பெருமாள் மற்றும் கிருபா ஜேகே’வை தன்னைப்போல் பார்த்தனர்.
எத்தனை பெரும் நல்ல மனிதர். தங்கைக்காக ஒரு பெண்ணின் வாழ்வை கலங்கடித்திருக்கிறாரே!
அன்று தெரியாத தவறின் வீரியம் இன்று பூதாகரமாக தெரிந்திட, உயரம் துறந்து தலை கவிழ்ந்தார் ஜேகே.
“என்னைவிட என் கதையை நல்லாவே தெரிந்து வைத்திருக்கிறாய்!” என்ற மதி…
“சாரு யார் தெரியுமா?” என்று கண்களை மூடியவள்…
“என் உலகம். எனக்கு எல்லாமாவும் இருந்த என்னுடைய அம்மா அவள்” என்றவளின் ஒற்றை கண்ணில் நீர் திரண்டு கன்னம் உருண்டது.
“என்னைவிட ஐந்தாறு வருடம் பெரியவள் இல்லை… ஜஸ்ட் ஃபைவ் செக் எனக்கு முந்தி பிறந்தாள். மனநலம் சரியில்லாத அம்மா, ஒரே பொண்ணு வாழ்க்கையை மொத்தமா தொலைச்சிட்டு பிரம்மை பிடித்து இருக்காளேன்னு கவலையிலேயே நாட்களை கடத்தும் தாத்தா… அவளை கவனிச்சிக்கவே ஆள் வேணுங்கறப்போ… என்னை குழந்தை மாதிரி பார்த்துகிட்டாள். அம்மா, தாத்தாவோட சூழல் என் மனசை பாதிக்குதுன்னு என்னை விடுதியில் சேர்த்துவிட்டாள். தாத்தா முடிஞ்சதை கொண்டுவர, அதை வச்சு எங்க மூணு பேரையும் அவ்வளவு நல்லா பார்த்துகிட்டாள்” என்று சொல்லிக்கொண்டிருந்த மதி கண்களை திறந்து முகத்தை தேய்த்துக் கொண்டாள்.
“ஒரு காதலால் குடும்பம் குலைஞ்சிருக்க… சாரு எனக்கு கவலையே தெரியாமல் பார்த்துகிட்டதாலோ என்னவோ, எனக்கும் காதல் வந்துச்சு. மறுக்கவோ, வெறுக்கவோ முடியாதளவுக்கு எனக்கும் பிடிச்சிருந்துச்சு. அது தெரிந்ததும் ஏன் எதுக்கு அப்படிலாம் எதுவும் கேட்கல, என் சாரு எனக்கு சப்போர்ட் பண்ணாள். அப்போ தான் அவளும் லவ்ல இருக்கான்னு தெரியும். ஆனால், அவள் அந்த காதலை நினைத்தே பயப்படவும் செய்யுறான்னு அப்போ எனக்கு தெரியாது.
“எல்லா காதலும் தோல்வியில முடியறதில்லை. எல்லா ஆணும் பொய்யா காதலிக்கிறதில்லை. நம்புனேன்.
“அன்பை மட்டும் தானே கண்ணை மூடிட்டு சந்தேகிக்காமல் நம்ப முடியுது.” மதியிடம் விரக்தியான சிரிப்பு.
வாழி குறுக்கிடவில்லை. அவ்னுக்கு வேண்டிய காரணத்தை இப்போது தானே தொடங்கியிருக்கிறாள். முழுவதும் தெரிய வேண்டுமே!
ஆறு மாதத்துக்கு முன்…
ஒருநாள்,
ஸ்டுடியோவிலிருந்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சாரு… வெளியூரில் வேலை பார்க்கும் மதி விடுமுறைகக்காக வீட்டிற்கு வந்ததையும் கவனிக்காது அறைக்குள் புகுந்து கதவினை சாற்றிக்கொண்டாள்.
அழுகை என்றால் அப்படியொரு அழுகை.
சத்தம் கேட்டு கதவுக்கு இந்தப்பக்கம் மதி துடித்தாள்.
இதுநாள் வரை எத்தனை துன்பங்கள் வந்தாலும், ஒரு இடத்தில் கூட சாரு சுணங்கி அமர்ந்ததில்லை. அத்தனை திடம் அவளுள்.
ஆனால் அன்று?
மொத்தமாக ஓய்ந்து வெடித்து சிதறினாள்.
மதியின் கத்தலில் சிறிது நேரத்தில் தன்னை தேற்றிக்கொண்டு வெளியில் வந்த சாரு… அப்போதும் தனது வலியை தாங்க முடியாது மதியை கட்டிக்கொண்டு அழுதாள்.
காரணம் என்னவென்று தெரியாது மதி தவித்திட…
“காதலே பொய் மதி. காலத்துக்கும் அழ வைக்கும்” என்றவள், “எல்லா ஆண்களுமே சந்தர்ப்பதுக்காகத்தான் காத்திருக்காங்க. அவங்களுக்கு ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு. அப்படியிருக்கும் போது, நீயில்லைன்னா நானில்லை. என் இதயமே நீதான்னு எப்படி சொல்ல முடியுது? எனக்கு வலிக்குது மதி. இங்க… இங்க… இந்த இதயம் இருக்க இடம் முழுக்க வலிக்குது மதி. தொண்டையெல்லாம் அடைக்குது” என்று சிறுமியாய் தன் வலியை சொல்லிய சாருவை இறுக்கி அணைத்துக்கொண்ட மதிக்கு அத்தருணம் கொடுமையாக இருந்தது.
“என்னாச்சு… ஏன் சாரு இப்படியெல்லாம் பேசுற?”
“தெரியலையே! அவன் மேல உயிரையே வச்சிருக்கேன் மதி. அவனும் என்னைதான் லவ் பண்ற மாதிரி இருந்தது. ஆனால் இன்னைக்கு,” என்ற சாரு சுவற்றில் நெற்றியை முட்டிக்கொண்டு அழுதாள்.
சாரு எந்தவொரு இடத்திலும், சூழலிலும், தன்னுடைய நண்பர்களிடமும் கூட தனது குடும்பத்தைப் பற்றி சொல்லியதில்லை.
அம்மாவின் நிலையை கூறினால் ஏன் எதற்கென்ற காரணங்கள் சொல்ல வேண்டியிருக்கும். அது தன்னுடைய குடும்பத்தின் நிலையை தாழ்த்திவிடுமோ என்கிற பயம். ஏற்கனவே ஒருவித அழுத்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்திருக்க… பழையதை முற்றிலும் தவிர்க்கவே செய்தாள்.
சாருவின் நண்பர்களுக்கும், சாரு மட்டுமே போதுமானவளாக இருக்க… அவளைப்பற்றி எதுவும் தெரிந்துகொள்ள முனையவில்லை. அது சாருவிற்கு வசதியாகவும் போனது.
சுரேனுக்கு கல்லூரி நாட்களிலிருந்தே சாருவின் மீது காதல். சொல்லிக்கொண்டதில்லை. சொல்ல முயன்ற தருணங்களில் எல்லாம் எதற்கோ பயந்தவள் போல் சாரு காட்டிடும் பாவனை அவனை சொல்லவிட்டதில்லை.
அத்தோடு அவனின் நிலை?
காத்திருக்க முடிவு செய்து தன்னுடைய வேலையில் கவனம் வைத்தான்.
சாருவிற்கும் சுரேனின் மீது காதல். ஆனால் அன்னை விடயத்தில் சூடு கண்ட பூனையாக, காதல் வேண்டாமென்று நினைத்தவள் சுரேனிடமிருந்து தன்னை மெல்ல விலக்கிக்கொண்டாள்.
விலக நினைத்தால் தானே நெருங்கும். இதுதானே காதலின் அரிச்சுவடி.
சாரு காதலில் தவித்தாள். சுரேனை விட முடியாதென்றது அவளின் மனம். அத்தனை உறுதி.
அதுநாள் வரை நண்பனென்று பார்த்தவள், அவன் தான் தன்னுடைய வாழ்க்கை முழுமைக்கும் என்பதால், மயில் மாதிரி இவனும் இருந்திடக்கூடாது… அன்னைப்போல் தானும் ஏமாந்திடக்கூடாதென்று சுரேனின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கத் துவங்கினாள்.
சுரேன் உணராது அவன் அவள் மீது கொண்ட காதலை ஒவ்வொரு முறையும் பரிச்சித்து பார்த்தாள்.
அப்படிப்பட்ட நாட்களிள் ஒன்று தான் அன்று,
சாரு என்றுமில்லாது அன்று சுரேனை அதிகம் தேடியவளாக அவனை பார்ப்பதற்காக ஆர்வ மிகுதியாக ஸ்டுடியோவிற்குள் நுழைந்தாள்.
நுழைந்தவள் பார்த்த காட்சியில் இதயத்தை யாரோ வெட்டி வெளியே எடுக்கும் வலியை உணர்ந்தாள்.
தன்னைப்போல் கன்னம் வழிந்த கண்ணீரை துடைக்கவும் மறந்து வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
மதி பிடிவாதமாக அழுத்தம் கொடுத்து என்ன நடந்ததென்று கேட்டிட… ஸ்டுடியோவில் பார்த்த காட்சியை அழுகைக்கு நடுவில் கூறினாள்.
சாரு ஸ்டடுயோவிற்குள் நுழைந்த சமயம்…
மலர்கொத்தினை இரு கைகளில் பிடித்து, மண்டியிட்டவனாக தன்வியின் முன் நீட்டிக்கொண்டிருந்தான் சுரேன்.
“லவ் யூ… லவ் யூ சோ மச் டியர். இதனை சொல்ல எத்தனை வருடம் காத்திருக்கிறேன் தெரியுமா?” என்றிருந்தான்.
தன்வி முகம் முழுக்க புன்னகையோடு அவனின் முன் துள்ளி குதித்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் தன்வி ஏற்கனவே ஒருவனை காதலித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை சாரு நினைவில் கொள்ளவில்லை. அதிர்ச்சி அவளை சுயம் தொலைக்க வைத்திருந்தது.
சாரு கதறிட…
மதியினுள் கொலைவெறி பொங்கியது.
ஏனென்றால் மதியும் விமலிடம் ஏமாந்து தான் இங்கு வந்திருந்தாள்.
தன்னை காதலித்துக் கொண்டிருந்தவனால் இன்னொரு பெண்ணை எப்படி காதலிக்க முடிந்தது? நானும் காதலில் என் அம்மாவைபோல் ஏமாந்துவிட்டேனா? அழுது புலம்பிய சாருவின் மனதில், எப்போதும் தவறாக தெரிந்திடாதா தன்வி, சுரேனின் நெருக்கம் முற்றும் முழுதும் தவறாக தெரிந்தது இப்போது.
“நான் ஏமாந்துட்டேன். ஏமாந்துட்டேன் மதி. தாத்தா மட்டும் சொல்லிட்டே இருந்தார். கேட்காமல் விட்டுட்டேனே! வலிக்குது மதி” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினாள்.
காதலின் வலி சாருவிற்கு அழுகையை கொடுத்தது என்றால், மதிக்கு பழிவாங்கும் வெறியை உருவாக்கியது. அத்தோடு சாருவின் அழுகையை காண காண, காதலென்று ஏமாற்றும் அத்தனை ஆண்களையும் தன் கையாலே கொல்ல வேண்டுமென்ற வெறி அவளுள் வேர்விட்டது.
இரவு அவர்களின் தாத்தா வர, சாரு அமைதியாக அறைக்குள் முடங்கினாள்.
மதி தான் அன்னைக்கும், தாத்தாவுக்கும் உணவளித்து அவர்களை உறங்க வைத்து சாருவை உணவு உண்ண வைக்க முயற்சித்து தோற்றாள்.
“இந்த பழத்தையாவது சாப்பிடு சாரு” என்று தட்டில் வெட்டப்படாத பழங்களையும் கத்தியையும் கொண்டுவந்து சாருவின் முன் வைத்த மதி, “கதவடைச்சுட்டு வறேன்” என்று வெளியில் செல்ல… வேகமாக எழுந்த சாரு அறையின் கதவை உள்பக்கம் தாழிட்டுக்கொண்டாள்.
மதி எவ்வளவு கத்தியும் சாருவிடமிருந்து சத்தமின்றி போக, அறைக்கு பக்கவாட்டாக வந்த மதி, அங்கிருந்த சன்னலை திறந்து பார்த்த நொடி இமைகள் விரிய அளறினாள்.
“சாரு…”
“ரொம்ப வலிக்குது மதி. தாங்க முடியல மதி. இங்க குத்திக்கிட்டா நல்லாயிருக்கு. ரொம்ப நல்லாயிருக்கு” என்று விழிகளை அகட்டி விரிந்திருந்த கூந்தல் ஆடிட, கத்தியாலே தன்னுடைய இதயப்பகுதியில் மாற்றி மாற்றி குத்திக்கொண்டாள் சாரு.
ரத்தம் வழிந்து தரை முழுக்க குருதி தோய்ந்திருந்தது.
“சாரு… வேண்டாம் சாரு.” மதி சன்னல் கம்பிகளுக்கு நடுவில் கையை விட்டு அலற, சத்தம் கேட்டு ஓடிவந்த தாத்தா தன் பேத்தியின் நிலை கண்டு ஸ்தம்பித்து நின்றார்.
மதிதான் அவரை உலுக்கி,
“சாரு… சாருவை காப்பாத்தனும் தாத்தா… கதவு, கதவை உடைங்க” என்று சொல்ல… கடப்பாரை கொண்டு வந்து அவர்கள் கதவின் தாழ் உடைத்து உள்ளே செல்வதற்குள் சாரு மொத்தமாக அவர்களை விட்டு சென்றிருந்தாள்.
அறைக்குள்ளே மதி அடி வைத்திட… சாருவின் ரத்தம் பிசிபிசுப்பாய் அவளின் பாதம் நனைத்தது.
தகித்தவளாக சாருவை நெருங்கி பார்த்திட…
கைகள், உடலென கத்தியால் நன்கு கிழித்து வைத்திருந்தாள். மிருகமாய் மார்பு பகுதியில் குத்தியதால் அவ்விடமே கோரமாக காட்சியளித்தது.
சாரு இறந்துவிட்டாள்… யோசிக்காது தீர விசாரிக்காது, தன் அன்னைப்போல் தானும் ஏமாந்துவிட்டோம் என்ற ஒன்றில் நிலையாக நின்று, ஒரு தெய்வானை போதுமென தன்னுயிரை மாய்த்துக்கொண்டாள்.
ஆனால் மதி?
கண்ணுக்கு முன்னால் மிகக் கொடூரமாக தன் சகோதரி தற்கொலை செயததை பார்த்திருந்தவளின் மூளையும் மனமும் உணர்வற்று மரத்து போய்விட்டது.
அதுவரை நிற்காமல் வழிந்த மதியின் கண்ணீர் நொடியில் வற்றியது.
தற்கொலை… தனக்குத்தானே ஒருவர் இத்தனை கொடூரமாக செய்துகொள்ள முடியுமா? சாரு செய்திருந்தாள்.
சுரேனின் மீதும் தன்வியின் மீதும் கட்டுகடங்கா கோபம் மதியினுள்.
அதைவிட சாருவின் மீது அதீத கோபம்.
காதாலுக்காக… ஏமாற்றியர்களுக்காக இவள் உயிரை மாய்த்துக்கொள்வாளா என்கிற தார்மீக ஆதங்கம்.
விடிந்த பிறகும் இருவரும் சாருவின் உடலை வெறித்தவாறு முடங்கியிருந்தனர்.
உறக்கம் கலைந்து எழுந்த தெய்வானை… உயிரற்று ரத்த கரைக்கு நடுவில் கிடந்த சாருவின் உடலருகில் சென்றமர்ந்து,
“பசிக்குது சாரு. சோறு கொடு” என்று உலுக்கினார்.
சாருவிடம் பிரத்திபலிப்பின்றி போக மதியிடம் வந்தவர்,
“சாரு சோறு தரல… நீ வா கேளு” என்று செய்கை செய்து கேட்டவர், மதியை பிடித்து இழுத்தார்.
இந்நிலை பெரியவருக்கு வேதனையை கொடுக்க… தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.
தன் வீடு இப்படியொரு நிலையில் இருக்க காரணம், இந்த காதல் என்கிற மூன்றெழுத்து வார்த்தை தானே என நினைத்த மதி, முடிவொன்று எடுத்தவளாக… எழுந்து நின்றாள்.
கதவினை உடைக்க கொண்டு வந்த கடப்பாரையை கையில் எடுத்தவள், அவ்வறையின் மையத்திலே குழி தோண்ட துவங்கினாள்.
கடப்பாரையை ஒவ்வொரு முறை தரையில் குத்தும் போது,
சாரு கத்தியால் தன்னுடைய இதயத்தை குத்திக்கொண்ட காட்சி கண் முன்னே தோன்றி மறைய… தனக்குள் ஊற்றாய் பெருகும் குரோதத்தை மனதில் எரிமலையில் சேரும் செஞ்சாந்தாய் அடக்கி வைத்தாள்.
மயில், விமல் என தொடர்ந்து சுரேன் ஆகியோரின் முகங்கள் கண்ணில் மின்னி மறைந்தன. கொலைவெறி அதிகமாகியது.
மதியின் எண்ணத்தை புரிந்துகொண்ட பெரியவர், அவளுக்கு உதவி செய்ய ஒரு மணி நேரத்தில் அவ்வறையிலேயே சாருவின் உடலை புதைத்து தரையை சமன் செய்திருந்தனர்.
அந்த நாளே… ஒன்றும் நடவாததைப்போல் ஸ்டுடியோ கிளம்பிச் சென்றாள். உருவ ஒற்றுமை அவளுக்கு வசதியாக அமைந்தது.
சுரேன் அவளுக்காக… சாருவுக்காக காத்திருந்து, அவளை கண்டதும் கண்ணில் கசிய விட்ட காதலை கண்ட மதிக்கு உள்ளுக்குள் ஏதோ புரியா உணர்வு.
ஆதலால் சுரேனை கண்காணிக்க சாருவாக அவளிடத்தில் தன்னை பொறுத்திக் கொண்டாள்.
சாருவும் மதியும் ஒரே மாதிரியான தோற்ற அமைப்பு கொண்டிருந்தாலும், சில சில வேறுபாடுகள் இருந்தன். அதில் ஒன்று மதி இடது கை பழக்கம் கொண்டவள். அதில் தான் தன்னை சாருவாக காட்டிட மிகுந்த சிரமத்திற்குள்ளானாள். ஆனால் சமாளித்துவிட்டாள்.
சுரேனின் பார்வை சாரு என நினைத்து மதி மீதே இருந்திட… மதியினுள் குழப்பம். அந்த குழப்பம் சுரேன் தன்வியிடம் நெருக்கமாக பேசுவதில் காணாமல் போய்விடும்.
‘ஒன்றிற்கு இரண்டா?’ என்று தான் நினைத்தாள் மதி.
வேண்டாம் எனக்கு திருமண்மென்று மறுத்துச் சென்ற விமலும் எங்கென்று தெரியாது இருக்க… முதலில் சுரேனை கொல்லத்தான் முடிவு செய்தாள்.
அதற்குள் மகேஷ் ஜோவிதாவை தவிர்த்து, அவர்களுக்கு தெரியாது சாருவென்று மதியை பெண் கேட்டு செல்ல… அவளின் முதல் கொலைக்கு பலியாகிப்போனான்.
சுரேனை பல வகையில் கொன்றிட முயற்சி செய்தும் அவளால் முடியாது போனது. அதற்குள் அருண், விமலென்று தன் ஆட்டத்தை அரங்கேற்றியிருந்தாள்.
விமலை கண்காணிக்கத்தான் அவனது வீட்டு பின்னாலிருக்கும் மைதானத்தில் அவளது தாத்தா அவளின் சொல்படி பழச்சாறு வண்டி வைத்தார்.
விமலை கொன்ற அடுத்த நாளிலிருந்து அவர் அங்கு கடை வைக்கவே இல்லை.
அன்று விமான நிலையத்தில் கூட மதி சுரேனை தேடியதற்கு காரணம், அவனுடன் விடுதிக்கு செல்வதைப்போல் சென்று கொன்றுவிட வேண்டுமென்று தான் அந்த எண்ணமும் சுரேன் விமான நிலையம் செல்லாததால் தடைபட்டு போனது. வாழியுடன் செல்ல நேர்ந்து, அவனின் சந்தேகத்திற்கு ஆட்பட்டாள்.
வாழியும் பெரியவர் மூலமாக சாரு மதியென இருவரின் பின் கதைகள் என அறிந்துகொண்டான்.
அன்று ஜோவிடம் சுரேன் கவனித்த இடது கை செயல்கள், அவளுக்கு வலது கை கணினியின் மௌசில் இருந்ததால் தான்.
நாம் ஒரே நேரத்தில் தீபாராதனை தட்டினை ஒரு கையால் சுற்றிக்கொண்டு, மற்றொரு கையால் மணியை அடிப்போம் அல்லவா அந்த மாதிரி. ஒரே சீராக இரு கையாலும் செய்து கொண்டிருந்த ஜோவிதா, திடீரென ரியாஸ் கேட்டதால் சட்டென்று ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ள தன்னுடைய காமிரா ஹோல்டரை பெங்களூரில் பயன்படுத்தியது சாரு(மதி) என்று சொல்வதற்கு தன்வியை சொல்லிவிட்டாள். தன்வியும் வாழி சொல்லியதால், சுரேன் தன்னிடம் என்ன சொல்லப்போகிறான் என்ற யோசனையில் இருந்ததால் அதனை மறுத்துக்கூறாது விட்டுவிட்டாள்.
இப்படி அனைத்தும் மதிக்கு சாதகமாக அமைந்திட…
சுரேன் காதலை சொல்லியதை மட்டும் நம்ப முடியவில்லை.
தன்வியை அருண் ஏமாற்றியிருக்க… சாரு சொல்லியதைப்போல் சுரேன் தன்வியை விரும்பியிருந்தால் தன்னிடம் காதலை சொல்ல என்ன அவசியம் என சிந்தித்து, சுரேனிடம் சில நாள் நேரம் கேட்டிருந்தாள். யோசித்து சொல்வதாக.
மதியின் மீது சந்தேகம் வந்ததும் தன் பார்வையிலேயே அவளை வைத்திருந்த வாழிக்கு, அவள் சுரேனிடம் டைம் கேட்டது எதற்காக என்று புரியாததால், அவளை தூண்டி பிடிபட வைப்பதற்காகவே சுரேனை தன்வியிடம் காதலென்று சொல்ல சொன்னான்.
மீண்டும் சுரேன் சாருவை ஏமாற்ற முயற்சித்திருக்கிறான் என அதீத கோபம் கொண்ட மதி, சுரேனை கொல்வதற்கு திட்டமிட, வாழியிடம் சிக்கிக்கொள்வோம் என்று ஏதோவொரு பொறி அவளுள்.
அதற்காகவே தன் தாத்தாவின் மூலம் அன்றைய தினம் வாழியை கண்காணிக்க விட்டு, சுரேனை கூட்டிக்கொண்டு பொறுமையாக சுற்றிக்கொண்டிருந்தாள்.
தாத்தா… வாழி அலுவலகத்தில் தான் இருக்கிறான் என்று தகவல் கொடுத்ததும் சுரேனை கொலை செய்திட முயன்றாள்.
ஆனால் வாழி பாக்கவாக திட்டமிட்டு அவளை வளைத்து பிடித்திருந்தான்.
அனைத்தையும் சொல்லி முடித்த மதி,
“என் சாருவோட சாவுக்கு உன் பொண்டாட்டியும், அந்த சுரேனும் தான் காரணம். அதனால் தான் நான் செய்யும் கொலையெல்லாம் தனு தான் செய்கிற மாதிரி கிரியேட் பண்ணேன். அவளுடைய பிரிவு ரத்தம், காமிரா, அவளுக்கு தெரிந்த மகேஷ், அருண் என முதலில் கொன்றேன்” என்றவள் வெடித்து சிரித்தாள்.
“நான் நினைத்த மாதிரி உன்னையே தனு மேல் சந்தேகப்பட வச்சிட்டேன். ஆனால் எப்படியோ நீ சுதாரிச்சிட்ட… சுரேனை வைத்து கேம் பிளே பண்ணுவன்னு நினைக்கல. நான் மாட்டிக்கிட்டேன்” என்றாள்.
“காம் டவுன் தனு.” பெருமாள் அவளின் முதுகில் தட்டிக்கொடுக்க…
“நான்… சுரேன்” என்று கண்ணீர் விழியோடு நிமிர்ந்தவள்,
“சாருவிடம் காதலை சொல்லிட என்னிடம் சுரேன் சொல்லி பார்த்தான். அதை தவறாக நினைத்து சாரு அவசரப்பட்டுட்டாளே” என்று அழுதாள்.
“இப்போ தெரியுது” என்று மேசையிலிருந்து இறங்கிய மதி, இரு கைகளையும் மேசையில் தட்டியவளாக,
“அதுக்காக நான் பண்ண கொலைக்கெல்லாம் அர்த்தமில்லாமல் இல்லை. இப்போ நான் பண்ண கொலைகள், அதுக்கான காரணங்கள் மீடியா, நியூஸ் அப்படின்னு வரும் தானே!” எனக்கேட்டு, “காதல்ன்னு ஏமாத்த நினைக்கிறவனுக்கு புள்ளியாவாவது இதை நினைத்து நடுக்கம் வரும் தானே! எனக்கு அதுதான் வேண்டும்” என்று தனது பாணியில் வழக்கமான சிரிப்பினை வெளிப்படுத்தினாள்.
அங்கிருந்த அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
கிருபாகரனுக்கு இதில் வாழியின் திறன் மீது மதிப்பு உண்டானது. நிச்சயம் வாழியை தவிர்த்து வேறு யாரேனும் இருந்தால், இத்தனை சீக்கிரம் கொலையாளியை கண்டுபிடித்திருக்கமாட்டார். மதியின் கொலைகள் இன்னும் நீண்டு கொண்டிருந்திருக்கும்.
வாழியிடம் சிறுப்பிள்ளையாய் தான் நடந்துகொண்ட முறைகளுக்கு தனக்குள்ளேயே வெட்கினார்.
அடுத்து வாழி எல்லாம் முடிந்ததென்று அமர்ந்துவிடவில்லை… அடுத்தடுத்து நடக்க வேண்டியதை பெருமாளின் தலைமையில் நடத்தி முடித்தான்.
முறையாக மீடியாவுக்கு தகவல் அளித்தான்.
நகரம் இந்த செய்தியால் பற்றி எரிந்ததென்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும் மினிஸ்டரின் கொலை… அவரின் சிறு வயது முதல் தோண்டப்பட்டு ஊடகங்களால் அலசப்பட்டு விவாதத்திற்குள்ளானது.
சாருவின் உடல் மதியின் வீட்டில் தோண்டப்பட்டு ஃபாரன்சிக் ஆபீசர் ஆசாத்தல் உறுதி செய்யப்பட்டது.
சுரேன் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக லேகா ரிப்போர்ட் கொடுக்க… அதுவரையிலும் சுரேன் விடயத்திலிருந்து அழுத்தம் முற்றும் முழுதாய் வாழியை நீங்கியது.
அடுத்தநாள் விடியலில் முறைப்படி நீதிமன்றத்தில் பெருமாளின் முன்னிலையில் மதியை ஒப்படைத்து அனைத்து ஆதாரங்களையும் வாழி சமர்ப்பிக்க…
மதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போதும், சிறு வயது முதலே காதலால் மதி அனுபவித்த நிகழ்வுகள் அவளின் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறி, லேகாவின் மூலம் அதற்கான ரிப்போர்ட்டுக்கள் ஒப்படைத்து, மதிக்கு மருத்துவ கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்துவிட்டே…
இவ்வழக்கிலிருந்து முழுமையாக தன்னை விடுவித்துக்கொண்டான் வாழியாதன்.
அதன் பின்னர் முறைப்படி டிஜிபி அலுவலகம் சென்று, தன்விக்கு கணவனாக கையெழுத்திட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
காவலனாகவும், கணவனாகவும் தன்னுடைய பணியை மிக சரியாகவே செய்து முடித்தான்.
அவனுக்கு இன்னுமொரு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதனை கணவனாக மட்டுமே செய்திட முடியும். செய்திடுவானா?