கண்களில் தான் செய்த கொலைகளுக்கான ரசிப்பும்… சிரிப்பில் குரோதமும் காட்டிக்கொண்டிருந்த மதி, சாருவின் பெயரை உச்சரித்த கணம்… மனம் வலிக்க கதறி துடித்தாள்.
“எல்லாம் இந்த காதலால் தான்” என்றவள் தனக்கு முன்னிருந்த மேசையை விடாது தட்டியவளாக வெறி பிடித்தவள் போல் பொங்கி அழுதாள்.
மதியின் கத்தல் அழுகையில் மொத்த அலுவலகமும் அந்த அறையில் குமிழ்ந்து விட்டது.
புகைப்படத்தை தரம் பார்த்து போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு அனுப்பி வைத்து நிமிர்ந்த தன்வி, திடீரென ஆக்ரோஷமாகக் கேட்ட அழுகையில் சத்தம் வந்த அறைக்குள் ஓடிவந்தாள்.
அங்கு வாழியின் முன் நெஞ்சத்தை கைகளால் குத்திக்கொண்டு துடித்து அழுத மதியை சாரு என்று நினைத்த தன்வி,
மற்றவர்களின் கவனம் தன்னில் பதியும் முன் உள்ளறையின் கதவை திறந்துகொண்டு மதியின் அருகில் ஓடி, அவளை இறுகப்பற்ற முனைந்தாள்.
“சாரு… சாரு” என்றழைத்தவள், “என்னாச்சு வாழ்? ஏன் சாருவை அரெஸ்ட் பண்ணியிருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“என்ன சார் கார்னர் பண்ணி தெரிஞ்சிக்க நினைக்கிறீங்களா?”
“எப்படி வேணாலும் வச்சிக்கோ. எனக்கு வேண்டியது உண்மை” என்ற வாழி, “உன் அம்மா என்கிட்ட தான் பத்திரமா இருக்காங்க” என்றான்.
சத்தமிட்டு சிரித்த மதி…
“இருக்க முடியாது. பொய் சொல்ற நீ” என்றவள், “இந்த ஊரே என் அம்மா செத்துப்போயிட்டதா தான் நினைச்சிட்டு இருக்கு” என்றாள்.
“கணேசன் அண்ணா…”
வாழி அழைத்திட… வெளியில் சென்றவர் வரும்போது அந்த பெரியவருடன் வந்தார்.
“தாத்தா…”
அவரை கண்டதும் மதியிடம் சிறு பதட்டம். நொடி நேரம் மட்டுமே!
“யாரையோ கூட்டிட்டு வந்து எதுக்கு என்கிட்ட காட்டுற?”
“இவர் யாருன்னு உனக்குத் தெரியாதுல?” என்ற வாழி இருக்கையில் நன்கு சாய்ந்தவனாக கால் மேல் காலிட்டு, மேலிருக்கும் காலின் பாதத்தின் மேல் தட்டியவனாக…
“இவரு உன் தாத்தா இல்லையா?” எனக் கேட்டான்.
“இல்லை.” வேகமாக சொல்லியிருந்தாள்.
“அப்போ இவரு உன் ஆளு இல்லையா. நான் கூட நீதான் இவரை என்னை கண்காணிக்க வச்சிருக்க நினைச்சு விசாரிக்க… அப்போ தான் இவரு உன் தாத்தான்னும், இவருக்கு மனநிலை பிழன்ற ஒரு பொண்ணு இருப்பதும், அவங்க தான் உன் அம்மான்னும் தெரிஞ்சுது. அப்போ எனக்குத் தெரிந்தது உண்மையில்லையா?” என்று கேட்ட வாழி தன்னை பேச வைக்க முயல்கிறான் என்பதை கண்டுகொண்ட மதி பார்வையில் அழுத்தம் காட்டி வாயினை இறுக மூடிக்கொண்டாள்.
“அப்போ சரி கணேசன் அண்ணா. வழக்குக்கு சம்மந்தமில்லாத ஆட்களை பிடித்து வச்சிருக்க நாமென்ன கிருபாகரன் சாரா?” என்று அந்நேரத்திலும் தன்னுடைய பேச்சில் கிருபாவுக்கு கொட்டு வைத்த வாழி, “ரெண்டு பேருக்குமே யாருமில்லை. பெரியவரை முதியோர் இல்லத்துக்கும், அந்த அம்மாவை மனநல காப்பாகத்துக்கும் அனுப்பி வச்சிடுங்க” என்றான்.
“வேண்டாம்.” ஆக்ரோஷமாகக் கத்தியிருந்தாள்.
“ஏன்?”
……
மதியிடம் மௌனம்.
“சொன்னதை செய்திடுங்க ண்ணா.”
“நான் எல்லாம் சொல்லிடுறேன்.” மதி இறங்கி வந்தாள்.
“கொலைகாரிக்கும் செண்டிமெண்ட் இருக்குபோல!”
சூர்யா மதியை கேலி செய்திட வாழி ஒற்றை விளிப்பில் அவனை அதட்டினான்.
“சாரி சார்.” சூர்யா.
“நீங்க சொல்லுங்க விமல் யார்? எதுக்கு அவரை கொலை செய்தீங்க?” வாழி மதியிடம் திரும்பினான்.
“விமல்…” என்று கை விரல்களை மூடியவளாக மேல்நோக்கி கத்தினாள்.
“விமல்… அவனோட இதயத்தை தான் எடுக்க முடியாமப்போச்சு. லைட்டா வருத்தமா இருக்கு” என்றவள், “என் பின்னால் நான் ஓகே சொல்ற வரைக்கும் சுத்தினான். அதுக்கு அப்புறம் என்னோட சேர்ந்து சுத்தினான். லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். திடீரென ஒருநாள் பிரேக் அப்ன்னு சொல்லிட்டு போயிட்டான். அவனை எங்கெங்கோ தேடினேன். கிடைக்கல. கடைசியில அருணை கொலை செய்த அன்னைக்கு அவனை பார்த்தேன். உங்க துணி கடையில் தான். கல்யாணமாம். துணி எடுக்க வந்திருப்பான் போல. பாலோ பண்ணி போய் என்னை ஏத்துக்கன்னு கெஞ்சினேன், அவன் காலில் கூட விழுந்தேன். அவன் என்னை காலால் தள்ளிவிட்டு போயிட்டே இருக்கான். கல்யாணம் பண்ணாமலே என்னோட ஒரே வீட்டில் இருந்தது ஆணாக அவனுக்கு அசிங்கமில்லையாம். அவன் வற்புறுத்தி கேட்டதுக்கு அப்புறம் ஒத்துக்கிட்டு அவனோடு நான் இருந்தது மட்டும் அசிங்கமாம். கல்யாணத்துக்கு இவனுங்களுக்கெல்லாம் கைப்படாத மலர் தான் வேணுமாம்” என்றவள் நிறுத்திட்டு…
“என்ன கணேசன் உன் பொண்ணுக்கு நான் நல்லது தானே செய்திருக்கேன். இவனெல்லாம் மாப்பிள்ளைன்னு எப்படி செலக்ட் பண்ண?” என்று கேட்டாள்.
விமல் இப்படிப்பட்டவனாக இருப்பானென்று அவர் நினைக்கவில்லை. அன்று வாழி சொல்லியதன் அர்த்தம் இன்று விளங்கிக்கொண்டவருக்கு அப்படியொரு நிம்மதி.
“மகேஷ், அருணை கொலை பண்ணதில் அவனை கட்டிக்கிட்ட பொண்ணுங்க பாவம். நான் அவங்களை யோசிக்காமல் விட்டுட்டேன். விமல் விடயத்தில் தான் அவங்களை கட்டிக்கிட்ட பொண்ணுங்க பாவம் தோணுச்சு, கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி அவனை கொன்னுடனும்ன்னு சரியா பிளான் பண்ணாமல் அரைகுறையா அவனை போட வேண்டியதாகிப்போச்சு. அதுல தான் தாத்தா உன்கிட்ட மாட்டிக்கிட்டாருன்னு நினைக்கிறேன். நீ என்னை மோப்பம் பிடிச்சிட்ட” என்று வருத்தமாகக் கூறுவதைப்போல் பாவனை செய்தாள்.
“சாதரணமா உன் தாத்தா எனக்கு பதில் சொல்லியிருந்தாலும், அவருகிட்ட ஒரு பதட்டம். அது என் போலீஸ் கண்ணுக்கு நல்லாவே தெரிஞ்சுது. அவரோட டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணேன். இவ்ளோ எதிர்பார்க்கல” என்றான் வாழி.
இதுபோன்று தவறு செய்பவர்களிடம் அனைத்தையும் ஒரே பாணியில் அறிந்திட முடியாது. அவர்கள் ஒன்றை சொல்கிறார்கள் என்றால் எதிரிலிருக்கும் நாம் அவர்களை ஆதரித்தோ, எதிர்த்தோ, தொடர்புடையதாகவோ பதில் பேசினால் தான் நமக்கு வேண்டியவற்றை எளிதில் பெற முடியும். அந்த முறையைத்தான் வாழி தற்போது மதியிடம் கையாள்கிறான்.
“ஆனால் நான் இப்போ விமல் பற்றி கேட்கலையே!” வாழி தன் புருவத்தை கீறினான். மதியை தலை சாய்த்து கீழ் கண்களால் அளவிட்டான்.
“உங்களுக்கு வேண்டியதை உடனே நானெப்படி கொடுக்க முடியும். எனக்கென்ன பயன்?” உடல் தளர்ந்து அமர்ந்தவள்,
“டைம் என்ன?” எனக் கேட்டாள்.
“சொல்லாதீங்க சார். கொலைகளை கொடூரமா பண்ணிட்டு எவ்வளவு கூலா சொல்லிட்டு இருக்கிறாள்.” சூர்யா ஆத்திரப்பட்டான். பின்னே ரத்தத்தில் மிதக்கும் இதயத்தை நேரில் பார்த்து, மூன்று நாட்களாக உணவு உண்ணக்கூட ஒப்பாது பயந்து நடுங்கியது அவனல்லவா. இதனை வெளியில் சொன்னால் அவனொரு போலீஸ் என்பதையும் மறந்து கேலிப்பொருளாக பேசுவார்களே! அந்த சிறுப்பிள்ளைத்தனமான கோபம் சூர்யாவுக்கு.
“உன் கோபம் புரியுது சூர்யா” என்ற வாழி தன்னுடைய இதழோர சிரிப்பை சூர்யாவுக்கு மட்டும் காட்டினான்.
“கண்டுபிடிச்சிட்டிங்களா?” சூர்யா அசடு வழிந்தான்.
“அடங்குடா” என்ற வாழி மதிக்கு நேரத்தைக் கூறினான்.
“எந்த நேரத்தில் பொறுமையான விசாரணை… துரித விசாரணைன்னு ஒன்னு இருக்குல. இப்போ எதுக்கு இவன் இவ்வளவு பொறுமையா கொலைகாரிக்கிட்ட இறங்கி போயிட்டு இருக்கான். அதான் அவளே கொலை செய்தன்னு சொல்றாளே! அப்புறமும் என்னத்துக்கு விசாரணை?”
மதி சொல்வதை கேட்பதற்கே கிருபாவுக்கு உதறலாக இருந்தது. அதுவும் மயிலின் இதயத்தை நேரில் பார்த்திருந்தாரே. மனிதர் அரண்டு விட்டார்.
ஒருமுறை பட்டதே போதுமென்று அவரிருக்க… இப்படி சொற்பொழிவினை கேட்பதைப்போல் ஒரு சைக்கோ கில்லரின் கொலைகளை கதையாகக் கேட்க வைக்கும் கோபம் அவரிடம். அதனை அப்படியே வாழியின் மீது வைத்து பெருமாளிடம் குமைந்தார்.
“கோர்ட்டில் காரணம் சொல்ல வேண்டாமா?” என்று கடுமையாய் வினவிய பெருமாள், “நீங்க மீடியாவுக்கு தகவல் கொடுத்திடுவீங்கன்னு தான் உங்களை பிடிச்சு வச்சிருக்கோம். இந்த கேஸில் நீங்க இல்லவே இல்லை. தேவையில்லாமல் மூக்கை நுழைத்தீங்க தானே! அப்போ அனுபவி” என்று கொட்டும் வைத்தார்.
பொடுபொடுவென வந்த போதும், தானாக வந்ததை எண்ணி நொந்தபடி வாயினை மூடிக்கொண்டார் கிருபா.
மதி கொலை செய்ய களத்தில் இறங்கிட காரணம்… சாரு தற்கொலை செய்து கொண்டது.
ஆனால் இதன் ஆதி? முதல் புள்ளி? அது தெரியாது தான் வாழி குழம்பியிருக்கிறான்.
மதி கொலை செய்தவர்கள் எல்லாம் காதலித்து ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொண்டவர்கள். திருமணம் வரை சென்றவர்கள். இதில் அருண் தன்வியையும், விமல் மதியையும், மகேஷ் ஜோவிதாவையும் ஏமாற்றியிருக்கிறார்கள்.
இவற்றில் சாருவின் மரணம் காரணியாக எப்படி அமைந்தது? தன்வியை மாட்டிவிட முயற்சித்தது? சுரேனை கொலை செய்திட பார்த்தது? என்பது தான் வாழியின் பெரும் கேள்வி.
மயில்வாகணனுக்கும் கதையிருக்கு…
வாழி தனக்குள் உழன்றவனாக,
“ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சு. நீ கன்ட்னியூ பண்ணு” என்றான்.
“அடுத்து யாரு கதை… ச்ச, ச்ச… கொலையை சொல்லலாம்?” என்று யோசிப்பது போல் தாடையில் விரல் தட்டியவள், “நான் ரொம்ப ரொம்ப ரசித்து கொலை பண்ண ஆள் யாருன்னு சொல்லட்டுமா?” என்று பட்டென்று மேசை மீதேறி சம்மணமிட்டு அமர்ந்தவளாக வாழியின் முகத்திற்கு அருகே தன் முகம் வைத்து வினவினாள்.
“என்ன சார்… பீச்சில் சுண்டல் சாப்பிட்ட கதை மாதிரி கேட்கிறாள்?”
மதி மேசையில் குதித்து அமர்ந்ததை கண்டு கிருபாகரனுக்கு பயம் தொண்டையை கவ்வியது.
சரியாக அந்நேரம் வாழி மற்றும் பெருமாள் வர சொல்லியதால் ஜேகே வந்திருந்தார்.
“இந்த சின்ன பொண்ணா கொலையாளி?” அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் ஜேகேவிடம்.
“நானும் இப்படித்தான் கேட்டேன். ஆனால் இவள் கதை சொல்றதுலே கொலை நடுங்குது” என்றார் கிருப்பாகரன்.
“ஷ்… சும்மா இருய்யா” என்று கிருபாவை அதட்டிய பெருமாள்,
“உங்க மகன் மற்றும் மச்சான்… அதுவும் அவர் மினிஸ்டர். விசாரணையில் நீங்க இருக்கணும். கட்சி ஆளுங்க ஏதும் நாங்க உண்மையை மறைக்கிறோம் பிரச்சினை பண்ணிடக்கூடாதே! அதற்குத்தான் உங்களை வரசொன்னோம்” என்றார்.
ஜேகே மௌனமாக தலை அசைத்தவராக இருக்கையில் அமர்ந்தார்.
தான் கேட்கும் எதையும் நம்ப முடியாது கண்ணீரோடு ஒருவித உறை நிலையிலிருந்த தன்வியை நொடிக்கும் குறைவாக ஏறிட்ட ஜேகே,
“இந்தபொண்ணுடைய காமிரா எப்படி சம்பவ இடத்தில் இருந்துச்சு?” எனக் கேட்டார்.
“ஒவ்வொரு கொலையா இன்ஸ்டால்மெண்டில் தான் சொல்லிட்டு இருக்காள். நீங்களும் பொறுமையா கேளுங்க” என்ற கிருபாகரன் பெருமாள் பார்த்த பார்வையில் கப்சிப்.
வாழி சொல் என்று அவளின் வழிக்கே சென்றான்.
“மகேஷ் இருக்கான்ல… அவனைத்தான் பர்ஸ்ட் கொலை பண்ணேன். அன்னைக்குத்தான் என்னை பொண்ணு பார்த்திட்டு போனான்… நான் கூப்பிட்டதும் அர்த்த ராத்திரியில் கொட்டுற மழையில எனக்காக வந்து வெயிட் பண்ணான். அவன் கால் கடுக்க நின்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அவன் செத்தப்போ கொஞ்சமா தான் சந்தோஷமா இருந்தது” என்றவள் இரு விரல்களில் கொஞ்சம் என்பதை காட்டிக் கூறினாள்.
“ஆனால் அவனில்லை என்னோட ஃபேவரைட்” என்றவள்,
“அருண்… அவன் ஒரு பொண்ணு லிப்ட் கேட்கிறா(ள்), கூப்பிடாறா(ள்)ன்னதும் அவன் பாட்டுக்கு பல்லை காட்டிட்டு வறான். காதலிக்கிறேன்னு ஒரு பொண்ணை ஏமாத்தி, கல்யாணம் பண்ணிக்கிட்ட பெண்ணுக்கும் உண்மையா இருக்கமாட்டேன்னு அவகிட்டவும் சொல்லி, இன்னொரு பொண்ணு பின்னாடி வந்த அவனை சும்மா விடலாமா? விடலாமா?” என்று கடித்த பற்களுக்கிடையில் கேட்டவள், “இவனையும் கொன்னுட்டேன். இந்த கொலை கொஞ்சம் பிடிச்சுது.
“மத்தவங்களை ஏமாத்தினவங்களையே இவ்ளோ பண்ணோமே… நம்மளை ஏமாத்தினவனை இதுக்கும் மேல செய்யணும் தான் போனேன். பட் முடியல… விமலை கொலை செய்ததில் சேட்டிஸ்ஃபை இல்லை” என்றவள் உதட்டினை சுழித்து கை விரித்தாள்.
வாழிக்கே பொறுமை மெல்ல கரையத் துவங்கியது. காற்றினை இழுத்து ஊதியவனாக எழுந்து இடையில் கை குற்றி நின்றான்.
“போராடிக்குதா?” எனக்கேட்டு சிரித்த மதி…
“எனக்கு ரொம்ப பிடித்தது மயிலு கொலை தான்” என்று வாழியை அர்த்தமாக பார்த்தாள்.
வாழி மீண்டும் இருக்கையில் அமர்ந்திட…
“என் அப்பாவாச்சே… பிடிக்கத்தானே செய்யும்?” என்று தன்னிரு உள்ளங்கையும் பரபரவென தேய்த்தவள்,
“ஒரே ஒரு போன் கால்… மயிலு பறந்து வந்து சிக்கிக்கிச்சு” என்று வெடித்து சிரித்தாள்.
மயில்வாகணன் அவளின் தந்தை என்றதில் வாழியை தவிர்த்து மற்ற அனைவருக்கும் அதிர்ச்சி.
“ஒரு வழக்கில் எத்தனை அதிர்ச்சியைத்தான் கேட்கிறது?” சூர்யா சலிப்பாக மொழிந்தான்.
“ஒவ்வொரு கேஸும் ஒவ்வொரு விதம் சூர்யா” என்ற கணேசன், சூர்யாவின் முகத்தை காமிரா பக்கம் திருப்பினார்.
ஜேகே இருக்கையைவிட்டு எழுந்துவிட்டார்.
அவரை கவனித்த மதி…
“உன்னையும் போட்டுத்தள்ளனும் நினைத்தேன்… சுரேனை முடிச்சிட்டு உன்கிட்ட தான் வரலாம் இருந்தேன். இந்த போலீஸ் பிடிச்சிடுச்சு” என்று சோகமாகக் கூறிய மதி, “தெய்வானைகிட்ட இருந்து மயிலை நீதானே பிரிச்ச?” என்றாள்.
“உங்களுக்குத்தான் மயிலு கதை தெரியுமே! நீங்களே சொல்லுங்க ஏசிபி. சாரியான்னு பார்ப்போம். நான் அவனை எப்படி கொலை பண்ணேன்னு சொல்றேன்” என்ற மதி கன்னத்தில் கை வைத்து முகத்தை தாங்கியவளாக வாழியை சொல்லுமாறு சைகை செய்தாள்.
ஜேகேவை ஒருமுறை அழுத்தமாக ஏறிட்ட வாழி மதி சொல்ல சொல்லியதைக் கூறினான்.
தெய்வானை மறுக்க மறுக்க மயில்வாகனன் அவரை காதலிக்க வைத்து மண பந்தத்தில் கரம் பிடித்தார். அப்போது அவர் ஜேகேவின் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
தெய்வானை மயிலுக்கு பிறந்தது இரட்டையர்கள். சாரு, மதி. சாரு மூத்தவள். இருவருக்கும் மூன்று வயது இருக்கும்போது…
“என்னை பணக்கார வீட்டு பொண்ணு விரும்புது. அதை நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்” என்று கணவன் சொல்வதை எந்த மனைவியால் தாங்கிக்கொள்ள முடியும்.
மயில்வாகனனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதென்று தெரிந்து தான் தங்கையின் பிடிவாதத்துக்காக மயில்வாகனனிடம் ஜேகே பேசியது. மயிலும் பெரிய இடம் என்று, காதலை மறந்து பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
அப்போது இதனை எதிர்த்தது ரூபா மட்டும் தான். ஜேகேவுக்கு தங்கை பாசம். நீரஜாவுக்கு காதல் பித்து. ஒரு குடும்பத்தை சிதைக்கிறோம் என்ற சிறு குற்றவுணர்வும் இன்றி மயில்வாகணனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்தது அறிந்து தெய்வானை நியாயம் கேட்க தன் தந்தையுடன் செல்ல… நடந்த வாக்குவாதத்தில் மயில் தள்ளியதில் தெய்வானை சுவற்றில் மோதி தலையில் ஏற்பட்ட அடியால் சித்தம் கலங்கி மனநிலை பிழன்று போனார்.
ஆனால் மற்றவர்கள் தெய்வானை அதில் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டனர்.
மயில்வாகணன் பணம் பகட்டோடு அரசியலிலும் மூழ்கி தான் பெற்ற பிள்ளைகளையும் மறந்திட…
பாதிப்பிற்குள்ளானது சாரு மற்றும் மதி தான். வயதானவரால் தாயின் நிலைக்கு காரணம் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டனர்.
காதல் என்று ஏமாந்து போனதால் மட்டுமே என் மகளுக்கு இந்நிலையென பெரியவர் புலம்பும் போதெல்லாம் மதிக்குள் மயிலை கொல்லும் வெறி வரும். அதனை சாரு தான் அடக்கி கையாள்வாள்.
சாருவும் காதலினாலேயே உயிரை மாய்த்துக்கொள்வாள் என்று மதி ஒருநாளும் நினைத்திருக்கமாட்டாள்.
தன் கண் முன்னே சாருவின் இறப்பினை கண்ட மதிக்கு கொலைக்கான வித்திடல் அங்கு தான் போடப்பட்டது.