வாழி வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, தன்வி மடிகணினியில் வேலை பார்த்தபடி கூடத்து இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
வீட்டு வாயிலில் நின்றே எட்டி பார்த்துவிட்டு தன்னுடைய இல்லம் சென்று ரெபிரஷ் செய்து வந்தான்.
“வாங்க ஏசிபி சார். இதுதான் வர நேரமா?” எனக் கேட்ட தன்வி, மடிகணினியை டீபாயின் மீது வைத்துவிட்டு எழுந்து உணவு மேசை நோக்கி அடி வைத்தாள்.
“பூஸ்ட் மட்டும் போதும் தன்வி.” இருக்கையில் தளர்ந்து அமர்ந்தான்.
“ஹான்… அப்போ உங்களுக்கு செய்ததை யார் சாப்பிடறதாம். ஒழுங்கா சாப்பிடுங்க” என்று தட்டில் உணவினை வைத்து அவன் அமர்ந்திருந்த இடத்திற்கே கொண்டுவந்து கொடுத்தாள்.
வலது கையால் நீட்டிய தட்டினை அழுத்தமாக பார்த்தவன், வாங்கிக்கொண்டான்.
“எனக்கும் கொண்டுவறேன்” என்று நகர்ந்தவள், உணவோடு அவனுக்கு முன்னிருக்கையில் அமர்ந்தாள்.
“நீயின்னும் சாப்பிடலையா?”
“கொஞ்சம் வொர்க் இருந்துச்சு. நீங்களும் வந்தால் சேர்ந்து சாப்பிடலான்னு இருந்துட்டேன்” என்றவள், ஸ்பூன் வைத்து வலது கையால் தட்டுத்தடுமாறி உணவினை உண்ண…
“உன் லெஃப்ட் ஹேண்ட் என்னாச்சு?” எனக் கேட்டான். காலையில் அவள் கையினை மறைத்த நினைவில்.
“அடிப்பட்டிருச்சு” என்றவள் இடது கை பழக்கம் உடையவள் என்பதால் வலது கையால் சாப்பிட வெகுவாகவே தடுமாறினாள்.
தன்வி எல்லோரையும் போல் வலது கை பழக்க கொண்டவள் தான். சிறுவயதில், வழக்கு ஒன்றில் கிருஷ்ணனை பணிய வைத்திட… குற்றவாளிகள் தன்வியை குறி வைத்தனர். அப்போது கண்முன் கண்ட பல அதரடி நிகழ்வால், தன்னைப்போல் தன்வியின் உடலில் நடுக்கம் பரவிட, மூளையின் நரம்பியலில் அதிர்வு ஏற்பட்டு மயக்கம் கொண்டவளுக்கு, வலது கை தானாக உதறல் கண்டது. அதுமுதல் சிறுவிடயமென்றாலும் பயம் கொண்டால், தன்வியின் வலது கை ஆட்டம் காணும். அதீத நடுக்கம் கொள்ளும். நடுக்கம் நின்ற பின்னரும் கூட, அதிர்ச்சியில் நரம்பில் ஏற்பட்ட மாற்றத்தால், வலது கையால் இயல்பாய் ஒன்றை எடுப்பது வைப்பது கூட கடினமாகிப்போனது. சாதாரணமாகவே கைக்கு அழுத்தம் கொடுக்கும்போது நடுக்கம் ஏற்பட, அதுவரை வலது கை பழக்கம் கொண்டிருந்த தன்வி இடதுகை பழக்கத்திற்கு மாற்றம் பெற்றாள்.
வாழி முடித்த பின்னரும் பாதி உணவினைக்கூட உண்ணாது மெல்ல மென்று கொண்டிருந்தவளின் தட்டினை வாங்கியவன், அவள் என்னவென்று உணரும் முன்னமே உணவடங்கிய தன் கையை அவள் வாயருகே நீட்டியிருந்தான்.
“இல்லை நானே…” தயங்கினாள்.
“இப்போவே மணி பத்து. நீ சாப்பிடுற பொறுமைக்கு பன்னெண்டு ஆனாலும் ஆகிடும். சாப்பிடு” என்றவன், அவள் மறுக்க மறுக்க ஊட்டி முடித்தான்.
“தேன்க்ஸ்…”
“ஆஹான்…” என்று முன் சென்றவனின் அதரங்கள் மலர்ந்து விரிந்திருந்தது.
அந்நொடி அவனது மனம் காதலால் மட்டுமே நிரம்பியிருந்தது.
வழக்கு, அருண், தன்வியின் மீதான சந்தேகம் எனும் அலைப்புறும் எண்ணங்கள் யாவும் மறந்து வாழியாக மட்டுமே தன் இதயத்தில் புதிதாய் முளைத்த காதல் தடத்தில் தன்னவளின் அருகாமையை விரும்பியே ரசித்தான்.
வாழி தட்டுக்களை கழுவிக்கொண்டே தன்வியிடம் அருண் விடயம் எப்படி ஆரம்பிப்பது, எதில் தொடங்கி கேள்வி கேட்பதென்று யோசித்துக் கொண்டிருந்தான்.
‘நியூஸ் மூலமா அருண் காணோம்ன்னு தெரியும். பட் அவளா எதுவும் என்கிட்ட அதைப்பற்றி பேசலையே?’ கேள்வியாய் வாழி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே…
“வாழ் உங்கக்கிட்ட பேசணுமே…” என்று இழுத்து நிறுத்தி, “அ…ஆர்..அருண் பற்றி” என திக்கி முடித்தாள்.
தன்வியை திரும்பி அழுத்தமாக பார்த்தவன்,
“ஜஸ்ட் அ மினிட்” என்றான்.
தன்வி சென்று பழையபடி இருக்கையில் அமர, கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு அவள் பின்னேயே வந்து அமர்ந்தான்.
வாழி என்ன பேசனுமென்று கேட்கவில்லை. அவளாக ஆரம்பிக்கட்டுமென்று அவள் முகத்தில் பார்வை பதித்திருந்தான்.
ஆஷினை தூக்கி தன் மடியில் வைத்து அவனின் முதுகை வருடிய வாழி, மேலே சொல் எனும் விதமாக புருவத்தை உயர்த்தினான்.
“நைட் முழுக்க ஏகப்பட்ட கால்ஸ் ஃபிரம் அருண். மொபைல் மியூட்டில் போட்டு வந்துதான் உங்கக்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு போய் படுத்தேன். சடனா விழிப்பு வந்தப்போ டைம் பார்க்க மொபைல் எடுத்தால், அருண் மெசேஜ் நோட்டிபிக்கேஷனில். கால் அட்டெண்ட் பண்ணலன்னா சூசைட் பண்ணிப்பேன்னு… எனக்கு என்ன ரியாக்ட் பண்றது தெரியல. தூக்கமே போச்சு. இயர்லி மார்னிங் கால். ரொம்ப யோசிச்சு தான் அட்டெண்ட் பண்ணேன்.
“வீட்டுக்கு வெளியில் இருக்கேன். வான்னு சொன்னான். வரமுடியாது சொன்னதுக்கு, இப்படியே இங்கவே கை அறுத்துப்பேன்னு மிரட்டினான்” என்று தன் விரல்களை பார்த்தபடி சொல்லிக்கொண்டிருந்தவள், வாழியை பார்த்தாள்.
“மேடம் பார்க்க போயிட்டிங்க. அதானே?”
வாழியின் கேள்விக்கு தன்வியின் தலை மேலும் கீழும் ஆடியது.
“ஒருத்தரை ஈஸியா கட்டுப்படுத்துற விடயம் இந்த எமோஷன்.” கடுப்பாக மொழிந்தான்.
“நீங்க எமோஷனுக்கு கட்டுப்படமாட்டிங்களா? ஐ மீன் இப்போ எனக்கோ, லட்சு அத்தைக்கோ எதாவதுன்னா ஓடி வரமாட்டிங்களா?”
“வரலையா?” வாழியின் புருவக் கீறலுடனான பார்வையில், அன்று தூறும் மழையிலும் தனக்கு என்னவோயென்று விரைந்து வந்திருந்த வாழியின் தோற்றம் அவளின் கண் முன் தோன்றி அகம் நிறைத்தது.
“எமோஷன் இருக்கணும். அது நமக்கானவங்களுக்கா இருக்கணும்.” ஒருவித அழுத்தத்துடன் கூறியிருந்தான் வாழியாதன்.
“அந்த செக்(sec) என்னால ஒரு உயிர் போயிடுமோன்னு பயம்.”
“காரில் ஏறு நாம எங்காவது போயிடலாம் கூப்பிட்டான்.” வாழி ஏதும் சொல்வானோ என்று பார்க்க, அவன் அமைதியாக இருந்தான்.
மேலே விவரித்தாள்.
என்ன தான் அருண் மிரட்டி அழைத்திருந்தாலும், இனி அவன் உயிரோடில்லை என்றாலும் தன்விக்கு கவலையில்லை. ஆனால், தன்னை ஏமாற்ற காரணம் தெரிந்துகொள்ள வேண்டுமென அருணை பார்க்க சென்றாள்.
வீட்டு வாயிலில் சில அடிகள் பின்தங்கி காரினை நிறுத்தியிருந்தான் அருண்.
தன்வியை கண்டதும் அருண் காரிலிருந்து இறங்கவில்லை. மாறாக, தன்வியை ஏறும்படி வற்புறுத்தினான்.
கார் சன்னல் வழி தனுவின் கையை பற்றி இழுத்தான்.
தன்வி முடியாதென்று மறுக்க…
“தனு புரிஞ்சிக்கோ… என் அரசியல் ஆசைக்கு என் அப்பாவோட பெயரும் பணமும் ரொம்ப முக்கியம். அதுக்காகத்தான் இந்த மேரேஜ். வெளிப்பார்வைக்கு மட்டும் தான் லீலா என் மனைவி, ஆனால் என் மனசில் நீ மட்டும் தான். யாருக்கும் தெரியாமல் நாம வாழலாம்…” என்று தான் பேசும் வார்த்தையின் பொருள் உணர்ந்தே பேசினான்.
அருண் முடித்திட, அவனது கையிலிருந்து தன்னுடைய கையை உருவிய தன்வி பளாரென்று அறைந்திருந்தாள்.
“என் அப்பா வார்த்தையை மீற முடியாது கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சொல்லியிருந்தாலும், உன் மேல ஒரு மரியாதை இருந்திருக்கும். ஆனால் இப்போ… ச்சை… உன்னோட பழகினேங்கிறது அறுவருப்பா இருக்கு” என்று கோபத்தில் வார்த்தையை பற்களுக்கிடையில் துப்பியிருந்தாள்.
“யாருக்கும் தெரியாமத்தானே லவ் பண்ணோம். அதுமாதிரி வாழுறதில் என்ன தப்பிருக்கு?”
அவன் கேள்வியில் தன்வி கூசிப்போனாள்.
காதலும் கல்யாணமும் ஒன்றாக பார்க்கப்படும் ஒன்றா என்ன?
காதலில் மறைக்கப்படும் யாவும் திருமணத்தில் வெளிப்படுவது தானே நியதி.
ஆணோ, பெண்ணோ மறைத்து காதல் கொள்ளலாம். அதே மறையோடு வாழ்ந்தால்? பார்க்கும் பார்வை, பேசும் பேச்சு யாவும் வேறு அல்லவா! சமூகத்தின் பெயரே அதற்கு வேறாயிற்றே!
தெரிந்தே பேசுபவனிடம் வாதாட மனமின்றி…
“உன்னை விரும்புனேன்னு நினைக்கவே அசிங்கமா இருக்கு. காதல் கைகூடல, நம்மள நம்பி வந்த பொண்ணையாவது நல்லா வச்சிக்க முயற்சிப்போம் அப்படின்னு நினைக்காமல், என்னைத்தேடி வந்திருக்கியே… உன்னையெல்லாம்… ச்சைய்!” சிறு இடைவெளிவிட்டு, “கட்டிக்கிட்ட பொண்ணுக்காவது உண்மையா இரு. இனி நான் இருக்கும் பக்கம் உன் நிழல் கூட படக்கூடாது” என்று அத்தனை அடர்த்தியாய் கூறிவிட்டு வேகமாக கேட்டினை திறந்து வீட்டு பகுதிக்குள் வந்தவளால் அருண் கேட்டதை ஜீரணிக்கவே முடியவில்லை.
‘என்ன வார்த்தை கேட்டுவிட்டான். ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்துவிட்டு, திருமணமின்றி அவனுடன் ஒரு வாழ்க்கையா? இப்போது நடைமுறையில் இருந்தாலும், சில விடயங்கள் எப்போதும் ஒவ்வாமை தான்.’ நினைக்கவே ஆயிரம் பூச்சிகள் உடலில் ஊர்ந்து துளைப்பது போல் பிரம்மை.
அருண் கேட்ட வார்த்தையிலிருந்து மீள சில கணங்கள் தன்விக்கு தேவைபட்டது. ஆதலால், தோட்டத்து வழியாக வீட்டிற்கு பின்பக்கமிருக்கும் கடற் பகுதியில் நடக்கலாமென்று சென்று, மனம் சமன்பட்டதும் திரும்பி வந்திருந்தாள்.
இதில் எப்படி அடிப்பட்டதென்று தன்வியும் சொல்லவில்லை. வாழியும் கேட்கவில்லை.
தன்வி அனைத்தும் சொல்லி முடித்திட…
வாழிக்கு அப்பாடா என்றிருந்தது.
மனம் லேசாய் மிதப்பதைப்போல் உணர்ந்தான்.
எங்கே தன்வியின் பக்கம் தானே சந்தேகத்தில் திரும்பிடுவோமோ என்று இந்த ஒருநாளில் அவன் கொண்ட பயமும் தவிப்பும் ஒருங்கே வாழியிடமிருந்து விடைப்பெற்றிருந்தது.
“நீ தெளிவாயிருக்கியே! இதில் நான் சொல்ல ஒண்ணுமில்லை. உனக்கான வேலையில் கண்ணா இரு” என்று வாழி அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்திட,
“ஐ தின்க்… என்னை பார்த்திட்டு போகும்போது தான் அவனுக்கு ஏதும் ஆகியிருக்கும்” என்று தன்வி கூறினாள்.
“அருண் காணோம் அப்படின்னு தெரிந்ததும் அவனுடைய கால் ஹிஸ்டரி ட்ராப் பண்ணோம். உன் நெம்பர் இருந்துச்சு. மார்னிங் நீ வெளியிருந்து உள்ள வந்தது… ஏதோ கனெக்ட்டா பட்டுச்சு. சோ, நம்ம வீட்டு புட்டேஜ் செக் பண்ணேன். அவன் இங்கு வந்து போனதை அல்ரெடி தெரிஞ்சிகிட்டேன்” என்றான்.
“அதான் என்கிட்ட எதுவும் கேட்கலையா?”
“உனக்கும் அவனக்கும் சம்மந்தம் இல்லைங்கிறப்போ அவனைப்பற்றி உன்கிட்ட கேட்க என்னயிருக்கு?” என்று கூர்மையாய் கேட்ட வாழி, “உன்மேல எனக்கு சந்தேகம் வந்துச்சு. இல்லைன்னு சொல்லல. பட், என் சந்தேகம் உண்மையா இருக்கக்கூடாதுன்னு… நான் தவிச்ச தவிப்பு” என்றவன், “அதைவிடு, உண்மையா இருந்துட்டால் இதிலிருந்து உன்னை எப்படி வெளிக்கொண்டுவரனும் தின்க் பண்ணி தான் புட்டேஜ் எல்லாம் செக் பண்ணேன்” என்றான்.
“புரியுது.” சத்தமின்றி அவள் சொல்லிட, கன்னத்தில் கோடாய் கண்ணீர் இறங்கியது.
“போலீஸ்காரன் பார்வை இப்படித்தான் இருக்கும். தன் சொந்தமாவே இருந்தாலும்” என்றவன், “இனி நானா சொல்லாமல் நீ அருணைப்பற்றி பேசவேக்கூடாது” என்றான்.
கிட்டத்தட்ட அவளுக்கு அவன் சொல்லியது கட்டளை தான்.
சரியென தலையசைத்திருந்தாள்.
“ஓகே எதையும் நினைக்காது போய் தூங்கு” என்று அனுப்பி வைத்தான்.
வாழி தன்வியின் மீது கொண்ட சந்தேகம் மட்டும் உண்மையாக இருந்திருந்தால், நிச்சயம் காவலனாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருப்பான். இப்போது அவளுக்கு அருண் காணாமல் போனதில் எவ்வித சம்மந்தமும் இலலையென்று தெரிந்த பின்னர், அவளை அதிலிருந்து பாதுகாக்கவே நினைக்கின்றான். அதற்காகவே அருணை பற்றிய நினைவே கூடாதென வலியுறுத்தினான்.
தன்வி உறங்கும் வரை காத்திருந்தவன் ஆஷினை தன்வி அறைக்குள் படுக்குமாறு பணித்துவிட்டு தன் இல்லம் வந்தான்.
“என்னை பார்த்திட்டு போகும்போது தான்” என்று தன்வி சொல்லியது வாழியினுள் புது வழியை காட்டிக்கொடுத்தது.
அந்நேரத்திலேயே சிட்டி கண்ட்ரோல் ரூமிற்கு விரைந்து சென்றான்.
அங்கு சென்று பெருமாளுக்கு அழைத்தான்.
“டேய்… இந்நேரத்தில் என்னடா?” அவர் அரை உறக்கத்தில் கடுப்பாக வினவினார்.
“சிட்டி ரோட் மானிட்டரிங் சிஸ்டம் நான் தனியா செக் பண்ணணுமே!” என்றான்.
“தனியா என்ன பண்ணப்போற?” எனக்கேட்ட பெருமாள், “உனக்கு வேண்டபட்டவங்க மாட்டியிருக்காங்களா?” என சரியாக கணித்துக் கேட்டார்.
“ஆமாம்… அவங்க மிஸ்டர்.பெருமாள்” என்றான்.
“அடேய்…” என்று பதறியவர், “நீ கோத்துவிட்டாலும் விட்டுடுவ” என்றவராக ஆப்பரேட்டிங் கோட் டிடெயில் ஆக்சஸ் அவனிடம் கொடுத்தார்.
வாழி உள் சென்றதுமே பெருமாளின் உத்தரவால், ஆப்பரேட்டிங் சிஸ்டமில் அமர்ந்திருந்த பணியாளர் எழும்பி வாழிக்கு இடமளித்து நகர்ந்திருந்தார்.
அவருக்கு நன்றி கூறி, இருக்கையில் அமர்ந்த வாழி,
அவனது வீட்டு பகுதி கனெக்ட் ஆகும் நகரின் முதன்மை சாலையில் இருக்கும் கண்காணிப்பு காமிராவினை பார்வையிட்டான்.
வாழி இதனை அந்தத்துறை சார்ந்தவர்களை வைத்தே பார்த்திருக்கலாம். ஆனால் அவன் பார்க்கப்போவது அவனுடைய வீடிருக்கும் பகுதி. வரும் நாளில் அருணின் காதல் விடயம், காதலித்தப்பெண் என்று தெரியவரும்போது… வாழியின் இந்த பார்வையிடல் தன்வியின் மீது சந்தேகத்தை ஆழப் பதிக்கும். அதற்காகவே அவன் மட்டுமாகவே தேடலை நடத்துகிறான்.
அங்கிருக்கும் சிக்னலில் அருணின் வண்டி நிற்பது தெரிகிறது. வாழியின் கண்கள் கூர் பெற்றன. அருணின் கார் வலதுபுறம் வேகம் பெறுகிறது.
வாழியின் முன்னிருக்கும் திரை அருணின் கார் பயணிக்கும் பாதையில் தன்னைக் காட்சிப்படுத்துகிறது.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக நகரத்தின் எல்லை முடிவடைய இருக்கும் சில நிமிடங்களில் சட்டென்று அருணின் கார் நிற்கிறது.
காமிராவின் காட்சிப்பதிவுக்கு அந்தப்பக்கம் யாரோ காரிலேறுவது தெரிகிறது.
சட்டென்று திரையை ஃபிரீஸ் செய்தவன், ரீவைண்ட் செய்து அருணின் கார் அப்பகுதிக்கு வருவதற்கு முன்னான காட்சியை பார்வையிட முயன்றான்.
உடல் முழுவதும் கருப்பு அங்கியால் மறைத்தபடி ஒரு உருவம் நின்றிருந்தது. ஆணா, பெண்ணா என்பதுகூட வேறுபாடு கண்டறிய முடியவில்லை. அருண் கார் வர, கைநீட்டி நிறுத்துகிறது.
அருண் காரினை நிறுத்திட உள்ளே ஏறுகிறது. கார் புறப்பட்டு மறைகிறது.
நகரின் எல்லைப்பகுதி முடிவடைவதால், அடுத்த பகுதிக்கு உண்டான காட்சிகள் இடம்பெறவில்லை.
‘யாரது?’ புருவத்தை கீறியபடி யோசித்த வாழிக்கு ஒன்று மட்டும் புலனானது.
வண்டியை நிறுத்திய உருவம் நிச்சயம் அருணுக்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் தன்வியின் நிராகரிப்பில் எத்தனை கோபமாக அருண் இருக்கிறான் என்பது அவனது காரின் வேகமே பறைசாற்றுகிறது.
அந்த கோபத்திலும், வேகத்திலும் சாதாரணமாக யாரோ ஒருவருக்கு லிப்ட் கொடுப்போமா? இங்கு தான் வாழியின் மேற்கண்ட சந்தேகம் ஊர்ஜிதமாகியது.
வெளியில் வந்தவன்,
“கௌதம் எங்கே?” என்று வினவினான்.
“அவருக்கு மார்னிங் டியூட்டி சார்” என்று ஒருவர் கூற, அங்கிருந்து கிளம்பினான்.
அப்போதே ஜேகேவிற்கு அழைக்க முயன்றவன், நேரத்தை பார்த்து தவிர்த்தான்.
‘அந்த நேரத்தில் தன்வி என்னோடு தான் இருந்தாள்.’ அவன் ஒரு மனம் நினைக்கையிலேயே…
‘அப்போ அந்த உருவம் தன்வியா இருக்கும்ன்னு நினைக்கிறியா? இன்னும் அவள் மீதான உன் சந்தேகம் போகலையா?’ மற்றொரு மனம் சாடியது.
‘தன்வி பண்ணியிருக்க சான்ஸ் இல்லை. பட் போலீஸா நாலு பக்கமும் பார்க்கணும் தானே!’ என்று தன்விக்காக எகிறிக்கொண்டு வந்த மனதை அடக்கியவன், விடியலுக்காகக் காத்திருந்தான்.
அவ்விடியல் நேரத்தில் சத்தமின்றி அருணின் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தது.
துடிக்க துடிக்க ஒரு மரணம்.
இதயப்பகுதியில் தன்னுடைய இடது கையை விட்டு, இதயத்தை அள்ளி எடுத்தார் போல் முகம் அருகே கொண்டு வந்த உருவம்… கையில் உணர்ந்த சூடான ரத்தத்தின் வாசத்தை நுகர்ந்தது.
ஜிவ்வென்று மூளை நரம்பு வரை போதை கொண்ட உருவம்…
“லவ்விங் இட்” என்றது.
“இதயமே… இதயமே…” என்று ராகமாக பாடியவாறே நடனமாடியது.
கையிலிருக்கும் இதயத்தையும் கீழே கிடக்கும் அருணின் உடலையும் மாற்றி மாற்றி பார்த்த உருவம்…
“இதயமில்லாமல் உன்னால் இருக்க முடியாதுல… நீயே வச்சிக்கோ” எனக்கூறி எடுத்த இடத்தில் இதயத்தை வைத்து, தன்னுடைய இடது கையிலிருந்த கத்தியால் இதயத்தின் நடுப்பகுதில் குத்தியது.
“என் இதயம் முழுக்க நீதான் நிறைஞ்சிருக்க. நீயில்லைன்னா, என் இதயம் நின்னுப்போகும்.” வார்த்தைகள் காதில் ரீங்காரமிட…
“இப்போ உன் காதலுமில்லை. உன் இதயமுமில்லை. ரெண்டும் இல்லாமல் நீயுமில்லை. பைஃ பைஃ அருண்…” என்று கையசைத்தபடி அவ்வுருவம் அங்கிருந்து சென்றது.