புகழ் கூறியதைக் கேட்டு கல்லாய் சமைந்து நின்றிருந்தார் மீனாட்சி. விளையாடினேன் என்று சொல்லி விடு என்று தான் மனம் கேட்டது அவருக்கு.
“போய்ட்டா புகழ். திகழ் போய்ட்டா. நான் வேண்டாம்னு போய்ட்டா!” என்று ஆர்யன் கூறவும் புகழ் அதிர்ந்து நிற்க,
“நீயாவது சொல்லு டா.. என்ன நடக்குது இங்க?” என்று மீனாட்சி கேட்கவும் தயங்கி தயங்கி உண்மையை ஒப்புக் கொண்டிருந்தான் புகழ்.
“எங்க இருந்து டா வந்தது இவ்வளவு தைரியம் உங்களுக்கு. ராஸ்கல்ஸ். ஏதோ ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து எனக்கு மருமகளா என்கிட்டயே நடிக்க வச்சு அதை என்கிட்ட சொல்ற அளவுக்கு தைரியம் இல்ல?” என்று விஸ்வநாதன் அதிர்ச்சியோடு கோபமாய் கேட்க, தலைகுனிந்து நின்றான் புகழ்.
எந்த இடைவெளியில் ஆர்யன் அங்கிருந்து அவனறைக்கு சென்றான் என்று தெரியாத அளவிற்கு புகழ் பேச்சை மற்ற இருவரும் கேட்டு அதிர்ந்து நின்றிருக்க எதுவும் பேசவோ சொல்லவோ முடியாத அயர்ச்சி ஒரு புறம், செய்த செயலில் குற்ற உணர்வு ஒரு புறம் என ஆர்யன் அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தான்.
“சொசைட்டில என் பேரு என்ன ஆகும்னு நினச்சு பார்த்திங்களா டா முட்டாள். இதுக்கு தான் அவன் பார்ட்டி வேண்டாம் ரிசெப்ஷன் வேண்டாம்னு நின்னானா? இதெல்லாம் வெளில தெரிஞ்சா?” என்று தலையில் கைவைத்து டென்சன் ஏற ஏற அழுத்திக் கொண்டு நின்றார் விஷ்வநாதன்.
“எனக்கும் ஸ்வேதாக்கும் கல்யாணம் நடக்கணும்னு தான் மாமா அவன் லவ் பன்றான்னு சொன்னேன். அவனுக்கு கல்யாணம் பண்ணிக்குறதுல அப்ப இஷ்டம் இல்ல. புடிச்ச பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நின்னான். அதுவும் அம்மம்மா வேற அவன் கலயாணம் நடந்தா தான் என் கல்யாணம்னு சொல்லவும் வேற வழி இல்லாம தான் நான்…. “ என்றவன் தலை குனிய,
“பாரு! உன் மகனை சொன்னா என்னை பேசுவியே! இப்ப பாரு அவன் என்ன பண்ணி வச்சிருக்கான்னு. எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? ஏற்கனவே ஊரு முழுக்க பரவிகிட்டு இருக்கு விஷ்வநாதன் மகனுக்கு திடிர்னு கல்யாணம் ஆகிட்டாம், திருட்டு கல்யாணம் ஆகிட்டாமாம்னு.. இப்ப இது தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம்?” என மனைவியிடம் விஷ்வநாதன் கோபமாய் கேட்க, அசையாமல் அமர்ந்திருந்தார் அவர்.
“அத்தை!” என்று அவரருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான் புகழ்.
“மன்னிப்பு கேட்க முடியாத பெரிய பாவம்னு எனக்கு இப்ப தான் தெரியுது அத்தை. எல்லா தப்பும் என்னோடது தான். நான் தான் எல்லாம் அவசரப்பட்டு… ப்ச்! ஆனா ஆர்யாக்கு திகழ்மதி தான் த்த எல்லாம். திகழ்மதியை அவன் ரொம்ப விரும்புறான். அவங்களை ஆர்யாக்கு எப்ப எப்படி தெரியும்னு எனக்கு சரியா தெரில. ஆனா திகழ்மதி தான் இந்த வீட்டுக்கு வார போறான்னு தெரிஞ்ச அப்புறம் தான் இந்த ட்ராமா ஆரம்பம் ஆச்சு. அவனுக்கு முதல்ல இதுல இஷ்டமே இல்லை. திகழ்மதிக்கு அவனை புடிக்கனும் உ தான் இங்க கூட்டிட்டு வந்தான். ப்ளீஸ் அத்த. அவன் பாவம்” என்று மீனாட்சியின் கைகளைப் பிடிக்க,
“மதி இவ்வளவு நாளும் என்கிட்ட நடிக்கவா செஞ்சா?” என்ற மீனாட்சியின் கேள்வியில் பாவமாய் பார்த்தான் புகழ்.
“அத்த!”
“அவ என் மருமக இல்லையா?” மீனாட்சி.
“அத்த! மதியை தான் த்த ஆர்யா லவ் பன்றான். அவங்களை தான் கல்யாணம் பண்ணிக்க இவ்வளவும் பண்ணினான்.” புகழ் சொல்ல,
“ஆனா பண்ணிக்கல.. அம்மா அப்பாகிட்டயே ஏமாத்தி இருக்கான்..இவ்வளவும் நாளும் இந்த வீட்டிக்குள்ள நாங்க ஏமாந்துட்டு இருந்திருக்கோம். இன்னும் பத்து நாள்ல விஐபி எல்லாம் கூப்பிட்டு அவன் கல்யாணத்தை எல்லாருக்கும் தெரிய வைக்க என்னென்ன பிளான் வச்சிருந்தேன் தெரியுமா?” விஷ்வநாதன் மீண்டும் கோபம் குறையாமல் பேச,
“என் பையன் வாழ்க்கையை நான் கேட்டுட்டு துடிச்சு போய் இருக்கேன். நீங்க உங்க பேர் மரியாதையை பத்தி மட்டும் பேசிட்டு இருக்கீங்க.. என்னங்க இது? அவன் எப்படி பேசிட்டு போறான் பார்த்தீங்க இல்ல? உயிரே இல்லாம இருக்கான். அதை பத்தி கவலை இல்லாம என்னென்னவோ பேசுறீங்க?” மீனாட்சி கணவனிடம் கேட்க,
மீனாட்சி மகனை விட்டு கொடுக்காமல் பேசவும் தான் அவர் புரிதலில் கொஞ்சம் நிம்மதி வந்தது புகழுக்கு.
“அவன் பண்ணின வேலைக்கு அவனை இடுப்புல வச்சு கொஞ்சவா செய்வாங்க. என்ன வேலை பார்த்து வச்சிருக்காங்க ரெண்டு பேரும். அவங்களை கேள்வி கேட்குறதை விட்டுட்டு என்னை கேட்டுட்டு இருக்க? எப்படியோ போகட்டும். அடுத்த முஹூர்த்தத்துல ஊர் பார்க்க அவனுக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணத்தை பண்ணிடனும். நான் ஏற்பாடு பண்றேன்!” என்று சொல்ல புகழ் அதிர்ந்தான்.
“என்ன பேசுறீங்க நீங்க? இவ்வளவு தூரம் அவங்க யோசிக்க காரணம் யாரு? நாம தான். பெத்தவங்க புள்ளைங்களை சரியா புரிஞ்சிக்கலைனா அவங்க நம்ம கைய விட்டு நடக்க தான் பார்ப்பாங்க. இதோ என் புள்ள மாதிரி தவிச்சு தான் நிப்பாங்க!” என்று அழ,
“அத்த!” என அவரை தாங்கி நின்றான் புகழ்.
“அவன் வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிங்க. அது பிடிக்கலைனு சொன்னான் தான?”
“அதுக்காக இப்படி ஒரு காரியத்தை பண்ணுவானா”
“உங்க அம்மா சொத்து வேணும்னா கல்யாணம் பண்ணுனு ஒரு பக்கம் நீங்க இந்த சொத்தோட வர போற பொண்ணும் செல்வாக்கு உள்ள இடமா இருக்கணும்னு ஒரு பக்கம் பார்த்தீங்க.. அவனுக்கு புடிச்சிருக்கான்னு கேட்கவே இல்ல. எல்லாத்தையும் பொறுத்து பார்த்து தான் இப்போ இப்படி பண்ணிருக்கான்!” என்றார் மீனாட்சி யும் கோபமாய்.
“அத்த! எல்லாம் சரி தான்.. ஆனா அவனா இதுக்கெல்லாம் சம்மதிக்கல.. நான் தான்.. என்னால தான் இவ்வளவும்!” என்று புகழ் சொல்ல,
“இருக்கலாம் புகழ். ஆனா ஆர்யா யோசிக்காம ஒரு பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வார மாட்டானே! அவனுக்கு புடிச்சிருந்தது. எல்லாம் சரி தான். ஆனா நான் சொன்னதும் உண்மை தானே? அவன் சொல்றதை கொஞ்சம் காது குடுத்து நாங்களும் கேட்டிருக்கணுமே! இப்பவும் பாரு உடனே கல்யாணம் பண்ணி வைக்க போறாராமாம். அதுவும் வேற ஒரு பொண்ணு கூட!” என்றார் ஆதங்கமாய்.
“இப்போ என்ன தான் பண்ண சொல்ற? அவன் பண்ணினது சரியா?”
“தப்பு தான். ஆனா இப்போ அவன் தனியா நிக்குறான். தவிச்சு நிக்குறான். துணையா நாம இருக்கனும். எனக்கு என் புள்ள முக்கியம்!” என்றவர்,
“எல்லாம் பொய்யாவே இருக்கட்டும். இப்போ எதுவும் அவனை கேட்க வேண்டாம். அவனா வரட்டும்!” என்றுவிட்டார்.
“என்னவோ பண்ணு.. ஆனா இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல பார்த்துக்க!” என்று சொல்லி சென்றுவிட்டார் விஷ்வநாதன்.
தான் செய்த வினையின் வீரியமே இப்பொழுது தான் முழுதாய் புரிந்தது புகழுக்கு. ஒரு குடும்பத்தையே கலைய வைத்துவிட்ட வருத்தம் அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிய, இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரியவில்லை.
“மதி எப்படி டா உங்ககிட்ட வந்து மாட்டினா? பிரச்சனை எவ்வளவு பெருசுன்னு தெரியாம ஒரு பொம்பள புள்ளைய இப்படி உள்ள இழுத்து விட்ருக்கீங்களே!” என்று புகழிடம் தனியாய் கேட்டு கலங்கினார் மீனாட்சி.
மதியின் குடும்ப சூழல், அவளின் வேலை என அனைத்தையும் அவன் கூற,
“இதெல்லாம் பாவம் டா. என்ன பண்ணி வச்சிருக்கீங்க” என்று அதற்குமே அத்தனை ஏச்சுக்கள் தான்.
“அப்பவே சந்தேகப்பட்டேன். நடுராத்திரி நான் பார்க்கும் போது எல்லாம் இவன் ஹால்ல தூங்கிட்டு இருந்தான். நேரடியா கேட்க முடியாம அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைனு நினச்சேன். எவ்வளவு பெரிய பாவம் பண்ணி அதுக்கு துணையா என்னையும் சேர்த்து விட்டுட்டீங்களே!” என்று ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து மீனாட்சி கவலையில் அழ, அவர் முகம் பார்த்து பேசிட முடியவில்லை புகழுக்கு.
**************************
மகிழினியோடு திகழ்மதி வீடு வந்து சேர்ந்த போது இருட்டி இருந்தது. ஆட்டோவில் அக்காவின் முகத்தை பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்த மகிழினி அவளின் வலது கையை கெட்டியாய் பிடித்தபடி அமர்ந்து கொண்டாள்.
அழவில்லை ஆனாலும் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது திகழ்மதிக்கு. சில முறை கேட்டுப் பார்த்த மகிழினி பின் தொந்தரவு செய்யாமல் அமைதியாய் கைகளை பிடித்தபடி வர, திகழ்மதியின் மனம் முழுதும் தன்னை அதிர்ச்சியாய் பார்த்து நின்ற மீனாட்சியோடு, கலங்கிய விழிகளோடு தன்னை நோக்கிய ஆர்யனும் தான்.
அந்த நிலையை எதிர்கொள்ளவே முடியாத கோழையாய் தான் அங்கிருந்து ஓடி வந்திருந்தாள். தான் செய்தது மீனாட்சிக்கு துரோகம். ஆம் துரோகம் என்று தான் அவள் நினைத்தாள். எத்தனை அன்பாய் அந்த வீட்டின் ஒவ்வொரு நடைமுறைகளையும் மகனின் பிடித்தத்தையும் என அவர் அவளிடம் விவரித்திருப்பார்.
மகிழினியை அங்கே அவருக்கு அறிமுகப்படுத்த கூட நா வரவில்லை. அவரே அல்லவா அறிந்து பேசி பழகி என தன் வீட்டு பிள்ளையாய் நினைத்து பழகினார். அதன்பின்னும் அவர்முன் மருமகளாய் நடிக்க ஒரு துளியேனும் முடியவில்லை. அது தானே துரோகம்.
செய்ததெல்லாம் போதாதா? மேலும் மேலுமா? பணத்துக்காக ஒரு உயிரை அன்பெனும் போர்வையில் அல்லவா சித்ரவதை செய்கிறோம்? என்ற எண்ணங்கள் எல்லாம் சேர்ந்து தான் அவளை உடனே அங்கிருந்து கிளம்ப வைத்தது.
ஆனாலும் தன் விழியோடு கலந்த அவன் விழிகள்.. காலத்திற்கும் அந்த பார்வை மறக்காது. வார்த்தைகளால் அவன் காதலை கூறிய போது கூட இத்தனை உணரவில்லை அவள். அவனின் அந்த ஒற்றை பார்வை. தான் அவனை விட்டு விலகுவதை தாங்க முடியாமல் அவன் யாசித்துப் பார்த்த அந்த பார்வை கண்களை விட்டு அகல மறுத்தது.
“அக்கா வந்தாச்சு!” மகிழினி யூன் குரலில் தான் உணர்வுக்கு வந்தவள் உள்ளே செல்ல, மாமாவின் வீடு பூட்டி இருந்தது.
“செக்கப் போய்ட்டாங்க போல க்கா!” என்று சொல்லி மேலே வந்தாள் மகிழினி சகோதரியுடன்.
கீழே சிதறிக் கிடந்த பூக்களை பார்வையால் வெறித்து அமர்ந்திருந்த அரவிந்த் தங்கையோடு தன் அக்காவைவின் வருகையில் மற்றவை எல்லாம் மறந்து போக, வேகமாய் சென்றான் அவர்கள் அருகே.
“எப்ப க்கா வந்த? மகி! நீ எப்படி அக்காவோட? பிரண்ட்ஸ் கூட வெளில போறதா தான சொன்ன?” என்ற அரவிந்த் திகழ்மதியின் கலங்கிய கண்களை இரு நொடி கழித்து தான் கண்டான்.