தேடல் – 8
திருமணத்திற்கு வீட்டினரது சம்மதம் பெற்றதும் ஆரவ்வின் மனம் சிறகில்லாமல் பறந்தது. நிலாவின் துன்பம் களைந்து இன்பத்தை தர உறுதி எடுத்தவனது மனதில் இன்னுமொரு குழப்பம் குடிகொண்டது.
அதை பின் தள்ளியவன் கல்யாணவேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். அடுத்த ஐந்துநாட்களும் இறக்கைகட்டிகொண்டு அழைப்பிதல் கொடுப்பதில் பறக்க ஆறாம் நாள் ஆண்டனி ஹாஸ்பிட்டலில் இருந்து நிலாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துசென்றார்.
ராகவனிடமும் தர்ஷினியிடமும் `நிலாவை தன் மகளாக அழைத்துசெல்வதாகவும் அவளுக்கு திருமணத்திற்கான செய்முறை, சீர்வரிசைகளை தானே செய்யவிருப்பதாக கூறிவிட்டார். ராகவன் மறுக்க நினைத்தபோது,
“நிலாவிற்கு பெத்தவங்க இல்லைன்ற ஏக்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும், தர்ஷினியின் வருத்தத்தை போக்கவேண்டும் என்றும் நிலாவை தன்னுடைய இன்னொரு மகளாக பாவித்துதான் இத்தனையும் செய்கிறேன்…” என காரணம் கூற அவரால் மறுப்பேதும் சொல்லமுடியாது போனது.
“ஒருவகையில் இதுவும் நல்லதுதான்…” என அர்ஜூன் கூறிவிட ராகவன் அதன்பின்னும் மறுக்க அங்கே வழியில்லாமல் போனது.
விநாயகர் பூஜை செய்து ஆரம்பித்த திருமண சடங்குகள் அனைத்தும் தர்ஷினியின் குடும்ப வழக்கப்படி நடக்க அதில் ராகவனுக்கு மனவருத்தம் இல்லை என்றாலும் ஒருவித அச்சத்தோடே கண்கள் அலைபாய்ந்தவண்ணம் இருந்தது.
தர்ஷினியை சேர்ந்தவர்கள் ஏதோ பெயருக்கு வந்து கலந்துகொள்ள இருந்தனர். என்னதான் தங்கள் குடும்ப வழக்கப்படி அத்திருமணம் நடந்தாலும் அவர்களால் ஆரவ்வையும், ராகவ்வையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதனாலே அவர்கள் ஒட்டாமல் சபைக்கு வரவேண்டுமே என்று வந்து நின்றனர்.
ஐந்துநாட்களும் கோலாகலமாக திருவிழாவென நடைபெற்று ஐந்தாம்நாள் திருமணத்தன்று ராகவனை தவிர அனைவருமே அதில் உற்சாகமாக இருந்தனர். தர்ஷினிக்கு தெரியும் ராகவனது சங்கடம் என்னவென்று.
ராகவன் பயந்தவண்ணம் வந்தேவிட்டனர் தஞ்சாவூரை சேர்ந்த ராகவனது பெற்றோர்கள். வரும்போதே அவர்கள் முகத்தில் தெரிந்தது இறுக்கத்தோடு கூடிய அடக்கப்பட்ட கோவமும், தங்களது உரிமையை நிலைநாட்டமுடியாத வருத்தமும் ராகவனின் பெற்றோர்களான நாராயணனுக்கும் வடிவாம்பாளுக்கு. அதை கண்டு,
செய்வதறியாமல் தர்ஷினி திகைக்க,
குற்றவுணர்ச்சியில் ராகவன் தலைகுனிய,
வெற்றிக்களிப்பில் கர்வத்தோடு மின்னும் கண்களோடு ஆரவ் பார்க்க,
சங்கடத்தோடு ஆண்டனி நெளிய,
ஆரவ்வின் பார்வையில் இவனை என்ன செய்தால் தகும் என்பது போல அர்ஜூன் கடுகடுக்க,
இப்படி ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் நிற்க ஸ்டெபி தான் அர்ஜூனையும் இழுத்துகொண்டு சென்று அவர்களை வரவேற்றாள்.
அதைக்கண்டு இன்னமும் கொதித்துபோனார் நாராயணன். அர்ஜூனிடம் சப்தமாக,
“அர்ஜூனா உன்னோட ராகவப்பனுக்கு பெத்தவங்களை மதிக்காம எல்லாம் அவனோட இஷ்டப்படி செஞ்சவனுக்கு விசேஷத்துக்கு வந்தவங்களுக்கு எப்படி மரியாதை செய்யனும்னு கூடவா மறந்துபோச்சு?. நம்ம வளசல் பொண்ணுன்னா இந்நேரம் மாமனார் மாமியார்னு கொஞ்சம் பதவிசா நடந்து மதிக்க தோணிருக்கும். எல்லாம் கலிகாலம்…”
வந்தவர்களை வாங்க என்று அழைக்காமல் ராகவனே தயங்கி நிற்க இதில் தான் என்ன செய்யமுடியும் என ஒதுங்கி நின்ற தர்ஷினியின் செயல் அவரை கோபம் கொள்ள வைத்தது.
அதனால் இன்னும் சில வார்த்தைகளை அவர் முணுமுணுக்கிறேன் பெயரில் தர்ஷினி, ராகவ்வை சீண்ட அதில் வெகுண்டெழுந்தது ஆரவ் தான். கோவமாக பேச வாயை திறந்தவனை நிலாவின் மிரண்ட பார்வை கொஞ்சம் அடக்கிவைக்க துணைபுரிந்தது.
அருகில் நின்ற ஆண்டனியிடம், “ஆண்ட் இந்த நாரை சைலன்ட்டா இருக்க சொல்லுங்க. நான் பேச ஆரம்பிச்சேன் ஓல்ட் நாரை நார் நாரா கிழிச்சுடுவேன்…” என அவரின் காதை கடிக்க அப்போதும் புன்னகைமன்னனாக சாந்தமான முறுவல் ஒன்றை ஆரவ்விடம் சிந்தி அவனை ஆறுதல் படுத்த முயன்றார் ஆண்டனி.
அதில் இன்னமும் கொதிநிலைக்கு சென்ற ஆரவ்,
“இந்த மனுஷன் வேற என் உசுரை வாங்கன்னே எப்போ பார்த்தாலும் சிரிச்சே கொல்றாரு. எவ்வளோ கோவமா நான் பேசிட்டு இருக்கேன். என்னை பார்த்தா காமெடி பீசாவா தெரியுது…” என புலம்பிதள்ளினான்.
ராகவ்வை அர்ஜூன் பார்த்த கண்டனப்பார்வையில் தர்ஷினியையும் இழுத்துக்கொண்டு பெற்றோர்களின் பக்கத்தில் சென்ற ராகவ்,
“மன்னிச்சுடுங்கப்பா, எங்களை மன்னிச்சு உங்க பேரனையும் பேத்தியையும் ஆசிர்வாதம் செய்ங்க…” என மன்னிப்பை வேண்டவும் கொஞ்சம் இறங்கியவர் தர்ஷினியை பார்க்க அவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
ராகவ் திருமணம் ஆனதிலிருந்து தர்ஷினியின் மேல் ஏற்பட்ட வருத்தம் இன்றளவும் கொஞ்சமும் குறையாமல் இருந்தது நாராயணனின் மனதில்.
வடிவாம்பாள் சூழ்நிலையினை புரிந்துகொண்டு தர்ஷினியை ஏற்றுகொண்டாலும் ஏனோ அவரால் அந்யோன்யமாக தர்ஷினியிடம் ஒன்றமுடிந்ததில்லை.
அதை உணர்ந்தே இருந்த தர்ஷினி அனைத்தையும் இலகுவாக ஏற்றுகொண்டார். இதை எல்லாம் அவர் எதிர்பார்த்ததுதானே. காதல் திருமணத்தில் இது சகஜம் என்று மனதை தேற்றிகொண்டார்.
ஆனால் இதை அப்படி ஆரவ்வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது தர்ஷினியை நாராயணன் உதாசீனப்படுத்துவதை பொறுக்கமுடியாமல் வடிவாம்பாளிடம் முறையிடுவான்.
அதிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் அவரோடு மல்லுக்கு நின்றான் பேரன். நாராயணன் தனது தந்தையின் பெயரான சக்கரவர்த்தியை ஆசையாக பேரனுக்கு சூட்ட ராகவன் தான் மனைவிக்கும் தந்தைக்கும் பேதமில்லாமல் இரு பெயரையும் ஒன்றாக்கி வைத்தார்.
ஆனால் அதிலும் ஆட்சேபித்தான் ஆரவ். தனது பெயரை வெறும் ஆரவ் என்று மட்டும் மாற்ற சொல்லி வேறு ஆட்டமாக ஆடித்தீர்த்தான். அப்போதும் தர்ஷினிதான் சமாதானம் செய்தார்.
தன்னை சக்கரவர்த்தி என யாராகினும் அழைத்தால் பெரும் கோவத்திற்கு ஆளாகிவிடுவான் ஆரவ்.
ஆரவ் என்ற பெயரை தர்ஷினி தேர்ந்தெடுத்தார் என அறிந்ததில் இருந்து மருமகளது மேல் இருந்த கோவம் இன்னும் அதிகமாகத்தான் செய்தது. வேண்டுமென்றே தர்ஷினி செய்தது போல நினைத்தவர், மகனும் தன் தந்தையின் பெயரை அவமதித்தான். பேரனும் அதை மதிக்கவில்லை என்ற எண்ணத்தில் சிறுபிள்ளைதனமாக கோவம் கொண்டார்.
ஆனாலும் நாராயணனின் ஆட்டம் குறைந்தபாடில்லை. மகன் வேண்டும், வேண்டா மருமகளின் மூலம் வந்த பேரன் வேண்டும். ஆனால் மருமகள் மட்டும் அவர்களை விட்டு விலகியே இருக்கவேண்டும். இதுதான் அவரது எண்ணம்.
ராகவனால் ஓரளவிற்கு மேல் தந்தையிடம் கடிந்து பேசமுடியாமல் தவித்து தடுமாறும் நேரம் தர்ஷினி தான் அவரை தேற்றுவார். வருடத்திற்கு ஒருமுறை தஞ்சாவூர் சென்று அங்கே இருக்கும் நேரமெல்லாம் பஞ்சாயத்திலேயே கழிக்கமுடியுமா? இதுதான் தர்ஷினியின் கேள்வி.
“அதனால் எதையும் கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருந்துகொள்வோம்” என ராகவனை ஆசுவாசப்படுத்த முயன்ற அவரால் ஆரவ்வை சமாளிக்கமுடியவில்லை.
ஆனாலும் அப்போதும் பாட்டியிடம் ஓரளவிற்கு பேசும் ஆரவ் தாத்தாவிடம் பாராமுகமாகவே நடந்துகொள்வான். என்றைக்கு தன் தாயை மருமகளாக முழுமனதாக ஏற்றுகொள்கின்றனறோ அன்றைக்கு தான் தானும் சமாதானமாக முடியும் என்றுவிட்டான் வடிவிடம்.
மீசை அரும்பும் வயதில் தாயை ஏற்றுக்கொள்ளாத ஊரும் உறவும் தனக்கு தேவையில்லை என தூக்கி எறிந்துவிட்டு வந்தவன் இன்றளவும் அங்கே செல்வதில்லை என்று உறுதியோடு இருக்கிறான். ஊருக்கு வராத பேரனை இவர்கள் இருவரும் அவ்வப்போது வந்து பார்த்து செல்லத்தான் செய்தனர்.
இப்போது தாத்தா நாராயணனை வெறுப்பேற்றவும் தனது தாய் உரிமையை நிலைநாட்டவும், திருமணம் தாயின் குடும்ப வழக்கப்படி நடக்கவேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்து தன் தாய் தனக்கு எந்தளவிற்கு முக்கியம் என நாராயணனுக்கு காண்பித்து தர்ஷினிக்கு மரியாதை செய்யும் விதமாக அதை நடத்தியும் காட்டிவிட்டான்.
பேரன் இப்படி செய்வதில் நாராயணனுக்கு சுத்தமாக பிடித்தமில்லை. வடிவாம்பாள் தான் இதில் மிகுந்த வருத்தத்திற்கு ஆளானார். ஆனாலும் காட்டிகொள்ளாமல் மருமகளை இன்முகமாகவே பார்த்து முறுவலித்தார்.
ஆரவ்விற்கு திருமணம் என அறிந்ததும் முதலில் மகிழ்ந்தவர்கள் பின் தஞ்சாவூரில் திருமணத்தை தம் வழக்கப்படி நடத்த சொல்லி ராகவை வற்புறுத்த ஆரவ்வின் பிடிவாதத்தை ராகவ் கூற சுத்தமாக உடைந்துபோயினர்.
என்னதான் வருத்தமும் கோபமும் மனதை ஆட்கொண்டாலும் தங்கள் பேரன் மீதிருக்கும் எல்லையற்ற அன்பும் பாசமும் தான் அவர்களை திருமணத்திற்கு வரவைத்தது. அப்போதும் நாராயணன் அடங்காமல் அர்ஜூனிடம் சொல்லி ஹோட்டலில் ரூம் புக் செய்ய சொல்லிவிட ராகவ் மனம் குமைந்தார்.
எப்போதாவது வரும் தாய் தந்தை இரண்டு நாட்களாவது தங்களது வீட்டில் தான் தங்குவார்கள். அதுவும் உரிமை எடுக்காமல் ஏதோ ஒரு விருந்தாளி போல நடந்துகொள்ளும் அவர்களது நடத்தை ராகவ்வை பெருத்த வேதனைக்குள்ளாக்கும்.
இப்போதும் முதல்நாள் வந்தவர்கள் எத்தனை சமாதானம் கூறியும் கேட்காமல் ரூமிற்கு சென்று தங்கிவிட்டனர். தர்ஷினி கூட ராகவோடு அவர்களை வீட்டிற்கு அழைக்க செல்ல நாராயணனின் அக்கினி பார்வையில் கப்சிப் என ஆகிவிட்டார்.
அதுவும் இல்லாமல் பேரன் என்று தஞ்சை வருகிறானோ அன்று அங்கே திருமண வரவேற்பை ஏற்பாடு செய்தபின் தான் ஊர், உறவிற்கு திருமண விஷயத்தை தெரியப்படுத்தவேண்டும். மீறி யாரையேனும் அழைத்தால் நடப்பதே வேறு என்று மிரட்டியும் இருந்தார்.
இல்லை என்றால் ராகவனுக்கு இருக்கும் ஜனக்கட்டில் டெல்லியே அல்லோலகபட்டிருக்கும். தாத்தாவின் பிடிவாதம் அப்படியே பேரனுக்கும் என அவ்வப்போது வடிவாம்பாள் பெருமையாக கூறியது இன்று கவலையாக மாறியது.
முறுக்கிக்கொண்டு நின்றிருந்தவரை அர்ஜூன் அழைத்துகொண்டு முன்வரிசையில் அமரவைத்துவிட்டு ஸ்டெபியை அருகில் அமர்த்திவிட்டு மேடையில் சென்று நின்றுகொண்டான்.
தன்னை கடந்து செல்லும் அர்ஜூனையே ஏக்கமாக பார்த்தவள் அவன் பேச்சை மீறினால் இன்னமும் அவனுக்கு கோவம் வரும் என அமைதியாக உட்கார்ந்து வடிவாம்பாளோடு பேச ஆரம்பித்தாள்.
ஏனோ இன்று அவளால் அவனது பேச்சை அலட்சியபடுத்த நினைத்த மூளையை அலட்சியப்படுத்தி இதயத்தின் அறிவுரையின்படி நடந்தாள். அதுவும் அவளது இதயத்தில் குடியிருக்கும் அர்ஜூனின் விழிவழி.
அதுவரை ஆண்டனி ஸ்டெபி முகத்தையே பார்த்துகொண்டிருந்தவர் மகளின் சிறு பார்வையிலேயே அவளது எண்ணம் வெளிப்பட ஆனந்தக்கூத்தாடிய மனதை அடக்கியபடி,
“ஸ்டெபி, நீ போய் மேடையில நில்லு. நிலாவுக்கு துணையா இருக்கும்…” எனவும்,
“இல்லை டாடி….. அஜூ……….. தாத்தா…… பாட்டி….” என திணற வெகுநாட்களுக்கு பின் மகளின் வாயிலிருந்து கேட்ட அஜூ என்னும் அழைப்பில் மகிழ்ந்தவர்,
“நான் இருக்கேன்மா நீ போய் அங்க நில்லு. நீ இங்க உட்கார்ந்திருக்கிறதை உன்னோட தர்ஷிமா பார்த்தா நீ தான் நல்லா டோஸ் வாங்குவ…” என்றவர் ஸ்டெபி ஆரவ்வை பார்த்ததும்,
“அவனை இன்னைக்கு லிஸ்ட்லயே சேர்க்காத. உன் ப்ரெண்ட் உன்னை இன்னைக்கு கண்டுக்கவேமாட்டான். கூப்பிடவும் மாட்டான். ஏன்டா என் செல்லமகளை நீ கூப்பிடலைன்னு நான் கேட்டா பேப் வந்தாளான்னு கேட்டு எனக்கே ரிவிட் குடுத்துடுவான்…”
ஆண்டனி கூறி சிரிக்கவும் அதில் தானும் புன்னகை சிந்தியவள் மெல்ல நகர்ந்து மேடைக்கு சென்றவள் அர்ஜூனின் அருகில் சென்று ஜோடியாக நின்றுகொண்டாள்.
அர்ஜூனுக்கு முதலில் ஒன்றுபுரியவில்லை. அவளை பார்த்து கேள்வியாக புருவத்தை உயர்த்த ஒன்றுமில்லை என்று ஸ்டெபி தலையசைக்கவும் அதில் சிறு புன்னகையோடு ஆரவ்வின் புறம் திரும்பினான் அர்ஜூன்.
“ஏற்பாடு அலங்காரம் எல்லாமே நல்லாத்தான் பண்ணிருக்கு…” நாராயணன் ஆண்டனியிடம்,
“வித் ப்ளஷர்…” ஒரு புன்னகையோடு தெரிவித்த ஆண்டனியை பார்த்தவர்,
“பிளசருலாம் வேண்டாம் தம்பி, எங்ககிட்ட ஓண்டா காரே இருக்கு. என் பேரனுக்காவ ஒசத்தியான கார வாங்கி நான் வீட்ல நிறுத்திருக்கேனாக்கும்…”
பெருமையடித்துக்கொண்ட நாராயணனை பார்த்து ஆண்டனிக்கு சிரிப்பு பொறுக்கவில்லை. இருக்கிறதுலையே ஒசத்தி ஓண்டாவா? அட ஹோண்டாவை சொல்றாரு போல. இதை மட்டும் அந்த வாலுப்பையன் கேட்ருக்கனும். என எண்ணி சிரிப்பை விழுங்கினார்.
முடியவில்லை. ஆனாலும் மீறி சிரித்தால் அவரை கேலியாக நினைத்து அவமதித்தது போலாகிவிடும் என நினைத்து புன்னகையோடு வேறுபுறம் திரும்பிக்கொண்டார். நாராயணனின் பேச்சை மிகவும் ரசித்தார் ஆண்டனி.
நாராயணனோ வடிவாம்பாளிடம் திரும்பி,
“பார்த்தியா வடிவு, நான் அப்பவே சொன்னேன்ல கார்ல போவோம்னு, கேட்டியா நீ. கால் நோவுமுன்னு சொல்லி மவன் கேட்டான்னு பறக்க ஆசைப்பட்டுட்ட. இப்போ இந்த பேச்சு நமக்கு தேவையா?…” என அங்கலாய்க்க வடிவு தான் தலையில் அடித்துகொள்ளாத குறையாக இந்த மனுஷன் போற இடமெல்லாம் அலப்பரையை கூட்டுறாரே என நொந்துகொண்டார்.
மீண்டும் அவர்களது கவனம் மணமக்களின் மேல் திரும்ப அங்கே மங்களசூத்ராவை ஆரவ் நிலாவின் கழுத்தில் அணிவிக்கும் வைபவம் நடைபெற்றது.
கைகளில் மாங்கல்யத்தை வாங்கியவன் நிலாவை பார்த்தவண்ணம் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அந்த வடநாட்டு உடையில் நிலவென அழகில் மிளிர்ந்தவளை காண காண அவனுள் இதுவரை தோன்றாத ஒரு புது உணர்வு தோன்றியது.
அவ்வுணர்வை என்னவென வரையறுக்க இயலாமல் அது கொடுத்த தாக்கத்தில் விடுபட விரும்பாமல் நிலாவையே பார்த்தபடி சுகமாக அமிழ்ந்திருந்தான்.
நிலாவிற்கு அவனது அமைதி உறுத்த அவனை நிமிர்ந்து பார்த்தவளை கண்களால் சிறையெடுத்தவன்,
“நிலா நான் உன்னை காதலிக்கிறேன். உன்னோடு இணையும் இந்த நாள் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். இந்த ஜென்மம் மட்டுமில்லை. இனி வரும் ஜென்மங்களிலும் உனது துணையாக நானும் எனது இணையாக நீயும். ஐ லவ் யூ நிலா…”
அவளின் விழிகளை பார்த்துக்கொண்டே மங்களசூத்ராவை அவளது மணிகழுத்தில் அணிவித்தவன் அவளது நெற்றியில் குங்குமத்தை வைக்கும் முன் தனது முத்தத்தை அதில் அடித்தளமாக்கிய பின் அங்கே குங்குமத்தை இட்டான்.
“இவனை அடைய என்ன தவம் செய்தேன் நான்” அவனது பேச்சிலும் செயலிலும் தன்னை மறந்து சந்தோஷகடலில் மிதந்தாள் ஆரவ்விற்கென்றே ஜென்மம் படைத்து வந்த ஆரவ்வின் நிலவானவள்.
மகனது காதலில் அதுவரை இருந்த சிறு சஞ்சலமும் அகன்றது தர்ஷினிக்கு. நிலாவை எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் முழுமனதாக ஏற்றார்.
ஆனால் நாராயணனோ நிலாவின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து மீண்டும் பொங்க ஆரம்பித்துவிட்டார் நாராயணன்.
“வடிவு என்ன கருமம் இது? மங்களகரமா மஞ்சள் கயிறுல கோர்த்த நம்ம பரம்பரை தாலி எங்க? கருப்பு பாசி கோர்த்த இவங்க தாலி எங்க? இதென்ன நல்லகாரியங்களுக்கு நம்ம வகையில கருப்பு ஆகாதுன்னு சொல்லுவாங்க. இதையெல்லாம் நான் ஒத்துக்கவே மாட்டேன்…” என குதிக்க,
“அட ஆண்டவனே செத்த நேரம் சும்மா இருங்களேன். இன்னைக்குத்தான் நம்ம பேரன் வாழ்க்கையை ஆரம்பிக்க போறான். இப்போ போய் அபசகுனம் புடிச்சது போல பேசிவைக்காதீங்க…”
“அதுமட்டுமில்ல நம்ம ராகவன் சம்சாரம் வகையில இதைத்தான் தாலின்னு சொல்லுவாங்க. பாருங்க அவளும் அதைத்தான் போட்ருக்கா…” என்று தர்ஷினியை கண்பிக்க ஆண்டனி வியந்துபோனார்.
தவறி கூட தர்ஷினியை இருவரும் மருமகள் என்று வாய்வார்த்தையாக சொல்லாமல் ராகவனின் மனைவி என்னும் விதத்தில் அவர்கள் பேசிவைத்தது ஆண்டனிக்கு கொஞ்சம் கோவத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது.
அதே நேரத்தில் தனது மகளது திருமணம் நடந்த விதத்தையும் இதையும் ஒப்பிட்டுப்பார்க்க அது சுருக்கென்ற வலியை தரத்தான் செய்தது.
எத்தனை தான் ஒன்றாக பழகினாலும் அவர்களது சம்பிரதாயம் பாரம்பரியம் என வரும் போது தங்களை போன்றவர்களை ஒதுக்கி வைத்து தான் பார்க்கின்றனர் என்ற உண்மை அவருக்கு இன்று மிக நன்றாகவே தெரிந்தது.
தன் மகளும் இதே நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தான் அவர் அறிந்த ஒன்றாகிற்றே. ஏனோ மனம் கனத்தது ஆண்டனிக்கு. அங்கிருந்து எழுந்து செல்லவும் அவரால் முடியவில்லை.
அமர்ந்த இடத்திலிருந்தே மகளை பார்க்க அர்ஜூனோடு சேர்ந்து நின்றுகொண்டிருந்த ஸ்டெபியின் முகத்தில் என்றைக்கும் இல்லாத ஒரு அழகும், வெட்கமும் குடிகொண்டிருப்பதை கவலையை விடுத்து கண்ணார ரசித்தார்.
என் மகளது வாழ்வை நேர்படுத்திக்கொடு ஏசுவே என மனமார வேண்டியவர், ஜீசஸ் என மனதிற்குள் ஜபிக்கத்தொடங்கினார். இந்த சந்தோஷம் ஸ்டெபியின் வாழ்நாள் முழுவதும் நிறைந்திருக்க அருள் புரியும்மைய்யா என்ற வேண்டுதல் ஏனோ இறைவனுக்கு கேட்கவில்லை போல.
அர்ஜூனின் தாயும் தந்தையும் அவனது தம்பியோடு உள்ளே நுழைந்தனர். வரும் போதே அவர்களது பார்வையில் ஸ்டெபியும் அவளருகில் புன்னகை முகமாக நின்றுகொண்டிருக்கும் அர்ஜூனும் தான் பட்டனர்.
அதில் கொந்தளித்த அர்ஜூனின் தாய் கல்பனா அவர்களை நோக்கி செல்ல இரண்டடி முன்னால் எடுத்துவைக்க ஆரவ்வின் பார்வையில் உடனடியாக பின்வாங்கினார். அவர்கள் உள்ளே நுழையும் போதே கண்டுவிட்ட ஆரவ் விழியகற்றாமல் அவர்களைத்தான் கண்காணித்தான்.
அர்ஜூனின் தம்பி கார்த்திக்கிடம் கண்களால் சைகை செய்ய அவன் புரிந்துகொண்டது போல தனது பெற்றோர்களை அழைத்துசென்று அமரவைத்தவன் அவர்கள் ஸ்டெபியை நெருங்கா வண்ணம் காவலாக இருந்தான். இது ஆரவ்வின் கட்டளை.
கார்த்திக்கிற்கு அர்ஜூனிடம் எதிர்த்து பேசமுடியாதென்றால் ஆரவ்விடம் எதிரே நின்றுகூட பேச இயலாது. அதிலும் அர்ஜூனின் தந்தை கிருஷ்ணன் அவனிடம் எவ்வளவு குதித்தாலும் ஆரவ் வந்துவிட்டால் அங்கே ஒரு வார்த்தை வெளிவராது.
இதுதான் ஆரவ் வெளிஉலக ஆட்களிடம் பெற்றிருக்கும் பெயர். யாரும் இலகுவாக தன்னை நெருங்கிவிட முடியாதவண்ணம் தன்னை தானே செதுக்கியவன். தனக்கு நெருங்கிய சிலரை தவிர்த்து மற்ற அனைவரிடமும் காண்பிக்கும் ஆரவ்வின் முகமே வேறு.
திருமண வைபோகம் முன்றிலும் நிறைவுபெற அங்கிருந்து நகர இருந்த ஸ்டெபியை கைபிடித்து தடுத்து நிறுத்திய அர்ஜூன்,
“எங்கே போற? இன்னைக்கு முழுவதும் நீ என்னோடதான் இருக்கனும். தட்ஸ் இட்…” என முடிக்கவும்,
“இவனுக்கு இருக்கிற வீம்பு இருக்கே. இருன்னா இருக்கபோறேன். எப்போ பாரு மிரட்டறது” மனதினுள் செல்லமாக சலித்துகொண்டாள் ஸ்டெபி.
அர்ஜூனிற்கு தெரியும் தன் வீட்டார் வந்திருப்பது. ஆனால் அவன் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. அதிலும் தன் தாயிடம் என்றைக்கு ஸ்டெபியிடம் அந்த வார்த்தையை கூறியதாக தெரிந்ததோ அப்போதே அன்றிலிருந்தே பேச்சை நிறுத்தியிருந்தான்.
எப்போதும் விலகுவதிலே குறியாக இருக்கும் ஸ்டெபி இப்போது தானாக அர்ஜூனோடு நெருங்கி நிற்க தானும் அவளை விட்டு அகலாமல் நின்றிருந்தான். அவர்களது நெருக்கத்தில் தர்ஷினியின் மனம் நிறைந்து போனது. ராகவ்விடம் அவர்களை காண்பித்து மகிழவும் அவர் மறக்கவில்லை.
அதே நிறைவோடு வந்திருந்தவர்களை கவனிக்கவும் மறக்கவில்லை. பெரிய இடங்களில் இருந்தும், பெரிய மனிதர்கள் என அனைவரும் நிறைந்திருக்க அதனோடு தங்களுடைய ஹாஸ்பிட்டல் வேலை செய்பவர்கள் முதற்கொண்டு அனைவரும் வந்திருக்க எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் உபசரித்தே அனுப்பினர்.
இவர்கள் மனநிலை இப்படி இருக்க அர்ஜூனின் பெற்றோரோ உள்ளத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தனர். ஆரவ் மட்டும் அங்கே இல்லை என்றால் ஸ்டெபியை வார்த்தையால் குத்தி கிழித்திருப்பார்கள்.
தாய் தந்தையரின் துவேஷமான பார்வையை கண்ட கார்த்திக் இன்றைக்கு எப்பாடுபட்டாவது தன் அண்ணியை கல்பனாவும், கிருஷ்ணாவும் ஒரு வார்த்தை பேசவிடாமல் காத்துவிடவேண்டும் என தீர்மானித்துகொண்டான். ஸ்டெபி மேல் அப்படி ஒரு மரியாதை கலந்த பாசம் அவனுக்கு.
சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவுற்று ராகவன் ஆண்டனியை நோக்கி கண்ணை காண்பிக்க,
“அப்பா, என்ன இது? நீங்க போய் கூட்டிட்டு வாங்க தாத்தாவையும் பாட்டியையும்…” மற்றவர்கள் கேட்காமல் அவரை கடிந்தான்.
இவன் கண்களில் இருந்து எதுவுமே தப்பாதோ? எப்படி கண்டுகொண்டான் என்னும் விதமாக அவனை பார்க்க அவன் தர்ஷினியிடமும் அதையே கூறி இருவரையும் அனுப்பிவைத்தான்.
மகன், மருமகள் மீது குறை கூறி எதையாவது உளறிக்கொண்டு இருந்தாலும் நாராயணனின் பார்வை முழுவதும் பேரன் பேத்தியின் மணக்கோலத்தில் தான் திளைத்திருந்தது.
ராகவன் தம்பதியர் வரவும் உடனே முகத்தை கெத்தாக வைத்துக்கொண்டு விறைப்பாக நிமிர்ந்து அமர்ந்தார் நாராயணன்.
“இந்த மனுஷனுக்கு இருக்கிற மிதப்பு இருக்கே? கீழே விழுந்தாலும் மீசையில மண்ணே ஒட்டலைன்னு சொல்லுவாரு…” என முணங்க,
“இங்க தான் மண்ணே இல்லையே வடிவு…” அப்பாவியாக பதில் கூறி மனைவியின் முறைப்பை வாங்கிகொண்டாலும் தன் தோரணையை சிறிதும் மாற்றவில்லை அவர்.
“அப்பா, நீங்களும் அம்மாவும் எழுந்து வாங்க. பிள்ளைங்களை ஆசிர்வாதம் செய்யுங்க…” அப்போதும் தர்ஷினி மரியாதையாக பார்த்துகொண்டு இருந்தாலும் அமைதியாக தான் நின்றார்.
“ஏன், உன் சம்சாரத்துக்கு வாயில்லையா? இல்லை பேசத்தெரியாதா?…” எனவும் ராகவ் தர்ஷினியை பார்க்க அவரோ அவசரமாக,
“வாங்க மாமா, வாங்க அத்தை…” எனவும் “அது” என்பது போல எச்சரிக்கை பார்வையொன்றை வீசிவிட்டு மேடை நோக்கி வடிவாம்பாளுடன் சென்றார்.
இருவரது காலில் விழுந்து எழும்ப அவர்கள் மீது பூக்களை தூவப்போனவர் அப்போதுதான் கவனித்தார் நிலாவின் உடையை. உடனே மீசை துடிக்க, தாடை இறுக,
“வடிவு, என்ன உடுப்பு இது? பாவாடை தாவணி மாதிரி? என்கிட்டே சொல்லிருந்தா லட்சத்துல ஒரு பட்டுசேலையை என் பேத்திக்கு கொண்டாந்திருப்பேனே?…” என சீற நிலா ஆரவ்வின் பின்னால் ஒண்டினாள்.
பெரிய மீசையோடு ஆஜானுபாகுவான தோற்றத்தில் மிரட்டல் போல இருந்த அவரது பேச்சில் அமிழ்ந்திருந்த அவளது தாழ்வுணர்ச்சி மேலெழும்ப ஆரம்பித்தது.
“தாத்தா இதுக்கு பேரு லெஹெங்கா. நம்ம ஊர்ப்பக்கம் பட்டுச்சேலை போல இந்த பக்கம் இந்த ட்ரெஸ் தான் கல்யாணத்துக்கு. இதுக்குன்னே பெரிய டிஸைனர பார்த்து ஸ்பெஷலா ஆடர்குடுத்து வாங்கினது…” என அர்ஜூன் தன்மையாக எடுத்துரைக்க,
“இருக்கட்டுமே, இருந்தாலும் பட்டுச்சேலைய விட ஒசத்தியா இது?…” அப்போதும் விடாமல் பேச,
“ஒசத்திதான் தாத்தா…” அர்ஜூனும் சளைக்காமல் கூற ஆரவ்வின் முகத்தில் கோவச்சிவப்பு கூடியது. அதைக்கண்ட வடிவு,
“செத்த வாயமூடிட்டு வரீங்களா?…” என நாராயணனிடம் பேரனை கண்ணைக்காட்ட அவன் பார்வையாலே அவரை சுட்டெரிக்க கம்மென்று ஆனார்.
நிலாவின் கன்னம் தழுவி சிகையை வருடி தலையசைத்துவிட்டு மேடையை விட்டு இறங்கினார் வடிவு. இருக்கைக்கு செல்லும் போது திரும்பி பார்த்தால் நாராயணன் அவரோடு வந்திருக்கவில்லை. அவர் இன்னமும் மேடையிலேயே தான் நிலாவோடு பேசிக்கொண்டிருந்தார்.
அதிசயத்திலும் அதிசயமாக ஆரவ்வின் முகத்தில் குறும்பும் புன்னகையும் கூத்தாடியது. என்னவாக இருக்கும் என யோசிக்கையில் அவரே வந்து சொல்லட்டும் என அமர்ந்துகொண்டார்.
வடிவு இறங்கியதுமே நாராயணன் நிலாவின் அருகில் வந்து,
“என் பேரன் சக்கரவர்த்தியை உனக்கு புடிச்சிருக்கா?…” அவர் முகத்தில் அப்படி ஒரு கனிவும் பரவசமும் நிறைந்திருந்தது. சற்று நேரத்திற்கு முன் கோவம் கொண்டவரா இவர் என சந்தேகிக்கும் அளவிற்கு.
அவர் கேட்டதில் ஆரவ்விற்கு தான் அனல் கூடியது. ஏற்கனவே அர்ஜூன் நிலாவிடம் இந்த பெயரை சொல்லியிருப்பதால் நிலாவிற்கு ஏற்கனவே தெரிந்தது தான். ஆனாலும் இப்பொது தாத்தா இதை கூறவும் ஒரு நொடி எரிச்சலானான்.
இத்தனைபேரின் முன்னாலும் சொல்ல வெட்கப்பட்ட நிலா தலையை மட்டும் அசைக்க, “எல்லோரும் விலகி நில்லுங்க. நான் என் பேத்திட்ட பேசனும்…” என்றவர் ஆரவ்வை விலகவிடாமல் தன் கைபிடிக்குள் இருத்திகொண்டார்.
“இப்போ சொல்லும்மா…” என மெல்லிய குரலில் கேட்க,
“ஹ்ம் பிடிச்சிருக்கு தாத்தா…” என்றாள்.
தாத்தாவால் ஏற்பட்ட எரிச்சல் மறைந்து நிலாவின் பதிலால் காதல் பெருகியது ஆரவ்விற்கு. அதனால் அவனும் நாராயணனை இலகுவாகவே பார்த்தான்.
“இது காதல் கல்யாணம்னு என் மவன் சொன்னான். முதல்ல எனக்கு கூட வருத்தம் தான். ஆனாலும் என்னோட பேரன் ஆசைக்கு மறுப்பு சொல்ல இந்த கிழவனால முடியாதும்மா. அவன் தான் என்னோட உசுரே. அவன் என்ன ஆசைப்பட்டாலும் அவனுக்கு கிடைக்கனும்னு தான் நான் நினைப்பேன்…”
“அவனோட நீ நூறாயுசுக்கு குழந்தகுட்டியோட நல்லா இருக்கனும் அம்மா. முக்கியமா என் பேரனோட முகத்துல இருக்குற இந்த சந்தோஷத்தையும் சிரிப்பையும் ஆயுசுக்கும் நீ வாடவிடகூடாது. அவனை நீ நூறுமடங்கு சந்தோஷமா பார்த்துக்கிட்டா அவன் உன்னை கோடிமடங்கு சந்தோஷமா வச்சுப்பான்…”
“நீயாச்சும் இந்த கிழவனையும் கிழவியையும் பார்க்க தஞ்சாவூர் பக்கம் வரனும் தாயி. பிள்ளைங்க கால்படாம அந்த வீடு வீடுமாதிரியே இல்ல. நானும் கிழவியும் ஏதோ மூச்சை பிடிச்சு வாழ்ந்துட்டு இருக்கோம். எங்களுக்கும் வேற ஆரும்மா இருக்கா?. நானு கிளம்பறேன்…”
வயதின் முதிர்மையில் தளுதளுத்தபடி பேசிய அவரது பேச்சில் ஆரவ்வின் கண்கள் கலங்கிவிட்டன. ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அப்படியே நின்றான்.
“தாத்தா…” என நிலா அவரின் கைபிடித்து நிறுத்த அவள் ஆரவ்வை இழுத்துகொண்டு மீண்டும் அவர் பாதம் பணிந்து எழ இருவரையும் நெஞ்சோடு அணைத்துகொண்டார் நாராயணன்.
அவரது அணைப்பில் நெகிழ்ந்த ஆரவ்வின் இறுக்கமான அணைப்பிலேயே அவனது உள்ளம் தெளிவாக மீண்டும் பழைய உற்சாகத்தோடு வடிவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டார். வடிவிடம் இதை பகிரவும்,
“மகனோட காதல்னா கசக்குது. பேரனோட காதல்னா இனிக்குதாக்கும்?…” வடிவின் நக்கலில்,
“அப்போ நான் தகப்பன். மகனோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்கிற ஒரு சராசரி அப்பா. இப்போ நான் பேரனுக்காக வானவில்லையும் வளைச்சுகுடுக்கனும்னு நினைக்கிற தாத்தா…”
“அப்போ பேரனோட வாழ்க்கை பத்தின அக்கறை இல்லையோ?…” வடிவு விடாமல் கேட்க,
“அதுக்குத்தான் என் மகன் இருக்கானே. அவனுக்கு தெரியாதா அவனோட புள்ளைக்கு நல்லது எது கெட்டது எதுன்னு. அதுவும் இல்லாம என் பேரனும் சளைச்சவனா? அவன் ஒரு முடிவெடுத்தா அது சரியாத்தான வடிவு இருக்கும்…” பெருமையில் முகம் பூரிக்க பேசினார்.
“இதுல இன்னொரு விஷயம் என்னானா பொண்ணு ராகவன் சம்சாரம் மாதிரி வடநாட்டு புள்ளை கிடையாது. நம்ம தமிழ் பொண்ணாக்கும்…” என்று மீசையை முறுக்க,
“ஏன் இந்த பொண்ணு வடநாட்டு பொண்ணா இருந்தா வேண்டாம்னு சொல்லிடுவீங்களாக்கும்?…” என கிடுக்கிப்பிடி போட நாராயணன் திகைத்தார்.
நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார் என அவருக்கும் தெரியுமே. தன் பேரன் தானே அவருக்கு முக்கியம். இதை கண்டுகொண்ட வடிவிடம் அசட்டு சிரிப்பொன்றை சிந்த வடிவும் அவரோடு சிரிப்பில் இணைந்துகொண்டார்.
பஃபே முறையில் அனைத்துவகையான உணவு பதார்த்தங்கள் வரிசைகட்டி இருக்க திகைத்து நின்ற தாத்தாவிற்கும் பாட்டிக்கும் ஸ்டெபி தான் உதவிக்கு வந்தாள்.
அவர்களுக்கு தேவையானதை தர்ஷினி ஏற்கனவே ஸ்டெபியிடம் தெரிவித்து இருக்க அதன்படி ஸ்டெபி எடுத்து கொடுத்து அவர்கள் உண்டு முடிக்கும் வரை அவர்களோடே இருந்தாள்.
என்னதான் ஆரவ், கார்த்திக் என கல்பனாவை கண்காணித்தாலும் ஸ்டெபியின் விதியோ அவரை சந்திக்கவைத்தது.
ரெஸ்ட்ரூம் சென்று வெளியே வர கல்பனா அவளை பார்த்தபடி வந்து முன்னால் நின்றார். திகைத்துபோனாள் ஸ்டெபி.
அதுவரை ஸ்டெபியின் முகத்தில் தெரிந்த தேஜஸும், இதழ்களில் தவழ்ந்துகொண்டிருந்த புன்னகையும், கணவனோடு இணைந்து நிற்கும் போது இருந்த நிமிர்வும், கர்வமும் துடைத்துவிட்டது போல காணாமல் போனது கல்பனாவின் விரோதபார்வையால்.