ஆசாத்திடம் கொடுப்பதற்கு தன்வியின் சாம்பிள் வாழிக்கு வேண்டும். அதற்காகவே இல்லம் வந்தான்.
தன்வி ஸ்டுடியோ செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
வாழியை கண்டதும் ஆஷ் ஓடிவந்தது.
அதனை தூக்கி நெற்றி முட்டி இறக்கிவிட்டவன், தோட்டத்தில் சென்று விளையாடுமாறு சைகை செய்திட… புரிந்துகொண்ட அதுவும் ஓடியது. ஆஷிற்கு பந்தினை தூக்கி எறிந்தவன், இருக்கையில் அமர்ந்து பின் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
“வரமாட்டிங்க நினைச்சேன்.”
தன்வியின் குரலில் இமை திறந்தவன்,
ஏன் எனும் விதமாக புருவத்தை ஏற்றி இறக்கினான்.
“நைஸ்” என்றாள் தன்வி. வாழியிடம் புரியாத பாவனை.
“ஒரு பக்கமா தலை சாய்த்து பிங்கர் டிப்பால், ஐ ப்ரோ ஸ்க்ராட்ச் பண்ணுவீங்களே… அப்பப்போ நோட் பண்ணியிருக்கேன். உங்களோட அந்த மேனரிசம் நல்லாயிருக்கும். இப்போ இது” என்றாள். அவள் என்னவோ அவனிடம் தனக்கு பிடித்ததை சாதாரணமாகக் கூறினாள். காதல் கொண்டிருக்கும் அவனுக்கு உள்ளுக்குள் சில்லென்ற சாரல் வீசியது. அவளின் கூற்றில். தன்னவள் தன்னை கவனிக்கின்றாள் எனும் ஆர்பரிப்பு.
‘ஸ்டெடிடா வாழி… ஸ்டெடி… வந்த வேலையை பார்.’ தனக்குத்தானே அறிவுறுத்திக்கொண்டான்.
“வாழ்… வாழ்…”
தன்வியின் பல அழைப்பிற்கு பின் தனக்குள் உழன்றவன் சிறு திடுக்கிடலுடன் அவளை ஏறிட்டான்.
“இந்தாங்க.” அவன் முன் பூஸ்ட் நிறைந்த குவளையை நீட்டிக் கொண்டிருந்தாள்.
“ரொம்ப டயர்டா தெரியுறீங்க.”
“ஹோ” என்றவன், குவளையை வாங்கி பருகாது அருகிலிருந்த டீபாயின் மீது வைத்து, தன்வியின் கையை பிடித்து தனக்கு அருகில் அமர வைத்து, அவள் புறமாக திரும்பி பக்கவாட்டாக அமர்ந்தான்.
தன்வி என்னவென்று வாழியையே பார்த்திருக்க…
“அருண்…” வாழி சொல்வதற்கு முன்பு,
“தெரியும்.” தன்வி முடித்திருந்தாள்.
வாழியின் முகம் விவரிக்க முடியாத பாவனையை காட்டியது.
நமக்குத் தெரியாத மூன்றாம் மனிதராக இருந்தாலும், இறந்துவிட்டார் என்றால் ஒரு நொடி மனம் அவர்களுக்காக வருந்தச் செய்யும்.
ஆனால், தன்வி… உணர்ச்சிகளற்று சாதரணமாக கடந்தது வாழிக்கு என்னவோப்போலானது.
அந்தளவிற்கு தன்வியின் மனம் மரத்து விட்டதா?
வாழியின் எண்ணத்தை அவதானித்தவள்,
“யாரோ இறந்துட்டாங்க. அதுக்காக நான் கலங்கி நிற்கணுமா?” எனக் கேட்டவள், கன்னம் இறங்கிய கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி,
“யாரோ தான் வாழ். நிச்சயம் அருண் எனக்கு யாரோ தான். என்னை அவன் ஏமாத்திருந்தாலும், சந்தர்ப்பத்தால் கல்யாணம் ஆகிப்போச்சுன்னு வருந்தி சொல்லியிருந்தால் கண்டிப்பா அவனை மன்னிச்சியிருப்பேன். இப்போ அவனுக்காக வருந்திக்கூட இருந்திருப்பேன். ஆனால், ஆனது ஆகிப்போச்சு நீ வா யாருக்கும் தெரியாமல் வாழலாம் கூப்பிட்டான் பாருங்க… அங்க அவனோடு எனக்கிருந்த எல்லாம் முடிஞ்சிப்போச்சு” என்றவளின் குரலில் அத்தனை திடம்.
“ஓகே… ஓகே… ரிலாக்ஸ்” என்ற வாழியிடம் அடுத்த சில கணங்கள் ஆழ்ந்த மௌனம்.
“என்கிட்ட எதாவது கேட்கணுமா?”
தன்வி கேட்டிட விவரிக்க முடியாத தடுமாற்றத்தை விழிகளில் காட்டினான் வாழியாதன்.
“அருணை பற்றி…?” அவளே கேள்வியாய் தொக்கி இழுத்தாள்.
கால் முட்டியில் கை குற்றி எழுந்தவன், இடுப்பில் கைகளை பதித்தவனாக, காற்றினை இழுத்து ஊதினான்.
தன்விக்கு தெரியாது தன்னுடைய மனக்குழப்பத்தை தீர்த்துக்கொள்ளத்தான் நினைத்தான். ஆனால், அவளின் விடயம் அவளுக்குத் தெரியாமல் செய்தால்… நம்பிக்கைத் துரோகம் என்னும் வரையறைக்குள் வந்துவிடுமே!
தன்னை நம்பும் ஒருவருக்கு எத்தகைய சூழலிலும் உண்மையாய் இருக்க வேண்டுமென நினைத்தான். அதனால் நேரடியாகவேக் கேட்டிருந்தான்.
“ஹேர் சாம்பிள் போதுமா?”
எந்தவொரு கேள்வியும் ஏன்? எதற்கு? என்று கேட்காது மிக மிக சாதாரணமாக தன்வி கேட்டதில் வாழிக்குத்தான் உள்ளுக்குள் ஏதோ நொறுங்கியது.
இந்த நொடி அவளின் கண்கள் காட்டும் உண்மை. அதனை நம்பாது இருக்க முடியவில்லை. குற்றம் செய்தவரின் விழிகள் நேர்கொண்டு இருக்குமா என்ன?
தான் இதனை செய்யவில்லை என்கிற உறுதி. தீட்சண்யம்.
“தன்வி…” வாழிக்கு என்ன விளக்கம் கொடுப்பதென்றே தெரியவில்லை.
“ஹேய் வாழ். அம் சில். உங்களுடைய பொசிஷனில் எனக்குமே இது தோணிருக்கும்” என்றவள், “ஹேர் தான் வலிக்காது. பிளட் சாம்பிள்… ஊசி வலிக்குமே” என்றாள் கண்களை சுருக்கி.
அவளின் முக சுருக்கத்தில் அவனது இதயம் அவளிடம் சுருங்கி சுருண்டது.
வாழி அசையாது இருக்க…
அவளே அவன் கேட்ட சாம்பிளை சிறு உரையிலிட்டு அவன் முன் நீட்டினாள்.
அதனை வாங்கும்போது ஒருவித நடுக்கம் அவனது விரல்களில்.
“பாருடா… ரவுடிகளை பார்வையாலே ஓடவிடுற ஏசிபி சார் கை நடுங்குது.” தன்வியின் கேலியில் அவனது இதழ் விரிந்தும் விரியா நிலையில் மென் சிரிப்பை காட்டியது.
“தன்வி மீது வாழிக்கு எப்பவும் சந்தேகம் கிடையாது.”
வாழி வார்த்தைக்காக சொல்லவில்லை என்பது அவனது குரலின் ஓசையிலே தெரிந்தது.
“தெரியும்” என்றவள், “உங்களை எனக்கு புரியும். பிறந்ததிலிருந்து உடனிருக்கனே!” என்றாள்.
இந்த புரிதல் போதுமே. உறவு பலப்பட்டுவிடும்.
“எப்படியும் சாப்பிட்டிருக்க மாட்டிங்க. எடுத்து வைக்கவா?”
வாழி வெளிநோக்கி அடி வைத்திட தன்வி கேட்டிருந்தாள்.
“இப்போ சாப்பிட முடியும் தோணல தன்வி. பார்த்த சீன் அப்படி” என்றான் அருண் கிடந்த நிலையை உள்வாங்கியவனாக.
“நியூஸில் பார்த்தேன். இவ்வளவு கொடூரமா கொல்ற அளவுக்கு யாருக்கென்ன மோட்டிவ் இருக்கும்?”
“கண்டுபிடிக்கணும்” என்றவனாக சென்றிருந்தான்.
ஆசாத்திடம் தன்வியின் சாம்பிளை கொடுத்த வாழி…
“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேணும்டா” எனக் கேட்டிருந்தான்.
ஆசாத் அவனின் வார்த்தையை கேட்காதவனாக ஏதோ சிந்தனையில் உழன்றான்.
“ஆசாத்… டேய்…” வாழி உலுக்கவும் நிகழ் மீண்டவனிடம்,
“எனித்திங் இம்பார்ட்டெண்ட்?” எனக் கேட்டான்.
“டூ, த்ரீ மந்த்ஸ் பேக் இருக்கும் வாழி. இதே மாதிரி… சேம் பேட்டர்ன்… ஒரு கொலை நடந்தது. நான் தான் ஃபாரன்சிக் பண்ணேன்” என்ற ஆசாத்,
“ஐ மீன்… இதயத்தை வெளியில் எடுத்து, நடுவில் கத்தியை குத்தி வச்சது மாதிரி. மே பீ ரெண்டு கொலையையும் ஒரே ஆள் செய்திருக்கலாம்” என்றான்.
ஆசாத்தின் யூகம் உண்மையாகக் கூட இருக்கலாம். அதற்காக விசாரிக்காது நம்பிவிட முடியாதே?
“எந்த ஏரியா கண்ட்ரோல்?”
ஆசாத் அந்த கொலை நடந்த பகுதியை குறிப்பிட்டதும்…
“நான் அங்கு விசாரிக்கிறேன்…” என்றவன், “அந்த கொலையோட ரிப்போர்ட் உன்கிட்ட இருக்குதானே?” என்றான்.
“ம்ம்…”
“வெல், லேகா அருணுடைய ரிப்போர்ட் கொடுத்ததும், ரெண்டும் எந்தளவுக்கு ரிலேட் ஆகுதுன்னு கம்பேர் பண்ணிட்டு எனக்கு சொல்லு” என்ற வாழி அப்போதே பெருமாளுக்கு அழைத்து, இந்த ஏரியாவில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறதா என்று விசாரித்தான்.
“ஹேய் வாழி… ஆமாண்டா” என்று அதிர்வை காட்டிய பெருமாள், “எனக்கு இது நினைவு வரலையேடா” என்றார்.
“ஓகே. அந்த ஏரியா என் கண்ட்ரோலில் இல்லை. சோ, எனக்கு கோ-ஆப்ரேட் பண்ண இன்ஃபார்ம் பண்ணிடுங்க. இப்போ நான் அங்கு தான் போயிட்டு இருக்கேன்” என்றான்.
பெருமாள் சரியென வைத்ததும், சூர்யாவுக்கு அழைத்தவன்…
“டேய் லொகேஷன் அனுப்பியிருக்கேன். வந்து சேரு” என்றான்.
‘இந்த மனுஷன் ஓட விடுறாரே’ என்று அப்போதுதான் தாமதமாக உணவு உண்ண அமர்ந்தவன் புலம்பியவனாக வாழி சொன்ன இடத்திற்கு கிளம்பி வந்தான்.
வாழி, ஆசாத் கூறிய கொலையை ஹேண்டில் செய்த ஆய்வாளரிடம் அப்போது தான் தன்னை அறிமுகம் செய்து கொண்டிருந்தான்.
“வாங்க சூர்யா” என்ற வாழி, “ஸ்பாட்டில் எடுத்த போட்டோஸ் அவருக்கு காட்டுங்க” என்றான்.
சூர்யா, ஆய்வாளர் ராபர்ட்டிற்கு புகைப்படத்தினை காட்டிட… அவரின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்து விரிந்தன.
“சார்… ” என்று இருக்கையை விட்டு வேகமாக எழுந்தவர், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளில் ஒன்றை எடுத்து வாழியிடம் நீட்டினார்.
“ஒரே மாதிரி இருக்குல சார்” என்று அந்த கோப்பில் அடங்கிய புகைப்படங்களை வாழி பார்வையிட ராபர்ட் வினவினார்.
“ரெண்டும் ஒரே ஆள் பண்ணியிருக்க வாய்ப்பிருக்கு சார். உடம்பிலிருக்கும் கத்தி கீறல்கள், இதயத்தை வெளியில் எடுத்திருப்பது, ரத்த சகதியில் உடல் கிடப்பது” என்று விவரித்த ராபர்ட்…
“இதில் ஒரு அடி கூட என்னால் முன்ன வைக்க முடியல சார். ஒரு சின்ன தடயம் கூட கிடைக்கல. பிங்கர் மார்க், கொலையாளியோட தின்க்ஸ் இப்படி எதுவும். ஏன் ஆணா பொண்ணான்னே கண்டுபிடிக்க முடியல சார். தலை சுத்திப்போச்சு” என்று வேகமாக தலையை உதறிக்கொண்டார்.
“மூணு மாசம் ஆகுது. இன்னமும் அந்த சடலம் கிடந்த காட்சியை நினைக்கும் போது சின்னதா பயம் வரத்தான் செய்யுது” என்றார் ராபர்ட்.
“அட்டாப்ஸியில் என்ன சொல்லுது?” ரிப்போர்ட்டை பார்வையிட்டுக்கொண்டே ராபர்ட்டிடம் வினவினான் வாழி.
“ரத்தம் உறையாமல் இருக்க ஏதோ இன்ஜெக்ட் பண்ணியிருக்கு சார். ரத்தம் வெளியேறி உயிர் பிரிய இருந்த சில கணங்கள் முன்னால் இதயத்தை வெட்டி எடுத்திருக்கு. மத்தபடி உடலில் துன்புறத்தியதுக்கான எந்த அடையாளமும் இல்லை” என்ற ராபர்ட் “இதைத்தவிர வேறெதுவும் இந்த வழக்கில் கிடைக்கல சார்” என்றார்.
“இவங்களோட பேமிலி டீடெயில்?”
“ஹை கிளாஸ் பேமிலி சார். அப்பா, அம்மா ரெண்டு பேரும் பேங்க் ஆபிசர்ஸ். மேரேஜ் நடந்து ரெண்டாவது நாள் கொலை பண்ணியிருக்காங்க.”
ராபர்ட் இறுதியாக சொல்லியதில் வாழியினுள் ஏதோ பொறி தட்டியது. அது என்னவென்று சரியாக அவனால் அனுமானிக்க முடியவில்லை.
“ஓகே மிஸ்டர் ராபர்ட். தேன்க்ஸ் ஃபார் தி இன்ஃபர்மேஷன்” என்ற வாழி, “சூர்யா இவரோட நெம்பர் வாங்கிக்கோங்க” என்று நகர்ந்தான்.
அந்த காவல் நிலையத்துக்கு வெளியில் ஒரு தேநீர் கடையிருக்க, அதன் பெஞ்சில் சென்று அமர்ந்தவனின் மனமும் மூளையும் ஒருங்கே பந்தயக்குதிரையின் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
கடைக்காரர் வாழியின் உடையை வைத்து, அவனருகேயே வந்து “என்ன சார் வேணும்?” எனக் கேட்டார்.
“நோ நீட். தேன்க்ஸ் ண்ணா” என்ற வாழி மூளைக்குள் எதையோ உருட்டியபடி தேநீரின் சூட்டையும் பொருட்படுத்தாது சில நிமிடங்களில் குவளையை காலி செய்திருந்தான்.
அவனுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் பல யோசனைகள் அவனை இயல்பாய் இருக்க விடாது அவனுள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
“இங்க மூணு மாசத்துக்கு முன்ன ஒரு கொலை நடந்துச்சே அதைப்பற்றி எதாவது தெரியுமா’ண்ணா?” தேநீருக்கான தொகையை கொடுத்தபடி வினவினான்.
கேட்ட மாத்திரத்தில் உடலில் அதிர்வையும் நடுக்கத்தையும் காண்பித்தார் அவர்.
“மறக்க முடியுங்களா சார். இங்க தான் பக்கத்துல இருக்க பீச் பார்க்கில் நடந்துச்சு. அன்னைக்கு காலையில கூட்டமா இருக்குன்னு போய் பார்த்தேன். மொத முறையா அப்படியொரு கோரத்தை பார்த்தேன் சார்” என்றார். இப்போதும் கண்ட காட்சியில் அரண்டவராக.
“ரொம்ப நல்ல தம்பி. இங்கிருந்து ரெண்டாவது தெருவுல தான் வீடு. மொத நாள் தான் கல்யாணமாச்சு. அடுத்த நாள் நைட்டு நம்ம கடையில வந்து தான் டீ குடிச்சிட்டு அந்த பார்க் பக்கமா போச்சு. அது போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சரியான மழை சார். பேய் மழை. நானும் கடையை சாத்திட்டு போயிட்டேன்” என்று அவர் தன்னிலையில் சொல்லிக்கொண்டிருக்க வாழிக்கு அவர் சொல்லுவதெல்லாம் தேவையான தகவலாகவே அமைந்தது.
கடைக்காரரிடம் வாழி ஏதோ பேசிக்கொண்டிருக்கிறானென்று அவனைத்தேடி வந்த சூர்யா, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க…
“சூர்யா அந்த பார்க்கில் ஏதும் ஃபுட்டேஜ் கிடைத்ததா விசாரிங்க” என்று அனுப்பினான்.
ராபார்ட்டிடம் சென்று பேசி சில கணங்களில் திரும்பி வந்த சூர்யா,
“உருப்படியா ஒண்ணும் கிடைக்கல சார்” என்றான்.
“சூர்யா அந்த பார்க்குக்கு போகணுமே!”
“ஷ்யூர் சார்.”
அது மாலை நேர பூங்கா என்பதால், நண்பகல் வேளையில் ஆள் அரவமின்றி வெறிச்சோடி கிடந்தது.
காவலாளியும், தோட்டக்காரரும் மட்டுமே இருந்தனர்.
காவலாளி இருவருக்கும் வணக்கம் வைத்திட,
“கொலை நடந்த ஸ்பாட் எது?” எனக் கேட்டான் சூர்யா.
காவலாளி தோட்டக்காரரை அழைத்து அவ்விடத்தை காட்டுமாறு அனுப்பி வைத்திட, வாழி அவரிடமே தேங்கி நின்றான்.
“கொலை நடந்த அந்த இரவு நீங்க காவலுக்கு இங்கில்லையா?”
“சரியான மழைங்க சார். கடலோரங்கிறதால காத்து பிச்சிக்கிட்டு வீசிச்சு. பயங்கர இடி மின்னல் வேற, எனக்கிருக்க அறை நிக்க, உட்கார தான் வசதிப்படும். சாரல்ல முழுசா நனைஞ்சு நிக்கவே முடியல. மழையும் கூடிட்டே போச்சு. அதனால வீட்டுக்கு போயிட்டேன் சார்” என்றார்.
“இறந்த உடலை யார் பர்ஸ்ட் பார்த்தீங்க?”
“தோட்டக்காரர் தாங்க. மறுநாள் காலையில ரெண்டு பேரும் ஒண்ணா தான் வந்தோம். புல்லு தரையில மழைத்தண்ணீ தேங்கிட எடுத்துவிடனுன்னு அவன் உள்ளப்போன வேகத்துல கத்திக்கிட்டு ஓடியாந்தான். என்ன ஏதுன்னு பார்க்கப்போனப்போ தான் நான் பார்த்தேன்.” பொறுமையாக வாழி கேட்ட அனைத்துக்கும் அவர் பதில் சொல்லியதிலேயே… இவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை, முதல் முறை தன்னால் விசாரிக்கப்படுகிறார் என்பதை வாழி கண்டுகொண்டான்.
பலமுறை விசாரித்திருந்தால்… நடந்ததை ஒன்றுக்கு மேற்பட்டு பலமுறை சொல்லும்போது ஒரு சலிப்பு வந்திருக்கும்.
‘எத்தனை முறை சொல்வது’ என்கிற அலட்சியம் தெரிந்திருக்கும்.
ஆனால் அவரோ வாழி கேட்ட அனைத்திற்கும் நிதானமாக தெளிவாக தனக்கு தெரிந்ததைக் கூறினார்.
மழைக்கு முன்பே இறந்த நபர் பூங்காவை நோக்கிச் சென்றதாகக் கடைக்காரர் தெரிவித்திருக்க…
“நீங்க போகும்போது நேரம் என்னயிருக்கும்?” என்று கேட்டதோடு, “யாரும் அப்போது இருந்தார்களா?” என்றும் கேட்டான்.
“ஒரு தம்பி வந்துச்சு சார். மழைவர மாதிரி இருக்கவுமே இந்தப்பக்கமா உடனே போயிருச்சே” என்றார்.
அவர் ஆமென்றதும் அந்த பூங்காவை பார்வையால் ஆராய்ந்தபடி உள்ளே சென்றான்.
அங்கிருந்த விளக்கு கம்பத்திற்கு கீழ் சூர்யாவும், தோட்டக்காரரும் நின்றிருந்தனர்.
“இந்த கம்பத்துக்கு கீழ் தான் நடந்திருக்கு. மழை, சேறுங்கிறதுல நம்ம ஆளுங்க மார்க் எதுவும் இல்லை” என்றான் சூர்யா.
“நீங்க போங்க” என்று தோட்டக்காரரை அனுப்பிய வாழி அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தான்.
“இந்த கேஸ் சரியா விசாரிக்கப்படல சூர்யா” என்றான்.
“புரியல சார்.”
“ராபர்ட் யார் குற்றவாளின்னு கண்டுபிடிக்கறதை விட, இந்த வழக்கை எப்படி முடிக்கலான்னு தான் பார்த்திருக்கிறார். அதனால் தான் யாரையும்…பார்க் வாட்ச்மேனை கூட ஒழுங்கா விசாரிக்காமல், நோ எவிடென்ஸ் கேட்டகிரியில் க்ளோஸ் பண்ணி ஓரம் வச்சிட்டார்” என்றான்.
வாழி கூறுவதும் உண்மையே!
ராபர்ட் ஆரம்பத்தில் இந்த கொலையை சரியாகத்தான் விசாரிக்கத் துவங்கினார்.
கொலை செய்யப்பட்ட நபரின் நிலையை பூங்காவில் கண்டதும்… காவலாளியும் தோட்டக்காரரும் பயத்தில் மயங்கியிருக்க, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ராபர்ட்டால் உடனடியாக விசாரிக்க முடியாது போனது.
அடுத்தடுத்த நாட்களில் இதுபோன்ற வழக்குகளில் அனுபவசாலியான அவர், இந்த கொலை தன்னை சிக்கலுக்குள் உள்ளாக்கும் என்பதை கண்டுகொண்டவராக, அதனை முடித்து ஓரம் வைத்திடவே மெனக்கெட்டார்.
இறுதியில் சரியான ஆதாரம், தடயங்கள், சாட்சிகள், காட்சியமைப்பு, கொலைக்கான நோக்கம் என்ன? இவை யாவும் இல்லையென ரிப்போர்ட் கொடுத்து வழக்கை மூடிவிட்டார்.