வாழி கலகலப்பானவன். காவலதிகாரியாக இருந்தாலும், முரட்டுத்தனமாக கடினமாக இருந்திட மாட்டான். இருப்பினும் அளவுக்கு அதிகமாக பேசிடமாட்டான். அவனது விளையாட்டுப் பேச்செல்லாம் கிருஷ்ணனிடம் மட்டும் தான். கிருஷ்ணனிடம் மட்டும் அவனுக்கு எதற்கும் வரம்பிருந்தது கிடையாது.
ஆனால் மோட்டிவேஷனாக, அட்வைஸாக என்றுமே யாரிடமும் பேசியது கிடையாது. அது அவனுக்கு வரவும் வராது.
இன்று அதனை உடைத்திருந்தான்.
தனக்கு வேண்டியவர்களுக்கு ஆறுதலாக பேசிட வேண்டுமென்றால், ஊக்கமளிக்கும் பேச்சு தானாக வரும் என்பதை தனுவிடம் பேசிய பின்னர் தெரிந்துகொண்டான்.
வாழி பேசியதில் முற்றும் இல்லையென்றாலும், கொஞ்சம் தெளிவு பெற்றவளுக்கு… அவன் இறுதியாகக்கூறிய “போட்டிக்கு தேர்வாகியிருக்கிறாய்!” என்பதை நம்ப முடியாது விழி விரித்து வாழியையே பார்த்திருந்தாள் தன்வி.
‘தி ஷாடோ கேலரி.’ மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகமெங்குமுள்ள புகைப்படக் கலைஞர்களுக்காக பாரிஸில் நடத்தப்படும் போட்டி. இதில் எந்நாட்டிலிருந்தும் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். பதினாறு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை உள்ளோர் கலந்துகொள்ளலாம். இப்போட்டியில் பங்கு கொள்வதற்கே, நம்மால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அனுப்பி, அது தேர்வாக வேண்டும். அதன் பின்னரே அப்போட்டியில் பங்கேற்க முடியும். போட்டியில் பங்கேற்க தேர்வாகியி பின்னர் மூன்று சுற்றுகளில் கொடுத்துள்ள கரு அடிப்படையில், போட்டி துவங்கிய தேதியிலிருந்து புகைப்படம் எடுக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். இதில் வெற்றிபெற்றால், சிறந்த புகைப்படக் கலைஞர் என்ற விருதுடன் சேர்த்து டிஸ்கவரி, பிபிசி போன்ற பெரும் துறைகளில் பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கும்.
(போட்டியை பற்றி சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் கதைக்காக… கற்பனை மட்டுமே.)
இப்போட்டியில் பங்கேற்றிட கல்லூரி காலத்திலேயே தனு புகைப்படம் அனுப்பியிருக்கிறாள். அனுப்பிய படம் தேர்வாகி, போட்டியிலும் நுழைந்துவிட்டாள். ஆனால் முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டாள்.
இப்போதும், தான் புகைப்படம் அனுப்பாத நிலையில் எப்படி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்கிற கேள்வி அவளுள்.
அவள் தான் அருண் கல்யாண விடயமறிந்த நாளாக அவளாகவே இல்லையே. இதில் அவனது நாடகத்தில் முழுதாய் மூழ்கியல்லவா போயிருந்தாள்.
போட்டி அறிவித்து பத்து நாட்கள் மட்டுமே புகைப்படம் அனுப்பிட கால அவகாசம் கொடுத்திருக்க… அதையெல்லாம் அறியும் மனநிலையில் தனு இல்லை.
அருண் சொல்வதை நம்புவதா, இல்லை அவனது திருமண விடயத்தை நம்புவதா என்ற குழப்பத்திலேயே இருந்ததால், சுற்றமே உணராது திரிந்திருந்தாள்.
போட்டியை பற்றி அறிந்த வாழியும், எப்படியும் கலந்துகொள்வாள். தன்னிடம் வந்து சொல்வாளென்று காத்திருக்க அவள் அதைப்பற்றி தெரிந்துகொண்டதாகவே இல்லை. இறுதி நாளில் தான், அவளுக்கு போட்டிப்பற்றி தெரியவில்லை, சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று அவளெடுத்து எங்கும் பயன்படுத்தாத புகைப்படம் ஒன்றை தேர்வு செய்து தானே அவளது பெயரில் விண்ணப்பித்து அனுப்பி வைத்தான்.
“நான் பிக் எதுவும் செண்ட் பண்ணலையே?” ஒருவித திணறல் அவளிடம்.
புகைப்படம் எடுப்பதில் எப்போது ஆசை வந்ததோ… புகைப்படத்துறையில் உயரிய நிலையில் இப்படியொரு போட்டி நடைபெறுகிறது என்று தெரிந்தது முதல் அவளின் ஆசையெல்லாம் இப்போட்டியில் முதலிடம் வென்று உலகளவில் தன் பெயர் தடம் பதித்திட வேண்டும் என்பது தான்.
நினைக்கவே கோபம் கோபமாக வந்தது. ஆத்திரம் யார் மீதென்று தெரியாமல் கன்மூடித்தனமாக கைகளில் சிக்கும் பொருட்களையெல்லாம் தூக்கிப்போட்டு உடைக்கும் வெறி கண்ணில் கனன்றது. தன் லட்சியம் மறக்கும் அளவிற்கு பொய்யான உறவை நம்பி சுயம் தொலைத்திருந்தோமே என்று எண்ணுகையில் அவளுக்கு அவள்மீதே வெறுப்பானது.
“எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன்?” என்றவள், “இதிலிருந்து நான் முழுசா வெளியவரனும் வாழ்” என்றாள்.
“ச்சேஸ் யூவர் ட்ரீம்.” அவளது மொத்தத்திற்கும் மூன்று வார்த்தையில் பதில் கொடுத்திருந்தான்.
இந்நிலையில் அவளை மொத்தமாக மீட்டெடுக்க, அவளது கனவு ஆசையால் மட்டுமே முடியுமென நினைத்தான்.
“அதையே மறந்து இருந்திருக்கேனே!”
“எல்லாரும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது தன்வி. சறுக்குற இடம் ஒண்ணு கண்டிப்பா வரும். அது இதுன்னு நினைச்சிக்கோ” என்ற வாழி, “நீயும் காதல் தோல்வின்னு வீட்டுக்குள்ளே முடங்கி இருக்க சராசரி பொண்ணா இருக்கப்போறியா?” எனக் கேட்டான்.
“வேண்டாம் எனக்கு இந்த ஏமாற்றம் கொடுத்த வலி வேண்டாம் வாழ். இதிலிருந்து நான் மொத்தமா வெளி வரணும்” என்றவள், “நீங்க என் கூடவே இருப்பீங்களா?” எனக் கேட்டிருந்தாள்.
ஏன் அப்படி கேட்டாளென்று அவளே அறியவில்லை.
வாழி உடனிருந்தால் எதையும் தொட முடியுமென்கிற நம்பிக்கை அவளுள். இதுவரை அவள் வைத்த அடிகளுக்கெல்லாம் பாதையாக இருந்தது அவன் தான். அதனால் கூட அவ்வாறு கேட்டிருக்கலாம். ஆனால் வாழிக்கு அவள் கூடவே இருப்பாயா என்றது, வாழ்நாள் முழுக்க இருப்பேன் என்ற எண்ணத்தை அவனது காதல் கொண்ட மனம் ஆழ புதைத்தது.
“பர்ஸ்ட் இப்படி அதை நினைச்சு நினைச்சு அழறதை நிறுத்து தன்வி” என்ற வாழ், “இப்போ தூங்கு. காலையில் இதையெல்லாம் மறந்து உன் கனவில் மட்டும் கவனம் வைத்திருக்கும் தன்வியா எழுந்திரு” என்றான்.
“ம்ம்ம்” என்றவள், “எந்த போட்டோ அனுப்புனீங்க?” எனக் கேட்டாள்.
“என்ட்ரிக்கு ரேண்டம் டைட்டில் கொடுத்திருந்தாங்க, உன் லாப்டாப் நோண்டி பார்த்தேன்” என்று அவன் நிறுத்த, அவள் அதிர்வுக்குள்ளாகினாள்.
“எல்லா ஃபைலும் பார்த்துட்டீங்களா?”
“அப்போதான எது ரொம்ப நல்லாயிருக்குன்னு தெரியும்” என்றவன் அசால்ட்டாகா தோள் குலுக்கினான்.
“என்னை கேட்காமல் என் லேப் எதுக்கு எடுத்தீங்க?” பொய்யாக கோபம் கொண்டாள்.
“நான் எடுக்கலையே! மாமாகிட்ட கேட்டேன். ஏன் எதுக்குன்னு ஒரு வார்த்தைக்கூட கேட்காமல் எடுத்துக் கொடுத்திட்டாரு” என்றான்.
“நீ அவனோட போட்டோ எடுத்துக்கிட்டதே இல்லையா?”
இப்போ இந்த கேள்வி எதுக்கு எனும் விதமாக தன்வி வாழியை ஏறிட்டாள்.
“லவ் பண்றவன் போட்டோ ஒண்ணுகூட இல்லை. ஆனால் என் போட்டோஸ் நிறைய இருந்தது. அதான் கேட்டேன்” என்றான்.
“உங்களை போட்டோ எடுக்க பிடிக்கும்.” அவள் சாதரணமாகத்தான் கூறினாள். புதிதாக நேசம் கொண்ட அவன் நெஞ்சம் அவளது பிடிக்கும் என்ற வார்த்தையில் சிலிர்த்து அடங்கியது.
“உங்களுக்கு போட்டோ ஜெனிக் பேஸ் வாழ். எப்படி எடுத்தாலும் அழகா வரும்” என்றவள், “நீங்க கேட்ட அப்புறம் தான் எனக்கே தோணுது. அவனோட நான் ஒரு செல்ஃபீ கூட எடுத்தது இல்லை. எனக்கு எடுக்கணும் தோணுனது கூட கிடையாது. அவன் எடுப்பான். அதை நான் ஷேர் பண்ணிக்கிட்டதும் இல்லை. என் மொபைல் அம்மா, லட்சு அத்தையெல்லாம் எடுப்பாங்க. அவங்க பார்த்திடக்கூடாதுன்னு, அவன் போட்டோ நான் வச்சிகிட்டதில்லைன்னு காரணம் சொல்லிக்கிட்டாலும், இப்போ யோசிக்கும்போது அவன் போட்டோவை வச்சிக்கணும் அப்படின்னு எனக்கு தோணுனதே இல்லை” என்றாள்.
தன்வி முடிந்துபோனதை நினைத்து வருந்தக்கூடாதென நினைத்தவனே இதைப்பற்றி மொத்தமாக பேசி கொட்டிவிட்டாள், அதிலிருந்து மீண்டு விடுவாள். நினைத்து மருகி மீண்டும் அழுதிட மாட்டாளென நினைத்து, அதைப்பற்றி பேச வைத்தான். தன்னிடம் சொல்லும்போது உண்மை நிலையை அவளும் அறிய நேரிடும் என்பதால் தான் தெரிந்துகொள்வதைப்போல் அவளுக்கு தெரியப்படுத்தினான்.
“உன் ஸ்டடிஸ் லாஸ்ட் இயர்” என்றான்.
“ஹோ” என்றவள், “அப்போவேவா?” எனக் கேட்டாள்.
“ம்.”
“அப்போ தான் நான் அக்செப்ட் பண்ணேன்” என்றவள், “செகண்ட் இயர் காலேஜ் இவன்ட் ஒன்றில் தான் அவனை பார்த்தேன். ஏன் பார்த்தேன்னு இப்போ இருக்கு” என்றாள்.
“லவ் பண்றன்னு சொன்னான். செட் ஆகாதுன்னு அப்போவே சொல்லிட்டேன். ஒன் இயரா என்னை எந்தவிதத்திலும் டிஸ்டர்ப் பண்ணல. ஆனால் மார்னிங், ஈவ்வினிங் என்னை பார்க்க காலேஜ் வாசலில் நிப்பான். ஒரு நாள் ரோட் கிராஸ் பண்ணும்போது, எதிரில் வந்த பஸ்ஸை கவனிக்கல. அவன் டக்குன்னு பிடிச்சு இழுத்துட்டான்” என்று சொல்லிக்கொண்டிருந்ததை நிறுத்தினாள்.
வாழி யூகித்துவிட்டான். உயிரை காப்பாற்றியதற்கு நன்றி சொல்லுவதற்கு ஈடாக, காதலை சொல்லிவிட்டாளென்று. ஆனால் அதனை வாய் திறந்து கேட்கவில்லை. மௌனமாக அவள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தான்.
“அன்னைக்கு ஒரு தேன்க்ஸ் சொல்லியிருந்தால், இன்னைக்கு இந்த நிலை வந்திருக்காது. ஒரு எமோஷனல் பிளாக். அப்போ எனக்கான பதட்டம், என்னவோங்கிற பயம் அவன் முகத்தில்… அவன் சொன்ன லவ்வுக்கு ஓகே சொல்லிட்டேன். இப்போ தான் நான் செய்தது தப்புன்னு புரியுது” என்றாள்.
“பட் அவனுக்கு உண்மையா இருக்கணும் நினைச்சேன். மூணு வருடமா அப்படித்தான் இருந்தேன். அவனைத்தவிர வேறு எதையும் அவன் என்னை யோசிக்கவிட்டது இல்லை. என்மேல அவ்வளவு கன்சர்ன் அவனுக்கு. அப்படி அக்கறை காட்டுவான். இதெல்லாம் தான் காதல்ன்னு ஏமாந்துட்டேன்” என்றாள். விரக்தியாக.
“அவன் அப்படி இருப்பான். இப்படி பார்த்துப்பான் சொல்ற. அவனுக்காக நீயென்ன பண்ணியிருக்க?”
வாழியின் கேள்வியில் தன்வி மொத்தமாக தான் கொண்டிருந்த காதலில் ஆட்டம் கண்டாள்.
எப்போதுமே அருண் தான் அவளைத்தேடி வந்திருக்கிறான். அழைத்திருக்கிறான். பேசுவது கூட முதலில் அவனாகத்தான் இருக்கும். காதல் வசனம் சொல்வதிலிருந்து எல்லா காதலர்களைப்போல பிதற்றுவதும் அவனாகத்தான் இருக்கும். எங்குமே தன் மனமென்று அருணிடம் அவள் திறந்து காட்டியதில்லை. அவனுக்கு ஒன்றென்றால் மனிதாபிமான அடிப்படையில் கவலை கொண்டிருக்கிறாளேத் தவிர, அவனை உயிருக்கு உயிராக நேசிக்கும் பெண்ணாக துடித்ததெல்லாம் இல்லை.
இந்த காதல் மட்டும் தான் தடுக்கிவிழுந்தால் கூட வந்துவிடும். லாஜிக்கெல்லாம் இதற்கு கிடையாது.
லாஜிக் இல்லா மேஜிக் தானே காதல்.
தன்வியின் அழுகையை பார்த்து வாழிக்கு காதல் வந்ததும் அந்த லாஜிக்கே இல்லாத மேஜிக்கால் தான்.
“என்னை காப்பாத்தினான்னு ஃபிரண்டா பழக ஆரம்பிச்சேன். அந்த நட்பு அவன்கிட்ட உரிமையை கொடுத்தது. இந்த உரிமை தான் காதல்ன்னு திரும்ப ஒருமுறை அவன் என்கிட்ட புரபோஸ் பண்ணும்போது, என்னால் மறுக்க முடியல. முதலில் நோ சொன்ன திடம் அப்போ இல்லாமல் போச்சு” என்றவள், “நாளாக நாளாக அவன்மேல் ஒரு ஈர்ப்பு. அதை காதல்ன்னு நம்பி ரிஜிஸ்டர் மேரேஜ் வரை போயிருக்கேன்” என்று சிரித்தவளின் சிரிப்பில் வலி. ஏமாற்றத்தின் சாயல்.
“விட்டுட்டு போகன்னு தெரிஞ்சே எப்படி என் பின்னால் சுத்தினான்?”
“அவன்கிட்ட தான் கேட்கணும்!” என்ற வாழி, “மனசிலிருந்த எல்லாம் கொட்டியாச்சா? இப்போ உனக்கே ஒரு தெளிவு வந்திருக்குமே! அதே தெளிவோட இரு. திரும்ப கண்ணை கசக்கிட்டு இருக்காதே. அந்த காதல் முடிஞ்சிப்போச்சு” என்றான்.
“அது காதலே இல்லை.” சட்டென்று மொழிந்திருந்தாள்.
காதல் தோல்வியிலிருந்து ஒருநாளில் மீள முடியுமா? தன்வி மீண்டிருந்தாளே! வாழி மீட்டிருந்தான் என்பதே சரியாக இருக்கும்.
வாழி பார்வையில் உணர்வுகளற்று பார்த்திருக்க…
“என்னயிருந்தாலும் காதல்ன்னு மூணு வருசம் ஒருத்தனோட சுத்திட்டு இருந்திருக்கேன். நான் ஒரு பைத்தியக்காரி. இப்போ நினைச்சா சிரிப்பு தான் வருது” என்றவள், “சும்மா ஒரு பொண்ணுகிட்ட பழக ஏன் காதலை யூஸ் பன்றாங்க?” எனக் கேட்டாள்.
தெரியாதென உதடு சுழித்தவன்,
“நமக்கு இப்போ தான் காதல் சேப்ட்டர் என்டர் ஆகுது” என்று, எழுந்து நின்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான்.
அவள் அவனை புரியாது பார்த்து…
“லவ் பண்றீங்களா வாழ்?” எனக் கேட்டாள்.
“தெரியலையே!” என்றவன், “ஆனால் என்னோடது லவ் மேரேஜ் தான்” என்று கூறினான்.
அவளை ரொம்ப யோசிக்கவிடாது,
“இந்த பிக் தான் செண்ட் பண்ணேன்” என்று தன்னுடைய அலைப்பேசியை அவளிடம் நீட்டினான்.
“இந்த பிக் எடுத்த டே உங்களுக்கு நினைவிருக்கா?” ஆச்சரியமாக வினவினாள்.
வாழியின் தலை ஆமென்று அசைந்தது. அவனது அதரத்தில் புன்னகை விரிந்திருந்தது.
இடம் அவர்களது தோட்டம் தான். மாலை சூரியன் மறைய இருந்த தருணம். பிரகாசமான ஒளியும் மரங்களின் பசுமையும் பின்னணியை சூழ்ந்திருக்க, சூரியனின் கதிர், தோட்டத்தில் கற்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாழியின் இருசக்கர வாகன கண்ணாடியில் பட்டு பிரதிபலித்தது. வண்டியின் பக்கவாட்டு தோற்றத்திற்கு ஏற்ப ஆஷ் தரையில் அமர்ந்திருக்க… மென் சாரலாய் மழைத்துளி பூமியை தொடவிருந்த நொடி அது.
ஒரு பக்கம் சூரியனின் வெளிச்சமும், மரங்களின் நடுவில் ஊடுருவிய கதிரின் ஒளி கலந்த பச்சை வர்ணமும், கொட்டி தீர்த்தீடாத துளி மழையும் அழகு என்றால், அக்காட்சிக்கு நடுவில் ஒய்யாரமாக நின்றிருந்த இருசக்கர வாகனமும், அமர்ந்திருந்த ஆஷும் அழகுக்கு அழகு சேர்த்தன.
அந்த அழகு கொஞ்சமும் சிதறாது தன்வியின் காமிராவில் நிழலுறு பிம்பமாக சேமிக்கப்பட்டிருந்தது.
அந்த புகைப்படம் வாழி மற்றும் தன்வி இருவருக்குமே பிடித்தமானது. அதற்கு காரணம், அவளுக்கு பிடித்த ஆஷும், அவனுக்கு பிடித்த வண்டியும் அக்காட்சியில் இடம்பெற்றிருப்பதே காரணம்.
அந்த வண்டி வாழிக்கு ஸ்பெஷலானது. தன்வி தன்னுடைய உழைப்பில் வந்த பணத்தில் வாழிக்காக வாங்கிக்கொடுத்தது. வாழிக்கு இருசக்கர வாகனமென்றால் அதுவும் குறிப்பிட்ட வகை வண்டியின் மீது அதீத விருப்பம். கல்லூரி நாட்களின் போது, இருசக்கர வாகனத்தில் சிறிய விபத்து ஏற்பட்டுவிட, சேகரனைவிட கிருஷ்ணன் அதிகம் பதறிப்போனார்.
அன்றே அவனுக்கு கார் ஒன்றை வாங்கிக்கொடுத்தவர், இருசக்கர வாகனத்தை கையிலெடுக்கவே கூடாதென்று சொல்லிவிட்டார். அவரின் பேச்சை மீறுவது வாழிக்கு கடினமல்ல. ஏனோ, கிருஷ்ணனின் பேச்சினை என்றுமே அவனால் மீற முடிந்ததில்லை.
அன்று முதல் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதையே நிறுத்தியிருந்தவன்,
கிருஷ்ணனே “நீ பைக்கே ஓட்டு” என்று சொல்லுமளவிற்கு படுத்தி வைத்திருந்தான்.
“உனக்காகத்தான் பைக்கில் சுத்த வேண்டிய வயதில் கிழவன் மாதிரி காரில் போயிட்டு இருக்கேன்.
உனக்காகத்தான் என் பைக்கை தொடுவதே இல்லை.
உனக்காகத்தான்… உனக்காகத்தான்…” என்று சொல்லி சொல்லியே அவரை ஒரு வழி செய்துவிட்டான்.
ஒருநாளில் இருமுறையாவது சொல்லிடுவான்.
அவன் அந்த வசனம் பேசும்போதெல்லாம் வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கு சிரிப்பாக இருக்குமென்றால், கிருஷ்ணனுக்கு மட்டும் கடுப்பாக இருக்கும்.
‘ஏன்தான் அவனிடம் பைக் தொடக்கூடாது சொன்னமோ’ என்று நினைத்து நொந்து போவார்.
அவரை கடுப்பேற்ற விளையாட்டாக சொல்வானேத் தவிர, பைக்கை அதன் பின்னர் தொட்டதே இல்லை.
தன்வி ஸ்டுடியோ ஆரம்பித்து, மெல்ல வளர்ந்த நேரம். அவளது ஸ்டுடியோ வெளியுலகிற்கு தெரிய வந்த தருணம். பெரிய விளம்பர கம்பெனி ஒன்றுடன் இணைந்து, இரண்டு ஆட் ஷூட்களில் வந்த லாபத்தில் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு ஆடை வாங்கிக் கொடுத்தவள், அவள் வளர காரணமாக இருந்த வாழிக்கு எதுவும் வாங்கவில்லை.
சிறு வயது முதல் அவன் தான் அவளுக்கு எதாவது வாங்கிக்கொடுப்பான். ஆஷ் கூட அவன் அவள் கேட்டாளென்று வாங்கிக்கொடுத்தது தான். எப்போதுமே பெற்றுக்கொண்டவளுக்கு, அவனுக்கு வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று தோன்றவில்லை என்றில்லை. என்ன தருவதென்று தெரியவில்லை. ஆடை வாங்கிக்கொடுப்பதில் விருப்பமில்லை. அதனால் வாழிக்கு எதுவும் வாங்கவில்லை.
அன்று சேகரன் கூட, “உனக்கு தோணிருக்காடா! என் தனுக்குட்டிக்கு தோணிருக்கு பாரு. நீயெப்போ இப்படி வாங்கித்தரன்னு பார்க்கிறேன்” என்று வாழியிடம் விளையாட்டாய் கேட்டிருந்தார்.
அப்போது அவரை சமாளிக்க…
“நானே எனக்கு எதுவும் வாங்கித்தரலன்னு கடுப்பிலிருக்கேன். நீ வேற… போப்பா” என்று எழுந்து சென்றிருந்தான்.
அவன் விளையாட்டாய் சொன்னது அவளுக்கு என்னவோப்போலானது.
‘என்னயிருந்தாலும் அவங்களுக்கும் ஒரு ட்ரெஸ் வாங்கியிருக்கலாம்’ என்று நினைத்து வருந்தியவளுக்கு, அவன் ஸ்பெஷல் தானே! அதனால் ஸ்பெஷலாக வாங்க நினைத்து யோசித்த சமயம்,
சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் வந்திருந்த புதிய ரக பைக் ஒன்றை காண்பித்து லட்சுவிடம் அவன் பேசிக்கொண்டிருந்தது நினைவு வந்தது.
அடுத்தநாளே அந்த வகை பைக் கிடைக்கும் ஷோ ரூமிற்கு சென்றவள், அந்த ரகம் இருக்கிறதா என்று ஆராய்ந்துவிட்டு அவனை அங்கு வரவழைத்தாள்.
“இங்கென்ன?”
“பைக் வாங்கணும். கலர் செலக்ட் பண்ணுங்க!” என்றாள்.
அங்கிருக்கும் பைக்கை கண்டவன்,
“இதுவா? உனக்கா? நீ பெரிய பைக் ட்ரைவ் பண்ணி நான் பார்க்கலையே? இந்த பைக்கை உன்னால் பிடிச்சு நிறுத்த முடியுமா? ஹேண்டில் பண்றது கஷ்டம். ஸ்கூட்டி பார்க்கலாம்” என்றான்.
தன்வி மானசீகமாக தலையில் தட்டிக்கொண்டாள்.
“எனக்கு இதான் வேணும்” என்று தன்வி அடமாக இருக்க… பிளாக் வித் ஆஷ் வர்ண பைக்கை தேர்வு செய்தான்.
“உங்களுக்கு ஓகேவா?”
“ம்” என்று வாழி சொன்னதும், பேப்பர் வொர்க் முடிய, முழு தொகையையும் அவளே கட்டினாள். வாழி தான் கட்டுகிறேன் என்றதை மறுத்துவிட்டாள். அதில் அவனுக்கு அவள்மீது கோபம் உண்டானது. அடுத்த நொடி அந்த கோபம் அவள் சொன்ன பதிலில் காணமல் போனது.
“பைக் உங்களுக்கு. எனக்குன்னா நீங்களே பணம் கொடுங்கன்னு நானே சொல்லியிருப்பேன். இது உங்களுக்கு பர்ஸ்ட் பர்ஸ்ட் நான் வாங்கிக்கொடுகிறது. நோ சொல்லாம ஸ்டார்ட் பண்ணுங்க” என்றாள்.
அவனுக்கென்றதும், எதற்கு இது… வீண் செலவு என்று எவ்வித மறுப்பான காரணமும் சொல்லாது சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான்.
அன்று தான் முதன் முதலில் தன்வியை தன் பின்னால் அமர வைத்திருந்தான். அத்தனை வருட உறவில்.
வீட்டிற்கு வந்ததும் வாழி பெரியவர்களை அழைக்க வீட்டிற்குள் செல்ல, புதிய வண்டி சத்தம் கேட்டு ஓடிவந்த ஆஷ் அதனருகில் அமர்ந்துகொண்டது. அதைத்தான் தன்வி அன்று புகைப்படம் எடுத்திருந்தாள்.
“எங்களுக்கெல்லாம் கம்மி பட்ஜெட். அவனுக்கு மட்டும் ஸ்பெஷல்.” கிருஷ்ணன் வண்டியை பார்த்ததும் மகளை கேலி செய்தார்.
அத்தோடு,
“இனி இவன் உனக்காகத்தான்னு டயலாக் பேசமாட்டான். நான் தப்பிச்சேன்” என்று துள்ளி குதிக்க, வாழி அவரை முறைக்க என்று அந்நொடி மகிழ்வாய் கடந்தது.
அந்நிகழ்வு நடந்து ஒரு வருடமாகிறது. நினைக்கையில் இன்றும் அதன் பிரதிபலிப்பு இருவரின் முகத்திலும்.
தன்வி அவனுக்காக முதன் முதலில் வாங்கிக்கொடுத்தது அவனளவில் அதீத ஸ்பெஷலாகிப்போனது. அதனாலேயே அவ்வண்டியை யாரையும் தொடக்கூட இன்றளவில் அவன் அனுமதித்தது கிடையாது.
அந்நாளின் நினைவோடு இருவரும் உறங்க சென்றிட… விடியல் பெரும் புயலை வீச காத்திருந்தது.