இருசக்கர வாகனத்தில் காக்கி உடையில் அமர்ந்திருக்கும் வாழியின் வலது பக்கம்… சரிபாதி தோற்றம்.
வாழியின் வலது கரம் ஆக்சிலேட்டரை முறுக்கிக்கொண்டிருக்க… அப்பக்கம் கண்ணாடியில் அவனுக்கு பின் புறமான காட்சிகள் நீண்டு காணப்பட்டது.
மழை நனைத்து சென்ற ஈர சாலை கழுவி விட்டதைப்போல் பளிச்சென இருந்திட, இரு மருங்கிலும் குளிர் காற்றில் தலை சாய்த்து ஈரம் படர்ந்த மழைத்துளியை மண்ணில் தூறிக் கொண்டிருக்கும் பச்சை வர்ண மர கிளைகள். தூரத்து மின் விளக்கு பிரகாசமாய் ஒளியை பாய்ச்சிட…
ஒற்றை ஆட்டோ தன் பின் உருவம் காட்டி விரைந்து கொண்டிருக்க… அதனை துரத்திச்செல்லும் ஐஸ்கிரீம் வண்டியின் முன் தந்தை குடை பிடித்திட… துள்ளி குதித்து ஐஸ் க்ரீம் சுவைத்திடும் சிறுமியின் ஒற்றை கால் காற்றிலும், மறுகால் தரையிலும் இருக்கும் கவிதையான காட்சி.
‘ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி.’
‘தி ஷாடோ கேலரி.’ போட்டியின் அடுத்த நிலையில் வென்று, இறுதி சுற்றிற்கு தன்வி முன்னேறியிருப்பதற்கான மெயில் வந்திருந்தது.
அவள் அனுப்பிய புகைப்படத்தினை மெயில் வந்த பின்னர் தான் வாழி பார்த்தான். அவனிடம் பிரமிப்பு மட்டுமே.
‘இப்படியான கோணங்கள் இவளுக்கு மட்டும் எப்படி கற்பனையில் உதிக்கிறது?’ ஆச்சரியத்தோடு சற்று பெருமையாகவும் இருந்தது.
நேற்று இரவு இந்த புகைப்படம் எடுத்து சமயம் அவளிருந்த நிலையென்ன? என்ன தான் வாழி பார்த்துக்கொள்வான் என்கிற திடம் இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு மறுகல் இருக்கத்தானே செய்யும். அது எத்தனை தூரம் மனதை அலைகழித்திருக்கும் என்று அந்த நிலையை கடந்து வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அப்போதுதான் நீதிமன்றத்தில் அனைத்தும் முடித்து தன்வியை கூட்டிக்கொண்டு வாழி வீட்டிற்கு வந்திருந்தான்.
பெரியவர்கள் நால்வரும் அவளை சூழ்ந்து நலம் விசாரித்திட… வாழி தான் அனைவரையும் சகஜமாக்கினான்.
தன்வி நடந்தவற்றுலிருந்து மீண்டு வந்திருந்தாலும், அவளால் சாருவின் தற்கொலையை ஏற்க முடியவில்லை. அத்தனை அவசரம் கொண்டிருக்கத் தேவையில்லை என்கிற ஆதங்கம் அவளின் மனதை படுத்து வைத்தது.
உண்மை அனைத்தும் தெரிந்து சுரேன் மொத்தமாய் அமைதியாகிப்போனான்.
சாரு இல்லாத உலகில் இனி நான் என்ன செய்வேன் என்கிற அவனின் பெரும் பயம், வீட்டிற்கு வருவதற்கு மருத்துவமனை சென்று பார்த்த போது தன்னை கட்டிக்கொண்டு அவன் அழுத அழுகையில் தன்வியால் உணர முடிந்தது.
சுரேனுக்கு தன்வி அளவிற்கு ஆதங்கமில்லை. கோபம். சாருவின் மீது அதீத கோபம்.
இரண்டு, மூன்று வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக உடனிருந்தும், எங்கள் நட்பை… என்னை புரியவில்லையா அவளுக்கு என்கிற தார்மீக கோபம். சாரு மீது அவனின் மனம் கொண்ட அந்த கோபம் தான், அவனை நிதானமாக இருக்க வைத்தது.
காலம் சுரேனின் காயத்தை மாற்றும். அவனுள் வாழி தன் பேச்சில் அத்தகைய நம்பிக்கையை விதைத்துவிட்டே அவனிடமிருந்து விடைபெற்றிருந்தான்.
அதன் நினைவிலேயே உழன்று கொண்டிருந்த தன்வியை மாற்றுவதற்காகவே, நேற்று அனுப்பிய புகைப்படத்தை பற்றி பேச்சினை துவங்கி அதனை காட்டுமாறு மடிகணினியை திறந்தான்.
அவனின் எண்ணம் பொய்யாகவில்லை.
வாழிக்கு படத்தினை காட்டும் போதுதான் தி ஷேடோ கேலரியிலிருந்து வந்திருந்த மின்னஞ்சலை பாரத்து, தான் அடுத்த நிலைக்கு தேர்வாகியிருப்பதை தெரிந்துகொண்டாள்.
வாழிக்கு அத்தனை மகிழ்வாக இருந்தது.
மெல்லிய அணைப்பில் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.
“நடக்க வேண்டியது நல்லதோ… கெட்டதோ நடந்திட்டு தான் இருக்கும். இதைவிட மோசமாகக்கூட நடக்கலாம். வாழ்க்கை நீண்டிருக்கே. எதையும் எதிர்பார்க்க முடியாது. அதோட போக்கில் எடுத்துக்கிட்டு வாழ பழகிக்கணும்” என்றான்.
சாதாரண வார்த்தைகள் தன்வியை அந்நொடி முற்றிலும் மாற்றியிருந்தது.
“நிதர்சனம் என்னன்னு புரிஞ்சிட்டாலே… இங்கு எல்லாவற்றையும் கடப்பது எளிது.”
“புரியுது வாழ்” என்றவள், “பழகணும் சொன்னீங்களே! பழகலாமா?” எனக் கேட்டிருந்தாள். மெல்லொளியில்.
அவளுக்கு அந்நொடி மனதின் சஞ்சலங்கள் யாவும் மறந்திட வேண்டுமென்ற சிந்தை. தன்னை முற்றிலும் மூழ்கடிக்க வாழியின் காதலால் மட்டுமே முடியுமென்று அறிந்தவள் அதற்கு முதல் புள்ளி வைத்து தொடங்கினாள்.
“நான் சொன்ன பழகணும்…” என்று ஆரம்பித்தவன், தன்வி சொல்லியதன் உட்பொருள் புரிந்து சத்தமிட்டு சிரித்தான்.
“அச்சோ வாழ்” என்று நாணம் கொண்டவள், அவனுள் மேலும் ஒன்றினாள்.
“பழகுவோமே!” என்றவன் தன்வியை இறுக்கமாக இறுக்கிக் கொண்டான்.
அந்நேரம் கதவு தட்டும் ஓசையில் இருவரும் விலகினர்.
லட்சு தான் இருவரையும் அழைத்தார்.
“ராதா சாமி கும்பிடணும் வர சொன்னாள். போய் இனி எந்த கஷ்டமும் வரக்கூடாதுன்னு சாமி கும்பிட்டு வந்திடுங்க. நைட் அங்கவே இருந்தாலும் ஓகே தான்” என்று சொல்லியவர், இருவரையும் தன்வி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இரவு உணவு அனைவருக்கும் அங்கு தான்.
மூன்று ஜோடிகளும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய தருணம்… நடந்து முடிந்த அனைத்தும் மறந்து, கடந்து ஒருவித நிறைவாக இருந்தது.
“எல்லாம் முடிஞ்சுதே! காக்கி ட்ரெஸ்க்கு கொஞ்சம் லீவ் கொடுக்கலாமே கண்ணா!” சேகரன் தான் சொல்லியிருந்தார்.
ஏன் என்று வாழி பார்த்திட…
“உன்னை ஹனிமூன் போக சொல்றாண்டா அவன். அதைத்தான் இத்தனை சுத்தி வளைத்து சொல்றான்” என்று உணவினை வாயில் வைத்தவரகா கிருஷ்ணன் கூறிட… ராதா தலையில் தட்டிக்கொண்டார்.
“ஒரு மருமகன் கிட்ட பேசுற மாதிரியா பேசறீங்க” என்ற ராதா, “உன்னை சொல்லணும் வாழி. வயசான ஆளோட உனக்கென்ன பிரண்ட்ஷிப்?” என்றார்.
கிருஷ்ணன் மனைவி தன்னை கிழவன் சொல்லியதில் அப்பாவியாக பார்த்திட… வாழி அவரை சீண்டும் விதமாக சத்தமாக சிரித்திட்டான்.
“டேய் போதும்டா… உனக்கெல்லாம் வயசாகாதா?” என்ற கிருஷ்ணன், “உன் அப்பன் கேட்டதுக்கு பதில் சொல்லுடா” என தன்னிலிருந்து பேச்சை மாற்றினார்.
“எல்லாமே பிளான் பண்ணிட்டப்போல.” கேட்ட லட்சுவிடம் ஆமென்றான்.
“எங்கபோறீங்க?”
“தன்வி தாம்மா டிசைட் பண்ணனும்” என்றான்.
“என்னடா குழப்புற?”
“தன்வி காம்படிஷன்ல ஃபைனல் ரவுண்டுக்கு செலெக்ட் ஆகியிருக்காள். ஃபோர் டேசில் பிக் அப்லோட் பண்ணனும். அதுக்கு எங்க போட்டோ எடுக்கப்போகணும் அவள் தானே டிசைட் பண்ணனும்” என்றான்.
அவளோடு சேர்த்து அவனும் அல்லவா போட்டிக்கான விதிமுறைகளை படித்திருந்தான். இப்போது அவனுக்கு சொந்த விருப்பத்தைவிட… தன்வியின் கனவை நினைவாக்குவதில் தான் அதிக முனைப்பு.
மற்றவர்களால் வாழியின் மனதை புரிந்துகொள்ள முடிந்தது.
“டைம் இல்லையே! சோ, சீக்கிரம் முடிவு பண்ணு தன்வி. நைட்டே கிளம்புறதுனாலும் கிளம்பிடலாம். சீக்கிரம் போட்டோ ஷூட் முடிச்சிட்டால்… அடுத்தநாள் அனுப்பிடலாம். அன்னைக்கு நைட் பாரிஸ் கிளம்பிடலாம்” என்றான்.
“அப்போ ஹனிமூன் லவ் சிட்டியான பாரிஸிலா?” கிருஷ்ணன் ஆர்ப்பாட்டமாகக் கேட்டு சிரிக்க…
“வயசாகிடுச்சுன்னா மூளை மழுங்கிடுமா?” என்று அவரின் தலையிலேயே சேகரன் கொட்டியிருந்தார்.
“டேய் நான் எப்பவும் உன்னோடு இப்படித்தானடா பேசுவேன். இவன் என்னவோ இன்னைக்கு புதுசா அடிக்கிறான்” என்றார் கிருஷ்ணன்.
“நான் இப்போ உங்க மாப்பிளை. மரியாதை கொடுங்க” என்று அதட்டினான் வாழி.
“டேய்…” கிருஷ்ணன் அதிர்ந்திட…
“சும்மா” என்று கண்ணடித்தான்.
“பாரிஸ் போகணுமா வாழி?” மகளை பார்த்துக்கொண்டே ராதா கேட்டார்.
“மத்த லெவல் மாதிரி ஃபைனல் இல்லை அத்தை. அதுக்கான ரிசல்ட் நேரில் தான். ஈவெண்ட் அரேன்ஞ் செய்திருக்காங்க” என்றான்.
பெரிய கண்டத்திலிருந்து மகள் மீண்டு வந்திருக்க… அவளை கண் முன்னே வைத்திருக்கத்தான் தாயாக ஆசைகொண்டார் ராதா. ஆனால் இன்னும் மகளிடம் பேசவில்லை.
தன்வி ராதாவை ஏக்கமாக பார்த்திட…
உண்டு முடித்த மற்றவர்கள் எழுந்து கொண்டனர்.
“நாங்க கிளம்புறோம் டா. நீ நைட் இன்னைக்கு இங்கவே தங்கிக்கோ” என்ற லட்சு சேகரனுடன் சென்றுவிட்டார்.
லட்சு சொன்னதில் காரணம் விளங்கிக்கொண்ட வாழிக்கு புதுவித உணர்வாய் முகம் வெட்கம் கொண்டிட, அதனை மற்றவர்கள் பார்த்திடக்கூடாதென தன்வியை மறந்து அவளது அறைக்கு வேகமாக வந்துவிட்டான்.
தன்வியும், ராதாவும் தனித்திருந்தனர்.
“ம்மா…” தழுதழுப்பாய் தன்வி அழைத்திட… நின்றிருந்த ராதா மகளின் தலையை வேகமாக தன் மார்பில் அழுத்திக் கொண்டார்.
“ஒண்ணுமில்லைடா… எல்லாம் சரியாகிடுச்சு. அம்மா இப்போ பேசுறனே! கொஞ்சம் வருத்தம் தான். அது நீ வாழியை விரும்புறேன்னு சொன்னதுலே காணமல் போயிடுச்சு. நீயும் வாழியும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும்டா” என்ற ராதா, பனித்த தன் விழிகளை துடைத்துக்கொண்டு, தன்வியின் கசங்கிய முகத்தை தன் சேலை தலைப்பால் துடைத்துவிட்டார்.
தன்வியின் நெற்றியில் முத்தம் வைத்தவர்…
“போடா… டைம் ஆச்சு. வாழி வெயிட் பண்ணுவான்” என்றார்.
அன்னை பேசவில்லை என்கிற தன்வியின் கவலையும் நீங்கியிருந்தது.
சந்தோஷமாகவே அறைக்குள் வந்து சேர்ந்தாள்.
வாழி உறங்கியிருந்தான்.
“தூங்கிட்டாங்களா?” தனக்குத்தானே கேட்டவள் அவனின் அருகில் சென்று பார்க்க… சீராக இருந்து அவனின் மூச்சுக்காற்று.
இரண்டு நாளின் அதீத அலைச்சல் படுத்ததும் உறக்கத்தை கொடுத்திருந்தது.
நடக்க வேண்டிய எதையும் எதிர்பார்த்து அவள் வரவில்லை. ஆனால், சிறிது நேரம் அவனுடன் செலவழிக்க எண்ணியிருந்தாள். சிறு ஏமாற்றம் மனதில் பரவ, அவனருகில் இடைவெளிவிட்டு படுத்தவள் கண்கள் மூடிய அடுத்த நொடி வாழியின் இறுகிய கைவளைவில் கட்டுண்டிருந்தாள்.
“வாழ்…”
அவள் அவன் புறமாக திரும்பிட…
“வாழ் தான். என்ன வச்சிருக்கியாம்?” எனக் கேட்டவன், “தூங்கிட்டால் அப்படியே விட்டுடுவியா… எழுப்ப வேண்டியதுதானே. உடனே முகம் சுருங்கிப்போச்சு” என்று அவளின் மூக்கின் நுனியை மெல்ல கடித்திருந்தான்.
“ஷ்ஷ்…” என்றவள், அவனின் அணைப்பிற்குள் பொங்கி பிரவாகம் எடுக்கும் உணர்வு ஊற்றில் தத்தளித்தவளாக…
கவிதையாய் அரங்கேறிய காதலில் யாருக்கு யார் அடிமையாகிப்போனார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே உரித்தான ரகசியமாகியது.
அவன் விரல்கள் அவளின் கண் பார்த்து ஆலிங்கனை புரிந்தது. உச்சம் தொட்ட நேசத்தில் இதழால் தன் பாவையின் சம்மதம் வேண்டியவன், மான் விழிகளால் வீசிய கட்டளைக்கு அடிபணிந்து தன்னை ஒப்புவித்து, தன்னவளை தனக்குள் பொதிந்து நிமிர்ந்தான்.
ஒற்றை முத்தம் நிறைவாய்… அவளின் நெற்றியிலும், அவனது மார்பிலும்.
தன்னுடைய மார்பில் களைத்து தலை சாய்த்திருக்கும் மனைவியின் உச்சியில் அவனது நாடி பதிந்திருந்தது.