயவு செய்து எங்க பொறுமையை சோதிக்காதீங்க…” என அடக்கப்பட்ட ஆத்திரத்தில் வினவ விதிர்விதிர்த்த நர்ஸ் நளினி,
“சொல்லிடறேன் ஸார். என்னை வேலைவிட்டு மட்டும் எடுத்துடாதீங்க. கொஞ்சம் கஷ்டபட்ட குடும்பம் என்னோடது…” என்றவள் நடந்ததை கூற கூற அதிர்ச்சியின் விளிம்பிற்கே சென்றனர்.
டாக்டர் மயூரி தன்னுடைய அலட்சியபோக்கால் நேரத்திற்கு நிலாவிற்கான சிகிச்சைகள் சரிவர செய்யாமல் இருந்திருக்கிறார். அவளுக்கு டேப்லட்ஸ், இன்ஜெக்ஷன் என குறிப்பிட்ட நேரத்தில் தரப்படாமல் தன்னால் எப்போது முடியுமோ அப்போது மட்டுமே வந்து பார்த்து தந்திருந்திருக்கிறார்.
நளினியிடமும் பொறுப்பை ஒப்படைக்காமல் ஒப்புக்கு அவளை இருத்திவிட்டு தானே பார்த்துகொள்வதாக கூறி நளினியையும் அவ்வளவாக நிலாவுடன் துணைக்கு இருக்கவிடவில்லை. அதை பற்றி நளினி கேட்டதற்கு மிரட்டல் தான் அவளுக்கு பதில்.
நர்ஸ் நளினியிடம் ராகவ் தனது கல்லூரி நண்பன் எனவும் விஷயத்தை யாரிடமும் கூறினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் கூறிஎதோடு நில்லாமல், ராகவன் தான் சொல்வதை மட்டுமே நம்புவார், அதனால் நளினியை வேலையிலிருந்து நீங்க செய்வதாகவும் வேறு எங்கும் வேலையில் சேரமுடியாத அளவிற்கு செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.
குடும்ப சூழ்நிலையால் வேறு வழியில்லாமல் நளினி இதை கண்டுகொள்ளாமல் முடிந்தளவிற்கு நிலாவை நன்றாகவே கவனித்தும் இருக்கிறாள். நளினியை தன் சொந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தி இம்சித்திருக்கிறார் மயூரி.
ராகவ்விடம் நிலாவை நன்றாக பார்த்துகொள்வதாக கூறி அவரையும் நம்பவைத்த மயூரி ஹாஸ்பிட்டல் வரும் இன்னும் சிலருக்கு இப்படி ஒரு மேம்போக்கான சிகிச்சையை தான் அளிப்பதாகவும் அதை யாரின் கவனத்திற்கும் வராத அளவிற்கு பார்த்துகொண்டிருக்கிறார்.
நிலாவின் உடல்நிலை பற்றி யாருக்கும் தெரியாதது மயூரியின் அலட்சியத்திற்கு மிகவும் வாகாக போனது.
“ரப்பிஷ்…” நளினி கூற கூற கேட்ட ஆரவ் மேஜையை ஓங்கி குத்தினான்.
இதை கேட்க கேட்க அவனது நரம்புகள் விடைத்தன. அர்ஜூனிற்கோ ஆத்திரத்திற்கு அளவே இல்லை எனலாம்.
மயூரி ஒரு நல்ல திறமையான டாக்டர். அவரே இப்படி நடந்துகொண்டிருப்பது மிகவும் கொடுமையான விஷயமாகபட்டது. கடவுளுக்கு அடுத்தபடியான இடத்தில் மக்கள் தங்களை வைத்திருக்க இப்படி அவர்களின் உயிரோடு விளையாடியவரை அப்படியே விடகூடாது என முடிவெடுத்தனர்.
நளினியை எச்சரித்து நிலாவை பார்த்துகொள்ளுமாறு கூறி சிறிதாக தவறினால் கூட வேலையை விட்டும் தூக்கிவிடுவதாக மிரட்டியே அனுப்பிவைத்தான் அர்ஜூன்.
அடுத்த நிமிடமே மயூரியை பணிநீக்கம் செய்தவன் மயூரிக்கு மெயிலில் அனுப்பிவிட்டு அவர் வேறு எங்கும் பணிபுரியாதவாறும் ஏற்பாடுகளை செய்துவிட்டு மெடிக்கல் கவுன்சிலில் அவரை பற்றி புகார் செய்யும் ஏற்பாடுகளில் ஆழ்ந்தான்.
சிறிது நேரத்தில் ராகவ்வோடு ஆண்டனியும் வந்துசேர அவர்கள் பின்னே மயூரியும் வந்தார். அவரை பார்த்ததுமே ஆரவ்விற்கு கட்டுக்கடங்காத கோபம். ஆனாலும் ராகவ்வின் முன்பும் ஆண்டனியின் முன்பும் அதை கட்டுப்படுத்தினான்.
“என்ன பண்ணிருக்க அர்ஜூன்? எதுக்காக மயூரியை டிஸ்மிஸ் செய்த? என்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட கேட்கலை. காரணமும் சொல்லலை?…” என ராகவ் கேட்கவும்,
“இந்த ஹாஸ்பிட்டல்ல யாரை வேணும்னாலும் சேர்க்கவும் அவர்களை தூக்கவும் எனக்கு அதிகாரம் இருக்குது. அதான் செஞ்சேன். இன்னும் அந்த ரைட்ஸ் எனக்கு இருக்குன்னு தான் நினைக்கிறேன்…” இதை கூறும் போது அவனது பார்வை முழுவதும் ஆண்டனியை மொய்த்தன.
ஆண்டனிக்கு தெரியும் காரணம் இல்லாமல் அர்ஜூன் எதையும் செய்யமாட்டான் என்று. ரகவ்விற்கும் கூட.
ஆனாலும் மயூரி தன்னுடன் பயின்ற கல்லூரி தோழி. இத்தனை வருடம் இந்த ஹாஸ்பிட்டலுக்காக உழைத்தவர். அவரை இப்போது இப்படி செய்வது அவமதிப்பதை போல என்று எண்ணினார். எதுவாக இருந்தாலும் தன்னுடைய கண்பார்வைக்கு இதை கொண்டுவந்திருக்க வேண்டும் என நினைத்தார்.
“அர்ஜூன் நான் அந்த அர்த்தத்தில சொல்லலை. நிச்சயம் இது நம்ம ஹாஸ்பிட்டல். இங்க ஆரவ்விற்கு என்ன உரிமையோ அது உனக்கும் இருக்கு. உன்னோட முடிவுகள் நிச்சயம் சரியாகத்தான் இருக்கும். ஆனாலும் மயூரி நிலாவை பார்த்திட்டு இருந்தவங்க. அவங்கதான் ஹேண்டில் பண்ண முடியும் இதை…” பொங்கிவிட்டான் அர்ஜூன்.
“என் தங்கச்சியை இவங்க என்னத்தை பார்த்து கிழிச்சாங்க?…” என ஏகவசனத்தில் பொரிய இப்போது ராகவ் மயூரியை யோசனையோடு பார்த்தார்.
மகனின் முகத்தை பார்த்தவருக்கு அவன் அமர்ந்திருந்த நிலை தாங்கமுடியவில்லை. ஏன் இப்படி அமர்ந்திருக்கிறான்? நிலாவை பற்றிய உண்மை தெரிந்தபோது கூட திடமாக இருந்தானே? என்ன நடந்திருக்கும் என அவரது உள்ளம் தவித்தது.
மேலும் அவரை தவிக்கவைக்காமல் நளினி கூறியதை எல்லாம் சொல்ல உறைந்துவிட்டார் ராகவ். இலவசத்திற்காக ஹாஸ்பிட்டல் ஆரம்பிக்கவில்லை என்றாலும் வருகிறவர்களுக்கு உண்மையாக சிறந்த சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இருக்கிறவர்களிடம் கறாராக பணத்தை வாங்குபவர் இல்லாதவர்களிடம் அவர்களை பற்றி விசாரித்துவிட்டு அவர்களால் முடிந்த தொகையை மட்டும் வாங்கி சிகிச்சை கொடுத்து இதுநாள் வரை நல்லபெயரை சேர்த்துவைத்திருந்தவர்.
வரும் நோயாளிகளிடம் எந்த பாகுபாடும் பார்க்காமல் அவர்களை கண்ணும் கருத்துமாக கவனிக்கவேண்டும் என்பதில் கண்டிப்புமிக்கவர்.
இப்படி ஒரு அலட்சியமனப்பான்மையை மயூரியிடம் அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது பார்வையே சொல்லியது. தான் இந்தளவிற்கு கவனிக்காமல் விட்டிருக்கிறோமே என தன்னை நினைத்தே வெட்கிபோனார்.
“அர்ஜூன் மெடிக்கல் கவுன்சில்ல மயூரி மேல கம்ப்ளைன்ட் பண்ணு. இந்த துரோகியை ஹாஸ்பிட்டலை விட்டு வெளில போகசொல்லு. இன்னும் ஒரு நிமிஷம் என் கண்முன்னாடி நின்னா என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது…” என இருக்கியா குரலில் உரைக்க அதிர்ந்தார் மயூரி.
“ராகவ் ப்ளீஸ் அப்டிலாம் சொல்லிடாதீங்க. இனிமே இந்த தப்பெல்லாம் செய்யமாட்டேன். நீங்க மெடிக்கல் கவுன்சில்ல கம்ப்ளைன்ட் செய்தா நம்ம ஹாஸ்பிட்டல் பேரும் தான் கெட்டுபோகும். ப்ளீஸ்…” என மன்றாட,
“என்ன டாக்டர் மயூரி, மறைமுகமான மிரட்டலா? நீங்க கிளம்பலாம். ஹாஸ்பிட்டல் பேரை காப்பாத்த எங்களுக்கு தெரியும். இன்னொரு முறை இது நம்ம ஹாஸ்பிட்டல் அப்டின்னு சொன்னீங்க நான் மனுஷனா இருக்கமாட்டேன். முதல்ல வெளில போங்க. உங்களுக்கு சேரவேண்டிய அமொண்ட் உங்க அக்கவுண்ட்ல சேர்ந்திடும்…”
“எங்க வீட்டு பொண்ணுன்னு தெரிஞ்சும் இப்படி நடந்திருக்கிற உங்களை இன்னமும் நாங்க ஹாஸ்பிட்டல்ல விட்டுவச்சிருந்தா அடுத்து வர பாவப்பட்ட மக்களோட உயிரோட உங்க விளையாட்டை நடத்துவீங்க. நீங்களா சத்தமில்லாம கிளம்பினா நல்லது. இல்லைனா எல்லார் முன்னாலையும் செக்யூரிட்டியை வச்சு வெளில தள்ளிடுவோம்…”
ராகவ்வுடன் ஆண்டனியும் சேர்ந்து வருவார் என்று எண்ணவில்லை மயூரி. ராகவ்விடம் கூட கெஞ்சி சமாளிக்கலாம், ஆனால் ஆண்டனி சிறு தவறை கூட பொறுத்துகொள்ளமாட்டார். அர்ஜூனின் இன்னொரு பிம்பம் அவர்.
சத்தமில்லாமல் வெளியேறிய மயூரியால் நளினியை எண்ணி சபிக்கத்தான் முடிந்தது. இப்படி அனைத்தையும் ஒப்பித்துவிட்டாளே என்று.
இன்னுமிந்த ஹாஸ்பிட்டலில் தனது பார்வைக்கு வராமல் என்னென்ன தவறுகள் நடக்கின்றனவோ? என்னும் ஆயாசத்தோடு சேரில் அமர்ந்த ராகவ் உடனடியாக அதையெல்லாம் களைந்தே ஆகவேண்டும் என முடிவெடுத்துகொண்டார்.
பின் ஆரவ்விடம் பேச விழைய அவனோ வீட்டிற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என முடித்துக்கொண்டு அர்ஜூனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.
மீண்டும் நிலாவை பரிசோதித்துவிட்டு டாக்டர் மேத்தாவிடம் அர்ஜூனை பேசவைத்த ராகவ் நிலாவிடம் மானசீகமாக மன்னிப்பையும் யாசித்தார். மயூரியால் இப்படி ஒரு நிலை நிலாவிற்கு வரும் என அவர் எதிர்பார்க்கவே இல்லை.
சிறிது நேரம் அங்கே இருந்தவர் ஆண்டனி அழைக்க வரவும் தான் அங்கிருந்து எழுந்து வீட்டிற்கு சென்றார்.
இரவு ஆரவ்வின் வீட்டில் அனைவரும் அவனுக்காக காத்திருக்க அவன் கொஞ்சம் தாமதமாக தான் வந்து சேர்ந்தான். வரும் போதே மேரேஜ் இன்விடேஷன் மாடல் கார்ட்ஸ் கையோடு கொண்டுவந்திருந்தான்.
இதை பார்த்த தர்ஷினிக்கு கிலி பிடித்துக்கொண்டது. இப்படி தீவிரமாக இருப்பவனை என்ன சொல்லி சமாளிக்க என பயந்துபோனார். ஏற்கனவே ஹாஸ்பிட்டலில் நடந்ததை ஸ்டெபி மூலம் அறிந்தவர் இப்போது இன்னும் மனவுளைச்சலுக்கு ஆளானார்.
“டாடி இந்த கார்ட்ஸ் நான் என்னோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்க்கு குடுக்க செலெக்ட் செய்துட்டேன். ரிலேஷன்ஸ், உங்களோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்க்கு குடுக்க நீங்க எந்த மாடல் வேணுமோ செலெக்ட் பண்ணிடுங்க…”
“தென் ப்ரோகிதர் ஒருத்தரை பார்த்துட்டேன். இன்னையில இருந்து பன்னிரெண்டாம் நாள் நல்லா இருக்குன்னு சொல்லிருக்கார். அன்னைக்கே மேரேஜ் வச்சுக்கலாம்னு சொல்லிட்டார். மத்த பார்மாலிட்டீஸ் நீங்களே பார்த்துக்கோங்க…” என உற்சாகமாக கூறியவனை அர்ஜூனை தவிர்த்து மிரண்டுபோய் பார்த்தனர் அனைவரும்.
“மாம் டின்னர் எடுத்துவைங்க. பேப் வா சாப்பிடலாம். டேய் டக்கு நீயும் தான்…” என்றவன் சுவாதீனமாக சென்று டைனிங்டேபிளில் அமர மற்றவர்கள் யாரும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.
ஒரு பெருமூச்சோடு மீண்டும் தானும் சென்று அவர்களுடன் அமர்ந்தவன், “எதுக்காக இப்படி உட்கார்ந்திருக்கீங்க? கல்யாணவீடு போலவா இருக்கு?…” என கேலி செய்ய,
“எனஃப் ஆரவ். விளையாடாதே. இது உன்னோட லைஃப். நீ எடுத்திருக்கிற டிசிஷன் எனக்கு சுத்தமா பிடிக்கலை…”
ராகவ்வோடு தனியாக இருக்கும் போதும் அதிகபட்ச கோவம் வரும் போதும் மட்டுமே தன் தாய்மொழியான ஹிந்தியில் பேசுவார் தர்ஷினி. இப்போது அவர் உட்சபட்ச கோவத்தில் உள்ளார் என்று அவரது குரலிலேயே தெரிந்தது.
ஆனால் ஆரவ்வும் சளைத்தவன் அல்லவே. அவனின் பிடிவாதம் தான் நன்கு தெரிந்த ஒன்றே.
“நான் எடுக்கிற முடிவுகள் எப்போதும் சரியாகத்தான் இருக்கும்னு என்னோட அம்மாவான உங்களுக்கே நல்லா தெரியும் மாம்…”
அவனுமே கோவத்தை அடக்கிய குரலில் தான் கூறினான். தன்னை பற்றி தெரிந்தும் மீண்டும் மீண்டும் வாக்குவாதம் செய்யும் பொது அவனும் தான் என்ன செய்வான்?
தர்ஷினி அவனது வழிக்கே வந்தார். “ஓகே ஆரவ், முடிவை கொஞ்ச நாள் தள்ளிபோடு. அவசரப்படவேண்டாம். நிலாவுக்கு ஆப்பரேஷன் நடக்கட்டும். அதுக்கப்பறமா பார்த்துக்கலாம்…”
அப்போதும் பார்த்துக்கொள்ளலாம் என்று தான் கூறினார் தர்ஷினி. அவரை பற்றி அறியாதவனா அவர் மகன்?
“ப்ளீஸ் மாம். இந்த ஆர்க்யூமென்ட்ட இதோட ஸ்டாப் பண்ணிக்கோங்க. எனக்கு திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ல விருப்பம் இல்லை. புரிஞ்சுக்கோங்க…” என்றவனை அனைவரும் பரிதாபமாக பார்க்க,
“என்ன என்னை பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா? என்ன பார்வை இது? எனக்கு பிடிக்கலை. நான் கல்யாணம் தானே பண்ணிக்க போறேன்?…” என்று வெடிக்க,
“ஆரவ் ஆன்ட்டி சொல்றதை கொஞ்சம் ரியலைஸ் பண்ணேன். அவங்களையும் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுடா. அவங்களுக்காக உன் முடிவை கொஞ்ச நாள் தள்ளிப்போடேன்…” ஸ்டெபி அவனின் ஆவேசத்தை தணிக்கத்தான் இதை கூறினாள்.
“ஏன் உன் ஆன்ட்டி சொல்றதை கேட்கனும்? அவங்க என்ன சொல்லவறாங்கன்னு உனக்கு புரியலையா? ஆப்பரேஷன்ல நிலாவுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நான் வேற பொண்ணை கல்யாணம் செய்துப்பேன்னு நினைச்சுதான் இப்படி சொல்றாங்க…”
“அப்போதானே நான் மேரேஜ்க்கு எலிஜிபிலா இருப்பேன். இல்லைனா செகணன்ட் மாப்பிள்ளை ஆகிடுவேன்ல. அதை நினைச்சுத்தான் இப்படி என்கிட்ட ஆர்க்யூமென்ட் செய்யறாங்க…”
“என்ன நினைச்சுட்டாங்க என்னை பத்தி? நிலா குணமாகி வந்தா அவ, இல்லையா அவ போய்ட்டா வேற பொண்ணு. நினைக்கவே அசிங்கமா இல்ல. அந்தளவுக்கா என்னோட காதல் அவங்களுக்கு சீப்பா போச்சு. அந்தளவுக்கு அவங்க வளர்ப்பு மேல நம்பிக்கை இல்லை போல…” அவனை ஆற்றாமையோடு பார்த்த ஸ்டெபியிடம்,
“என்ன ஆப்பரேஷன்ல நிலா என்னை விட்டுட்டு போய்டுவான்னு நினைக்கிறயோ? உனக்கே நம்பிக்கை இல்லை அப்படித்தானே? ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு. என் காதல் மேல நம்பிக்கை இருக்கு. நிச்சயம் நிலாவுக்கு எதுவுமே ஆகாது…”
அவள் அப்படியே நிற்கவும் அவளை நோக்கி ஒரு இகழ்ச்சி புன்னகையை சிந்தியவன்,
“காதலை பத்தி உன்கிட்ட போய் சொல்றேன் பாரேன். ஒருத்தரை உருகி உருகி காதலிக்கனுமாம். கல்யாணமாகி அந்த காதலை நல்லா அனுபவிச்சுட்டு ஒத்துவரலைனா உடனே காதலை சாகடிச்சிட்டு வேற ஒருத்தரை பார்த்து போய்டனுமாம். இதுக்கு பேரா காதல்?…”
“ஆரவ்…” என ஸ்டெபி உச்சஸ்தானியில் சப்தமிட அதை கண்டுகொள்ளாதவன்,
“என்ன சத்தம் பலமா இருக்கு? உனக்கு ஏன் வலிக்குது? காதலிக்கும் போது சந்தோஷமா இருந்துட்டு பிரச்சனைன்னு வரும் போது அதை போராடி ஜெயிக்காம அதை கண்டு ஓடி ஒளிஞ்ச நீ அஜூவையும் சேர்த்து ஒளிஞ்சுபோக சொல்ற உன்கிட்ட காதலைபத்தி நான் பேசினது என்னோட தப்புதான்…”
“எப்போ பார்த்தாலும் அஜூவை விட்டு பிரியனும் பிரியனும்னு சொல்ற நீ அதுக்கு எத்தனை வழியை தேடற. சேர்ந்து வாழ உனக்கு ஒரு வழி கூடவா கிடைக்கலை. இதுல அவனை டைவர்ஸ் பண்ண மட்டும் உனக்கு வலிக்குது. அப்படித்தானே இருக்கும் அவனுக்கும்…”
ஆரவ்வின் இந்த பேச்சுக்கள் எதற்கும் அங்கிருந்த ஒருவரிடமும் எதிர்ப்பு என்பதே இல்லை. அர்ஜூனோ அதற்கும் மேலே போய் ஸ்டெபியை துளைக்கும் பார்வை பார்த்துகொண்டிருந்தான்.
“உன்னை போலவே என்னையும் நினைச்சுட்ட பாரு. அதுதான் உன்னோட தப்பு. என்னோட காதலை நான் யாருக்காகவும் விட்டுகொடுக்கமாட்டேன். நிலாவோட பிரச்சனையை அவளுக்கு துணையா கணவனா நின்னு நான் போராடி ஜெயிப்பேன். அவளோட சந்தோஷமா வாழ்வேன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…”
“காதல்ல கஷ்டமில்லாம அவ்வளவு ஈஸியா எதுவும் கிடைச்சிடாது. உனக்கு அப்படி கிடச்சதாலதான் காதலோட அருமை தெரியாம போச்சு…” வேண்டுமென்று தான் இதை ஆரவ் கூறினான்.
“உயிருக்குயிரா காதலிச்சு தன்னோட பெத்தவங்க சொந்தம், இனம், மொழின்னு எல்லாத்தையும் கடந்து போராடி காதல்ல ஜெயிச்சு இன்னைக்கு வரைக்கும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கிற என்னோட பேரன்ட்ஸ்க்கு கூட என் காதலும் தவிப்பும் புரியலையேன்னுதான் எனக்கு வருத்தமா இருக்கு பேப்…”
அதற்குமேல் பேசமுடியாமல் தொண்டையடைக்க அமர்ந்திருந்தவனை அர்ஜூன் எழுந்துவந்து அணைத்துகொண்டான்.
“ஒண்ணுமில்லைடா ஆரவ். உனக்கு நான் எப்போவும் துணையா இருப்பேன். நிலாவுக்கு ஒன்னும் ஆகாது. நிச்சயமா…” என்று ஆறுதல்படுத்த,
“இதை இவங்ககிட்ட சொல்லுடா. அவங்க பார்க்கிற பார்வையே என்னை கொல்லுது. எனக்கு துணையா இல்லைனாலும் இப்படி என்னை தளரவைக்க வேண்டாம்னு சொல்லு…” என ஆதங்கத்தோடு குரல் நடுங்க கூறியவனை எழுந்து வந்து அணைத்துகொண்டார் ராகவ்.
“சாரிடா கண்ணா. நீ இப்படி உடைஞ்சு போய் பேசாதே. தாங்கமுடியலைடா. உன்னோட ஆசைப்படி நிலா உன் மனைவியா, இந்த வீட்டு மருமகளா நீ சொன்ன நாள்ல வருவா. ப்ராமிஸ்…” என கண்ணீரோடு கூறியவரை இறுக்கிகொண்டான் ஆரவ்.
அனைவருக்குமே இதில் மகிழ்ச்சி என்றாலும் தர்ஷினிக்கு கொஞ்சம் வருத்தமும் தான். ஆனாலும் மகனிற்காக அவர் தன் வருத்தத்தை மறைத்துகொண்டார்.
தேடல் தொடரும்…