வானில் மின்னும் நட்சத்திரம் போல் வாழ்க்கையில் மின்னிக்கொண்டிருந்தாள் நக்ஷத்ரா, தீரஜ் என்னும் வண்ண நிலவால்.
இரண்டு வருடங்கள் கடந்திருந்தது.
மனோஜ் ரூபாவின் மகள் தான்யாவுடனும், தன் தம்பி வியானேஷ்ஷுடனும் ஆதிரா கண்ணாம்மூச்சி விளையாடிக்கொண்டிருக்க…அவர்களோடு சேர்ந்து வினோத்தும் விளையாடிக்கொண்டிருந்தான்.
“அண்ணா! உங்கள் மனசு குழந்தை மனசுன்னு தெரியும் அதுக்காக குழந்தையோட குழந்தையாவே மாறிட்டீங்களே” என்று கிண்டல் செய்தான் மனோஜ்.
“நீயெல்லாம் ஏன்டா பேச மாட்ட! கல்யாணம் பண்ற வயசுல கண்ணாம்மூச்சி விளையாடிட்டு இருக்கேன். எல்லாம் என் நேரம்” என்று சலித்துக் கொண்ட வினோத்தின் தங்கைக்கு போன வருடமே திருமணம் முடிந்திருந்தது.
வினோத்தை திருமணம் செய்யச் சொல்லி வீட்டில் கேட்டுவிட்டனர்.இவனோ அடுத்த தீரஜாக உருவாகிக்கொண்டிருந்தான். ஆம், பிரியாவை உண்மையாக காதலித்தவனின் உள்ளம் வேறொரு பெண்ணை கரம் பிடிக்க கனவிலும் நினைக்கவில்லை.
“உங்கள் டைம்மெல்லாம் சூப்பரா தான் இருக்கு வினோத் அண்ணா” என்று புன்னகைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த நக்ஷத்ரா, “அத்தை” என்று சுரேகாவை அழைக்க,
“வாம்மா… இன்னிக்கு கடையில இருந்து சீக்கிரம் வந்துட்ட” என்று இன்முகத்துடன் மருமகளை வரவேற்றார் சுரேகா.
“ஆமா. இன்னிக்கு நைட் நம்ம எல்லாரும் வெளியே தான் சாப்பிடப்போறோம்” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே, கார்ச்சாவியை குலுக்கியபடி பின்னே வந்த தீரஜைக் கண்ட அம்பிகாவதி பாட்டி, “என்ன சிம்மா! நீயும் இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட!” என்று வியப்புடன் கேட்டார்.
“நீ சொல்லலையா டி?” என்று மனைவியைப் பார்த்து தலையசைத்தபடி கேட்டான் தீரஜ்.
“நான் சொல்லிட்டே இருக்கும் போது தான் நீங்க வந்தீங்க. சரி, கல்யாணப் பொண்ணு பிரியா எங்கே?” என்று கிண்டலுடன் கேட்டாள் நக்ஷத்ரா. அதைக்கேட்ட வினோத்தோ அதிர்ச்சியில் உறைந்தேவிட்டான்.பிரியா தன்னை தொடர்ந்து நிராகரிக்கிறாள் என்று தெரிந்தாலும் அவனால் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்ய போகிறாள் என்பதை ஏற்க முடியவில்லை.
“பிரியாக்கா எதுக்கு வெளியே ஒழிஞ்சு நிக்குறாங்க?” என்று கேட்டபடி வீட்டிற்குள் வந்தாள் ரூபா.
“நீயும் என்ன சீக்கிரம் வந்துட்ட ரூபா?” என்று யோசனையுடன் கேட்டபடி கிச்சனிலிருந்து வெளியே வந்தார் ரோகிணி.
“உமி தான் வரச் சொன்னாள் அத்தை” என்று யோசனையுடன் ரூபா அக்காவைப் பார்த்துக்கொண்டிருந்த போதே,தயங்கி தயங்கி மெல்ல எட்டுக்களை வைத்து உள்ளே வந்தாள் பிரியா… மனதில் வெட்கம் சூழ்ந்து!
நக்ஷத்ரா திருமணம் நடந்த தினத்திற்கு பிறகு இன்று தான் அவளை சேலையில் காண்கிறான் வினோத்.அவளின் திருமணச் செய்தி ஆடவனை அழுத்தி பேச்சற்ற நிலைக்கு கொண்டுச் சென்றிருந்தாலும் கூட அவனின் கண்கள் அவளை ரசித்தது காதல் கலந்த வெறுமையுடன்.
“வா பிரியா” என்று பொதுப்படையாக அனைவரும் வரவேற்க, புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தாள் பிரியா.
“பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க பாட்டி” என்று நக்ஷத்ரா ஆரம்பிக்க, தீரஜின் கண்களோ வினோத்தின் மீது மட்டுமே நிலைத்திருந்தது.மனோஜ்ஜின் முகமும் வாடியிருந்தது.அவனால் வினோத்தை இப்படி சோகமாக பார்க்கமுடியவில்லை.
“வாழ்த்துகள் மா! மாப்பிள்ளை என்ன பண்றாரு?” என்று பெரியவர்கள் கேட்க, “உங்கள் முன்னாடி தானே இருக்காரு நம்ம மாப்பிள்ளை” என்று தன் கைகளைக் கட்டியபடி தீரஜ் புன்னகையுடன் வினோத்தைப் பார்க்க, அனைவருக்குமே சந்தோஷம் கலந்த அதிர்ச்சி வினோத் உட்பட.
“உங்க மகன் சிம்மா அவருடைய பெஸ்ட் பிரண்ட் வினோத்க்காக பிரியாவுடைய வீட்ல பொண்ணு கேட்டிருக்காரு” என்று நக்ஷத்ரா பேசிக்கொண்டிருக்கும் போதே,
“வினோத் எனக்கு பண்ணின விஷயத்துக்கெல்லாம் இதெல்லாம் ஒன்னுமே இல்லை. அன்ட் பிரியாவுக்கும் வினோத்தை ரொம்ப பிடிக்கும். வீட்டு சூழ்நிலைக்காக பயந்தாள். இப்போ எல்லாம் ஓகே ஆயிடுச்சு” என்று நண்பனைப் பார்த்த தீரஜ், “அப்புறம் என்ன டா உன் அப்பா, அம்மா சென்னை வர டிக்கெட் போட்டிடு முறைப்படி பொண்ணுக்கேட்கணும்ல” என்று தீரஜ் கூறிமுடிக்கும் போதே, அவனை வேகமாக வந்து அணைத்துக்கொண்ட வினோத் நெகிழ்ந்தான்.
அடுத்த மூன்று மாதத்தில் வினோத் மற்றும் பிரியாவிற்கு திருமணம் இனிதே முடிந்திருக்க அனைவரின் வாழ்க்கையும் சந்தோஷமாக நிம்மதியாக இருந்தது.
பிள்ளைகளுடன் பிள்ளைகளாக நக்ஷத்ரா விளையாடிக் கொண்டிருக்க தன் பொம்மாயியை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் தன்னவளை ரசனை கலந்த ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தீரஜ்.
முன்னாடி எதையெடுத்தாலும் நம்பியவள் இப்போது எல்லாவற்றையும் அலசி, ஆராய்ந்து தான் நம்புகிறாள்.
அன்றிரவு பிள்ளைகளை தூங்கவைத்துவிட்ட தீரஜ், குளித்து முடித்து இரவு உடையுடன் வந்த மனைவியைத் தான் ஆசையாகப் பார்த்தான்.
டிரெஸ்ஸிங் டேபிளில் தலைவாரியபடியே கணவன் தன்னை கண்களால் பருகுவதை கன்னம் சிவக்க கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தவள், “என்ன வேணும் தீரா?” என்று எதுவும் தெரியாதது போல் கேட்டாள்.
“உன் மடி வேணும் தாரா தலை சாஞ்சு தூங்க! அதுக்கு அப்புறமும் நீ வேணும் தாரா எனக்கே எனக்குனு” என்று காதல் சொட்ட சொட்ட கூறியவனின் கண்கள் பெண்ணவளை இம்சிக்க, அவன் தோள் சாய்ந்தாள்.
தந்தையிடம் தொலைத்த தன்னுடைய குழந்தைத்தனத்தை தன் பொம்மாயியிடம் மீட்டவன்! அவளை அனுதினமும் கொண்டாடினான். காதலுடன்! நேசத்துடன்…
தன்னவளின் மடியில் சாயும் மன்னவன், அவனின் ஏக்கங்களைத் தீர்த்தப்பின்பு… அவனின் காதலை மென்மையும் நேசமும் கலந்து அவளுடன் இல்லறத்தில் கலந்தான் உலகின் ஆகச் சிறந்த கணவனாக! உலகின் ஆகச் சிறந்த காதலனாக!