சூர்யாவின் காலினை இழுத்துவிட்டு கத்தியை பிடித்து நிமிர்ந்த வேகத்தில் உருவத்தின் தலை மற்றும் முகத்தை மறைத்திருந்த கருப்பு வர்ண துணி விலகி கழுத்தின் பின்னால் சரிந்தது.
கத்தியை பிடித்து நின்ற தோரணை…
பார்த்த அத்தனை பேருக்கும் நடுக்கத்தை கொடுத்தது.
தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஆசாத்துக்கு துப்பாக்கியை பிடித்திருந்த கையின் பிடி நழுவியது.
“சாரு…” தன் கையில் கொட்டும் ரத்தத்தையும் பொருட்படுத்தாது, தன்னவளை அப்படியொரு நிலையில் கண்ட சுரேனின் கண்ணீர் கசிந்து நெஞ்சம் விம்மியது.
வாழி தன்னுடைய கைக்குட்டையை எடுத்து சுரேனின் கையில் வெட்டப்பட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்து கட்டிட… அப்போதும் ரத்தம் நிற்கவில்லை.
தன் பலம் மொத்தமும் திரட்டி அழுத்தி பிடித்தான். பலனில்லை.
‘சாரு உயிரோடில்லைன்னு சார் சொன்னார்?’ சூர்யா அப்போதும் தனக்குள் யோசிக்க…
சுரேனை காப்பாற்ற துடிக்கும் வாழியின் போராட்டம் கண்டு அவள் கோரமாக சத்தமிட்டு சிரித்தாள்.
“இதயத்தை கையில் வைத்து ஆடும் போது கிடைக்காத சந்தோஷம், நீ அவனை காப்பாற்ற துடிப்பதில் கிடைக்குது” என்று சிரிப்பிற்கு நடுவே கூறியவள், இசை ஒலிப்பது போல் கத்தியை இரண்டு கையாளும் மலர்கொத்தை பிடிப்பதுபோல் பிடித்து மெல்ல கால்களை அசைத்து ஆடிட..
அவளை எப்படி நெருங்குவதென்றே மற்றவர்கள் தயங்கினர்.
அவள் ஆடுவதால் ஆசாத்தால் சரியாக குறி வைத்திட முடியவில்லை.
சுரேனின் மீது கவனமாக இருந்தாலும், ஆசாத்தின் மீது கண் வைத்திருந்த வாழி அதனை கண்டுகொள்ள… அவளை நிலையாக நிற்க வைத்து கவனத்தை தன்மீது நிலைக்க வைத்திட யாரும்… அவளே எதிர்பாராத உண்மையை சொல்லியிருந்தான்.
அவள் ஆடுகிறாளே என்றிருக்க… ஆட்டத்தில் சுழன்றவளாக கத்தியை வைத்து மற்றவர்கள் இமைத்து உணரும் முன் சுரேனின் முதுகில் கிழித்திருந்தாள்.
“மதி…”
வாழியின் கர்ஜனையில் அங்கிருந்த அனைவரிடமும் உச்சக்கட்ட அதிர்வு. சுரேன் உட்பட.
வாழி மதியென்று அழைத்தவளுக்குமே!
ஆனால் ஒரு நொடி மட்டுமே அவளுக்கு அவ்வதிர்வு. வாழி விளித்ததும் சிலையென நின்றவளை சரியாக குறி பார்த்து தாக்கியிருந்தான் ஆசாத்.
மயக்க ஊசி அவளின் உடலை துளைத்து மருந்து உள் நுழைந்த சில நொடிகளில் மயங்கி சரிந்தாள்.
நொடியும் தாமதியாது மதியை சூர்யாவின் பொறுப்பில் டிஜிபி அலுவலகம் அழைத்துச்செல்லக் கூறியவன், மதி சுரேனின் உடலில் ரத்தம் உரையாதிருக்க செலுத்திய மருந்தின் தாக்கத்தால் வெட்டுப்பட்ட இடம் உறையாது அதீத ரத்தப்போக்கினாலும், இதுநாள்வரை தன்னுடைய சாரு என்று நினைத்திருந்தவள் சாரு இல்லை. வேறு யாரோ மதியென அறிந்து கொண்ட அதிர்வாலும் தன்னுடைய கைகளில் மயங்கி சரிந்த சுரேனை தூக்கிக்கொண்டு மருத்துவமனை விரைந்தான்.
சுரேனை லேகாவின் பொறுப்பில் விட்டவன், சிறிது நேரத்தில் வருவதாகக் கூறி டிஜிபி அழுவலகம் வந்து சேர்ந்தான்.
அலுவலக வளாகத்தினுள் நுழைந்ததுமே, மறைவாக நின்று கண்காணித்துக் கொண்டிருந்த பெரியவரையும் தானே அழைத்துக்கொண்டவனாக உள் சென்றான்.
அவ்விடமே மிகுந்த பரபரப்புடன் இருந்தது.
பெருமாளுக்கு அடுத்து என்னவென்ற பதட்டம்.
பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தகவல் கசிந்தால் நிலை இன்னும் மோசமாகலாம்.
அடுத்தடுத்து வாழி நடந்த கொலைகள் மற்றும் கொலையாளி பற்றி என்னென்ன கதைகள் சொல்வானோ என்று அவருக்கு பயந்து வந்தது.
வாழியை கண்டதும்…
“என்னடா கில்லர் ஒரு பொண்ணா?” என்று ஆச்சரியமாக வினவினார்.
“சூர்யா கூட்டிட்டு வந்தான் தானே! இங்கு தான் இருக்காள். அப்புறம் தெரிஞ்சிட்டே கேட்குறீங்க?” என்ற வாழி, கிருபா ஒரு இருக்கையில் உர்ரென அமர்ந்திருக்க…
“என்ன சொல்லி ஆஃப் பண்ணீங்க?” என்றான்.
“ரிட்டையர் ஆகும்போது எதுக்கு பெயரை கெடுத்துகிறன்னு தான்” என்றார் பெருமாள்.
கணேசனை அழைத்த வாழி “இந்த பெரியவரை தனியறையில் வையுங்கள்” என்றவனாக, “பிடித்த மூவரும் ஜாக்கிரதை” என பெருமாளிடம் தெரிவித்து அவரின் அறையை நோக்கிச் சென்றான்.
தன்வி இருக்கையில் கைகளை பிசைந்துகொண்டு அமர்ந்திருந்தாள்.
கதவு திறந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் வாழியை கண்டதும் வேகமாக எழுந்து நின்றாள்.
“ரிசல்ட் என்னாச்சு தன்வி?” எனக் கேட்டவாறு அவளின் அருகிலிருந்த காமிராவினை எடுத்து அவளிடம் கொடுத்தவனாக அவளின் கரம் பற்றி வெளி நோக்கி நடந்தான்.
“வாழ்…”
“சொல்லுடா…” என்று நடையை நிறுத்தி அவன் அவளை திரும்பி பார்த்திட…
வாழியினுள் பதட்டம். இந்த பதட்டம் மதியை பிடிக்க வேண்டுமென்ற நேரத்தில் கூட அவனிடம் இல்லை.
இப்போதிருந்தது.
தன்வியின் பெரும் கனவாயிற்றே. தேர்வு பெறவில்லையோ என்கிற பயம் பதட்டத்தை கொடுத்தது.
அது ஆனந்த கண்ணீர், சந்தோஷத்தில் வெளிப்பட்டதென்று அவள் அடுத்த நிலைக்கு தேர்வாகியிருப்பதை சொல்லியதும் புரிந்து கொண்டான்.
“சூப்பர் தன்வி” என்றவன்…
அலுவலகத்துக்கு வெளியில் வந்து நின்றவனாக “ஷூட் போலாமா?” எனக் கேட்டான்.
வாழிக்காக அங்கு அனைவரும் காத்திருக்க… அவனோ தன் மனைவியின் கனவுக்கு நேரம் அளித்திருந்தான்.
“என்ன சார் இது. இவன் போலீஸ் மாதிரியா நடந்துக்கிறான். ஸ்டேஷன் கூட பார்க்காமல் லவ் பண்ணிட்டு இருக்கான். அதுவும் சந்தேகப்படும் நபர் மீது” என்று வாழியின் செயலால் பெருமாளிடம் வெடித்தார் கிருபாகரன்.
“குற்றவாளியையே பிடித்த பிறகும் நீங்க தன்வியை குற்றவாளி மாதிரி பேசுவது சரியில்லை கிருபாகரன். முதலில் என்னிடம் இப்படி குரலுயர்த்தி பேசுவதை நிறுத்திக்கோங்க. நான் எல்லா நேரமும் எல்லோரிடமும் வாழியிடம் காட்டும் முகத்தையே காட்டமாட்டேன்” என்று எச்சரித்தார்.
“வாழ்..”
“என்னம்மா?”
“உனக்காக” என்று தன்வி அலுவலகத்தின் உள் காட்டிட…
“நெக்ஸ்ட் லெவலுக்கு… கொடுத்த நேரத்திற்குள் எத்தனை சீக்கிரமாக அனுப்புறாங்க என்பதையும் நோட் பண்ணுவாங்க தானே. அப்புறம் ஏன் டைம் வேஸ்ட் பண்ற” என்று அவளை போட்டோ எடுக்க ஊக்கினான்.
வாழியிடம் அத்தனை பரபரப்பு.
மீடியாவுக்கு தெரிவதற்குள் குற்றவாளிக்கான அனைத்து விளக்கங்களையும் அவன் பெருமாளிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் பல கதைகளை கற்பனைக்கு உருவாக்கிவிடுவார்கள்.
அனைத்து நடவடிக்கைகளும் இந்த இரவிற்குள் முடிந்தால் தான், நாளை காலையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும். அந்த எண்ணங்கள் யாவும் மனதில் வரிசைகட்டி நின்றாலும் மனைவிகக்காக சாலையில் நின்றிருந்தான்.
அவளின் குரலில் என்ன இருந்ததென்று அவனால் பிரித்தறிய முடியவில்லை.
நொடிக்கும் குறைவாக அவளின் முகத்தை பார்த்தவன்,
“ஒரு மணி நேரம். எனக்காகடா” என்றான்.
நான்தான் குற்றம் செய்யவில்லையே எதற்காக இங்கிருக்க வேண்டுமென்கிற எண்ணம் அவளுக்கு.
அவனுக்கோ கடமை கண் முன்னே!
குற்றவாளி அவளில்லை என்றாலும், ஏதோ சந்தேகம் அழைத்து வந்துவிட்டார்கள். அந்த சந்தேகம் தீராது அனுப்பிட முடியாதே!
அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாது… அவளின் இரு கைகளையும் அழுந்த பற்றி, கண்களை மூடி திறந்தான்.
அவனின் கரத்தில் அழுத்தம் கொடுத்தவள், பெருமாளின் அறையில் சென்று தன் வேலையில் மூழ்கிப்போனாள்.
விசாரணை அறையில் மதி விலங்கிட்டு அமர்த்தப்பட்டிருக்க… இரு பெண் காவலர்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.
“வாய்யா…” என்ற கிருபா… “கொஞ்சம் வேலையையும் பார்த்தால் நல்லாயிருக்கும். எதிர்கட்சிக்காரன் கிழிகிழின்னு கிழிக்கிறான். குட்டியா ஒரு பொண்ணை கொலைகாரின்னு பிடிச்சிட்டு வந்திருக்க. இந்த பொண்ணு மினிஸ்டரை கொன்னுதுன்னு சொன்னால் எவனாவது நம்புவானாய்யா?” என்றார்.
“உண்மை இதுதாங்கிறப்போ நம்பித்தான் ஆகணும்” என்ற வாழி, “விசாரணை ஸ்டார்ட் பண்ற. மானிட்டர் பண்றீங்களா?” என்று பெருமாளிடம் மிடுக்குடன் கேட்டான்.
“யூ புரொசீட்” என்ற பெருமாள் வாழியின் பின்னால் சென்றார்.
வாழி கொடுத்த பதிலடியில் மூக்குடைந்து நின்ற கிருபா பொறுமலுடன் அவர்களை பின்தொடர்ந்தார்.
“எல்லாம் ரெடியா சூர்யா?”
“எஸ் சார்.”
விசாரணை அறையின் ஒரு பக்கம் முழுக்க கண்ணாடி… அடுத்தபக்கமிருந்து பார்த்தால் உள்ளே என்ன நடக்கிறதென்று நன்கு தெரியும்படி.
“சூர்யா வீடியோ ப்ளஸ் ஆடியோ ரெக்கார்ட் பண்ணிக்கோங்க. எந்த இடத்திலும் நிறுத்தக்கூடாது. பாஸ் பண்ணி ஸ்டார்ட் பண்ணாக்கூட, நாம் எதையோ கட் பண்ண மாதிரி கேப் விழும். சோ, கவனமா ரெக்கார்ட் பண்ணுங்க” என்ற வாழி மதிக்கு முன்னால் சென்று அமர்ந்தான்.
மேசையில் தலை கவிழ்ந்திருந்த மதி வாழியை ஒரு ஏளனத்தோடு பார்த்து உதடு சுழித்தாள்.
“மயக்கமருந்து கொடுத்து என்னை பிடிச்சிட்டால், நீ வீரனா? ஆம்பிள்ளைன்னா நேருக்கு நேர் மோதனும்” என்று கூறியவள், மேசையை தன்னிரு கைகளாலும் தட்டினாள்.
“இட்ஸ் ஓகே. எனக்கு வீரம் போதல.”
அவள் பேசியதற்கு வாழி அலட்டிக்கொள்ளவே இல்லை.
வாழிக்கு தன் விசாரணையில்… அவள் சொல்லப்போகும் உண்மையில் தான் கண். தான் கண்டறிந்தவை எந்தளவிற்கு உண்மையென்று அப்போதுதானே தெரியும்.
அனாயசமாக எத்தனை பேரை கொன்றிருக்கிறாள். அதுவும் கொஞ்சமும் நடுக்கமில்லாது இரக்கமற்று இதயத்தை வெளியில் எடுத்து. நினைக்கவே நெஞ்சம் பதறியது.
“சொல்லுங்க மதி எதுக்கு இந்த கொலைகள்?”
பெருமாள் உட்பட அனைவரும் அவள் வாய் திறக்கப்போவதில்லை என்றுதான் நினைத்தனர்.
பொதுவாக இதுபோல் சைக்கோ தனமாக கொலையில் ஈடுபடுபவர்கள் அழுத்தமான அமைதியுடன் இருப்பர். ஆனால் மதி அப்படி கிடையாது என்று காட்டினாள்.
“காதல்.” அறையே கிடுகிடுக்க அதிர்ந்து சிரித்தாள்.
‘இதுவேற அப்பப்போ பேய் மாதிரி சிரித்து பயம் காட்டுது’ என்று உள்ளுக்குள் நடுங்கிய சூர்யா… ரேக்கார்டர் காமிராவை சரியாக பிடிக்க முடியாது கணேசனை அழைத்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டான்.
“புரியலையே?”
“உங்களுக்கு எல்லாம் தெரியும் வாழியாதன்” என்ற மதி… “இருந்தாலும் நான் ரசித்து செய்த கொலைக்கான காரணம் நானே சொல்லும்போது எனக்குள்ள ஒரு பரவசம் வரும். அதுவொரு போதை” என்று கண்கள் மூடி சிரித்தாள்.
பார்ப்பவர்களுக்கு கொலை நடுங்கியது.
கொலையை இப்படியும் பிடித்து செய்வார்களா என்றிருந்தது.
“யாரெல்லாம் காதல்ன்னு சொல்லி ஏமாத்துனாங்களோ அவங்களையெல்லாம் தான் கொன்னேன். எப்படித் தெரியுமா?” எனக் கேட்டவள்,
“ரசிச்சு சொல்ல இந்த விலங்கு தடையா இருக்கு. ரிலீஸ் பண்றீங்களா?” என்றாள்.
“வேண்டாம் சார். வேண்டாம். அந்த கிரவுண்டில் இவள் செய்த ஸ்டண்ட் எல்லாம் பார்த்தீங்க தானே?” சூர்யா வேண்டாமென்று மறுத்தான்.
வாழி பெண் காவலருக்கு கண் காட்டிட அவர் வந்து கை விலங்கினை திறந்துவிட்டார்.
“தேன்க் யூ!” என்ற மதி… இருக்கையிலிருந்து எழுந்திட…
சூர்யா இரண்டடி பின் வைத்தான்.
“உட்கார்ந்து சொல்லுங்க.”
“எனக்கு டான்ஸ் பண்ணிட்டே சொல்லணும். அப்போதான் கிக்” என்ற மதி மெல்ல சுழன்று ஆடியபடி கூறினாள்.
“இது சாரு தானே? வாழி மதின்னு சொல்றான்?” பெருமாள் குழப்பமாக வினவிட, கையில் கட்டுடன் அருகில் நின்றிருந்த தங்கதுரை பதில் கொடுத்தார்.
“அந்த சாரு பொண்ணு செத்துப்போச்சாம் சார்.”
“அப்போ இது?” கிருபாகரன் வினவினார்.
“அதான் அவன் மதி மதின்னு சொல்றானே!” என்ற பெருமாள் “விசாரணையை கவனிங்க. அப்புறம் எல்லாம் முடிஞ்சு வாழியை மாட்டிவிட எனக்கெதுவும் முழுசா சொல்லலன்னு விவாதம் பண்ணக்கூடாது” என்றார்.
“மகேஷை ஏன் கொலை செய்தீங்க?”
“ஜோவிதா லவ் பண்றன்னு பின்னால் சுத்தினான். வீட்டுல முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம், அவங்க சொன்னாங்கன்னு என்னை பொண்ணு பார்க்க வந்தான். இப்படி பொண்ணுக்கு பொண்ணு தாவிட்டே இருக்கிறவனெல்லாம் உண்மையா காதலிப்பானா? கிடைக்கிற வர அனுபவிச்சிட்டு ஏமாத்திட்டு போவாங்க” என்றாள்.
“அதுக்கு கொலை தான் செய்யணுமா?”
“அவனை கொல்லனும் நினைக்கல… ஆனால் கொன்னதுக்கு அப்புறம் எனக்கு கிடைச்ச சுகம் இருக்கே” என்று நடந்து கொண்டே வாழியின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவள் நின்று இரண்டு கைகளையும் விரித்து, தலையை மேல்நோக்கி உயர்த்தி, கண்களை மூடி… “ஆஹா…” என்று அட்டகாசமாக சிரித்தாள்.
“நம்மளை ஏமாத்த நினைக்கிறவங்களுக்கு நம்ம கையாலே தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும் தெரியுமா?” ஒருவித பரவசத்தோடு கூறினாள்.
வாழி மட்டுமே அவள் சொல்வதைக்கேட்டு திடமாக அமர்ந்திருந்தான். மற்ற அனைவருக்குமே அவளின் ரசிப்பு அறுவருப்பாகத்தான் இருந்தது.
“அதென்ன கொலையெல்லாம் பார்க் அல்லது அதற்கு அருகேயான இடமா பார்த்து செய்திருக்கீங்க?”
“லவ்வுன்னாலே முதலில் அங்கு போய் தானே நிக்கிறாங்க” என்ற மதி, “கொலைன்னு ஒன்னு நடந்தால், உங்களை மாதிரி போலீஸ் தேடுவீங்கதானே… உங்களுக்கு லீட் எதாவது கொடுக்கணுமே! அதுக்குத்தான் பார்க். லவ் ரிலேட்டட். நீங்க இதை கெஸ் பண்ணித்தான் ஜோவுடைய கையிலிருந்த டாட்டூவை அவளிடம் விசாரிச்சிங்க தெரியும்” என்றாள். அவள் கண்ணில் மிதப்பு.
கொலையாளியின் உடலில் இதயத்தை வெட்டி எடுப்பதுக்கூட, இதய வடிவிலே கிழிப்பதாக கத்தியின் தடம் வைத்து லேகா அரைகுறையாக தெரிவித்திருக்க… ஏற்கனவே அருணின் காரில் எடுக்கப்பட்ட ரத்த பிரிவு ஜோவுடைய ரத்த பிரிவாகவும் இருந்திட அவள் மீதும் வாழிக்கு சந்தேகம். அந்த சந்தேகம் ஏர்போர்ட்டில் அவளின் கையில் வரைந்திருந்த இதயத்தில் குத்தியிருக்கும் கத்தி டாட்டூவில் வலுபெற… அவள் இடது கை பழக்கம் கொண்டவளில்லை என்பது குழம்ப வைத்தது. அதனால் யாருக்கும் தெரியாது ஜோவை தனியாக சந்தித்து வாழி பேசிய பின்னர் தான் ஜோவும் இல்லை என்பது தெளிவாகியது.
சாருவாகிய மதியின் மீது சந்தேகம் தோன்றியதும் விமான நிலையத்தில் வைத்து தான்.
காரின் கதவை திறந்தது… தன்னுடைய உடமைகளை எடுத்தது… விடுதி வந்ததும் அவர்களுக்கு விடை கொடுத்தது என அனைத்தும் இயல்பாய் இடது கையால் செய்தவள், அடுத்தநாள் ஸ்டுடியோவில் வலது கையால் தடுமாறி செயததை வாழி கவனித்தான்.
சாருவின் மீது சந்தேகம் தோன்றியதுமே ஜோவிடம் தான் விசாரித்ததை யாரிடமும் சொல்லிடக் கூடாதென்று சொல்லியிருந்தான்.
“அப்போ அருணை கொலை செய்ததுக்கும் அவன் ஒரு பொண்ணை லவ் பண்றன்னு ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்துகிட்டது தான் காரணம் அப்படியா?” என்றான்.
வாழியை கூர்மையாக பார்த்து அர்த்தமாக சிரித்த மதி…
“உங்களை பிடிச்சிருக்கு சார். உங்களை மாதிரி ஒரு பொண்ணோட பெயருக்குக்கூட கலங்கம் வந்திடக்கூடாதுன்னு நினைக்கிறீங்களே!” என்று கை தட்டினால்.
அருண் விடயத்தில் தன்வியின் பெயர் வருவதை விரும்பாத வாழி, தன்வியின் பெயர் கூறாது குறிப்பிட்டு வினவியதை மதியும் மறைத்து வாழிக்கு புரியும் வகையில் கூறினாள்.
அதை வைத்தே வாழிக்கு மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
தன்வி பெயரை அருணுடன் சேர்த்து மொழியாதவள், பழியை மட்டும் ஏன் தன்வியின் மீது போட அவளுக்கு எதிராக அனைத்தும் செய்தாள்?
அதனை வாழி அவளிடம் கேட்கவும் செய்தான்.
அதாவது அருணோட இணைத்து சொல்லாது,
“ஒரு பொண்ணுக்காக கொலை பண்ற நீங்க… எதுக்காக எந்த தவறும் செய்யாத தன்வியை இதில் மாட்டிவிட பார்த்தீர்கள்?” என்றிருந்தான்.
“கோபம்… வெறியாகிய கோபம்” என்று ஆக்ரோஷமாக பற்களை கடித்துக்கொண்டு தன்னுடைய கன்னங்களையே கீறினாள்.
“வாழி…” பெருமாள் பதட்டத்தோடு எழுந்து உள்வர, அவரை தடுத்த வாழி…
பெண் காவலர்களின் உதவியோடு அவளை பிடித்து இருக்கையில் அமர வைத்து தன் கட்டுக்குள் கொண்டு வந்தான்.
“ஹேண்ட் கஃப் மாட்டிவிடலாம் சார்.” சூர்யா சொல்லிட…
“வேண்டாம்” என்று மறுத்தாள் மதி.
“அப்போ இந்த மாதிரி ஆத்திரப்படாமல் பொறுமையா சொல்லுங்க?” என்றான் வாழி.