சூர்யா தன்னுடைய இருசக்கர வாகனத்தை வேகமாக செலுத்திக்கொண்டிருக்க அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்த வாழி ஏதோவொரு பாடலை ஹம் செய்தபடி தன்னிரு தொடைகளிலும் தாளம் தட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தவாறு சென்று கொண்டிருந்தான்.
“ஜேகே பையன் காணும் சொன்னப்போ மின்னல் மாதிரி உங்க முகத்தில் அதிர்ச்சி வந்துபோனுதே! ஏன் சார்?” சூர்யா கேட்டிட… கைகள் தாளமிடுவதை நிறுத்தாத வாழி,
“நீ நோட் பண்ணிட்டியா?” என்றான்.
“ம்… சொல்லுங்க சார்.”
“அவனை வேறொரு விடயத்தில் தெரியும். அதான்” என்ற வாழி தோள்களை உயர்த்தி இறக்கினான்.
“அவன் பெயர் அருண் தானே!”
“எஸ் சார்.”
அப்போதுதான் பெருமாள் அவனுக்கு அழைத்திருந்தார்.
அவரிடம் வாழி அருண் காணமல் போன நேரத்தினை கேட்டிட…
அவரோ அதிகாலை நேரத்தைக் குறிப்பிட… சட்டென்று மழையில் நனைந்தும் நனையாது பாதி ஈரத்தில் ஒருவித படப்படப்போடு வீட்டிற்குள் நுழைந்த தன்வியின் முகம் அவனது கருத்தில் தோன்றி மறைந்தது.
‘இருக்காது. நோ சான்ஸ்.’ தலையை உலுக்கிக்கொண்டான்.
“சீக்கிரம் போடா!” என்று சூர்யாவின் தோளில் தட்டிய வாழியின் மனதில் தேவையில்லாது தன்வியின் பதட்ட முகம் வந்துகொண்டே இருந்தது.
“சார் வந்தாச்சு…”
இப்போது அவர்கள் வந்தது மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல். கடற்கரையின் பின்னணியில் வசதி படைத்தவர்கள் மட்டுமே தங்கும் அமைப்பில் அமைந்திருந்தது.
“இதுவும் ஜேகே’வினுடையது தான் சார்.”
“ம்ம்ம்…” என்ற வாழி, “இங்குதான் அருண் வைஃப் இருக்காங்களா?”
“எஸ் சார்.”
“ஓகே” என்ற வாழி வரவேற்பில் அருணின் மனைவியை சந்திக்க வந்திருப்பதாக சொல்லி, லாபி இருக்கையில் அமர்ந்தான்.
சூர்யா அவ்விடத்தை பார்வையால் அலசியபடி இருக்க… வாழியோ கண்களை இறுக மூடி, தன் மூளைக்குள் ஓடும் எண்ணத்தை விரட்டியவனாக இருந்தான்.
பெரும்பாலும் அவனது உள்ளுணர்வுகள் பொய்த்தது கிடையாது. அதனாலே, மனம் வலியுறுத்தும் விடயத்தை ஏற்கவும் முடியாது, விடவும் முடியாது முதல்முறையாக ஒரு வழக்கில் தடுமாறி தவிக்கின்றான்.
மனதின் எண்ணத்தை விட்டால், நினைக்கும் நபர் குற்றவாளியாக இருக்கும்பட்சத்தில் தானே தப்பிக்கவிட்டதாக ஆகிவிடும். இல்லை மனம் சொல்வதை ஏற்று அதன் வழியில் சென்று எண்ணம் பொய்யாக இருந்தால், தன்னுடைய உறவை தானே சந்தேகித்தது போலாகும். உறவின் நம்பிக்கை பொய்த்துப்போகும். இப்போது இவ்விரண்டுக்கும் இடையில் தான் வாழி தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
ரிசப்ஷனிஸ்ட் ஜேகேவிற்கு அழைக்கும் முன், அவரே அழைத்து வாழிக்கு உதவ கூறினார்.
“அப்போ அங்கவே போய் பார்க்கலாமே” என்ற வாழி இருக்கையிலிருந்து எழ, சூர்யாவும் அவர்களுடன் இணைந்தான்.
“சார் ஒருத்தர் மட்டும்…” மேலாளர் வாழியுடன் வந்த சூர்யாவை தடுக்க…
தன்னுடைய முகத்தை சற்று சாய்த்து புருவத்தை விரலால் கீறியபடி மேல் விழிகளால் மேலாளரை நோக்கிய வாழி…
“ம்ம்ம்… உங்க பாஸ்கிட்ட சொல்லிடுங்க மிஸ்டர். வேறு யாரையாவது வைத்து கண்டுபிடிச்சிக்க சொல்லுங்க” என்றான்.
சொல்லியது மட்டுமில்லாது,
“வாங்க சூர்யா…” என்று வாயில் நோக்கி நடக்கவே ஆரம்பித்துவிட்டான்.
வாழிக்கு சூர்யா வேலையில் சேர்ந்த சில தினங்களிலேயே பிடித்துவிட்டது. பிடித்தம் தன்னைப்போல் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்க எப்போதும் உரிமையாய் ஒரு நண்பனைப்போல் தான் பேசிடுவான்.
ஆனால் இப்போது பன்மையில் விளித்தது சூர்யாவிற்கே ஒரு மாதிரி இருந்தது. அதோடு, உனக்கு வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டிய இடத்தில் கட்டாயம் கொடுப்பேன் என்ற வாழியின் பண்பு சூர்யாவுக்கு புரிந்தது.
வாழி விளையாட்டுத்தனமாக இருந்தாலும், வேலையில் கெட்டியென்று முந்தைய வழக்கில் தெரிந்து கொண்டிருந்தானே! அதனாலேயே தற்போதைய வாழியின் கோபம் கூட தனக்கானது என்று நினைக்கையில் சூர்யாவுக்கு வாழியின் மீதான மரியாதை உயர்ந்தது.
ஆனால் இதே சூர்யா இன்னும் சில தினங்களில், “வேலையே செய்யமாட்டிங்களா சார்” என்று புலம்பவிருப்பதை அக்கணம் அறியவில்லை.
“சார்… சார்…” என்று மேலாளர் பின்னால் வருவதையெல்லாம் வாழி கண்டுகொள்ளவே இல்லை.
“சார்… சார்…” என்று பின்னால் வந்த மேலாளர், பயத்தோடு தன்னுடைய அலைப்பேசியை வாழியிடம் நீட்டினான்.
வாழி வாங்காது உருத்து விழித்தவனாக நின்றிருந்தான்.
மேலாளர் ஸ்பீக்கரை ஆன் செய்திட…
“மிஸ்டர். வாழியாதன்” என்று ஜேகேவின் குரலில் வார்த்தைகள் வரும் முன்…
“போலீஸை ரெஸ்ட்ரிக்ட் பண்ணனும் நினைக்காதீங்க சார். எங்க போக்கில் எங்க வேலையை எங்களை செய்யவிடுங்கள்” என்றான். குரல் உயரவில்லை… சத்தம் கூடவில்லை. ஆனால் இனியொருமுறை இம்மாதிரியான குறுக்கீடு நேரிட்டால், தான் விலகிவிடுவேன் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருந்தான்.
“டேக் யுவர் ஸ்பேஸ் மிஸ்டர்.வாழியாதன்.” ஜேகே கூறிட,
“என் இடத்தை எனக்கு யாரும் தர வேண்டாம் மிஸ்டர்.ஜேகே. எனக்கு எடுத்துக்க தெரியும்” என்று சாதாரணமாக மொழிந்து மேலாளரை பார்த்தான்.
“சாரி சார்…”
“இட்ஸ் ஓகே” என்ற வாழி, “சூர்யா இங்கு மீட்டிங் ஹாலில் இன்வெஸ்டிகேஷனுக்கு அரேன்ஞ் பண்ணுங்க” என்றதோடு “மீட்டிங் ஹால் இருக்குதானே?” என்று மேலாளரை பார்த்தான்.
“சார்…” மேலாளர் தயங்கினார்.
“எல்லாருக்கும் ப்ரொசிஜர் ஒண்ணு தான்…” என்றவன் சட்டமாக, லான் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
“முன்னவே ஏதும் சொல்லாது அவரை ரூமுக்கு அழைத்து போயிருக்கலாம்…” என்று நொந்து புலம்பியபடி மேலாளர் அருணின் மனைவியை அழைத்துவர சென்றார்.
அருண், ஷீலா திருமணம் முடிந்து ஒரு நாள் தானாகிறது. இது ஜேகேவின் ஹோட்டல்களில் ஒன்று. இங்கு தான் அருண் மற்றும் ஷீலாவின் திருமண இரவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தோடு அருண் வீட்டிலிருப்பதைவிட, இங்கு அவனுக்கென இருக்கும் அறையில் தான் அதிகம் இருப்பான். அது அறையென்று சொல்லிட முடியாது. மினி பங்களாவை உள்ளடக்கியது.
மேலாளர் தயங்கியபடி அறையின் அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருக்க… அருணின் அன்னை வந்து கதவு திறந்தார்.
“சரி வறோம்” என்று ரூபா சொல்லும் போதே… “அதெல்லாம் என் பொண்ணு வரமாட்டாள். அவங்களை இங்கு வந்து கேட்டுக்க சொல்லு” என்று அதிகாரமாகக் கூறினார் ஜேகேவின் தங்கை மற்றும் ஷீலாவின் தாய் நீரஜா.
சலித்துக்கொண்டவராக உள்ளே சென்ற ரூபா… ஷீலாவை அழைத்து வந்தார்.
நீரஜா ரூபாவை முறைத்திட…
“காணாமல் போனது என் பையன்” என்று அழுத்தமாகக் கூறியவராக ஷீலாவை மீட்டிங் ஹால் கூட்டிச்சென்றார்.
வேண்டா வெறுப்பாக நீராஜாவும் அவர்களைத் தொடர்ந்தார்.
“நீ எவ்வளவு நாள் எனக்கு அசஸ்ட் பண்ணிட்டே இருப்ப சூர்யா? தனியா கேஸ் டீல் பண்ணால் தான் புரமோஷன் எல்லாம் வரும். என்னைவிட பெரிய பொஷிஷனுக்கு போக விருப்பமில்லையா?” என்றான்.
“சார்…”
“ட்ரை பண்ணு மேன்” என்ற வாழி சூர்யாவை முன்விட்டு பின்னால் அறைக்குள் நுழைந்தான்.
“எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?” நீரஜா அதிகாரமாகக் கேட்க,
அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காது இருக்கையில் அமர்ந்த வாழி…
“இந்த எஸ்.ஐ தான் கேஸ் டீல் பண்ணப்போறதா?” அலட்சியமாகக் கேட்ட நீரஜா… “கேள்வி கேட்கத் தெரியுமா?” என்று ஏளனம் செய்தார்.
“இன்வெஸ்டிகேஷனில் இன்ட்ரப்ட் செய்து டைவர்ட் பண்றீங்கன்னு உள்ள பிடிச்சுப்போடணுமா?” வாழி ஒருவித அசட்டையாய் கேட்க…
“ஹேய் என்ன? உன்னைவிட பெரிய போலீசெல்லாம் எனக்கு சல்யூட் வைப்பானுங்க. நீயென்ன ரொம்ப துள்ளுற?” என்ற நீரஜா, “ஜேகேவுக்கு வேற ஆளே கிடைக்கலையா? இவன் ரொம்பதான் திமிர் காட்டுறான். டிப்பார்ட்மெண்டில் சொல்லி வேற ஆள டேக் ஓவர் பண்ண சொல்லு ரூபா” என்றார். அலட்டலாய்.
“இல்லை இல்லை நான் அவரிடமே சொல்றேன்” என்றி நீரஜா நாடாளுமன்ற மாதிரியான அவரின் கணவருக்கு அழைக்க முற்பட,
“நைட்டு தான் டெல்லி போனாங்க. முக்கிய வேலைன்னு. அவங்களை ஏன் தொல்லை பன்ற?
“கொஞ்சம் சும்மா இரேன் நீரஜா” என்ற ரூபா… “சாரி சார். நீங்க என்ன கேட்கணுமோ கேளுங்க?” என்றார்.
வாழி சூர்யாவிற்கு கண் காட்டிட…
ஷீலாவின் முன் அமர்ந்தான் சூர்யா.
அருண் காணவில்லையென அழுதிருப்பாள் போலும். முகமெல்லாம் தடித்து சிவந்து காணப்பட்டது.
“உங்க பெயர்?”
“ம்க்கும். அதுவே தெரியாமத்தான் வந்தீங்களா?”
சூர்யா கேட்டிட நீரஜா நொடித்தார்.
சூர்யா பாவமாக வாழியை பார்த்தான்.
‘இவர் என்ன செஞ்சாலும் பரவாயில்லை. இந்தம்மா வச்சு செய்யுதே!’ சூர்யா மனதோடு புலம்பினான்.
“இவங்களை வெளிய போகச்சொல்லுங்க” என்று நீரஜாவை வெளியில் அனுப்புமாறு ரூபாவிடம் கூறிய வாழி, “உங்களை விசாரணை செய்யும்போது நீங்கள் இங்கிருந்தால் போதும்” என்றான்.
“நான் ஏன் போகணும்? காணாமல் போனது என் மருமகன். நான் இங்குதான் இருப்பேன்” என்று நீரஜா சட்டமாக கால் மேல் காலிட்டு தன்னுடைய தோரணையை காட்டினார்.
சூர்யாவுக்கு ஆரம்பமே விழி பிதுங்கியது.
வாழி தன்னுடைய அலைப்பேசியை எடுத்து பெருமாளுக்கு அழைத்தான்.
“சார் கேஸ் க்ளோஸ்ட். அக்யூஸ்ட் மிஸ்ஸஸ். நீரஜா. அண்ணனோட சொத்துக்காக தன்னுடைய பொண்ணை கல்யாணம் செய்து வைக்கிற மாதிரி வைத்து, பையனை தூக்கிட்டாங்க. அப்போதானே அவங்க மேல் டவுட் வராது. கஸ்டடியில் எடுத்து நம்ம ஸ்டைலில் ட்ரீட் பண்ணால் அவங்களே உண்மையை ஒத்துப்பாங்க” என்றான்.
வாழி சொல்வதை நம்ப முடியாது எதிர்முனையில் பெருமாள் குழம்பினார் என்றால், நீரஜா கருவிழிகள் வெளியே குதித்துவிடும் அளவிற்கு அரண்டு அதிர்ந்து இருக்கையோடு ஒண்டினார்.
“அய்யோ… பொய்… பொய்… நம்பாதீங்க” என்று பெருமாளுக்கு கேட்குமளவிற்கு கத்திய நீரஜா, வாழியின் பார்வையில் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.
“பார்ட்டி வழிக்கு வந்தாச்சு சார்” என்று அலைப்பேசியை வைத்த வாழி,
“இந்த கேஸ் நான் முடிக்கிறவரை… அதாவது அருணை கண்டுபிடிக்கும்வரை இப்படியே இருக்கணும்” என்று வாயில் ஒற்றை விரல் வைத்து காட்டி… “கேட்டதுக்கு வாய் திறந்தால் போதும்” என்றான்.
நீரஜாவின் தலை தன்னால் சரியென ஆடியது.
“லெட்ஸ் ஸ்டார்ட் மேன்.” வாழி சொல்லிட சூர்யா தன் கேள்விகளை ஆரம்பித்தான்.
“அருணுக்கு நடந்து முடிந்த திருமணத்தில் விருப்பம் தானா?”
“அவங்களுக்கு சம்மதம் தான். நான் அவங்களை லவ் பண்ணி கல்யாணம் செய்துகிட்டேன்.” அழுதுகொண்டே ஷீலா கூறினாள்.
இருக்கையின் பிடியில் கை ஊன்றி தன் முகம் தாங்கியிருந்த வாழியின் பார்வை ஷீலாவின் மீதே நிலைத்திருந்தது. கண்களில் சிறு அசைவுமின்றி.
அவனுள் ஒரு கணிப்பு ஓடிட… அதிலிருந்து வெளிப்படையாகக் கேள்வியை கேட்டிட முடியுமா என்ற தடுமாற்றத்தாலேயே சூர்யாவை விசாரிக்கக் கூறினான். இப்போ அனைத்தையும் தனக்குள் உள்வாங்கியவனாக பார்த்திருந்தான்.
“அப்போ லவ் மேரேஜ்ஜா?”
“இல்லை…”
“புரியல… நீங்கதானே லவ் சொன்னீங்க?”
“வீட்டில் அரேன்ஞ் செய்து, எங்கேஜ்மெண்ட் முடிந்த பிறகு தான், நான் லவ் சொன்னேன்…” ஷீலா அடுத்து வெளிப்படையாக சொல்ல முடியாது திக்க…
“சொல்லுங்க… உங்களுக்கு அவசியமில்லாத சின்ன விடயம் கூட எங்க பார்வையில் பெரும் தடயமாக அமையலாம்” என்றான் சூர்யா.
“அருண் காணமல் போனதுக்கும் நீங்க கேட்கிற கேள்விக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா?” தன் வாயினை அடக்க முடியாது நீரஜா கேட்டார்.
“இருக்கே” என்ற சூர்யா, “அவருக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடந்திருந்தால்… ஓடிபோயிருக்க வாய்ப்பிருக்கே. காரணம் இதுதான்னு கன்ஃபார்ம் ஆகிட்டால் தேடுறது ஈஸியாகிடுமே!” என்றான்.
“இனியொருமுறை வாய் திறக்காதீங்கன்னு சொல்லிகிட்டெல்லாம் இருக்கமாட்டேன். க்ளோஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்.” வாழி சொல்லியதில் மீண்டும் பழையபடி கப்சிப் ஆகினார் நீரஜா.
ஷீலா ரூபாவை கேள்வி பொதிந்த பார்வையில் அர்த்தமாக ஏறிட, அவரோ சொல் எனும் விதமாக சம்மதம் வழங்கினார்.
வாழி அதனை கவனிக்கவும் செய்தான்.
“அருணுக்கு எங்க கல்யாணத்தில் விருப்பமில்லை. ஏன்னு காரணம் கேட்டப்போ, உன்கிட்ட அந்தளவுக்கு ஃபீல் வரலன்னு சொன்னார். ஜேகே அங்கிள் ஒத்துக்கல. எங்க அப்பா என்னோட அரசியல் வாரிசு நீதான்னு சொல்ல அரை மனதா இறங்கி வந்தார். ஜேகே அங்கிள் சொத்தை காரணம் காட்ட முழுசா சரின்னு சொல்லிட்டார்” என்றாள்.
“அப்போ கிட்டத்தட்ட பிளாக்மெயில் செய்து கல்யாணம் பண்ணியிருக்கீங்க? அப்படித்தானே?” ஷீலா சூர்யாவை அதிர்ந்து பார்த்தாள். அவள் தலை இல்லையென அசைந்தது.
“நீங்க இல்லன்னு சொன்னாலும், அதான் உண்மை” என்ற சூர்யா, “உங்க பையனுக்கு ஏன் இந்த திருமணத்தில் விருப்பமில்லன்னு தெரியுமா?” என ரூபாவிடம் கேட்டான்.
“இப்போ கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு சொன்னான்.”
“ஓகே” என்ற சூர்யா, வாழியை ஏறிட… அவனோ தாடையில் பதித்திருந்த விரல்களை எடுத்தவனாக,
“அவர் ரூம் விட்டு எப்போ போனாருன்னு எக்சாக்ட் டைம் சொல்ல முடியுமா?” எனக் கேட்டான் வாழி. பெருமாள் சொல்லியிருந்தாலும், மனதின் தலும்பளை அடக்க ஒரு தெளிவு வேண்டியதாக இருந்தது.
“எக்சாக்ட் டைம்” என்று யோசிப்பதைப்போல் இழுத்தவள், 4… 4.30 இருக்கும் சார்” என்றாள்.
அவ்விடம், வாழிக்கு தேவையில்லாது தன்வியின் நினைவு எழுந்தது. தனக்குள்ளே இருக்காது என்று சொல்லிக்கொண்டான்.
“நீங்க அப்போ தூங்கலையா?”
வாழி விசாரணை எனும் அடிப்படையில் அவர்களுக்கான நாளென்பதை உணராது சாதரணமாகக் கேட்டுவிட்டான். கேட்டதும் சூர்யா அதிர்ந்த பின்னரே உணர்ந்தான்.
நீரஜா வாழியை முறைத்திட அவன் அதை கருத்தில் கொள்ளவே இல்லை. புருவத்தை ஏற்றி இறக்கியவன்…
“டிடின்ட் மீன் இட்…” என்றான் ஷீலாவிடம்.
“இட்ஸ் ஓகே சார். நீங்க சாரி கேட்கிற அளவுக்கு மோசமான கேள்வியில்லை இது” என்ற ஷீலா… “அருண் டிஸ்டர்ப்படா இருந்தாரு. என்னை தூங்க சொல்லிட்டு, ஏதோ யோசனையிலேயே இருந்தார்” என அவள் முடிக்கும் முன்,
“அப்போ ஒண்ணும் நடக்கலையாடி?” என்று நீரஜா ஆத்திரத்துடன் கேட்டார்.
வாழி எதார்த்தமாகக் கேட்டதற்கு முறைத்தவர், இப்போது தானென்ன கேட்கிறோமென்று உணர்ந்தே கத்தினார்.
“நம்ம ஜோதிடர் சொன்ன நேரத்தில் எல்லாம் நடந்தால் தான் உன் மண வாழ்க்கை நல்லாயிருக்கும். உதிக்குற வாரிசால், அருண் அரசியல் பயணம் சிறப்பா இருக்கும் சொன்னாரே! நடந்த கல்யாணத்தோட நோக்கமே இல்லாமல் போச்சுதே!” என்று அரற்றினார். நீரஜா இதில் சொல்லாதுவிட்ட காரணமும் ஒன்று உள்ளது.
அவர் கூறியதில் வாழியும், சூர்யாவும் என்ன எதிர்வினையாற்றுவது என்று… அங்கிருக்கவே தயங்கினர்.
பெரிய இடங்களில் எல்லாம், சாமியார் பேச்சை கேட்பது, ஜோதிடர் வார்த்தைக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பது எல்லாம் சாதரணம் என்று கேட்டு அறிந்திருந்தாலும், நேரில் பார்த்து அறியும் போது… என்னதான் வளர்ச்சி அடைந்திருந்தாலும் இந்த முட்டாள் தனமெல்லாம் நடந்து கொண்டுதானிருக்கிறது. சலிப்பாக எண்ணிக்கொண்டான் வாழி.
ரூபா வாழியிடம் என்ன சொல்வதென்று கைகளை பிசைந்துகொண்டு நின்றார்.
“பிடிக்காத கல்யாணம். வாழ்க்கை தொடங்க வேண்டிய கட்டாயம். நீங்க கொடுத்த பிரஷர். இதெல்லாம் சேர்ந்து அவரை வீட்டைவிட்டு போகச் செய்திருக்கிறது. அப்போ அருண் காணமல் போகல. அவரே போயிட்டார்.”
நடந்தது தெரிந்து கொண்டது வைத்து சூர்யா தன்னுடைய யூகத்தைக் கூறினான்.
வாழி வேறொரு கோணத்தில் உள்ளுக்குள் அலசி கொண்டிருந்தான்.
“அருண் போன் நெம்பர் சொல்லுங்க ஷீலா!”
வாழி கேட்டிட, ஷீலா நெம்பர் சொல்லியதும் தான் நினைவு வந்தவளாக…
“ஒரு போன் வந்துச்சு சார். அந்த சத்தத்தில் தான் தூக்கம் கலைந்து எழுந்தேன். பேசிட்டு கொஞ்ச நேரம் குறுக்கும் நெடுக்கும் நடந்திட்டு இருந்தார். உடனே கீழ போயிட்டுவறேன்னு போனார்” என்றாள்.
கண்ட்ரோல் ரூமிற்கு அழைத்து, அருணின் எண்ணை கொடுத்த வாழி, அதன் இன் அண்ட் அவுட் ஆராய்ந்து பார்த்திடக் கூறியவனுள் முதல் முறையாக பயம் எட்டிப்பார்த்தது.
தான் நினைப்பது மட்டும் இருக்கக்கூடாதென்று.
இப்போதைக்கு வாழிக்கு இருக்கும் சிறு நிம்மதி அருணின் காதல்… அவன் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை என்பதே!
அவனது பயத்தை போக்குவதற்காகவாவது அருணை விரைந்து கண்டுபிடிக்க வேகம் கொண்டான்.
தன் வேலையில் வேகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவன், முதல் முறையாக வேகத்தை கையில் எடுத்தான். அது அவனது காதலுக்காகவும்.