நேசம் 1
“மதி! உள்ள என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்ற அத்தையின் குரலுக்கு அறையில் இருந்து வேகமாய் வெளியே வந்தாள் திகழ்மதி.
“துவைக்க துணி போட்டிருக்கேன். மெஷின்ல போட வேண்டாம். எல்லாம் என்னோட காஸ்ட்லி புடவைங்க. நீயே துவைச்சு காயப் போட்டுடு. ரொம்ப வெயில்ல போட்டு சாயம் போக வச்ச நீ சாயம் போய்டுவ. நியாபகம் இருக்கட்டும்” என்ற கனகா,
“நான் ஒரு ரிசப்ஷன்க்கு போறேன். அனு காலேஜ் விட்டு வந்ததும் சாப்பாடு போட்டு குடு. நான் வர நேரமாகும். அமுதா நைட்டுக்கு எல்லாம் சமைச்சு வச்சுட்டா. அனு சாப்பிட்ட அப்புறமா அந்த ரெண்டையும் சாப்பிட சொல்லு!” என்று கூற,
“சரிங்க அத்தை!” என்று கேட்டுக் கொண்டாள் திகழ்மதி.
உடலெல்லாம் அத்தனை அசதியில் உறக்கத்திற்கு கெஞ்ச, அதை பார்த்தால் கனகா வந்து பேசும் பேச்சிற்கு காது கொடுக்க முடியாது என நினைத்தவள் புடவையை மாற்றிக் கொண்டு தலையில் சூடி இருந்த முல்லையை எடுத்து வைத்துவிட்டு கனகாவின் துணிகளை துவைக்க அமர்ந்தாள்.
திகழ்கனியின் தாய்மாமா அன்பரசனின் மனைவி தான் கனகா. அன்பரசன் சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். குடும்பத் தேவைக்கு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு என தன் வருமானம் போதுமானதாய் இருக்க, மாதம் முதல் தேதியில் வரும் சம்பளத்தோடு கோவையில் இருக்கும் தன் குடும்பத்தினைக் காண மாதாமாதம் வந்துவிட்டு இரண்டு நாட்களில் கிளம்பி விடுவார்.
அன்பரசனின் தங்கை ஜோதி சில வருடங்களுக்கு முன் விபத்தில் கணவனோடு இறந்திருக்க தங்கையின் மூன்று பிள்ளைகளும் தாய்மாமனிடம் வந்து சேர்ந்திருந்தனர்.
திகழ்மதி தான் ஜோதியின் மூத்த மகள். கல்லூரி படிக்கும் சமயம் அன்னை தந்தையை இழந்து பள்ளி பருவத்தில் இருந்த தம்பி அரவிந்த் தங்கை மகிழினியோடு தவித்த நேரம் அன்பரசன் தன்னோடு சேர்த்து அழைத்துக் கொண்டார்.
கனகா அதற்கு மறுப்பு சொல்லவெல்லாம் இல்லை. கணவன் பேச்சை இதுவரை மீறியதும் இல்லை.
“பார்த்துக்கோ கனகா!” என்று கூறிவிட்டு அவர்களுக்கு தேவையான செலவிற்கும் மனைவியிடம் கூறி பணம் கொடுத்து என அத்தனை அன்பானவர் அன்பரசன்.
அரவிந்த் கல்லூரி இறுதி வருடத்தில் இருக்க, மகிழினி இப்பொழுது தான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள்.
அன்பரசன் அவர்களின் படிப்பு செலவிற்கும் தன் மகள் அனன்யாவிற்கு செய்வதை போலவே செய்ய சொல்லி கனகாவிடம் பணம் கொடுத்திருக்க, இதுவரை அதில் இருந்து எந்த சில்லறையும் கூட அவர்களுக்கு சென்று சேர்ந்ததில்லை.
அந்த பணத்தில் தான் வீட்டிற்கு, தனக்கு, தன் மகளுக்கு என ஆடம்பர செலவுகளோடு, சமைக்கவும் அமுதா என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார் கனகா.
“தங்கவும் திங்கவும் தான் தர முடியும். உங்களுக்கே எல்லாத்தையும் செலவு பண்ணிட்டா என் பொண்ணை நான் என்ன பண்ண? கஷ்டம் னு தெரியுது இல்ல. இப்ப படிச்சு என்ன கிழிக்க போறாங்க? படிச்ச வர போதும். எதாவது வேலைக்கு போக சொல்லு. இல்லைனா நீ தான் டிகிரி முடிச்சி வச்சுருக்கியே. எதாவது உருப்படியா வேலைக்கு போய் அதுங்களை பாரு. என் புருஷன் காசையெல்லாம் தர முடியாது. அவரு காதுக்கு இதெல்லாம் போச்சு…” என்று கனகா மிரட்டி இருக்க, முதலில் தவித்து தான் போனாள் திகழ்மதி.
தந்தை சொத்தை சேர்த்து வைக்காவிட்டாலும் கடனை சேர்த்து வைக்கவில்லை. அந்த மட்டும் நிம்மதி தான் திகழ்மதிக்கு. வேலை தேடி அன்பரசனுக்கு தெரியாமல் இவள் கோவையா சுற்றிவர,
“எவ்வளவு சொன்னாலும் கேட்கவே இல்லங்க இந்த மதி. வேலைக்கு போயே தீருவேன்னு நிக்குறா. அதான் என் பிரண்ட்கிட்ட சொல்லி வேலைக்கு கேட்டிருந்தேன்.” என்று கணவனிடம் சொல்லிவிட்டு கனகா திகழ்மதிக்கு கைகாட்டிய வேலை விளம்பரப் படங்களுக்கான புகைப்படங்களுக்கு காட்சி கொடுக்கும் பணி.
முதலில் தயங்கிய திகழ்மதிக்கு அப்போதைக்கு வேறு வேலையும் இல்லாமல் போக, தம்பி தங்கையின் கல்லூரி செலவுகளுக்காக ஏற்று கொள்ளும் நிலை.
தன்னால் முடிந்த வரை தன் தம்பி தங்கையை தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியமும் அவளுக்கு வளர காரணமே கனகா தான். எந்த இடத்திலும் தாங்கள் மற்றவர்கள் முன் கீழிறங்கி விட கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள் திகழ்மதி.
அதில் கணிசமான பணம் வரும் என்பது வரை தெரிந்து தான் கனகா திகழ்மதியை தன் தோழி மூலம் அங்கே சேர்த்தது.
அத்தையின் அனைத்து வழிகளுக்கும் வளைந்து நெளிந்து கொடுத்தாலும் திகழ்மதி சில காட்சிகளுக்கும் தன் உடை விஷயத்திலும் என முதலிலேயே மறுத்து பிடிவாதமாய் இருந்துவிட, அவளின் அழகும் எளிதாய் காட்சியில் ஒத்துப் போகும் முக பாவங்களும் என அவ்வளவு எளிதில் தூக்கி எறிந்திடவும் முடியவில்லை தொழில்துறையினருக்கு.
அவ்வப்போது அன்பரசன் அனுப்பும் பணம் பத்தவில்லை என கூறி திகழ்மதியிடமும் பணம் வாங்க பயின்றிருந்தார் கனகா.
அன்பரசனின் வீட்டின் மேலே ஒற்றை படுக்கை அறை சின்னதாய் இருக்க திகழ்மதி தன் தம்பி தங்கையுடன் அங்கே தான் வசிக்கிறாள்.
இப்பொழுதும் கூட அதிகாலையில் சென்றவள் தனக்கான ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்து சிவந்த விழிகளிற்கு தூக்கத்தை கொடுக்க முயன்ற நேரம் தான் கனகா அவளை அழைத்திருந்தது.
காலையில் கூட தன் தம்பி தங்கையோடு தன் துணிகளையுமே திகழ்மதி மெஷினில் போட்டு எடுத்திருக்க, வேண்டுமென்றே கையில் துவைக்க சொல்லிய அத்தையை எண்ணிக் கொண்டு துணியை துவைத்துக் கொண்டிருந்தாள்.
அன்பரசனின் மேல் இருக்கும் பாசமும் பற்றும் மட்டும் தான் இன்னும் அதே வீட்டில் இவள் இருக்க காரணம் கூட. யாருமே தங்களுக்கு என இல்லாது தவித்த நிலையில் தங்களை அவரின் கூட்டிற்குள் சேர்த்து அவர் அடைக்கலம் கொடுத்திருக்க, அந்த பாசத்திற்கான விசுவாசம் தான் திகழ்மதிக்கு எப்பொழுதும் முன் நிற்கும்.
“அம்மா!” என்று அனன்யா வீட்டினுள் வர,
“அத்தை ரேசெப்ஷன் போறதா சொல்லிட்டு போனாங்க அனு. நீ சாப்பிடுறியா?” என்று திகழ்மதி கேட்க,
“ஹப்பாஆஆ! அம்மா வீட்டுல இல்லையா? அனு ரிலாக்ஸ் மோடுக்கு வா!” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்ட அனன்யா,
“அப்ப நமக்கு இன்னைக்கு சுதந்திர தினம் தான் அண்ணி. எங்க மகியும் அத்தானும்?” என்று கேட்க, சிரித்த திகழ்மதியும்,
“வர்ற நேரம் தான் அனு. மகிக்கு காலேஜ்க்கு என்னலாம் வேணும்னு கேட்டு வாங்கி கொடுத்து கூட்டிட்டு வர்றதா அர்வி சொன்னான்!” என்றாள்.
“சூப்பர். அப்ப அவங்க வரட்டும். இன்னைக்கு நாம எல்லாருமே சேர்ந்து ஜாலியா சாப்பிடலாம். போன மாசம் அம்மா அவங்க ரிலேஸனை பார்க்க போனப்போ நாம ஜாலியா ஒன்னா இருந்தது. ஒரு மாசம் ஆச்சு. இன்னைக்கு நமக்கு ஹாப்பி டே!” என்று சொல்லிக் கொண்டே தன் அறைக்கு ஓடினாள்.
அதில் சிரித்தபடி திகழ்மதியும் தன் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு வந்தாள்.
அரவிந்த் வீட்டில் இருந்தால் அனன்யா அறையை விட்டு வெளிவரவே முடியாது. மகிழினியும் அனன்யாவும் ஒத்த வயதினர் தான். இருவரும் ஒன்றாய் பார்த்துக் கொள்ள கூட முடியாது. அவர்களுடன் சேரவே கூடாது என்பது தான் கனகாவின் வார்த்தைகள்.
அப்படி அனு பேசினாலும் திகழ்மதியை தான் கோபமாய் பேசுவார் கனகா. தன்னால் ஏன் அவர்கள் பேச்சு வாங்க வேண்டும் என அன்னை இருக்கும் சமயங்களில் ஒதுங்கி இருந்து கொள்ளும் அனன்யா அன்னை இல்லாத சமயத்தில் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவர்களுடனான நேரத்தை செலவிடுவாள்.
இதோ இன்றும் அப்படி தான். அரவிந்த் மகிழினி வந்த உடனேயே அவர்களுடன் சேர்ந்து மாடிக்கு சென்ற அனன்யா அவர்களோடே இருந்து சாப்பிட்டு விளையாடி கதை பேசி என நேரத்தை செலவழித்தவள் அன்னைக்கு அழைத்து அவர் வரும் நேரம் தெரிந்து கொண்டு அதற்கு கால் மணி நேரம் முன்பு சென்று தன் அறையில் நல்ல பிள்ளையாய் உறங்கிவிட்டாள்.
“ஸ்டார்ட்! கேமரா! ஆக்ஷன்!” என்ரு ஒலித்த வார்த்தைகளை காதில் வாங்கி திகழ்மதி தனக்கான டயலாக்கை கேமராவின் முன் கூற, அடுத்து தன் அருகில் நின்ற பெண் அவள் கூற வேண்டிய டயலாக்கை மறந்து தவறாய் கூறி என அடுத்தடுத்த டேக் வாங்கிக் கொண்டிருந்தாள்.
“பிரேக்!” என்று கூறவும் அந்த நகைக்கடையின் ஓரத்தில் தங்களுக்கான இருப்பிடத்தில் வந்து அமர்ந்தனர் திகழ்மதியோடு அவள் அருகே நின்ற பெண்ணும்.
தன் முகத்தை திகழ்மதி கண்ணாடியில் பார்த்துக் கொள்ள, “செம்ம ல்ல? ஜீவெல் எல்லாம் பாரேன். “ என்றாள் உஷா.
“டைரக்டர்கிட்ட அதனை திட்டு வாங்கிட்டு இது முக்கியமா உனக்கு? “ என முறைத்தாள் திகழ்மதி.
உஷா திகழ்மதிக்கு முன்பிருந்தே இந்த துறையில் இருப்பவள். எதையும் டேக் இட் ஈசி என கூறி அடுத்த நொடிக்கு கடந்துவிடுவாள். உஷாவின் மூலம் தான் திகழ்மதி இந்த துறையைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் அறிந்து கொண்டிருக்கிறாள்.
“அவருக்கு அது தான் வேலை. எனக்கு இது தான் வேலை.” என்ற உஷா,
“நீ அப்படியே கல்யாண பொண்ணு மாதிரியே இருக்க தெரியுமா? ரொம்ப அழகு டி நீ” என்றாள்.
“சும்மா இரு உஷா! யாரும் கேட்டுடாம. சீக்கிரமா ஒரு நல்ல வேலையா பார்த்து ஒரு ஆபீஸ்ல போய் உட்காரணும். அர்வி காலேஜ் முடிச்சிட்டா போதும் அதுவரைனு தான் இதெல்லாம்!” என்றாள் திகழ்மதி.
“இங்க வாங்குற டப்பு அங்க வராதே டி!” உஷா சொல்ல,
“பரவால்ல உஷா. இப்ப தேவை அதிகமா இருக்கு. அதனால இங்க பொறுத்துட்டு இருக்கேன். அர்வி ஜாப் போய்ட்டா நானும் ரிலாக்ஸா எனக்கு புடிச்ச வேலையை தேடிக்கலாம்”
“ம்ம் புரியுது. எல்லாருக்கும் எல்லாம் புடிக்கணும்னு அவசியம் இல்லன்ற. ஓகே ஓகே. ஆனாலும் உனக்கு மாப்பிள்ளையா வர போறவர் யாரா இருக்கும்னு எனக்கு அப்டியே…. “ என உஷா சொல்லிக் கொண்டு இருக்க,
“ஆரம்பிக்காத உஷா! எப்பப்பாரு எதாவது உளறிட்டு. மனுஷனுக்கு இருக்குற பிரச்னைல நீ வேற!” என்ற திகழ்மதி டைரக்டர் அழைப்பில் எழுந்து மீண்டுமாய் கேமரா முன் சென்று நின்றாள்.
“பிரச்சனைகாக வாழ்க்கை வேண்டாம்னு சொல்ல கூடாது. அது எங்க எப்படி எழுதி இருக்கோ அப்படி நம்ம கைக்கு வந்து சேரும்!” என்ற உஷாவும் காட்சிக்கு தயாரானாள்.
எங்கே யாருக்கு எவ்விடம் என்று இறைவன் முடிச்சிட்டு வைத்திருக்க, ஒரு முடிச்சு விழும் நேரம் பல முடிச்சுக்கள் எளிதாய் அவிழ்ந்து ஒரு ஆசுவாச மூச்சை கொடுக்கலாம் தானே?
பார்க்கலாம்…