கோவில் சென்று வந்து ஒரு வாரம் கடந்திருக்க தன் அன்னையுடன் திகழ்மதியையும் தங்களுடைய கடைக்கு அழைத்து வந்திருந்தான் ஆர்யன்.
“ம்மா! நீங்க பார்த்துட்டு இருங்க. நான் ரௌண்ட்ஸ் போய்ட்டு வர்றேன். முடிஞ்சதுன்னா கால் பண்ணுங்க. கார் வார சொல்றேன்.” என்று அன்னையிடம் கூற,
“ஏன்? கூட்டிட்டு வந்தல்ல கொண்டு வீட்டுல விட மாட்டியா?” என்றார் மீனாட்சி.
“இல்ல ம்மா அப்பா வந்துட்டு இருக்காங்க. கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் பார்க்க போனும்னு என்னையும் கூப்பிட்டாங்க. அப்பா வர்ற வரை இங்க தான் இருப்பேன். அதான் சொல்றேன்!” என்றிருந்தான்.
“சரி வரட்டும். இவளை கூட்டிட்டு போய் கூட பாரு. என் கூட நின்னா எதுவும் வாங்குற மாதிரி இல்ல. நீ பார்த்து எடுக்க சொல்லு!” என்று திகழ்மதியை அவனோடு அனுப்ப பார்க்க,
“என்ன வேணுமோ இங்க வர சொல்லுங்க ம்மா. அங்க கிரவுடா இருக்க போய் தான் இந்த புளோர் வந்ததே!”
“அப்போ நீ செலக்ட் பண்ண மாட்ட?” மீனாட்சி கேள்விக்கு,
“நான் எப்ப பண்ணணுமோ அப்ப பண்ணிக்குறேன்!” என்றான். இத்தனைக்கும் அருகில் சிரித்தபடி அன்னை மகன் பேச்சினை கேட்டு தான் நின்றிருந்தாள் திகழ்மதி.
“என்ன சிரிப்பு. நக்கலா? அவ்வளவு சொல்றாங்கல்ல கூட வர்றேன்னு ஒத்த வார்த்தை சொல்லி இருந்தா இவ்வளவு பேசுவாங்களா?” என்று திகழ்மதியிடமும் ஆர்யன் முறைக்க,
“எனக்கு எதுவும் வேணாம்னு வீட்டுலயே சொன்னேன். கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி தானே கூட்டிட்டு வந்து வாங்கி குடுத்தீங்க? இப்ப என்ன வாங்குறது? கேட்காம கூட்டிட்டு வந்துட்டு இப்ப என்னையே குறை சொல்றிங்க. இது நல்லாருக்கா?” என்று பதில் பேசினாள்.
“அதனால தான் அம்மாகிட்ட உங்களை விட்டுட்டு போறேன். நீங்களாச்சு அவங்களாச்சு” என்றான் ஆர்யனும்.
“மதி! இது உனக்கு நல்லா இருக்கும். பாரேன்!” என ஒற்றை புடவையை அவளின் மேல் வைத்து கண்ணாடியில் காட்டி நிற்க, அந்த ப்ரத்யேக தளத்தின் ஒரு பகுதியில் இவர்கள் மட்டுமே! கடை உரிமையாளரின் வீட்டுப் பெண்கள் என அங்கே வேலைக்கு நின்ற பெண்களும் ஆண்களுமாய் சுவாரஸ்யமாய் அவர்களை பார்த்து நின்றனர்.
“மறுக்கவும் முடியாமல் வாங்கிக் கொள்ளவும் முடியாமல் அவஸ்தையாய் அவள் நிற்பதை பார்த்து அங்கிருந்து புன்னகையுடன் நழுவி சென்றிருந்தான் ஆர்யன்.
“என்னை லவ் பண்ண எதாவது சான்ஸ் இருக்கா திகழ்?” என்று கோவிலில் கேட்டதும் பல நிமிடங்கள் கடந்து மற்ற பேச்சுக்களை எடுத்து என அதிக நேரத்திற்கு பின்பே அவனுக்கு பதில் கூறினாள் திகழ்மதி.
“ஒருத்தரோட மட்டும் அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ணினா அவங்களை நமக்கு பிடிச்சு போக அதிக வாய்ப்பு இருக்கு. தெரியுமா சார் உங்களுக்கு?” என்று திகழ்மதி கேட்க, அந்த பதிலில் உள்ளத்தில் அப்படி ஒரு குத்தாட்டம் தான் ஆர்யனுக்கு.
“ஆனா அது காதலா தான் இருக்கனும்னு இல்லை இல்ல?” என்றதும்,
“அதானே பார்த்தேன்!” என்ற வார்த்தைகளும் வெளிப்படையாய் வந்தது ஆர்யனிடம் இருந்து.
“நிஜத்தை சொன்னேன். ஆப்போசிட் ஜெண்டரோ இல்ல சேம் ஜெண்டரோ இவ்வளவு நாள் தான் அவங்களோட இருக்க முடியும்னு தெரிஞ்சே அவங்களோட இருந்துட்டு பிரியும் போது நிச்சயம் வலிக்கும். எனக்கும் அதே பீல் தான்!” என்றாள் திகழ்மதி.
“எனக்கும் உங்களை பிடிக்கும் தான். இதுக்கு இன்ஃபாக்சுவேஷன்னு ஒரு பேர் இருக்கு! யார்னே தெரியாதவங்க கூட ஒரு பயணம். அதுவும் புடிச்சி போச்சுன்னா அவங்களை விட்டு பிரிய கஷ்டமா இருக்கும் இல்லையா? அது காதலா இருக்குமா என்ன? அதை தான் சொல்றேன்!” திகழ்மதி சொல்ல,
“போதும்! என்ன ஆனாலும் நீ எனக்கு வேண்டாம் டானு சிம்பாலிக்கா சொல்றிங்க. நான் கூட என்னென்னவோ நினச்சுட்டேன்!” என்று சலித்துக் கொண்டவன்,
“ஆனாலும் பிடிக்கும்னு சொல்லிட்டீங்க இல்ல. அதுக்கு ஒரு தேங்க்ஸ்! நிச்சயம் நான் சொன்னது நடக்கும் பாருங்க. உங்களுக்கு உங்க வீட்டுல மாப்பிள்ளை பார்ப்பாங்க. அப்ப என் முகம் தான் உங்களுக்கு நியாபகம் வரும்!” என்றிருந்தான்.
“பகல் கனவு!” என்று சொல்லி சிரித்திருந்தாள் திகழ்மதி.
இந்தளவுக்காவது பேசி சிரிக்கிறாளே என்கிற நல்ல மனநிலையுடன் தான் அங்கிருந்து கிளம்பி வந்திருந்தனர் அனைவரும். வந்ததும் புகழ் வந்து பேசி இருந்தான் ஆர்யனிடமும் மீனாட்சியிடமும். அந்த மாத இறுதி யில் வளைகாப்பு என்று.
அதன்பின் ஒரு வாரமும் இருவரும் மீண்டுமாய் ஒரு புன்னகை முகத்துடன் நட்புணர்வுடன் தான் பேசி நாட்களை நகர்த்தி இருக்க, மீனாட்சி அழைத்ததின் பெயரில் இன்று கடையில் இருவரையும் அழைத்து வந்து விட்டுவிட்டு கீழ் தளத்திற்கு வந்திருந்தான் ஆர்யன்.
“ராஜா எங்க இருக்க? கார் பார்க் வா!” என்று அலைபேசியில் அழைத்து கூறி இருந்தார் விஸ்வநாதன்.
அங்கே ஆர்யன் செல்லும் பொழுது தனது வாலட்டில் இருந்து பணத்தை ஒரு பெண்ணிடம் தந்தை கொடுப்பதும் அவள் வாங்க மறுப்பதும் தெரிய, பார்த்தபடி முன்சிகையை கோதியபடி அவர்கள் அருகே வேக நடையில் வந்தான் ஆர்யன்.
“என்னாச்சு ப்பா?” என்று கேட்டபடி ஆர்யன் அங்கே சுற்றிலும் பார்க்க, ஆறேழு கல்லூரி மாணவிகள் தந்தையை சுற்றி.
“உன்கிட்ட பேசிட்டு வைக்கவும் பார்க்கிங்க்கு டர்ன் பண்ணும் போது சகதி தண்ணி அந்த பொண்ணு மேல வாரிடுச்சு டா!” என்றார் இன்னும் பணத்தை கைகளில் வைத்துக் கொண்டு.
“ஓஹ்!” என்றவன் அந்த பெண்ணைப் பார்த்தான்.
“ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல டி. நாம போலாம்!” என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் மகிழினி.
அன்று கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களின் ஃபேர்வெல் விழாவிற்கு என திகழ்மதி எடுத்து கொடுத்திருந்த அழகான ஆடையுடன் வந்திருந்த மகிழினி நண்பர்கள் அழைத்ததின் பெயரில் கல்லூரி முடிந்ததும் அவர்களுடன் வெளியே வந்திருந்தாள்.
“பிரச்சனை பன்றாங்களா?” ஆர்யன் தந்தை அருகே குனிந்து மெல்லிய குரலில் கேட்க,
“இல்ல டா. சாரி கேட்டுட்டேன். அந்த பொண்ணு எதுவும் பேசல. ட்ரெஸ் முழுக்க சகதி.. டிரைவர் கவனிக்காம வேகமா வந்துட்டான். அதான் நான் இதை குடுத்தேன்! ஆனா.. “ எனும் போதே,
“ப்பா! அதுக்காக காசு குடுப்பிங்களா? என்ன ப்பா? சகதி வாரினது கூட இஸ்ஸு ஆகாது. பணம் குடுத்தது தான் தப்பு. பணத்திமிர் அது இதுன்னு சோசியல் மீடியால பேச்சு வரும். காலேஜ் பசங்க வேற!. ப்ச்!” என்றான் அவர் செயலில் உடன்பாடில்லாமல்.
“நான் அப்படிலாம் நினைக்கல ராஜா. ரொம்ப பாவமா நின்னுச்சு அந்த பொண்ணு. பேச தான் நம்ம ஆபீஸ் பக்கமா இந்த பக்கம் அவங்களை அழைச்சேன். நம்மளால தானேனு தான் குடுத்தேன். அந்த பொண்ணு வேணாம்னு சொல்லிடுச்சு!” என்று இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே அந்த பெண்கள் நகர,
“ஒரு நிமிஷம்!” என அவர்களை நிறுத்தியவன்,
“இப்படியே எப்படி போவீங்க?” என்று சொல்லி நிறுத்தி, சிறு சிந்தனைக்குப் பின்,
“ப்பா! திகழும் அம்மாவும் மேல இருக்காங்க. அவங்களை வர சொல்றேன்!” என்று சொல்லி அன்னைக்கு அழைத்தான். தண்ணீர் மட்டும் அடித்திருந்தால் பரவாயில்லை மொத்த உடையும் சேறு நிறைந்திருக்க, முகம் கை கால்களை கழுவி இருக்கிறாள் என்பதும் புரிந்தது.
கைகளை பிசைந்தபடி விஷ்வநாதன் அருகே வந்த டிரைவரை பிடித்து ஆர்யன் திட்டிவிட்டான்.
“இட்ஸ் ஓகே சார்! நாங்க பார்த்துக்குறோம்!” என்றாள் மற்றொரு பெண்.
நண்பர்கள் அனைவரும் ஓரமாய் நின்றிருக்க மகிழினி மட்டும் சென்றிருந்தாள் அப்பொழுது. ‘தானும் அவர்களுடன் சென்றிருக்கலாம். ஒரு சமோசா சாப்பிட ஆசைப்பட்டு நல்ல ட்ரெஸ் இப்படி ஆயிடுச்சு. அக்கா திட்ட போறாங்க வந்ததும்’ என்றெல்லாம் தான் இருந்தது மகிழினியின் எண்ணம்.
“போலாம் டி!” என்று மகிழினியும் தோழிகளிடம் கூற, விஷ்வநாதன் அவர்களிடம் என்னவோ கூற, வந்துவிட்டார் மீனாட்சி திகழ்மதியுடன்.
***********************
“என்ன அனு இதெல்லாம்?” அரவிந்த் கேட்க, மாட்டிக் கொண்ட பாவனையில் விழித்துக் கொண்டு நிமிர்ந்தும் பாராமல் நின்றிருந்தாள் அனன்யா.
“வேற என்ன பேச? என்ன பண்ணி வச்சிருக்க நீ? வேற எப்படி பேசுவாங்க உன்கிட்ட?” என்றெல்லாம் அரவிந்த் கேட்க கேட்க, அழுகையாய் வந்தது அனன்யாவிற்கு.
“உன்னை சின்ன பொண்ணுன்னு நினச்சா நீ இதை தான் பண்றியா காலேஜ் போய்!” என்று அதிகத்திற்கு பேச,
“போதும் அத்தான்! ரொம்ப பேசிட்டிங்க. ஏன் நான் பூ குடுக்க கூடாதா உங்களுக்கு?” என்றாள் நேராய்.
“ஆமா குடுக்க கூடாது!” என்று அவனும் குரலை உயர்த்த, அவளும் கோபமாய் பார்த்து நின்றாள்.
“நீ போய் இதெல்லாம். நான் எங்கேங்கயோ தேடிட்டு இருந்தா வீட்டுக்குள்ள இருந்தே இந்த வேலையை எல்லாம் பார்த்து வச்சிருக்க நீ. இங்க பாரு அனு. இதெல்லாம் இத்தோட விட்டுட்டு படிக்குற வேலையை பாரு. இல்ல உன்கிட்ட மாமாகிட்ட கூட சொல்லாம அக்காவையும் மகியையும் கூட்டிட்டு எங்கேயாவது போயிடுவேன். இது தான் உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்!” என்று சொல்ல,
“லவ் பண்றது என்ன அவ்வளவு பெரிய தப்பா?” என்றாள் ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாய்.
“தப்பு தான். முதல்ல இப்படிலாம் என்கிட்ட நீ பேசுறதே தப்பு. படிக்குற வயசுல என்ன பேச்சு இது? சும்மாவே உன் அம்மா என்னை பார்த்தாலே எரிஞ்சு விழுவாங்க. நீ இதெல்லாம் பண்றது தெரிஞ்சா என்னை எவ்வளவு அசிங்கமா பார்ப்பாங்க. முதல்ல உனக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வரலாம்?”
“எனக்கு உங்களைப் பிடிக்கும் அத்தான்!”
“ஷட்டப் அனு. இன்னொரு வாட்டி இப்படி பேசின” என்றவன் அத்தனை கோபத்தில் இருந்தான்.
எப்பொழுதும் போல அரவிந்த் வந்த நேரம் கணித்து பூவுடன் யாரும் கவனியாமல் அனன்யா மாடிக்கு செல்ல, மாட்டிக் கொண்டாள் அரவிந்த்திடம்.